About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 9 செப்டம்பர், 2021

சிவன் வழக்கழிந்து ஒழிந்து போவானா?

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது, ‘இந்தப் பால்வெளியில் தசலட்ச சங்கம் விண்மீன்கள் உள்ளன. இப்பிரபஞ்சம் போலவே இன்னும் பல பிரபஞ்சங்கள் வெவ்வேறு அளவில் உள்ளன. அதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அப்படி ஒன்று இல்லை என்று சொல்லிட முடியுமா?’ உன்னால் நேரடியாக அதைப் பார்க்க இயலாது. அர்ஜுனா, இதோ என்னுள் அதைக் காட்டுகிறேன், பார்! அண்டத்தில் இருப்பது உன் பார்வைக்கு இல்லாததுபோல் தோன்றுவது மாயை.” (பகவத்கீதை: 8:18)

அப்படி உள்ளது மனோன்மணீயம் நூலுக்குப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ்த்தெய்வ வணக்கம் பாடல். நாம் இதுகாறும் படிக்க மறந்துபோன இரண்டாம் பத்தி உள்ளது. அதில் ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து’ என்ற அடி உள்ளது. சிவனின் வாசியாக மறைந்து இருக்கும் மொழி எப்படி அழிந்து ஒழிந்து போகும்? உங்களையும் என்னையும் நம்பியா சிவனுடைய ரவிகலை வாசியின் ஆதாரப் பண்புகள் உள்ளன? எழுதா கிளவியாய் அது என்றைக்கும் யுகயுகங்களாக மறைந்திருப்பது. 

சுயம்புவாய்த் தோன்றி இதுகாறும் மறைந்திருக்கும் சூட்சுமம் உடையது. அது சமயம் வரும்போது தன்னைத் தானே வெளிக்காட்டிக்கொள்ளும். அதுவரை அதன் வெளிப்பாடாய்ச் சக்தி மட்டும் வெளியே தோன்றி அசைந்து இயங்கும். ஒரு தாவரத்தின் ஆதார வேர் புலப்படாமல் பூமிக்குள் ஆழமாய் எப்படி மறைந்திருக்குமோ அப்படித்தான் மறையன் உள்ளான். சிவனுடைய அரூப மந்திரமொழி பேச்சு மொழியாக இல்லாத காரணத்தால் சிவன் எப்படி அழிந்து ஒழிந்து போவான்? ஆகமங்களைச் சிவன் ஆரியத்திலும் தமிழிலும் சக்திக்கு உபதேசித்தான் என்கிறார் திருமூலர். சிவனின் இடகலை வாசியே சக்தியும் தமிழும்! 

அக்காலத்தில் சுந்தரனாரின் பாடலில் இந்தச் சொல்லாடலை யாரும் தர்க்கம் செய்யாமல் ஏற்றுக்கொண்டு விட்டதால், இன்று அம்மொழியை/அவனை இறந்துபோன, வழக்கழிந்த, ஒழிந்த என்று மனம் குளிரப் பேசுகின்றனர். நூலின் முதல்பக்க வாழ்த்துப் பாவிலேயே சிவன் அழிந்து ஒழிந்தான் என்பது அபசகுனம். சிவனில்லாமல் சக்தி ஏது? சிவன் அழிந்தால் சக்தியும் அழிந்து போகும்! பிறகு தமிழ் ஏது? தமிழ் மீது பற்று இருக்கிறது என்பதைக் காட்ட இப்படியா பேராசிரியர் அமங்கலமாய்ப் பேசுவது?

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

தமிழும் ஆசிரியரும்!

பள்ளியில் தமிழாசிரியர் நாத்திகப் பகுத்தறிவாதியாக இருந்துவிட்டால் மாணவர்களின் பாடு திண்டாட்டம்தான். திருக்குறள், தேவாரம், கம்பராமாயணம், திருவருட்பா, பாடல்களை விளக்கி உண்மையான பொருள்தான் சொல்வாரா என்று அறிய முடியாது. அதனால் கோனார் தமிழ் உரையைத்தான் மாணவர்கள் நம்பியிருந்தனர்.

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பிற்குத் தமிழ்ப்பாடம் நடத்த முதுகலை பட்டதாரி அசிரியர் திரு. இரா.தேன்மொழியான் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் திராவிடக் கழக அபிமானி. கம்பராமாயணம் பகுதிகளை நடத்தும்போது இரட்டைப் பொருள் கொண்ட ஆபாசமான வர்ணனை கலந்துதான் விளக்கம் தருவார். இராமன்/ லட்சுமணன்/ சீதை இவர் வாயில் புனிதத்தை இழப்பார்கள். சில்க் சுமிதாவுடன் சீதையை ஒப்பிடுவார். பாடம் நடத்தும்போது பெரியாரின் கொள்கைகள் தீப்பொறி என வந்து விழும்.

“இராமன் என்ற ஓர் ஆரிய பார்ப்பனன் நம் கலாசாரத்தைக் கெடுத்தான். ஏண்டா வைத்தீஸ்வரன் நீ எப்படி?’ என்று ஒரு மாணவனைச் சீண்டுவார். வைதீஸ்வரன் என்ற மாணவன் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி வந்தவன் துடுக்குத்தனமானவன். அவன் பிராமணன் என்றாலும் கிராமத்துக் கெத்து/ சவடால் என எல்லா பண்புகளுமே அவனிடம் இருந்தது.

உடனே இந்த மாணவன் “சார், இராமன் பிராமணன் இல்ல ஷத்ரியன். நீங்க ஜாதியை மாத்திடீங்க. நாங்க எல்லாம் கலாச்சாரத்தை மாத்த மாட்டோம். உங்களைப்போல் பெரியவாதான் செய்வாங்க. நீங்க என்ன ஜாதி சார்?” என்றான் தடாலடியாக. இக்கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர், “ஏன்? நான் xxxx குலம்” என்றார்.

“சார், உங்க ஜாதியைவிட நாங்க உசத்திதான். இராமன்-சீதை புகழை நீங்க கெடுப்பீங்க. நாங்க செய்ய மாட்டோம். நல்ல வேளை நீங்க எங்க ஊர் பள்ளிக்கூடத்துல வேலைக்கு வரலை. தமிழ் வாத்தியாரே இப்படிப் பேசினா எங்க ஊர் மிராசுதார் தாத்தா பள்ளிக் கூடத்துக்கே வந்து நாக்கை இழுத்து வெச்சு சூடு போடுவார்” என்றான். மொத்த வகுப்பும் சிரிப்பொலியில் வெடித்தது. சீறாப்புராணம் நடத்தும்போது கதீஜாவுக்கும் சீதையின் கதிதான்!

அதன்பிறகு திரு.தேன்மொழியான் என்னதான் தேனொழுகப் பேசிப் பாடம் நடத்தினாலும் அவர் கடவுளைப் பழித்துப் பேசும் ஈனன் என்ற அளவில்தான் வைத்தீஸ்வரனின் எண்ணத்தில் நிலைத்தார். தன் மேலுள்ள குறைந்தபட்ச மரியாதையையும் சிதைத்துக் கொள்ளும் இப்படிப்பட்ட ஆசிரியர்களையும் ஆசிரியர் தினத்தில் நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த ஆசிரியரை அண்மையில் 'பூட்டும் சாவியும்' என்ற சிறுகதையில் ஒரு கதாபாத்திரமாக அமைத்தேன்.

-எஸ்.சந்திரசேகர்