About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சித்தனாதனின் யோக சாதனை!

ஆறுமுகனைப் பார்த்து ‘வா, என் அப்பனே!’ என்று சிவபிரான் அழைத்தார். முருகனை உயர் நிலைக்கு இட்டுச் சென்றதோடு, பிரணவதிற்குப் பொருள் கேட்டுச் சோதித்தார். பரவுணர்வு நிலையில் மகாரம் உணர்த்தும் ஊமை எழுத்தின் வெளிப்பாடே சகஸ்ராரத்தில் ஒலிக்கும் ஓங்காரம். ஓங்காரத்திற்குப் பொருள் கேட்ட சிவனை தன் சீடர் ஸ்தானத்தில் பணியச் சொல்லி, தானே குருநாதனாக இருந்து திருவேரகத்தில் சுவாமிநாதனாக/தகப்பன்சாமியாக இருந்து உபதேசம் செய்தான்.

பரம்பொருளான சிவனே அதன் உட்பொருளாக இருக்க முருகப்பெருமானின் பெருமைகளை உலகோர்க்கு உயர்த்திக் காட்ட இத்திருவிளையாடலை ஆடினான். முருகன் சிவனுக்கு என்னவெல்லாம் உபதேசித்தான்? ஆறாதார சக்கரங்களின் நிலைகளைக் கடந்து ஆகாயப் பரவெளி அம்பலமாம் சகஸ்ரார தளத்தில் ஓங்காரம் ஒலிக்கும் ரகசியத்தை உணர்த்தி, பராபரையாளின் மகிமையை உணர்த்தி, அஷ்டாங்க யோகங்களையும் சமாதி நிலைகளையும் விளக்கி, யாகங்களின் மேன்மையை உள்முகமாக (யோகத்தீ), வெளிமுகமாக (வேள்வித்தீ) பாவனையாக நிகழ்த்துவதையும், தேவியாள் குண்டலினி ரூபமாக குலதெய்வமாக வருவதையும் உணர்த்தினான். இந்த தத்துவங்களை முருகக்கடவுள் சிவனாருக்கு எடுத்துரைத்ததால் சிவனார் நிலைத்து இருந்தார்’ என்று பொருள்படும்படி இப்பாடல் உள்ளது.

ஒரு தகப்பனானவன் தன் மகனுக்கு ஞானம் ஊட்டி, அவனுடைய திறன்களை வெளிக்கொண்டு வந்து, அவனிடமே சந்தேகம் கேட்டுத் தெளிவடைவதுபோல் அவனை உயர்த்திக்காட்டிக் கொஞ்சி அரவணைக்க சிவனே நல்ல உதாரணம். ஆனால் சமுதாயத்தில் நடப்பது என்ன? தன் மகனின் வளர்ச்சியை சகித்துக்கொள்ளாத தகப்பன்களும் இருக்கும் கலி காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்.
ஆறு குழந்தைகளை உமையாள் ஒன்றிணைத்ததால் கந்தன் என்ற பெயரும் பெற்றான். சிவனும் சகதியுமாகச் சேர்ந்து அக்குழந்தையை யோக நிலைக்கு ஏற்றிவிட பயிற்சிகள் தந்தனர். முருகனுக்கு வாசியோகம் கற்றுத் தந்தும், காலனை வென்றிட வாசியில் நிலைத்திடவும், பிறவிகள் இல்லாமல் சாகாநிலை எய்த கற்பங்கள் உண்ணத் தந்தும், மாயையை வென்றிடவும், ஆறாதார சக்கரத்தின் உச்சியில் ஞான அமுது சிந்த அதைப் பருகச் சொல்லியும், உறக்கமில்லா நிலையை அருளி நித்திய கர்த்தவியங்கள் மேற்கொள்ள சிவனுக்கு ஈடாக முருகனைத் தயார் படுத்திப் போதிய சக்தியை அளித்து, என் கண்மணியே வாடா! என்று அணைக்கிறாள். அவளை மனோன்மணியாள் என்று முருகன் வர்ணிக்கிறான். மனோன்மணியாளைப் பற்றி சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதாகப்பட்டது, சிவன் பெற்றுவிட்டதால் திடீரென எல்லாம் தெரிந்துகொண்டு சூரனுடம் போர் செய்ய முருகன் ஓரிரவில் போய்விடவில்லை. அவன் வளரும் பிராயத்தில் எல்லாம் கற்றுக்கொண்டு, தன்னுள் மறைந்திருக்கும் பிரம்மத்தைத் தட்டியெழுப்பி அதை உணர்ந்தபின் தகப்பன்சாமி என பெயர் பெறுகிறான். யோக சாதனை எய்தி யோக சுப்பிரமணியமாகவும், சிவனின் இடகலையென சக்தி/மாதவன் பாகமாக இருக்கும்போது சக்திச்சரவணன்/ வேங்கடசுப்பிரமணியம் என்று பெயர் பெறுகிறான். ஆக, ஒரு மகவு வளரும்போது தாய்/தந்தை உறுதுணையாக இருக்கவேண்டிய அவசியத்தை முருகனே உணர்த்துவது தெரிகிறது.

மெய்ஞானத்தை மறந்த நிலையில்!

முந்தைய யுகம்வரை உலகளாவிய முன்னேற்றம் பெற்றிருந்த பாரத வம்சத்தின் கோலோச்சும் அதிகாரம் கலியுகத்திற்குப்பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிப்போனது. இது கலியுக லட்சணம் என்ற நோக்கில் பார்க்காமல் எல்லோரும் விமர்சித்து வருவது இயல்பாகிவிட்டது. வந்தோரும் போனோரும் நம்மை வீழ்த்தினர், நம் இலக்கிய நூல்களை எரித்தனர், கடந்தகால சுவடுகளை அழித்தனர், நம் அடையாளத்தை சிதைத்தனர், என்றெல்லாம் சிலர் கூக்குரல் இடுவதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மாற்றம் குறித்துக் குறைகூற இம்மியும் அவசியமில்லை. அது காலசக்கரத்தின் கட்டாயம்.

நம் பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்க்கையை இன்று ஏன் நாம் வாழவில்லை? வம்சத்தில் யார் நுழைந்து பலவந்தப்படுத்தி மாற்றியமைத்தது? அவர்கள் பெற்றிருந்த அபரிமிதமான கல்வி கேள்வி ஞானம் இன்று ஏன் நமக்கு வாய்க்கவில்லை? அதை நமக்குச் சேரவிடாமல் வம்சத்தில் முடக்கியது யார்? அதைப் பெறவிடாமல் குடும்பத்தில் தடுத்தது யார்? இது எதற்கும் நம்மிடம் விடை இல்லை. நம் மூதாதையர்கள் வாழ்ந்த சில நூற்றாண்டுகள் முன்புவரை யோகிகளும் சித்தர்களும் சர்வ சாதாரணமாகவே சமுதாயத்தில் வலம் வந்தனர். சிவன் கோயில்களில் மூன்று கால பூசைகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஒலித்தன, தேவாரப் பண்ணிசையும் பாடப்பட்டன. குற்றங்கள் இருக்கவில்லை. பஞ்சபூதங்கள் சுபிட்சமாய்ப் பேணிக் காக்கப்பட்டன. எங்கும் சிவ நிந்தனை இல்லை. சிவ சொத்து களவாடப்படவில்லை. களவாடும் அளவுக்கு யாரும் மதிகெட்டுப் போகவில்லை. சித்தரிஷிகளும் மகான்களும் அதைச் செய்யவிடவில்லை. எல்லோரும் தூய சைவ உணவை உண்டு பக்தி நெறியில் வாழ்ந்து உடல்/ மனம்/செயல்/வாக்கு என அனைத்திலும் தூய்மையைக் கடைப்பிடித்தனர். சில பிரிவினர் மட்டும் கள்/ மாமிசம் என்று பழகினர்.
புனித நூல்கள் இயம்பியதை முற்போக்காகத் தர்க்கம் செய்ததில்லை. மாறாக ஒப்பீடு, இலக்கியச் சுவை, புலமை, ரசம் வெளிப்பட அதைப் பகுத்தறிந்து மெய்ஞானம் வெளிப்பட விவாதித்தனர். ஆனால் இன்று நடப்பது இதுவா?
அருட்கடாட்சம் இருந்த படியால் பரனும் பரையும் பேணிக்காத்த மெய்ஞானம் வம்சத்தில் தலைமுறை வழியே பயணித்து வந்தது. இன்று ஒரு மந்திரம் கற்கவோ, பதிகம் பாடவோ கூகிளில் அதை அடித்துத் தேடிப் பார்க்கவேண்டிய நிலை. ஏன்? எதையும் நாம் மனனம் செய்யாமல் இருந்துவிட்டோம். அதைக் கற்பதனால் ஆவதென்ன, அதை அனுதினமும் உருவேற்ற நேரமேது என்ற சிந்தனையில் வளர்ந்து விட்டோம். படிப்பு, வேலை, பொறுப்பு என்று எல்லா கடமைகளால் மெய்ஞானம் ஊட்டும் சங்கதிகளை புறம் தள்ளினோம். மந்திரங்கள், ஸ்துதிகள், திருமுறைகள், புராணங்கள், சித்தர் பாடல்கள் என்றாலே வேம்பாகக் கசந்தது. நவீனம், பொருளாதார முன்னேற்றம், என்று நம் புத்தி அடிமைப்பட்டு இருந்ததால் மெய்ஞானம் பற்றிய ஆழமான சிந்தனை இல்லாது இருந்தோம். இது போதாதென நாத்திக பிரசாரங்களும் முற்போக்கு அரசியலும் மாசடையச் செய்தன. அவரவர் குலப்படி அனுசரிக்கவேண்டிய அனுஷ்டனங்கள் முக்கியத்துவம் இழந்தன. ஆனால் இன்று பகுத்தறிவு என்றாலே அது கருஞ்சட்டை நாத்திகம் என்று அர்த்தமாகிவிட்டது.
இந்த 10-20 வருடங்களில் சித்தர் பாடல்களுக்கு மவுசு கூடிப்போனது. அன்று தவறவிட்ட கோஷ்டியினர் இன்று திடீரென அதை ஈடுசெய்ய கிளம்பிவிட்டனர். எங்கு காணினும் சிவ ஸ்துதிகள், சித்தர் பாடல்கள், பிரதோஷம், கிரிவலம், சித்த சமாதிகளைத் தேடி மக்கள் போவதும், இராமனும் கிருஷ்ணனும் முக்கியத்துவம் அடைவதும் ... கலியில் நடக்கும் சுத்தி முறையாகும். ஆயினும் காலம் கடந்து மெய்ஞானம் தேடி வந்ததால் மேற்படி மரபுகளை ஆசைத்தீர ஆழமாய் உழுது பார்க்க வயதும் உடலும் இடம் தருவதில்லை என்பதே பலருடைய வருத்தம். அத்தகையோரிடம் ‘போகட்டும் விடுங்கள், இப்போதாவது அது பற்றிய நற்சிந்தனை வந்ததே ... சந்தோஷம்’ என்பேன். ஊழ்வினைப் பயனாக அதுவரை உணராதோர் அதிகம்.
பழம் நூற்றாண்டுகள் கழிந்தாலும், நவீனங்கள் முன்னேற்றங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இன்னும் நாம் சுவாசிக்கிறோம், உண்கிறோம், மலம்/சிறுநீர் கழிக்கிறோம். இது மட்டும் ஏன்? விட்ட மூச்சை வாங்காமல் போனால் என்ன? மூச்சு ஒரே கலையில் ஓடிக்கொண்டிருந்தால் என்ன? செரித்த உணவு பிரியாது போனால் என்ன? இவை எல்லாம் காலனை அழைக்கும் அறிகுறிகள். இதை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் யோகம் மெய்ஞானம் நாம் பெறவேண்டும். தர்மநெறி பின்பற்ற வேண்டும். தான் அவனாகும் நிலை வரும்வரை இவை எல்லாம் நல்ல முறையில் நடக்க அவன் தயவு வேண்டும். அப்போது அறிவியல் என்பது மாயை, அது மெய்ஞானத்தினுள் அருவமாக ஒளிந்திருக்கும் விஞ்ஞானம், அது அவனுடைய திருவிளையாடலே என்பது தெளிவாகும்.
- எஸ்.சந்திரசேகர்

மறைந்த கலாச்சாரம்!

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் காலத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் The Madras Devadasis (Prevention of Dedication) Act, 1947 நிறைவேறும்வரை அந்தப் பழக்கம் பரவலாக இருந்து வந்தது. கீழ்த்தரமாக நினைக்கும் அளவில் அதன் நிலை போய்விட்டது. கோயிலில் ‘பொட்டு’ கட்டும் ஒரு சடங்கில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பூசை நேரத்தில் இறைவனுக்கு உபசாரங்கள் நடக்கும்போது ஆடல் பாடல் மூலம் இசை விருந்து அளித்து நிறைவேற்றினார்கள். அன்று முதல் தேவதாசி என்று அழைக்கப்பட்டனர்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே இறை நிந்தனை பெருகியதாலும், கோயிலில் பின்பற்றப்படும் கலாச்சாரங்கள் விமர்சிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் வழக்கொழிந்து போனதால், பிற்காலத்தில் தேவதாசிகளை வேலியில்லா பயிர் என்று பாவித்துக்கொண்டு ஊர் சபை பெரிசுகள் அவர்களை வலம் வந்து அடிபணிய வைத்தனர். தேவர் அடியார்கள் என எந்தப் பழக்கம் ஒரு காலத்தில் மேன்மையுற விளங்கியதோ, திருமுறைகளில் மதிப்புடன் பாடப்பட்டதோ, அது கொச்சையானது. சட்டம் இயற்றி அக்கலாசாரத்தை அடியோடு ஒழிக்கும் அளவுக்கு அந்தச் சம்பிரதாயம் பற்றிய புரிதல் மாசுபட்டுப் போனது.
அப்பாரம்பரியத்தில் வந்தோர் எல்லோருமே திரைப்பட நடிகைகளாகவோ, இசை/நாட்டிய கலைஞர்களாகவோ கட்டாயம் இருந்துதான் ஆகவேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. பரத நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் குருதான் திருவிடைமருதூர் டி.ஏ.ராஜலக்ஷ்மி. நாட்டிய விதூஷி இராஜலட்சுமி அவர்கள் பந்தநல்லூர் பாணியில் பயிற்சி எடுத்தவர், தேவதாசி குடும்பத்திலிருந்து வந்தவர்.
அவருடைய மகன் திரு.நாராயணன் மகாலிங்கம் இருபது ஆண்டுகளுக்குமுன் என்னுடன் ஒரே நிறுவனத்தில் பணி செய்தவர். பல்லாண்டுகளுக்குமுன் இவருடைய தாத்தா திருவிடைமருதூர் பழனியப்பா பிரபல தவில் வித்வானாகப் பரிமளித்தவர். தன்னுடைய அம்மா முழு அர்ப்பணிப்புடன் இறைவன்முன் மெய்மறந்து ஆடுவார் என்பதை அவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.
அவர் என்னுடன் பேசும்போது, ‘நட்டுவாங்க ஜதி சொல்வதற்கும், தவில் கொன்னக்கோல் சொல்வதற்கும் நிறைய வேற்றுமையுண்டு என்பார். அதில் வரும் சொற்கட்டுகள் மாறும். ‘ஜம்’ என்று நாட்டியத்திலும், ‘ப்ளாங்’ என்று தவில் கொன்னக்கோலிலும் வரும். அதுபோன்ற சொற்கட்டுகள் நாக்கைப் புரட்டிப்போடும். வயதாகும்போது நரம்புத்தளர்ச்சி பிரச்சனையால் நா குழறாமல் இருக்க நல்ல பயிற்சியாகும் என்பார். திருப்புகழ் முத்தைத்தரு என்ற பாடலும் இந்த முறையில் வரும் சுழற்சிப் பிரயோகம்தான். வடமொழி ஓசைகளை அப்படியேதான் சொல்லவேண்டும். ‘சூம்’ என்றோ ‘பிளாங்கு’ என்றோ அழுத்தத்தைத் தமிழ்ப் படுத்தினால் இசை-நடனம் நயம் அடியோடு கெடும்’ என்பார். தொலைக்காட்சியில் இன்று அக்காலத்து நாட்டிய ஆவணப்பட துக்கடா ஒன்றைப் பார்க்கும்போது, எனக்கு ஏனோ இந்தப் பழைய நினைவு வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
-எஸ்.சந்திரசேகர்


சுப்பிரமணியம்

 பீஜம் என்ற விதைக்குள் எப்படி ஒரு விருட்சம் இருக்குமோ அப்படியாக பீஜ மந்திரத்திற்குள் தெய்வங்கள் உறைகிறார்கள். முருகன் தன் சீடர் அகத்தியர்க்கு 'சுப்பிரமணிய ஞானம்' உபதேசிக்கையில் சிவனாரிடமிருந்து தான் உதித்த விதத்தைப்பற்றி விவரிக்கிறார்.

ஓம் சௌம் என்ற பீஜத்தில் சௌ+ஹூம் என்பது இணைந்துள்ளது. இது படைப்புத் தொழிலுக்கேற்ற பிரம்ம பீஜம். சிவபிரான் தன்னுடைய ஆறாதார சக்கரங்களின் அம்சங்களை ஒன்று திரட்டி ஒளிப்பிழம்பாக லலாடம் (எ) முக்கண் (எ) ஆக்ஞா வழியே ஆறு தீப்பொறிகளாக விண்ணில் இடிமுழங்க வீசினார். கீழே சிதறி விழுந்தவைகளை ஆறுமுகா என்று ஈசனே அழைத்தார். தனக்கு வாசி (மயில்) ஏறக் கற்றுக்கொடுத்து, ‘என் அப்பனே! என் குருநாதா!’ என்றார். சுப்பிரமணி என்றழைத்த சிவனார் எப்போது முருகா என அழைத்தார் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறதா? அதை இன்னொரு பாடலில் உரைத்துள்ளார்.
சரவணப் பொய்கையில் எழுந்தருளிய ஆறுமுகப் பெருமான் ஒன்றிணைந்து ஸ்கந்தமானான். அப்படி உதித்த தனக்குப் பூரண பிரம்மக்ஞானம் சுயம்புவாக நிலைக்கொண்டதால் சுப்பிரம்மணியம் என்ற பெயர் பெற்று திருவேரகம் (எ) சுவாமிமலையில் தகப்பன்சாமியாக சிவனுக்கே பிரணவத்திற்குப் பொருளுரை உபதேசம் செய்ய முடிந்தது. அசுரர் குலத்தை வேரறுக்க சிவன் தன் மேரு (கபால) பீடத்தில் பிரம்மாவின் பணியை மேற்கொண்டு ஒளிரூபமாக என்னைப் படைத்தார்.'
திருமந்திரத்தில் ‘நந்தி அருள்பெற்ற நாதரை நாடினின், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடு எண்மருமாமே’ என்று சொல்லும்போது தன்னையும் சேர்ந்து எண்மர் இருந்தோம் என்று திருமூலர் சொன்னார். அந்த நந்திகள் நால்வரில் ஒருவரான சனத்குமரர்தான் ஆறு தீப்பொறிகளாக முக்கண் முன்னே சிவனின் ஆக்ஞைப்படி வெளிவந்தார். தாய் உமை இல்லாமல் தகப்பன் சிவனே பிள்ளையைப் பெற்றவிதம் இதுதான். ஆகவே நந்தி/சிவன் அம்சமில்லாமல் வாசி மயிலேறிய முருகக்கடவுள் இல்லை.
கந்தகுரு கவசத்தில் வரும் முருகனின் மூலமந்திர வரிகள் நினைவுக்கு வருகிறதா? அதைத்தான் படத்தில் தந்துள்ளேன். ஆத்ம சுத்தியுடன் இதை 1008/ 100008 என விருப்பம்போல் உருவேற்றுக! முருகனின் தரிசனம் நிச்சயம் வாய்க்கும்.
- எஸ்.சந்திரசேகர்