About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 27 ஆகஸ்ட், 2022

பொங்கியின் வங்கி!

அம்மா தரும் பத்து காசைப் 

பத்திரமாய்ப் பொத்தி வைப்பாள்

நிறைய நிறைய சேர்க்க எண்ணி

நினைத்துக்கொண்ட சிறுமி ஒருத்தி.


ஒற்றைப் பின்னல் எலிவாலுடன்  

கால்பாவாடையின் மங்கிய ஒளியும்

காது மூக்கு குத்திய இடத்தில்

வேப்பங்குச்சி தோடாய் மின்னி,

ரப்பர் வளையல் மெல்லிய விரல்கள்

சேற்றுப்புண் கால்களோடு வெளிர 

கண்கள் மட்டும் பளிச்சென மிளிரும்

சிறுமியின் நிலை பாவம்தான்!


அவளையே தூக்கும் சுமையொன்றை

இடுப்பில் ஏற்றி வைத்திருக்க

சற்றே தடுமாறி நடக்கும்போது

கனத்த பாவாடை எழுப்பும் ஓசை

அவள் இதயத்துடிப்பின் எதிரொலி.


கோடிவீட்டுப் பாப்பாவின் ஆயாவாக

இவள் மூணு ரூபாய் ஊதியம் பார்த்திட

வாயெல்லாம் பல்...

கசங்கிப்போன காகிதத் தாள்களைப்

பத்திரமாய்ச் சேர்த்து வைத்தாள்.

தீப்பெட்டிதான் டிரங்குபெட்டி!


சேர்த்துவைத்த காசுகளை 

பெட்டியில் வைத்துக் காப்பதை

குடிகாரதந்தையின் கண்ணில்   

போதையை கொஞ்சம் காட்டியது.

முண்டாசுக்குள் பெட்டி நுழைந்தது

வயிற்றுக்குள் சரக்கு இறங்கியது.

பற்றவைத்துப் பீடியை இழுக்க

பெட்டியே நெருப்பையும் தந்தது.


முண்டாசு வியர்வையில் நனைந்தும்

நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி..

இவன் செயல் கண்டு சகிக்காமல்

பெட்டிக்கே வயிற்றெரிச்சல்!

போதையில் அவன் பாதையில் உருள

நசுங்கிப்போனது டிரங்கு பெட்டி!   

தள்ளாடிப் போனவன் வந்தபின்

பொந்துக்குள் பெட்டியை வைத்தான்.


காலையில் விழித்த பொங்கி

பெட்டியைக் காணாது அதிர்ந்தாள்.

பெட்டியைக் கடித்த பெருச்சாளி

எந்தப் பொந்தில் வைத்ததோவென

அதைத் தேடுவதைக் கைவிட்டாள்.


குடிசைக்குள் துள்ளலாய் நுழைந்தாள்.

வீரம் பொங்க வைத்திருந்தாள்

புதிய 'சீட்டாபைட்' டிரங்கு பெட்டி!


-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சித்தாடலை விமர்சிப்போர் கவனத்திற்கு!

நீண்ட இடைவெளிக்குப்பிறகு சித்தர்கள் பற்றி இங்கே பதிவிடுகிறேன். ‘சொர்ண மேரு’ என்ற என் பழைய பதிவைப் படித்த சிலர், போகர் சொல்லிய சங்கதியின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், அது பொய், அது சூரிய ஒளியால் வந்த நிறம், இருளில் மலை மின்னும் கதையைக் கேள்விப்பட்டதில்லை, பொய் சொல்ல அளவேயில்லையா என்ற ரீதியில் விமர்சனங்களைப் பார்த்தேன். நான் இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை.

சித்த புருஷர்களின் அஷ்ட சித்திகள்பற்றி பாம்பாட்டி சித்தரே நீண்ட விளக்கத்தைத் தந்துள்ளார். சித்தர்கள் எப்படிப்பட்டவர்கள், பெற்றுள்ள சக்திகள் என்ன, இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் என்ன, போன்ற விவரங்களைப் பாடல்களில் உரைத்துள்ளார். அதை இங்கே பார்ப்போம்!

“பெரிய தூணையே சிறு துரும்பாகவும், சிறியதைப் பெரியதாகவும் தோன்றச் செய்வோம்; ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவோம். மலைகளையே பந்தாக உருட்டி வீசுவோம், சப்த சாகரங்களையே குடித்து ஏப்பம் விடுவோம், அளவில்லாத மணலையே அளந்திடுவோம். மண்டலத்தையே உள்ளங்கையில் மறைத்து விடுவோம், வானத்தை வில்லாக வளைப்போம், சீடர்களுக்கு அஷ்டகர்ம ரகசியமும் சொல்லித் தருவோம்.

தகிக்கும் அக்னியில் மூழ்கிக்குளித்து இயல்பாய் எழுவோம், நீருக்குள் இருந்து மூச்சை அடக்கி வாழ்வோம், பாயும் புலியையும் தாக்கி வசியப்படுத்துவோம். மூவுலகத்தையும் பொன்னாய் மாற்றுவோம், சுடும் செங்கதிரைக் குளிராக்கிப் பாய்ச்சுவோம், இவ்வுலகே இல்லாமல் நாங்கள் மறைத்து மாற்றிடுவோம்.

வேதியன் செய்த சிருஷ்டியைப்போலவே எல்லாம் படைப்போம், அவனுக்குச் சமமாகத் திகழ்ந்து ஐந்தொழில் புரிந்து அவனாகவே வாழ்வோம். ஆயகலைகள் அனைத்தும் அறிவோம், அதற்கும் மேலான அழிவற்ற நிலையையும் அறிவோம், பற்றற்ற மனமுடன் வாழவும் செய்வோம்.

வேங்கை யானை யாழி சிங்கம் முதலானதைக் கட்டுப்படுத்தி ஏவி விடுவோம், அந்தக் கடவுளையே எங்களுடன் விளையாடச் செய்வோம், ஆதிசேஷன் வாசுகி பத்மன் தக்ஷன் அனந்தன் குளிகன் கார்கோடகன் சங்கபாலன் ஆகிய நாகங்களையே ஆட்டிப்படைப்போம். அஷ்டதிக்குகளில் யந்திர சக்கரங்களை எழுதி நாட்டி, அஷ்ட நாகங்களையே கட்டுவோம். இவை கக்கும் விஷத்தை எடுத்துப் பருகுவோம்” என அதிசயக்கும் வகையில் சித்தர்களின் சக்திகளை விளக்கி இவை அளவிடமுடியாதது அளப்பரியது என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

ஏழுகடலும் வற்றிடக் குடித்த அகத்தியர், மலைகளைப் பெயர்த்துப் போட்ட நந்தீசர், பரமணு ரகசியங்களை விளக்கிய திருமூலர், அண்டங்களைச் சுற்றிவந்த காலங்கி, ஆக்கங்கள் தந்த போகர், பொன்னைச் செம்புக்குள் மறைத்த கருவூரார், விஞ்சை மந்திரத்தால் வேங்கையை வாகனமாக்கிக்கொண்ட புலிப்பாணி, தென்காசியில் மலைக்குப் பச்சிலை அரைத்துப் பூசி துருத்தி கொண்டு ஊதிய தேரையர், நாக விஷத்தை அருந்திய மருதமலை பாம்பாட்டி, பனைமர உயரமாகி மீண்டும் சுருங்கிய கம்பளிச்சித்தர், பல்வேறு சித்துகள் ஆடிய மச்சமுனி கோரக்கர் கொங்கணர், நவகண்டர், என பலரைச் சொல்லலாம். 

கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சித்தர்களும் அப்படியே! உள்ளங்கையில் ரசமணி கட்டிய ஒளிதேகம் பெற்ற வள்ளலார், வெட்டப்பட்ட கரத்தைப் பொருத்திக்கொண்ட சதாசிவ பிரம்மேந்திரர், சமாதிக்கு உள்ளேயும் வெளியேயும் சஞ்சரிக்கும் பாம்பன் சுவாமிகள், எளிய பக்தனின் மறுபிறவிகளை ரத்து செய்து முக்தி தந்த காஞ்சி பரமாச்சாரியார், என பல உதாரணங்களைச் சொல்லலாம். தற்போது தட்டச்சு செய்யும்போது இவ்வளவுதான் என் நினைவுக்கு வந்தது. 

ஆகவே தூண்டுதலின் பேரில் சித்தர்களை/ மகான்களைத் தவறாக விமர்சித்துப் பாவக்கடலில் விழுந்திட வேண்டாம். உங்களுக்குப் பிறக்கும் வாரிசு அடிமைகள் நீங்கள் சேர்த்து வைத்துள்ள சாபத்தையும் பாவத்தையும் சுமக்க வேண்டும். சாமானியனின் புரிதலுக்கும் கற்பனைக்கும் இவை ஆட்படாது. சித்த புருஷர்களைக் கொடிய சொற்களால் தூற்றி இகழ்வோர் செய்யட்டும், அக்கருத்திற்கு நீங்கள் செவி சாய்த்து ஆமோதிக்க வேண்டாம். மீண்டும் இது ஓர் எச்சரிக்கை!

- எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

மறைப்புகள் நீங்கி எல்லாம் வெளிச்சமாகி...!

சித்தர்களின் வெளிப்பாடுகள் மற்றும் அவர்களுடைய ஜெனனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்தான் நடக்கும் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது அப்படியல்ல! மதத்தை, மொழியை, மாகாணத்தை, தேசத்தைத் தாண்டி அயல்நாடுகளிலும் நடக்கும். சில வருடங்களுக்கு முன் வெளிவந்த என் ‘சித்தநூல் ரகசியங்கள்’ (கற்பகம் புத்தகாலயம்) என்ற புத்தகத்தில் இதுபற்றி நான் சொல்லியிருந்தேன். 

ஃபேரடே, எடிசன், டெஸ்லா, ரூதர்ஃபோர்ட் மற்றும் பல மேலைநாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வழங்கிய தொழில்நுட்ப ரகசியங்களும் கருவிகளும் கடந்த நூற்றாண்டுகளில் பெரிதும் பேசப்பட்டன. ஆனால் இந்த நவீனங்களை எல்லாம் மூத்த சித்தர்கள் கடந்த யுகங்களிலே கண்டுபிடித்துச் செயலாக்கிவிட்டனர் என்பதைப்பற்றி நம் பழைய பதிவுகளில் பார்த்துள்ளோம். 
 
ஜெர்மானியர்கள் நம் பண்டைய சமக்ஸ்ருத்த ஏடுகளைத் திருடிக்கொண்டு போனார்கள், சீனம்/திபெத் நூலகங்களில் இன்னும் நம் பொக்கிஷ நூல்கள் உள்ளன என்று நிறையவே இங்கு அங்கலாய்த்தனர். திருடிக்கொண்டு போனதால் மேலைநாட்டினர் கண்டுபிடித்தனர் என்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் அதுகாறும் நம்மிடம் இருந்த நூல்களை வைத்து ஏன் நம்மவர்கள் புதிய ஆக்கங்களைத் தரவில்லை? விஸ்வகர்ம குலத்தினர் தம் குலத்தொழில் முறையில் சிலவற்றைச் சிறப்பாய் வெளிக்கொண்டு வந்தனர். ஆனால் மற்றவர்கள்...? இத்தனைக்கும் வடமொழி கோலோச்சிய காலம் ஆயிற்றே? ஏன் செய்யவில்லை? விடை காணமுடியாத பல கேள்விகள் உண்டு. எல்லாம் சிவசித்தம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.  

அப்படி ஓர் அயல் நாட்டவர்தான் திரு. அலெக்ஸாண்டர் பட்னி. பரவெளி ஆய்வாளர், நூல் ஆசிரியர், சமஸ்க்ருத மொழி ஆர்வலர், பிரபஞ்ச மின்காந்த ஒலி அதிர்வு விஞ்ஞானி, ரசவேதி என இவர் பன்முகங்கள் கொண்டவர். அலெக்ஸிடமிருந்து இன்று ஒரு விரிவான மின்னஞ்சல் எனக்கு வந்தது. இவர் என்னுடைய பழைய ஆங்கில சித்தவியல் கட்டுரைகளையும், பதிப்புகளையும் வாசித்துள்ளார் என்றார். போகருடைய கண்டுபிடுப்புகளை நான் முடிந்தவரையில் திறம்பட வெளிக்காட்டியுள்ளேன் என்று என்னைப் பாராட்டினார்.  என் 'போகர் ஏழாயிரம்: சப்தகாண்டம் ஒரு பார்வை' நூலை மொழிபெயர்த்துப் படித்துள்ளார். அவர் தன் கடிதத்தில் சொல்லிய சாரம் என்ன?

“நண்பா, சித்தர் போகர் உரைத்த மறைப்பு மிகுந்த கண்டுபிடிப்புகளை என் ஆய்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். அவர் உரைத்த ரசவாத வேதியல் ரகசியங்களை உடைத்துப் பிரயோகம் செய்து நூறு சதவிகிதம் வெற்றியும் பெற்றேன். வெவ்வேறு வெப்பங்களில் படிமங்களின் அதிர்வில் வெளிப்படும்   துகள்களின் ஆய்வையும், புவியீர்ப்பு காந்தவிசை சார்ந்த ஒலி ஆய்வையும்  மேற்கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் பரவெளியில் கேட்கும் "ஓங்கார" நாதம் பற்றி வெளியிட்டதும் நானே. 

சித்தரின் பாடல்களில் உறைந்துள்ள மறைப்புகள் அத்தனையும் இரத்தினங்கள் என்பதை உணர்ந்தேன். அவருடைய பாடல்கள் மூலம் நான் செய்த கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாய் உள்ளேன். என் ஆய்வுகளில் அவருடைய மறைப்புகள் எல்லாமே எனக்குப் பரிச்சயமாகி வருவதை சில வருடங்களாகவே உணர்கிறேன். பாடல்களிலுள்ள மறைப்பு விலகிட அந்த விதியாளி நானாகி நானே போகராக மாறி அனைத்தையும் செய்யமுடிகிறது என்பதை நினைத்தால்... நான் போகரின் மறுபிறப்போ என்றும் சிந்திக்க வைக்கிறது. உங்களிடம் மேலும் பல விஷயங்களை விவாதிக்க ஆவலாக உள்ளேன். நன்றி, வாழ்த்துகள் நண்பா!”

இவரைப்பற்றி நான் இன்று அலசி ஆராயும்போதுதான் இவர் எழுதிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் காண நேர்ந்தது. சிலவற்றைக் கூர்ந்து வாசித்தேன். இவர் BBC வானொலிக்குத் தந்த பேட்டியையும் கேட்டேன்... அசந்து போனேன்! இவருடைய புத்தகத்தைப் படிக்கும்போதுதான் இவருக்கும் நிகோலா டெஸ்லாவுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் அவர் சிந்தனை, ஆய்வு, உருவ நிலையில் உள்ளதை அறிந்தேன். போகர் கையாண்ட, மின்காந்தவியல் சூத்திரம் மூலம் செலுத்திய வான்ரதம், பூமியை ஸ்கேன் செய்த படிகமானி கதிர்கள், ஆகாய விமானத்தை இருளாக்கிப் (Stealth) பார்வைக்குப் புலப்படாமல் மறைக்கும் சூத்திரம் என பலதும் நினைவுக்கு வந்தன. பல ரிஷிகள் போதித்த நுட்பங்களை அன்றே போகர் வடிவாக்கினார்.

என் ஆங்கிலக் கட்டுரைகளும் பதிப்புகளும் எங்கோ யாருக்கோ பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவையும் தருகிறது. அலெக்ஸ் அளவுக்கு நான் எதையும் முனைப்பு எடுத்துச் செய்யவில்லை என்றாலும், அவர் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. எல்லாம் சிவசித்தம்!
   
-எஸ்.சந்திரசேகர்