About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 13 ஜனவரி, 2020

மார்கழியில் தைப்பொங்கல்!

கடந்த சில தினங்களாக ஊரெங்கும் சமத்துவப் பொங்கல்/ தமிழர் பொங்கல்/ பாரம்பரியப் பொங்கல் என ஏதேதோ பெயர்களில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், முற்போக்கு சங்கங்கள், மாணவிகள், சுற்றுலா பயணிகள், என் அனைவரும் கொண்டாடியதை நேற்றும் இன்றும் டிவியில் காட்டினர்.

பொங்கல் வைக்கும் பெண்டிரில் பல ரகங்களைப் பார்த்தேன். மஞ்சள் புடவையைக் கட்டிக்கொண்டு பரட்டைத் தலையுடன் கட்சி விழாவுக்கு அவசர கதியில் அலங்கோலமாய் அழைத்து வரப்பட்ட கூட்டம் என்பதும் தெரிந்தது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் எல்லோரும் கட்டாயமாக நெஞ்சுக்கு முன்புறம் மல்லிகைப் பூச்சரத்தைத் தொங்கவிட்டு, காலில் செருப்பு அணிந்து, இறை பக்தி ஏதுமின்றி, கடனுக்கே என தீ மூட்டிவிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, பால்சோறு அதன் போக்கில் வெந்து பொங்கட்டுமா வழியட்டுமா என்று பானையின் வாயில் எட்டிப் பார்த்து ஒரு கணம் நின்று இந்த முகங்களைப் பார்க்க வெட்கப்படும் வேளையில், 'பொங்கலோ பொங்கல்' என்று கூப்பாடு போட்டு கைகொட்டி ஆராவாரம் செய்தபின் கொஞ்ச நேரத்தில் சிலர் ஜூட் விட்டார்கள்.

சலவைபுரத்தில் துணிகளைக் கொடியில் உலர்த்த நிற்கும் குறுக்குக் கம்புகள்போல் கரும்புகள் சாய்ந்தபடி நின்றிருந்தன. மஞ்சள் கொத்தின் இலையும் அடிக்கிழங்கும் கருகிப்போகும் அளவில் நம் அறிவுக் கொழுந்துகள் பானையின் கழுத்தில் கட்டித்தொங்க விட்டிருந்தார்கள். இன்னொரு பெண் அகப்பையைப் பானையிலேயே போட்டு வைத்துவிட அதை பிடித்துக் கிண்டுவதற்குள் சூடு பொறுக்காமல் கைகுட்டையைத் தேடினாள்.

எத்தனைப் பானைகளில் பொங்கல் தீய்ந்து அடி பிடித்ததோ? பொங்கலை இவர்கள் தின்றார்களோ கால்நடைகளும் பறவைகளும் தின்றதோ? எத்தனை மல்லிகைப் பூக்கள் பொங்கல் பானைக்குள் விழுந்து வெந்து கசந்ததோ? அந்த ரகசியம் சூரியனுக்கே வெளிச்சம். மெய்யான நம் பக்திபூர்வமான பொங்கல் சமர்ப்பணம் எங்கே? தைப்பொங்கல் வருவது ஒருமுறையே! அதை ஏன் கேலிக்கூத்தாக்க வேண்டும்?

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 12 ஜனவரி, 2020

பளிங்குக்கல்லில் ஷிர்டி சாயிநாதர்!

அக்டோபர் 1918 ல் மகாசமாதி அடைந்தார் ஷிர்டி சாயிநாதர். 1954 வரை இப்போதுள்ள ஸ்தலத்தில் சிலை வழிபடு எதுவும் இருக்கவில்லை. தென்னகத்தில் நம் ஆகம விதிகள்படி பளிங்குக்கல்லில் கோயில் சிலைகளை நாம் செதுக்குவதில்லை. ஆனால் வடக்கே பெரும்பாலும் நம்முடைய ஆகம வழிமுறை பின்பற்றப்படுவதில்லை. மகான் சமாதியாகி 36 வருடங்கள் கழித்தே இக்கோயிலில் விக்ரகம் நிறுவப்பட்டது. ஆனால் இது உருவான வரலாறு மெய்சிலிரிக்க வைக்கும்.
இத்தாலியிலிருந்து வந்திறங்கிய ஒரு பளிங்குக்கல் மும்பாய் துறைமுகத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது. அதை யாரும் உரிமைக் கோராததால் சில மாதங்களுக்குப்பிறகு அதை ஏலம் விட்டனர். பளிங்குக்கல்லின் உயர் தரத்தால் கவரப்பட்ட ஒரு செல்வந்தர் அதை ஏலத்தில் எடுத்து ஷிர்டி சமஸ்தான கோயிலுக்கு அர்ப்பணித்தார். கோயில் நிர்வாகம் அதில் சிலை வடிக்க முடிவு செய்தபின் சிற்பி திரு.பாலாஜி வசந்த் அவர்களிடம் ஒப்படைத்தது.
ஷிர்டி மகானின் பழைய கருப்புவெள்ளைப் படத்தைப் பார்த்து வடித்தால் ஓரளவுக்குத்தான் ஒற்றுமை நிலவும். அதுவே மகானை நேரடியாக பார்த்துக்கொண்டே வடித்தால் துல்லியமாக இருக்கும் என்று நினைத்தார். தான் வடிக்கப் போகும் மகானின் உருவம் சரியாக வரவேண்டுமே என்ற கவலையும் இருந்தது. மகானை மனமுருகி வேண்டிக்கொண்டார். ஒரு நல்ல நாளில் காலையில் தன்னுடைய சிற்பகலா ஸ்டுடியோவுக்குள் கதவைத் திறந்து விளக்கைப் போடும் முன்பாக அரங்கில் வெளிச்சம் கூடியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அங்கே ஷிர்டி மகான் இவருக்காக ஒளிவெள்ளத்தில் தரிசனம் தர காத்திருந்தார்.
வணங்கிக்கொண்டு உடனே தன்னுடைய உளியையும் சுத்தியையும் எடுத்து ஆனந்தப் பிரவாகத்தில் செயல்பட ஆரம்பித்தார். முழு உருவத்தையும் எல்லா திசைகளிலும் பார்த்துக்கொள்ள ஏதுவாக மகான் சுழன்று தன் முகத்தின் நெளிவுகளையும் கிட்டத்தில் காட்டினார். முழங்கால் அருகே கல்லில் சிறு வெற்றிடம் இருந்ததைக் கண்டு சிற்பி திடுக்கிட்டார். அதைத் தட்டினால் கீழ்பகுதி சிற்பம் உடைந்து விடும் அபாயம் இருப்பதால் மேற்கொண்டு செய்வதறியாது கலக்கத்தில் சும்மா இருந்துவிட்டார். ‘தொடர்ந்து செதுக்கு ஒன்றும் ஆகாது’ என்று கனவில் அவருக்கு அசரீரி ஒலிக்க நம்பிக்கையுடன் செய்து முடித்தார். அவருடைய ஆசிகளுடன் 5 அடி 5 அங்குல விக்ரகம் உருவானது. 1954 அக்டோபர் மாதம் விஜயதசமி நன்னாளில் அது கோயிலில் நிறுவப்பட்டது. இந்து சமய விதிமுறைகள்படியே இங்கு பூஜைகள் செய்யப்படுகிறது. அதிகாலை முதல் இரவு வரை அவருக்கு நான்கு காலமும் அலங்காரம் நடக்கிறது. ஆரத்தியில் நிவேதன அமுது படைக்கப்படுகிறது.
நம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் சிவலிங்கம் தான் இருக்கும். அங்கு தத்தாத்ரேயர் என்று கருவறைக்குள் தனியாக விக்ரகம் இல்லை. லிங்க வடிவில் மும்மூர்த்தியும் அங்கே சங்கமித்துள்ளனர். ஷிர்டியில் இந்தப் பளிங்கு விக்ரகம் நிறுவப்பட்டபிறகுதான் நாடெங்கும் ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதார உருவங்கள் பளிங்கில் வடிக்கப்பட ஆரம்பமானது. மகானின் சிலை வழிபாட்டு விக்ரகமாக மாறிய அற்புத லீலை இதுதான்.
அந்தப் பளிங்குக்கல் எங்கே போக வேண்டுமோ அங்கே போய்ச் சேந்தது. சிற்பி பாலாஜியின் வேண்டுதலுக்கிணங்க மகானே வந்தமர்ந்து தரிசனம் தந்து தான் விருப்பப்பட்ட சிலையை உருவாக்க அருள் புரிந்தார். பரத்வாஜ கோத்திர இஸ்லாமிய சுஃபி மகானாக அவதரித்த ஸ்ரீதத்தரின் லீலைகளை யாராலும் கணிக்க இயலாது. ஷீரடியில் இது தானுகந்தத் திருமேனியாக இன்றும் அருள் பொழிகின்றது. எப்போதும்போல் இவரைப் பழித்துத் தூற்றுவோர் இவரைத்தொழ இன்னொரு பிறவி எடுக்ககும்வரை காத்திருக்க நேரும்.

சனி, 11 ஜனவரி, 2020

தூங்கா நகரம்

மதுரை, சங்ககாலம் முதல் இன்று வரை இயங்கி வரும் ‘தூங்கா’ நகரம். இரவு நேர இட்லிக் கடைகள், கையேந்தி பவன்கள் என்று நள்ளிரவு தாண்டியும் இயங்கும் நகரம் என்று சொன்னாலும் மதுரைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் இன்னும் உள்ளன.

போகர் தன்னுடைய பெருநூலில் செழிப்பான ‘பாண்டிவள மெத்தநாடு’ என்றும் ‘மானான மகாதேவர் மதுரையைத்தான் மகத்தான் ஸ்தலமென்று மதிப்பிட்டாரே’ என்று ஏழாம் காண்டத்தில் சொல்லியுள்ளார். மதுரைக்குள்ளே பஞ்சபூதத்தலங்கள் உண்டு. வானவர் போற்றும் மூதூர் மாநகர் மதுரை என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகிறது.

சங்கம் கூடிய மதுரையில் எல்லா புலவர்களும் குழுமி இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். இறந்தமொழி எனத் தூற்றி, சமஸ்கிருதமா? தமிழா? என்று மக்கள் அடித்துக் கொள்வதுபோல் அன்றைக்கு எந்தப் புலவரும் ஈசனை இழித்துப் பேசத் துணியவில்லை. சொல்லப்போனால் நாம் யாரையெல்லாம் சம்ஸ்கிருத ரிஷி/புலவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்கள் அனைவரும் இரண்டாம் சங்கத்தில் வீற்றிருந்தனர் என்று தெரிகிறது.

வால்மீகி இயற்றிய இராமாயணம்தான் இன்றளவும் முதன்மையான மூலநூலாகத் திகழ்கிறது. அந்த வால்மீகியும் சங்கத்தில் இருந்தார். ஆறாம் காண்டத்தில் அவரைப்பற்றி விவரிக்கும்போது, ‘மராமரா உபதேசம் பெற்ற வேடர்குல ஞானசித்தன், துய்ய தமிழ்ப் பண்டிதன் வேதாந்த வால்மீகி சமாதிமுகம் சென்றதில்லை. காயாதி கற்பமுண்டு வாழ்ந்த நேர்மை எழுநூற்று சொச்சம் வருடங்கள்’ என்கிறார்.

பழைய மதுரையைப் பற்றிய விவரங்களை சுக்ரீவன் வாயிலாகச் சொல்வதுபோல் இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம்-41, ஸ்லோகம் 18-19, 'ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஷிதம், யுக்தம் கவாடம் பாண்டியானாம் கதா த்ரக்ஷ்யத வானரஹ' என்கிறார் வால்மீகி. வானர வீரர்களே! இலங்கை நோக்கிப் போகும்போது பாண்டியர்கள் ஆட்சி செய்யும் கவாடபுரம் வரும். இரத்தின மணிகள் மின்னும் தங்கமயமான நகரம்தான் பாண்டிய தேசம்' என்கிறது இந்த வரிகள். அந்த நிலப்பரப்பு எதுவரை மேற்குத் தொடர்ச்சியில் இருந்தது? “தாம்ரபரணீம் க்ராஹ ஜுஷ்டாம் தரிஷ்யத மகாநதீம், த்ரஷ்யத ஆதித்ய ஸம்காஷம் அகஸ்த்யம் ரிஷீம் சத்மம்” என்கிறார். அதாவது அன்றைய பிரதேசமானது அகத்தியர் வழிபட்ட குற்றாலநாதர் பாபநாசம் பகுதிவரை நீண்டிருந்ததாம். அவர் குறிப்பிட்ட தாமிரபரணி நதி இன்றும் பாய்கிறது.

இன்று விமானத்தில் நேராகத் தெற்கு நோக்கிப் பயணித்தால் இலங்கை வந்திடும். ஆனால் அன்று கவாடபுரம் வழியாகப் பறந்துபோக என்ன அவசியம் இருந்தது? அப்படி என்றால் பழைய மதுரை தென் மேற்கே குமரிப்பரப்பில் இருந்துள்ளது. ஏன்? தனகோடிக்குத் தென் மேற்கே உள்ள தீவுகளில் ஸ்ரீராமர் தவமியற்றினர் என்று போகர் குறிப்பிடுகிறார்.

அந்த நிலபரப்புப் படத்தை ஓரளவுக்குத்தான் கற்பனை செய்து பார்க்க முடியும். காலவோட்டத்தில் பூமித்தட்டு இடம்பெயர்ந்து மாறியிருக்கும். கடல்கோள் வந்தபின் பாண்டிய தேசம் சுருங்கிபோய் இன்றைய மதுரையைத் தலைநகராகக் கொண்டது. ஆக மொத்தம், கலியுகம் தொடக்கத்திலிருந்தே இயங்கும் ஒரு தூங்கா நகரம் என்றால் அது கூடல்மாநகர் மதுரையே!

சோழன் ஆக்கிய கட்டுமானங்களைப் பார்த்து இன்று வியக்கும் நாம் அன்றைக்கு இதைவிட பன்மடங்கு பிரம்மாண்டங்கள் பாண்டியர்களின் பழைய மதுரையில் மிஞ்சும் அளவில் இருந்திருக்கும் என்பது சந்தேகமில்லை.


புதன், 8 ஜனவரி, 2020

கரிநாள்

தமிழ் நாள்காட்டியிலும் பஞ்சாங்கத்திலும் கரிநாள் பற்றிய குறிப்பு உள்ளதை நாம் காண்கிறோம். மேழ சித்திரை முதல் பங்குனி மீனம் வரை அதை நம் முன்னோர்கள் 'உதவாத' நாட்கள் என்று நிரந்தரமாக வைத்தனர். அன்றைய நாளில் எந்த சுப நிகழ்ச்சியையும் தென்னகத்தில் துணிந்து யாரும் செய்வதில்லை. அன்றைக்கு வழிபாடு பூசைகள் என்ற அளவில்தான் இருக்கும். கூட்டிப்பார்த்தால் வருடத்தில் கரிநாள் மொத்தம் 35 வரும். அன்றைய தினத்தில் வில்லங்கம் எதுவுமில்லாத சுத்த நாளாக இருந்தாலும் இந்த குறிப்பிட்ட தினங்களை முத்திரை குத்தி வைத்துள்ளனர். அந்த நாளில் ஏதோவொரு சோக நிகழ்ச்சி நடந்திருக்கும் அதனால் முன்னோர்கள் புறக்கணித்ததை அறிகிறோம்.
‘பூமி அதிர அட்டதிசையும் நடுங்கலாச்சு, சடுதியில் சப்த சாகரங்களும் பொங்கியெழ மாடமாளிகைகளும் மலைகளும் பகலிரவாக முழுகலாச்சு, நாடாண்ட ராஜாதி ராஜர்களும் மாண்டனர்’ என்று போகர் தன்னுடைய பெருநூலில் நிறைய முறை சொல்லியுள்ளார். திரேதா யுகம், துவாபரம், முதல் கலி பிரதமபாதம் வரை கடல்கோள்கள் வந்ததை போகர் உறுதி செய்கிறார். மாதங்கள் வாரியாக அதை விளக்காமல் துவாபர/ கலியுகத்தின் லட்சத்து இத்தனையாவது வருடங்களில் என்று விவரித்துள்ளார்.
கரிநாள் என்பது அந்தந்த கண்டங்கள் தோறும் (காரணம் தெரியாமல்) பின்பற்றப்படுகிறது. கலியுகத்தில் சங்கம் கூடிய பிற்பகுதியில் கடல்கோள் சமயத்தில் இனி தேவையில்லாத நூல்கள் என்று ஈசனே கருதியவை அழிந்துபோக, எஞ்சிய நிறைய நல்ல நூல்கள் தங்கிற்று. அதுபோன்ற நூல்களில் ‘ஜோதிட கிரக சிந்தாமணி’யும் ஒன்று. வரும் தை மாதம் முதல் மூன்று நாளும் கரிநாள் என்பதால் அதை வழிபாடுக்கு ஒதுக்கினர். அன்று வீடு மாற்றுவதோ, கிருஹப்பிரவேசம் செய்வதோ, திருமண முஹூர்த்தம் வைப்பதோ இல்லை. நம் தென்னகம் நீங்கலாக வடக்கே இதை யாரும் பார்ப்பதில்லை. திருமணம்கூட நடக்கிறது.
“இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம் ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம் அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும் ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில் முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம் முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள். உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும் சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும் பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம் பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே”,
அந்த நூலில் தை 1,2,3,10,17 கரிநாள் என்று உள்ளது.

ஆகவே, இந்த கரிநாள் கான்செப்ட் குமரிக்கண்டப் பகுதிகளில் நிலவிய சம்பிரதாயம் என்பது நிரூபணமாகிறது. அதை ஏன் எதற்கு என்று வினவாமல் நாமும் கடைப்பிடிப்போம். அதுபோல் சில குடும்பங்களில் நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த சந்ததியில் ஒரு பண்டிகை நாளில் தீய நிகழ்வு நடந்திருக்கும். அதனால் பின்வரும் சந்ததியினர் அதை முன்னிட்டு அந்தப் பண்டிகை நாளை கரிநாளாக பாவித்து மறுநாள் கொண்டாடும் வழக்கம் இன்றுமுள்ளது.

சனி, 4 ஜனவரி, 2020

சரித்திரம் படைக்கும் குறிப்பேடுகள்!

இன்றைக்கு அச்சுத் தொழில்நிட்பம் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் முன்னேற்றத்தை அடைந்துவிட்டது. கைப்பிரதியின் சங்கதியை தட்டச்சு செய்து, அதை புத்தக அளவுக்கு மின்னூல் வடிவாக்கம் தந்து, படங்களை ஆங்காங்கே சேர்த்து, மெய்த் திருத்தம முடித்து, ஒளிநகல் எடுத்தபின், அச்சுக் கூடத்தில் தரமான தாளில் அச்சாகி, பாரங்கள் எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டு, வண்ணமய முகப்பு அட்டைக்குள் அவை அடுக்கி பைண்டிங் செய்யப்பட்டு, காய்ந்தபின் பதிப்பாளரின் கடைக்கு வந்து சேர்ந்து விடுகிறது. அவ்வளவு ஏன்... நூல் வெளியீடு விழாவிற்கு சுமார் 10 பிரதிகள் மட்டும் போதும் என்றால், அவசரத்திற்கு மட்டும் தேவையானதை POD (Print on Demand) என்ற முறையில் செய்துகொள்ளவும் இன்று வசதி உள்ளது.

ஆனால் 250 ஆண்டுகளுக்கு முன் இப்படி எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்தில், பிரெஞ்ச்/பிரிட்டிஷ் ஆட்சியில் ஆளுநருக்கு 'துபாஷ்' @ மொழி பெயர்ப்பாளர் பணியில் இருந்தவர்களுக்கு ஆவணங்களை எழுதி கோர்வையாக தைத்து வைப்பது என்பது கை ஒடியும் வேலைதான். அப்படியான பிரம்மாண்ட வடிவில் ஆவணங்கள் எழுதி வைத்தவர்தான் 18 ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியில் கவர்னர் டியூப்ளே கீழ் பணிசெய்த துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை.

இத்தனையையும் தமிழில் Diary யாக எழுதி வைத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. அதில் அக்காலத்தில் 1736-1761 வரை நிலவிய அரசியல், சமூகம், வரலாறு, மற்றும் தன் சொந்த விஷயங்களையும் பல பகுதிகளாக டைரி எழுதி பராமரித்தார். இத்தனைக்கும் அவர் 52 வயது வரைதான் வாழ்ந்தார். மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சினார் என்று தெரிந்தது. பிற்பாடு அத்தனையும் 1900 களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல வால்யூம்களாக வெளிவந்தன. இன்றும் அவை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆவணக் களஞ்சியம் துறையில் பாதுகாக்கபடுகின்றது. அவற்றில் சில பக்கங்களை நான் படித்துள்ளேன். அந்நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்த விதம் ஆச்சரியமாக இருந்தது.

இப்போது எதற்கு இதைப்பற்றிச் சொல்கிறேன்? வரும் வாரம் ஆனந்தரங்கம் பிள்ளையின் தமிழ் அச்சுப்பிரதிகள் புதுவையில் வெளியாக உள்ளது என்ற செய்தியைப் பார்த்தேன். அவருடைய சந்ததியில் வரும் பேரப்பிள்ளை திரு.ஆனந்தரங்க ரவிச்சந்தர் இதை முனைந்து செய்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது. பல வீடுகளில் எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்காமல் எங்கெங்கோ முறையின்றி வைப்பார்கள். சில வீடுகளில் குடும்ப ஆவணங்களை டிரங்கு பெட்டியில் சர்வ ஜாக்கிரதையாக பாதுகாத்தவர்களும் உண்டு.

"ஆமா, சொத்து பத்து விட்டுட்டு போயிருந்தா பாதுகாக்கலாம்... மூதாதையரோட மக்கிப்போன புஸ்தகம் காகிதத்தை வெச்சிகிட்டு என்ன செய்ய? தூக்கி வெந்நீர் அடுப்புல போடு!" என்று அன்றைக்குச் சொன்னவர்கள் இப்பொக்கிஷம் எதிர்காலத்தில்  பணம் சம்பாதித்துத் தரும் என்பதை நினைத்துப் பார்த்ததில்லை.