About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 நவம்பர், 2020

நிலத்தடி நீரின் தரம்!

பருவமழை பெய்த காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தாலும் அதிலுள்ள Total Dissolved Solids (TDS ) எனப்படும் நுண் துகள்களான Chromium, Zinc, Lead, Nickel, Iron, Copper ஆகிய கன உலோகங்களின் அளவு ஒவ்வொன்றும் 6mg – 12mg/ litre என்ற நிலையில் கரைந்து கணிசமாக ஏறிவிட்டது. 

கிணறு வெட்டுவது அரிதாகிவிட்ட இக்காலத்தில் தெருவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 150 அடியில் ஆழ்துளை கிணறு போட்டு நீர் எடுப்பதாலும், மாசுபடும் சுற்றுச் சூழலாலும், பெருகிவரும் சிறிய/ பெரிய தொழிற்பேட்டைகளாலும் நிலத்தடி நீர் அதிவேகமாக மாசடைந்து வருவது கண்கூடு. நிலத்தடியில் நல்லநீர் இருக்கும் Aquifiers படுகைகள் சகட்டுமேனிக்குச் சேதமாகி வருவதால் செப்பனிடுவது இயலாது.  சென்னை போன்ற பெருநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் மொத்த TDS அளவு சுமார் 750 mg – 880mg வரை உள்ளது என பரிசோதனைகள் சொல்கின்றன. ஆனால் அதிகபட்சம் 400 mg வரைதான் இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

மாடியில் என்னதான் நீங்கள் Aqua filter cylinder பொருத்தி நீரை வடிகட்டி மேல்தொட்டிக்கு ஏற்றினாலும், அது நீரிலுள்ள எண்ணெய் மற்றும் உலோகங்களை ஓரளவுக்குத்தான் சுத்திகரிக்கும். சிலர் வீடுகளில் இரண்டு cylinderகள் பொருத்துவதுண்டு. தினசரி 1000 லிட்டர்கள் உபயோகித்தால் அதற்கேற்ப இரண்டு நாள்களுக்கு ஒருமுறை backwash செய்ய வேண்டியது அவசியம். பாரம்பரியமான திறந்த நிலை கிணற்றில் நீர் ஊறுவதால் ஆழ்துளை கிணற்றைப்போல் நீர் மோசமாவதில்லை.

கோடை/ மழை காலத்தில் bore well தண்ணீரின் தன்மை மாறும். ஒரு வீட்டிற்கும் அண்டை வீட்டிற்குமே நிலத்தடி நீரின் தன்மை மாறுபடும். குளியலறை பக்கெட்டில் ஒருநாளுக்கு மேல் சுத்தமான அந்த நீரைப் பிடித்து வைத்தால் மறுநாள் அதில் அமிலத் தன்மை வாடை வந்துவிடும். இதைத் தவிர்க்க அன்றன்றைக்கு மட்டும் நீரை உபயோகித்தல் நன்று. சிரமம் பார்க்காமல் தினமும் பக்கெட் உட்புறம் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வது நலம். சுத்திகரித்த இந்த நீரில் துணி தோய்த்தால் நாளடைவில் வெள்ளைத் துணிகளின் நிறம் பழுப்பாகும். சொட்டு நீலம் போட்டாலும் பயன் தராது. கிணற்று நீரில் இப்பிரச்சனைகள் இல்லை.

போகிற போக்கில் Aqua filter cylinder களை backwash செய்து அதில் வெளியேறும் அடர் சிவப்பு நிற சேற்று நீரைத் தொட்டியில் சேமித்து வைத்தால், நாளடைவில் அதிலிருந்து மேற்படி heavy metals உலோகங்கள் பிரித்தெடுத்து வியாபார நிறுவனங்களுக்கு விற்றுவிட வசதியாக இருக்கும். 😃😂 ஆக, அதி ஆழத்தில் துளை கிணறுகள் வரப்பிரசாதமாகத் தெரிந்தாலும் அது பேராபத்தே!

(புள்ளி விவரம்: Times of India)


புதன், 18 நவம்பர், 2020

தன்மானமும் கௌரவமும்!

திங்குஜம் ஷுப்குமார் மெய்தி சிங். மணிப்பூரிலிந்து கல்வி கற்க வந்தவன். என்னுடன் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவன். முன் வரிசை இருக்கையில் அமர்பவன். உயரம் நான்கரை அடி. அவன் விழித்துக்கொண்டு இருக்கிறானா, தூங்குகிறானா என்று தெரியாதபடி ஒரு கோடு கிழித்ததுபோன்ற கண்கள். டீஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு பொறுமையாய் வருவான். நல்ல பலசாலி. யார் வம்புக்கும் போகாதவன்.

அவன் வாய் திறந்து அதிகம் பேசமாட்டான். கொஞ்சம் ஆங்கிலம், ஹிந்தி பேசுவான். தமிழ் தெரியாததால் அவனுக்கு முக்கியமான சில ‘நல்ல’ வார்த்தைகளை எடுத்த எடுப்பிலேயே சக மாணவர்கள் சொல்லிக் கொடுத்து விட்டனர். அவை ஏதோ விவகாரமான சொற்கள் என்பதை யூகித்து ‘ந.. ந’ என்று கை அசைத்து மறுப்பான். வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்தில் ஆசிரியர் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் ஒருமுறைகூட விடை சொல்லி நான் பார்த்ததில்லை. ஆசிரியர்கள் அவனுடன் மல்லுக்கு நின்று போதிக்கப் போராடுவார்கள்.
ஏதேனும் பேசினால் அவன் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவான். அவனுக்கு அப்போதே பால்ய விவாகம் நடந்ததுவிட்டது என்று ஒருமுறை சொன்னது எல்லோருக்கும் வியப்பாய் இருந்தது. ‘உன் பெண்டாட்டி என்ன படிக்கிறாள்?’ என்று கேட்டால், ‘தெரியாது. அஞ்சாவதுனு நினைக்கிறன். பெண்களுக்கு எங்கள் ஊரில் படிப்பு தேவையில்லையாம்’ என்று சொல்வான்.
அவன் ஒரு சமயம் அருணாச்சலம் என்ற இன்னொரு மாணவனைக் கராத்தேயில் புரட்டிப்போட்டு எட்டி உதைத்தான். இடைமறித்து ‘டேய் திங்கு... why டா?’ என்று நான் கேட்க, அதற்கு அவன், ‘he talk bad about me’ என்று சொல்லியபடி அவனைக் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
அடி வாங்கியவன் மௌனமாய் அமர்ந்து கொண்டான். ‘அடிக்கிற அளவுக்கு அவனை நீ என்னடா இங்க்லீஷ்ல சொன்னே?' என்று கேட்டேன். ‘உங்க ஊர்ல படிக்க வழியில்லாம இங்க வந்து படிக்கிற பரதேசி நாயினு கிண்டலுக்கு சொன்னேன்டா, அதுக்கு போய் ...’ என்று அழுது கொண்டிருந்தான். ‘நல்லா வாங்கிக் கட்டிக்கோ. அவன் பறந்து பறந்து அடிக்கிறான். தாங்குவியா? உனக்கு என்ன போச்சு .. நீயா அவனுக்கு பீஸ் கட்டி சோறு போடுற?’ என்று அதட்டினேன். என் உடல் மொழியிலும் கண் அசைவிலும் அருணாச்சலத்தைக் கோபமாகத் திட்டுவதை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட திங்கு உடனே வந்து என் கரத்தைப் பற்றி முத்தம் தந்து தன் நெற்றியில் ஒற்றிக் கொண்டான்.
படிக்கவோ பிழைக்கவோ ஒருவன் தன் சொந்த மாநிலத்தைவிட்டு வெளியேறி தென்னகம் வந்தாலும் தன்மானம் முக்கியம் என்பதை அன்று அவன் உணர வைத்தான். மனிதம் முதன்மையானது. மொழி என்பது இரண்டாம் பட்சம். சுயமரியாதை என்பது நம்மூரில் கருஞ்சட்டை கழகத்தார்க்கு மட்டுமே சொந்தம் என்று இதுகாறும் தோற்றுவித்துள்ளனர். ஹோட்டலில் வடகிழக்கு மாநில பணியாளர்களைக் காணும்போது திங்கு நினைவுக்கு வருவான்.
பள்ளி இறுதித் தேர்வுக்கு முன் அவன் ஊருக்குப் போனான். அதன்பின் அவனைப் பார்க்கவில்லை. ‘சந்து, நீ எங்க ஊருக்கு வா. சுத்தி காட்டுறேன்! என்றான். திங்குஜம் ஷுப்குமார், லமைந்தாங், 5 காச்சிங் பஸார், இம்பால்’ என்ற தன் விலாசத்தைத் தந்துவிட்டுப் போனான். நம் வாழ்வில் ரயில் சிநேகம் போல் வருவோர்கூட தாக்கத்தை ஏற்படுத்துவர்.



வெள்ளி, 13 நவம்பர், 2020

சோதனைச் சுற்று!

தீபாவளி என்றால் நம் எல்லோர் இல்லங்களில் இனிப்பு/காரம் பிரிவுகளில் குறைந்தது மூன்று வகைகளைச் செய்வது வழக்கம். அதுவும் பாரம்பரியமாகவே இருந்து வருவது மரபு. ஆனால் காலம் போகிற போக்கில் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிப் பண்டிகைக்கு மெனக்கெட சிரத்தையுடன் செய்வது என்பது இரண்டாம் பட்சமாகவே பல வீடுகளில் நினைக்கின்றனர்.

இன்று அண்டை வீடுகளிலிருந்து இனிப்பும் காரமும் வந்தன. புதிதாக இப்போதுதான் பலகாரம் செய்யக் கற்றுக்கொள்பவரின் கைவண்ணத்தில் இருந்தன. நீர்த்துப்போன பூரணத்தின் காரணத்தால் சுகியனை எடுக்கும்போதே பிய்த்துக்கொண்டு அறுந்து விழுந்தது. ஜாமூன் ருசியற்றதாய் அதிகமான நீரில் சர்க்கரை இல்லாமல் மிதந்து கொண்டிருந்தன. பிஸ்கட் போல் தூள்தூளாக உடைந்துபோன அதிரசத்தை அழகாக ஜோடனை செய்து தட்டில் வைத்திருந்தனர். உருட்டுப் பதத்தைத் தவறவிட்டு முதிர் பாகில் கிண்டிய கோளாறு! கேழ்வரகு அரிசி கலந்த முறுக்கு என்று எதோவொன்று இருந்தது. சற்றும் மணமில்லாமல் கடகடவென பல்லை உடைக்கும் பாவனையில் கசந்தது. சோதனையில் ஓரீடு சரியாக வரவில்லை என்றால் அதை வீணாக்காமல் அதில் எதைச் சேர்த்தால் வேறென்ன ருசியான பதார்த்தம் செய்யலாம் என்ற சமயோசிதம் இருப்பதில்லை.
அண்டை வீடுகளில் கொடுப்பதை வாங்காமல் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். அதையும் மீறி அன்புடன் கொடுப்பதை நிராகரித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்கள். வாங்காமல் போனாலும் சங்கடம், வாங்கி உண்டாலோ அதைவிட வயிற்றுக்குச் சங்கடம். சிறுதானியப் பலகாரங்கள் என்ற பெயரில் இவர்கள் தானிய பண்டங்களை வீணடிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. ஆர்வம் இருந்தால் நிச்சயம் வீணடிக்க மாட்டார்கள். ஆனால் பலகாரம் செய்வதில் குறைந்து வரும் ஈடுபாடும், பாரம்பரியத்தை விட்டு வெகு தூரம் போய்விட்ட போக்கும், அந்தோ பரிதாபம்!
பறவைகள் அவற்றை ஊறவைத்துச் சாப்பிடும் என்ற நம்பிக்கையில் ரகசியமாகப் பார்சல் செய்துவிட்டு வந்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று வடலூர் அருள்ஜோதி வைத்தியசாலையின் சமூல இளகலை (லேகியம்) விழுங்கி வைத்தேன். நகைச்சுவையான இப்பதிவைப் படித்துவிட்டு வயிறு குலுங்கச் சிரிக்கிறீர்களோ?