About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

எல்லாம் அளவோடுதான்!

இப்படியொரு படத்தையும் அதன் கீழே வாசகமும் இருப்பதைப் பார்த்தேன்‌. இது சரியா? மலச்சிக்கல், மூட்டு வலி, நீரிழிவு, கர்ப்பப்பை கோளாறுகளை இது  தீர்க்கும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் இந்தப் பிரச்சனைகள் எதனால் வருகிறது என்று ஆராயாமல் அதிகமாக இக்கிழங்கை உண்ணக்கூடாது. 

சராசரி ஆரோக்கியம் உள்ளவர்கள் பனங்கிழங்கை உண்டால் நன்மையைத் தரும். அவித்த இக்கிழங்கை என் சிறுவயதில் நிறைய சாப்பிட்டுள்ளேன்.

இதயம் சம்பந்தமான நோய், தண்டுவட எலும்புத் தேய்மானத்தால் வருகின்ற ஆஸ்ட்டியோ இடுப்புவலி பிரச்சனையும் மேற்படி சிக்கல்களை உண்டாக்கும். பரிசோதனை செய்து மேற்படி நாள்பட்ட நோய்க்கான காரணம் அறியாமல் மேம்போக்காக மலச்சிக்கல் மூட்டுவலிக்கான மருந்தை உண்டால் வேலை செய்யாது. ஆறாதார சக்கரங்கள் உள்ள பகுதிகளில் சக்தி ஓட்டம் தடைபடுவதால் அது மேலும் சிக்கலைத்தான் உண்டாக்கும். உஷார்!

-எஸ்.சந்திரசேகர்



விதிவிலக்கு உண்டு!

 “கருத்தரிக்காத கன்று ஈன்றாத பசுவுக்குப் பால் சுரக்குமா? குருடாகிப் போன கண்ணில் பார்வையும் வெளிச்சமும் தெரியுமா? பேசாமல் மௌனம் காத்தால் அங்கே உரையாடல் ஏது கேள்விகள் ஏது? குணம்கெட்ட வேசிப்பெண்ணுக்கு வாழ்க்கை ஏது? எவ்வயதிலும் கல்லாமல் வீணாய்க் கழித்தவர்க்குக் கல்வி வாய்க்குமா? எதையும் காணமல் இருப்பவர்க்குக் காட்சிதான் தெரியுமா? மதித்து அண்டிப் பணியாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்குமா? வேடிக்கையாய் வாழ்க்கையைக் கழித்தால் எல்லாம் பாழாகிப்போகும் பார்” என்று  சுப்பிரமணியர் ஞானம் நூலில் முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசிக்கிறான்.

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நமக்குப் பொதுவானது. ஆனால் இதற்கு மாறாகவும் சில சமயம் நடப்பதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கோ ஒரு பத்து வயது பசுவானது கன்று ஈனாமல் தினமும் 4 லிட்டர் பால் கறக்கிறது என்று முன் எப்போதோ செய்தித்தாளில் படித்துள்ளேன். புறக்கண்கள் குருடாகியும் அகக்கண்கள் மூலம் ஞானவொளிச்சுடர் பிரகாசத்தைக் கண்டவர்கள் உண்டு. மௌனம் நிலவினால் அங்கே வார்த்தைகள் இல்லை. ஆனால் பகவான் ரமணர் பேசாமல் இருந்து தன் சீடர்களுக்கு உபதேசித்தார். அவரிடம் இந்த அனுபவத்தை மஹாத்மா காந்தியும், பரமஹம்ச யோகனந்தாவும் பெற்றதாகத் தங்கள் சரிதையில் சொல்லியுள்ளதைப் படித்துள்ளேன். 

முறை தவறிய நடத்தையைக்கொண்ட பெண்ணுக்கு வாழ்க்கை அமைந்தாலும் அது நீண்டகாலம் ஆரோக்கியமாய் நீடிக்காது. கல்வி கல்லாதவனுக்கு ஞானம் கிட்டும். எப்போது? விட்டகுறையாலே எல்லா ஞானமும் ஓதாமலே ஓதப்பெற்றவனுக்கு. எத்தனையோ மஹான்கள் இதற்குச் சான்று. எதையும் நேரடியாகக் காணாதவர்க்கு நடந்தது என்ன என்று தெரியுமா? தெரியும்! தூரதிருஷ்டி சக்தியால் அந்தக் காட்சிகளை உட்கார்ந்த இடத்திலேயே காணலாம். பாண்டவர்- கௌரவர் இடையே நடக்கும் மகாபாரதப்போர்க் கட்சிகளை அரண்மனையில் இருந்தபடியே சஞ்சயன் திருதிராஷ்டிரர்க்கு விளக்கிச் சொன்னது இப்படித்தான். 

பணிவு பக்தி இல்லாத சீடனுக்கு நல்ல குரு வாய்க்க மாட்டார். குரு இல்லாத வித்தை பாழ். ஆனால் எந்த குருவையும் நாடிப்போகாமல் அந்த இறைவனே நம்மை நாடி வந்து குருவாக இருந்து போதித்தால் அதைவிட என்ன இருக்க முடியும்? ஒருவன் தன் வாழ்க்கையில் எதைப்பற்றியும் சிந்தியாமல், பந்த பாசம் சொத்து சுகம் எதிலும் நாட்டமின்றி விளையாட்டாய் இருப்பதுபோல் வெளியுலகிற்குத் தெரிந்தாலும், சித்தம் கலங்கிய வெள்ளிப்பாடு இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை வீணாகாமல் பரப்பிரமத்தையே சேரும்.

ஆக, முருகன் உபதேசித்த விதிகளுக்கு மாறாகவும் நடக்கும். அப்படி நடந்தால் அது அவனருளால் நடக்கும் திருவிளையாடலே! ஓம் சரவணபவ. 🙏

-எஸ்.சந்திரசேகர்


சனி, 25 நவம்பர், 2023

கருங்காலி படுத்தும் பாடு!

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலி கட்டையில் செய்த வழு வழுப்பான கொண்டபள்ளி மரப்பாச்சி ஆண்/பெண் பொம்மைகள் சர்வசாதாரணமாக இருக்கும். இப்போதும் உள்ளது. 

தவழும் பிராயத்தில் உள்ள குழந்தைகள் அதை வைத்து விளையாடும், வாயில் வைக்கும், கடிக்க முற்படும். அந்த மூலிகைக் கட்டை, வாய் உமிழ்நீரில் ஊறி மருத்துவ குணம் ஏறுவதால் அதை விழுங்கும்போது தேகம் வலுப்பெறும். பொதுவாகவே இப்பொம்மைகள் நம் வீடுகளில் நவராத்திரி கொலு சமயத்தில் மட்டும் தலையைக் காட்டும். கருங்காலி இலைச் சாறில் பருத்தி நூல் கண்டை நனைத்து உலர்த்திய பின் அதை வைத்து இரும்பை, கண்ணாடியை அறுக்கலாம் என்கிறார் போகர்.

இன்று கருங்காலி பொம்மையை வைத்து எந்தக் குழந்தையும் நவீன நகரங்களில் விளையாடுவதில்லை. சித்த வைத்தியப் பாடல்களில் கருங்காலிக்கு நல்லதொரு மதிப்பு. வியாபாரத்திற்கு வேம்புக் கட்டையில் பொம்மைகளைச் செதுக்கி அதற்குச் சாயம் ஏற்றி அதை வைரம் பாய்ந்த கருங்காலி கட்டையெனச் சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். அந்த மாலையை அணிந்தால் நற்பலன் கிட்டுமா அல்லது உள்ளது அனைத்தும் துடைத்துக்கொண்டு போகுமா என்பது ஜோசியருக்கே தெரியாது. உண்மையான மாலை தண்ணீரில் மூழ்குமா, நீரின் நிறம் மாறுமா என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உடனே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.

திடீரென கடந்த ஓராண்டாக கருங்காலி/ செங்காலி மாலைக்கு நல்ல கிராக்கி வந்துள்ளது. கருங்காலி மரங்களெல்லாம் அழியத் தொடங்கும். ஜாதகத்தில் உள்ள கோள்களின் தசாபுத்தி மோசமாகவே இருந்தாலும் குலதெய்வத்தை வேண்டிட அவரவர் இன்னல்கள் குறையும்.



வனத்திலுள்ள எல்லா மரங்களின் கட்டைகளுக்கும் வேர்களுக்கும் மருத்துவ குணமும் கருதொழில் சக்தியுமுண்டு. நம் சித்தர் பாடல்களில் கணக்கில்லாமல் பல மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது. கருங்காலி மரம் இருக்கும் இடத்தில் இடி தாக்காது, தீய சக்திகள் அண்டாது, மந்திர பீஜ ஒலியை வேகமாய் ஈர்த்துக்கொள்ளும். கோயில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் கருங்காலி கட்டையும் நவதானியத்துடன் இருக்கும். சூரிய வெப்பக்கதிர்களின் தீமையைத் தடுக்கும்.

நம் பங்கிற்கு ஏதையேனும் புதுமையாகச் சொல்லி மக்களின் ஆவலை மேலும் கிளப்பிவிடுவோமே! எருக்கன் மாலை, நெருஞ்சி மூக்குத்தி, தர்ப்பை மோதிரம், வேப்பந்தோடு, ஆமணக்கு ஒட்டியாணம், ஆலம் விழுது வளையல், ஏறு சிங்கி ஊன்றுகோல், என பலதும் பயன்படுத்தி நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள். 😂

-எஸ்.சந்திரசேகர்

வியாழன், 21 செப்டம்பர், 2023

விதிமுறைகள் உண்டு!

இதுபோன்ற ஐம்பொன் கங்கணத்தை நகை கடைகள் விற்கத் தொடங்கிவிட்டன. இதை யார் எல்லாம் அணியலாம் அணியக்கூடாது? சொல்வதில்லை! இதை அணியும் காலத்தே கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? எதுவும் அவர்கள் சொல்வதில்லை. 


பலர் தம் வலது கையில் காசி/ திருப்பதி/ ஷிர்டி தலங்களின் புனிதக்கயிறைக் கட்டியிருப்பதைப் பார்த்துள்ளேன். அவர்கள் உண்ணும்போது அதன் நீளமான நுனிப்பகுதியானது எச்சில் இலையில் ரசம்/மோர் குடிக்கும். அதுபோல் நோன்பு சரடு/ விரத தோரம் கட்டிக்கொள்ளும் பெண்கள் சிலர் அதை இறுக்கிட விரலால் பிடித்துக்கொண்டு பல்லால் எச்சில் பட கடித்து இழுப்பதைப் பார்த்துள்ளேன். 🤔 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தபோது மஞ்சள் சரடு அங்கே கூடிய சுமங்கலிகளுக்கு விநியோகமானது. அதில் ஒரு பெண் பல்லால் கடித்துப்படும் பாட்டை டிவியில் நீண்டநேரம் குளோசப் காட்டினர். அதைப் பார்த்த பலரும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள். 😀

மேற்சொன்ன இரண்டிலும் பவித்ரம் பேணுவது என்பது அறவே இல்லை. வீட்டில் பெரியவர்களும் கண்டித்துச் சொல்வதில்லை. சிவலிங்கம்- நந்தி கங்கண காப்போ, கௌரிசங்கரம் ஆபரணமோ அணிந்தால் தீவிர ஆச்சாரமும் உச்சபட்சமான பவித்ர நிலையை வாக்கால்/ மனத்தால்/ செயலால் அனுஷ்டிக்க வேண்டும் என்பது விதி. 

-எஸ்‌. சந்திரசேகர்

சனி, 2 செப்டம்பர், 2023

ஆதித்யா!

கற்பம் ஒரு மண்டலம் உண்டால் ஜோதிமய சந்திரர்கள் சூரியர்களுக்கு ஒப்பாக தேகவொளி கூடும் என்று ஐந்தாம் காண்டத்தில் போகர் கூறுகிறார். பன்மையில் சொல்வதைப் பார்த்தால் இப்பிரபஞ்சத்தில் பல்லாயிரம் அண்டங்களும் அதில் பல சூரியர்கள் சந்திரர்கள் இருப்பது புரிகிறது. தன் குரு காலாங்கி ஆயிரத்தெட்டு அண்டங்களைப் பார்த்துள்ளதாக ஒரு பாடலில் உரைக்கிறார்.


நம் கண்களுக்குத் தெரிவது என்னமோ ஒரு சூரியன் சந்திரன். ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் இந்தச் சூரிய குடும்பத்தில் இன்னும் எத்தனை சூரியர்கள் உள்ளனர்? விவஸ்வன் ஆர்யமான் துவஷ்டா சவிது பாகா தத்தா மித்ரா வருணா ஹம்ஸா பூஷன் இந்திரா விஷ்ணு என மொத்தம் பன்னிரண்டு. துவாதச ஆதித்யர் என்று புராணங்கள் சொல்கிறது. ஆதித்யா என்ற பொதுவாக அழைக்கப்படும் இவர்கள் சுழற்சி முறையில் யுகம்தோறும் சூரிய பதவி ஏற்பார்கள்.

உதய காலத்தில் சூரியன் வெளிப்படும்முன் அவனுடைய தேர்க்குதிரைகளைச் செலுத்தும் அருணன்தான் முதலில் வெளிப்படுவான். அதனால்தான் அந்தப்பொழுதை அருணோதயம் என்கிறோம். சிவபெருமானின் வலது கண்ணாகச் சூரியனும் இடது கண்ணாகச் சந்திரனும் திகழ்வது நாம் அறிந்ததே. சூரியரிஷியார் மேருவில் கிழக்கு முகமாக யாகம் செய்து கிரண காந்தியைக் கூட்டிச் செந்நிற ஒளியுடன் தன்னைச்சுற்றி அக்னிமண்டலத்தை வியாபிக்கச் செய்துள்ளார். உண்மையில் சூரியன் ஒரு நட்சத்திரம் என்றாலும் அதற்கென ஒரு தனித்துவம் உள்ளது. அது சுழன்றபடி இருக்க அதைச் சுற்றியுள்ள அக்னி மண்டலத்திலிருக்கும் வாயுக்களின் அணுவானது பிளாஸ்மா பிழம்பாக வெளிப்படுகிறது.

சூரிய வனத்தில் அபூர்வ மூலிகைகளும் மலர்களும் உள்ளன என்று போகர் சொல்வது நம்மால் நம்பமுடியாத ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இது ஒரு வேளை சூரியரிஷி மேருவில் அமர்ந்து யாகம் செய்யும் இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம், தகிக்கும் சூரியனில் அல்ல என்றுதான் நான் நினைக்கிறன்.  நம் ஊனக்கண்களுக்கு மேருவில் அரூபமாக நடப்பவை எதுவும் தென்படாது.

சூரியன் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படுத்துகிறது என்றும், அதன் வெளிப்பரப்பில் பல லட்சம் டிகிரி தகித்துக்கொண்டு Corona discharge ஆகிறது என்று அறிவியல் கட்டுரைகளில் நாம் படித்துள்ளோம். தொலைவில் உள்ள பூமிக்கு வந்து சேரும்போது 30° முதல் 45° டிகிரிவரை உத்தராயன/ தக்ஷணாயன பருவகாலத்தைப் பொறுத்து நிலவுகிறது. நம் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வெப்பத்தை இயற்கை பராமரிக்கிறது. இதைப் பற்றி முன்னொரு சமயம் இறையாளரும் மருத்துவருமான டாக்டர் பத்மனாபராவ் அவர்கள் என்னிடம் பேசும்போது சொன்ன விவரங்களை நினைவுபடுத்திப் பார்க்கவும். 

நம் சூரிய குடும்ப கிரகங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சந்திரர்கள் உள்ளதெனத் தெரிகிறது. Parallel Universes எனப்படும் மற்ற அண்டங்களிலுள்ள சந்திராதித்யர்களின் எண்ணிக்கை எத்தனை இருக்குமோ ரிஷிகளுக்கே வெளிச்சம். கீதையில் கிருஷ்ணர் “அர்ஜுனா, அப்பாலில் எத்தனையோ அண்டங்களும் சூரியன்களும் உள்ளன. அவை உன் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால் அவை எதுவும் இல்லை என்று மட்டும் நினைத்துவிடாதே” என்கிறார்.


இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 ராக்கெட் அங்கே சரிசம ஆகர்ஷண Lagrangian விசைப்பகுதியில் இருந்தபடி என்னவெல்லாம் ஆராயும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

“ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத் யுதிகாராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்”

-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

முருகன் பிரம்மச்சாரி!

முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் 500 நூலில் கடைசி பாடல்தான் இது. 

முருகனின் வாய்மொழியில் அஷ்டகர்மம் மெய் என்பது தெரிகிறது. வாலையின் அருளால் திரிகூடத்தில் ஒளிரும் அசையாத செந்நிற தீபமே தெய்வமாக இருந்து வாக்கில் வந்து அமரும் என்பது உண்மை. தான் நித்திய பிரம்மச்சாரி என்பதை முருகன் கூறுகிறான். அதனால் வாசியின் உருவகமாக வள்ளி-தெய்வானை இரு கலைகளான பிங்கலை இடகலையாக (வேட மயில், வேழ மயில்) இருப்பது தெரிகிறது. 

“கொண்டேன் மூன்றெழுத்தைக் குவித்தேன், மகாரம் நகாரம் சிகாரமோடு மூன்றெழுத்தை யானறிந்து முருகனானேன்” என்று சொல்லியுள்ளான். இந்த மூன்றெழுத்தில் மாலவன், ருத்ரன், பிரம்மா சங்கமித்துள்ளனர். அதுவே ரிக் யஜூர் சாம வேதங்களின் ரூபமாகவும் கருதப்படும்.

ஆனால் இதை அறியாத நம் மக்களோ, அந்த சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், கிருஷ்ணன், சாஸ்தா எல்லாருக்கும் ரெண்டு தாரங்கள் இருக்கு, நாம கட்டிகிட்டா தப்பில்லை என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

-எஸ்.சந்திரசேகர்

சனி, 26 ஆகஸ்ட், 2023

ஊனுடம்பு ஆலயம்!

என்று மச்சமுனி 800 நூலில் பாடுகிறார்.

அதாவது, அகரமான சிவமும் உகரமான சக்தியும் நம் தேகத்தில் வாசம் செய்யும்வரை அவ்வுடலுக்கு அழிவில்லை. எட்டுமிரண்டும் சேர்ந்து இந்தப் பாழும் பஞ்சபூத உடலை அழியாத சத்தியசிவமாக மாற்றும். நவகோள்களும் அடிபணிய அந்த தேகத்தவன் சிவனின் உருவையே பெற்றிடுவான் என்று தெளிவாகக் கூறுகிறார்.  இவர் கருத்தையே அபிராமி அந்தாதியில் ‘தெய்வ வடிவம் தரும்’ என்ற வரியும் நினைவூட்டுகிறது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இவ்வுடல் விரைவில் கெட்டு அழியும் வகையில் புகை பிடித்தல், மது அருந்துதல், தகாத உறவில் உடலைக்  கெடுத்துக் கொள்ளுதல், போதை மருந்துக்கு அடிமையாகுதல், முக்குண தோஷங்கள் பெருகும் வகையில் எல்லா வேண்டாத பழக்கங்களும் சிவசக்தியை இந்த தேகத்திலிருந்து விரட்டியடிக்க சதி செய்யும். இது எதுவும் இல்லாமல் இயல்பாக நம் மூச்சை நன்கு உள்வாங்கி விட்டாலே காலனை ஏமாற்றலாம் என்பது சித்தர் விதி. கற்பம் நமக்குத் தேவையில்லை அது சமாதியில் போய் அமர்ந்து மகாநிஷ்டையில் இருக்கும் சித்தயோகிகளுக்கே தேவை. 

மச்சமுனி பாடலுக்கு உதாரணம் என் மூதாதையர் ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தா. நாமக்கல் மாவட்டம் அ.குன்னத்தூர் காவிரிக்கரையில் எம் குலதெய்வ மகாமாரி கோயில் அருகே சமாதியில் இன்றும் அமர்ந்துள்ளார். அவர் கற்பம் உண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் ஆழமான நீண்ட வாசியில் தொடர்ந்து நிலைத்துள்ளார். இவர் எனக்கு 13 தலைமுறைகளுக்கு முந்தையவர். சமாதியில் தற்போது அமர்ந்துள்ள இவருக்கு வயது 460. நடுவிலுள்ள படம் 16ஆம் நூற்றாண்டில் சமாதி பிரவேசம் செய்தபோது இருந்த மத்திம வயதுபோல் தெரிகிறது. அதுவே வலதுபக்க முகத்தில் வயதுக்கேற்ற மூப்பு தெரிகிறது. கடந்த குரு பூர்ணிமா அன்று இவருடைய சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தனர். அச்சமயம் தன் இருவேறு முகங்களைச் சிவலிங்கத்தில் வெளிப்படுத்தினார். அதை நான் படம் பிடித்துக்கொண்டேன்.





ஆகவே நம் தேகத்திலுள்ள சிவனையும் சக்தியையும் எவ்விதத்திலும் நிந்தித்துப் பாழாக்காமல் எந்நேரமும் வாசியில் இருந்தால் ‘தான் அவனாகும்’ நிலையை எட்டலாம்.

-எஸ்.சந்திரசேகர்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வைத்தியர் குண லட்சணங்கள்!

அகத்தியர் கனகமணி நூறு என்ற நூலில் நோய்விதி, நோயாளி பரிட்சை, வைத்திய செய்பாகம், பிரயோகம், அனுகூலங்கள் எல்லாம் விவரிக்கும்போது யாரெல்லாம் மருந்து செய்து கொடுக்கக்கூடாது என்ற பட்டியலையும் (பா:54) சொல்கிறார்.

அம்பட்டர், வண்ணார், எண்ணெய் வியாபாரிகள், வட்டித்தொழில் ஈட்டுவோர், விஸ்வகர்ம கம்மாளர்கள், குயவர்கள், கள் இறக்குவோர், வேடர்கள், துர்க்குணம் கொண்டோர், முன்கோபிகள், சாஸ்திரங்களை மதிக்காதவர்கள், அன்னமிடாதவர்கள், கருமிகள், நீதிநெறி இல்லாதவர்கள், அக்கிரமக்காரர்கள், தற்பெருமை பேசுவோர், கள்வர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள் ஆகியோர் மருந்து செய்து கொடுக்கலாகாதவர்கள் என்கிறார் அகத்தியர்.

அவர் உரைத்தது இன்றைக்கும் பொருந்துமா என்பது எனக்குத் தெரியாது. செயலால் மனத்தால் வாக்கால் களங்கப்பட்டவர்களும், மாசு நிறைந்த தொழிற்பணி செய்பவர்களும் வைத்தியராக இருக்கவோ மருந்து செய்துகொடுக்கவோ கூடாது என்கிறார். அப்படியே அவர்கள் செய்துகொடுத்தாலும் அபய சுவஸ்தம் என்கிற ஹீலிங் டச் அவர்களிடம் இருக்காது என்கிறார். 

மேற்சொன்ன குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் ஜனனகால ஜாதக கோள் சஞ்சாரப்படி வைத்தியம் சார்ந்த தொழில் விதிக்கப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது. எனக்குத் தெரிந்து இந்தப் பட்டியலில் வரும் மருத்துவர்களிடம் கூட்டம் வருகிறதைக் காண்கிறேன்.

அதுபோக வைத்தியரின் லட்சணங்கள் என்னென்ன என்று இன்னொரு பாடலில் சொல்லியுள்ளார். சாந்தகுணமும் சக்தியுள்ளவனாயும், நூல் கற்றவனாய், நன்மைகள் செய்தவனாய், வசீகர சிவப்பு மேனியுள்ளவனாய் இருக்கவேண்டும்; சூரணம் பற்பம் மெழுகு லேகியம் தைலம் ஜெயநீர் சுண்ணம் சரக்குவைப்பு திராவகம் பூநீறுவழலை செய்யத்தெரிந்தவனாய் இருக்கவேண்டும் என்றும்; அஷ்டகர்மம் யோகம் மந்திரப் பிரயோகமும், சக்தி பூஜை செய்பவனாகவும் இருக்கவேண்டும்.  வைத்தியர் அங்கத்தில் எல்லா அவயங்களும் குறைவின்றி இருக்கவேண்டும். குருடு செவிடு முடம், குருத்துரோகி, ஆகாத குணமுடையோன், ஜீவவதை செய்தவன், கல்வி கற்காதவன், தாய்தந்தையின் சாபம் பெற்றவன், லோபி, வைத்தியனாகத் தகுதியற்றவன்  என்கிறார். 

ஆக லட்சணங்கள் பொருந்திய உத்தம வைத்தியரிடம் அணுகி மருந்து வாங்கி உண்டால், கொடுநோயெல்லாம் குணமாகும். அத்தகைய வைத்தியர்களுக்கு நிதி, வஸ்திரம், நெல்லரிசி, பண்டங்கள், தாம்பூலம் வைத்துத்தந்து கௌரவித்து அவர்கள்பால் பக்தி விசுவாசம் கொள்ளவேண்டும் என்று அகத்தியர் உரைக்கிறார்.

எங்கள் ஊரில் மொண்டி வைத்தியர் ராமலிங்கம் என்பவர் இருந்தார். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அவர் கைராசியும், தொழில் சுத்தமும் நிறைந்தவர் என்று என் தாத்தா சொல்லக்கேட்டுளேன்.

ஆக, இதெல்லாம் பொதுவான விதியாகக் கொண்டாலும் அவரவர் கர்ம வினைக்கேற்பத்தான் கைராசி வைத்தியர் அமைவதும் நோய் குணமாவதும் உள்ளது. அகத்தியரின் பாடல்களைத் தோண்டி ஆராய்ந்து இக்காலத்தில் இவ்விதிகள் சரியா? சாதிபேதம் தகுமா? மருத்துவத்தை வியாபாரமாக்குவது சரியா? என்ற போக்கில் அதில் குற்றம் குறை காணாது இருப்பது நலம்.

- எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 30 ஜூலை, 2023

மந்திர சுவரூபமாகும் சொற்கள்!

சங்க இலக்கியங்களில் பலவிதமான கவிப்பாடல்களைப்பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். பக்தி, சந்தான விருத்தி, ஆயுள் ஆரோக்கிய ஆசிகள் நல்கும் வாழ்த்து, வேதனைப்படும் உயிர் விடுதலை பெற பிரார்த்தனை, எதிரியைத் தண்டிக்க அறம் பாடுதல், சரம கவி இயற்றல் என்று பல்வேறு ரகங்கள் உள்ளன. உற்ற நேரத்தில் அருள்புரி என்று சித்தர்களை, குலதெய்வத்தை வேண்டிப்பாடினால் உடனே நிறைவேறும்.

இதெல்லாம் நம்பும்படி இல்லை என்று இக்காலத்தில் நினைப்போரே அதிகம். சமஸ்கிருதம் தமிழ் மட்டுமல்ல எந்த மொழியில் பாடினாலும் பலன் உண்டு. பாடும் கவிஞனின் மனத்திலும் வாக்கிலும் பாடப்படும் கவிப்பாடலிலும் தன்னலமற்ற சக்திவாய்ந்த பிரயோகமும் தெய்வீகமும் இருக்கவேண்டும். அக்காலத்தில் ஔவையார், காளிதாசன், நந்திவர்மன், கம்பன் போன்றோர் பாடிய கனமான நடையில் நிறை இலக்கணம் ஏற்றிய பாடல் போன்று இருக்கவேண்டும் என்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஊமையன் மானசீகமாகப் பாடினாலும் அதற்குப் பலனுண்டு.

சமூக வெளியில் இரண்டு வரிகளில் வாழ்த்துவது இயல்பான ஒன்று. ஆனால் கூடியவரையில் நெருங்கிய நட்புகளை வாழ்த்த பிரத்தியேக தனிப்பாடல்களைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அக்கணம் தருவது என் பழக்கம். நாம் பாடும் நேரம் நம்முடைய ஜீவகாந்த எண்ணங்கள் பரமாகாச வெட்டவெளியில் எதிரொலிக்கும், அந்த அலைகள் ஜீவராசிகள் மூலம் கடத்தப்பட்டு அந்தந்த நபரை வந்தடையும். அவர்களும் உடனே அதை உணர்ந்து ஆமோதிப்பார்கள். எனக்குத் தெரிந்து மதுரை சென்னை இலங்கை லண்டன் ஆகிய தலங்களிலுள்ள நண்பர்கள் என் எண்ணங்களைத் திறம்பட கிரகிக்க முடிகிறது. இங்கே அவர்களுடைய பெயர்களைச் சொல்லக்கூடாது.

அன்றாடம் எந்த மனநிலையில் இருந்தாலும் நல்ல இன்சொற்கள் சொன்னால் மட்டும் போதுமா? போதாது! ஏன்? சில சமயங்களில் வாக்குவாதம் முற்றிப்போய் பாதிக்கப்பட்டவர் கோபத்தில் “நீங்க நல்லா இருப்பீங்கடா” என்று அழுதுகொண்டே அனல் கொதிக்கும் புண்பட்ட மனத்துடன் சொன்னாலும் அது கேடு விளைவிக்கும். “மனஸா வாச்சா கர்மனா” என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார். 

“ஆமா, சொன்னா உடனே பலிக்குற அளவுக்கு இக்காலத்துல ஒரு பய கிடையாது. இப்படி சும்மா உதார் பேசி பயமுறுத்துறாங்க” என்று தவறாக எண்ணுவோர் உண்டு. கல், தாவரம், மீன், பறவை, நாய், பசு, மனிதர் என்று இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா சரம்-அசரம் ஜீவனும் சக்தி அலைகளை வீசும் நம்மை வாழ்த்தும் என்பதை மறந்திடக்கூடாது.

இரண்டு நண்பர்களுக்காக வாழ்நாளில் இதுவரை இருமுறைதான் மோட்ச கவி பாடியுள்ளேன். பாடிய இரண்டே சாமத்தில் அவர்கள் இறையடி சேர்ந்தனர். பதிவிடும் பதிகங்களின் வீரியத்தை அப்போதுதான் இறைவன் எனக்கு உணர்த்தினான். அது முதலே சொற்பிரயோகங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறேன். ஓம் நமசிவாய! 🙏

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 18 ஜூலை, 2023

பிறவி எடுக்க அச்சம், பாவம் செய்ய மோகம்!

மனிதன் மரணித்தபின் அவ்வுடலைத் தகனம் செய்யாமல் வைத்தால் என்னவாகும்? 

இயற்கையாகச் சித்தியாகும் யோகிகளின் தேகம் பல மணிநேரங்கள்/ நாட்கள் ஆகியும்கூட கெடாமல் இருந்துள்ளது. ஆனால் நம்மைப்போல் சாதாரண மனிதர்களின் நிலை அப்படியல்ல. அவரவர் உடல்வாகைப் பொறுத்து வெப்பம் மெள்ளக்குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். அந்தச்சருமம் உயிரோட்டப் பொலிவை இழந்து மாற்றமடையும். என்னதான் வாசனாதி ஊதுபத்திகள் ஏற்றினாலும் அதன் மண இயல்பை மாற்றும் வல்லமை தசவாயுக்களுக்கு உண்டு.  

1 நாள் கழித்து ஈக்கள் முட்டையிடத் தொடங்கும், 2 நாள் கழித்துப் புழுக்கள் தோன்றுகின்றன, 3 நாட்களில் நகங்கள் விழும், 4 நாட்களில் ஈறுகள் கரையும், 5 நாட்களில் மூளை உருகும், 1 வாரத்தில் வாயு தேங்கி வீங்கி வயிறு வெடிக்கும், 2 மாதங்களில் உடல் உருகித் திரவமாகிறது. தக்க சீதோஷ்ண நிலை உறுதுணையாக இருந்தால் உடல் நிலைப்பொறுத்து ஒரு மாதத்திலேயே சதையும் கொழுப்பும் ஒழுகிக் காணாமல் போகும். ஆக எப்படியும் அறுபது நட்களுள் அடையாளம் இல்லாமல் வெறும் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு வருடத்திற்குள் ஒரு புழு/பூச்சி (ஆண்/ பெண்) உருவாகி வயிற்றில் தங்காதா என்று புதிதாய்த் திருமணமான பெண்ணின் உறவுகள் காத்துக் கிடக்கும். யாத்திரைப் போகாத தலங்கள் இல்லை, இருக்காத விரதங்கள் இல்லை, பார்க்காத வைத்தியர் இல்லை, எடுக்காத முயற்சிகள் இல்லை என்று பெரும் கடுந்தவத்திற்குப்பிறகு கரு தரித்து வயிற்றில் ஒரு சிசு உருவாகி, பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு பிரசவத்தில் குழந்தைப் பிறக்கிறது. 

கர்ப்பத்தில் இருக்கும்போது முதல் 2-3 மாதங்கள் சதைப்பிண்டமாக இருந்தபின் ஆறு மாதங்களில் விதிக்கப்பட்ட ஆன்மா ஒன்று அதில் நுழைந்துத் தங்கும். அப்போது ஊழ்வினை கனத்தால் தலை குப்புற கவிழும். வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த நீர் நிறைந்த கருவறைக் குடத்தினுள்ளே அச்சத்தில் அவ்வான்மா திணறும் தப்பிக்க நினைக்கும். “நான் போன பிறவிகளில் ஆட்டம் போட்டேன், தலைக்கனம் பிடித்து ஆணவத்தில் பாவங்கள் புரிந்தேன், இனி செய்ய மாட்டேன். மன்னித்துவிடு. தப்பிக்க வழியற்ற ஆரண்யத்திலிருந்து என்னைப் போகவிடு இறைவா” என்று மன்றாடிக் கெஞ்சும். 

ஆனால் தூய்மையாகப் பிறந்தபோதும் உள்ளே இருக்கும் திமிரு பிடித்த ஆன்மா மெள்ள தன் வாசனையை உணர்ந்து மீண்டும் ஆட்டம் போடும். கர்ப்பத்தில் இருந்தபோது இறைவனிடம் சத்தியம் செய்து கெஞ்சியதை காற்றில் விடும். காலப்போக்கில் பிராரப்த கர்மாவின் பிடியில் சிக்கி விட்டகுறைப்பயனாக மீண்டும் ஆகாம்ய பாவங்கள் ஈட்டி நரகதிக்கு வழி தேடிக்கொள்ளும்.

மரணித்தபின் வெளியேறிய ஆன்மா போக்கிடம் இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கும். மீண்டும் அந்த உடலுக்குள் எப்படியேனும் நுழைய வழியுண்டா என்று தவிக்கும். ஆனால் உடலின் நவதுவாரங்களை அடைத்துவிடுவார்கள். இறுதியாக அது ஆசனவாய் வழியாகவாவது நுழைய முடியுமா என்று நினைக்கும். ஆனால் கால் கட்டைவிரல்களைச் சேர்த்து இறுகக்கட்டிவிட ஆசனவாய் வழியும் மூடிவிடும். அதன் கடைசி முயற்சியும் தோல்விதான். தகனமாகிக் காரியங்கள் முடிந்து கடைசி நாளில் சூட்சும தேகம் பெறும் அந்த ஆன்மாவைக் கிங்கர்கள் இழுத்துப் போவார்கள். 

அச்சமூட்டும் கர்ப்பத்திலிருந்து வெளியே தப்பித்துப்போனால் போதும் என இருந்த நிலை மாறி, கடைசியில் வெளியே போன ஆன்மா மீண்டும் அவ்வுடலுக்குள்ளே வர வழியில்லையா இறைவா என்று கதறும். அது இறைவனைத்தவிர அதன் வீட்டார் யார் காதுகளுக்கும் விழாது. அதன் வாரிசு எள்ளும் நீரும் இறைத்து அதற்குப் பிண்டம் வைத்துச் சோறு போட்டால் உண்டு. இல்லாவிட்டால் போக இடமின்றிக் கோபமாக அலைந்துத் திரியும். 

கோபப்பட அதற்கு யோக்கியதை உண்டா? உயிருடன் இருக்கும்போது ஆட்டம்போடு என்று இறைவனா சொன்னான்? மேன்மேலும் வினைகளைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னது யார்? “நான் ஆதியில் படைத்து உயர்நிலைக்கு அனுப்பிய ஆன்மா எப்படி அப்பழுக்கில்லாமல் தெய்வீகமாய் இருந்ததோ அப்படித்தான் என்னிடம் வந்து சேரவேண்டும். தக்க குருநாதர் வந்து உன்னை நல்வழிப்படுத்தும்வரை பிறவிதோறும் அடிபட்டு மிதிபட்டுப் பாடம் கற்றுக்கொள்” என்பான். அந்த ஆன்மா பாவம் செய்து கெட்டதாகவே இருந்தாலும் அதன் சந்ததியர் அதைத் தென்புலத்தார் என்ற அளவில் கும்பிடவேண்டும், அதனிடம் ஆசி பெற வேண்டும் என்கிறது நம் சாஸ்திரம். 

ஆதலால் இப்பிறவியில் இக்கண்ணாமூச்சி விளையாட்டிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தர்மநெறி பின்பற்றி, குருவின் சொல் ஏற்று அதன்படி நற்கதிக்கு வழியைத்தேடி மோக்ஷம் அடையவேண்டும்.

- எஸ்.சந்திரசேகர்



வியாழன், 13 ஜூலை, 2023

அடிமுடி சித்தர்

அடி அண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிமுடி சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அரிய மூலிகை மருத்துவத்தால் பக்தர்களின் நோயை குணமாக்கியவர். நவகண்ட யோகம் செய்தவர். கல்லைத் தொட்டுத் தந்தால் தங்கமாகும், காய்ந்த இலையைத் தந்தால் திருநீறாக மாறும். இந்த அடிமுடி சித்தர்தான் முதன்முதலில் கிரிவலப் பாதையை ஏற்படுத்தினார்.

இவருடைய குரு கௌதம முனிவர். இவர் கிரிவலப் பாதையை ஏற்படுத்தும்போது அங்கே வழியில் அகலாமல் இருந்த பெரிய கனமான பாறை ஒன்றைத் தன் ஜடாமுடியால் கட்டி இழுத்து ஓரமாகப் போட்டாராம். இன்றும் கௌதம நதி இவ்வூருக்கு அருகாமையில் ஓடுகிறது. மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் அங்கு நடக்கும். அதை நம்முடைய பழைய பதிவில் விரிவாகப் பார்த்துள்ளோம்.

பறக்கும் பெண் சித்தர் அனந்தாம்பாள் (எ) ஸ்ரீசக்கரம் (எ) சக்கரை அம்மாவுக்கு உபதேசம் தந்த குருதான் அடிமுடியார். இவர் சர்வ சாதாரணமாகப் பல அற்புதமான சித்துகளை நிகழ்த்தியவர்.

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே

அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா...     (கந்த குரு கவசம், பா.45)

-எஸ்.சந்திரசேகர்





செவ்வாய், 11 ஜூலை, 2023

தில்லையில் வாழ்ந்த மூவாயிரம்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படித்தபோது தவறாமல் கோயிலுக்குப் போவேன். அவ்வூரில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தீட்சிதர் குலத்தின் மூத்தவர்களைப் பார்ப்பேன். அவர்கள் கருத்த தேகத்துடன் இருந்தனர்.  தூரத்திலிருந்து பார்த்தால் யார் என்றே  தெரியாத அளவுக்கு நிறம்‌. நெற்றியில் விபூதி பட்டை, பூணூல், முன் குடுமி மட்டும் பளிச்சென்று தெரியும். இவர்களுடைய கருத்த தோற்றத்திற்கான காரணம் அப்போது எனக்குத் தெரியாது.

இவர்கள் தங்களுக்குள்ளேயே சம்பந்தம் செய்து கொள்வதால் தங்கள் ஆதிகுடி மரபணு தன்மையின் அடையாளத்தை இழக்காமல் உள்ளனரோ என்று நினைப்பேன். அவர்களுடைய பழைய ஓடு வீடுகள் பலகாரக்கடையைப்போல் பொலிவின்றி இருந்தது. ஓரிருவர் வீட்டு வாசலில் மட்டும் சைக்கிள் இருந்தது. இன்றைய தலைமுறையினரின் தோல் நிறம் மெள்ள மாறி வருவது கண்கூடு. வாழ்வாதாரம் ஊசலாடுவதால் இதுவரை ஆற்றிய சிவத்தொண்டு போதும் என்று முடிவெடுத்து சில ஆண் வாரிசுகள் வேறு வேலைக்குப் போய்விட்டனர். தில்லைக்கு உள்ளேயே சொந்தங்களில் சம்பந்தம் செய்து வருவதால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலையே உள்ளது. அதனால் இக்காலத்தில் கோத்ர பிரவரம் சம்பிரதாயம் மீறி தீட்சிதர்கள் மணமுடிக்க சாத்தியமுண்டு.

கடந்த வாரம் தீட்சிதர்களை இலக்காக வைத்து நடந்த அக்கப்போர் அனைவரும் அறிந்ததே. சந்தடி சாக்கில் அவர்களைப் பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டன. அது என்ன? பராந்தக சோழன் வேய்ந்த பொன் கூரையின் ஆணிகளைப் பிய்த்து எடுத்து தீட்சிதர் குடும்பத்துப் பெண்கள் நகை செய்து கொள்கிறார்களாம். கனகசபை மீது ஏறி நின்று தரிசிக்க அங்கே பணம் தர வேண்டுமாம். சிவன் சொத்தை விற்று ஜீவனம் செய்கிறார்களாம். இப்படிச் சில பரப்புரைகள். கனகசபை சர்ச்சை இன்னொன்று. கனகசபை மேடை என்பது சிறப்பு நாளில் இறைவனை அங்கே எழுந்தருளச்செய்து அபிஷேகம் பூசைகள் நடத்தும் புனிதமான இடம். அவர்களைத் தவிர யாரும் அங்கே நிற்கவோ பஞ்சாட்சரப்படி ஏறி மிதிக்கவோ விதியில்லை. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதை அனுமதித்தனர். இப்போது சீருடையில் பெண் காவலர்கள் உள்ளே திபுதிபு என ஏறிப்போய் நிற்பதை டிவியில் காட்டினார்கள். 🤔

"சிவன் சொத்து குல நாசம்" என்ற முதுமொழி இவர்களுக்குப் பொருந்தாது. மூத்தவனாம் சிவனின் சொத்து இவர்கள் சொத்து, இவர்கள் உண்ணும் சோறு சிவனுடையது. கைலாய பூதகணங்கள் எல்லாம் அந்தணர்களாகி சிவனிடம் தீட்சை பெற்றபின் சிவனே இவர்களைத் தில்லையில் அமர்த்தினான். அவர்களே தில்லை மூவாயிரத்தார் (எ) தீட்சிதர்கள். இவர்களைப் பேணினால் சிவத்தொண்டு புரிந்த புண்ணியம் கிட்டும் என்பதால் ஒவ்வொரு காலகட்டத்தில் மன்னர்கள் கோயிலை விரிவாக்கி நிலங்கள் மானியங்கள் வழங்கினார்கள். இன்று பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளது, எங்கே போனது என்பது இவர்களுக்கே தெரியாது. அதிக அளவில் அந்நியர் படையெடுப்பின்போது கோயில் சூறையாடப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. 

தில்லை அந்தணர்களை வைத்தே ஈசன் பல திருவிளையாடல்கள் புரிந்தான் என்கிறது திருத்தொண்டத்தொகை மற்றும் பெரியபுராணம். நந்தனாரின் மேன்மை, பூட்டிக்கிடந்த அறையிலிருந்து எடுத்து நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள், மாணிக்கவாசகர் பாடியதை ஈசனே சுவடிகளில் தன் கையால் படியெடுத்த நிகழ்வு, போன்ற பலவற்றைச் சொல்லலாம்.

இக்குலத்தினரின் எண்ணிக்கை இன்று 150ஐ தாண்டவில்லை. ஆண்- பெண் சதவிகிதம் சமன்பாடின்றி உள்ளதும் கஷ்டம்தான். அவர்களை நசுக்கிவைக்க சமூக-அரசியல் எதிர்ப்புகள் வலுக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆதி தீக்ஷிதர் வம்சத்தில் அந்த ஆதி மரபணு தொடராத நிலை வரலாம். இக்கலியுகத்தில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான் என்றாலும் இன்றும் அவர்களுள் சிவனும் ஒருவனாக இருந்து அவர்களைக் காத்து வழி நடத்துவது சிறப்பு. தனி நபர் அளவில் அவர்கள் செய்யும் தவறுகள் ஏதும் இருப்பின் அது அவர்களையும் சிவனையுமே சேரும். டிவி செய்திகளைப் பார்த்து இவர்களைப் பற்றி ஆர்வக்கோளாறில் நாம் விமர்சனம் என்ற சிவநிந்தனையைச் செய்யாமல் இருப்போம். 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 6 ஜூலை, 2023

ஒரு யோகியுடன் உரையாடல்!

என் மெசஞ்சர் உள்பெட்டியில் பலருடன் பேசிய மிகப்பழைய உரையாடல்கள் எல்லாம் இருக்கிறது. அதில் வேண்டாத சிலவற்றை நீக்கலாமென நினைத்து பார்வையிட்டேன்.  நான் மறந்துபோன /தொடர்பில் இல்லாத பல பெயர்கள் இருந்தன. அதில் ஓர் உரையாடல் மதுரையைச் சேர்ந்த வாசி/அஷ்டாங்க யோகி திரு. வி. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடையது.

ஏழாண்டுகள் பழைமையான தகவலைத் திறந்து வாசிக்கும்போதுதான் இருவரும் என்னென்ன உரையாடினோம் என்பது புலப்பட்டது.

என் ஆன்மிக நிலையைப் பற்றியும் பின்புலத்தில் என்னைக் கண்காணித்து வழிநடத்தும் சித்தர்கள் பற்றியும் அதில் சொல்லியிருந்தார். பெரும்பாலும் ஐயா இரவில்தான் தொடர்பில் வந்துள்ளது தெரிந்தது.

என் பிறப்பு முதல் சித்தர் போகர் பிரான் என் தீக்காயத்திற்கு வைத்தியம் செய்தது வரை துரிய தியானத்தில் சென்று அவர் கண்டுணர்ந்து விவரித்தார். வாசி/ அஷ்டாங்கம் குறித்து விவாதங்கள் செய்துள்ளேன். ஒருவர் மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திட வாசியும், உடல் அழியாமல் இருக்க அஷ்டாங்கமும் தேவை என்றால் எதைத் தேர்ந்தெடுத்து ஆழமாகக் கடைப்பிடிப்பது? என்று கேட்டேன். அதற்கு அவர் சிலருடைய விருப்பங்களைச் சொல்லி தன்னுடைய கட்டுரையின் link-ஐ அனுப்பினார். அதன்பின் இடைப்பட்ட காலங்கள் நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.

ஆக நம் ஆன்மா மீண்டும் பிறக்காமல் இருப்பதே மரணமில்லாத பெருவாழ்வு. இந்த உடலுக்கு அழிவே வராமல் இருக்க வேண்டுமானால் அது உயர் வித்தை. அதை நிலைநிறுத்த உபாயங்கள் தேவை என்று சித்தர்கள் சொல்லியுள்ளனர்‌. "வந்த நோக்கமும் யுகாந்திர காலமும் முடிந்தால் கல்பதேகமும் ஒருநாள் மண்ணுக்கும் போகவேணும்" என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுவது மெய். சித்தியும் யோகமும், சித்தியும் மருத்துவமும் இரு வழித்தடங்களாக இருந்து வருகிறது. சமாதியில் அமர்ந்த சித்தர்களில் சிலர் காயகற்பம் உண்டும், சிலர் யோகம் மட்டுமே கையாண்டும் இருந்தனர் என்பது தெரிகிறது.

நம்மைப் பொறுத்தவரை ஆன்மாவுக்கு வீடு கிடைத்தாலே உத்தமம்! இவ்வுடலை உறுதியாக்கிக் குறிக்கோளின்றி நீட்டித்து வைத்துக்கொண்டு இக்காலத்தில் என்ன செய்ய? 

"பின்கலையும் இடகலையும் மாறும் போது

அறிவான சுழிமுனையில் மனதை வைத்து

அசையாமல் ஒருமனதாய்ப் பார்க்கும் போது

குறியான சிவயோகம் சித்தியாச்சு

கோடி சென்மம் சித்தரைபோல் வாழலாமே"

என்பது வாசியோகம் பற்றி சித்தர்களின் வாக்கு. 



ஐயா அவர்கள் சொன்னதுபோல் இது எனக்குச் சித்தி ஆனதா? ஆகியது என்பதை இரு தருணங்களில் கண்டு உணர்ந்தேன். எப்படி என்பதைச் சொன்னால் அச்சப்படுவீர்கள்‌ என்பதால் இங்கே சொல்லாமல் ரகசியமாக வைக்கிறேன். வாசியோகப் பயிற்சி என எனக்கு எதுவுமில்லை என்றாலும் ஜாதக ரீதியாகக் கோள்களும், மூதாதையர் ஆசியும் என்னுள் வாசியை இயல்பாய்த் தூண்டி நடத்தியுள்ளது என்பது புரிந்தது. எல்லாம் சிவசித்தம். 🕉️

-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 25 ஜூன், 2023

சிறியாநங்கை-சீந்தில் கிருதம்!

சிறியாநங்கை என்ற மூலிகை விஷ ஜந்துக்களை அண்டவிடாது. அதனால் வேலியோரம் நிறைய இருக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பிரச்சனை, காய்ச்சல், சளி, உடலில் வீக்கம், மதுமேகம் (டையாபடிஸ்) போன்றவகைகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. அது யோக மார்க்க உயர்வுக்கும் சின்மயத்தில் ஒளியைத் தரிசிக்கவும் காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை. இதுபோன்ற மூலிகை அஷ்டகர்மத்திலும் பயன்படும். 

எந்த ஒரு பச்சிலை மூலிகையாக இருந்தலும், அதைப் பறித்து உபயோகப்படுத்த நம் உடல்நிலை ஏற்றம் பெறும் அதோடு அதன் ஆன்மா மேன்மை அடையும். விதியாளியின் கர்மவினைக்கேற்ப அம்மருந்து உடலிலும் யோகத்திலும் செயல்படும் என்பது சித்தர் விதி. 

தோட்டத்திற்குப்போய் கீரை பறிப்பதுபோல் மருத்துவ மூலிகைகளை பறித்தேன் எடுத்தேன் என்று வந்திட முடியாது. அதற்கும் உயிர் சக்தி, மந்திர சக்தி உள்ளது, என்பதால் அதனிடம் மந்திரம் ஜெபித்துச் சாப நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். இது சைவ மார்க்கத்தின் சிறப்பு.

சிறியாநங்கையின் அனைத்து பாகங்களும் சமூலமாய் உபயோகித்தல் மருந்தே. அந்தச் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். ராஜக்கனி என்று அழைக்கப்படும் எலுமிச்சையின் சாற்றை ஒரு படி ஊற்றி மூன்று சாமம்வரை அரைத்தபின் அதை வில்லைகளாகத்தட்டி காயவைக்க வேண்டும். அதன்பின் அதன் எடைக்குச் சமமாகச் சீந்தில்கொடி சர்க்கரையை போட்டு பசும்பால்/ நெய் விட்டு நான்கு சாமம்வரை மைய ஆட்டி எடுக்கவேண்டும். இதில் ஒரு வராகன் (4 கிராம்) எடுத்து 'மசி' என சொல்லிவிட்டு அந்தி சந்தி என தினம் இருவேளை ஒரு மண்டலம் உண்டு வந்தால் வாசி திரிகூட பர்வதத்தில் சங்கமிக்க, ஆக்ஞாவில் சுடரொளி அக்னியாய்ப் பிரகாசிக்க, அங்கே பிரம்மரந்திரம் திறக்கும்போது கபாலபீட மேருவில் நாதங்கள் கேட்கும். திரிகூடம் எங்கே உள்ளது? புருவ மத்திதான் அது!

அதனால் சாகாக்கால் வேகாத்தலை போகாப்புனல் என்று சித்த குறியீட்டில் சொல்வதற்கேற்ப வைத்தியம் யோகம் ஞானம் ஆகிய மூன்றுக்கும் இந்த மூலிகைச்சமூலத்தின் கிருதம் ஏற்றம் தரும். எப்போதும்போல் இதற்கும்  பத்தியம் தேவை.

அதென்ன கிருதம்? ஒவ்வொரு நோய்க்குத் தக்கவாறு மூலிகைகளுடன் நெய் சேர்த்துத் தரும் மருந்துதான் கிருதம் என்கிறது ஆயுர்வேதம். முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலிருந்து மேற்படி பாடல்களை இங்கே சிந்தித்தோம்.

-எஸ்.சந்திரசேகர்

திகில் பயணம்!

போன நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆழ்கடலில் மூழ்கிச் சிதிலமடைந்து கூழாகிக் கரைந்துபோன டைட்டானிக் கப்பலை வேடிக்கைப் பார்க்க அப்படி என்னதான் இருக்கும்? The White Star Line என்ற கம்பனிக்குச் சொந்தமான அந்தக் கப்பலின் கட்டுமான உள்ளரங்க வரைபடத்தை ஆதாரமாக வைத்துத்தான் Titanic ஆங்கிலத் திரைப்படத்தில் தத்ரூபமாய் செட் போட்டு நிறைவாகக் காட்டினார்கள்.



ஏப்ரல் 15, 1912 அன்று இரவு நடந்தது ஒரு பயங்கரம். ஆயிரக் கணக்கானோர் ஜல சமாதி ஆன வட அட்லாண்டிக் கடல் பகுதி இன்றும் பீதியைக் கிளப்பும். ஆழ்கடல் கல்லறை தேசத்தில் பல அமானுஷ்ய சம்பவங்கள் எப்போதும் நடப்பதுதான். சில நிகழ்வுகள் செய்தியில் வரும் சில வராது.

கடலில் மட்டுமல்ல பூமியிலும் இதை ஒத்த இடங்கள் இயல்பாகவே இருக்காது. அதுபோன்ற இடங்களுக்குச் சுற்றுலா போக எவருமே தயங்குவார்கள். அங்கே முன்னொரு சமயம் ரோபோவை அனுப்பி அது எடுத்து அனுப்பிய நேரடி காணொளி காட்சியை டிஸ்கவரி சானலில் நள்ளிரவு தாண்டி ஒளிபரப்பினர். நானும் விடிய விடிய பார்த்து வியந்தேன்.

அண்மையில் நடந்த Ocean Gate சப்மரீன் ஆழ்கடல் விபத்து விவாதமாகிவிட்டது. இதற்கு முன் கடந்த காலத்தில் சென்று வந்த வண்டிகள் இவ்வளவு ஆழத்திற்குச் சென்றதில்லையாம். அதனால் அதீத அழுத்தத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. திமிங்கிலங்களேகூட தனக்குத் தோதான குறைந்த அழுத்த எல்லைக்குள்தான் பிரவேசிக்குமாம்.


விஞ்ஞான தொழில்நுட்பம் நவீனமாக முன்னேறினாலும் இயற்கையை அவை எப்போதும் ஏய்த்துவிட முடியாது. புரியாத கணித்து விடை காணமுடியாத புதிர்கள் பல உண்டு. பழவேற்காடு ராயபுரம் பகுதி மீனவர்கள் தங்களுக்கு நடுக்கடலில் ஏற்பட்ட திகிலான அமானுஷ்யங்களை விளக்கும் காணொளியைப் பல வருடங்களுக்கு முன் பார்த்துள்ளேன். அவர்கள் சொன்ன விஷயங்களைப் பலர் நம்பமாட்டார்கள்.

கடல் என்பது மாபெரும் ரகசியத்தைக் தன்னுள் வைத்துள்ள பெட்டகம். ஆழ்கடல் தன்மையறிந்து தண்ணீரின் நிறமறிந்து அதன் பண்புகளையும் கண்ணுக்குத் தெரியாத கொல்லக்கூடிய ஆபத்தையும் நோட்டமிட்டபின்தான் அதில் பயணிக்க, குதிக்க, முத்தெடுக்க, சூத்திரம் வகுக்க வேண்டும் என்கிறார் போகர். கண்ணாடி கை தொலைநோக்கி, புரட்டிப்போடும் நடுக்கடல் டைஃபூன், பாதையில் மறைந்த பாறைகள், மூழ்கியுள்ள நவதாது அக்னி மலைகள் என பலவற்றை ஆய்வுசெய்த பிறகே சாகரத்தில் பயணிக்கவும், கடலடி பொக்கிஷங்கள் சேகரிக்கவும், scuba கவசத்தில் குதிக்கவும் மூச்சடங்கி இருக்கவும் யோசிக்க வேண்டும் என்கிறார்.

அங்கே உஷாராக இருக்கவேண்டும் என்று ஆனானப்பட்ட சித்தரே மிகுந்த எச்சரிக்கையுடன் தன் சாதனைகளைச் செய்தார் என்றால் நம் என்ஜினியர்கள் எம்மாத்திரம்? Adventure tourism முன்பதிவு செய்து 13000 அடி ஆழத்தில் போய் உயிரைவிட தலைக்கு டிக்கட் விலை என்ன? $250000. 🤔

- எஸ்.சந்திரசேகர்

வியாழன், 15 ஜூன், 2023

காலச்சக்கரம் என்னும் ஆசிரியர்!

வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும், சுகமும் துக்கமும், வெற்றியும் தோல்வியும், அவ்வப்போது வந்து போவது இயல்பு. உண்மையில் அவை நிரந்தரமற்ற மாறும் வெளிப்பாடுகள் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. குளிர் வெயில் மழை இரவு பகல் என மாறுகின்ற தன்மையைப் போன்றது.

ஒரு காலத்தில் வாழ்ந்த ஏற்றமிகு வாழ்க்கையை நினைத்தோ, எப்போதோ அடைந்த வெற்றியை நினைத்தோ, அனுபவித்த சுகத்தை நினைத்தோ, நிகழ்காலத்தில் இக்கணம் நினைத்து நினைத்து மனம் வெதும்புதல் கூடாது. அதற்கு மாறாக மனம் குதூகலித்தால் நல்லதே. ஆனால் நம்மில் பலர் செய்வது என்ன? கட்டிய வீடு போச்சு, போட்ட நூறு பவுன் நகை போச்சு, வியாபாரம் போச்சு, நல்ல வாழ்க்கை போச்சு, உடல்நலமும் போச்சு, இனி எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று அங்கலாய்ப்போரே அதிகம். அதனால் மன உளைச்சல்தான் ஏற்படும்.

அதனால் இன்றைய நிலையுடன் ஒப்பீடு செய்துகொண்டு தோல்வி ஏமாற்றம் துக்கம் ஆகியவற்றை நினைத்து மனம் கவலை கொள்ளக்கூடாது. அவற்றை ஒரு படிப்பினையாக மனம் ஏற்கவேண்டுமே தவிர இன்று உட்காந்து புழுங்குவது சரியல்ல. மத்திமமாய் வாழப்பழகினால் நிம்மதி தங்கும்!

சுகம் துக்கம், வெற்றி தோல்வி பற்றியே சதா நினைத்தால் அவை எல்லாம் தன் ஊழ்வினைப்பயனே என்பதையும் மனம் ஒப்புக்கொண்டு ஏற்கவேண்டும். இந்தச் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு மௌனமாய் இருந்தால் அதுவே உத்தமம். 

வாழ்ந்து கெட்டவன் என்றால் வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்பதைப் புரிந்துகொண்டு அனுபவத்தால் மீண்டு எழுந்து விவேகத்துடன் எளிமையாக நிறைவுடன் வாழ்பவன் என்பதே பொருள்.

-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 9 ஜூன், 2023

காற்றுக் கணக்கு!

 


நேற்றைய என் கவிப்பாடலுக்குத் தொடர்புடையதே இந்தப்பதிவு. 

"வேகாக்கால் பற்றிக் காற்றை அடக்கும் கணக்கை அறிவேனோ  ...

பரஞான அருளால் விட்ட குறை தொட்ட குறை முடிப்பேனோ..."

என்று எழுதியிருந்தேன் அல்லவா?

அந்தக் காற்று எது? சதா உள்ளே காற்றை இழுத்து வெளியே விடும் வெந்துபோன மூச்சுதான் அது. சில சித்தர்கள் இதை சாகாக்கால் என்றும் மாற்றிச்சொல்வர். அதைத் தணியவிடாமல் சாகவிடாமல் சுவடே இல்லாமல் எப்படி மூச்சை அளந்து விடுவது? மூச்சை வாங்கி நாசி வழியே சரியாக விடாதது விட்ட குறை. அதைப் பாதியிலேயே திருப்பிச் சுழுமுனையைத் தொட மேல் நோக்கிச் செலுத்துவது தொட்ட குறை. ஆக காற்றை நம் போக்கில்தான் புஸ் புஸ்  என்று கண்டபடி விட்டு வீணாக்குகிறோம். அதனால் நம் ஆயுள் குறையும். இப்படி இருந்தால் மரணமில்லா பெருவாழ்வு எப்படி?

இதைப்பற்றிச் சிவவாக்கியர் அழகான விளக்கத்தைக் தருகிறார்.

'வடிவு கண்டு கொண்ட பெண்ணை

வேறொருவன் நத்தினால் விடுவனோ

அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே

நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்

சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’

                                 (- சிவவாக்கியம் - 006)

அழகான பெண்ணை விரும்பி மணம் செய்தபின், வேறொருவன் அவள்மீது மோகம் கொண்டு விரும்பி அவள் கணவனை அணுகினால் அவனை வெட்டிப்போட வேண்டும் என்று கோபம் வரும் அல்லவா? அப்படித்தான் அழகான நம் தேகத்தை எமன் கொண்டு போக வந்தால் அவனைக் கோபத்துடன் உதைத்துத் தள்ளாமல் அந்த உடலை மயானம்வரை அனுப்பிச் சுட்டெரிக்கக் கொடுப்பதா? என்கிறார் சிவவாக்கியர்.

மிக அழகான உவமை! ஆனால், எமனைத் தடுப்பது எப்படி என்கிற கேள்வி எழும். இதற்குத் திருமூலர் ‘காற்றைப் பிடித்தால் கூற்றை உதைக்கலாம்!’ என்று விடை சொல்கிறார்.

நம் மூச்சுக்காற்றை எப்படிப் பிடிப்பது? எமனை எப்படி உதைத்துத் தள்ளுவது? நம் பிராணனை முறைப்படுத்தி அதை வீணாக்காமல் அளந்து வாசியைப் பற்றி மிகக்குறைவாக நுகர்ந்தால் எமனை ஏமாற்றிவிடலாம், ஆயுளையும் நீட்டிக்க வைக்கலாம். பூரகம்- கும்பம்- ரேச்சகம் ஆழமாக நீண்டு இருந்தால் சாத்தியம். மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்!

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 19 மே, 2023

"அண்ணா, நீங்க தொடர்ந்து படியுங்க!"

நம் வாசக சகோதரர் இன்று காலை 8 மணி அளவில் மூவனூர் நோக்கி முசிறி-துறையூர் பிரதான சாலையில் பேருந்தில் போய்க் கொண்டிருந்தார். கூட்டம் குறைவாக இருந்ததால் இவருக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்துள்ளது. 

என்னுடைய காலாங்கிநாதர் ஞானவிந்த ரகசியம் புத்தகத்தைப் படித்துக்கொண்டே வந்தவர் சற்றே கண் அயர்ந்துவிட்டார். மணச்சநல்லூர் நிறுத்தத்தில் ஒரு பத்து வயது சிறுவன் இவர் பக்கத்தில் வந்து உட்காரும்போது இவருக்கு முழிப்பு வந்து பார்த்துள்ளார்.

அந்தச் சிறுவன், "அண்ணா, இங்கே நான் உட்கார்ந்தது இடைஞ்சலாக இருக்கா? வேணும்னா பின்னாடி வேற இடத்துலே போய் உக்காந்துக்கறேன்... நீங்க அந்த புக்கை தொடர்ந்து படிச்சு முடியுங்க" என்று சொல்லியுள்ளான். அதற்கு இவர் "இல்ல தம்பி இங்கேயே உக்காரு" என்றுள்ளார்.

பொடியன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியான பேச்சு பேசுகிறானே என ஆச்சரியப்பட்டு மேற்கொண்டு புத்தகத்தைத் தொடர்ந்து வாசித்து வந்துள்ளார். எதிர் காற்று அடிக்கவே மீண்டும் தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் விழித்துக் கொண்டபோது அங்கு அந்தச் சிறுவன் இல்லை. இத்தனை வருடங்களாக அத்தடத்தில் பயணிக்கும் இவர் ஒரு நாள்கூட அந்தப் பையனைப் பார்த்ததில்லை என்கிறார். தன்னை எழுப்பிவிட்டு மேற்கொண்டு அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டான். 

நடந்ததை என்னிடம் சொல்லி, "சார், இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவன் யாராக இருக்கும்?" என்று கேட்டார்.

"நேற்றுதான் போகர் ஜெயந்தி நடந்து முடிந்தது. ஒரு வேளை போகரே தன் குருவின் நூலைத் தொடர்ந்து படிக்கும்படி பாலகன் ரூபத்தில் வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. இதுபோன்ற அமானுஷ்யம் எதுவும் நடக்கும்" என்றேன்.

-எஸ்.சந்திரசேகர்



புதன், 5 ஏப்ரல், 2023

மீண்டும் சுற்றி வரும் சங்கதி! 🤔

"கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இயேசு கிறிஸ்து உயிர்தெழுதல் பற்றி முட்டாள் தனமாக பேசிவிட்டு ரமண மஹரிஷி ஒருவர் தான் உண்மையில் உயிர்தெழுந்தார் என்று இசைஞானி கூறினார். அவர் அப்படி பேசுவதற்கு அவர் என்ன வரலாற்று ஆசிரியரா? அல்லது பெரிய ஆராய்ச்சியாளரா? இயேசு கிறிஸ்து நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் கூறுவது காயப்படுத்துவதாக இருக்காதா?" இது இணையத்தில் வந்த செய்தி. ஜேம்ஸ் வசந்தன் பேசிய இச்செய்தி மீண்டும் நேற்று உயிர்த்தெழுந்துள்ளது. 

சித்தர்கள் பலர் சமாதியில் மூச்சடங்கி இருந்தபின் சில காலம் கழித்து வெளியே வந்தது பற்றி நாம் நிறைய அறிவோம். ஏசுவும் அப்படித்தான்! கை வெட்டப்பட்டாலும், முழு உடலும் மண்ணுக்குள் வெகுநாள் மூழ்கி இருந்தாலும் மகான் நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் திடீரென இயல்பு நிலைக்கு வந்து தன் போக்கில் நடந்து போனதும் இவ்விதம்தான். 

ஆணிகள் அடித்தும், ஈட்டியால் குத்தியும் வெளிப்போக்காக இறந்ததுபோல் தெரிந்தாலும் சிலுவையில் ஏசு இறக்காமல் உயர்நிலை சமாதி யோகத்தில் தன்னிலை மறந்து அப்படியே இருந்திருக்கலாம். எல்லா சூட்சும ரகசியங்களும் பைபிளில் வெளிப்பட அவசியமில்லை. சிலுவையிலிருந்து இறக்கிய பின் ஏசுவின் உடல் வைக்கப்பட்ட குகைப்பாறை வெடித்தது, ஒளி ரூபமாய் உடல் மறைந்து போனது. அவர் உயிர்த்தெழுந்ததை அறிவிக்கச் சீடர்கள் முன் தோன்றினார். இதெல்லாம் சித்தர்களின் இயல்பு. 12 முதல் 30 வயது வரை பதினெட்டு ஆண்டுகளில் இங்கே போகரிடம் அவர் என்னென்ன சித்திகள் கற்றார்? அகத்தியரிடம் ஏசு விருது பெற்றாரா? இதெல்லாம் நம்மைப்போன்ற சாமானியர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அது பரம ரகசியம்!

உள்ளதை உள்ளபடி ஏற்பதுவே நன்று. புகழின் உச்சியில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தைக் கையில் எடுத்தும் சர்ச்சைகள் பேசியும் எதற்கு இந்தத் தேவையற்ற கசப்பு? சிவசிவா!

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 28 மார்ச், 2023

இல்லைனாதான் என்ன?

எனக்குத் தெரிந்த ஒரு முதியவர் இன்று என்னிடம் பேசும்போது தன் மனக்குறைகளைச் சொல்லி வருத்தப்பட்டார். “எனக்கு இப்போ வயசு 80க்கு மேலாச்சு. என் வம்சம் தழைக்கணும்னு நினைச்சேன் ஆனா அந்த ஆசை நிராசையாவே போச்சு. என் சம்சாரத்துக்கும் வருத்தம் இல்லாம இல்ல. என்ன செய்ய .. எல்லாம் தலைவிதி. வாங்கி வந்த வரம் அப்படி. என் தம்பிக்கு ஒரு மகனும் ஒரு பேரன் பேத்தியும் இருக்காங்க. அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவேன்” என்றார்.

“ஐயா, உலகத்துல எத்தனையோ கோடி ஜனங்களுக்குக் கல்யாணம் ஆகியும் குழந்தையே இல்லாம இருக்காங்க. எத்தனையோ பேர் கல்யாணமே ஆகாம இருக்காங்க. சிலருக்கு ஆண் வாரிசு இல்லாம மகள் மட்டும் இருந்து அதோட அவரோட கிளை நின்னு போகும். அதுகெல்லாம் அவங்க ஒவ்வொருத்தரும் உக்காந்து வருத்தப்பட்டா வேலைக்கு ஆகுமாங்க? சந்ததி இல்லேனா என்ன? நீங்க ஆசிர்வதிக்கபட்டவர்னு நினைச்சிகோங்க” என்றேன்.

“நான் ஆசிர்வதிக்கபட்டவனா... என்ன சொல்றே... எப்படி?” என்றார்.

“ஆமாங்க. எனக்குத் தெரிஞ்சு நீங்க யாரையும் மோசம் பண்ணினது இல்ல, யார் சொத்தையும் அபகரிக்கலை, சொல்லப்போனா உங்க சேமிப்பிலேந்து அப்பப்போ கஷ்டப்படுறவங்களுக்குக் காசு தந்து உதவுறீங்க. ஏழைங்க கல்யாணத்துக்குத் தாலிகூட தந்தீங்க. இதை நீங்க போன பிறவியின் வினைகளைக் கழிக்கப் பிராயச்சித்தம்னு வெச்சிகிட்டாகூட தப்பில்லை. ஆக மொத்தத்துல தண்டிக்ககூடிய பாவங்கள் இப்ப செய்யலை! 

பாவங்கள் ஏதாவது நீங்க செய்திருந்து, அதையும் உங்க சொத்தையும் அனுபவிக்க உங்க சந்ததியிலே எவனும் வரலைனா அதுக்கு வருத்தப்பட்றது நியாயம். அப்படி எதுவும் இல்லாதபோது நீங்க ஏன் கண்டதையும் மனசுல போட்டுக் குழப்பிக்கறீங்க. எப்படியும் மிஞ்சியிருக்குற உங்க காசுபணம் உங்களுக்கு அப்புறம் உங்க தம்பிக்கும் அவர் மகனுக்கும் போகப்போகுது. ஆக உங்களுக்கு வம்சவிருத்தி அவசியப்படாதுங்கிறது உங்க குலதெய்வ சித்தம்னு நினைச்சிகோங்க. இனி உங்களுக்கு அப்புறம் குலதெய்வ பூஜையை உங்க தம்பியும் வம்சாவளி பேரனும் தொடர்ந்து எடுத்துச் செய்யப்போறாங்க.

வாழையடி வாழையா சந்ததிகள் இருந்தாதான் மூதாதையர்கள் மோட்சம் போவாங்கனு சாஸ்திரம் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. அவங்களே திரும்ப வந்து ஜனனம் எடுத்துப் பாவத்தைக் கழிக்க ஒரு வாய்ப்பு வரும்ங்கிற காரணத்துக்காகச் சொல்லபட்டது. இப்போ சொல்லுங்க உங்களுக்கு என்ன அவசியம் திரும்பி வந்து உங்க வம்சாவளியில பிறக்க? உங்க கிளையில் உங்களோடேயே ராகு-கேது சாபம், பிராரப்த கர்மா எல்லாம் நீர்த்துப் போச்சுங்கிறதுதான் நிஜம்" என்று சொல்லித் தேற்றினேன்.   

“ஓஹோ... இதுல இப்படியொரு சூட்சுமம் இருக்கோ...  இது தெரியாம போச்சே..  நான் எதுக்கு மனச போட்டு உளப்பணும்? எனக்கு இந்த வயசுல உன் மூலமா இது புரியணும்னு இருக்கு. சரிதான்! சந்ததி இல்லைனாதான் என்ன? நல்லா தெளிவா உணர்த்திட்ட. இன்னொருக்கா வரும்போது வீட்டுக்கு வந்துட்டுபோ” என்றார் மகிழ்ச்சிக் குரலில்.

- எஸ்.சந்திரசேகர்



சனி, 18 மார்ச், 2023

கண்ணாடி வளையல்!

இக்காலத்தில் கண்ணாடி வளையல்கள் அணியும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஐம்பது ஆண்டுகள் முன்புவரை என்னதான் பணக்காரர்களாக இருந்தாலும் தங்க/வைர வளையல்கள் அணிந்தாலும் அத்தோடு மரபு மாறாமல் சில கண்ணாடி வளையல்களை அணிந்தனர். முன்பெல்லாம் தோளில் பெரிய கண்ணாடிப்பெட்டி ஒன்றை வார் பட்டியில் தொங்கவிட்டபடி தெருக்களில் வளையல் வியாபாரி வருவார். இன்று அவர்களையும் காணோம். நவராத்திரி சமயம் விடம் வாங்கிக்கொள்ள வீட்டிற்கு வரும் பெண்களுக்கென பிரத்தியேகமாய்த் தர வளையல்காரர் அழைக்கப்படுவார். இன்று எதுவுமில்லை.





திங்கள், 6 மார்ச், 2023

எது சுமை?

வீடு மனைவி மக்கள் செல்வம் என எல்லா உடைமைகளையும் உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது என்கிறது இந்தப்படம். இந்தத் தத்துவம் உண்மை என்றாலும் நிஜவாழ்க்கையில் சாத்தியம் இல்லை. மூட்டைகளை ஏன் சுமக்க வேண்டும்? இந்தச் சுமைகள் வேண்டாம் என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டால், சங்கடங்கள் வராது. ஆனால் சமூகம் அப்படி விடாது, கட்டாயப்படுத்தும். அப்படியான சுமைகளை ஏற்றிவிட்டு இப்படியான ஓர் உபதேசத்தைத் தந்தால் அவன் என்ன செய்வான்? ஐயோ பாவம்! அவன் ஜாதகத்திலே சன்னியாசி யோகம் போன்றதொரு அமைப்பு இருந்தால் தப்பித்தான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்க்காது.

ஒரு நடுத்தர குடும்பஸ்தன் மூட்டைகளை உதறுவது எப்போது?

* வீட்டிற்கான மாத EMI கட்டவேண்டும், அசலை மொத்தமாக அடைத்தபின்... 

* பொருளீட்டி வைத்து மகனை/மகளைக் கரை சேர்த்த பின் ....

* மனைவியை அம்போவென விடாமல் அவளுக்கான மாதவருவாய் ஏற்படுத்தித் தந்தபின்... 

நடுவில் வேலை பறிபோகாமல் இருந்து மாத சம்பாத்தியம் தொடர்ந்து வந்தால் ஒருவாறு சமாளிக்கலாம். இதெல்லாம் நிறைவேறவே அறுபது வயதாகிவிடும். அப்போது மூப்பினால் சர்க்கரை/ ரத்தக்கொதிப்பு/ மூட்டுவலி எல்லாம் படை எடுத்துவந்து மோதும். மருத்துவச் செலவும் பலகீனமும் ஏற்படும். எல்லாம் தீரும்வரை இறைவனைச் சுமக்க வாய்ப்பே அமையாது. அகக்கடல் உறங்கி அமைதி கொள்வது எப்போது? திடீரென விரக்தியில் உதறிவிட்டு ஓடிப்போனால் உண்டு. ஆனால் அதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும்.

எங்களுக்குத் தெரிந்த ஒரு பாட்டியம்மா, வயது 99. அவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார். அவருக்கு ஆறு பெண் பிள்ளைகள். சுமார் 60 வருடங்களுக்கு முன் அவருடைய கணவர் பெரிய தொழில் செய்து நொடிந்து போனார். கடன் தொல்லைகளாலும், பெண்களைக் கரை சேர்க்க முடியாத அச்சத்தாலும் வீட்டைவிட்டு ஓடியே போனார். பிறகு காலவோட்டத்தில் தாயும் மகள்களும் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவாறு காலூன்றி நின்றனர். அந்தக் கிழவர் கடைசிவரை வரவில்லை. நான் பார்க்கும்போது கால்கள் பலமிழந்த நிலையில் அந்தப் பாட்டி தரையில் உட்கார்ந்தே நகர்ந்து போவார். வெளியில் எங்கேனும் செல்ல மட்டும் சக்கர நாற்காலி. 

படத்தில் உள்ள சங்கதிபடி மூலவனைச் சுமக்கவே அக்கிழவர் இப்படிச் செய்தார் என்று அன்று நடந்த உண்மை நிலையை அறியாதோர் நினைக்கலாம் அல்லவா?

போகர் தன்னுடைய குரு காலாங்கியின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கையில், "பெண்ணாசை அறுத்துத் தன் மக்களை வெவ்வேறாய்ப் போய் எங்கோ திரியும் என்று விடுத்தார்" என்கிறார்.

பக்தியோகம் தவிர பெருஞ்சித்தர்கள் செய்ததை எல்லாம் நிஜ வாழ்க்கையில் சாமானியர்கள் பின்பற்ற முடியாது‌ என்பதே நிதர்சனம். ஜெனித்தது முதலே இறைவனை ஆன்மரூபமாய்ச் சுமந்துகொண்டுதான் வாழ்கிறோம். உள்ளே ஒருவன் உள்ளான் என்பதை இளம் பிராயம் முதலே உணர்தல் சிறப்பு. நம்முள் குடியிருப்பதால் நம் பாரத்தை அவன்தான் சுமக்கிறான் நாமல்ல என்று நினைத்தால் எதையும் உதறித்தள்ள அவசியமில்லை.

-எஸ்.சந்திரசேகர்



கோட்டை அதிசயங்கள்!

“இலங்கையில் நான்கு தந்தங்களுடன் பெரிய யானை இனங்கள் Gomphotheres இருந்ததா? இராவணனின் தேசத்தில் என்னனென்ன அதிசயங்கள் இருந்தன?” என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

வால்மீகி இராமயணத்தில் சுந்தர காண்டத்தின் சர்கம் 4, பாடல்கள் 4,5 மற்றும் சர்கம் 9 பாடல்கள் 25,26,27 பகுதியில் இராவணனின் கோட்டையைச் சுற்றி அனுமன் பார்த்த அதிசயங்கள் பற்றி விரிவாகக் காணக்கிடைக்கிறது.


“இராவணின் உள்சுற்றுக் கோட்டையில் வீர அனுமன் நுழைந்தான். அது சொர்க்கத்திற்கு நிகராக இருந்தது. குதிரைகள், யானைகளின் ஒலிகள் எதிரொலித்தன, தேர்களில் பூட்டிய உலோக மணிகளின் சப்தமும், ஆகாய விமானங்கள் எழுப்பும் ஓசையும் காதைப் பிளந்தன. நான்கு தந்தங்கள் (சதுர்தந்த), மூன்று தந்தங்கள் (த்ரிதந்த) கொண்ட யானைகளும் காவலுக்கு இருந்தன. அவனுடைய பிரம்மாண்ட கோட்டையின் வாயில் தோரணங்கள் அழகானதாகவும், கோட்டையைச்சுற்றி வலிமையான ராட்சதர்களும், வெளியே கூர்வேல் ஏந்திய வீரர்களும் எந்நேரமும் காவலுக்கு இருந்தனர். உள்ளே பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது” என்று வால்மீகி இராமாயணம் சொல்கிறது. 

அதை நம் சித்தரின் பாடல்களோடு ஒப்பீடு செய்து பார்ப்பதுதான் சரியாக இருக்கும். திரேதா யுகத்தில் பார்த்ததையெல்லாம் போகர் தன்னுடைய சப்தகாண்டத்தில் உரைக்கிறார். காலாங்கிநாதர் அவருக்கு விளக்கியது போக போகரும் பார்த்த கோட்டை அதிசயத்தை ஆறாம் காண்டத்தில் புலிப்பாணிக்குச் சொல்கிறார். 


“வெகுகோடி காலங்களுக்கு முன் பொன்னிலங்கையின் மன்னன் தசமுக இராவணனின் கோட்டையில் பார்த்த வளமான அதிசயங்கள் மிக்கவுண்டு. தேர் ராஜரின் கோட்டை விண்ணை முட்டும், சண்ட மாருதமும் பிரசண்ட மாருதமும் வீசும் வகையில் கோட்டைக்குள் ஆழியும் வந்து போகும், எழும்பி வடியும் முகத்துவாரமும் உண்டு. அவனுடைய கோட்டையைச் சுற்றி பராகிரம ராட்சதாள் நிறைய பேர் காவலுக்கு இருந்தனர். தூரத்தே வானரர்களும் கண்டேன். தேர்வேந்தனின் அதிசயிக்கும் ரதகஜ தோற்றங்களும் அதன் சப்தங்களும் அதீதமாய் அச்சுறுத்தும் வகையில் இருந்தன” என்று போகர் சொல்கிறார்.

இராமாயணம் அண்மையில்தான் நடந்திருக்கும் என்றோ அது வெறும் கட்டுக்கதை என்றோ பலர் திரித்துச் சொல்லும்போது, வால்மீகியும் போகரும் அது அப்படியல்ல, வெகுகோடி வருடங்களுக்கு முன் திரேதா யுகத்தில் நடந்தது என்று அடித்துச் சொல்வதைக் காட்டிலும் சான்று வேண்டுமோ? தேவபாடையில் இயற்றிய வால்மீகியும், நற்றமிழில் இயற்றிய போகரும் உரைத்த இராவணன் கோட்டையின் அதிசயங்கள் யாவும் பொய்யல்ல மெய்! 

-எஸ்.சந்திரசேகர்

சனி, 18 பிப்ரவரி, 2023

சிவராத்திரி!

மஹாசிவராத்திரிக்கு உங்களுடைய சிறப்புப் பதிவு ஏதேனும் உண்டா என்று நம் நண்பர் கேட்டார். 

அவனை நினைக்காத தருணம் உண்டா என்ன? சீவனில் கலந்து வாசியில் நகர்ந்து சிந்தையில் அமர்ந்து எப்போதும் நம்மை ஆட்கொள்பவன் நம் தேகத்தில் பஞ்சபூதமாய் இருப்பவன். இந்த ஆன்மா அவனுடையது. அதனால் நினைத்தபோது இங்கே பாடல் புனைவது, சித்த நூலிலிருந்து சிலவற்றைப் பதித்து விளக்கம் தருவது, என எப்போதும் அவன் நினைவாகவே இருப்பதால், நமக்குத் தினமும் சிவராத்திரி, ஏகாதசி, கந்தசஷ்டிதான்.

மாலையில் திருநீறு பூசி சிவபுராணம், சிவாஷ்டகம் என எது முடியுமோ அதைப் பாராயணம் செய்வேன். ஜெபமாலை அணிந்து மந்திரம் உருவேற்றுவேன். பிறகு இரவு சாப்பாடு முடித்தபின் நெடுநேரம் கண் விழித்து இருக்காமல் நேரத்தோடு தூங்கப்போவதுதான் என் பாணி! 😂

ஊரே அமர்க்களப்படுகிறது. கோயிலில் விடியவிடிய நான்கு கால பூஜை நடக்கும். ஆனால் இந்த ஆள் என்ன இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறீர்களோ? 🤔

என்னைப் பொறுத்தவரையில் ...

"தினமும் சந்தியில் பிரதோஷ காலம்

தினமும் இடையாமம் சிவராத்தி ஓரை

தினமும் வைகறையில் நாரணன் நேரம்

தினமும் முப்பொழுதும் நாடலாம் முக்தி"

இங்கே படத்தில் உள்ள ஸ்படிக லிங்கமும் சாளக்கிராமங்களும் என் மூதாதையர் விபூதி சித்தர் தாத்தா 1561-ஆம் ஆண்டு சமாதியில் போய் அமரும்வரை நித்தம் பூசித்தது. 🕉️

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

காம பாணம்!

சமூகவலையில் படத்திலுள்ளபடி ஓர் ஆங்கில வாசகத்தைப் பார்த்தேன். 

இக்காலக் காதலர்கள் பண்டைய காலத்தில் பாரம்பரிய காமன் பண்டிகையைக் கொண்டாடியதுபோல் மாசியில் கொண்டாடுவதுதான் Valentine's Day என்று நினைத்துவிட்டனர். 

இங்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்களே மிக தாராளமாக மனமுவந்து அனுமதி கொடுக்கின்றபோது மற்றவர்களின் கண்டனக் குரல் எடுபடாது. எல்லா வீடுகளிலும் இளசுகள் கையில் ரோஜா எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவதில்லை. வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளை காதலிக்க ஊக்குவித்தது சமத்துவம் போற்றும் சமூகமா? கையாலாகாத பெற்றோரா? 🤔

காதல் பூங்கொத்தைக் கையில் கொடுத்து, அவசரகதியில் மணமாலை மாற்றி, ஓராண்டு புரிதலின்றி வாழ்க்கையை ஓட்டி, பிறகு வக்கீலை நாடி, வாய்தாக்கள் வாங்கி, பிறகு பரஸ்பர விவாகரத்தை ஏற்பதுதான் டிரென்ட்.💐 Miss ஆக இருந்து Mrs ஆகி மீண்டும் Miss ஆவது ஓர் அரிய கலை! 

சாஸ்திரப்படி அக்னி சாட்சியாக மணம் முடித்தபின், சட்டப்படி விவாகரத்தான கணவன் இறந்தால் அவள் கைம்பெண்ணாகக் கருதப்படுவாளா? சாஸ்திரப்படி ஆவாள் ஆனால் சட்டப்படி அவள் நித்திய செல்வியாகவோ மறு சுமங்'கிலி'யாகவோ விருப்பத்தகுதியுடன் வாழலாம்! 😂

-எஸ்.சந்திரசேகர்



புதன், 8 பிப்ரவரி, 2023

இது கண்டனத்திற்குரியது!

அர்ச்சகரின் தட்டில் இனி தட்சணை காசு போடக்கூடாதாம். கோயில் உண்டியலில் மட்டும் போடவேண்டும் என்று இந்து அறநிலையத்துறை வலியுறுத்துகிறதாம்.  கோயில் ஆபீசில் கட்டணம் செலுத்தி அங்கு பக்தர் யாருக்கேனும் கட்டளை சேவையோ, ஹோமமோ, பரிகாரப் பூஜையோ, திருமணமோ நடத்தி வைத்தால் அதை நடத்தி வைப்பவர்க்கு இனி சம்பாவனை கொடுப்பது எப்படி? நான் அறிந்தவரை அர்ச்சகர்களின் மாத வருமானமே ₹750 முதல் ₹3000 வரை தான்‌. இதை வைத்து இக்காலத்தில் என்ன ஜீவனம் செய்ய முடியும்? 

சோறுடைத்த சோழ தேசத்தில் மாதம் மும்மாரி பொழிந்ததற்கு அந்தணர்கள் பெரும்பங்கு வகித்தனர். 

"வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!"

பெண்கள் தம் கற்பில் தவறலாம், மன்னன் சரியாக ஆட்சி செய்யத் தவறலாம். ஆனால் மறையோதும் வேதியர் கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறிடக்கூடாது என்ற பொது நோக்கத்தில் அவர்களை ஆதரித்து வறுமை வராமல் காத்திடவே சதுர்வேதிமங்கலம் கிராமங்களை இராஜராஜ சோழன் நிறுவினான். தான் கட்டுவித்த கோயில்களில் எல்லாமே கிரமமாக நடக்க ஏற்பாடுகள் செய்தான். ஆனால் இக்கால முற்போக்கு வரலாற்று ஆசிரியர்கள் சோழனின் இச்செயலை சமூக அநீதி என விமர்சித்து உமிழ்ந்தனர்.

இன்றைக்கு நடப்பது எதுவும் நல்லதல்ல. மாதம் மும்மாரி என்ற நிலை மாறி வடகிழக்கு/ தென்மேற்கு என்ற அளவில் உள்ளது. சமயத்தில் அதுவும் பொய்த்துப் போகும். கடும் புயல் வீசி உள்ள பயிர்கள் அழிந்து நாசமாகும். அப்படியே அறுவடை ஆனாலும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பயிா் முளைத்து வீணாகும்.

ஆக அரசு உத்தரவு என்ற பெயரில் இனி சம்பிரதாய நெறிமுறைகளை மாற்றி விடுவார்கள். பெரிய கோயில்களில் அபிஷேகம் அலங்காரம் ஒருமுறை போதும், சஷ்டி/ பிரதோஷ கால அபிஷேகத்திற்கு தேன் பால் பன்னீர் யாவும் அரை லிட்டர் மட்டும் உபயோகிக்க வேண்டும், வேதகோஷ மந்திரங்கள் கருவறைக்கு வெளியே கேட்கக்கூடாது, மடப்பள்ளியில் திருவமுது சமைப்பது கூடாது போன்ற புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை! 😀

"சுழலும் பூமி உயிர்களை வளர்க்கும்

  நடுங்கும் பூமி அதர்மத்தைக் காட்டும்

  உழலும் ஆன்மா வினைப்பயன் ஏற்கும்

  கழலும் ஊன்றக் காலச்சுவடு வலிக்கும்"


-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

உடல்நலம் பேணல் எட்டாக்கனியா?

"நோய் தொற்று வராமல் காத்துக்கொள்ள சிவப்பு கவுனி, மூங்கில் அரிசி மற்றும் கருங்குறுவை அரிசியை மட்டுமே சமைத்துச் சாப்பிடுங்கள்" என்று ஒரு பதிவில் சொல்லியிருந்ததைப் பார்த்தேன்.

இன்றைய சந்தை நிலவரப்படி, உத்தேச விலையாக இந்த ரகங்கள் ₹100 முதல் ₹200 வரை விற்கப்படுகிறது. பொன்னி பச்சரிசி கிலோ ₹53 முதல் ₹56 வரை விற்கிறது. இதில் மேற்படி பாரம்பரிய அரிசி ரகங்களை நடுத்தர குடும்பத்தால் ஒரு மூட்டை வாங்கிட முடியுமா? அரை கிலோ மட்டும் வாங்கி என்ன செய்ய? முழு அரிசி மணிகளை எண்ணி எண்ணித்தான் உலையில் போட வேண்டும். வழித்தால் சட்டியிலிருந்து அகப்பைக்காவது வருமா? 😀

அப்படியே சாப்பிட்டாலும் உடல் உடனே வலுப்பெற்று எதிர்ப்பு சக்தியைக் காட்டுமா? சித்த /ஆயுர்வேத மருந்துகளே நாள்பட்ட பிரச்சனைக்குக் குறுகிய காலத்தில் தீர்வு தருவதில்லை. அது ஒரு மண்டலம் தாண்டி மெள்ள வீரியத்தைக் காட்டும்வரை நோயாளிக்குப் பொறுமையும் நம்பிக்கையும் இருப்பதில்லை. ஏன்?

சிகிச்சை முறை பற்றி வைத்திய குண சிந்தாமணி சொல்வதென்ன? மருத்துவ பிரயோகத்தை உடல் ஏற்றுக்கொண்டு உடனே செயல்படும் அளவில் அந்த மருத்துவ முறையில் உடலைப் பழக்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நோயாளியைப் பரீட்சித்துப் பார்த்தபின் உடலில் தங்கிய கசடுகளை வெளியேற்ற ஒவ்வொரு முறையும் உள்ளுக்கு பேதி மருந்து தந்து சுத்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சித்த குருமருந்து கிரகிக்கப்பட காலப்பிரமாணம் அந்தி/ சந்தியோ, வாரமோ, பட்சமோ,  குணமாகப் போதுமானது. பாதிப்பின் தீவிரம் பொறுத்து மண்டலம்/ அயனம் வரை கால அளவு நீடிக்கும். வைத்திய குண சிந்தாமணி அளவுகோல் கிரமப்படி பார்த்தால் நம் இன்றைய வாழ்க்கை முறைக்குச் சித்த வைத்தியம் எடுபடாது. சித்த நூல் எழுத்தாளரே இப்படிச் சொல்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.

திடீரென சித்தாவுக்கு மாறுங்கள் என்றால் நம் வாழ்க்கை முறைகளை நம் பூட்டன் காலத்துப் பழைய நிலைக்குக் கொண்டுபோக முடியுமா? முடியாது! 🤔 மலைவாழ் மக்கள் போல் இயற்கையுடன் ஒன்றி பூரண நலத்துடன் வாழ்ந்தால் அவர்களைப் பின்தங்கிய மக்கள் என்கிறோம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை! ஆழமாகப் பார்த்தால், உணவும் ஆங்கில மருந்து மட்டும் எதிரி அல்ல, நம்மைச் சுற்றியுள்ள பல நாகரிக அம்சங்களும் வாழ்க்கை முறையும் சித்த மருத்துவ செயல்பாட்டுக்கு எதிரிதான்! பத்தியம் என்பது உணவுக்கு மட்டுமல்ல வாழ்வியல் முறைக்கும்தான். நாம் ஒரு நூற்றாண்டுக்கு முந்தி இருந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றவேண்டும். இதை எந்த சித்த வைத்தியராவது அடித்துச் சொல்லியுள்ளாரா? மீண்டும் மீண்டும் அவரிடம் கப்பம் கட்டும்படி ஆகிறதே!

உணவே மருந்து என்ற அளவில் அன்றாட சமையலைச் செய்து உண்டு ஓரளவுக்குக் காத்துக்கொள்கிறோம். இதில் கற்பங்கள் செய்து உண்டால் என்ன தவறு என்று நினைப்போர் உண்டு. காய்கனி தானியம் எல்லாமே மருந்தடித்து விளைவித்து எங்கெங்கிருந்தோ சந்தைக்கு வருகிறது. இதுவே உடலுக்குப் பழகிவிடுவதால் சித்த மருந்துகள் அவசரத்திற்கு எடுபடாமல் போகும். ஆர்கானிக் பண்ணைக் காய்கறிகள் என்று விற்றாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய முடியாது.

நியாயமாகப் பார்த்தால் பாரம்பரிய அரிசி ரகங்களை அரசு ஊக்குவித்து அதை ரேஷன் கடையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கலப்படமற்ற பால் தேன் பனைவெல்லம் பதநீருக்கே வழியைக் காணோம்! இதில் அரிசியா? சித்த மருந்தோடு நாம் குடிக்கும் அநுபானம் சுத்தமாகக் கிடைக்க வேண்டாமா? 

மக்களே, அதை வாங்காதீர்கள் இதை உண்ணாதீர்கள் என்று சமூக வலையில் உசுப்பேற்றி அதற்குத் தாளம் போடும் கூட்டம் ஒரு பக்கம். தனிமனித மாற்றம் வேண்டும் என்பார்கள். ஆனால் சராசரி மக்களின் பொருளாதாரத்தை நினைத்து எந்தப் பதிவும் வருவதில்லை. வசதி படைத்தவன்தான் தனி மனித மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லாதவன் வெறும் கோஷம் போட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். ஏன்? அதை ஆதரித்து வாங்கி ஊக்கப்படுத்தும் நிலையில் அவனுக்கு வசதி இல்லையே! உற்பத்தி அதிகமானால் விலை குறையும். வாங்கும் திறன் கூடும். இதுவே யதார்த்தம்.

தன் நிலத்தில் விளைந்த அரிசியை விவசாயி உண்டாலும் இதர உணவுப் பொருளைச் சந்தையில் வாங்கத்தானே வேண்டும்? உடல் நலம் கெட்டுப்போக வேறு வழிகளா இல்லை? பொது சந்தையைச் சாராமல் ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கான தனிமனித சுயசார்பை அடைய முடியுமா? ஏற்றம் பற்றி வலைத்தள கட்டுரைப் பதிவில் வக்கணையாக எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நிஜத்தில் ...?

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

எப்படி நம்புவது?

நேற்றைய பதிவைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். “செவ்வாய் கிரகத்துல காந்த சக்தி மூன்று வேளையும் வருவதற்கு பழனிதான் காரணம்னு எப்படி சொல்றீங்க? நவபாஷாண சிலை பற்றி தெரிஞ்ச நாம் வேணும்னா இதை நம்பலாம் ஆனால் வெளிநாட்டுக்காரங்க ஒத்துப்பாங்களா?”

அவர் கேட்டது சரியே. 👍 ஆன்மிகத்தை வைத்துத்தான் அறிவியல் நிகழ்வு ஒன்று நிரூபிக்கப்படவேண்டும் என்று இருந்தால் அதை உலக விஞ்ஞானிகள் நிராகரிப்பார்கள். தென்னிந்தியாவில் எங்கோ பழனியில் உள்ள மூன்றடி உயர ஒரு சிலை எப்படி 250 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்? நான் சொன்ன கருத்தை ஏற்பதா வேண்டாமா என்று இந்த முகநூல் குழுவில் உள்ளவர்களே நினைக்கலாம்.

செவ்வாய் கிரகம் பூமியின் கர்ப்பத்திலிருந்து விடுபட்டுப்போன ஒரு செந்நிறமான கோள். அதில் உயிர்கள் வாழாது ஏனென்றால் -80°C குளிர், நீர் இல்லை, உப்பும் ரசாயனங்களும் பாறைகளும் நிறைந்த நிலப்பரப்பு, ஏறக்குறைய காற்று இல்லாத வெற்றிடம், அங்கே புவியீர்ப்பு விசை என்பது நாற்பது விழுக்காடுகூட இல்லை.

நம் பூமியிலிருந்து ரேடியோ சிக்னல் சமிக்ஞை அனுப்பினால் அது அங்கே சென்று சேர குறைந்தது 3 நிமிடம் முதல் 22 நிமிடம் வரை ஆகும். பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரத்தைப் பொறுத்தே நேரம் அமையும். ஆக சிக்னல் இங்கிருந்து போய் அங்கே அடைந்தபின் மீண்டும் பூமிக்குத் திரும்ப எப்படியும் சராசரியாக 12 நிமிடங்கள் ஆகும். 

முன்னொரு சமயம் பழனி விக்ரகத்தில் சாற்றிய ராக்கால சந்தனத்தை எடுத்துக் கரைசலாக்கி அதில் என்னென்ன உலோக பாஷாணங்கள் கரைந்துள்ளது என்பதை அடாமிக் ஸ்பெக்ட்ரோமீட்டார் மூலம் கண்டறிய முயன்று, அதில் எந்தவொரு உலோக அணுக்களும் வெளிப்படாது போனதே நவீன தொழிநுட்பதிற்குக் கிடைத்த பெருந்தோல்வி.

விளாபூஜை, உச்சிகாலம், சாயரட்சை காலங்களில் பழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் ஆராதனையின்போது அங்கே செவ்வாயில் நாஸா செயற்கைக்கோள் இறக்கிவிட்ட யந்திரம் காந்தப்புல வீரியத்தை அளவீடு செய்து பார்த்தால் முடிவு தெரிந்துவிடும். சந்தன கரைசல் போலவே காந்தப்புல சோதனையில் தெய்வசக்திபற்றி எதுவும் தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை.     

ஆன்மிகத்தைக் கொண்டு அறிவியலை நிரூபிக்க இருப்பின் அதை இவ்வுலகம் ஏற்காது. Theory of doubt, அடிப்படையில் பழனி அத்தியாயத்தை ஓரமாய் வைப்பார்கள். வெகுகாலமாய்த் துப்புத் துலங்காத ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட காவலர், கடைசியாய் அஷ்டகர்ம மாந்திரீகரிடம் சென்று அந்தக் கொலையை யார் செய்தது, அதற்கான தடயங்கள் எங்கேனும் உள்ளதா என்பதை ரகசியமாய்க் கேட்டறிந்து, மேய்ந்து, இழுபறியான வழக்கை விரைந்து சரியாக முடித்துவிடுகிறார். அஷ்டகர்ம பிரயோகத்தில் வெளிப்பட்ட விஷயங்களை நம் சட்டம்/நீதி ஏற்காது என்பதால் தனிப்பட்ட காவலர் புரிதலில் ஏற்றுக்கொள்ளலாமே தவிர அதை ஒரு வாக்குமூல சாட்சியாய் ஏற்கமுடியாது. 

கிரகண காலத்தில் உணவுப் பண்டங்களின் மீது தர்ப்பைப்புல் போட்டால் அது கதிர்வீச்சைத் தடுக்கும் என்பதை மேலையில் ஏற்கவில்லை. ஆனால் அதை நெடுங்காலமாய் வீடுகள்தோறும் சாஸ்திரமாக நாம் கடைப்பிடித்தோம். பல நூற்றாண்டுகளுக்கு முன் போகர் நிறுவிய நவபாஷாண சிலையானது காலத்தால் தேய்மானமாகி வலுவிழந்தது என்றாலும், இன்னும் சக்தியை இழக்கவில்லை. அதை அவ்வப்போது போகர் தன் நிலவறையிலிருந்தே செப்பனிடுகிறார் என்று நான் சொன்னாலும் அதற்கு ஏது சாட்சி? 

அதுபோல்தான் செவ்வாயின் காந்தப்புலமும் பழனி முருகனின் அபிஷேகங்களும். காந்தப்புல சோதனையில் இந்து சமய நம்பிக்கை வெற்றிபெற்றால் வல்லரசு நாடுகள் இதை விரும்பாது. அதையும் தாண்டி இச்சோதனையில் தன்னுடைய சக்தியை உலகறிய வெளிப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியது தண்டபாணித் தெய்வமே தவிர நாம் அல்ல! நான் சொன்னது ஒரு தகவலாக இருக்கட்டும். 🙏

-எஸ்.சந்திரசேகர்





வியாழன், 19 ஜனவரி, 2023

பழனியும் செவ்வாயின் காந்தப்புலமும்!

காந்தப்புலம் என்பது செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால், பூமியைச் சுற்றி காந்த மண்டலம் கவசமாக இருப்பதுபோல் செவ்வாய் கிரகத்தில் இல்லை. ஏன்?

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இருந்த காந்த மண்டலம் மறைந்து போனதாம். அதன் விளைவாக காஸ்மிக் கதிர்வீச்சுகள் நேரடியாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் (Martian atmosphere) புகுந்து செவ்வாய் கிரகத்தை உயிர்கள் வாழ முடியாத இடமாக மாற்றியது.

நாஸா ஆர்பிட்டர் மூலம் சேகரிக்க்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்த இந்திய விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் காந்தப்புல சாலிட்டரி வேவ்ஸ் (Solitary waves) உள்ளதென கண்டறிந்தனர்.

இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் (Mars Surface) இருந்து சுமார் 1,000 முதல் 3,500 கிமீ உயரத்தில், விடியற்காலை, பிற்பகல் மற்றும் அந்தி சாயும் பொழுதில் பெரும்பாலும் அடர்த்தியாய் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பின் மூலம் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் தொடர்பான பல புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். முருகன்- பழனி- செவ்வாய் தொடர்பைப் பற்றி நம் மிகப்பழைய பதிவில் சொல்லியிருந்த விஷயத்தை நினைவூட்டிப் பாருங்கள். செவ்வாய் கிரகத்தில் எப்போது சாலிட்டரி வேவ்ஸ் அதிகமாகிறது?

இங்கே பழனியில் நவபாஷாண முருகனுக்கு விளாபூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நேரத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கும் சமயம் அங்கே செவ்வாய் கிரகத்தில் காந்தபுல அலைகள் அடர்த்தியாய் எழுப்பப்படுகின்றன. இங்கே இராக்கால பூஜையில் சந்தனம் சாற்றிக் குளிரூட்டிய பிறகு செவ்வாயில் காந்தப்புல அலைகள் எழுவதில்லை. ஆக செவ்வாயில் உயிர்கள் வாழவேண்டும் என்ற நோக்கில் போகர் பிரயத்தனப்பட்டது தெரிகிறது!

"தரணீ கர்ப்ப ஸம்பூதம், வித்யுத்காந்தி ஸமப்ரபம், குமாரம் சக்திஹஸ்தம் ச, மங்களம் ப்ரணமாம்யஹம்" 

என்பது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்லோகம். அதாவது பூமித்தாயின் கர்ப்பத்திலிருந்து உதித்த செவ்வாய் கிரகமே, செவ்வேளின் அறிவொளி காந்தம் சக்தியூட்டப் பிரகாசிக்கும் உன்னை வணங்குகிறேன் என்பதே பொருள். 

ஆக இங்கே பூமியில் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலைக்கு அபிஷேகம் பூஜை நடக்கும்போது அங்கே செவ்வாயில் அதிர்வலைகள் திடீரென தன்னிச்சையாக எழுகிறது. இதற்கான காரணத்தை நாம் அறிவோம் ஆனால் வடஇந்திய / நாஸா விஞ்ஞானிகளால் புரிந்துகொள்வது கடினம். என் முதுகலை இயற்பியல் பாடத்தில் இதுபோன்று நடக்கும் கோட்பாட்டை  A disturbance of a self-reinforcing wave packet (soliton) with nonlinear dispersive effect என்று படித்த நினைவு உள்ளது.

அதாவது செவ்வாயில் ஒரு காந்தப்புலம் நிரந்தரமாக இருந்து அது உண்டாக்கும் காந்தவிசை அதிர்வலைகளின் விளைவு எப்படி இருக்குமோ அப்படித்தான் திடீரென மூன்று வேளையும் சாலிட்டரி வேவ்ஸ் அந்நேரம் மட்டும் விநோதமாய் எழும்பி மறைகிறது.

இங்கே விக்ரஹத்திற்கு மந்திர கோஷம் முழங்க அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்போது அங்கே இதன் தாக்கம் தெரிகிறது என்பதே நிஜம். சுருக்கமாய்ச் சொன்னால் இங்கே பூமியில் த்ரிகாலமும் மந்திரங்கள் நவபாஷாண சிலை முன் ஒலிக்கும்போது அங்கே மாற்றங்கள் பதிவாகிறது. ஓம் சரவணபவ 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்