About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

முருகன் பிரம்மச்சாரி!

முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் 500 நூலில் கடைசி பாடல்தான் இது. 

முருகனின் வாய்மொழியில் அஷ்டகர்மம் மெய் என்பது தெரிகிறது. வாலையின் அருளால் திரிகூடத்தில் ஒளிரும் அசையாத செந்நிற தீபமே தெய்வமாக இருந்து வாக்கில் வந்து அமரும் என்பது உண்மை. தான் நித்திய பிரம்மச்சாரி என்பதை முருகன் கூறுகிறான். அதனால் வாசியின் உருவகமாக வள்ளி-தெய்வானை இரு கலைகளான பிங்கலை இடகலையாக (வேட மயில், வேழ மயில்) இருப்பது தெரிகிறது. 

“கொண்டேன் மூன்றெழுத்தைக் குவித்தேன், மகாரம் நகாரம் சிகாரமோடு மூன்றெழுத்தை யானறிந்து முருகனானேன்” என்று சொல்லியுள்ளான். இந்த மூன்றெழுத்தில் மாலவன், ருத்ரன், பிரம்மா சங்கமித்துள்ளனர். அதுவே ரிக் யஜூர் சாம வேதங்களின் ரூபமாகவும் கருதப்படும்.

ஆனால் இதை அறியாத நம் மக்களோ, அந்த சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், கிருஷ்ணன், சாஸ்தா எல்லாருக்கும் ரெண்டு தாரங்கள் இருக்கு, நாம கட்டிகிட்டா தப்பில்லை என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

-எஸ்.சந்திரசேகர்

சனி, 26 ஆகஸ்ட், 2023

ஊனுடம்பு ஆலயம்!

என்று மச்சமுனி 800 நூலில் பாடுகிறார்.

அதாவது, அகரமான சிவமும் உகரமான சக்தியும் நம் தேகத்தில் வாசம் செய்யும்வரை அவ்வுடலுக்கு அழிவில்லை. எட்டுமிரண்டும் சேர்ந்து இந்தப் பாழும் பஞ்சபூத உடலை அழியாத சத்தியசிவமாக மாற்றும். நவகோள்களும் அடிபணிய அந்த தேகத்தவன் சிவனின் உருவையே பெற்றிடுவான் என்று தெளிவாகக் கூறுகிறார்.  இவர் கருத்தையே அபிராமி அந்தாதியில் ‘தெய்வ வடிவம் தரும்’ என்ற வரியும் நினைவூட்டுகிறது. 

ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இவ்வுடல் விரைவில் கெட்டு அழியும் வகையில் புகை பிடித்தல், மது அருந்துதல், தகாத உறவில் உடலைக்  கெடுத்துக் கொள்ளுதல், போதை மருந்துக்கு அடிமையாகுதல், முக்குண தோஷங்கள் பெருகும் வகையில் எல்லா வேண்டாத பழக்கங்களும் சிவசக்தியை இந்த தேகத்திலிருந்து விரட்டியடிக்க சதி செய்யும். இது எதுவும் இல்லாமல் இயல்பாக நம் மூச்சை நன்கு உள்வாங்கி விட்டாலே காலனை ஏமாற்றலாம் என்பது சித்தர் விதி. கற்பம் நமக்குத் தேவையில்லை அது சமாதியில் போய் அமர்ந்து மகாநிஷ்டையில் இருக்கும் சித்தயோகிகளுக்கே தேவை. 

மச்சமுனி பாடலுக்கு உதாரணம் என் மூதாதையர் ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தா. நாமக்கல் மாவட்டம் அ.குன்னத்தூர் காவிரிக்கரையில் எம் குலதெய்வ மகாமாரி கோயில் அருகே சமாதியில் இன்றும் அமர்ந்துள்ளார். அவர் கற்பம் உண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் ஆழமான நீண்ட வாசியில் தொடர்ந்து நிலைத்துள்ளார். இவர் எனக்கு 13 தலைமுறைகளுக்கு முந்தையவர். சமாதியில் தற்போது அமர்ந்துள்ள இவருக்கு வயது 460. நடுவிலுள்ள படம் 16ஆம் நூற்றாண்டில் சமாதி பிரவேசம் செய்தபோது இருந்த மத்திம வயதுபோல் தெரிகிறது. அதுவே வலதுபக்க முகத்தில் வயதுக்கேற்ற மூப்பு தெரிகிறது. கடந்த குரு பூர்ணிமா அன்று இவருடைய சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தனர். அச்சமயம் தன் இருவேறு முகங்களைச் சிவலிங்கத்தில் வெளிப்படுத்தினார். அதை நான் படம் பிடித்துக்கொண்டேன்.





ஆகவே நம் தேகத்திலுள்ள சிவனையும் சக்தியையும் எவ்விதத்திலும் நிந்தித்துப் பாழாக்காமல் எந்நேரமும் வாசியில் இருந்தால் ‘தான் அவனாகும்’ நிலையை எட்டலாம்.

-எஸ்.சந்திரசேகர்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வைத்தியர் குண லட்சணங்கள்!

அகத்தியர் கனகமணி நூறு என்ற நூலில் நோய்விதி, நோயாளி பரிட்சை, வைத்திய செய்பாகம், பிரயோகம், அனுகூலங்கள் எல்லாம் விவரிக்கும்போது யாரெல்லாம் மருந்து செய்து கொடுக்கக்கூடாது என்ற பட்டியலையும் (பா:54) சொல்கிறார்.

அம்பட்டர், வண்ணார், எண்ணெய் வியாபாரிகள், வட்டித்தொழில் ஈட்டுவோர், விஸ்வகர்ம கம்மாளர்கள், குயவர்கள், கள் இறக்குவோர், வேடர்கள், துர்க்குணம் கொண்டோர், முன்கோபிகள், சாஸ்திரங்களை மதிக்காதவர்கள், அன்னமிடாதவர்கள், கருமிகள், நீதிநெறி இல்லாதவர்கள், அக்கிரமக்காரர்கள், தற்பெருமை பேசுவோர், கள்வர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள் ஆகியோர் மருந்து செய்து கொடுக்கலாகாதவர்கள் என்கிறார் அகத்தியர்.

அவர் உரைத்தது இன்றைக்கும் பொருந்துமா என்பது எனக்குத் தெரியாது. செயலால் மனத்தால் வாக்கால் களங்கப்பட்டவர்களும், மாசு நிறைந்த தொழிற்பணி செய்பவர்களும் வைத்தியராக இருக்கவோ மருந்து செய்துகொடுக்கவோ கூடாது என்கிறார். அப்படியே அவர்கள் செய்துகொடுத்தாலும் அபய சுவஸ்தம் என்கிற ஹீலிங் டச் அவர்களிடம் இருக்காது என்கிறார். 

மேற்சொன்ன குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் ஜனனகால ஜாதக கோள் சஞ்சாரப்படி வைத்தியம் சார்ந்த தொழில் விதிக்கப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது. எனக்குத் தெரிந்து இந்தப் பட்டியலில் வரும் மருத்துவர்களிடம் கூட்டம் வருகிறதைக் காண்கிறேன்.

அதுபோக வைத்தியரின் லட்சணங்கள் என்னென்ன என்று இன்னொரு பாடலில் சொல்லியுள்ளார். சாந்தகுணமும் சக்தியுள்ளவனாயும், நூல் கற்றவனாய், நன்மைகள் செய்தவனாய், வசீகர சிவப்பு மேனியுள்ளவனாய் இருக்கவேண்டும்; சூரணம் பற்பம் மெழுகு லேகியம் தைலம் ஜெயநீர் சுண்ணம் சரக்குவைப்பு திராவகம் பூநீறுவழலை செய்யத்தெரிந்தவனாய் இருக்கவேண்டும் என்றும்; அஷ்டகர்மம் யோகம் மந்திரப் பிரயோகமும், சக்தி பூஜை செய்பவனாகவும் இருக்கவேண்டும்.  வைத்தியர் அங்கத்தில் எல்லா அவயங்களும் குறைவின்றி இருக்கவேண்டும். குருடு செவிடு முடம், குருத்துரோகி, ஆகாத குணமுடையோன், ஜீவவதை செய்தவன், கல்வி கற்காதவன், தாய்தந்தையின் சாபம் பெற்றவன், லோபி, வைத்தியனாகத் தகுதியற்றவன்  என்கிறார். 

ஆக லட்சணங்கள் பொருந்திய உத்தம வைத்தியரிடம் அணுகி மருந்து வாங்கி உண்டால், கொடுநோயெல்லாம் குணமாகும். அத்தகைய வைத்தியர்களுக்கு நிதி, வஸ்திரம், நெல்லரிசி, பண்டங்கள், தாம்பூலம் வைத்துத்தந்து கௌரவித்து அவர்கள்பால் பக்தி விசுவாசம் கொள்ளவேண்டும் என்று அகத்தியர் உரைக்கிறார்.

எங்கள் ஊரில் மொண்டி வைத்தியர் ராமலிங்கம் என்பவர் இருந்தார். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அவர் கைராசியும், தொழில் சுத்தமும் நிறைந்தவர் என்று என் தாத்தா சொல்லக்கேட்டுளேன்.

ஆக, இதெல்லாம் பொதுவான விதியாகக் கொண்டாலும் அவரவர் கர்ம வினைக்கேற்பத்தான் கைராசி வைத்தியர் அமைவதும் நோய் குணமாவதும் உள்ளது. அகத்தியரின் பாடல்களைத் தோண்டி ஆராய்ந்து இக்காலத்தில் இவ்விதிகள் சரியா? சாதிபேதம் தகுமா? மருத்துவத்தை வியாபாரமாக்குவது சரியா? என்ற போக்கில் அதில் குற்றம் குறை காணாது இருப்பது நலம்.

- எஸ்.சந்திரசேகர்