About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 21 ஏப்ரல், 2022

பாடலைப் பற்றிக்கொண்டு...

சித்தர் பாடல்களை நிதானமாய் வாசித்துப் பொருளறிந்தால், அதன் நுட்பத்தை அகத்தே (பிண்டத்தில்) யோக மார்க்கத்திலும், புறத்தே (அண்டத்தில்) பிரபஞ்சத்திலும் உணர முடியும். அநேகர் இதில் ஒன்றை மட்டுமே புரிந்து வைத்துக்கொண்டு, அப்பாடல் உரைப்பது இப்படியல்ல, அப்படியல்ல என்று தர்க்கத்தில் ஈடுபடுவார்கள். இறுதியில் சித்தரையே கிண்டல் செய்வதோடு, “சும்மா எதையோ பாடலில் அடித்து விட்டுள்ளார். அப்படி இல்லையென்றால் ஒருவேளை இது ஆரிய, ஓரிய சதியால் மாறியிருக்கும்” என்ற நிலைப்பாட்டைக் கொள்வார்கள். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றால் அதை மெய்யா/பொய்யா எனக் கண்டுணர்ந்துத் தெளிய மனத்திட்பம் வேண்டும்.

நான் இந்த ஏழாண்டுகளில் சுமார் பத்து சித்த நூல்களை ஓரளவுக்குப் படித்து உள்வாங்கி இருப்பேன். முழுவதும் வாசித்துக் கிரகிக்க நம்மால் ஆகாது. அதுபோக சிறிதும் பெரிதுமாய் அவ்வப்போது ஆதாரத் தேவைக்காகச் சிலவற்றைப் படித்திருப்பேன். ஆனால் பெருநூலை முழுவதும் படிக்காமல் அதில் எனக்கு வேண்டிய பாடலை எப்படி எடுப்பது? அது சிரமமான வேலைதான்! 

அதனால்தான் கண்கள் ஸ்கேன் செய்யும்போது எனக்கு என்ன தெரியவேண்டுமோ அப்பாடலை மட்டும் சித்தர்பிரான் காட்டுவார். அப்பாடலின் முன்/பின் பாடல்களையும் சேர்த்து வாசித்து அறிந்தாலே எனக்கு வேண்டிய தகவல் கிடைத்துவிடும். இல்லாவிட்டால் நான் எங்கே இத்துணை நூல்களை அலசிப்பார்த்துக் கரை ஏறுவது? எல்லா சித்த நூல்களையும் படித்து அதிலுள்ள எண்ணற்ற விஷயங்களை அறிய வேண்டுமானால் இப்பிறவியே போதாது. இதற்காக இன்னொரு பிறவியா எடுக்கமுடியும்? நான் என்றுமே ஈசனிடம் அதைக் கோரியதில்லை. நான் நிறை மதிஞராக இல்லாமல் போனாலும் கவலையில்லை, நாதன் தாள் பணிந்துப் பிறவாமல் இருக்கவே விரும்புகிறேன்.

ஒரு சித்தர் பாடலை முன்னும் பின்னும் படித்துப் பொருளறிந்தும், அதே சமயம் தனிப்பாடலாய் அதைப் படித்துப் பொருள் தேடவேண்டும். எடுத்த எடுப்பிலேயே, அதற்கு இதுதான் பொருள் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது.  இங்கே உதாரணத்துக்கு ஒன்றைத் தருகிறேன். 

பரமகுரு காலாங்கி @ கமலமுனி @ கஞ்சமலை சித்தரைப் பற்றியது. “சோதி திகுதிகு நடமிடும் பெருமாளே” என்று அருணகிரியார் பாடியதுபோல், மூலத்திலிருந்து எழுந்த வாசிக்கால் ஓடித்திரிந்து, எண்ணிக்கையுடன் அஜபை நடனமாடி, மலைமேலே சங்கமித்துச் சுடரொளி ஜோதியாய் ஒளிப்பிழம்பாய் நிலைத்தால் அதுவே சித்-ஆகாசம் என்கிற சகஸ்ரார கடுவெளி. நம்முள்ளே ரசவாதம் சமைக்கும்போது ஒளிரும் மேருகிரியே கஞ்சமலை! 

இங்கே மலைமேல் நடப்பதுதான் புறத்தே கயிலாய மேருவிலும் நடக்கிறது. அதிகாலை இருளில் மேருமலைச் சாரல் பழுக்கக் காய்ச்சிய தங்கமாய் ஒளிரும். வாசியில் அமர்ந்த சித்தரிஷிகள் யாவரும், ஒருங்கே பச்சிலைப்பூசி துருத்திக் கொண்டு ஊதும்போது ரசவாதம் நிகழ ஒரு சாமம்வரை அது ஜொலிக்கிறது. ஆகவே அண்டத்தில் பிண்டத்தில் நடப்பது என்னவோ ஒன்றுதான். வாசிக்கால் என்னும் துருத்தியால் தீர்க்கமாய் ஒருநிலைப்படுத்தி சுழுத்தீயில் சங்கமிக்கச் செய்தால் அதுவே கோடி சூரிய ஒளியுடன் பிரகாசிக்கும் மலை. இதை உங்களுக்காக எளிமைப்படுத்தினேன். யோகிகள் இதையே இன்னும் ஆழமாய் விளக்குவார்கள். 

பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கிணங்க, கஞ்சமலையரின் கால் பற்றி அத்தடத்தில் வந்தோரே அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர் மற்றும் போகர். ஆக கஞ்சமலை என்பது நம் சிகரத்தில் இருப்பதுவா, சேலம் அருகே இருப்பதுவா என்று வாதித்துக் குழம்பக்கூடாது. அறம் பொருள் இன்பம் சங்கமித்தால் அதுவே நமக்கு வீடு தரும் ஜோதிமலை, சொர்ணமலை, பொன்மலை, கஞ்சமலை! ஸ்ரீ சித்தேஸ்வரர் அருள் புரியும் கஞ்சமலைக்கு நாமும் போய் தரிசிப்போம். கோயில் அலுவலக பேசி: 4272491389.

- எஸ்.சந்திரசேகர்



ஞானக்கூத்து!

உயிர்சக்தியின் நாதமாக விளங்கும் சிவனே அனைத்திலும் வடிவமாகிறான். அவனுடைய திருநடனம் என்றால் அது வெறும் அம்பலத்தோடு நின்றுவிடாது. அவனே கருவாய் உள்ள வேதங்கள் ஆடும், பஞ்சபூதங்கள் ஆடும்,;ஆகமங்கள் ஆடும், கீதங்கள் ஆடும்; ஆறாதார சக்கர அண்டங்கள் ஏழும் ஆடும், புவனம் முழுதுமே ஆடும். அது ஞானவடிவான திருக்கூத்து என்கிறார் திருமூலர். அப்படி இருக்கும் அவன் பஞ்சமுகனாய் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலை (பஞ்சகர்தவ்யம்) நடத்துகிறான்.

வேதம் என்றால் அது புருஷ அம்சம், மொழி - சமஸ்கிருதம். சந்தேகமின்றி இதை உறுதியாய் மனத்தில் நிறுத்துங்கள். அகளமும், சகளமும், அகளசகளமுமாய் (அருவம் உருவம் அருவுருவம்) உள்ள சிவனானவன் சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், மதுரை, திருவாலங்காடு ஆகிய பஞ்சசபைகளில் ஐந்து விதமாக ஆடினான். அவை ஆனந்த தாண்டவம், திருத்தாண்டவம், திரிபுர தாண்டவம், சந்தியா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் என ஐந்து நடனங்கள். சிவனன்றிச் சக்தி இல்லை என்பது உண்மை. உமையவள் சிவனின் இடபாகத்தில் தேன்மொழியாய் (தமிழ்) உள்ளாள். சிவன் ஆடினால் சக்தியும் அல்லவோ ஆடவேண்டும்? ஆக, தேன்மொழியாம் தமிழே அவன் பாகமாய் விளங்கும் தேவியும் ஆடினாள் என்று திருமூலர் மிகத் தெளிவாக உரைக்கிறார்.  

சமஸ்கிருதத்தைவிட தமிழ் உயர்ந்ததா, தாழ்ந்ததா, நிகரானதா? அதை இப்பாடலில் திருமூலரே தெளிவாக்கிவிட்டார். நாதவிந்துவாக சிவனும் சக்தியும் சரிநிகராய்க் கலந்துள்ளனர். புருஷகலை மொழியின் ஆதாரமாய்த் திகழும் சிவன் தன் ஸ்திரீகலை பாகமாய்த் தமிழைக் கொண்டுள்ளான் என்று திருமந்திரம் பாடலில் திருமூலர் இயம்பியதை எள்ளி நகையாடி கண்டித்துப்பேசி சிவநிந்தனைப் புரிய இனியும் யாருக்கேனும் துணிவு வருமா? 

இது புரியாமல் ‘ஆரியம் அழிந்து ஒழிந்தது’ என்று சிவனை இகழ்ந்து பேசிவிட்டுத் தமிழை வணங்குகிறேன் என்று பேசுவது அமங்கலம், அது பிரம்மஹத்தி தோஷத்தைத் தரும். நமக்கு வடமொழி புரியாமல்/ பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் ஒருபோதும் அதை வெளிக்காட்டிச் சிவபாதகச் சொல்லைப் பேசக்கூடாது, சிவபாதகச் செயலைப் புரிந்திடக்கூடாது.  

-எஸ்.சந்திரசேகர்




செவ்வாய், 19 ஏப்ரல், 2022

கதை சொல்லும் படம்!

 


முகநூலில் இந்த ஓவியம் என் கண்ணில் பட்டது. அது பல விஷயங்களைப் போதித்தது. மழையில் வீட்டின் கூரை ஒழுகுகிறது. பெரிய கட்டில் ஒரு பக்கம் காலில்லாமல் செங்கற்கள் மீது நிற்கிறது. அதன்மீது ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்தமாய்த் தூங்குகிறது. ஒவ்வொருவரின் முகத்திலும் நிறைவே இருக்கிறது. அசதியோ வேதனையோ கஷ்டமோ சற்றும் தெரியவில்லை. இருக்கும் ஒரு போர்வையே அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறது. பூனையும் நாயும் இவர்களுடன் படுத்துத் தூங்குகிறது. அதுபோக உள்ளே சேவலும் ஜன்னலில் குருவிகளும் அந்த அறைக்குள் இடம் பெற்றுள்ளன.

பார்த்த மாத்திரத்தில் இது சாதாரண படம் போல்தான் எண்ணத் தோன்றும். ஆனால் ஆழ்ந்து உற்றுப் பார்க்கப்பார்க்க அது உங்கள் ஆன்மாவுடன் பேசுவதைக் கவனிப்பீர்கள். மனம் பெரிதாக இருக்கும்போது, வசிக்கும் சிறிய இடமும் விசாலமாகவே தெரியும். அதற்கேற்ப வாழ்ந்திட மனப்பக்குவம் வந்துவிடும். ஆனால் குறுகிய மனத்துடன் வாழ்ந்தால் ஒய்யார அரண்மனையும் போதாது. 

சிறுவயதில் நாங்கள் எல்லோரும் கோடையில் கிராமத்திற்குச் செல்லும்போது, எங்களைப் பரவசப்படுத்தியவை ஓட்டுவீடு, வயல், காவேரி, கோயில், புகைவண்டி ரயில். அதைத்தாண்டி வேறு எதுவும் இருந்ததில்லை. இரவு நேரம் அண்டை வீடுகளின் வாசல் திண்ணையில் பெரியவர்கள் பனையோலை விசிறியுடனும், குடிக்க ஒரு சொம்பு நீரையும் வைத்துக்கொண்டு அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். கே.பி.எஸ் திரையரங்கில் இரவு நேர சினிமா காட்சி தொடங்கும் அடையாளமாக ‘பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா’ பாடல் ஒலிபெருக்கியில் கேட்கும்.

ஒரு பெரிய உருளியில் சோறு போட்டு, செக்கில் ஆட்டிய கடலெண்ணெய்யில் வதக்கிய சுங்கங்காய்/ சுண்டைக்காய் வத்தக்குழம்பு ஊற்றிப் பிசைந்து அதை அத்தைப்பாட்டி எங்களுக்குக் கதைகள் சொல்லியபடி உள்ளங்கையில் ஒவ்வொருவருக்கும் வைப்பாள். நாங்கள் பசியாறும்வரை உணவுச்சுற்று நீடிக்கும். வெய்யிலுக்கு மோர் சாதமும் உலர்ந்த உப்பு நாரத்தையும் ஈடிணையற்றது. 

பெரிய ஊஞ்சலில் அகலமான பலகையின் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சங்கிலியைப் பிடித்துக்கொள்ள இடம்பிடித்து நங்கள் சந்தோஷமாய் ஆடுவோம். இரவு எட்டுமணி ரயில் வண்டி எழுப்பும் ஒலி கேட்டதும், தரையில் பாய்களை விரித்துபோட்டுப் படுத்திடுவோம். எல்லோருக்கும் போதுமான தலையணைகளும் போர்வைகளும் இருக்காது. பாட்டி தன்னுடைய பழைய புடவையை எடுத்து எங்களுக்குப் போர்த்திட, உத்தரத்தில் சுற்றும் மின்விசிறியைப் பார்த்தபடி அதன் ஓசையிலேயே உறங்கிப்போனோம். 

சிறுவயதில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பருவத்தில், சூடு தகிக்கும் ஓட்டு வீட்டில் கொள்ளுப்பாட்டி, தாத்தா, பாட்டி, வந்துபோகும் அக்கம்பக்கத்து உறவுகள் என சொந்தங்கள் நிறைய இருந்ததால் அந்த வீடே எங்கள் உல்லாச விருப்பத்தலமானது. ஆனால் காலவோட்டத்தில் அவர்கள் மறைய, நம் சிறுவயது நினைவுகள் இப்போது வந்து போகும்போது, மனத்தில் ஏக்கமும் வெறுமையும் வருவது உண்மைதான். அத்தகைய ஒரு நினைவூட்டல் தாக்கத்தை இந்த ஓவியம் ஏற்படுத்தியது. 

-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

புலப்பட்ட ரகசியம்!

நல்ல பாம்பு படம் எடுத்துக் கொத்தும் என்பது தெரியும். ஆனால் மனித ஜாதியில் ஒரு பெண்ணானவள் பாம்பின் கெடு பலன்களுடனும் பழிதீர்க்கும் குண அம்சத்துடனும் வாழ்ந்து வருவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட அவளுக்கே தன்னைப் பற்றியோ, நடக்கும் சம்பவங்களின் சூட்சுமமம் பற்றியோ எவ்விபரமும் தெரியவில்லை. 

அவளைக் காதலிக்க நினைக்கும் ஆண் மர்மமாக இறந்திடுவான், அவன் காதலை வெளிப்படுத்தினாலோ அவளுடைய பொருளைக் கையகப்படுத்தினாலோ ஒரு மண்டலத்தில் சாவான், அவளுக்கு நிச்சயமான மாப்பிள்ளை பரலோகம் போவான், அப்படியே மணமானாலும் சித்தபிரம்மைப் பிடித்து ஓடிவிடுவான். தாம்பத்தியம் இல்லாமல் கணவன் என்ற நிலையில் அவளைப் பராமரிப்பவன் பிழைத்தான். பணக்காரி என்றாலும் ஒரு சராசரி பெண்ணாக வாழ முடியவில்லை. அவளுடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் இவ்விதம் அமைந்துவிட்டது.🤔

இது மர்மநாவல் அளவுக்குத் திகிலாக உள்ளதே என நினைக்கத் தோன்றுதா? புனையப்பட்ட கட்டுக்கதையோ என்று நினைக்கிறீர்களா? இல்லை. சொன்னது அத்தனையும் உண்மை! அந்தப் பரிதாபப் பெண் என் வெளிநாட்டு வாசகி. தன் வாழ்க்கையில் நடந்த சோகங்களை ஏமாற்றங்களை அண்மையில் சொல்லி வருத்தப்பட்டார். பூர்வஜென்ம வாசனை விடாத குறையாகத் தொடர்ச்சி நடக்கிறது என்பதை நான் சொல்லாதவரை எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

அவர் உடலில் சர்ப்பத்தின் ஆன்மா பூட்டிக்கிடப்பதைச் சொன்னேன். ராகு- கேது வழியே பாவங்களாய் வரும் மூதாதையர் கைவரிசையும் காரணம். இதற்கு விமோசனம் இல்லை என்பதால் ஆன்மிக வழியில் மன அமைதியுடன் வாழ்க்கையைக் கடத்துங்கள் என்றேன். அறுபதை எட்டும் அவர் பரிகாரம் செய்து இனி ஆகப்போவதும் ஒன்றுமில்லை. ஒரு பெண் குழந்தை தக்க வயதில் ருது ஆவதில் சிக்கல் இருப்பதும், சமைந்த கிழமை ஹோரை நட்சத்திரம்கூட அவளுடைய மணவாழ்வைக் காட்டிக் கொடுக்கும்.

அவருடைய ரகசியத்தை ஆணித்தரமாக நான் சொன்னபோது அவர் அதிர்ந்தார். அவர் வசிக்கும் பகுதியின் பெயரோ/ அந்த இடத்திற்கு அருகிலோ பாம்பைக் குறிக்கும் விதமாய் ஏதேனும் உள்ளதா என்று அப்போது கேட்டேன். அதற்கு அவர் ஆச்சரியத்துடன், 'ஐயா, நான் நிற்கும் இடத்திற்கு எதிரே சாலையைக் கடந்தால் பெரிய புற்று உள்ளது' என்றவர் உடனே அழுதுவிட்டார்!

அவரை அமைதிப்படுத்தினேன். 'நீங்கள் பெரிய படிப்பு படித்துள்ள திறமையான உழைப்பாளி. இனி தனியாளாய் எந்தப் பயமுமின்றி ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் கால்பதித்து முன்னேறுங்கள். உங்கள் அமானுஷ்ய பின்புலம் அறியாமல் தொழிலில் யாரேனும் உங்களைக் கவிழ்க்க வஞ்சம் தீட்டினாலோ, காதலித்து உறவாடிக் கெடுத்தாலோ, ஐயோ பாவம்... அவன் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவன் குடும்பத்திற்கு நலம் பயக்கும்' என்றேன். வாசகி வாய்விட்டுச் சிரித்தார். 'ஐயா.. இனி எனக்குக் குழப்பமில்லை... நான் தெளிவாக உள்ளேன். மிக்க நன்றி' என்று கூறினார். என்னுடைய எல்லா நூல்களையும் அவர் வரவழைத்து வாங்கி வைத்துள்ளார். 

இவருக்கு மணமாகி இருபது ஆண்டுகள் ஆகிறது. இவருடைய வயதான கணவர் பள்ளிக்கல்வியோடு நின்றவர். தற்சமயம் ஒரு நண்பனாக, கர்த்தாவாக, தொழில் ஆலோசகராக மனப்பக்குவத்துடன் இந்த அம்மையாருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கடந்தகால வாழ்க்கையை அறிந்து மணந்தார். ஆனால் இன்னும் தன் மனைவியின் பிறப்பு ரகசியத்தை அறியார்.

வாசகியின் பெயர்? மாணிக்கப்பரல் என்று சூசகமாகப் பொருள் தரும். அவர் கருட பஞ்சமி, நாக சதுர்த்தி, பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி ஆகிய தினங்களில் தன்னை மறந்து பக்திப் பரவசத்தில் இருப்பார். சிவசித்தம்!

-எஸ்.சந்திரசேகர்



மிரட்டும் சிகை அலங்காரம்!

அக்காலத்தில், சமைந்த பெண்ணுக்கு 10-15 வயதிலேயே திருமணம் செய்து வைப்பது வழக்கத்தில் இருந்தது. அவள் சிறுபெண்ணாகத் தெரிவதால், வாலைக்குமரியாகவே பாவித்து அவளுக்குத் தலை அலங்காரம் செய்வார்கள். நெற்றிச்சுட்டி, ராக்கொடி, சூரிய சந்திரர், ஜடைவேணி, குஞ்சம் என சகலமும் தலைமுடியில் வாகாய்த் தைத்து விடுவார்கள். 

இக்காலத்தில், மணப்பெண்ணுக்கு 25 - 35 வயதில்தான் திருமணம் நடக்கிறது. மேற்படி அலங்காரம் சினிமா பாணியில் மாறுபட்ட விதமாய்ப் பியூட்டி பார்லர் பெண் செய்து விடுகிறாள். அலங்கார ஜோடனைகள் சம்பிரதாயப்படிதான் செய்வாள் என சொல்வதற்கில்லை. அவள் வாலையை அறிவாளா, கோதையை அறிவாளா? 

இப்படத்தில் மஹா'கனம்' பொருந்திய மணப்பெண்ணுக்குச் செய்த அலங்காரம் விசித்திரமாய் உள்ளது. பூஜடைப் பின்னலில் உள்ள பெரிய நாகம் எதேச்சையாகச் சொருகி இருப்பதுபோல் தெரிந்தாலும், அது அவளுடைய நாகதோஷத்தையோ / நாக கன்னிகையின் மறுபிறவியாகவோ வெளிக்காட்ட வாய்ப்பு உள்ளது. எதுவும் காரணமின்றி அமைவதில்லை. நம் அண்மைப் பதிவில்தான் இப்படிப்பட்ட என் வாசகியின் சரிதத்தைப் பார்த்தோம். 

-எஸ்.சந்திரசேகர்



பாஸ்கர பூஜை!🌞

நம் தென்னகத்தில் உள்ள பழமையான சில கோயில்களின் கருவறையில், லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, ஆண்டுதோறும் பங்குனி, 23 முதல் 29 வரை, காலை, 6:15 மணி முதல், 6:45 மணி வரை நடக்கிறது. வெவ்வேறு பாகையில் அமைந்துள்ள தலங்களில் சூரிய உதயாதி நேரத்தைப் பொறுத்து இது மாறும். 

அக்கால ஸ்தபதிகள் கட்டியது மிகுந்த ஆச்சரியத்தைத் தரும். இன்னும் சில கோயில்களில் வெளிச்சுற்றிலுள்ள 12 தூண்களில் மாதம்-ராசி வாரியாக ஒளி விழும். ஆயாதி கணிதம், ஸ்தபத்ய வாஸ்து, திரிகோணவியல், வானசாஸ்திரம், ஸ்படிக-தர்பன் பௌதிகம், சௌரதரிசன சாஸ்திரம், போன்றவற்றைத் தங்கள் சிற்ப கலையில் வெளிக்காட்டிய விதம் பிரமிப்பைத் தரும். சித்திரை முதல் நாள் மேஷ ராசியில் துல்லியமாய்க் கிழக்கில் பானுவின் தேர் வரும். 

'சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு' (விஜயா பதிப்பகம், கோவை) என்ற என் நூலில் இதைப்பற்றி உள்ளது.

இவ்வண்ணம் வடிவமைத்த பண்டைய காலத்து மயன் வம்சத்து விஸ்வகர்ம ஸ்தபதிகளின் திறமைக்குத் தலை வணங்குவோம். 🙏🙏

-எஸ்.சந்திரசேகர்



நல்வழியைத் தேடி!

போகருடைய நூலிலுள்ள பாடலைத் தொடர்ச்சியாய்ப் படித்தாலும் தனித்து எடுத்துப் படித்தாலும் அர்த்தமுள்ள போதனைகள் உண்டு. அதில் வேதசாரம், குறள்நெறி, ஜென் தத்துவம், நல்வழி, என எல்லாமே வந்துவிட்டுப் போகும். இவை எல்லாமே ஒன்றுதான் என்றுணர் என்று சொன்ன ஔவையின் வாக்கியம் உண்மைதான் என விளங்கும்.

இவர்கள் இத்தனைச் சொல்லியும் ஏன் இவையெல்லாம் சராசரி மனிதனின் புத்திக்கு எட்டாமல் போகிறது? அவரவர்க்கு என தனியான காழ்ப்புக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப தத்தம் ஆசான், குருமார், தலைவர், எவ்விதம் போதித்தாரோ அவ்விதம் பின்பற்றும் கூட்டத்தினரே அதிகம். எண்ணற்ற நூல்கள் இருந்தும் பயனற்றுப்போவதும் இதனால்தான். இல்லாவிட்டால் ஔவையின் சொல்லை மதியாமல் போவாரோ? 

இவர்கள் சித்தர்கள் என்பதை மறந்துவிட்டு வெறும் நூலாசிரியர்கள் என்ற மட்டில் பார்த்தால், சராசரி வாசகனுக்கு அச்சங்கதிகள் புரியாமல் போகுமோ? ஆனாலும் புரிவதில்லை! அதில் பிழை, பொய், அவதூறு உள்ளனவா என்று பூதக்கண்ணாடி வைத்து ஆராயும் திறன் மட்டும் உள்ளது. அது இருந்தால் மெய்ஞானம் வரவேண்டுமே, ஏன் வரவில்லை?

குரு/ஆசான் என்பவர் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த பண்டிதனோ, யோகம் முடித்து ஞானம் கைவரபெற்றவராகவோ இருக்கவேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் குருவுக்கான எந்த இலக்கணத் தகுதி லட்சணங்களும் தேவையில்லை. நிகழ்வாழ்வில் நாம்தான் ஒருவரைக் குரு என்று அழைக்கிறோம். தான் தேர்ந்தெடுத்த குரு தன்னை நல்வழியில்தான் அழைத்துச் செல்வாரா என்பதைக் காலமும் அனுபவமும்தான் சொல்லும்.

நீரில் அணைந்துபோகும் சுடர்விளக்கைக் கையில் ஏந்திக்கொண்டு யாரேனும் பாழும் கிணற்றுக்குள் வழிதேடி இறங்குவார்களா? சகல வித்தைகளைக் கற்றவன் தர்மநெறி நல்வழிகள் அறிந்தும் வாழ்க்கையில் சீர்கெட்டு இருள் பாதைக்குள் போக விரும்புவானா? தேவையான மார்க்கத்தைக் காணாத பலகோடி மாண்பர்கள் இந்தக் குவலையத்தில் உள்ளனர் என்கிறது இப்பாடல். யோகமும் இறுதியில் ஞானமும் அமைந்தாலே பூரணத்துவம். நிற்க. 

போகர் திருப்பாற்கடலைத் தரிசிக்கும் படலத்தில் இப்பாடல் உள்ளது. இதன் உள்ளார்ந்த பொருளை உணர்ந்தால் அதிலுள்ள அனுபவ மெய்யறிவு புலப்படும்.

-எஸ்.சந்திரசேகர்




வெயிட்டான' காது!

எங்கள் ஊரில் மூதாட்டிகள் இதுபோன்ற காதணிகள் அணிந்தனர். வீடுதோறும் வந்து நெய் காய்ச்சித் தந்த சில பிரிவினர் இதை அணிந்திருந்ததை என் சிறுவயதில் பார்த்துள்ளேன். சாமிக்கு நேர்ந்துகொண்டு செய்த இப்பழக்கம் இப்போது மிக அரிது.

கொப்பு அள்ளி முடிந்த நரைத்த தலை, கையில் பச்சை குத்தி, காதுகளில் பெரிய அளவு பாம்படம் தண்டட்டி தொங்கவிட்டு, எஞ்சிய சிறிய காதோலை ஒன்னப்பூ வகையறாவை மாட்ட இடம் போதாத நிலையில் இருந்த காலமும் உண்டு. ஆப்பிரிக்கப் பழங்குடி பெண்களைப் போல் இவர்களும் காது வளர்த்தனர். வெங்கலம், தங்கம் உள்ளே அரக்கு ஊற்றி இதுபோன்ற வடிவங்களை மாட்டிக் கொண்டனர். 

நாம் குழந்தையாக இருந்தபோது காது குத்தி அதில் தங்கக் கம்பி/ தொங்கட்டான் பூட்டி, கையில் வெள்ளிக்காப்பு/ வேம்புக்காப்புப் போட்டு, இடுப்பில் நாய் காசும், அத்துடன் தாயத்தில் காய்ந்த தொப்புள் கொடியும் அடைத்து அரைஞாணில் அணிவித்தனர். காது சோனையில் துளை வடிப்பது எளிது என்றாலும் அது பெரிய விஷயம்தான்! ஆனால் இந்தப் பாட்டிகளின் 'பேப்பர் வெய்ட்' காதணிகளோ நமக்குப் பிரம்மிப்பைத் தரும்.

-எஸ்.சந்திரசேகர்



"கர்மாவை வாங்கிக்கொள்ளும் தியாகி!"

போகப்பெண், வேசி, தாசி, விபச்சாரி, பொதுமகள் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் ஒரு விலைமாது, உண்மையில் போகத்தைத் தருவாளா, ஞானத்தைத் தருவாளா, ரோகத்தைத் தருவாளா, என்பது அவளுக்கே தெரியாது. ஒரு பெண் இங்ஙனம் ஆவதற்கு ஆண்களின் காம இச்சையே காரணம். அதற்கு அவனுடைய கிரக நிலைகளும் அலைபாயும் மனமும்தான் காரணம். அதைப்போல் ஒருவள் வேசியாவதற்கும் அவள் ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கவேண்டும். 

பொதுமகளிடம் ஒருவன் செல்கிறான் என்றால் அவன் உடல் ரீதியாகக் கூடி அவளுடன் ஈருயிர் ஓருடலாக ஐக்கியப் படுகிறான். எப்போது இந்தத் தீட்டு நிகழுகிறதோ, அப்போதே அவளுடைய பிராரப்த கர்மவினைகள் இவனுக்குச் சரிபாதியாகப் பகிரப்பட்டு இவனை அடைகிறது. Better half என்பது மேலோட்டமாகப் பொருள் தருவதாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த மெய்ப்பொருள் இதுவே. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி இருந்தாலும், அலைபாயும் மனங்களுக்கு அது விதியாகாது என்பது சிலப்பதிகாரம் முதலே நாம் அறிவோம். (இதைப் படித்ததும் ‘தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை’ என்று கம்பனைப் பற்றிய ஒரு கதை உண்டே என்று நினைக்கக் கூடாது. அது எதிராளிகளின் சூழ்ச்சியால் பரப்பட்ட அவதூறு. அதற்கே அவர் படாதபாடுபட்டார். காலசர்ப்ப தோஷம் பீடித்த காலத்தில் அவர் இயற்றிய இராமகாவியத்தை அரங்கேற்றப் பலகாலம் கஷ்டப்பட்டார்.) 

மாதவியிடம் போகாதவரை கோவலன் உருப்படியாகவே இல்லறம் நடத்தினான். ஆனால் அங்கே போகத் தொடங்கியதும் இவனுக்குச் சோதனைகளும் ஏழரையும் பிடரியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தது. மாதவி ஏன் இவனுடைய வாழ்க்கையில் வந்தாள் என்பதற்கு இவர்களுடைய முன்ஜென்ம பந்தமே காரணம். கலிங்க தேசத்தில் கண்ணகி-கோவலன்-மாதவி ஆகியோராது முற்பிறப்பு ரகசியங்களை அறிந்தோர் பாண்டிய நாட்டில் நடந்ததை ஆச்சரியமாய்ப் பார்க்கமாட்டார்கள்.

ஆக, அனுதினமும் பாவக்கடலில் விழுந்து ஜீவனம் நடத்தும் ஒருவளுடைய பிராரப்த கர்மாவை எப்பாடுபட்டாவது பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள விழைபவன் உண்மையில் தியாகியே! நாய், பல பாத்திரங்களில் வாய்வைத்துக் கொஞ்சம் கொஞ்சம் குடிப்பதுபோல் இவனும் முகம் தெரியாத வேசிகளின் தீய கர்மாவை வாங்கிக்கொள்கிறான். விட்டகுறையின்றி இவனால் அவள் புனிதமாகி விடப்போவதும் இல்லை! இன்னும் சொல்லப்போனால் இது உலகத்திலேயே பழமையான தொழில் என்று தொல்காப்பியமே சொல்கிறது.

அரண்மனை அந்தப்புரத்தில் எண்ணற்ற பெண்களுக்கு எந்த வேலையும் தராமல் சோறுபோட்டு, தங்க இடமும் தந்து, அவர்களைத் தண்டமாய்ப் பராமரித்துப் போஷித்த வரலாற்றை நினைத்தால் ஐயோ பாவம் என்று தோன்றும். பட்டத்தரசி நீங்கலாக அந்தக் கூட்டத்தில் எவள் ஒருத்தி மன்னனுக்குப் போகத்தை, ஞானத்தை, வெற்றியை, புண்ணியத்தைத் தேடித்தருவாள் என்பது அவனுக்கே தெரியாது. அதுபோல் அவளுடைய எதிர்மறை மற்றும் கர்ம-ரோக-ருண பண்புகள் இவனுக்கு வந்து அதனால் இவனும் இவனுடைய சாம்ராஜியமும் சுவடின்றிப் போகுமா என்பதும் தெரியாது

‘வேசியிடம் சென்ற தறுதலைக்கு செருப்படி’ என்ற சித்த மருத்துவப் பழமொழி சொலவடையாகப் பேசப்படுவதுண்டு. செருப்படி என்பது மூலிகையைக் குறிக்கும். இந்த மாயை இச்சையில் விழுந்து அதுவே மோட்சம் தரும் சொர்க்கம் என நம்பிக்கொண்டு மாண்டவர்கள் அதிகம் என்கிறார் போகர். கலியுகம் 5000-ற்குப்பிறகு ஆண்களின் எண்ணிக்கையும், பெண்களின் நிலையும், ஆணைப் பெற்ற தாய்க்கு நேரும் கதியும் பற்றி கோரக்கர் அன்றே சந்திரரேகையில் உரைத்தார். கலியுகத்தில் எல்லோருமே அருணகிரியாராக உயர் நிலைக்கு வந்திட முடியுமா? அதுவும் வினைப்பயனே!

-எஸ்.சந்திரசேகர்