About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 30 ஜூன், 2020

ஆழ் மனதில்!

வெளியூரிலிருந்து வாசகர் ஒருவர் அழைத்தார். இதற்கு முன்னமே மின்னஞ்சல் மூலம் தொடர்பில் வந்தவர். சற்றே மன சஞ்சலத்துடன் பேசினார். “போன மாதம் நான் மனக்கஷ்டத்தில் இருந்தேன். அப்போ உங்களுடைய கட்டுரையைப் படிச்சுட்டு வெச்சேன். அதன் பிறகு  அந்நேரம் பார்த்து நீங்க போன் பண்ணிப் பேசினது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி வந்துச்சு. நான் மனவருத்தப்படுவது உங்களுக்குத் தெரியுது போலனு புரிஞ்சிகிட்டேன்.  நேத்தைக்கு மேலுக்கு முடியாம இருந்தேன். உங்க பதிவைப் படிச்சு முடிச்சேன். உங்க நெனப்பாவே இருந்தேன். நீங்க இன்னும் கால் செய்யலையேனு ஏக்கத்துல நான் இப்ப செஞ்சேன்.

காலையில என் கனவுல எங்க வீட்டுக்கு வந்தீங்க. என் உடல்நலம் விசாரிச்சு எங்களோடு பேசிட்டுப் போகும்போது உங்களுக்கு ஏதாவது பரிசு தரணும்னு பீரோவிலேர்ந்து சில சால்வைகளை எடுத்துக்காட்டி இதுல எது புடிச்சிருக்கோ எடுத்துக்கங்கனு சொன்னேன். நீங்களும் சிரிச்சுகிட்டு பச்சை நிறத்தை எடுத்துகிட்டு கனிவா பாத்தீங்க. எனக்கு ஒரே சந்தோசம்” என்றார். 

இதென்ன புதுக்கதையா இருக்கு? ஓஹோ.. இப்படி வேற ஆளாளுக்கு நம்மளைப்பத்தி பில்டப் தந்து வெச்சிருக்காங்களா என்று சிரித்துக் கொண்டேன். அவரை நான் பார்த்ததில்லை. முன்னொரு சமயம் அவர் என்னுடைய மற்ற புத்தகங்களின் விபரம் கேட்டிருந்தார். அப்போது மின்னஞ்சல் அனுப்பியபின் பேசியதோடு சரி. அவர் மனம் சங்கடப்பட்ட அந்நேரம் பார்த்து நான் செய்து விட்டேன் போலிருக்கிறது. காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாய்ப் போச்சு. 

அவருக்கு எழுபது வயது இருக்கும். சோடா கம்பனி வைத்திருந்தாராம். மகன் வீட்டில் வசிக்கிறார். என் கட்டுரைகளையும் நூல்களையும் ஆழ்ந்துப் படித்து அதை நான் முன்னின்று அவருடன் உரையாடுவதாகவே பாவித்துக் கொண்டுள்ளார். ஆர்வம், ரசிப்பு, பக்தி, நம்பிக்கை என்ற நிலைகளைத் தாண்டி ஆழ்மனதில் மூட எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளார் என்பதை நினைத்தால் என்ன சொல்வது? ஆண்டவா!

இது போதாதென்று அவர் சிந்தனையிலும் கனவிலும் என்னை உலாவச்செய்து இறைவன் விளையாடுகிறான். பாதகமில்லாமல் எல்லாம் நன்மையில் முடிந்தால் சரி! 

ஞாயிறு, 28 ஜூன், 2020

படையும் நடுங்கும்!

நாகங்கள் நமக்குக் கட்டுப்படுமா? கட்டுப்படும்! அதற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன. ஒரு சமயம் நானும் நண்பரும் பொன்னேரியை அடுத்துள்ள தேவதானம் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். வரும்போது அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று தரிசித்தோம். தரிசனம் முடிந்து புறப்படும்போது மாலை 6 ஆகிவிட்டிருந்தது. பின் கார்த்திகை மாதம் என்பதால் சீக்கிரமே இருட்டிவிட்டது.

பொன்னேரி கூட்டு ரோடு சந்திப்பைத் தாண்டியதும் நண்பருடைய காரில் மின்னேற்றியை இயக்கும் என்ஜின் பெல்ட் அறுந்துபோனது. பத்தடிதூரம் தள்ளிக்கொண்டு போய் அருகே சாலையோரம் இருந்த திறந்தவெளி மெக்கானிக் கடையில் வந்து நிறுத்தினோம். சுற்றியும் வெறும் புதர் மண்டிக்கிடந்தது. பழுது நீங்கும்வரை அங்கே ஓடாத சில வண்டிகளின் அருகாமையில் நின்றிருந்தேன். சுமார் முக்கால் மணிநேரம் ஆனது அப்போது அப்பணியாளரிடம் ‘திறந்த வெளியில இது பத்திரமா?’ என்று கேட்டேன்.
அவர் ‘சார், இங்கே நாகப்பாம்புங்க சகட்டு மேனிக்கு இருக்கு, தினம் ரெண்டு அடிச்சுப் போடுவோம். இல்லாங்காட்டி விரட்டி விடுவோம். எப்படியாச்சும் இங்கே வந்திரும். ஆனால் இம்மா நேரமா ஒண்ணுகூட இன்னாண்ட வந்து நடமாடவே இல்ல. ஆச்சரியமா இருக்கு சார். மண்புழு சைசுக்கு குட்டிங்களும் இருக்கும்.. அதையும் காணோம்’ என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நான் சிரித்துக் கொண்டேன். ‘அதையெல்லாம் அடிக்காதீங்க ஜென்மத்துக்கும் பாவம் போகாது.. வேம்பு, சிறியாநங்கை, மஞ்சள், சேர்த்து மிக்ஸில அரைச்சு அதுல கொஞ்சம் பச்சைக் கற்பூரம் போட்டு தண்ணீர்ல கரைச்சு தெளியுங்க. பக்கத்துல வரவே வராது.. தினம் காலையில ஒருவாட்டி சோம்பல் இல்லாம செய்யுங்க’ என்றேன். ‘அப்படியா சார்? இதுவரை எனக்குத் தெரியலையே’ என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த என் நண்பர், ‘நல்லவேளை, இருட்டுல நாம நிக்கிற இடத்துல இதுவரைக்கும் எதுவும் கால்மேலே ஏறலை’ என்றார். ‘நீங்க வேற, நம்ம எதிரி இங்கே எங்கேயோ இருக்கான் போலிருக்குனு அதுங்களுக்கு உணர்வு வந்திடுச்சாக்கும்..’ என்று சொல்லிச் சிரித்தேன். நான் சொன்னது அவருக்கு விளங்கவில்லை, தமாஷ் செய்தேன் என்று நினைத்தார்.
ஒருவருக்குக் கருட ரேகை அமைப்பின் சாயல் இருந்தாலோ அல்லது அவரது ஆரா ஒளிவட்டத்தில் நாகங்களை கட்டுப்படுத்தும் அதிர்வுகள் இயற்கையாக இருந்தாலோ அதை அவை சட்டென நுகர்ந்து உணர்ந்திடும். அப்படித்தான் அவை அன்று நாங்கள் இருந்த புதர் வெளியில் உணர்ந்திருக்கும் என்று புரிந்து கொண்டேன்.
நான் சிறுவனாக இருக்கும்போது, எங்கள் வீட்டுக் கொல்லைப்புற கிணற்றடியில் பல்தேய்த்துத் துப்புவேன். அங்கே முல்லைப் பந்தல் பக்கத்தில் மணத்தக்காளி கத்தரி செடிகள் இருக்கும். அப்படி ஒரு சமயம் என் பாதங்களுக்கு அருகே, துப்பிய வெள்ளையை அப்பிக்கொண்டு விரியன் ஊர்ந்து போனதைப் பார்த்தேன். அது போனபிறகு படபடப்பும் அச்சமும் எகிறியது!
வாழை இலை பறிக்கும்போது என் தலைக்குப் பக்கத்தில் ஓசையின்றி ஒரு பச்சைப்பாம்பு என்னைப் பார்த்தபடி தொங்கிக் கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. நல்ல வேளையாக அது என் கருவிழிகளைக் குறிவைக்க மறந்தது. இன்னொரு சமயம் கனமழை வெள்ளம் வந்தபோது ஜன்னல் பிடித்துக்கொண்டு மூட முடியாமல் இருக்கவே, செருப்பு அணிந்து வீட்டின் வெளியேபோய் ஜன்னலைத் தட்டி மூடும்போது சட்டென்று இரண்டு அங்குல உயரம் வழுக்கிக்கியபடி இறங்கினேன். சுருண்டிருந்த பாம்பின்மீது காளிங்கனைப்போல் நின்று வேலைப் பார்த்தேன் போலுள்ளது. ஐயோ சாமி! வெலவெலத்து மெள்ள கதவை தாளிடும்போது நிலைப்படிக்குக்கீழே கீரி உலாவிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டேன். வியர்த்துக் கொட்டியது! சர்ப்பங்கள் என்னை ஒன்றும் செய்யாவிட்டாலும் அன்றுமுதல் அதைக் கண்டாலே கிலிதான் !
சித்தர் பாடல்களில் நாகங்களை வசியப்படுத்திக் கட்ட ‘நறீ சிம் மறீ சிம்’ என்ற மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை குருவை நினைத்து உருவேற்றினால் சித்தியாகும் என்று உள்ளது. எதிரில் படமெடுத்துச் சீரும் நாகத்தைப் பார்த்து ‘சிஊ’ என்று ஆணையிட அது கட்டுப்பட்டு அப்பால் போய்விடுமாம். சிலர் கருடக்கிழங்கு மற்றும் சர்ப்பவிரட்டி மூலி வேரை மந்திரித்துத் தாயத்தில் வைத்துக் கட்டிக்கொள்வதும் உண்டு.

ஆகர்ஷணம்

அஷ்டகர்மம் பற்றி நம்முடைய பழைய பதிவில் பார்த்துள்ளோம். வசியம், மோகனம், உச்சாடனம், தம்பனம், ஆகர்ஷணம், வித்வேஷணம், பேதனம், மாரணம் என்பதே அஷ்ட கர்மங்கள். அதில் ஒன்றான ஆகர்ஷணம் பற்றியதுதான் இப்பதிவு. அதாவது ஒன்றையோ/ஒருவரையோ சக்தி கொண்டு தன்வசம் இழுக்கும் மாந்திரீக முறை. 

மாந்திரீகர்களை வைத்து  ஒரு  குடும்பத்திற்கே கெடுதல் வைப்பைச் செய்வது இக்காலத்தில் சர்வ சாதாரணம். அஷ்டகர்மம் என்பதே பொய் என்றும் அதை இக்காலத்திலுமா நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற ரீதியில் நம்பிக்கை இல்லாத ஞான சூரியன்கள் பரப்புரை செய்வதுண்டு. அவரவர் தனிப்பட்ட கருத்து என்று விட்டுவிட வேண்டும். அவை எல்லாமே பொய் என்றால் மூத்த சித்தர்கள் மாய்ந்து மாய்ந்து தங்களுடைய நூல்களில் யந்திரம், மந்திரம், பூசை விதிகளை உரைக்கவேண்டிய அவசியமில்லையே!

பேராசை பொறாமை ஆத்திரம் கோபம் ஆகியவற்றின் ஆளுமையால் ஒருவர் நாடுவதே கருதொழில் செய்வினை. செய்யச்சொல்லி வருபவனுடைய நோக்கத்தில் தர்மம்/அதர்மம் பற்றி எதையும் தீர விசாரிக்காமல் பணம் வாங்கிக்கொண்டு செய்வினை செய்வது நல்லதா? இல்லை. அப்படியானால் சித்தர்கள் உரைத்த அவற்றை எல்லாம் யாரை வைத்துச் செய்வது? அது மட்டும் தர்மம் ஆகுமா? சித்தர்கள் எல்லோருமே தர்மநெறி வழுவாமல் இருக்கும் நல்லோர்களின் தற்காப்புக்காகத்தான் உபாயம் தந்துள்ளனர். ஆனால் இக்கலியுகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வைக்கலாம் என்ற நெறியற்ற நிலை உள்ளதுதான் கொடுமை. அதற்கேற்ப விதியாளி ஜாதகத்தில் தசாபுக்தியும் அமைந்திடும்.

அது 2007. என்னுடைய பழைய நண்பர் ஒருவரின் குடும்பம் தன் நெருங்கிய உறவினரால் சொல்லொணாத் தொல்லைகளை அனுபவித்து வந்தது. அவர் ஒருசமயம் ஒரு சித்த மரபு மாந்திரீகரிடம் என்னையும் துணைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். அவருடன் போனேன். அந்தப் பெரியவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இதுவரை அவர் இதுபோன்ற அஷ்டகர்மத்தைப் பிரயோகம் செய்ததில்லை என்பதைப் பேசும்போது சொன்னார். ‘அவங்க குடும்பம் ரொம்ப காலமாவே கஷ்டப்படுறாப்ல... அவருக்கு என்னால நல்லது நடந்தா சரினு இதுக்கு சம்மதிச்சேன்’ என்றார். நாங்கள் அமரவுள்ள அறையின் அஷ்ட திக்குகளில் வைப்பதற்குச் சிறிய காகிதங்களில் 5x5 கட்டங்களில் காப்புச் சக்கரம் வரைந்து வைத்திருந்தார். அருகே பெரிய பாத்திரத்தில் தண்ணீர், எலுமிச்சைப்பழம், மல்லிகைப்பூ, ஊதுபத்தி என எல்லாமே இருந்தன.

‘தம்பி, என் வாழ்க்கையில இப்பதான் முதல்முறையா இதைப் பிரயோகம் செய்யப்போறேன். வைப்பு எடுக்க எவ்வளு நேரம் ஆகும்னு தெரியலை. அதனால நீங்களும் கண்மூடி தியானத்துல இருந்து நான் சொல்லும் பொருளை இழுக்க என்னோடு சேர்ந்து ஒத்துழைக்கணும்’ என்றார். ‘ஆகட்டுமுங்க... நீங்க சொல்லும் வஸ்து எப்படி இருக்கும், எவ்வளவு கனம், அதன் தன்மை என்ன, அது இப்போ எங்கே இருக்கு?’ என்று கேட்டேன்.

“தம்பி.. அது விருதாச்சலத்துல ஊர் ஒதுக்குப்புறத்துல பாம்பு புத்துக்குள்ள இருக்கு. அவங்க செய்வினை செய்து அதுக்குள்ள போட்ட வெச்சதை இங்கே இழுக்கணும்” என்று சொன்னார். அறையின் மூலைகளில் ஐம்பத்தொன்று அட்சரங்கள் கொண்ட தற்காப்புச் சக்கரங்களை வைத்து மஞ்சள் குங்குமம் மலர்கள் சாற்றினார். அதன்பின் விளக்கேற்றிவிட்டுப் பிள்ளையாரைக் கும்பிட்டுக்கொண்டு, சிவனை/பழனி முருகனை வேண்டிக்கொண்டு இறங்கினார். நானும் பிராணாயமம் செய்துகொண்டு ஆயத்தமானேன். ஆகர்ஷணத்தால் இழுக்கக் கூடிய பொருள் நம் தலையில் வந்து விழுந்து விடாமல் இருக்க மந்திரக்கட்டு வளையங்கள் போட்டு உருவேற்றினார்.

அங்கே பூசையில் முட்டைகள், மூலிகை வேர் மற்றும் வேறு சில பொருட்கள் இருந்தன. ‘அடேங்கப்பா.. விட்டலாச்சாரியா படத்துல வர்றமாதிரி ஏதேதோ சாமான்கள் இருக்கே’ என அன்று அதைப் பார்த்ததும் மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் சித்தர் பாடல்களில் உரைக்கப்பட்ட விதமாகவே அவை எல்லாம் இருந்ததை சித்தநூல்களில் ஈடுபாடு வந்தபிறகு உணர்ந்தேன்.    

(சித்த நூல்களை நான் படிக்கத் தொடங்கியதே 2013 -இல் தான்.)

அவர் சொன்னபடி நானும் முழு வீச்சில் இறங்கினேன். இப்படியுமா ஒரு செய்வினையைப் பண்ணிப் போடுவார்கள் என்று என்னுள் எழுந்த கோபம் உக்கிரமாகிக் கொழுந்து விட்டு எரிந்தது. பாம்புப் புற்றையே ஆழத்திலிருந்து பெயர்த்திழுக்க என் சக்தியைக் கூட்டினேன். சரியாகப் பத்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது இடையூறாக ஒரு ஓசை...!

எங்களுக்கு நடுவே பொதுவான இடத்தில் ஏதோ பொத்தென்று விழுந்த சப்தம் கேட்டது. நண்பர் அதைப் பார்த்துவிட்டு ‘எதோ சாமான் வந்து விழுந்திடுச்சு’ என்றார். தியானத்திலிருந்து விடுபட்டோம். வெல்லக்கட்டி அளவுக்குப் புற்றுக் களிமண் உருண்டை உடைந்து சிதறி இருந்தது. அதைத் தொடாமல் அதைச்சுற்றி எலுமிச்சைப் பழத்தை வட்டமாகப் பிழிந்த பின் சில முத்திரைகள் காட்டி மந்திரங்கள் ஜெபித்துவிட்டு உதிரி மல்லிபூவை அதன்மேல் போட்டுவிட்டுத் தொட்டார்.

‘அந்தூர்லே நேத்து நல்ல மழை பெய்திருக்கோ...  களிமண் உருண்டை ஒரே ஈரமா இருக்கு’ என்றார். வஸ்துவை கையால் எடுத்து உடனே பெரிய பாத்திரத்திலுள்ள நீரில் போட்டுக் கரைத்தார். உருமாறிய சில பொருட்களை அதலிருந்து துழாவி எடுத்தார்.  தன் வீட்டில் சில வருடங்களுக்குமுன் காணாமல் போன சிறு பொருட்களை நண்பர் அடையாளம் காட்டினார். ‘ஓ.. இதுவா... ரொம்ப பழசாச்சே.. தொலைஞ்சு போச்சுனு இல்ல நினைச்சோம்!’ என்று வாய் பிளந்தார்.  அதன் பிறகு அவர் எங்களுக்குக் கழிப்பு நடத்தினார். ‘தம்பி.. இவ்வளவு சீக்கிரம் வந்திரும்னு நான் எதிர்பாக்கல... உங்கள்ள யாரோ அதிகமா சக்தி பிரயோகம் பண்ணியிருக்கீங்க. சந்தோசம் பா’ என்றார்.

அன்றுதான் முதல்முறையாக அஷ்டகர்ம பிரயோகத்தை நேரில் பார்த்தேன். வியந்து போனேன்! சில நாட்களிலேயே நண்பரின் உடல்நலம் முன்னேறி அவர் குடும்பத்தில் நிம்மதியும் நிலவத் தொடங்கிற்று.