About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 11 ஜூன், 2022

ஆவணம் பேசுகிறது!

"கொளநல்லி வழியாக இன்று கொடுமுடி வந்தேன். காவிரிக்கரையில் அமைந்த ஸ்ரீ மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் பாழடைந்து உள்ளது. அதைப் புதுப்பிக்கும் பொருட்டு உள்ளூர் செட்டி வியாபாரிகள் நிதி திரட்டுகிறார்கள். இன்று சிவனுக்கான விசேஷ நாளாம், மக்கள் கூட்டம் அலைமோதியது. சமயப்பணிக்கென இவ்வூரில் பதினொரு பிராமண குடும்பங்கள் உள்ளன. இத்தலம் புராதன வரலாறு உடையது என்பதை அறிந்தேன்" என்று ஆங்கிலேய சர்வேயர் புக்கானன் செப்டம்பர் 5, 1892 தேதியிட்ட தன்னுடைய பயணக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

எங்கள் ஊரின் இக்கோயிலில் அன்று போதுமான அளவில் பணியாளர்கள் வேலை செய்துள்ளனர் என்ற விபரம் அண்மையில் பார்த்த ஒரு பழைய ஆவணத்தில் இருந்தது.

ஸ்தானீகம், பரீச்சாரகம், சுயம்பாகம், அர்ச்சகம், வேதபாராயணம், பஞ்சாங்கம், யக்ஞோபவம், மணியம், சங்கீதம், மெய்க்காவல், மாலைகட்டி, நாதசுரம் முகவீணை, ஒத்துவூதல், தவுல், டவண்டை, கைத்தாளம், திருச்சின்னம், மத்தளம், நட்டுவம், தித்தி, தாசி, மாராயம், திருவலகு.

சுமார் எண்பது ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஊர் சிவாலயத்தில் இருந்துள்ள பணி இடங்களின் பெயர்கள்தான் இவை. 1943 ஜூன் மாதம் கோயில் ஆவண ஊதியப் பட்டியலில் ஏழு தாசிகள் பணியில் இருந்துள்ளனர். அன்று மாத ஊதியமாக தாசிகள் ரூ 4 அணா 8, இசைக் கலைஞர்கள் அதிகபட்சமாய் ரூ 8 அணா 4 வரை பெற்றனர்.

இன்று தாசிகள் இல்லை. ஆனால் மாராய திருவலகு, கூட்டி, எள்ளுக்கிழிகட்டு தீபம் விற்பனை, ஆகிய பணிகளுக்கு Scale of pay range 10000 -31500 plus allowances as per TNHRCE rules என்று உள்ளது. சுயம்பாகம், சைவ/வைணவ முறையில் சமையல்/பிரசாதம் தயாரிக்க மடைப்பள்ளி உதவியாளர் (மடையர்) ஊதிய நிலை 7100-13200 மற்றும் இதர படிகள் என்ற அளவில் உள்ளது.

சம்பளப் பட்டியலில் அன்று இடம்பெற்ற தாசிகளான அங்கமுத்து, சவுந்திரம்,  வெங்கலெட்சுமி, ஆகியோர் சம்பள ரெஜிஸ்தரில் தங்கள் கையொப்பத்தை இட்டுள்ளனர். இவர்கள் குறைந்தபட்ச கல்வி அறிவைப் பெற்றிருந்தனர் என்பது ஆச்சரியத்தைத் தந்தது.

சிவன் கோயிலில் உழவாரப்பணி செய்ய இன்று நல்ல ஊதியம் கிடைக்கிறது. நாமும் சிவனே என அப்பணிக்குப் போய்விடலாம். நம் ஜாதகத்தில் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அதற்கும் சிவசித்தம் அருள் வேண்டுமே! 😀

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 2 ஜூன், 2022

வஞ்சபக்தியின் விளைவு!

அண்மைப் பதிவில் ஸ்ரீஅரவிந்தரின் கட்டுரையைப் படித்துவிட்டு ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார். “சார், நான் சிவனை வணங்குவேன், தமிழை விரும்புவேன், திருமுறைகள் பிடிக்கும் வேதங்களையும் ஓதுவோரையும் பிடிக்காது, பீஜ மந்திரங்களில் உடன்பாடில்லை, ஆரியக் கலப்புள்ளதை எதிர்க்கிறேன். மிகக் கடுமையாய் விமர்சிப்பேன். ஆனால் சிவன்மீது அலாதி பக்தி உண்டு. எனக்கும் யோகம் சித்தம் ஆகியவற்றைப் பெறவேண்டும் என்ற ஆசை உள்ளது. நிறைவேறுமா?” என்று அந்த மென்பொருள் எஞ்சினியர் கேட்டிருந்தார்.

“சிவனை வணங்குவது நல்ல விஷயம். சக்தி அம்சமாம் தமிழை நேசிப்பதும் நன்று. திருமுறைப் பதிகங்களைப் பாராயணம் செய்வதும் நல்ல விஷயம். வேதங்கள் யுகாந்திரங்களாய் உள்ளன. ஆரியன்/ வேதியன்/ வேதபுரீசனாம் சிவன்தான் அதைப் படைத்தான். ஓங்காரத்துடன் பீஜங்கள் சேர்வது சக்தியூட்டும் அலைகள். உருவேற்றப்படும் மந்திரங்களில் அது கோர்வையாக இடம்பெறும். 

நான்மறை வேதங்கள் சுயம்புவாய் என்றென்றும் இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அது உங்களை என்ன செய்தது. சிவனுக்கும் உங்களுக்கும் என்ன பகை? அவன் உங்களுக்கு ஆலகால விஷத்தையா ஊட்டினான்? பக்தி இருந்தும் உங்களுக்கு ஏன் இந்தக் காழ்ப்பு? சிவனின் வெளிப்பாடுகள் எத்தனையோ இந்தப் பிரபஞ்சத்தில் உண்டு. நீங்கள் உங்கள் வேலையில் எல்லா மென்பொருள் கோடிங் மொழிகளையும், வடிவாக்கங்களையுமா கற்றுள்ளீர்கள்? எது தேவையோ அதில் மட்டும்தானே பயிற்சிபெற்றுப் பணி செய்கிறீர்? அப்படித்தான் மறைகளும், மந்திரங்களும்! அதைக் கற்க ஒரு பிரிவினர் உண்டு. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒசையின்றி ஒதுங்கிடுங்கள். கணினி உபயோகிக்கும் அனைவரும் அதன் பின்புலத்தில் மறைவாக உள்ள செயலாக்கக் கட்டளை மென்மொழியையா கற்கிறோம்? அதை வெறுத்து என்ன பயன்? எனக்கு வேதங்கள் மற்றும் பீஜங்கள் தெரியாது, அதனால் நான் அதை நிந்தித்து வெறுக்க வேண்டும் என்று எவன் சொன்னான்? 

தில்லையில் நான்மறைகள் எந்நேரமும் ஈசனைக் கைகூப்பித் தொழுகின்றன என்று அப்பர் அடிகள்/ மாணிக்கவாசக சுவாமிகள் சொல்லியுள்ளனர். தேவாரம் அருளிய அவர்களே சொன்னதால் நான் வேதத்தை ஏற்கவேண்டும் என்று எவன் சொன்னான் என்று நீங்கள் தர்க்கம் செய்தால் அது நிந்தனை. பீஜமந்திரங்களை, மறை ஓதுவாரை நீங்கள் இகழ்ந்தாலும் அது நிந்தனை. உங்களுடைய கொள்கைகள் சிவநிந்தனையை ஈட்டும் என்றால் அதை உங்கள் அளவில் மட்டும் பழக்கிக்கொள்ளுங்கள். அதை இச்சமூதாயத்தில் பரப்பவேண்டாம். ஏன்?

சிவ வடிவங்களை அனுபூதிகளை ஏற்கவிடாமலும், மந்திரங்களைப் பழித்துப் பேசினாலும், இறையை உணரவிடாமல் துர்போதனைகள் செய்தாலும் அது சிவநிந்தனை! இச்செயல்களால் தள்ளினாலும் போகாத அளவில் பாவங்கள் வந்துசேரும் என்று போகர் சொல்கிறார். உங்களுடைய சிவதுவேஷத்தால் வந்த பாவ வினைகளை உங்கள் சந்ததிகள் மீது சுமத்திவிட்டுப்போனால் உங்கள் ஆன்மாவுக்கு வேலை அதிகம். மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல்பட்டு ஊழ்வினைகளைத் துடைக்கப் பிராயச்சித்தம் தேடவேண்டும். உங்களைக் கெடுத்தவனுக்கும் இதே கதிதான்! இப்படி இருக்கும்போது நீங்கள் எங்கே அடுத்த நிலையைப்பற்றிக் கனவு காண்பது? எப்படி எதைப் பேசினாலும் வெளிப்படுத்தினாலும் சிவநிந்தனை என்றால் இது என்ன சன்மார்க்கம் சனாதனம்? என்று உங்களுக்குக் கோபம் வரும். ஆம், அதுதான் மெய்! சமயமானது தனிநபர் ஒழுக்கக் கட்டுப்பாட்டு மையம்.

முதல் நிலையில் என்னென்ன நிந்தனைகள் செய்கிறீர் என்பதை நீங்கள் மதிக்கும் நடுநிலையான ஒரு சைவசமயப் பெரியவரிடம் கேட்டுத்தெரிந்து சரி செய்துகொள்ளுங்கள். சிவபாதகங்களை மனத்தில் நினைத்தாலும், வாக்கில் சொன்னாலும், செயலில் வெளிப்படுத்தினாலும் ஏற்றம் ஒருபோதும் வராது. அவன் மன்னித்தருள உங்களுடைய பக்தி மூடபக்தி அல்ல, பாரபட்சம் கொண்ட வஞ்சபக்தி!

-எஸ்.சந்திரசேகர்