About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

கிறிஸ்துமஸ்!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! Merry Christmas! 🎄🌠



திங்கள், 20 டிசம்பர், 2021

மங்கல வரிகள்!

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை மறைந்த ஆண்டு 1897. மகாகவி பாரதி மறைந்த ஆண்டு 1921. 

'ஆரியம் வழக்கழிந்து ஒழிந்தது' என்று முன்னவர் சொன்னார். பாமர மக்கள் மத்தியில் என்றுமே பேசப்படாத ஒரு மறை மொழி திடீரென எப்படி அழிந்து ஒழியும்?  

ஆனால் 'சுதேச கீதங்கள்' என்று தலைப்பிட்ட பகுதியில் தமிழின் குரலாகப் பாரதியார் எழுதியதாவது:

"ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை

மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;

ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” (10)

ஆதி சிவனின் ஆரிய மொழிக்கு நிகராக (ஆதி சக்தி) தமிழ் வாழ்வதாய்ச் சொன்னதை எல்லோரும் மறந்து போனார்கள். ஆரிய கவிஞனுக்கு என்ன தெரியுமென இப்பாடலை எழுதினான் என்று அந்தச் சித்தனைத் தூற்றியவர்கள் உண்டு. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' பாடலில் வேதம் நிறைந்த, வீரம் செறிந்த தமிழ்நாடு என்று போற்றுகிறார்.

சுந்தரம் பிள்ளை அமங்கலமாக எழுதிய வரிகளையும், பாரதியார் சுபமாக எழுதிய வரிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். நம் ஞானபானுவுக்கு இணை யாருமில்லை!

தமிழ்த்தாய்க்கு உருவச்சிலை அமைக்க அன்றைய தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்தபோது, அதற்காக ஸ்தபதிகள் தேர்ந்தெடுத்தது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய 'ஞான சரஸ்வதி' உருவத்தைத் தான் என்கின்றனர். இது நமக்குத் தெரியாத ஒரு சங்கதி!

திங்கள், 15 நவம்பர், 2021

முருகனா இப்படிச் சொன்னான்?

'சுப்பிரமணியர் ஞானம் 500’ என்ற நூலை முருகன் அகத்தியர்க்கு உபதேசிக்கும்போது, சில இடங்களில் வெகுண்டு பேசியுள்ளது தெரிகிறது. ஞானியர் என்று சொல்லிக்கொண்டு திரியும் பொய்யர்களையும் வேடதாரிகளையும் பற்கள் உடைத்துப் பாடம் கற்பிக்க வேண்டும் என்கிறார். இதையே போகர், கருவூரார்கூட தம் பாடல் திரட்டுகளில் உரைத்த நினைவுள்ளது.

ஆனால் இதைப் படிப்போர், ‘அச்சச்சோ! முருகனா இப்படி உடைக்கச் சொல்லி உபதேசித்தான்? இருக்காது. அவன் காழ்ப்புணர்ச்சியோடு இருக்க மாட்டான். எந்தக் கடவுளும் பல்லை உடை, உயிரை எடு என்று சொல்லாது. அறிவுளர் அறிவார் குணக்கடலோன் என்று அவன் போற்றப்படுகிறான்’ என்று வாதம் செய்வார்கள்.

அண்மையில் சூரசம்ஹாரம் கண்டோம். முருகன் குணக்கடலோன் என்றால் ஏன் சூரனை சம்ஹாரம் செய்யவேண்டும்? மெனக்கெட்டு சக்தியிடம் வேல் வாங்கிப்போன முருகன்,  உண்மையிலேயே சூரனை ஏன் தாக்கி இரு கூறாக்கிச் சேவலும் மயிலுமாய் மாற்றி தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும்? திருப்போரூர் திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய தலங்களில் போர் புரிய வேண்டாமே! யோக சக்தியால் வெறுமனே சூரனை ஆட்கொண்டால் போதாதா? 

சம்ஹாரம் என்றாலே உமையும் திருமாலுமே நிகழ்த்துவார்கள். இங்கே முருகன் மூலமாக உமைதான் வேலிலிருந்து வதம் செய்தாள். முருகன் குணக்கடல் ஆயிற்றே, ஜீவ வதையை அவன் விரும்ப மாட்டானே! ஆனால் அவன்தான் சம்ஹாரத் திருவிளையாடலை நிகழ்த்தினான். அப்படியிருக்க அவனுடைய அந்தக் கோபம், சம்ஹாரம், ஆட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தண்டனை சட்டத்தின் கீழ் வரும் செயல்களென சிலர் தவறான புரிதலால் விமர்சிப்பார்கள். குணங்கள் மூன்று (த்ரிகுணம்) என்றாலும் சிவனும் அவனுடைய பிம்ப முருகனும் நிர்குணமானவர்கள். 

அகத்தியர் பெருமானுக்கு முருகன் உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலுள்ள சில வரிகள் இங்கே ...

நானடா நானிருக்கு மிடந்தான்கேளு

   நவிலாவிட்டாற் பல்லுதிர வடித்துத்தள்ளே ... 162

சூராதி சூரனையும் பொடியதாக்கிச்

  சுப்ரமென்று அற்புதமாய் வந்தேன்பாரே ... 319

தப்பியே செந்தூரில் மேருவேறிச்

  சண்டாள வசுரர்களை வதைத்தேன்பாரே ... 393

சொல்லடா விந்தவகை யெனக்குமைந்தா 

  சொல்லாட்டாற் பல்லுதிர வடிப்பேன்பார் ... 429

பாரப்பா வேடமிட்டே யலைந்திடாதே

  பாவயரை யனுதினமு மருவிடாதே  ... 430

பற்களை அடித்துத் தள்ளு என அகத்தியர்க்கு உபதேசித்த விஷயத்தை ஏதோ நமக்குத்தான் முருகன் சொன்னான் என நினைத்து முருகன் மீது கோபப்படுவது தவறு. சித்தனாதன் எங்கே எல்லாம் கோபமடைகிறான்? தன் மெய்யடி சித்த மரபுக்கும் மாண்புக்கும் களங்கம் வரும் வகையில் எவன் ஒருவன் வேடதாரியாய்ச் சுற்றிவந்து ஆறாதாரம் அறியாமல், பாம்பை மகுடியூதி எழுப்பாமல் வாசியோகம், தசதீட்சை, மூல மந்திரம் உபதேசித்தல், சித்தாடல் காண்பித்தல் என்று போலியாய் வந்து ஏமாற்றுவானோ அவனுடைய பற்களை உடை என்கிறான். 

‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. ஈறுகளை அழுந்தத் தேய்த்து, பற்களைப் பாதுகாக்க என்னென்ன மூலிகை குச்சியால் விளக்க வேண்டும் என்று சித்தர் பாடல்களில் உள்ளது. மாந்திரீக தந்திர பிரயோகம் செய்பவர்கள் பற்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொள்வார்கள். அஷ்டகர்மம் மந்திரம் ஓத பற்கள் வேண்டுமே! இதுபோல் ஏமாற்றும் தில்லாலங்கடி ஆசாமியைக் கிராமத்தார் பிடித்து முதல் வேலையாகப் பற்களைத்தான் உடைப்பார்கள்.      

ஒருவன் சித்தனாகத் தகுதி உடையவனா என்பதை அகத்தியர்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார் போகர். அவரிடம் ‘விருது பெற்ற சித்தன்’ என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிறார். முருகன் அகத்திய முனிக்கு உபதேசம் தந்த வாயிலாகச் சித்த மரபில் வரும் ஏனையவர்களுக்கு இது பாடமாகவும் ஒழுங்குமுறை அறிவிப்புமாய் அமைந்தள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

சித்தர்களிடம் ஈர்ப்புள்ளோர் மறைப்புள்ள சித்தர் பாடல்களில் உரைக்கப்பட்டவைகளை எடுத்த எடுப்பிலேயே தவறு என்று குறை சொல்வதை விடுத்து அப்பாடல்களை வரிசையாக முன்னும் பின்னும் ஆழ்ந்து வாசித்துப் பொருளறிய வேண்டும். முருகன் விவரிக்கும் அதுபோன்ற வேடதாரிகளுக்கு நம் பதிவுகள் நெருஞ்சி முள் போல் தைக்கிறது என்று புரிகிறது. நாம் என்ன செய்ய? 

முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த அனைத்து ஞான யோக அஷ்டகர்ம அம்சங்களையும் உள்ளபடி இங்கே பதிவிட அதை எல்லாம் நான் கற்றறிருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை! அதில் விருப்பமுமில்லை! தேவைப்பட்டால் அவற்றை எனக்குக் கனவிலோ நேரிலோ குருமார்கள் செய்துகாட்டி கற்பிப்பதுதான் வழக்கம். 

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 14 நவம்பர், 2021

நான் விரும்பிப் படித்த கதையோட்டம் ...

கவிவிஞர் நா.முத்துக்குமார் தன் பள்ளிப் பிராயம் பற்றி எழுதிய 'வகுப்பறைக்கு வெளியே கற்றுக்கொண்ட பாடங்கள்!'.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன்.

பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய கட்டடம் எங்கள் பள்ளியாய் இருந்தது.

ஆங்கிலேயன் கட்டிய பள்ளி என்பதால் ஆங்கிலம் எங்களுக்கு விரோதியாக இருந்தது. அச்சமும் பயமும் எங்கள் பாடமாய் இருந்தன.

பள்ளிக்கூடத்தைப் பற்றி நினைக்கையில் வகுப்பறைகளைவிட வெளியே இருக்கிற மரங்களும் மைதானங்களும் தான் என் நினைவுக்கு வருகின்றன.

எங்கள் பள்ளி மைதானத்தில் நட்டு வைத்த குடைகளைப் போல அசோக மரங்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கும்.

அசோக மரத்துப் பழங்களுக்கும் நாவல் பழங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால் ஆண்டவனால் கூட கண்டுபிடிக்க முடியாது. இரண்டின் நிறமும் வடிவமும் ஒரே கிளையில் கருவானவையோ என வியக்க வைப்பவை.

மீசை வைத்து பெண்ணாம் பெரிய மிதிவண்டியில் வரும் பெரிய வகுப்பு மாணவர்கள் முதல் நாள் பள்ளியில் நுழைந்த அன்று நாவல் பழம் என்று ஏமாற்றி அசோகப் பழங்களைக் கொடுத்து என்னிடம் இருந்து காசு பறித்தார்கள்.

முதன்முறையாக வகுப்பறை சொல்லித் தராத வணிகவியல் எனக்கு அறிமுகமானது.

எங்கள் பள்ளி தாலுகா ஆபீஸ் வளாகத்திற்குள் இருந்தது. காவல் நிலையங்கள், நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கருங்குளம், தீயணைப்பு நிலையம் எனக் கலவையான மனிதர்களைக் கடந்தே பள்ளிக்குள் நுழைவோம்.

ஒரு முறை கள்ளச்சாராய கேன்களை கையகப்படுத்தி காவல் நிலையத்தின் வாசலில் வைத்து தீ ஊற்றி எரித்தார்கள்.

அந்தக் காற்றின் வாசம் வேதியலை எனக்கு அறிமுகப்படுத்தியது.

இப்படி இப்படி ஐந்து பைசாவிற்குப் பத்து கடலைகள் கொடுக்கும் பாட்டிக் கடை கணிதத்தையும்;

உடைந்த அரச மரக்கிளை பொந்திலிருந்து அவ்வப்போது பகலில் வெளியே எட்டிப் பார்த்து திரும்பவும் பொந்துக்குள் நுழையும் ஆந்தை விலங்கியலையும்;

ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க கிராமத்து மாணவர்கள் கிளிப்பச்சை நிறத்துடன் ஒடித்து வந்து நீட்டும் மூங்கில் கழிகள் தாவரவியலையும்;

படம் வரைந்து பாகம் குறித்த கழிவறைகள் உயிரியலையும்;

மேற்கூரை கண்ணாடிச் சட்டகத்திலிருந்து உள் நுழைந்து கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும் சந்திரசேகர் மாஸ்டரின் முதுகில் விழுந்து C=3×108 வேகத்தில் பயணிக்கும் சூரிய வெளிச்சம் இயற்பியலையும்;

பள்ளிக்குப் பின்புறம் பாலிதீன் கவர்கள் மிதந்தோடும் செங்கழு நீரோடையின் பின்னணியில் ஒன்றிலிருந்து ஒன்று கிளைபிரியும் ஒற்றையடிப் பாதைகள் புவியியலையும்;

முன்புக்கு முன்பு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஃபெயிலானதால் தூக்குப் போட்டு இறந்த பழைய மாணவன் ஒருவனைப் பற்றிய வதந்திகள் வரலாற்றையும்;

‘As i am suffering from fever’ என்று தொடங்கி எழுத்துப் பிழைகளோடு எழுதப்படும் விடுமுறைக் கடிதங்கள் ஆங்கிலத்தையும் அறிமுகப்படுத்தின.

பிந்தைய நாட்களில் ஒருமுறை இடைவேளையின் போது காவல் நிலையத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த காசி அண்ணனின் ஐஸ் வண்டியில் சேமியா ஐஸ் வாங்கி, சட்டையில் சாயம் சொட்டச் சொட்ட சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.

காவல் நிலையத்திற்கு முன்பு லுங்கி கட்டிக்கொண்டு கையில் விலங்குடன் நின்றிருந்த ஒரு கைதியின் வாயில் பீடி பற்ற வைத்துக் கொண்டிருந்தார் ஒரு கான்ஸ்டபிள். சிரித்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

புரிந்தும் புரியாமலும் வாழ்வியல் அறிமுகமானது.

எல்லோருக்கும் போலவே எனக்கும் என் பள்ளி வகுப்பறைக்கு வெளியே தான் பாடங்களைக் கற்றுத் தந்தது.

ஆயினும் என்ன? கற்றுத்தர மட்டுமா பள்ளிகள்? சென்ற வருடம் என் பள்ளியில் நடந்த தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

பள்ளி வாசலில் அதே பழைய காசி அண்ணன் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் முன் நிழலாடிய பல பிஞ்சு முகங்களில் என் முகமும் பெயரும் ஞாபகத்திற்கு வரும் என்பது என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும்?

கொடுத்த நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு “நீ நல்லா இருந்தா போதும் ராசா” என்று சொல்லிவிட்டு தன் முன் இருந்த ஐஸ் பெட்டிக்குள் குனிந்தார். அதில் காலம் கட்டி கட்டியாக உறைந்து கிடந்தது.

ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் ஆகப்பெரிய வலி எது தெரியுமா? தன் பின்னால் பரந்து கிடக்கும் கடந்த காலத்தில் புதிர் வட்டப் பாதையில் பயணித்து காயங்களுடன் வலிகளுடன் திரும்பி வருவதுதான்.

துருப்பிடித்த பள்ளியின் நுழைவாயிலில் இரும்புக் கிராதி கேட்டைத் திறந்து என்னை வரவேற்கிறார்கள்.

முன்பு ஒவ்வொரு முறை அதைக் கடந்து உள்ளே நுழையும் போதும் அடிவயிற்றிலிருந்து மேலெழும் ஒரு பயம் தன் பழைய பாசத்துடன் மேலே வருகிறது.

‘இது என் பள்ளி! என் பள்ளி என்னால் பெருமை அடைய வேண்டும்! என் பள்ளியினால் நான் பெரும் அடைய வேண்டும்!’ என்று எழுதிய வாசகத்திற்கு மேல் இயேசு கிறிஸ்து கை நீட்டி அழைத்துக் கொண்டிருக்கிறார்.

பரிசுத்த ஆவியின் பெயரால் என் பள்ளிக்குள் நுழைகிறேன். காலை பிரார்த்தனை நேரத்தில் “ஜெபம் செய்வோம்” என்ற குரல் கேட்டு எத்தனை முறை மண் தரையில் முட்டி போட்டு இருப்பேன். அந்த மண் துகள்கள் இன்று எங்கு போய் உதிர்ந்தன?

“இதோ பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களை உமது பாதங்களில் ஒப்படைக்கிறோம் எமது ராஜா… அவர்கள் படித்தது மனதில் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் பதியவும்,

அவர்களால் நமது பள்ளி மென்மேலும் உயரமும் ஆசீர்வதியும் எம் ராஜா” என்கிற பால்பாண்டி மாஸ்டரின் குரலும், அதைத் தொடர்ந்து ஒலிக்கிற ‘ஆத்துமமே என் முழு உள்ளமே’ என்கிற பாடலும் காற்றின் அலைகளில் கரையாமல் ஒலிக்கிறது.

எங்கள் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமான அ.எக்பர்ட் சச்சிதானந்தம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க விழா முடிகிறது.

மாணவர்கள் விடைபெற்றுப் போன பின் மாலையில் நான் படித்த ஒவ்வொரு வகுப்பிலும் மீண்டும் நுழைகிறேன்.

என் ஆதிக் கருவறையின் இருளும் ஒளியும் கலந்த அறைகள் எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் நுழையும்போது மட்டும் என்னை அறியாமல் தேகம் சில்லிடுகிறது.

அதோ நான் அமர்ந்து எழுதிய பர்மா தேக்கு மேஜை. மீண்டும் என் பால்ய வயதிற்குள் சென்று காக்கி கால் சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து அமர்கிறேன்.

பிரில் இன்க் கரைபடிந்த என் பழைய மேஜையில் நான் எப்போதோ உணவு இடைவேளையின்போது காம்பஸ் முனைகளால் கிறுக்கிய N.M.K. என்ற என் இன்சியல் இன்னும் அழியாமல் இருக்கிறது.

ஒரு கணம் இனம் புரியாத உணர்வுக்குள் மூழ்கித் திரும்புகிறது மனது. இதோ நான் தொலைந்த பால்யத்தின் மிச்சம்.

என் பதின் வயதுகளில் ஒரு துண்டு. நான் கடவுளாக இருந்தபோது எனக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.

பள்ளிப் பிராயம் ஒரு நதியைப் போல நம் ஆழ்மனதில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் மேல் மிதக்கும் சருகுகளும் பூக்களும் கரை சேர்ந்து விடுகின்றன.

நதியின் ஆழத்தில் மூழ்கும் கூழாங்கற்கள் மட்டுமே சகதிகளுடன் சேர்ந்து உறுத்திக் கொண்டிருக்கின்றன. என் பள்ளி எனக்கு சருகுகளையும் பூக்களையும் மட்டும் கொடுக்கவில்லை.

கூழாங்கற்களையும் சேர்த்துத்தான் கொடுத்தது.

~~~~~~~~ ~~~~~~~ ~~~~~~ ~~~~~~

இது மணாவின் 'பள்ளிப்பிராயம்' என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுத்தது‌. உயிர்மை பதிப்பகம். ரூ.75/-



சிந்தித்து முடிவெடுக்கும் பாங்கு!

முன்னொரு சமயம் நாங்கள் குடியிருந்த தெருவில் பாலகிருஷ்ணா & சன்ஸ் என்ற மின்னியல் என்ஜினியரிங் கம்பனி நடத்தி வந்தார் ஒரு செல்வந்தர். அரிமா சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அவருடைய சொந்தமான பங்களாவில் இரண்டு அம்பாசடர் கார்கள் இருந்தன, அவர் மனைவியின் கழுத்து முதல் இடுப்புவரை பரதநாட்டிய செட் நகைகள்போல் எல்லாம் தங்கத்தில் மின்னின. இரண்டு மகன்கள். அதில் மூத்தவன் கல்லூரி படிக்கும்போதே செயின் ஸ்மோக்கர் என்ற பெருமையைப் பெற்றவன். இன்னொருவன் பிசினஸ் செய்கிறேன் என்று அகலக்கால் வைப்பவன். இவர்கள் படித்ததெல்லாம் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஏற்காடு மான்ட்ஃபோர்ட் போர்டிங் பள்ளி.

எனக்குத் தெரிந்து அத்தெருவில் மதிப்பு மரியாதையுடன் வாழ்ந்தார், யாரிடமும் பந்தா காட்டியது இல்லை. அவர் மனைவி அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபர்போல் இருப்பார். நவராத்திரி சமயத்தில் ஜடை பின்னல் வைத்து ராக்கொடி காசுமாலை சங்கிலி வளையல் புல்லாக்கு ஒட்டியானம் முதல் கொலுசுவரை அத்தனை நகைகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு இடுப்பில் சொருகிய சிறிய பிச்சுவா கத்தியுடன் இரண்டு வீதிகளையும் வாக்கிங் சுற்றி வருவர். அந்தப் பெரியம்மாவின் கோலத்தைப் பார்த்து யாரும் அவர் எதிரே சிரித்து விடக்கூடாது. அவரைக் கிண்டல் செய்தால் போச்சு! ஆங்கிலத்திலேயே விளாசுவார். நான் பள்ளிக்குச் சென்று வரும்போது என்னைப் பார்த்தால் ‘டேய் கொளந்த, come home for special sundal and payasam’ என்று சொல்வார். நான் பயத்தில் மண்டையை ஆட்டுவேன். 

காலங்கள் ஓடியது. 2014ல் ஒரு நாள் அத்தெருவில் குடியிருக்கும் பெரியவரை எங்கோ சந்திக்க நேர்ந்தது. அப்போது பழைய ஆட்களைப் பற்றியும் செல்வந்தர் பற்றியும் விசாரித்தேன். 

“பாலு சார், கடந்த 1998க்கு பிறகு நொடிஞ்சு போனார். சின்னவன் வெளிநாட்டுல பிசினஸ் செய்யறேன்னு பைனான்ஸ் கம்பனியில கடன் வாங்கினான். தன் அப்பா/ தம்பியோட பெரிய மனஸ்தாபத்துல பெரியவன் குடும்பத்தோட தனியா போயிட்டான். வாங்கின கடனுக்கு வட்டி அசல் கட்ட முடியாம கம்பனியை யாருக்கோ கைமாத்தி வித்தார், இருந்த வீடு ஜப்தி ஆனா மானம் போகுமேனு வேற வழியில்லாம அடிமாட்டு விலைக்கு 17 லட்சத்துக்கு வித்தார். கார் ஆக்ஸிடன்ட் ஆனதுல இன்சுரன்ஸ் பணம் முழுசா வரலை. பொண்டாட்டியோட நகைகள மூட்ட முடியாம போயி அதை பேங்க் காரங்க ஏலம் விட்டாங்க. அப்புறம் அவர் தன் சொந்த ஊருக்குப் போறதா காலி செய்துட்டு போனார். அதன் பொறவு எந்த சேதியும் இல்ல’ என்றார்.

‘முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, கெட்டவனும் இல்லை’ என்பது கரியன் சூரியனைச் சுற்றி வரும் கால அளவு அடிப்படையில் பேசப்படும் ஒரு வாக்கியம். என்னதான் கல்வி, அனுபவம், செல்வாக்கு, விவேகம் இருந்தாலும் விதி விளையாடும்போது எல்லாம் பயனற்றுப் போகும். துணிந்தவனுக்குத் துயரம் இல்லை என்பது எதுவரை வரும்? 

ஒரு நிலைக்கு மேல் தன்னால் இனி மீள முடியாது என்று தூரப்பார்வையுடன் சிந்தித்தால் அகலக்கால் வைக்க அவசியம் இருக்காது. அடமானம் வைத்த நகைகளையும் வீட்டையும் மீட்க முடியாது என்ற நிலையை முன்பே யூகித்து அதை எல்லாம் விற்றிருக்க வேண்டும். குறைந்த அளவு தாக்கத்துடன் போயிருக்கலாம். 

ஓடிக்கொண்டிருக்கும் நல்ல கப்பல் பழுதாகி அதை ஒரு கட்டத்தில் சரி செய்ய இயலாது என்ற நிலையில் கேப்டனும் சிப்பந்திகளும் அவசரகால நடவடிக்கையில் இறங்கித் தப்பிக்க வேண்டும். நடுக்கடலில் மூழ்கத் தொடங்கும் நிலையில் அதனை அணைத்தபடி தாம் பயணித்த மலரும் நினைவுகளைக் கொண்டாட முடியாது. Ship Abandoned என்று அவசர செய்தி விடுத்த நிலையில் சிப்பந்திகளுக்கான மீட்புக் கப்பலும் ஹெலிகாப்டரும் வட்டமிடும். 

ஆனால் நிஜ வாழ்க்கையில் கடவுளைத் தவிர மீட்பர்கள் யாருமில்லை. அதனால் வாழ்க்கையில் இலக்கின்றி, பேராசையுடன் வாழ்ந்து, வேண்டாத சுமைகளை ஏற்றிக்கொண்டு, மூழ்கும் சொத்துக்களைச் சக்திக்கு மீறி மீட்கப் போராடும் பிடிவாத குணத்தை எப்பாடுபட்டேனும் கைவிடுவதே நல்லது! 

- எஸ்.சந்திரசேகர்



பொன் மலை மேரு!

பிரம்ம முஹுர்த்த வேளையில் அரூபமாகச் சித்த ரிஷிகள் நிகழ்த்தும் ரசவாதத்தால் கயிலாய மலையே பழுக்கக் காய்ச்சிய பொன்னாக ஒளிரும் காட்சி. மலையில் ஏறி இதை நேரில் கண்ட சாட்சி போகர்.

- எஸ்.சந்திரசேகர்



வழிகாட்டி அமைவதும் வினைப்பயனே!

வேத மந்திரங்கள் எதுவும் ஜெபிக்க வேண்டாம், மலைக் கோயில்களுக்குப் போய் தரிசிக்க வேண்டாம், நதி /கடல் என்று எதையும் தேடி அலைந்து நீராட வேண்டாம், திருமுறைகளைப் பண்ணிசைத்துப் பரவசமாய்ப் பாடி உருக வேண்டாம். இவை எதுவும் பயனில்லை. இப்படிச் செய்தால் மெய்ஞான புத்தி வருமா?  உண்மையைப் பேசினால் போதும், உடனே சித்தி வாய்க்கும்!’ என்பது படத்திலுள்ள இப்படாலின் பொருள்.

இதெல்லாம் ஒரு சாதகனுக்குத் தொடக்கத்திலேயே சொல்வது சரியா? இவை அகத்தே யோக மார்க்கத்தில் கண்டு தரிசிக்கலாம் என்பது எப்போது புரியும்? 

ப்ளே ஸ்கூலில் உள்ள குழந்தைக்கு அங்கு வேலை செய்யும் ஆயாதான் சோறு ஊட்டுவாள், குடிக்கப் பால் தருவாள், விளையாடுவாள். பின்மாலைப் பொழுதில் அக்குழந்தையின் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும்வரை நெடுநேரம் ஆயாவின் முகத்தைத்தான் பார்க்கும். அதனால் அக்குழந்தை வளர்ந்தபின் தன் தாய்/தந்தையிடம் பாசத்துடன் ஒட்டுவதில்லை, அன்பாக உறவாடுவதில்லை, பெற்றோர் பேச்சைக் கேட்பதில்லை, அவர்களை முது வயத்தில் பேணிக் காப்பதில்லை. வளர்ந்த பிள்ளை இப்படி இருந்தால் அந்தத் தவறு அவனுடையதல்ல. ஏன்? அவன் வளரும் பிராயத்தில் தாய்-சேய் உறவு இல்லை தாயின் ஸ்பரிசம், கொஞ்சும் மொழி இல்லை; தாயின் மடியில் படுத்துக்கொண்டு தாயின் முகத்தை நெருக்கத்தில் பார்ப்பதில்லை, தாயின் மன அலைகளைப் புரிந்துகொள்ளும் அவகாசமில்லை. இதுபோல் தொடக்க நிலை குறைகள் நிறைந்திருந்தால் குழந்தை இப்படித்தான் இருக்கும்.

சரியை கிரியை என்கிற தொடக்க நிலைகளைக் கடந்த பின் ஞானம் யோகம் என நிலைகளைக் கடந்திட வேண்டும். கலியுகத்தில் முறைப்படி மக்கள் பெரிய அளவில் சடங்குகளும் உபாசனைகளும் செய்ய வழியில்லை, செய்ய மாட்டார்கள் என்பதை முன்பே தீர்க்க தரிசனமாய்ச் சொல்லிவிட்டனர். அதனால் மந்திரம் ஓதுவது, கோயில் தலங்களுக்குச் சென்று வழிபட்டு மனமொன்றிப் பாடுவது, புண்ணிய நதியில் நீராடுவது, நாம ஜெபங்கள் செய்வது என்ற அளவில் இருந்தால் உத்தமம் என்று வகுக்கப்பட்டது. இதுவும் கூடாது என்றால் என்ன செய்ய?

ஆனால் அதெல்லாம் பயனில்லை தண்டம் என்றால் பழநி மலைமீது போகர் பாஷாண தண்டபாணியை வேலை மெனக்கெட்டு நிறுவி இருக்க வேண்டாம், குன்றுதோறாடும் குமரனைக் கஷ்டப்பட்டு யாரும் போய் தரிசிக்க வேண்டாம், சடாக்ஷரம் ஜெபிக்க வேண்டாம், காவடி எடுக்க வேண்டாம், திருச்சீரலைவாயில் நீராட வேண்டாம், கைலாசம் கங்கை பஞ்சபூத தலங்கள் என எதையும் நாடிப்போக வேண்டாம். நிறைவாக விபூதிப் பட்டையும் கழுத்தில் கொட்டையும் அணிந்தால் வேடதாரி என்று யாரேனும் நினைக்கலாம். 

ஆக நாம் உண்மை மட்டும் பேசினால் போதும் அக்கணமே சித்திகள் வாய்க்கும் என்றால் மரபு எதற்கு? குரு எதற்கு? தீட்சை எதற்கு? மந்த்ரோபதேசம் எதற்கு? ஆன்மா கடைத்தேற நல்லதொரு வழியைக்காட்ட குரு வேண்டும். அதுவும் சமயநெறிகளைப் பிசகாமல் கடைப்பிடிக்கும் குரு வேண்டும். குரு இல்லாத வித்தை பாழ், நெய் இல்லாத உண்டி பாழ். ஆகவே நல்லதொரு மெய்ப்பொருள் பாடலை அதன் கனம் அறியாத ஒருவருக்குத் தவறான காலத்தில் உபதேசிப்பதால் நன்மையைவிட தீமையே வரும்.  

வேதங்கள் உரைத்ததை, நால்வர் உணர்த்தியதை அறிந்து இறைவனைச் சுயமாக உணர்ந்து அவனுடைய ஆற்றல்மிகு ஆசிகளைப் பெற்று உயர வேண்டும். இதுகாறும் நம் வம்சத்தில் மூதாதையர்கள் உருவேற்றி வைத்த பக்தி ஆற்றல் மற்றும் குண நலன்களின் புண்ணிய பலன்களின் விளைவாக நாம் இப்போது பெடல் செய்யாமல் மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். இது எத்தனை தூரம் செயல்படும்? மேட்டில் வண்டியின் வேகம் குறைந்து வண்டி நிற்காமல் இருக்கச் சமய நெறிகளைக் கடைப்பிடித்து நம் உந்து சக்தியைப் பெருக்கிப் பயணிக்க வேண்டும். 

‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்று கொன்றை வேந்தனில் ஔவை சொன்னதன் பொருள் என்ன? காலங்காலமாகச் சொல்லபட்டு வரும் மூத்தோர் வழி முறை உபதேசங்களைத் தட்டாமல் அப்படியே பின்பற்று என்பதாகும். 

-எஸ்.சந்திரசேகர்



நூல் வெளியீடு!

'காலாங்கிநாதர் அருளிய ஞானவிந்த ரகசியம் 30 (மூலமும் உரையும்)' என்ற நூல் இம்மாதம் வெளிவரவுள்ளது. விலை ரூ.35/-  வெளியீடு: Leo Book Publishers, Nandanam, Chennai. Ph: 9940498435, 044- 24351283.

-எஸ்.சந்திரசேகர்



ஞான வேடமும் கபடமும்!

பாரப்பா ஜெகசால ஞானியோர்கள்

  பசிபொறுக்க மாட்டாமற் புரட்டுப்பேசி 

ஆரப்பா வேடங்கள் தரித்துக்கொண்டு

  அவன்காலிற் குறடிட்டே யலைவான்பாவி

நேரப்பா தேர்நிலையு மரியாதகோசி

  நிலையான பராசக்தி பூசைக்கென்று

தேரப்பா சத்தியமாய்ப் புரட்டும்பேசி

  தெளிவான சித்தன்போற றிவான்காணே 

               (சுப்பிரமணியர் ஞானம், பா:162)

‘ஞானியர் என்ற போர்வையில் ஜெகஜ்ஜால கில்லாடி கபடதாரிகள் உண்டு. உண்டி வளர்க்கப் பாடுபடுவார்கள், பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புரட்டும் பேசி தங்களை உயர்வாகக் காட்டிக்கொள்வார்கள். வெறுங்காலில் நடக்கப் பொறுக்காமல் பாதக்குறடுகள் அணிந்துத் திரிந்திடுவார்கள். அன்னமய கோசத்தின் மேல் ஆசை வைத்து அதை வளர்த்துப் பேண எதற்கும் துணிவார்கள். தேகத்தின் ஆறாதாரச் சக்கரங்களில் வாசி என்ற தேரின் ஓட்டத்தை அறியா பாவிகள். பராசக்தியை நோக்கிப் பூசைகள் செய்வதாய்ப் பொய் புரட்டுப்பேசி அறிவார்ந்த சித்தன்போல் காட்டிக்கொள்வார்கள்’ என்கிறது மேற்கண்ட சுப்பிரமணியர் ஞானம் பாடல். 

இதற்கு அடுத்த பாடலில் ‘வாசி நிலை காட்டடா என்றால் தெரியாது, ரவி-சசியின் கலை எங்கேடா என்றால் தெரியாது, தாரணையை விளக்கிச் சொல் என்றால் தெரியாது, தான் இருக்கும் நிலையைக் கேட்டால் தெரியாது, குருநிலை யாது, உன்  குலதெய்வம் எங்குள்ளது என்று கேட்டால் தெரியாது என்பான். நான் அவனுள் எங்குள்ளேன் என்று கேளு, இதெற்கெல்லாம் பதில் சொல்லாவிட்டால் அவனுடைய பற்கள் உதிர அடித்துக் கேள்’ என்று முருகன் சொல்கிறான்.    

இக்காலத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. தங்களை ஞானியர் என்று பிரகடனப் படுத்திக்கொண்டு நீள்முடி கேசம், தாடி, தினுசான ஆடை அங்கிகள், தலைப்பாகை, காலில் செருப்பு அணிந்து, ஆங்கிலம் பேசி, விஸ்தாரமான சொகுசுக் குடில் அமைத்து, யோகம் கற்பிப்பதாய்ச் சொல்லி, பக்தர்களை வசியப்படுத்தி, நவீன நடனமாடி, தானே சிவம் என்று சொல்லியபடி தங்களுக்கென ஓர் ஆன்மிக அடையாளத்துடன் வாழ்வாதாரம் தேடிக்கொண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள். 

முருகன் அகத்தியர்க்கு உரைத்தவை எல்லாமே இன்று கண்ணெதிரே காண்கிறோம். அடையாள விவரிப்புகளை வைத்து இந்நேரம் அந்த ஆசாமிகள் யாரென நீங்கள் யூகித்திருப்பீர்கள். 😃

-எஸ்.சந்திரசேகர்



சனி, 6 நவம்பர், 2021

ஓம் சரவணபவ!

தந்தானா தனதானா தானா தானத் தானா 

தான - தனனானா தனனானா  தனனானா தானா

முத்தழகன் முருகன் முந்தி வந்தான் தீயில் வந்தான்

மூத்த - முந்துதமிழ் முத்தணிந்து உலகாள வந்தான்      

காங்கேயன் வடிவெய்தி வந்தான் ஸ்கந்தன் வந்தான்

கருணை - குருவாகி குகனாகி உருவாகி நின்றான்

செந்தூரான் வேல்தாங்கி வந்தான் கோட்டம் வந்தான்

சீலன் - வேலோடு கரத்தோடு சிவபாலன் வந்தான்      

வேதமுக காவல்காரன் வந்தான் செவ்வேள் வந்தான்

வீரன் - பிரணவத்தின் பிரம்மத்தின் பதியாகி வந்தான்

ஓம்முருகா ஓம்முருகா வேல்வேல் வெற்றி வேல்வேல்

ஓங்கிய - மலைமீது நிலம்மீது அலைமீது வென்றான்

ஓம்முருகா ஓம்முருகா வேல்வேல் வெற்றி வேல்வேல்

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 9 செப்டம்பர், 2021

சிவன் வழக்கழிந்து ஒழிந்து போவானா?

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது, ‘இந்தப் பால்வெளியில் தசலட்ச சங்கம் விண்மீன்கள் உள்ளன. இப்பிரபஞ்சம் போலவே இன்னும் பல பிரபஞ்சங்கள் வெவ்வேறு அளவில் உள்ளன. அதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அப்படி ஒன்று இல்லை என்று சொல்லிட முடியுமா?’ உன்னால் நேரடியாக அதைப் பார்க்க இயலாது. அர்ஜுனா, இதோ என்னுள் அதைக் காட்டுகிறேன், பார்! அண்டத்தில் இருப்பது உன் பார்வைக்கு இல்லாததுபோல் தோன்றுவது மாயை.” (பகவத்கீதை: 8:18)

அப்படி உள்ளது மனோன்மணீயம் நூலுக்குப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ்த்தெய்வ வணக்கம் பாடல். நாம் இதுகாறும் படிக்க மறந்துபோன இரண்டாம் பத்தி உள்ளது. அதில் ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து’ என்ற அடி உள்ளது. சிவனின் வாசியாக மறைந்து இருக்கும் மொழி எப்படி அழிந்து ஒழிந்து போகும்? உங்களையும் என்னையும் நம்பியா சிவனுடைய ரவிகலை வாசியின் ஆதாரப் பண்புகள் உள்ளன? எழுதா கிளவியாய் அது என்றைக்கும் யுகயுகங்களாக மறைந்திருப்பது. 

சுயம்புவாய்த் தோன்றி இதுகாறும் மறைந்திருக்கும் சூட்சுமம் உடையது. அது சமயம் வரும்போது தன்னைத் தானே வெளிக்காட்டிக்கொள்ளும். அதுவரை அதன் வெளிப்பாடாய்ச் சக்தி மட்டும் வெளியே தோன்றி அசைந்து இயங்கும். ஒரு தாவரத்தின் ஆதார வேர் புலப்படாமல் பூமிக்குள் ஆழமாய் எப்படி மறைந்திருக்குமோ அப்படித்தான் மறையன் உள்ளான். சிவனுடைய அரூப மந்திரமொழி பேச்சு மொழியாக இல்லாத காரணத்தால் சிவன் எப்படி அழிந்து ஒழிந்து போவான்? ஆகமங்களைச் சிவன் ஆரியத்திலும் தமிழிலும் சக்திக்கு உபதேசித்தான் என்கிறார் திருமூலர். சிவனின் இடகலை வாசியே சக்தியும் தமிழும்! 

அக்காலத்தில் சுந்தரனாரின் பாடலில் இந்தச் சொல்லாடலை யாரும் தர்க்கம் செய்யாமல் ஏற்றுக்கொண்டு விட்டதால், இன்று அம்மொழியை/அவனை இறந்துபோன, வழக்கழிந்த, ஒழிந்த என்று மனம் குளிரப் பேசுகின்றனர். நூலின் முதல்பக்க வாழ்த்துப் பாவிலேயே சிவன் அழிந்து ஒழிந்தான் என்பது அபசகுனம். சிவனில்லாமல் சக்தி ஏது? சிவன் அழிந்தால் சக்தியும் அழிந்து போகும்! பிறகு தமிழ் ஏது? தமிழ் மீது பற்று இருக்கிறது என்பதைக் காட்ட இப்படியா பேராசிரியர் அமங்கலமாய்ப் பேசுவது?

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

தமிழும் ஆசிரியரும்!

பள்ளியில் தமிழாசிரியர் நாத்திகப் பகுத்தறிவாதியாக இருந்துவிட்டால் மாணவர்களின் பாடு திண்டாட்டம்தான். திருக்குறள், தேவாரம், கம்பராமாயணம், திருவருட்பா, பாடல்களை விளக்கி உண்மையான பொருள்தான் சொல்வாரா என்று அறிய முடியாது. அதனால் கோனார் தமிழ் உரையைத்தான் மாணவர்கள் நம்பியிருந்தனர்.

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பிற்குத் தமிழ்ப்பாடம் நடத்த முதுகலை பட்டதாரி அசிரியர் திரு. இரா.தேன்மொழியான் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் திராவிடக் கழக அபிமானி. கம்பராமாயணம் பகுதிகளை நடத்தும்போது இரட்டைப் பொருள் கொண்ட ஆபாசமான வர்ணனை கலந்துதான் விளக்கம் தருவார். இராமன்/ லட்சுமணன்/ சீதை இவர் வாயில் புனிதத்தை இழப்பார்கள். சில்க் சுமிதாவுடன் சீதையை ஒப்பிடுவார். பாடம் நடத்தும்போது பெரியாரின் கொள்கைகள் தீப்பொறி என வந்து விழும்.

“இராமன் என்ற ஓர் ஆரிய பார்ப்பனன் நம் கலாசாரத்தைக் கெடுத்தான். ஏண்டா வைத்தீஸ்வரன் நீ எப்படி?’ என்று ஒரு மாணவனைச் சீண்டுவார். வைதீஸ்வரன் என்ற மாணவன் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி வந்தவன் துடுக்குத்தனமானவன். அவன் பிராமணன் என்றாலும் கிராமத்துக் கெத்து/ சவடால் என எல்லா பண்புகளுமே அவனிடம் இருந்தது.

உடனே இந்த மாணவன் “சார், இராமன் பிராமணன் இல்ல ஷத்ரியன். நீங்க ஜாதியை மாத்திடீங்க. நாங்க எல்லாம் கலாச்சாரத்தை மாத்த மாட்டோம். உங்களைப்போல் பெரியவாதான் செய்வாங்க. நீங்க என்ன ஜாதி சார்?” என்றான் தடாலடியாக. இக்கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர், “ஏன்? நான் xxxx குலம்” என்றார்.

“சார், உங்க ஜாதியைவிட நாங்க உசத்திதான். இராமன்-சீதை புகழை நீங்க கெடுப்பீங்க. நாங்க செய்ய மாட்டோம். நல்ல வேளை நீங்க எங்க ஊர் பள்ளிக்கூடத்துல வேலைக்கு வரலை. தமிழ் வாத்தியாரே இப்படிப் பேசினா எங்க ஊர் மிராசுதார் தாத்தா பள்ளிக் கூடத்துக்கே வந்து நாக்கை இழுத்து வெச்சு சூடு போடுவார்” என்றான். மொத்த வகுப்பும் சிரிப்பொலியில் வெடித்தது. சீறாப்புராணம் நடத்தும்போது கதீஜாவுக்கும் சீதையின் கதிதான்!

அதன்பிறகு திரு.தேன்மொழியான் என்னதான் தேனொழுகப் பேசிப் பாடம் நடத்தினாலும் அவர் கடவுளைப் பழித்துப் பேசும் ஈனன் என்ற அளவில்தான் வைத்தீஸ்வரனின் எண்ணத்தில் நிலைத்தார். தன் மேலுள்ள குறைந்தபட்ச மரியாதையையும் சிதைத்துக் கொள்ளும் இப்படிப்பட்ட ஆசிரியர்களையும் ஆசிரியர் தினத்தில் நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த ஆசிரியரை அண்மையில் 'பூட்டும் சாவியும்' என்ற சிறுகதையில் ஒரு கதாபாத்திரமாக அமைத்தேன்.

-எஸ்.சந்திரசேகர்




புதன், 18 ஆகஸ்ட், 2021

மேருகிரி!

வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். மேருமலை என்பது வடக்கே கேதார்நாத் -திபெத் அருகே இருப்பதாகவும், கிழக்கே ஓடிஷா கடல் பகுதியில் இருப்பதாகவும், தெற்கே குமரிக்கண்டத்தில் இருப்பதாகவும் ஏதேதோ சொல்லப்படுகிறது, இதில் எது உண்மை? 

மேரு என்பது கயிலாய பர்வதம் அமைந்த இமயமலைப் பகுதிதான் என்பது இரண்டாம் காண்டம் பாடல்களில் ஆங்காங்கே வெளிப்படுகிறது. போகர் சீனதேசத்தைக் கடந்து தக்ஷிணம் வரும்போது மேருவைத் தரிசித்தார்.

'பார்த்திருந்து துவாபரமாய் யுகத்தில் யானும் பர்வதாமேருகிரி தன்னில்வந்தேன் வந்திட்டேன் சீனபதியான் கடந்து வாகுடனே மேருகிரி காணவந்தேன்

இப்படத்தில் நாம் பார்க்கும் பழுத்த நிறத்தில் தகிக்கும் சொர்ண மேருதான் கயிலாயம் என்பது போகர் பாடலில் தெரிகிறது. இந்த நிறம் எங்கிருந்து வந்தது?  பனி அடர்த்தியாய் இருந்தால் உதயத்தில் சூரிய ஒளிச்சிதறல் காரணமாக இந்நிகழ்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். பிரம்ம முஹூர்த்த 3.45 - 5 மணிக்கு சூரிய உதயம் இல்லை. சரி! சூரியன் உள்ளது என பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் அந்நேரம் பனி இல்லாத வெறும் பாறையிலும் செந்நிறம் வரக் காரணம் யாது? அதுவே பனி படர்ந்த வெளிச்சுற்றுப் பகுதியில் செந்நிறம் ஏன் இல்லை? முற்போக்கு அறிவியலாளர்களால் பதில் சொல்ல முடியாது. அங்கே அக்கணம் ரசவாதம் நிகழ்கிறது என்று போகர் சாட்சி சொல்கிறார். 

'மூட்டினார் சித்தகிரி பர்வதத்தை முனையான மூலிகைகள் முழுதும்பூசிமாட்டினார் துருத்திக்கொண்டு வூதிக்காட்டி மகாமேரு சாரலைப் பழுக்கச் செய்தார்

ஆக அரூபமாய் அங்கே தவத்தில் இருக்கும் எண்ணற்ற ரிஷிகளும் சித்தர்களும் ஒருங்கே கயிலாய மலையைப் பொன்னம்பலமாக மாற்றும் நிகழ்வே அது. அதற்கு நம் அறிவியலாளர்கள் ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். அறிவியல்படி பனி படர்ந்த 2500 கிமீ நீள இமயமலைத் தொடர் முழுவதுமே தங்கமயமாய் ஒளிர வேண்டும். ஆனால் இம்மலை மட்டும் ஏன்? அதைத்தான் போகர் பாடல் சொல்கிறது.

இங்கே படத்தில் கயிலாயமலை பெருவுடையாரைச் சுற்றி அகழிபோல் உள்ளது. பனி பொழிந்து நிரம்பினால் இந்தச்சுற்றுப் பள்ளத்தின் ஆழம் நம் கண்களுக்குப் புலப்படாது. பனி இல்லாதபோது எடுத்த இப்படம் மிகத் துல்லியமாய் உள்ளது. ஓம் நமசிவாய. 🙏🙏

இதேபோல் தென்காசியில் மலைக்கு மூலிகைப்பூசி, துருத்தி கொண்டு ஊதி அதைத் தங்கமயமாக மாற்றத் துடித்த தேரையர் செயலால் கலக்கமுற்ற ரிஷிகள் நேரே அகத்தியரிடம் முறையிட அதனால் அகத்தியர்க்குக் கோபம் வந்து தேரையரைத் தண்டித்த கதைதான் நினைவுக்கு வந்தது. 

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

உருமாறித் திரியும் கருத்து!

மூத்த சித்தர்களைப்பற்றி நாம் கேளிவிப்படாத தகவல்களைச் சொல்வதாகத் தலபுராணங்களை மேற்கோள் காட்டி நிறைய கட்டுரைகள் இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ‘போகர் மகாகர்வம் கொண்டவராக இருந்தார், திருமூலரின் மற்ற சீடர்களை இம்மியும் மதிக்கவில்லை’, ‘யோகம் கற்காமல் காம இச்சை போகத்திலேயே கிடந்தார்’, அதைக் குடித்தார், இதைப் புகைத்தார்’, தன் இலக்கைக் கோட்டைவிட்டார், அவர் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று பலவித குற்றச்சாட்டுகளை அக்கட்டுரைகள் சொல்லும்.

ஆனால் எதிலுமே சம்பந்தப்பட்ட மூலநூல்/பாடல் எண் எதுவும் ஆதார மேற்கோள் இருக்காது. எல்லாம் சொல்லிவிட்டு, ‘இவ்வாறு எல்லாம் இருந்ததாக நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது, செவிவழியாகப் பரவிவரும் கருத்து என்று சதுரகிரி தல புராணம் சொல்கிறது, சதகம் பேசுகிறது, கலம்பகம் உரைக்கிறது’ என்ற ரீதியில் நிறைய காணக்கிடைகின்றன.
தன்னுடைய பெருநூல் காவியங்களில் எங்குமே போகர் பொய்யுரைக்கவில்லை என்கிறபோது தன்னைப்பற்றிய எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகவே சொல்லியுள்ளது தெரிகிறது. ஏதேனுமொரு தல புராணம் நூலில் சுவடிப் பிரதியின் மூலப்பாடல்களும் உரையும் இருந்தால் மட்டுமே நாம் அந்தச் சித்தரைப்பற்றிய வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்தலாம். மூலப் பாடல்கள் இயற்றியது யார், பதவுரை எழுதியது யார், புராணம் மேற்கோள் காட்டும் வரிகள் எது என்று எதுவுமே இல்லாமல் கிளுகிளு கதைகள்போல் அதைப் பகிரவும் செய்கிறார்கள். ஊடகத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவோர்கூட நம்பகத்தன்மை இல்லாததை அப்படியே குறிப்பெடுத்துச் சொல்கிறார்கள்.
நல்ல வேளையாக, இதுபோன்ற எதையும் நூல் ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு என் கட்டுரைகளில் நான் சொல்வதில்லை. நானே மூலப்பாடலைப் படித்து அப்போது எழும் சந்தேகத்தைப் போகரே எனக்கு விளக்கி அறியப்படுத்தினாலோ, அல்லது தேர்ச்சிபெற்ற மூத்த பண்டிதர்கள் வாயிலாகக் கேட்டறிந்தாலோ மட்டும்தான் அதைப்பற்றி மேற்கோள் காட்டுவேன். இல்லாவிட்டால் அதுபோன்ற சங்கதிகளை ஓரங்கட்டுவேன்.
முகநூலில்/ பிளாக்களில் இதுபோல் கட்டுரைகள் சுற்றி வரும்போது, முற்போக்கு ஆசாமிகள் இதுதான் தருணம் என தம் சொந்த சாகித்தியங்களையும் சேர்த்து ஏற்றி விடுவது உண்டு. நாம் படிக்கும் எதுவாகினும் அதில் மெய்ப்பொருள் காண்பதே அறிவு! கலியுகத்தில் இவ்வாறு எல்லாம் செயல்கள் பெருகிவந்தால் அதுகாறும் பொதுச்சுற்றில் இருந்த சில நூல்களைச் சித்தர்கள் அடியோடு முடக்கி/ மறைத்து விடுவார்கள்.
-எஸ்.சந்திரசேகர்



ஊறும் களிம்பு!

முகநூல் நண்பர் ஒருவர் கடந்த மாதம் ஒரு பாடலை அனுப்பினார். அதன் உட்பொருள் விளக்கத்தை அவருடைய குருநாதர் கோரியதாகச் சொன்னார். எனக்குத் தெரிந்தவரை அதற்கு விளக்கம் கொடுத்தேன்.
















'
'சார், சித்தர் பரிபாஷை அறிய முன் + பின் பாடல்களை கோர்வையாய் வாசித்தால்தான் ஓரளவுக்கு விளங்கும். இங்கே நாலு வரியில் உள்ள சங்கதிகளை நான் புரிந்து கொண்டதுவரை சொல்கிறேன். மேலோட்டமாகப் படித்தால் இது வைத்தியம்போல் தெரியும் ஆனால் யோக சக்கரத்தில் நம் உடம்பில் அகத்தே நடக்கும் ரசவாதம் போல் விளங்குகிறது. ரசவாதம் புறத்தே உலோகத்தில் மட்டும் நடப்பதல்ல, அது நம் உள்ளேயும் நடக்கும்.
கால் முன்னெலும்பு நஞ்சேறியது. மூலாதாரம் முதல் பாதம்வரை நாகலோகம். நாகம் என்றால் குன்டலினி பாம்பு அதன் நீர்மம் நஞ்சு. அது மேலே ஏறி திடமாகிய பின் ரத்தத்தில் ஊறும் அதன் அதிர்வை காட்டும். (Cells get activated when kundalini rises through àràdhàra chakras). இதன் விளைவு நாவில் உணரலாம் என்று மறைப்புடன் சொல்கிறது. (சித்த வைத்தியத்தில் விஷக்கடி முறிவுக்கான மருந்தின் சுவை நாவில் இனிப்பாக இல்லாமல் கசப்புச் சுவை தெரியும்வரை சிகிச்சை தொடரும்.)
மூலாதாரம் தூண்டப்பட்டால் அது உடலில் எல்லா நீர் திரவங்களையும் வேதிக்கச் செய்து அது விசுத்திக்கும் ஆக்ஞாவுக்கும் இடையே வெளிப்படும். வாயில் இரும்பை/ செம்பை வைத்துக்கொண்டு துப்பினால் தங்கமாவதும், உள்ளங்கையில் பாதரசம் வைக்க அது ரசமணியாகக் கட்டுவதும் வாதவேதை வித்தையே. வள்ளலார், சேஷாத்ரி சுவாமிகள், மானூர் சுவாமிகள் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டில் செய்து காட்டியவை.
சார், இவ்வரிகள் எந்த நூல்/ பாடலில் இருக்குதுங்க? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததை விளக்கினேன். உங்கள் குருநாதர் தரும் முழு விளக்கத்தை எனக்கு அனுப்பினால் நானும் தெரிந்து கொள்வேன்!'
இன்னும் பதிலுக்குக் காத்திருக்கிறேன். 🌺
- எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

ஆடிக் கிருத்திகை!

ஆறுபடை வீடிருந்தும்  உன்னை எங்கும் தேடுகின்றேன்

ஆகமம் போற்றும் உன்னை வேள்வியில் தேடுகின்றேன் 


வீரன்படை திரண்டிருந்தும் ஓங்கும் வினையோ ஓயவில்லை

வேலன்படை காத்துமென்ன பிறவி அறுக்க முடியவில்லை

என் சிந்தையுள் புகுந்தவா குருகுகா ஷண்முகா

உன் விந்தையுள் விந்தையா சொல்லையா முருகையா ... 


சீலன்படை வென்றுமென்ன குத்தும் இன்னல் தீரவில்லை

ஆற்றுப்படை பெற்ற நீயோ அறிந்தும் ஏதும் செய்வதில்லை   

என் மனதினுள் நிலைத்தவா கொற்றவா சித்தையா

என் சீவனுள் கலந்தவா காத்தருள் கந்தையா  

- எஸ்.சந்திரசேகர் 



புதன், 14 ஜூலை, 2021

கட்டுச் சோறு!

‘வாங்க சாமி! எல்லாரும் சுகமா இருக்கிறீங்களா? ஆடி வெள்ளில ஆத்தாளுக்கு பொங்கல் வெச்சி புடவை சாத்தி அபிஷேக ஆராதனை செய்ய வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம். இப்படி வந்து உக்காருங்க. சித்த நேரத்துல ஆயத்தமாயிடுவேன்' என்றார் பண்டாரம். குழந்தைவேல் கவுண்டர் குடும்பத்தார் அந்த ஊர் மகாமாரியம்மன் கோயிலில் வழிவழியாகப் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.

‘மாலைகள் எல்லாம் புதுசா கட்டித்தொடுத்துகிட்டு இருந்தாங்க அதான் நாமக்கல் தாண்டி வர்ற வழியிலே வாங்கிட்டோம்' என்று சொல்லியவாறு பட்டுப்புடவை ரவிக்கைத்துணி மற்றும் பூசைப் பொருள்கள் யாவற்றையும் தாம்பாளத் தட்டில் நிறைவாய் வைத்துவிட்டு உதயகுமாரன் குடும்பத்தார் மகிழ்ச்சியும் பயபக்தியுடனும் அமர்ந்தனர்.
சுமார் நானூற்று ஐம்பது வருடங்களாக அந்தவூர் கிராமத்தில் மூதாதையர்கள் வாழ்ந்து, நிலங்களை ஆண்டு அனுபவித்து, பயிர் விளைத்து, குல தெய்வத்திற்குச் சீரும் சிறப்புமாய்க் கோயில் கட்டி, பூசைகள் செய்து விழா எடுத்து வழிபட்ட ஊர். காலப்போக்கில் இந்த வம்சாவழியினர் புலம் பெயர்ந்து ஈரோடு, கரூர், சென்னையில் குடியேறிவிட்டனர்.
நதிக்கரை மீது அமைந்துள்ள கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களில் மஞ்சளும் கரும்பும் விளைந்து காற்றில் அசையும்போது அங்கு வீசும் நறுமணம் நம் ஆன்மாவைத் தொட்டுவிட்டுப் போகும். நிசப்தமான சூழலில் எங்கோ கூவும் குயிலும் கரையும் காக்கையும் மௌனத்திற்கு அழகு சேர்க்கும். தெய்வீகம் குடிகொண்டுள்ள தலம் என்பதைப் பூரணமாக மனமும் உடலும் புரிந்து கொள்ளக்கூடிய தருணமது.
சற்று நேரத்திற்கெல்லாம் அன்றைய பூஜை ஆரம்பமானது. பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வித்து வஸ்திரம் அலங்காரங்கள் சாற்றி நைவேத்தியம் படைத்துத் தூபதீப ஆராதனையுடன் இனிதே தொடங்கியது. சந்தன கருப்புசாமிக்கும் ஆராதனை செய்தபின், இறுதியாக மகாமாரியின் கருவறைக்குச் சென்று திரையை மூடினார். உள்ளே அம்மனுக்கு நீராட்டி, சந்தனம் மஞ்சள் பொலிவுடன் பூசி, சாற்றுவதற்கு அளித்த புதுப்புடவையை நேர்த்தியாக முடிந்து, அலங்காரம் செய்து, கண்மலர்கள் வைத்து, மாலைகள் அணிவித்து, வேப்பிலைகள் புடைசூழ திவ்யமாக அம்மனை எழுந்தருளச் செய்திருந்தார்.
வந்தோர் அனைவரும் கருவறை முன்னே வரிசையில் கண்கொட்டாமல் திரை விலகக் காத்திருந்தனர். மணி அடித்ததும் திரை விலக, சமைத்த இனிப்புப் பொங்கல் நைவேதியத்தைப் படைத்து, கற்பூர தீப ஆரத்தி எடுத்து அனைவருக்கும் தீர்த்தமும் குங்குமப் பிரசாதமும் தந்தார். சிறப்பாகப் பூஜைகள் செய்துவைத்த பூசாரிக்குத் தக்க மரியாதையும் சம்பாவனையும் உதயகுமாரன் குடும்பத்தார் வைத்துக் கொடுத்தனர்.
கோயிலை வலம் வந்தபின் ஆங்காங்கே நின்று படங்கள் எடுத்துகொண்டபின் சற்றே மதில் சுவரோரம் வந்து அமர்ந்தார்கள். இயற்கையை ரசித்துக்கொண்டே பழைய சங்கதிகளை அலசி பேசிக்கொண்டனர்.
“நம்ம முப்பாட்டன் ஓட்டன் வாழ்ந்த வீடு இப்போ இல்லை. சுமார் எண்பது வருஷங்களுக்கு முந்தி அதோ அந்தச் சோளக்கொல்லைக்கு அந்தண்ட இருந்துதாம். கொள்ளுப்பாட்டிக்குக் கல்யாணமான பிறகு கொஞ்சகாலம் இங்கே வாழ்ந்துட்டு சிதிலமடைஞ்ச அந்த வீட்டை மேற்கொண்டு மராமத்து பண்ணமுடியாத நிலையில அதை வித்துப்போட்டு அக்கரையிலே வந்து குடியேறினாங்கனு கேள்விபட்டிருக்கேன்” என்றார் உதயகுமாரன்.
“அப்பா, நாம இங்கேயே ஒரு வீடு புடிச்சு இருந்துட்டா, நல்லா இருக்குமில்ல. ஓடுற நதி, பச்சை பசேல்னு பூமி, மஞ்சள் மார்கெட், கரும்பு பிழிஞ்சு சக்கரையாக்குற பண்ணை, இப்படி எல்லாமே இருக்கு. என் பள்ளிக்கூடம் ஆண்டு பரீட்சைக்கு லீவு விட்டா பேசாம இங்கேயே வந்து இருக்கலாமா?” என்றாள் உதயகுமாரின் மகள்.
“இல்லடா. இப்போ இங்கே நமக்கு செட் ஆவாது. இங்கே பொழுது போக ஒண்ணுமே இல்லை. சொந்தமா வயக்காடு தொழில் ஏதேனும் இருந்தா பரவாயில்லை, நாள் பூராவும் இங்கே உக்காந்து என்ன செய்ய? அவசரத்துக்கு சாமான் வாங்கணும்னா பக்கத்துப் பெரிய ஊருக்குத்தான் போகோணும். கார் பைக் இல்லாம முடியாது. இந்தபக்கம் பஸ் ஓடுதானு தெரியலை. இதுவரைக்கும் கண்ணுல படலையே! நதிக்குக் குறுக்கால பிரிட்ஜ் இன்னும் போடலை அதனால பரிசல் புடிச்சுத்தான் அக்கறைக்கு போகோணும்டா. நம்ம மூதாதையர் வாழ்ந்த பூர்வீக பூமியே இப்போ நமக்கு வேத்து ஊரா ஆயிட்டு பாத்தியா? இதுதான் யதார்த்தம். இந்த பூமி நமக்கு இப்போ சொந்தம் இல்லைனாலும் குல சாமி நமக்குச் சொந்தம்டா. நம்ம குலதெய்வம் மட்டும் சுமார் நானூறு வருஷமா இந்த ஊர்ல இருந்துகிட்டு நம்மளை எல்லாம் பாத்துக்குறா.”
இவர்கள் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த பூசாரி, “ஆமாங்க. உங்க முப்பாட்டன் காலத்துல இங்கே நிலநீச்சு நிறைய இருந்துச்சுன்னு என்ற பாட்டனாரு சொன்ன ஞாபகம் இருக்குங்க. நாங்களும் இந்த ஊர்ல இல்லீங்கணா. பக்கத்து கிராமம். பூசைக்கு வாராங்கன்னு சொல்லிப்போட்டா அப்போ மட்டும் வந்து கோயில் நடை திறந்து வெச்சிருப்பேனுங்க. கோயிலுக்கு வரவு செலவு எல்லாம் நம்ம பங்காளி மோகன் தம்பிதான் இன்னிவரை பாத்துகிறாருங்க” என்றார்.
“நீங்க காலையில எப்போ சாப்பிடீங்க? ஆத்தாளுக்கு அஞ்சு ஆழாக்கு போட்டு பொங்கல் செய்தேனுங்க. ஒரு இலையிலே வெச்சி தாரேன் இன்னும் தாராளமா சாப்பிடுங்க. தூக்குல எங்களுக்கும் நிறைய இருக்கு” என்றார் பூசாரி.
“பூசாரி ஐயா, சித்த முந்தி பிரசாதம் சாப்பிட்டதே போதும். நாங்க புறப்படும்போதே சோறு கட்டிக்கிட்டு வந்தோம். இன்னும் பசிக்கலை ... கொஞ்சம் உச்சி நேரம் ஆகட்டும்னு இருந்தேன். பூஜை ரொம்ப சிறப்பா செய்து வெச்சீங்க. ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு ஆத்ம நிறைவுங்க. அப்ப நாங்க புறப்படறோம். இப்போ கிளம்பினாதான் ராத்திரிக்குள்ள வீட்டுக்குப் போய் சேர்ந்திடலாம்” என்றார் உதயகுமாரன்.
அங்கிருந்து நகர மனமில்லாமல் குடும்பத்தார் அனைவரும் வந்து காரில் ஏறிக்கொண்டனர். “சார், வேறு எங்காவது கோயிலுக்கு போகணுமா?” என்று டிரைவர் கேட்டார். “இல்லீங்க. இன்னும் முடிவாகலை. போகும்போது நடை திறந்திருந்தா பக்கத்தூரு சிவன் கோயிலுக்குப் போகலாம். அதுக்கு முன்னாடி வழியிலே எங்காவது சாப்பாடு முடிச்சிப்போம்” என்றார் உதய்.
கோயிலை விட்டுக் கிளம்பி ஐந்து நிமிட தூரம் போயிருப்பார்கள். “இப்பதான் எனக்கு கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு. மெயின் ரோடுக்கு போகுறதுக்கு முன்னாடி இந்த வயகாட்டு பக்கம் ஓரமா மரத்தடியில உக்காந்து சாப்பிடலாம். என்ன சொல்றீங்க?” என்றாள் அவர் மனைவி. “ஆமாம்மா. இங்கேயே இருந்து நாம சாப்டுட்டு போகலாம்” என்றாள் மகள்.
அச்சமயம் கோயிலிருந்து பூசாரியின் ஃபோன் அழைப்பு வந்தது. “சாமி, நீங்க ரொம்ப தூரம் போயிட்டீங்களா?” என்றார்.
“இல்லீங்க. இன்னும் மெயின் ரோடுக்குப் போகலை. தபால் ஆபீஸ் சமீபத்துலதான் இருக்கோம். என்ன விஷயங்க?” என்றார் உதயகுமாரன்.
“நீங்க கொண்டு வந்த ஜிப் போட்ட ஒரு பேக் இங்கிருக்கு. அதுல பிரசாதம், மாலை, இத்யாதி எல்லாம் இருக்குங்க” என்றார். “இதோ வர்றோம்” என்று சொல்லிவிட்டு வண்டியை திருப்பிக்கொண்டு மீண்டும் கோயிலுக்கே போனார்கள்.
“வாங்க, உள்ளே உங்க பையை மறந்து வெச்சிடீங்க போல. நடையை சாத்திட்டு போகலாம் இருந்தேன், கண்ணுல பட்டுதுங்க”’என்றார் பூசாரி.
“ஏதோ காரணத்துக்கு ஆத்த எங்களை மறுபடியும் உள்ளே வந்து போகச் சொல்றா போல” என்று உதய் சொன்னார்.
“அப்பா, வந்தது வந்துட்டோம் இங்கேயே உக்காந்து சாப்டு போகலாம்” என்று சொல்ல, உதய் “பூசாரி ஐயா, இங்கே உக்காந்த்து நாங்க சாப்டுட்டு போகலாமுங்களா?” என்று கேட்டார்.
“என்ன இப்படி கேட்டுபோட்டீங்க? அந்த மண்டபத்தைச் சுத்தம் செய்து தரேன். இங்கேயே இருந்து திருப்தியா சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு உடனே துப்புரவாகப் பெருக்கி சுத்தம் செய்து தந்தார்.
“பூசாரி ஐயா, நீங்களும் வந்து சாப்பிடுங்க” என்று அழைப்பு விடுக்க, “இருக்கட்டும் சாமி, களத்துமேட்டு வேலை பாக்கி இருக்கு. அது முடிச்சதுக்கு அப்புறம்தான் மதியம் சாப்பிடுவேன். நீங்க சாப்பிடுங்க. குடிக்க தண்ணி வேணும்னா அதோ குழாயில வருது. இரண்டு மாசம் முந்திதான் மேல்தொட்டி கட்டினோம். நான் கிளம்பறேன். என் பங்காளி தம்பி இங்கேதான் இருப்பாருங்க” என்றார்.
காரிலிருந்து இறக்கப்பட்ட தூக்கு, சம்படம், கரண்டி, பாக்குமட்டைத் தட்டு, தண்ணீர் பாட்டில், ஊறுகாய், சிப்ஸ் பொட்டலம், எல்லாமே மண்டபத்தில் வரிசைகட்டி இடம் பிடித்தது. வாழை இலை பரப்பி வைத்து மூடிய தூக்கைத் திறந்ததும் தயிர் சாதம், புளி சாதம் ‘கமகம’ என்று நாசிக்கு மணம் வீசிப் பசியைத் தூண்டியது. பரிமாறப்பட்ட உணவை எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் முன், உதயகுமாரன் அந்த வாழை இலையில் உணவை வைத்து மண்டபத்தின் பின்பக்கம் வைத்துவிட்டு வரப்போனார்.
வெட்டவெளியைப் பார்த்தவாறு “ஆத்தா, உன் கோயில்ல சாப்பிடறோம். நீயும் எங்களோடு சாப்பிடு தாயி” என்று சொல்லும்போது, ஒரு ஒடிசலான கிழவி புதர் அருகிலிருந்து வெளிப்பட்டாள். அவள் கொப்பு முடிந்து, பச்சை குத்திய கைகளுடன், முழங்கால் அருகே சேலை கிழிசலுடன் இருந்தாள்.
“நல்லதா போச்சு, இந்தா நீயே சாப்பிடு தாயி. இதுல தயிர் சாதம், புளி சாதம் எல்லாம் இருக்கு. நீ சாப்பிடு. இன்னும் வேணும்னா கேளு. நாங்க மண்டபத்துலதான் உக்காந்து சாப்பிடுறோம்” என்றார். உணவை மகிழ்வுடன் வாங்கிக்கொண்ட அவள் மண்டபத்தின் பின்னே புதர் அருகே குந்தியிட்டுக்கொண்டு அள்ளி எடுத்துச் சாப்பிடலானாள்.
கொண்டுவந்த பதார்த்தங்களை இவர்களும் சாப்பிட்டு முடித்துக் குழாயருகே பாத்திரங்களைக் கழுவித் தேய்த்து எடுத்துகொண்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்து அமர்ந்தனர். உதயகுமார் மண்டபத்தின் பின்னே சென்று, “தாயி, தண்ணி பாட்டில் இந்தா இருக்கு, குடிச்சுக்க” என்றார்.
அந்தப் பொக்கைவாய்க் கிழவி சிறு பாட்டிலைப் பெற்றுக்கொண்டு, “தம்பி, ஆத்தாளுக்குப் பொங்க வெக்க வந்தியா? எனக்கு ஒரு சேலை வாங்கி கொடுப்பா, இது நைந்து கிழிஞ்சு போச்சு” என்று கேட்டாள். திடீரென புடவைக்கு எங்கே போவது? இந்தக் கிழவி சமயம் சந்தர்ப்பம் தெரியாமல் கேட்கிறாளே என்று நினைத்துக் கொண்டார்.
“தாயி, கொண்டுவந்த ஒரு புடவையை ஆத்தாளுக்கு சாற்றினோம். நீ இப்போ திடீர்னு கேட்டா இந்த கிராமத்துல நான் எங்கே போகட்டும் சொல்லு? நான் வெளியூரு” என்று தன் இயலாமையைச் சொன்னார்.
அப்போது, கருப்புசாமி சன்னதி சுவருக்குப் பின்புறமாக நதிக்கரைக்குப் போகும் ஒத்தையடி பாதையில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்த சந்தனபொட்டு குங்குமம் வைத்த மீசைக்கார வியாபாரி ஒருவர் “சென்னிமலை கைத்தறி, சுங்கிடி, நூல் புடவை, ரவிக்கைத் துணி, சவுக்கம்” என்று குரல் எழுப்பிவாறு விற்றுக்கொண்டு போனார்.
“புடவைக்காரரே! கொஞ்சம் இப்படி வாங்க. சாயம் போகாத கனமில்லாத ஒரு நல்ல நூல் புடவை கொடுங்க. தாயி! சுவருக்கு அந்தப்பக்கம் அவர் நிக்கிறாரு ஒரு புடவை எடுத்துக்க” என்றார். அவள் ஆசையாய் ஒரு கைத்தறி நூல் சேலையும் துவட்டும் சவுக்கமும் விரும்பி எடுத்துக்கொண்டு, “தம்பி, இது போதும்” என்றாள். வியாபாரி சொன்ன முன்னூறு ரூபாயைத் தந்து அனுப்பினார்.
பொக்கைவாய் கிழவிக்கு ஒரே சந்தோஷம். உதயகுமாரிடம் அவள், “நல்லா இரு” என்று வாழ்த்திவிட்டு, “இந்தா ராசா, கோயில் மரத்துல பரிச்சது. சாப்பிடு” என்று சொல்லி ஒரு மாம்பழத்தைத் தந்தாள்.
“தாயி, உனக்கு வெச்சிக, பசிச்சா சாப்பிடு” என்றார். அதற்கு அவள், “பொக்கைவாய்ல நான் பழத்தை உரிச்சுக் கடிக்க முடியாது, சிரமம். நீயே சாப்பிடு” என்றாள். அவள் தந்த பழத்தைப் பெற்றுக்கொண்டு மண்டபத்திற்கு வந்து உட்கார்ந்து குடும்பத்தாருடன் நறுக்கிச் சாப்பிட்டார்.
“அப்பா, எங்கே போனீங்க? ரொம்ப நேரமா ஆளைக் காணோம்”’என்றாள் மகள்.
“அங்கே பின்னாடி தங்கி இருக்கிற ஒரு ஏழைக் கிழவிக்குச் சாப்பாடு தரப் போயிருந்தேன்” என்றார்.
“அப்படியா சரி, நான் வண்டியில போய் உக்காந்துகிறேன், பொறுமையா வாங்க” என்றாள்.
பூசாரியின் பங்காளி மோகனிடம் நன்றி சொல்லிவிட்டு வர உதயகுமார் போனார். “அப்ப நாங்க புறப்படறோம், மறந்துபோன லக்கேஜ் எடுக்க வந்த சாக்குல திருப்தியா இங்கே உக்காந்து சாபிட்டோம். நீங்களும் சிரம் பாக்காம இடத்தைச் சுத்தம் செய்து தந்தீங்க” என்றார்.
“இல்லையா பின்ன? தன் குழந்தைங்க அவங்க வீட்டிலேர்ந்து கட்டிக்கிட்டு வந்த சோறுனா ஆத்தாவுக்கு கொள்ளைப் பிரியம். அதான் அந்த வாசம் அவளை இழுக்க, கொஞ்ச தூரம் போன உங்களை ஏதோ காரணத்துக்காக மீண்டும் உள்ளே வந்து உக்காந்து சாப்பிடனும்னு ஆசைப்பட்டா” என்றார் மோகன்.
“சார், நீங்கதான் இந்தக் கோயில் தோப்பு எல்லாம் பாத்துகரீங்களா? மாம்பழம் ரொம்ப சுவையா இருந்தது”’என்றார்.
“இல்லீங்களே, இங்கே கோயில் வளாகத்துல வெறும் தென்னை மரங்கதான் இருக்கு, அதோ பாருங்க சுத்தி இவ்ளோதான் இருக்கு. மாமரம் எதுவும் இல்லை” என்றார்.
“இந்த மண்டபத்துக்குப் பின்னாடி புதர்கிட்டே தங்கி இருக்கிற கிழவி இங்குள்ள மரத்துல பறிச்ச பழம்னு சொல்லிக் கொடுத்தாளே!” என்றார்.
“எனக்குத் தெரிஞ்சு இங்கே கிழவி யாரும் இல்லீங்களே. மண்டபம் பின்னாடி தங்கிகுற மாதிரி இடமில்ல. யாரைச் சொல்றீங்களோ தெரியலை” என்றார் மோகன்.
நடந்ததைச் சொன்னார். உடனே கண்கள் விரிய மோகன் ஆச்சரியத்தில் திளைத்தார். “சார், சுவத்துக்கு அந்தப்பக்கம் நதிக்குப் போகிற ஒத்தையடி பாதையிலே சைக்கிள்கூட போகாது. கருவேலம் முள் செடி நிரம்ப இருக்கும். நடமாட்டமே இருக்காதுங்களே. அப்போ நீங்க சொல்ற அந்த வியாபாரி இந்த சந்தனக் கருப்புதான். சேலையைக் கேட்ட அந்தக் கிழவி இந்த ஆத்தாதான். பாருங்க! இங்கே ஒரு திருவிளையாடலையே நடத்திட்டா” என்று மோகன் சொன்னதும் மயிர் கூச்செறிய திகைப்பே மேலோங்கியது.
மண்டபத்துக்குப் பின்பக்கம் அஞ்சுக்கு எட்டு அளவுலதான் இடம் இருக்கு. அங்கே ஒரு பாத்ரூம் கட்டினா உங்களைப்போல ஊர்ல இருந்து வர்றவங்களுக்கு வசதியா இருக்கும். அதுக்கு இனிமேதான் நிதி சேக்கணும் என்று மோகன் சொன்னார். “ஆகட்டும்ங்க, ஊருக்கு போய் என்னால் முடிஞ்சதை கட்டுமானத்துக்கு அனுப்புறேன்” என்றார் உதயகுமார். கட்டுச் சோறு சுவைத்த மயக்கத்தில் ஆத்தாளும் களிப்பில் இருந்தாள்!
-எஸ்.சந்திரசேகர்



ஒரு சிலை மூன்று கொலை

 மறுநாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் ராமன்குட்டி எப்போதும்போல் வாக்கிங் போக வந்துவிட்டார். பால் பாக்கெட்டும் செய்தித்தாளும் காம்பவுண்ட் கேட்டுக்கு உள்ளே பையில் தொங்கிக் கொண்டிருந்தன. வாசல் இரும்பு கேட்டைத் திறந்துகொண்டு போர்ட்டிகோவைக் கடந்து படியேறி வந்தார். வாசல் கதவு திறந்திருந்ததால் நேராக உள்ளே நுழைந்தார்.

“குட்மார்னிங் மிஸ்டர் கதிரேசன். ஐ ஆம் ரெடி. போலாம்” என்று சொல்லிக்கொண்டே சோபாவில் வந்தமர்ந்தார். சில வினாடிகள் ஆகியும் யாரும் வெளிப்படவில்லை. இரு முறை அழைத்துப் பார்த்தார். பிறகு அவரே எழுந்து அழைத்துக் கொண்டே உள்ளே போனார். மின்விசிறி படுக்கறையில் ஓடிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி!
படுக்கையில் சரோஜா கழுத்து அறுபட்டுக் கிடந்தார். அதைப் பார்த்தவர் அதிர்ச்சியில் ‘மிஸ்டர் கதிரேசன் ... கதிரேசன்’ என அழைத்தபடியே உள்ளே ஓடிப்போனார். அங்கே சமையற்கட்டில் ஆழமாகக் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கதிரேசன் குப்புறக் கிடந்தார். ஐயோ என பறிப்போய் அந்த வேலைக்காரி எங்கே என பார்த்தார். கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அவள் குளியலறைக்கு முன்பாக எந்த அசைவின்றிக் கிடந்தாள்.
வயதான ராமன்குட்டிக்கு ரத்தக்கொதிப்பு அதிஉச்சத்தில் எகிறியது. குளிரிலும் உஷ்ணம் அதிகம் தெரிந்ததால் வியர்த்துக் கொட்டியது. முகத்தைத் துடைத்துவிட்டு ஆசுவாசப்பட அப்படியே சோபாவில் சற்று உட்கார்ந்து பிராணாயாமம் செய்தும் ஓரளவுக்குத்தான் பதற்றம் கட்டுப்பட்டது. பயத்தில் மூச்சு இரைக்க, தொண்டை வரண்டுபோக, உடனே தண்ணீர் குடித்தாக வேண்டும் போல் இருந்தது. ஆனால் தப்பித்தவறிகூட எதையும் தொட்டுவிடக்கூடாது என்று அவருடைய உள்ளுணர்வு எச்சரித்ததும் சுதாரித்துக் கொண்டார்.
மீண்டும் உள்ளேபோய் ஒவ்வொருவரின் நாசிக்குக் கீழ் விரல் வைத்து மூச்சு உள்ளதா என பார்த்தார். யாருக்கும் ஓட்டம் இல்லை. உடனே எதற்கும் இருக்கட்டும் என்று ஒவ்வொருவரின் கோலத்தையும் தன்னுடைய ஹை ரெசல்யுஷன் மொபைல் காமிரா போனில் நிறைய கோணங்களில் படம் எடுத்து வைத்துக் கொண்டார். நாளை குறுக்கு விசாரணையில் தான் நிரபராதி என இவர் தரப்பில் நியாயத்தை விளக்க உதவும் என்பதால் எடுத்து வைத்துக்கொண்டார்.
“ஹலோ, போலீஸ் ஸ்டேஷன்? சார், நான் ராயல் அவென்யு தெரு ஸ்டேட் பேங்க் பில்டிங் மேலே இருக்குற வீட்டிலிருந்து பேசறேன். இங்கே பில்டிங் ஓனர் கதிரேசன் வீட்ல மூணு கொலை நடந்திருக்கு. உங்க டீம்மோட உடனே வாங்க சார். நான் அவரோட நண்பர் ராமன்குட்டி பேசறேன்” என்று சொன்னார். தன் வீட்டிற்கும் தகவல் சொன்னதுடன் போலீஸ் வரும்வரை தான் அவசியம் இங்கிருக்க வேண்டும் என்பதையும் சொன்னார்.
விளக்குகள் ஒளிர சைரன் ஒலியெழ போலீஸ் வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வீட்டின் முன் வந்து நின்றது. அந்த காவல்நிலைய ஆய்வாளர் வீரபெருமாள் சம்பவம் நடந்த விலாசத்திற்கு விரைந்து வந்தார். அங்கே வழிமேல் விழி வைத்து ராமன்குட்டி காத்துக் கொண்டிருந்தபோது காவல் ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
“சார், ஐ ஆம் ராமன்குட்டி. உங்களுக்கு நான்தான் தகவல் சொன்னேன். பல வருஷமா தினமும் காலையில நானும் அவரும் வாக்கிங் போவோம். இன்னைக்கு நான் ஆறு மணிக்கு உள்ளே வந்து பாத்தா இப்படியொரு பயங்கரம். நான் இந்த ஏரியா ரெசிடன்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் செகரட்ரி” என்றார்.
“சார், இங்கே எந்தப் பொருளையும் நீங்க தொடலை இல்ல?”
“நோ. நாட் அடால்! எதையும் தொடக்கூடாதுன்னு கவனமாதான் இருக்கேன்.”
“கான்ஸ்டபிள், கீழே சிதறிக் கிடக்குற பொருள்கள் எதையும் விடாம கலக்ட் பண்ணுங்க. ஃபாரன்சிக்குகு அனுப்புங்க” என்று முக்கியமான கட்டளைகள் தந்தார். விரல்ரேகை நிபுணர் மற்றும் போட்டோகிராபர் தத்தம் பணிகளைக் கவனத்துடன் செய்துகொண்டிருந்தனர். இது எப்படி நடந்திருக்கும் என்று தன் மனக்கண்ணால் ஆய்வாளர் யூகம் செய்துகொண்டே நகர்ந்து போனார்.
-எஸ்.சந்திரசேகர்
சமீபத்தில் வெளியான 'ஒரு சிலை மூன்று கொலை' என்ற என் நாவலிலிருந்து ஒரு பகுதியைப் படித்தீர்கள். விலை: ரூ.60
DK Publishers, பேசி: 044-24351283, 9940498436



உயிர்ப்பு

கோயில் மண்டபம் களை கட்டியது. பேச்சியும் சிவனாண்டி குடும்பமும் எல்லோரையும் வரவேற்று அமர வைத்தனர். சிறிய ஹோமம் செய்துவிட்டு தாலியைத் தவசியிடம் எடுத்துத்தர, ஈசன் சாட்சியாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தவசிக்கும் சிந்தாமணிக்கும் திருமணம் இனிதே நடந்தது. காலையிலேயே முஹுர்த்தம் என்றாலும் கூட்டம் இருந்தது.
அழைப்பினர்கள் அனைவரும் இக்கிராமத்து மகளுக்கு நிறைய ரொக்கமும் பொருளையும் பரிசாகத் தந்தனர். கல்யாணி மாமி ஒரு பித்தளை தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் பூ பத்துரூபாய், ரவிக்கை துணி வைத்து அதில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியும் வைத்துக் கொடுத்தாள். “சிந்தாமணி. உன் அம்மா ஆத்து சீரா நினைச்சு வாங்கிக்கோடி” என்று கொடுத்தாள். சிந்தாமணி முகம் மலர அதை வாங்கித்திறந்து பார்த்தாள். பெட்டி நிறைய பல வண்ணங்களில் வளையல்கள், சீப்பு, கண்ணாடி, ஹேர் கிளிப், மற்றும் ஒரு வெள்ளிக்குங்குமச் சிமிழ். அவள் சிமிழை திறந்ததும் தாழம்பூ அரக்குநிற குங்குமம் கும்மென்று தூக்கியது.
“மாமி, குங்குமம் வெச்சி விடுங்க” என்று சொல்லி ஆசி பெற்றாள். வந்தவர்கள் அத்தனைபேரும் கோயில் மண்டபத்தில் அமர்ந்து டிபன் காபி முடித்துக் கொண்டு கிளம்பினர். ஊர் வெட்டியான் மாரி திருநீறணிந்து ஓரமாக அமைதியாய் வந்து அமர்ந்திருந்தான். “ஏண்டா மாரி. இப்பதான் வந்தியா, உன் பொஞ்சாதிய அழைச்சிண்டு வரலியோ? சரி, சீக்கிரம் போய் சாப்பிடு” என்றாள் கல்யாணி.
“அம்மா. மத்தவங்க ஏதாவது நினைப்பாங்களோனுதான் நான் ஓரமா உக்கார்ந்திருந்தேன். பொஞ்சாதி சொல்லி அனுப்பினா. பணக்கார சாதிக்காரங்க வந்தா உன்னை தீட்டுனு நினைக்கப் போறாங்க. நீ ஒதுங்கியே உக்காருன்னு சொன்னா” என்றான்.
“பொறந்தா புருடு தீட்டு, போனாலும் தீட்டுதான். பத்துநாள் கணக்குனு சொல்லி தீட்டு போறதுங்கிறோம். அப்படிப்பாத்தா நம்பளோட ஆன்மா எல்லாமே தீட்டோடவேதான் ஜென்ம ஜென்மாந்திரமா பிறவி எடுத்து திரிஞ்சுண்டு இருக்கு. அதுக்கு என்ன பண்றது? லோகமே தீட்டுதானே? ஆன்மாவுக்கு பிறவி இல்லாம முக்தி கிடைச்சு சிவஜோதில கலக்கிறவரைக்கும் நித்திய தீட்டுதான். பூஜைக்கு தேக சுத்தியோட மடி ஆச்சாரம் தேவைதான். ஆனா உறவுமுறைகள் பந்தத் தீட்டு வந்தாலும் மனசுல அவனை நினைச்சு பூஜை பண்ணமுடியாதா என்ன? மடியா குளிச்சு தேகம் சுத்தபத்தமா இருக்கு. ஆனா ஆரம்பத்துலேயே தீட்டுபட்ட ஆன்மா இதுக்குள்ளதானே அடைபட்டிருக்கு? இந்த உடம்புகூடு நன்னா மடியோடதான் இருக்குனா, அப்போ ஆன்மாவும் மடியாயிடுமா என்ன?
புறம் சுத்தமா இருந்தும் அகம் முழுக்க தீமையா இருக்குற மனுஷாளை என்ன பண்றது? இது எதையுமே புரிஞ்சுகாம ஆயிரம் பேசுவா. அதையெல்லாம் நீ காதுல வாங்கிக்காதே. ஆன்மா வெளியேறின தேகம் நெருப்புல எரிஞ்சு பஸ்மம் ஆகிறவரைக்கும் தட்டிப் புடம் போடறே. அவன் ஆன்மாவை தட்டிப் புடம்போட்டு அது வேகலைனா திரும்ப பிறவி எடுக்க வைக்கிறான். இதுல பாத்தியோ, நீ தேகத்தை கொளுத்தறது அவன் கொடுக்கறதுனு இப்படியே பிறவி விளையாட்டு ஓட்றதுடா. கிட்டத்தட்ட நீங்க ரெண்டுபேரும் சரிசமம்தான். சரி விடு... அவா காசுபணம் இருக்கறவா, அவா பேசறத எல்லாம் காதுல வாங்கிண்டு உன் மனச வருத்திக்கப்படாது” என்றாள்.
ஆன்மாவின் ரகசிய சூட்சுமத்தைப் அப்போதுதான் புரிந்து கொண்டான். மாமியின் தீர்க்கமான வார்த்தைகளில் பிரம்ம தத்துவத்தையே உணர்ந்தான். வந்து போகிற போக்கில் ஈசனின் கோயிலில் பிறவியின் ஆன்மரகசியத்தையும் தன் குலத் தொழிலின் மேன்மையையும் அறிந்து பூரித்துப் போனான்.
இது 'உயிர்ப்பு' என்ற என் நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி. விலை: ரூ.65/-.

DK Publishers, பேசி: 044-24351283, 9940498436 



ஞாயிறு, 20 ஜூன், 2021

வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்

அக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது. மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.






















இதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர், என் பலரும் இயற்றினார்கள். எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்ததால் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.

பஞ்ச மரபு, சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, உதயணன் கதை, சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சித்தர் மடல், மேழி விளக்கம், பரத சங்கிருகம், என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்தும், கல்வெட்டு/ செப்பேடு ஆவணங்களிலிருந்தும் பிரதி எடுத்து நல்ல முறையில் பதிப்பித்தார்‌. உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகள் இவரிடம் வந்ததாம்.

"கொங்குவேளிரின் 'பெருங்கதை'யைத் தேடி உ.வே.சா. ஈரோடு வந்தார். வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரைச் சந்தித்து, "உம்மை யான் நினைத்தபடியே உம் தோற்றம் இருக்கிறது. சங்க நூற்கள் பலவற்றைப் பதிப்பித்த மகிழ்ச்சியினும் கொங்குவேள்மாக்கதை பதிப்பித்ததினால் உண்டான மகிழ்ச்சி பெரியதாயிற்று. அதன் பகுதிகள் சில கிடைக்கவில்லை. அவை உம்மிடம் இருப்பதாகச் சொன்னார்கள். இருந்தால் கொடும். இல்லாவிட்டாலும் அப்பகுதி உமக்குக் கிடைக்கும். கிடைத்தபொழுது என்னிடம் கொடும். அல்லது நீரே பதிப்பித்துவிடும். அது உம்மவர் செய்த நூல், உம் கொங்கு நாட்டு நூல்" என்று கூற, உள்ளம் மிக மகிழ்ந்ததாகத் தம் பஞ்சமரபு (இரண்டாம் பகுதி, முன்னுரை) நூலில் குறிப்பிடுகிறார் தெய்வசிகாமணிக் கவுண்டர்."

பஞ்சமரபு என்ற இசைநூலைத் தொகுத்தளித்ததால் 1975ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய விருதைப் பெற்றார்.

பிற்பாடு ஓய்வு பெறும்வரை எங்கள் ஊர் SSV சங்கர வித்யாசாலா பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். திருப்பாண்டிக் கொடுமுடி தலபுராணம் தொகுத்தளித்தார். கவுண்டர்வாள் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். An author lives for generations through his works என்பது உண்மையே!







ஞாயிறு, 7 மார்ச், 2021

தும்பிக்கையான் தரிசனம்!

அந்தத் திருமணத்தில் நடந்த பூஜையில் 'ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே ...' என்ற மந்திரம் சொல்லப்படும் போது படம் பிடித்தேன். அதில் பதிவானதுதான் இது. 


படம் 1: கணபதி தன் துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிக்கிறார். கீழே இரண்டுதந்தங்கள் தெரிகின்றன.

படம் 2: துதிக்கை நுனியை விரித்து மூச்சு விடுவதைக் காட்டுகிறார்.

இதன்மூலம் நாம் அனைவரும் கணபதியின் தரிசனத்தைப் பெற்றோம். போன வாரம் வாங்கிய என் புதிய மொபைலில் பதிவான முதல் இறை உருவம் இது.

- எஸ்.சந்திரசேகர்