About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 31 ஆகஸ்ட், 2019

அப்படியே ஆகட்டும்!

நாம் பேசும்போது நம்மைச் சுற்றி தேவதைகள் இருந்து கொண்டே இருக்கும். அரூபமாகவோ ரூபமாகவோ இருக்கும். வீட்டிற்கு வெளியே காக்கையாக, வீட்டிற்குள் பல்லியாக இருந்து நம் எண்ண அலைகளை வாங்கிப் படித்துக் கொண்டு பிரதிபலிக்கும். உங்கள் அலுவலக அறையோ, வீட்டினுள்ளோ இதன் தாக்கம் தெரியும். தேக ஆரா வட்டத்தின் சக்தியைப் பொறுத்து இவை நம் எண்ணங்களை மாற்றி அந்நேரம் நம் நாவில் சில தீய/நல்ல சொற்கள் வராமலோ/வருமாறோ செய்யும். அஸ்து தேவதைகளை நாம் மதிக்க வேண்டும். நான் எண்ணற்ற முறை கண்கூடாக அனுபவித்துள்ளேன்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை! அவரவர் மனோ சுத்தியும் சித்தர் வழிபாட்டில் உள்ளதாலும் இத்தகைய அருள்வாக்கு வருவதுண்டு என்றும் சொல்வோர் உண்டு. அது அவரவர் கருத்து.
சில ஆண்டுகளுக்குமுன் நான் பணிசெய்த கம்பனியில் உடன் பணிசெய்யும் நண்பருடன் அவர் துறையின் புராஜக்ட் போக்கைப்பற்றி என் கேபினில் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். ‘என்ன காரசாரமா எதைப்பத்தி பேசறீங்க? எனக்கு ஆரம்பத்துல இருந்து கதை தெரிஞ்சாகணும்’ என்று அவரைக் குடைந்தார்.
‘ஐயே.. என்ன இந்தாளு வந்து இப்படி இம்சை பண்றாரே!’ என்று மனதில் நினைத்தேன். உடனே நான், ‘அது ஒன்றுமில்லீங்க.. அவர் சம்சாரத்துக்கு இது இரண்டாவது மாசமாம்.. அதைப்பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரு.. வேறேதுமில்ல’ என்று அக்கணம் அடித்து விட்டேன். உடனே அவரைப் பார்த்து, ‘கங்கிராட்ஸ் நண்பா’ என்று கைகுலுக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
பேந்தபேந்த முழித்த நம் நண்பருக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. ‘என்ன சார், நீங்க பாட்டுக்கு எதையோ சொல்லிவிட்டீங்க.. அந்த ஆளு ஓட்டவாய்’ என்று சொல்லி சங்கடப்பட்டார். ‘அட, நீங்க வேற! அவரை கலாய்க்கத்தான் சும்மா அப்படிச் சொன்னேன்’ என்று சொல்லி சமாதானம் செய்தேன்.
ஒரு வாரம் கழித்து நம் நண்பர், ‘சார், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நிஜமாவே என் வைஃப் இரண்டு மாசம் கேரியிங்... அன்னைக்கு நீங்க சொன்னதை அவகிட்ட நேத்து சொன்னேன். அவ நம்பல... அவருக்கு எப்படி தெரியும்னு கேட்டா சார்’ என்றார். நண்பர் என்னை வியப்புடன் பார்த்தார்.
‘ஆமா... உங்க சம்சாரத்துக்கே தெரியாதபோது.. எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? சும்மா வாயில் வந்ததை அன்றைக்கு அளந்து விட்டேன்’ என்று சொல்லிச் சிரித்தேன். இப்போது உங்களுக்கு இப்பதிவின் தாற்பரியம் புரிந்திருக்கும். ஆகவே நம் வாயால் கூடுமானவரை யாரையும் தூற்றவோ சபிக்கவோ கூடாது.

No photo description available.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மூளைச்சலவை

19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஜமீன்தார் பண்ணையார் மற்றும் செல்வந்தர்கள் மட்டும் மாளிகைகளில் வாழ்ந்தனர். வீட்டின் கொல்லையில் கிணறும் தோட்டமும் இருக்கும். நதி /ஏரி/ குளம் என நீர்நிலைகளில் தான் குளித்தனர். காலைக் கடன்கள் முடிக்க புதர் /தோப்பு/ வனாந்தரம் என வெட்டவெளிக்குச் சென்றனர். அக்காலத்தில் மாளிகையில்கூட கழிவறை இருந்ததில்லை.

ராஜாங்க சமஸ்தான மேட்டுக்குடியினர் மட்டும் காலில் செருப்பு அணிந்தனர். அவர்களைத்தவிர பிராமணன் உட்பட யாரும் செருப்பு அணிந்ததில்லை. வைதீகர்கள் தோலை அணியக்கூடாது என்ற ஆச்சாரம் இருந்ததால் அவர்கள் வெறுங்காலுடன்தான் எங்கும் நடந்தனர். இதுதான் அன்றைய சமுதாய கட்டமைப்பின் நிலை. இக்காலத்தில்தான் எல்லாம் மாறிவிட்டது.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டில் திராவிட கட்சிகளின் அயராத பிரச்சாரத்தால் அருந்ததியர் (எ) சக்கிலியர் குலத்தினரை நன்கு மூளைச்சலவை செய்வதில் வெற்றி பெற்றன. அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் பகுத்தறிவு ஆலையம் கட்ட அருந்ததியினர் பூமிபூஜை போட்டதை நாம் செய்திகளில் படித்தோம்.

சமுதாயத்தின்மீது அவர்களுக்குள்ள கருத்து என்ன என்று தெரிந்தால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் மாற்றப்பட்டனர் என்பது புரியும்.

"ஆயிரக்கணக்கான வருசமா, ஐயனுங்க நம்மள செருப்பு தெக்க வெச்சாங்க, மலம் அள்ள வெச்சாங்க, இப்பவாது கலைஞர் ஐயாவால அரசாங்க சம்பளம் கெடைக்குது, நம்ம பாட்டன் காலத்துல பழைய சோறு வெங்காயம் கெடைச்சா அதுவே பெரிசு" என்று பேசினர்.

நமக்குத் தெரிந்து 60கள் வரை யார் வீட்டிலும் குளியலறை/ கழிவறை பிரத்தியேகமாய் இருந்ததில்லை. மிஞ்சிப்போனல் வசதி படைத்த சிலர் மட்டும் உலர் கழிவறைகள் (Dry latrines) கொல்லையில் வைத்துக் கொண்டனர். மற்ற எல்லோரும் வெட்டவெளியில் போய்தான் அமர்ந்தனர். அது நிலத்திற்கு உரமானது. எஞ்சியதை பன்றியும் காக்கையும் சுத்தம் செய்தது. வீட்டில் கழிவறை என்பது அநாச்சாரம் என்பதால் பிராமணன் வீட்டில் அக்காலத்தில் இருந்ததேயில்லை. மூவேந்தர்களின் அரண்மனையில்கூட இருந்ததில்லை. அரச குலத்திற்கென அது தனியே கட்டப்பட்டிருந்ததென தொல்லியல் படங்களில் தெரிகிறது. ஆக ஊர் மக்களுக்குச் செருப்பு தைக்கவும் ஊராரின் மலம் அள்ளவும் ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் இருந்ததா என்பது கேள்விக்குறி.

முஸ்லீம் படையெடுப்பிற்குப்பின் சின்னாபின்னமான தேசத்தில் பல குலத்தினர் பிழைப்புக்காக ஏதேதோ வேலைகள் செய்தனர். அப்போதும்கூட தமிழகத்தில் மலம் அள்ளும் கலாச்சாரத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். "என்ன… ஜனங்களின் மலத்தை அள்ளுவார்களா? அள்ளி என்ன செய்வார்கள்?" என்றுதான் அன்றைக்கு விசித்திரமாகக் கேள்வி கேட்டிருப்பார்கள். ஆங்கிலேயர் வருகைக்குப்பின் சமுதாயம் மாசுபட்டது. எல்லோரையும் ஜாதிவாரியாக ஆங்கிலேயன் பார்த்தான். ஏன்? செட்டியார்கள் முதலியார்கள் நாயக்கர்கள் அக்காலத்தில் துபாஷாகவும் பெரும் செல்வந்தர்களாகவும் இருந்து கோலோச்சினர். துரையிடம் செல்வாக்கான இவர்கள் ஜாதிப்பிரிவு நிலைக்கேற்ப பணிகளை உண்டாக்கி அன்றே மாற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

உண்மை நிலை இப்படியிருக்க கல்வியறிவு இல்லாத ஒரு பிரிவினரை அரசியல் ஆதாயத்திற்கு மூளைச்சலவை செய்து, ஆயிரம் வருடங்களாக ஐய்யமார்களுக்குத் தோல் காலணிகள் தைத்தும் மலம் அள்ளியும் தாங்கள் இழிவாக வாழ்ந்து வந்தனர் என்பதை உருவேற்றி அருந்ததியர் மனத்தில் துப்புரவாகப் பதிய வைத்ததில் திராவிடக் கட்சிகளின் அசாத்திய உழைப்பு வெளிப்படுகிறது.

"கோயில் கருவறையில் மூலவரையே இடிப்பார்கள்; தீயவர்கள் மூட மக்களை மூளைச்சலவை செய்வார்கள்; மனிதனின் வாக்கு செல்லுபடி ஆகாது காகிதத்தில் எழுதுவதையே நம்புவான்; மலம் மூத்திரம்கூட விலைக்கு விற்கும் காலம் வரும்" என்று காலக்ஞான தீர்க்கதரிசனத்தில் அன்றே ஶ்ரீவீரப்பிரம்மேந்திரர் சொன்னார்.





புதன், 21 ஆகஸ்ட், 2019

மாசற்ற சோதியன்

“ஆரியம் தமிழோடு இசை ஆனவன்” என்று திருமுறையில் அப்பர் சுவாமிகள் பாடியிருப்பார். இந்த ஆரியன்/ஆரியம் குறிப்பதென்ன? சிவபெருமான். மேன்மையான, அழகான, சிவந்த நிறமுடைய, புலமைமிக்க, ஓதுகிற என்று பலவாறு பொருள் கூறலாம். அவனுக்குத் திருவாதிரையன் என்ற பெயரும் உண்டு. சிதம்பரத்தில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் என்பது வெகு விமரிசையாக நடைபெறும். தேவாரப் பதிகங்களில் இவ்விழாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அந்த நாளில்தான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி வியாக்ரமர் முதலிய ரிஷிகளுக்கு நடராஜர் தரிசனம் தந்தார். அதேபோல் பெருமாளுக்குத் திருவோணம் சிறப்பானது.

ஆங்கிலத்தில் இந்த நட்சத்திரம் Orionis எனப்படுகிறது. அதனால்தான் தொன்மையான, தொடக்கம் அறியாத இனம், மொழி, வகையான சங்கதிகளுக்கு Ori என்பது முன்னொட்டாக வருகிறது. அவை எல்லாமே ஆதிரையனிடமிருந்து வெளிப்பட்டதுவே. நம் தென்னகத்தில் மட்டுமல்லாது எகிப்து கிரேகம் தென்னமரிக்க தேசங்களிலும் சிவனுடைய இந்த நட்சத்திரம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இவை எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு பார்த்தால், பல யுகங்களைக்கண்ட விஞ்ஞான சித்தர் போகருடைய பங்களிப்பு இதில் நிச்சயம் இருக்கும். ஏன்? பூமியின் சப்த சாகரங்களைச் சுற்றிவந்து அங்கெல்லாம் பலகாலம் தங்கி பஞ்சாங்கம், பண்டிகை, விழா, பூஜைகள் என பலவற்றை அமைத்துக் கொடுத்தார். அது பிற்காலத்தில் வெவ்வேறு கதைகளுடன் பரிணாமம் பெற்றிருக்கும். உலகத்திலுள்ள எல்லா பிரமிட்களுக்கும் தில்லையிலுள்ள பொன்னாலான பிரமிட்தான் சக்தியூட்டுகிறது. பரவெளி இணைப்பு, காலப்பயணம் முதல் வேற்றுகிரக சஞ்சாரம் வரை சகலமும் அடங்கும்.

ஓசைக் கொடுத்தவனாக தன் டமருகத்தை பதினான்கு (நவபஞ்ச) முறை சிவபிரான் அடித்தபோது அதிலிருந்து வெளிவந்த சப்தங்கள் ‘மகேஸ்வர சூத்திரம்’ எனப்பட்டது. வேதம் சார்ந்த எல்லா பூஜைகளிலும் இம்மந்திரம் இடம்பெறுகிறது. அந்த வடமொழி சப்தங்களில் கனமான புருஷ அம்சம் இருப்பதால் சமஸ்கிருதத்தை ‘ஈசனின் வடமொழி’ என்று சித்தர்கள் போற்றினர். (வட)ஆலமரம் அடியில் அமர்ந்து தெற்கு நோக்கி குரு தட்சிணாமூர்த்தியாக ஈசனே முனிவர்களுக்கு வேதம் அருளியதால் அது வடமொழி எனப்பட்டது. ‘மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறையோதும் எங்கள் பரமன்’ என்கிறார் அருணகிரியார். 

சிவனிடமிருந்து சக்தி வெளிப்பட்டதைப்போல், தன்னிலிருந்து வெளிப்பட்ட ஸ்திரீ அம்ச சப்தம்தான் தமிழ். அது மென்மையான ஓசையைக் கொண்டது. சக்தி தனித்துவமாகத் தெரிந்தாலும் அவளுக்குச் சிவன்தான் சக்தியூட்டுகிறான். ‘சிவனின்றி சக்தி இல்லை’ என்பதுபோல் இரண்டுமே அவனிடத்தில் சங்கமம். தமிழை சமஸ்கிருதமாக மாற்ற முடியாது. ஏன்? அதற்கான புருஷ சப்தங்கள் இதிலில்லை. தமிழில் சமஸ்கிருதத்திற்கு நிகராக சப்த சுத்தம் இல்லையென்றாலும் ஓரளவுக்கு உச்சரித்து எழுதுவது எப்படி என்று தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் உரைக்கிறது. அதனால்தான் ‘ஷ ஸ ஸ்ரீ ஜ ஹ ப்ஹ’ போன்றவை 247 தமிழ் எழுத்துகளில் வராது. ஆனால் இவையும் உயிருள்ள பீஜங்கள்தான்.

தமிழை மட்டும் ஆராயும் நேசர்களும் பகுத்தறிவு மொழியாளர்களும் இவ்விஷயத்தை எற்க முடியாததால் என்றுமே சண்டை ஓயாது. வடமொழி வேதங்களின் தலைவனான அவனே தமிழ்ச்சங்கத்தின் தலைவன். அதனால்தான் தேவாரம் முழுக்க ஆரியன் என்ற சிவனை போற்றுகின்றனர். இங்கே இணைப்பில் மகேஸ்வர சூத்திரம் உள்ளது. முதலில் உச்சரிப்பு தனித்தனியாகவும் பிறகு கோவையாக இசையுடன் ஒலிக்கும். உடுக்கையை கடைசியாகத் தட்டும்போது ஒலிக்கும் ‘சாப்பு’ சப்தம் அலாதி.

‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து’ என்று மனோன்மணியம் சுந்தரனார் பாடினார். அதுவே தவறு. அது இறை மந்திரமொழி என்பதால் என்றுமே அழியாது. 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதி சொன்னதுபோல் தமிழ்தான் உலகத்து முதுமொழியாகப் பேசப்படுவது. சிவன் எப்படி மறையனோ அதுபோல்தான் அம்மொழியும் மறைந்திருக்கும். மரத்தின் ஆதாரமான வேர் மறைந்திருக்க சக்திதான் விருட்சமாக வெளிப்படும். அதை அழிக்கவோ ஒழிக்கவோ ஒருவனால் முடியும் என்றால் அவன் மனிதனல்ல, ஈசன்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

யாரைக் கேட்க வேண்டும்?

நடிகர் மாதவன் நேற்று தன்னுடைய சமூகதளம் பக்கத்தில் ஆவணி அவிட்டம் (எ) உபாகர்மம் முன்னிட்டு பூணூல் அணிந்து முடித்த படத்தை பதிவிட்டிருந்தார்.

பலர் இதை எதிர்த்து விமர்சனம் செய்திருந்தனர். 'பகிரங்கமாக சாதியைக் காட்டுவது கண்டிக்கத் தக்கது', 'ஆரிய கலாச்சாரத்தை பரப்புவது வேதனை', 'வெறுத்து ஒழித்த இந்துமத சடங்குகள் எதற்கு?', 'பின்புறம் காணப்பட்ட ஷோகேஸ்  பொம்மைகளில் சிலுவை உள்ளது ஏன்?', என்ற ரீதியில் எல்லா மதத்தினரும் பலவித விமர்சனங்களை சந்தடி சாக்கில் போட்டிருந்தனர்.

நாமம் தரித்து சடங்கு/ சம்பிரதாயம் பற்றி அவருடைய பக்கத்தில் பதிவிட அவர் யாரைக் கேட்கவேண்டும்? இதனால் யாருக்கு என்ன தீங்கு வந்தது? இதை எதிர்த்துப்பேச மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவனவன் மாடு அடித்துத் தின்றதையும், கோழியின் கழுத்தைத் திருகி வாட்டி எடுப்பதையும், திராவிட மணியின் மகன்/பேரன்கள் அத்திவரதரின் காலில் வெட்கமில்லாமல் சரணாகதி ஆனதையும், தலைவர்கள் ரம்ஜான் நோன்புக் கஞ்சி குடிப்பதையும், நத்தார் விழாவுக்கு பாதிரிகளுடன் கைக்கோர்த்து கேக் உண்பதையும் துணிந்து பதிவிடும்போது, இந்த இவருடைய தனிப்பட்ட பதிவை எதிர்த்து விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. கருப்புச் சட்டை அணிந்து பகுத்தறிவு நாத்திகம் பரப்பி, திருமால் சம்பந்தப்பட்ட பெயர்களை தன் படங்களுக்குச் சூட்டும் அரசியல் நடிகரா இவர்?

போகிறபோக்கைப் பார்த்தால் தான் இந்து என்று வெளிப்படையாகச் சொல்லவே இருமுறையேனும் யோசிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். இது நல்லதல்ல!

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

நறுமணமும் நினைவுச் சுவடுகளும்

சற்றுமுன் சந்தைத்தெருவில் ஒரு கடையின் முன்பாகத் தாண்டிச் செல்லும்போது அலாதியான ஊதுபத்தியின் நறுமணம் என்னை வசீகரித்து நிறுத்தியது. அக்கணமே நான் என்னுடைய 3-5 வயது பால பருவத்திற்குப் போய்விட்டேன். என்னுடன் விளையாடியவர்கள், வாசலில் இராபிச்சை வருவது, பள்ளிக்கூட நாட்கள், அண்ணன்-அக்காளுடன் நிலாச்சோறு உண்டது, காவிரிப் படித்துறையில் பாறைமீது அமர்ந்து தாத்தா நீச்சல் அடிப்பதைப் பார்த்தது, காலில் ஆறும் புண்ணை மீன்கள் கொத்தியது, என மிகப் பழைய நினைவுகள் என் மனத்திரையில் கதைவோட்ட அசைவுகளாக வந்து போயின.
நம்முடைய மூளையில் ஆல்ஃபேக்டரி பகுதியின் செயல்பாட்டினால் சிறுவயது சம்பந்தமாக பதிந்த நினைவுகளை ஆழத்திலிருந்து பல வருடங்களுக்குப் பிறகும் தட்டி எழுப்பும் ஆற்றல் உண்டு. சிறுவயதில் நாம் உணர்வு பூர்வமாக சில சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தொடர்புப்படுத்தி வைத்திருந்ததை நம்மை அறியாமலே மீட்டுக்கொண்டு வந்ததை அதிவேகமாக இன்று நன்றாக உணர்ந்தேன். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றது.
நம் நாசியில் நுழையும் வாசம் நரம்பு மண்டலம் வழியே மூளையின் அடிப்பகுதிவரைச் சென்று உணர்வுகளைத் தூண்டுகிறது. விறகடுப்புப் புகை வெளிப்படுத்தும் வாசம், அதிகாலை காற்றின் வாசம், சில மலர்களின் நறுமணம், அணைந்த திரிஸ்டவ் எழுப்பும் வாசம், சிசுவின் தோல் வாசம், என பலதும் நம் கடந்தகால நினைவுகளை அடியிலிருந்து மீட்டுக்கொண்டு வரும். அது எத்தனை வருடங்களுக்கு முன்னே இருந்தாலும் உடனே வெளிப்படத் தவறுவதில்லை. வயதாகும்போது இதுபோன்ற நறுமணங்களை நுகர்ந்து மூளையின் செயல்பாட்டை பராமரித்து அதிகரிக்க முடியும். முதுமையை நோக்கிப்போகும்போது அல்ஷீமர்ஸ் /பார்கின்சன்ஸ்/ ஸ்கிசோஃப்ரீனியா நோய்கள் நம்மைத் தாக்காமலிருக்க இது அருமையான யுக்தி.
அப்பருவத்தைக் கடந்தபிறகு இதுபோன்ற நறுமணங்களை அனுபவத்துடன் தொடர்பு படுத்துவது அநேகமாக குறைந்தோ/ நின்றோ போய் விடுவதால், நம்முடைய சிறுவயது நினைவுகள் மட்டுமே தங்கி விடுகின்றது. அவ்வப்போது இதுபோன்ற நறுமணங்கள் மூலம் நம்முடைய வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்த்தால் எத்தனை இனிமையாக இருக்கும்! நியாபக மறதி வராமல் தடுக்கலாம். அதனால்தான் அக்காலத்தில் ஆண்களும் பெண்களும் தலையில் கொண்டையைப் போட்டு அதில் நறுமண மலர்களைச் சூடினர். இது வாசனாதி வைத்திய முறை!
No photo description available.

புதன், 7 ஆகஸ்ட், 2019

ழகர 51


ழகர 51 ஆறுமுகன் துதி


அழகொழுகும் அறுமுகமும்
  தழல் திகழும் எழில் அயிலும்
  விழையநட மிடுமயிலும்      புகழாதே    
அழுதுழலும் விழலனிவன்
  பழையவினை முழுதும்அற
  அருள்கமழும் திருவடிகள்     தருவாயே
நிழலில்வளர் தெய்வானை
  தழையில்வளர் குறமாது
  பழகிவளர் திருமுருக        உனைநாளும்
மொழிகுழற மனம்நெகிழ
  கழலடியில் முழுமைபெற
  முனிவன்என புனிதம்எழ     அருள்வாயே
குழையணிகள் செவிகுழைய
  முழுதுமொளிர் உடைதழைய
  மழலையென தவழவரு      எழிலோனே!
எழுபிறவி கழியில் அழி
  பழியனையும் பனிருவிழி
  இழிமழையில் முழுகவரம்   பொழிவாயே!
பொழிலழகும் வயலழகும்
  மதிலழகும் திகழவழி
  பொலிவுபெறு பழநிமலை    விழைவோனே!
பொதியமலை முனி அருண
  கிரி மகிழ இனியதமிழ்
  பொழியும்முழு உலகுதொழு பெருமாளே!

- ‘திருப்புகழ் திலகம்’ திரு.மதிவண்ணன் 


ஐந்துக்கு ஐந்து என இருபத்தைந்து கட்டங்கள் வரைந்து 'நமசிவய' என்ற பஞ்சாட்சரத்தின் பீஜ அட்சரமாக அ, , , , ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களான ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12  என்ற எண்ணையோ 10,18,14,6,3 எண்ணையோ சிதம்பர சக்கரத்தில் நாட்டி மொத்தம் ஐம்பத்தோர் அட்சரம் எழுதுவார்கள். அதைப்போலவே சிவனின் உருவான முருகனின் மொழி அழகைக் குறிக்கும் ழகரம் ஐம்பத்தொரு முறை இப்பாடலில் இடம் பெறுகிறது.