சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எல்லா ஊர்களிலும் இது போன்ற திருமண விழா விருந்து நடந்தது என்றால் இக்காலத் தலைமுறையினர் இதை அதிசயமாகப் பார்ப்பார்கள். முட்டுச்சந்து என்றால் நீளமாகப் பந்தல் போட்டு வழியை அடைத்து விடுவது வழக்கம். என்னதான் மேஜைகள் நாற்காலிகள் போட்டு விருந்து பரிமாறப்பட்டாலும், இன்னொருபுறம் பந்தலுக்குக் கீழே தரையில் உணவுப் பந்தி களைகட்டும். விசேஷத்திற்கு வரமுடியாத முதியவர்களுக்கு தூக்கு சம்படங்களில் எடுப்புச்சாப்பாடு வீட்டுக்கே போகும். நானும் food delivery எடுபுடி செய்துள்ளேன்.
"டேய் இதுல எல்லாம் வெச்சு அனுப்பினானா பாத்தியா?" என்று உள்ளிருந்து ஒரு குரல். "இருக்கு பாட்டி... திறந்து பாரு... பெரிய மைசூர்பா இருக்கு, தாத்தாவாலதான் அதை கடிக்கமுடியாதே நான் எடுத்துக்கவா?" என்று அடாவடியாகக் கேட்டு வாங்கிய காலம். 😀
உறவுகள் சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து ஒன்றாக மகிழ்ந்த தருணங்கள்... நடுநடுவே சண்டையும் வரும் சமாதானம் செய்ததும் சரியாகிவிடும். அவர்களே தன்னார்வமாக வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு, காய்கறி அரிந்து தந்து, அப்பளம் வத்தல் வைத்து இட, அரிசி புடைக்க என பலவிதமான பணிகளைச் செய்தார்கள். ஆனால் தற்போது சில மணித்துளிகள்தான் உறவினர்கள் வந்திருந்து தலைகாட்டிவிட்டுப் போகின்றனர்.
பின்கட்டில் கோட்டை அடுப்பில் தடபுடலாக விருந்து சமையல் எல்லாமே தயாராகும். பெரியவர்களுக்குத்தான் மேஜையில் உணவு போடுவார்கள், சிறுவர்களுக்கு எட்டாது என்று நம்பிய ஒரு காலம். நானும் என் சிறுவயதில் இப்படிச் சாப்பிட்டுள்ளேன். 'இலை போட்டாச்சு' என்ற சங்கேத அறிவிப்பு நம் காதில் விழுந்த மாத்திரத்தில் அங்கே நீளமாக விரிக்கப்பட்ட பாயில் போய் இடம் பிடித்துக்கொள்வது இருக்கே அது ஓட்டப் பந்தயத்தில் வென்ற மகிழ்ச்சியைத் தரும். யாரும் உணவை வீணடித்ததில்லை. அது மிக அரிது!
ஆனால் இக்காலத்தில் மேஜையில் சுருள் காகிதம் உருட்டிக் கொண்டுபோக அதன் மேலே இலைகளைப் பரப்பி வைத்து அதில் திருமண மண்டபத்தில் சமைக்கப்படாமல் வெளியிலிருந்து தருவித்த 'பேக்கேஜ் மெனு' ஐட்டங்கள் பரிமாறப்படுகின்றது. அவை நமக்கு மனநிறைவைத் தருவதில்லை, பெரும்பாலும் குப்பைக்கே போகும்!
-எஸ்.சந்திரசேகர்









