About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 25 ஜூன், 2023

சிறியாநங்கை-சீந்தில் கிருதம்!

சிறியாநங்கை என்ற மூலிகை விஷ ஜந்துக்களை அண்டவிடாது. அதனால் வேலியோரம் நிறைய இருக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பிரச்சனை, காய்ச்சல், சளி, உடலில் வீக்கம், மதுமேகம் (டையாபடிஸ்) போன்றவகைகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. அது யோக மார்க்க உயர்வுக்கும் சின்மயத்தில் ஒளியைத் தரிசிக்கவும் காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை. இதுபோன்ற மூலிகை அஷ்டகர்மத்திலும் பயன்படும். 

எந்த ஒரு பச்சிலை மூலிகையாக இருந்தலும், அதைப் பறித்து உபயோகப்படுத்த நம் உடல்நிலை ஏற்றம் பெறும் அதோடு அதன் ஆன்மா மேன்மை அடையும். விதியாளியின் கர்மவினைக்கேற்ப அம்மருந்து உடலிலும் யோகத்திலும் செயல்படும் என்பது சித்தர் விதி. 

தோட்டத்திற்குப்போய் கீரை பறிப்பதுபோல் மருத்துவ மூலிகைகளை பறித்தேன் எடுத்தேன் என்று வந்திட முடியாது. அதற்கும் உயிர் சக்தி, மந்திர சக்தி உள்ளது, என்பதால் அதனிடம் மந்திரம் ஜெபித்துச் சாப நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும். இது சைவ மார்க்கத்தின் சிறப்பு.

சிறியாநங்கையின் அனைத்து பாகங்களும் சமூலமாய் உபயோகித்தல் மருந்தே. அந்தச் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். ராஜக்கனி என்று அழைக்கப்படும் எலுமிச்சையின் சாற்றை ஒரு படி ஊற்றி மூன்று சாமம்வரை அரைத்தபின் அதை வில்லைகளாகத்தட்டி காயவைக்க வேண்டும். அதன்பின் அதன் எடைக்குச் சமமாகச் சீந்தில்கொடி சர்க்கரையை போட்டு பசும்பால்/ நெய் விட்டு நான்கு சாமம்வரை மைய ஆட்டி எடுக்கவேண்டும். இதில் ஒரு வராகன் (4 கிராம்) எடுத்து 'மசி' என சொல்லிவிட்டு அந்தி சந்தி என தினம் இருவேளை ஒரு மண்டலம் உண்டு வந்தால் வாசி திரிகூட பர்வதத்தில் சங்கமிக்க, ஆக்ஞாவில் சுடரொளி அக்னியாய்ப் பிரகாசிக்க, அங்கே பிரம்மரந்திரம் திறக்கும்போது கபாலபீட மேருவில் நாதங்கள் கேட்கும். திரிகூடம் எங்கே உள்ளது? புருவ மத்திதான் அது!

அதனால் சாகாக்கால் வேகாத்தலை போகாப்புனல் என்று சித்த குறியீட்டில் சொல்வதற்கேற்ப வைத்தியம் யோகம் ஞானம் ஆகிய மூன்றுக்கும் இந்த மூலிகைச்சமூலத்தின் கிருதம் ஏற்றம் தரும். எப்போதும்போல் இதற்கும்  பத்தியம் தேவை.

அதென்ன கிருதம்? ஒவ்வொரு நோய்க்குத் தக்கவாறு மூலிகைகளுடன் நெய் சேர்த்துத் தரும் மருந்துதான் கிருதம் என்கிறது ஆயுர்வேதம். முருகப்பெருமான் அகத்தியர்க்கு உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலிருந்து மேற்படி பாடல்களை இங்கே சிந்தித்தோம்.

-எஸ்.சந்திரசேகர்

திகில் பயணம்!

போன நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆழ்கடலில் மூழ்கிச் சிதிலமடைந்து கூழாகிக் கரைந்துபோன டைட்டானிக் கப்பலை வேடிக்கைப் பார்க்க அப்படி என்னதான் இருக்கும்? The White Star Line என்ற கம்பனிக்குச் சொந்தமான அந்தக் கப்பலின் கட்டுமான உள்ளரங்க வரைபடத்தை ஆதாரமாக வைத்துத்தான் Titanic ஆங்கிலத் திரைப்படத்தில் தத்ரூபமாய் செட் போட்டு நிறைவாகக் காட்டினார்கள்.



ஏப்ரல் 15, 1912 அன்று இரவு நடந்தது ஒரு பயங்கரம். ஆயிரக் கணக்கானோர் ஜல சமாதி ஆன வட அட்லாண்டிக் கடல் பகுதி இன்றும் பீதியைக் கிளப்பும். ஆழ்கடல் கல்லறை தேசத்தில் பல அமானுஷ்ய சம்பவங்கள் எப்போதும் நடப்பதுதான். சில நிகழ்வுகள் செய்தியில் வரும் சில வராது.

கடலில் மட்டுமல்ல பூமியிலும் இதை ஒத்த இடங்கள் இயல்பாகவே இருக்காது. அதுபோன்ற இடங்களுக்குச் சுற்றுலா போக எவருமே தயங்குவார்கள். அங்கே முன்னொரு சமயம் ரோபோவை அனுப்பி அது எடுத்து அனுப்பிய நேரடி காணொளி காட்சியை டிஸ்கவரி சானலில் நள்ளிரவு தாண்டி ஒளிபரப்பினர். நானும் விடிய விடிய பார்த்து வியந்தேன்.

அண்மையில் நடந்த Ocean Gate சப்மரீன் ஆழ்கடல் விபத்து விவாதமாகிவிட்டது. இதற்கு முன் கடந்த காலத்தில் சென்று வந்த வண்டிகள் இவ்வளவு ஆழத்திற்குச் சென்றதில்லையாம். அதனால் அதீத அழுத்தத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. திமிங்கிலங்களேகூட தனக்குத் தோதான குறைந்த அழுத்த எல்லைக்குள்தான் பிரவேசிக்குமாம்.


விஞ்ஞான தொழில்நுட்பம் நவீனமாக முன்னேறினாலும் இயற்கையை அவை எப்போதும் ஏய்த்துவிட முடியாது. புரியாத கணித்து விடை காணமுடியாத புதிர்கள் பல உண்டு. பழவேற்காடு ராயபுரம் பகுதி மீனவர்கள் தங்களுக்கு நடுக்கடலில் ஏற்பட்ட திகிலான அமானுஷ்யங்களை விளக்கும் காணொளியைப் பல வருடங்களுக்கு முன் பார்த்துள்ளேன். அவர்கள் சொன்ன விஷயங்களைப் பலர் நம்பமாட்டார்கள்.

கடல் என்பது மாபெரும் ரகசியத்தைக் தன்னுள் வைத்துள்ள பெட்டகம். ஆழ்கடல் தன்மையறிந்து தண்ணீரின் நிறமறிந்து அதன் பண்புகளையும் கண்ணுக்குத் தெரியாத கொல்லக்கூடிய ஆபத்தையும் நோட்டமிட்டபின்தான் அதில் பயணிக்க, குதிக்க, முத்தெடுக்க, சூத்திரம் வகுக்க வேண்டும் என்கிறார் போகர். கண்ணாடி கை தொலைநோக்கி, புரட்டிப்போடும் நடுக்கடல் டைஃபூன், பாதையில் மறைந்த பாறைகள், மூழ்கியுள்ள நவதாது அக்னி மலைகள் என பலவற்றை ஆய்வுசெய்த பிறகே சாகரத்தில் பயணிக்கவும், கடலடி பொக்கிஷங்கள் சேகரிக்கவும், scuba கவசத்தில் குதிக்கவும் மூச்சடங்கி இருக்கவும் யோசிக்க வேண்டும் என்கிறார்.

அங்கே உஷாராக இருக்கவேண்டும் என்று ஆனானப்பட்ட சித்தரே மிகுந்த எச்சரிக்கையுடன் தன் சாதனைகளைச் செய்தார் என்றால் நம் என்ஜினியர்கள் எம்மாத்திரம்? Adventure tourism முன்பதிவு செய்து 13000 அடி ஆழத்தில் போய் உயிரைவிட தலைக்கு டிக்கட் விலை என்ன? $250000. 🤔

- எஸ்.சந்திரசேகர்

வியாழன், 15 ஜூன், 2023

காலச்சக்கரம் என்னும் ஆசிரியர்!

வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும், சுகமும் துக்கமும், வெற்றியும் தோல்வியும், அவ்வப்போது வந்து போவது இயல்பு. உண்மையில் அவை நிரந்தரமற்ற மாறும் வெளிப்பாடுகள் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. குளிர் வெயில் மழை இரவு பகல் என மாறுகின்ற தன்மையைப் போன்றது.

ஒரு காலத்தில் வாழ்ந்த ஏற்றமிகு வாழ்க்கையை நினைத்தோ, எப்போதோ அடைந்த வெற்றியை நினைத்தோ, அனுபவித்த சுகத்தை நினைத்தோ, நிகழ்காலத்தில் இக்கணம் நினைத்து நினைத்து மனம் வெதும்புதல் கூடாது. அதற்கு மாறாக மனம் குதூகலித்தால் நல்லதே. ஆனால் நம்மில் பலர் செய்வது என்ன? கட்டிய வீடு போச்சு, போட்ட நூறு பவுன் நகை போச்சு, வியாபாரம் போச்சு, நல்ல வாழ்க்கை போச்சு, உடல்நலமும் போச்சு, இனி எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று அங்கலாய்ப்போரே அதிகம். அதனால் மன உளைச்சல்தான் ஏற்படும்.

அதனால் இன்றைய நிலையுடன் ஒப்பீடு செய்துகொண்டு தோல்வி ஏமாற்றம் துக்கம் ஆகியவற்றை நினைத்து மனம் கவலை கொள்ளக்கூடாது. அவற்றை ஒரு படிப்பினையாக மனம் ஏற்கவேண்டுமே தவிர இன்று உட்காந்து புழுங்குவது சரியல்ல. மத்திமமாய் வாழப்பழகினால் நிம்மதி தங்கும்!

சுகம் துக்கம், வெற்றி தோல்வி பற்றியே சதா நினைத்தால் அவை எல்லாம் தன் ஊழ்வினைப்பயனே என்பதையும் மனம் ஒப்புக்கொண்டு ஏற்கவேண்டும். இந்தச் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு மௌனமாய் இருந்தால் அதுவே உத்தமம். 

வாழ்ந்து கெட்டவன் என்றால் வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்பதைப் புரிந்துகொண்டு அனுபவத்தால் மீண்டு எழுந்து விவேகத்துடன் எளிமையாக நிறைவுடன் வாழ்பவன் என்பதே பொருள்.

-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 9 ஜூன், 2023

காற்றுக் கணக்கு!

 


நேற்றைய என் கவிப்பாடலுக்குத் தொடர்புடையதே இந்தப்பதிவு. 

"வேகாக்கால் பற்றிக் காற்றை அடக்கும் கணக்கை அறிவேனோ  ...

பரஞான அருளால் விட்ட குறை தொட்ட குறை முடிப்பேனோ..."

என்று எழுதியிருந்தேன் அல்லவா?

அந்தக் காற்று எது? சதா உள்ளே காற்றை இழுத்து வெளியே விடும் வெந்துபோன மூச்சுதான் அது. சில சித்தர்கள் இதை சாகாக்கால் என்றும் மாற்றிச்சொல்வர். அதைத் தணியவிடாமல் சாகவிடாமல் சுவடே இல்லாமல் எப்படி மூச்சை அளந்து விடுவது? மூச்சை வாங்கி நாசி வழியே சரியாக விடாதது விட்ட குறை. அதைப் பாதியிலேயே திருப்பிச் சுழுமுனையைத் தொட மேல் நோக்கிச் செலுத்துவது தொட்ட குறை. ஆக காற்றை நம் போக்கில்தான் புஸ் புஸ்  என்று கண்டபடி விட்டு வீணாக்குகிறோம். அதனால் நம் ஆயுள் குறையும். இப்படி இருந்தால் மரணமில்லா பெருவாழ்வு எப்படி?

இதைப்பற்றிச் சிவவாக்கியர் அழகான விளக்கத்தைக் தருகிறார்.

'வடிவு கண்டு கொண்ட பெண்ணை

வேறொருவன் நத்தினால் விடுவனோ

அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே

நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்

சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’

                                 (- சிவவாக்கியம் - 006)

அழகான பெண்ணை விரும்பி மணம் செய்தபின், வேறொருவன் அவள்மீது மோகம் கொண்டு விரும்பி அவள் கணவனை அணுகினால் அவனை வெட்டிப்போட வேண்டும் என்று கோபம் வரும் அல்லவா? அப்படித்தான் அழகான நம் தேகத்தை எமன் கொண்டு போக வந்தால் அவனைக் கோபத்துடன் உதைத்துத் தள்ளாமல் அந்த உடலை மயானம்வரை அனுப்பிச் சுட்டெரிக்கக் கொடுப்பதா? என்கிறார் சிவவாக்கியர்.

மிக அழகான உவமை! ஆனால், எமனைத் தடுப்பது எப்படி என்கிற கேள்வி எழும். இதற்குத் திருமூலர் ‘காற்றைப் பிடித்தால் கூற்றை உதைக்கலாம்!’ என்று விடை சொல்கிறார்.

நம் மூச்சுக்காற்றை எப்படிப் பிடிப்பது? எமனை எப்படி உதைத்துத் தள்ளுவது? நம் பிராணனை முறைப்படுத்தி அதை வீணாக்காமல் அளந்து வாசியைப் பற்றி மிகக்குறைவாக நுகர்ந்தால் எமனை ஏமாற்றிவிடலாம், ஆயுளையும் நீட்டிக்க வைக்கலாம். பூரகம்- கும்பம்- ரேச்சகம் ஆழமாக நீண்டு இருந்தால் சாத்தியம். மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்!

-எஸ்.சந்திரசேகர்