About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 15 நவம்பர், 2021

முருகனா இப்படிச் சொன்னான்?

'சுப்பிரமணியர் ஞானம் 500’ என்ற நூலை முருகன் அகத்தியர்க்கு உபதேசிக்கும்போது, சில இடங்களில் வெகுண்டு பேசியுள்ளது தெரிகிறது. ஞானியர் என்று சொல்லிக்கொண்டு திரியும் பொய்யர்களையும் வேடதாரிகளையும் பற்கள் உடைத்துப் பாடம் கற்பிக்க வேண்டும் என்கிறார். இதையே போகர், கருவூரார்கூட தம் பாடல் திரட்டுகளில் உரைத்த நினைவுள்ளது.

ஆனால் இதைப் படிப்போர், ‘அச்சச்சோ! முருகனா இப்படி உடைக்கச் சொல்லி உபதேசித்தான்? இருக்காது. அவன் காழ்ப்புணர்ச்சியோடு இருக்க மாட்டான். எந்தக் கடவுளும் பல்லை உடை, உயிரை எடு என்று சொல்லாது. அறிவுளர் அறிவார் குணக்கடலோன் என்று அவன் போற்றப்படுகிறான்’ என்று வாதம் செய்வார்கள்.

அண்மையில் சூரசம்ஹாரம் கண்டோம். முருகன் குணக்கடலோன் என்றால் ஏன் சூரனை சம்ஹாரம் செய்யவேண்டும்? மெனக்கெட்டு சக்தியிடம் வேல் வாங்கிப்போன முருகன்,  உண்மையிலேயே சூரனை ஏன் தாக்கி இரு கூறாக்கிச் சேவலும் மயிலுமாய் மாற்றி தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும்? திருப்போரூர் திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய தலங்களில் போர் புரிய வேண்டாமே! யோக சக்தியால் வெறுமனே சூரனை ஆட்கொண்டால் போதாதா? 

சம்ஹாரம் என்றாலே உமையும் திருமாலுமே நிகழ்த்துவார்கள். இங்கே முருகன் மூலமாக உமைதான் வேலிலிருந்து வதம் செய்தாள். முருகன் குணக்கடல் ஆயிற்றே, ஜீவ வதையை அவன் விரும்ப மாட்டானே! ஆனால் அவன்தான் சம்ஹாரத் திருவிளையாடலை நிகழ்த்தினான். அப்படியிருக்க அவனுடைய அந்தக் கோபம், சம்ஹாரம், ஆட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தண்டனை சட்டத்தின் கீழ் வரும் செயல்களென சிலர் தவறான புரிதலால் விமர்சிப்பார்கள். குணங்கள் மூன்று (த்ரிகுணம்) என்றாலும் சிவனும் அவனுடைய பிம்ப முருகனும் நிர்குணமானவர்கள். 

அகத்தியர் பெருமானுக்கு முருகன் உபதேசித்த சுப்பிரமணியர் ஞானம் நூலிலுள்ள சில வரிகள் இங்கே ...

நானடா நானிருக்கு மிடந்தான்கேளு

   நவிலாவிட்டாற் பல்லுதிர வடித்துத்தள்ளே ... 162

சூராதி சூரனையும் பொடியதாக்கிச்

  சுப்ரமென்று அற்புதமாய் வந்தேன்பாரே ... 319

தப்பியே செந்தூரில் மேருவேறிச்

  சண்டாள வசுரர்களை வதைத்தேன்பாரே ... 393

சொல்லடா விந்தவகை யெனக்குமைந்தா 

  சொல்லாட்டாற் பல்லுதிர வடிப்பேன்பார் ... 429

பாரப்பா வேடமிட்டே யலைந்திடாதே

  பாவயரை யனுதினமு மருவிடாதே  ... 430

பற்களை அடித்துத் தள்ளு என அகத்தியர்க்கு உபதேசித்த விஷயத்தை ஏதோ நமக்குத்தான் முருகன் சொன்னான் என நினைத்து முருகன் மீது கோபப்படுவது தவறு. சித்தனாதன் எங்கே எல்லாம் கோபமடைகிறான்? தன் மெய்யடி சித்த மரபுக்கும் மாண்புக்கும் களங்கம் வரும் வகையில் எவன் ஒருவன் வேடதாரியாய்ச் சுற்றிவந்து ஆறாதாரம் அறியாமல், பாம்பை மகுடியூதி எழுப்பாமல் வாசியோகம், தசதீட்சை, மூல மந்திரம் உபதேசித்தல், சித்தாடல் காண்பித்தல் என்று போலியாய் வந்து ஏமாற்றுவானோ அவனுடைய பற்களை உடை என்கிறான். 

‘பல் போனால் சொல் போச்சு’ என்பது பழமொழி. ஈறுகளை அழுந்தத் தேய்த்து, பற்களைப் பாதுகாக்க என்னென்ன மூலிகை குச்சியால் விளக்க வேண்டும் என்று சித்தர் பாடல்களில் உள்ளது. மாந்திரீக தந்திர பிரயோகம் செய்பவர்கள் பற்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொள்வார்கள். அஷ்டகர்மம் மந்திரம் ஓத பற்கள் வேண்டுமே! இதுபோல் ஏமாற்றும் தில்லாலங்கடி ஆசாமியைக் கிராமத்தார் பிடித்து முதல் வேலையாகப் பற்களைத்தான் உடைப்பார்கள்.      

ஒருவன் சித்தனாகத் தகுதி உடையவனா என்பதை அகத்தியர்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார் போகர். அவரிடம் ‘விருது பெற்ற சித்தன்’ என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிறார். முருகன் அகத்திய முனிக்கு உபதேசம் தந்த வாயிலாகச் சித்த மரபில் வரும் ஏனையவர்களுக்கு இது பாடமாகவும் ஒழுங்குமுறை அறிவிப்புமாய் அமைந்தள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

சித்தர்களிடம் ஈர்ப்புள்ளோர் மறைப்புள்ள சித்தர் பாடல்களில் உரைக்கப்பட்டவைகளை எடுத்த எடுப்பிலேயே தவறு என்று குறை சொல்வதை விடுத்து அப்பாடல்களை வரிசையாக முன்னும் பின்னும் ஆழ்ந்து வாசித்துப் பொருளறிய வேண்டும். முருகன் விவரிக்கும் அதுபோன்ற வேடதாரிகளுக்கு நம் பதிவுகள் நெருஞ்சி முள் போல் தைக்கிறது என்று புரிகிறது. நாம் என்ன செய்ய? 

முருகன் அகத்தியர்க்கு உபதேசித்த அனைத்து ஞான யோக அஷ்டகர்ம அம்சங்களையும் உள்ளபடி இங்கே பதிவிட அதை எல்லாம் நான் கற்றறிருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை! அதில் விருப்பமுமில்லை! தேவைப்பட்டால் அவற்றை எனக்குக் கனவிலோ நேரிலோ குருமார்கள் செய்துகாட்டி கற்பிப்பதுதான் வழக்கம். 

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 14 நவம்பர், 2021

நான் விரும்பிப் படித்த கதையோட்டம் ...

கவிவிஞர் நா.முத்துக்குமார் தன் பள்ளிப் பிராயம் பற்றி எழுதிய 'வகுப்பறைக்கு வெளியே கற்றுக்கொண்ட பாடங்கள்!'.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன்.

பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய கட்டடம் எங்கள் பள்ளியாய் இருந்தது.

ஆங்கிலேயன் கட்டிய பள்ளி என்பதால் ஆங்கிலம் எங்களுக்கு விரோதியாக இருந்தது. அச்சமும் பயமும் எங்கள் பாடமாய் இருந்தன.

பள்ளிக்கூடத்தைப் பற்றி நினைக்கையில் வகுப்பறைகளைவிட வெளியே இருக்கிற மரங்களும் மைதானங்களும் தான் என் நினைவுக்கு வருகின்றன.

எங்கள் பள்ளி மைதானத்தில் நட்டு வைத்த குடைகளைப் போல அசோக மரங்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கும்.

அசோக மரத்துப் பழங்களுக்கும் நாவல் பழங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொன்னால் ஆண்டவனால் கூட கண்டுபிடிக்க முடியாது. இரண்டின் நிறமும் வடிவமும் ஒரே கிளையில் கருவானவையோ என வியக்க வைப்பவை.

மீசை வைத்து பெண்ணாம் பெரிய மிதிவண்டியில் வரும் பெரிய வகுப்பு மாணவர்கள் முதல் நாள் பள்ளியில் நுழைந்த அன்று நாவல் பழம் என்று ஏமாற்றி அசோகப் பழங்களைக் கொடுத்து என்னிடம் இருந்து காசு பறித்தார்கள்.

முதன்முறையாக வகுப்பறை சொல்லித் தராத வணிகவியல் எனக்கு அறிமுகமானது.

எங்கள் பள்ளி தாலுகா ஆபீஸ் வளாகத்திற்குள் இருந்தது. காவல் நிலையங்கள், நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், கருங்குளம், தீயணைப்பு நிலையம் எனக் கலவையான மனிதர்களைக் கடந்தே பள்ளிக்குள் நுழைவோம்.

ஒரு முறை கள்ளச்சாராய கேன்களை கையகப்படுத்தி காவல் நிலையத்தின் வாசலில் வைத்து தீ ஊற்றி எரித்தார்கள்.

அந்தக் காற்றின் வாசம் வேதியலை எனக்கு அறிமுகப்படுத்தியது.

இப்படி இப்படி ஐந்து பைசாவிற்குப் பத்து கடலைகள் கொடுக்கும் பாட்டிக் கடை கணிதத்தையும்;

உடைந்த அரச மரக்கிளை பொந்திலிருந்து அவ்வப்போது பகலில் வெளியே எட்டிப் பார்த்து திரும்பவும் பொந்துக்குள் நுழையும் ஆந்தை விலங்கியலையும்;

ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க கிராமத்து மாணவர்கள் கிளிப்பச்சை நிறத்துடன் ஒடித்து வந்து நீட்டும் மூங்கில் கழிகள் தாவரவியலையும்;

படம் வரைந்து பாகம் குறித்த கழிவறைகள் உயிரியலையும்;

மேற்கூரை கண்ணாடிச் சட்டகத்திலிருந்து உள் நுழைந்து கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும் சந்திரசேகர் மாஸ்டரின் முதுகில் விழுந்து C=3×108 வேகத்தில் பயணிக்கும் சூரிய வெளிச்சம் இயற்பியலையும்;

பள்ளிக்குப் பின்புறம் பாலிதீன் கவர்கள் மிதந்தோடும் செங்கழு நீரோடையின் பின்னணியில் ஒன்றிலிருந்து ஒன்று கிளைபிரியும் ஒற்றையடிப் பாதைகள் புவியியலையும்;

முன்புக்கு முன்பு பத்தாம் வகுப்புத் தேர்வில் ஃபெயிலானதால் தூக்குப் போட்டு இறந்த பழைய மாணவன் ஒருவனைப் பற்றிய வதந்திகள் வரலாற்றையும்;

‘As i am suffering from fever’ என்று தொடங்கி எழுத்துப் பிழைகளோடு எழுதப்படும் விடுமுறைக் கடிதங்கள் ஆங்கிலத்தையும் அறிமுகப்படுத்தின.

பிந்தைய நாட்களில் ஒருமுறை இடைவேளையின் போது காவல் நிலையத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த காசி அண்ணனின் ஐஸ் வண்டியில் சேமியா ஐஸ் வாங்கி, சட்டையில் சாயம் சொட்டச் சொட்ட சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.

காவல் நிலையத்திற்கு முன்பு லுங்கி கட்டிக்கொண்டு கையில் விலங்குடன் நின்றிருந்த ஒரு கைதியின் வாயில் பீடி பற்ற வைத்துக் கொண்டிருந்தார் ஒரு கான்ஸ்டபிள். சிரித்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

புரிந்தும் புரியாமலும் வாழ்வியல் அறிமுகமானது.

எல்லோருக்கும் போலவே எனக்கும் என் பள்ளி வகுப்பறைக்கு வெளியே தான் பாடங்களைக் கற்றுத் தந்தது.

ஆயினும் என்ன? கற்றுத்தர மட்டுமா பள்ளிகள்? சென்ற வருடம் என் பள்ளியில் நடந்த தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

பள்ளி வாசலில் அதே பழைய காசி அண்ணன் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் முன் நிழலாடிய பல பிஞ்சு முகங்களில் என் முகமும் பெயரும் ஞாபகத்திற்கு வரும் என்பது என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும்?

கொடுத்த நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு “நீ நல்லா இருந்தா போதும் ராசா” என்று சொல்லிவிட்டு தன் முன் இருந்த ஐஸ் பெட்டிக்குள் குனிந்தார். அதில் காலம் கட்டி கட்டியாக உறைந்து கிடந்தது.

ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் ஆகப்பெரிய வலி எது தெரியுமா? தன் பின்னால் பரந்து கிடக்கும் கடந்த காலத்தில் புதிர் வட்டப் பாதையில் பயணித்து காயங்களுடன் வலிகளுடன் திரும்பி வருவதுதான்.

துருப்பிடித்த பள்ளியின் நுழைவாயிலில் இரும்புக் கிராதி கேட்டைத் திறந்து என்னை வரவேற்கிறார்கள்.

முன்பு ஒவ்வொரு முறை அதைக் கடந்து உள்ளே நுழையும் போதும் அடிவயிற்றிலிருந்து மேலெழும் ஒரு பயம் தன் பழைய பாசத்துடன் மேலே வருகிறது.

‘இது என் பள்ளி! என் பள்ளி என்னால் பெருமை அடைய வேண்டும்! என் பள்ளியினால் நான் பெரும் அடைய வேண்டும்!’ என்று எழுதிய வாசகத்திற்கு மேல் இயேசு கிறிஸ்து கை நீட்டி அழைத்துக் கொண்டிருக்கிறார்.

பரிசுத்த ஆவியின் பெயரால் என் பள்ளிக்குள் நுழைகிறேன். காலை பிரார்த்தனை நேரத்தில் “ஜெபம் செய்வோம்” என்ற குரல் கேட்டு எத்தனை முறை மண் தரையில் முட்டி போட்டு இருப்பேன். அந்த மண் துகள்கள் இன்று எங்கு போய் உதிர்ந்தன?

“இதோ பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களை உமது பாதங்களில் ஒப்படைக்கிறோம் எமது ராஜா… அவர்கள் படித்தது மனதில் பசுமரத்தில் அடித்த ஆணிபோல் பதியவும்,

அவர்களால் நமது பள்ளி மென்மேலும் உயரமும் ஆசீர்வதியும் எம் ராஜா” என்கிற பால்பாண்டி மாஸ்டரின் குரலும், அதைத் தொடர்ந்து ஒலிக்கிற ‘ஆத்துமமே என் முழு உள்ளமே’ என்கிற பாடலும் காற்றின் அலைகளில் கரையாமல் ஒலிக்கிறது.

எங்கள் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமான அ.எக்பர்ட் சச்சிதானந்தம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க விழா முடிகிறது.

மாணவர்கள் விடைபெற்றுப் போன பின் மாலையில் நான் படித்த ஒவ்வொரு வகுப்பிலும் மீண்டும் நுழைகிறேன்.

என் ஆதிக் கருவறையின் இருளும் ஒளியும் கலந்த அறைகள் எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் நுழையும்போது மட்டும் என்னை அறியாமல் தேகம் சில்லிடுகிறது.

அதோ நான் அமர்ந்து எழுதிய பர்மா தேக்கு மேஜை. மீண்டும் என் பால்ய வயதிற்குள் சென்று காக்கி கால் சட்டையும் வெள்ளைச் சட்டையும் அணிந்து அமர்கிறேன்.

பிரில் இன்க் கரைபடிந்த என் பழைய மேஜையில் நான் எப்போதோ உணவு இடைவேளையின்போது காம்பஸ் முனைகளால் கிறுக்கிய N.M.K. என்ற என் இன்சியல் இன்னும் அழியாமல் இருக்கிறது.

ஒரு கணம் இனம் புரியாத உணர்வுக்குள் மூழ்கித் திரும்புகிறது மனது. இதோ நான் தொலைந்த பால்யத்தின் மிச்சம்.

என் பதின் வயதுகளில் ஒரு துண்டு. நான் கடவுளாக இருந்தபோது எனக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.

பள்ளிப் பிராயம் ஒரு நதியைப் போல நம் ஆழ்மனதில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் மேல் மிதக்கும் சருகுகளும் பூக்களும் கரை சேர்ந்து விடுகின்றன.

நதியின் ஆழத்தில் மூழ்கும் கூழாங்கற்கள் மட்டுமே சகதிகளுடன் சேர்ந்து உறுத்திக் கொண்டிருக்கின்றன. என் பள்ளி எனக்கு சருகுகளையும் பூக்களையும் மட்டும் கொடுக்கவில்லை.

கூழாங்கற்களையும் சேர்த்துத்தான் கொடுத்தது.

~~~~~~~~ ~~~~~~~ ~~~~~~ ~~~~~~

இது மணாவின் 'பள்ளிப்பிராயம்' என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுத்தது‌. உயிர்மை பதிப்பகம். ரூ.75/-



சிந்தித்து முடிவெடுக்கும் பாங்கு!

முன்னொரு சமயம் நாங்கள் குடியிருந்த தெருவில் பாலகிருஷ்ணா & சன்ஸ் என்ற மின்னியல் என்ஜினியரிங் கம்பனி நடத்தி வந்தார் ஒரு செல்வந்தர். அரிமா சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அவருடைய சொந்தமான பங்களாவில் இரண்டு அம்பாசடர் கார்கள் இருந்தன, அவர் மனைவியின் கழுத்து முதல் இடுப்புவரை பரதநாட்டிய செட் நகைகள்போல் எல்லாம் தங்கத்தில் மின்னின. இரண்டு மகன்கள். அதில் மூத்தவன் கல்லூரி படிக்கும்போதே செயின் ஸ்மோக்கர் என்ற பெருமையைப் பெற்றவன். இன்னொருவன் பிசினஸ் செய்கிறேன் என்று அகலக்கால் வைப்பவன். இவர்கள் படித்ததெல்லாம் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஏற்காடு மான்ட்ஃபோர்ட் போர்டிங் பள்ளி.

எனக்குத் தெரிந்து அத்தெருவில் மதிப்பு மரியாதையுடன் வாழ்ந்தார், யாரிடமும் பந்தா காட்டியது இல்லை. அவர் மனைவி அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபர்போல் இருப்பார். நவராத்திரி சமயத்தில் ஜடை பின்னல் வைத்து ராக்கொடி காசுமாலை சங்கிலி வளையல் புல்லாக்கு ஒட்டியானம் முதல் கொலுசுவரை அத்தனை நகைகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு இடுப்பில் சொருகிய சிறிய பிச்சுவா கத்தியுடன் இரண்டு வீதிகளையும் வாக்கிங் சுற்றி வருவர். அந்தப் பெரியம்மாவின் கோலத்தைப் பார்த்து யாரும் அவர் எதிரே சிரித்து விடக்கூடாது. அவரைக் கிண்டல் செய்தால் போச்சு! ஆங்கிலத்திலேயே விளாசுவார். நான் பள்ளிக்குச் சென்று வரும்போது என்னைப் பார்த்தால் ‘டேய் கொளந்த, come home for special sundal and payasam’ என்று சொல்வார். நான் பயத்தில் மண்டையை ஆட்டுவேன். 

காலங்கள் ஓடியது. 2014ல் ஒரு நாள் அத்தெருவில் குடியிருக்கும் பெரியவரை எங்கோ சந்திக்க நேர்ந்தது. அப்போது பழைய ஆட்களைப் பற்றியும் செல்வந்தர் பற்றியும் விசாரித்தேன். 

“பாலு சார், கடந்த 1998க்கு பிறகு நொடிஞ்சு போனார். சின்னவன் வெளிநாட்டுல பிசினஸ் செய்யறேன்னு பைனான்ஸ் கம்பனியில கடன் வாங்கினான். தன் அப்பா/ தம்பியோட பெரிய மனஸ்தாபத்துல பெரியவன் குடும்பத்தோட தனியா போயிட்டான். வாங்கின கடனுக்கு வட்டி அசல் கட்ட முடியாம கம்பனியை யாருக்கோ கைமாத்தி வித்தார், இருந்த வீடு ஜப்தி ஆனா மானம் போகுமேனு வேற வழியில்லாம அடிமாட்டு விலைக்கு 17 லட்சத்துக்கு வித்தார். கார் ஆக்ஸிடன்ட் ஆனதுல இன்சுரன்ஸ் பணம் முழுசா வரலை. பொண்டாட்டியோட நகைகள மூட்ட முடியாம போயி அதை பேங்க் காரங்க ஏலம் விட்டாங்க. அப்புறம் அவர் தன் சொந்த ஊருக்குப் போறதா காலி செய்துட்டு போனார். அதன் பொறவு எந்த சேதியும் இல்ல’ என்றார்.

‘முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, கெட்டவனும் இல்லை’ என்பது கரியன் சூரியனைச் சுற்றி வரும் கால அளவு அடிப்படையில் பேசப்படும் ஒரு வாக்கியம். என்னதான் கல்வி, அனுபவம், செல்வாக்கு, விவேகம் இருந்தாலும் விதி விளையாடும்போது எல்லாம் பயனற்றுப் போகும். துணிந்தவனுக்குத் துயரம் இல்லை என்பது எதுவரை வரும்? 

ஒரு நிலைக்கு மேல் தன்னால் இனி மீள முடியாது என்று தூரப்பார்வையுடன் சிந்தித்தால் அகலக்கால் வைக்க அவசியம் இருக்காது. அடமானம் வைத்த நகைகளையும் வீட்டையும் மீட்க முடியாது என்ற நிலையை முன்பே யூகித்து அதை எல்லாம் விற்றிருக்க வேண்டும். குறைந்த அளவு தாக்கத்துடன் போயிருக்கலாம். 

ஓடிக்கொண்டிருக்கும் நல்ல கப்பல் பழுதாகி அதை ஒரு கட்டத்தில் சரி செய்ய இயலாது என்ற நிலையில் கேப்டனும் சிப்பந்திகளும் அவசரகால நடவடிக்கையில் இறங்கித் தப்பிக்க வேண்டும். நடுக்கடலில் மூழ்கத் தொடங்கும் நிலையில் அதனை அணைத்தபடி தாம் பயணித்த மலரும் நினைவுகளைக் கொண்டாட முடியாது. Ship Abandoned என்று அவசர செய்தி விடுத்த நிலையில் சிப்பந்திகளுக்கான மீட்புக் கப்பலும் ஹெலிகாப்டரும் வட்டமிடும். 

ஆனால் நிஜ வாழ்க்கையில் கடவுளைத் தவிர மீட்பர்கள் யாருமில்லை. அதனால் வாழ்க்கையில் இலக்கின்றி, பேராசையுடன் வாழ்ந்து, வேண்டாத சுமைகளை ஏற்றிக்கொண்டு, மூழ்கும் சொத்துக்களைச் சக்திக்கு மீறி மீட்கப் போராடும் பிடிவாத குணத்தை எப்பாடுபட்டேனும் கைவிடுவதே நல்லது! 

- எஸ்.சந்திரசேகர்



பொன் மலை மேரு!

பிரம்ம முஹுர்த்த வேளையில் அரூபமாகச் சித்த ரிஷிகள் நிகழ்த்தும் ரசவாதத்தால் கயிலாய மலையே பழுக்கக் காய்ச்சிய பொன்னாக ஒளிரும் காட்சி. மலையில் ஏறி இதை நேரில் கண்ட சாட்சி போகர்.

- எஸ்.சந்திரசேகர்



வழிகாட்டி அமைவதும் வினைப்பயனே!

வேத மந்திரங்கள் எதுவும் ஜெபிக்க வேண்டாம், மலைக் கோயில்களுக்குப் போய் தரிசிக்க வேண்டாம், நதி /கடல் என்று எதையும் தேடி அலைந்து நீராட வேண்டாம், திருமுறைகளைப் பண்ணிசைத்துப் பரவசமாய்ப் பாடி உருக வேண்டாம். இவை எதுவும் பயனில்லை. இப்படிச் செய்தால் மெய்ஞான புத்தி வருமா?  உண்மையைப் பேசினால் போதும், உடனே சித்தி வாய்க்கும்!’ என்பது படத்திலுள்ள இப்படாலின் பொருள்.

இதெல்லாம் ஒரு சாதகனுக்குத் தொடக்கத்திலேயே சொல்வது சரியா? இவை அகத்தே யோக மார்க்கத்தில் கண்டு தரிசிக்கலாம் என்பது எப்போது புரியும்? 

ப்ளே ஸ்கூலில் உள்ள குழந்தைக்கு அங்கு வேலை செய்யும் ஆயாதான் சோறு ஊட்டுவாள், குடிக்கப் பால் தருவாள், விளையாடுவாள். பின்மாலைப் பொழுதில் அக்குழந்தையின் பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும்வரை நெடுநேரம் ஆயாவின் முகத்தைத்தான் பார்க்கும். அதனால் அக்குழந்தை வளர்ந்தபின் தன் தாய்/தந்தையிடம் பாசத்துடன் ஒட்டுவதில்லை, அன்பாக உறவாடுவதில்லை, பெற்றோர் பேச்சைக் கேட்பதில்லை, அவர்களை முது வயத்தில் பேணிக் காப்பதில்லை. வளர்ந்த பிள்ளை இப்படி இருந்தால் அந்தத் தவறு அவனுடையதல்ல. ஏன்? அவன் வளரும் பிராயத்தில் தாய்-சேய் உறவு இல்லை தாயின் ஸ்பரிசம், கொஞ்சும் மொழி இல்லை; தாயின் மடியில் படுத்துக்கொண்டு தாயின் முகத்தை நெருக்கத்தில் பார்ப்பதில்லை, தாயின் மன அலைகளைப் புரிந்துகொள்ளும் அவகாசமில்லை. இதுபோல் தொடக்க நிலை குறைகள் நிறைந்திருந்தால் குழந்தை இப்படித்தான் இருக்கும்.

சரியை கிரியை என்கிற தொடக்க நிலைகளைக் கடந்த பின் ஞானம் யோகம் என நிலைகளைக் கடந்திட வேண்டும். கலியுகத்தில் முறைப்படி மக்கள் பெரிய அளவில் சடங்குகளும் உபாசனைகளும் செய்ய வழியில்லை, செய்ய மாட்டார்கள் என்பதை முன்பே தீர்க்க தரிசனமாய்ச் சொல்லிவிட்டனர். அதனால் மந்திரம் ஓதுவது, கோயில் தலங்களுக்குச் சென்று வழிபட்டு மனமொன்றிப் பாடுவது, புண்ணிய நதியில் நீராடுவது, நாம ஜெபங்கள் செய்வது என்ற அளவில் இருந்தால் உத்தமம் என்று வகுக்கப்பட்டது. இதுவும் கூடாது என்றால் என்ன செய்ய?

ஆனால் அதெல்லாம் பயனில்லை தண்டம் என்றால் பழநி மலைமீது போகர் பாஷாண தண்டபாணியை வேலை மெனக்கெட்டு நிறுவி இருக்க வேண்டாம், குன்றுதோறாடும் குமரனைக் கஷ்டப்பட்டு யாரும் போய் தரிசிக்க வேண்டாம், சடாக்ஷரம் ஜெபிக்க வேண்டாம், காவடி எடுக்க வேண்டாம், திருச்சீரலைவாயில் நீராட வேண்டாம், கைலாசம் கங்கை பஞ்சபூத தலங்கள் என எதையும் நாடிப்போக வேண்டாம். நிறைவாக விபூதிப் பட்டையும் கழுத்தில் கொட்டையும் அணிந்தால் வேடதாரி என்று யாரேனும் நினைக்கலாம். 

ஆக நாம் உண்மை மட்டும் பேசினால் போதும் அக்கணமே சித்திகள் வாய்க்கும் என்றால் மரபு எதற்கு? குரு எதற்கு? தீட்சை எதற்கு? மந்த்ரோபதேசம் எதற்கு? ஆன்மா கடைத்தேற நல்லதொரு வழியைக்காட்ட குரு வேண்டும். அதுவும் சமயநெறிகளைப் பிசகாமல் கடைப்பிடிக்கும் குரு வேண்டும். குரு இல்லாத வித்தை பாழ், நெய் இல்லாத உண்டி பாழ். ஆகவே நல்லதொரு மெய்ப்பொருள் பாடலை அதன் கனம் அறியாத ஒருவருக்குத் தவறான காலத்தில் உபதேசிப்பதால் நன்மையைவிட தீமையே வரும்.  

வேதங்கள் உரைத்ததை, நால்வர் உணர்த்தியதை அறிந்து இறைவனைச் சுயமாக உணர்ந்து அவனுடைய ஆற்றல்மிகு ஆசிகளைப் பெற்று உயர வேண்டும். இதுகாறும் நம் வம்சத்தில் மூதாதையர்கள் உருவேற்றி வைத்த பக்தி ஆற்றல் மற்றும் குண நலன்களின் புண்ணிய பலன்களின் விளைவாக நாம் இப்போது பெடல் செய்யாமல் மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். இது எத்தனை தூரம் செயல்படும்? மேட்டில் வண்டியின் வேகம் குறைந்து வண்டி நிற்காமல் இருக்கச் சமய நெறிகளைக் கடைப்பிடித்து நம் உந்து சக்தியைப் பெருக்கிப் பயணிக்க வேண்டும். 

‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்று கொன்றை வேந்தனில் ஔவை சொன்னதன் பொருள் என்ன? காலங்காலமாகச் சொல்லபட்டு வரும் மூத்தோர் வழி முறை உபதேசங்களைத் தட்டாமல் அப்படியே பின்பற்று என்பதாகும். 

-எஸ்.சந்திரசேகர்



நூல் வெளியீடு!

'காலாங்கிநாதர் அருளிய ஞானவிந்த ரகசியம் 30 (மூலமும் உரையும்)' என்ற நூல் இம்மாதம் வெளிவரவுள்ளது. விலை ரூ.35/-  வெளியீடு: Leo Book Publishers, Nandanam, Chennai. Ph: 9940498435, 044- 24351283.

-எஸ்.சந்திரசேகர்



ஞான வேடமும் கபடமும்!

பாரப்பா ஜெகசால ஞானியோர்கள்

  பசிபொறுக்க மாட்டாமற் புரட்டுப்பேசி 

ஆரப்பா வேடங்கள் தரித்துக்கொண்டு

  அவன்காலிற் குறடிட்டே யலைவான்பாவி

நேரப்பா தேர்நிலையு மரியாதகோசி

  நிலையான பராசக்தி பூசைக்கென்று

தேரப்பா சத்தியமாய்ப் புரட்டும்பேசி

  தெளிவான சித்தன்போற றிவான்காணே 

               (சுப்பிரமணியர் ஞானம், பா:162)

‘ஞானியர் என்ற போர்வையில் ஜெகஜ்ஜால கில்லாடி கபடதாரிகள் உண்டு. உண்டி வளர்க்கப் பாடுபடுவார்கள், பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புரட்டும் பேசி தங்களை உயர்வாகக் காட்டிக்கொள்வார்கள். வெறுங்காலில் நடக்கப் பொறுக்காமல் பாதக்குறடுகள் அணிந்துத் திரிந்திடுவார்கள். அன்னமய கோசத்தின் மேல் ஆசை வைத்து அதை வளர்த்துப் பேண எதற்கும் துணிவார்கள். தேகத்தின் ஆறாதாரச் சக்கரங்களில் வாசி என்ற தேரின் ஓட்டத்தை அறியா பாவிகள். பராசக்தியை நோக்கிப் பூசைகள் செய்வதாய்ப் பொய் புரட்டுப்பேசி அறிவார்ந்த சித்தன்போல் காட்டிக்கொள்வார்கள்’ என்கிறது மேற்கண்ட சுப்பிரமணியர் ஞானம் பாடல். 

இதற்கு அடுத்த பாடலில் ‘வாசி நிலை காட்டடா என்றால் தெரியாது, ரவி-சசியின் கலை எங்கேடா என்றால் தெரியாது, தாரணையை விளக்கிச் சொல் என்றால் தெரியாது, தான் இருக்கும் நிலையைக் கேட்டால் தெரியாது, குருநிலை யாது, உன்  குலதெய்வம் எங்குள்ளது என்று கேட்டால் தெரியாது என்பான். நான் அவனுள் எங்குள்ளேன் என்று கேளு, இதெற்கெல்லாம் பதில் சொல்லாவிட்டால் அவனுடைய பற்கள் உதிர அடித்துக் கேள்’ என்று முருகன் சொல்கிறான்.    

இக்காலத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. தங்களை ஞானியர் என்று பிரகடனப் படுத்திக்கொண்டு நீள்முடி கேசம், தாடி, தினுசான ஆடை அங்கிகள், தலைப்பாகை, காலில் செருப்பு அணிந்து, ஆங்கிலம் பேசி, விஸ்தாரமான சொகுசுக் குடில் அமைத்து, யோகம் கற்பிப்பதாய்ச் சொல்லி, பக்தர்களை வசியப்படுத்தி, நவீன நடனமாடி, தானே சிவம் என்று சொல்லியபடி தங்களுக்கென ஓர் ஆன்மிக அடையாளத்துடன் வாழ்வாதாரம் தேடிக்கொண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள். 

முருகன் அகத்தியர்க்கு உரைத்தவை எல்லாமே இன்று கண்ணெதிரே காண்கிறோம். அடையாள விவரிப்புகளை வைத்து இந்நேரம் அந்த ஆசாமிகள் யாரென நீங்கள் யூகித்திருப்பீர்கள். 😃

-எஸ்.சந்திரசேகர்



சனி, 6 நவம்பர், 2021

ஓம் சரவணபவ!

தந்தானா தனதானா தானா தானத் தானா 

தான - தனனானா தனனானா  தனனானா தானா

முத்தழகன் முருகன் முந்தி வந்தான் தீயில் வந்தான்

மூத்த - முந்துதமிழ் முத்தணிந்து உலகாள வந்தான்      

காங்கேயன் வடிவெய்தி வந்தான் ஸ்கந்தன் வந்தான்

கருணை - குருவாகி குகனாகி உருவாகி நின்றான்

செந்தூரான் வேல்தாங்கி வந்தான் கோட்டம் வந்தான்

சீலன் - வேலோடு கரத்தோடு சிவபாலன் வந்தான்      

வேதமுக காவல்காரன் வந்தான் செவ்வேள் வந்தான்

வீரன் - பிரணவத்தின் பிரம்மத்தின் பதியாகி வந்தான்

ஓம்முருகா ஓம்முருகா வேல்வேல் வெற்றி வேல்வேல்

ஓங்கிய - மலைமீது நிலம்மீது அலைமீது வென்றான்

ஓம்முருகா ஓம்முருகா வேல்வேல் வெற்றி வேல்வேல்

-எஸ்.சந்திரசேகர்