About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 23 அக்டோபர், 2018

தமிழ் பேசு, உண்டியல் காசு

தமிழ் வளர்க்கிறேன், அதற்கு நிதிவேண்டும் என்று யாரேனும் சொன்னாலே, பரவசித்துப்போய் ஜோபியில் இருக்கும் அத்தனையும் எடுத்துக் கொடுக்கும் அளவில் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழை காசு கொடுத்து வளர்க்க நாம் பாடுபட தேவையில்லை.
ஒரு குடும்பத்தில் 2-3 மொழிகள் பேசுபவர்கள் இருந்தால், அந்தக் குடும்பத்லுள்ள குழந்தை எல்லாமே பேசக் கற்றுக்கொள்ளும். ஆனால் வளர்ந்தபின் அதற்கு எந்த மொழி மனதிற்கு விருப்பமோ அதில்தான் திறமையை வளர்த்துக்கொள்ளும். காசு கொடுத்து அதன் மனதை மாற்ற இயலுமா?
தமிழர்கள் அல்லாதோர் வேட்டி கட்டினாலோ, நெற்றிக்கு விபூதி பூசினாலோ, வாய் நிறைய தமிழ் பேசினாலோ, நாம் மயங்கிப் போகிறோம். ஏன்? நம் மக்கள் பழகாத ஒன்றை, எதிர்க்கும் கலாசாரத்தை வெளிநாட்டினர்கள் செய்வதால் அதை பெரிதும் ரசிக்கிறோம். அதோடு நின்றுவிட்டால் தவறில்லை. அத்தேசத்தில் தமிழ் வளர்க்க அவர்கள் கோரும் அனைத்தையும் நாம் கண்களை மூடிக்கொண்டு தர சம்மதிப்பதுதான் குற்றம். காசு கொடுத்து செய்ய இது மதமாற்றமா?
'Delivery தந்துட்டு Nightக்கு lodgeல தங்கிட்டு bus ticket எடுக்க ATM ல காசு எடுத்துகினு tiffin சாப்டு return வந்துட்டேன்' என்று சராசரி ஆள்கூட சர்வ சாதாரணமாக பேசும் காலம் இது. நம்மூரில் ஆங்கிலம் வளர்க்க கேம்ப்ரிட்ஜ், ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட், மற்றும் பிரிட்டிஷ்/அமெரிக்கன் கவுன்சில்கள் கணிசமாக நிதி திரட்டி நம் பல்கலைக் கழகங்களுக்கு கொடுக்கிறதா என்ன?
அயல்நாட்டில் தமிழ் வளர்க்கவும், அரிய தமிழ் சுவடிகளை கொடுத்துதவும் நேசர்களை என்னவென்பது? பல்கலைக்கழகங்கள் பிற தேவைகளுக்கு முதலீடுகள் செய்ய எப்படியாவது நிதி திரட்ட தமிழ் ஏமாளிகளை வலைவீச்ப் பிடிப்பது வழக்கமாகி விட்டது. அந்த பல்கலைகழகம்தான் செய்கிறதோ, அதன் பெயரில் எந்த அமைப்பு செய்கிறதோ தெரியாது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்க திரட்டிய $6 மில்லயன் நிதி என்ன ஆனது? தமிழ்நாட்டில் திரட்டிகொடுக்க எத்தனைப்பேர் பாடுபட்டார்கள் என்பது நாம் அறிவோம். இன்றைய நிலையில், பல அரசுப்பள்ளிகளை மூடும் எண்ணத்தில் அரசு உள்ளது. அந்த நிதியை இதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.
நான் பள்ளியில் படிக்கும்போது 'ஈழப்போராளி இயக்கங்களுக்கு தாராளமாக நிதி தாருங்கள்' என்று நகரம் முழுக்க ஆங்காங்கே பதாகைகள் காட்டி உண்டியல் வசூல் ஜோராக நடந்ததை பார்த்துள்ளேன். ஒரு கட்டத்தில், இயக்கத்தின் நோக்கம் மாறுகிறதை உணர்ந்த எம்ஜிஆர் அதை எல்லாம் தமிழ்நாட்டில் உடனே தடை செய்தார். இத்தனைக்கும் அவர் ஈழத்தில் பிறந்தவர்தான், அவருடைய தந்தை அங்கே மாவட்ட மாஜிஸ்ட்ரேட்!
Image may contain: text

திங்கள், 22 அக்டோபர், 2018

நாத்திக விளையாட்டு

சித்தர் பாடல்களில் பரிபாசையாக பல தத்துவங்கள் கூறப்பட்டதை மக்கள் தங்கள் தேவைக்கேற்ப நாத்திக முற்போக்கு சிந்தனைக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். பல சித்தர்களின் மறைப்புச் சொற்களுக்கு நேரடியான பொருள்கொண்டு அதையே எதிர்மறையாக இன்றளவும் பரப்பி வருகிறார்கள். சிவவாக்கியர், குதம்பை போன்ற சித்தர்கள் சொன்னதை முற்போக்காக உதாரணம் காட்டிச்சொல்லும் விஷயங்கள் யாது?
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா, ஆகவே மறுபிறவி இல்லை.
மறுமை இல்லையென்பதால் இம்மையின் பாவங்கள் தொடராது.
வாசியோகம் வசப்பட்டால் செய்த பாவங்களை அழித்திடலாம்.
கல்/உலோக/மர சிற்பங்களை கடவுளாக தொழுவது அற்பத்தனமானது.
மந்திரம் முணுமுணுத்தால் சிலைகளுக்கு எப்படி கேட்கும்?
நாதனை உள்ளே காண்போர்க்கு தில்லையும் திருவரங்கமும் எதற்கு?
பிறப்பு/இறப்பு தீட்டு என்ற ஒன்று இல்லவே இல்லை, அப்படி என்றால் உலகே தீட்டுமயம்.
உசுப்பேற்றுவதுபோலுள்ள தத்துவங்கள் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். இதையே சாக்காக வைத்து கருப்புக்கழகக் கண்மணிகள் ஆலயத்தில் நுழைந்து கைவரிசைக் காட்டுவது, சிலைகளைத் திருடுவது, பூசை அர்ச்சனை ஆராதனையை எதிர்ப்பது, சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, கோயிலுக்குள் உமிழ்வது என்று எல்லாமே நடத்துவார்கள். திருவள்ளுவரின் குறட்பாக்களுக்கே பதவுரையை மாற்றித் திரித்து எழுதிய தமிழ் சமுதாயம் அல்லவா?
மெய்யாலுமே சித்தர் பாடல்களை நாம் ஒரு பக்குவ நிலை எய்திய பிறதான் படிக்கவேண்டும். அல்லது சித்தர்களுடைய நிலை உணர்ந்து அதைப் புரிந்து கொள்ளவேண்டும். இவை எல்லாமே நம்முடைய இயல்பான நிலைக்கு உபதேசிக்கபட்டதன்று. தவறாக பொருளைப் பரப்பினால் விபரீதம்தான்..
நம்முள் அவனை உணரும்வரை, நாம் அவனாகும் வரை நம் வழிபாடு முறைகள் அனைத்தும் சரியே!

சனி, 20 அக்டோபர், 2018

அம்பு எய்தும் திருநாள்

பழனியில் புலிப்பாணி ஆசிரமத்தில் தசரா வெகு விமரிசையாக நடைபெறும். போகர் பூஜித்த புவனேஸ்வரி அம்மனை பிரதமையில் துர்கையாக ஆவாகனம் செய்து வழிபடுவார்கள். நவராத்திரியில் தொடர்ந்து ஒன்பது இரவுகள் பூஜைகள் நடைபெறும். பத்தாம் நாள் விஜயதசமி அன்று புலிப்பாணி சுவாமிகளை பல்லக்கில் அமர்த்தி பராசக்தியின் வேலை கையில் தந்து, பழனி அடிவாரம் ஆசிரமத்திற்கு 3கிமீ தொலைவில் உள்ள கோதைமங்கலத்திற்கு அழைத்துப் போவார்கள். முருகனே அசுரன் மீது அம்பிட்டு வென்றதன் அடையாளமாக அங்கே வன்னி-வாழை மரங்கள் மீது இவர் சம்பிரதாயமாக அம்பு எய்துவார்.

Image may contain: 2 people, food

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பெயர்ச்சியும் முயற்சியும்

"அப்பறம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்குமாம்?" என்று என் நண்பர் கேட்டார்.
"அதைப்பத்தி ஏதும் தெரியாது. நான் எந்த கிரகத்தோட பெயர்ச்சி பலன்களையும் படிப்பதில்லை. அதில் என்றைக்கும் ஆர்வம் இருந்ததில்லை" என்றேன்.
"அட நீங்க வேற... ஊரே அதைப் பத்திதான் பேசுது. உங்களுக்கு தெரியாம இருக்குமா?" எனறார்.
"ஆமாம், டிவில பேப்பர்ல போடறாங்க. ஆனா எந்த கிரகம் சொந்த வீட்டுக்கு போனாலும், எதிரி வீட்ல உக்காந்தாலும், நான் அதை கவனிக்கறதில்லை" என்றேன்.
"என்ன இப்படி சொல்டீங்க?" என்றார்.
"ஆமாங்க. நம்ம ஜனனகால ஜாதக கட்டங்களைப் பொறுத்துதான் பலன்கள் அமையும். ஆயுசு முழுக்க திசையும் புக்தியும் அதுபாட்டுக்கு வந்துபோகும். நம்ம ஊழ்வினைகள் தீரும்வரை சோதனைகளும், தர்மநெறிப்படி செய்யும் நல்வினைகள் சாதனைகளையும் தரும். குரு சனி ராகுகேது, சிவனேனு அவங்கவங்க வேலைய பாக்கறாங்க. நான் தினமும் கோளறு திருப்பதிகம் படிச்சுட்டு என் வேலையப் பாக்குறேன். பெயர்ச்சிகள் நடப்பதால நான் முயற்சிகள் செய்யாம இருக்க முடியுமா? சொல்லுங்க! 

போட்ட உழைப்பு பலன் தரும்னு நாம எதிர்பார்க்கலாம் ஆனால் அதையும்மீறி முடிவு சாதகமில்லாம போனால் அது நம்மை மீறிய செயல். கூரையை பிச்சிகிட்டு கொட்டுற யோகம் இருந்தா நாம உழைக்காமலே நிச்சயம் அது வந்து சேரும் என்பதுதான் பிராப்தம். நாம என்னைக்கோ செய்த தர்மமோ அடித்தளம் போட்ட உழைப்போ, நாம சும்மா இருக்கும்போது எதிர் பார்க்காமலே யோக காலத்துல பலன் தரும்" என்றேன்.
அவர் "அது சரி. நாம கட்டுப்படுத்த முடியாது. கடவுளா பார்த்து செய்தா உண்டு" என்றார்.
அடடே, நான் சொன்னதை கப்புனு புரிஞ்சிகிட்டார். புத்திசாலி.


ஸ்காட்லன்ட் to மந்திராலயம்.

1827 வரை மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்ரோ, மந்திராலயத்தில் சுவாமி ராகவேந்திரரின் தரிசனத்தை நேரடியாகக் கண்டதை நாம் அறிவோம். இது கவர்மண்ட் கெஸட்டில் உள்ள பழைய செய்தி.
மன்ரோ சந்ததியின் 5 ஆம் தலைமுறையினர் அண்மையில் மந்திராலயம் வந்து மகானின் சமாதியில் வழிபட்டனர். மிகுந்த பக்தி வெள்ளத்தில் எல்லோரும் தங்கள் மூதாதையர் தரிசித்த தலத்தை வணங்கினர். பிற்பாடு அருகிலுள்ள மற்ற கோயில்களுக்கும் சென்றனர்.
மன்ரோ என்ற கிறிஸ்தவனுக்கு கிட்டிய தரிசனம் நமக்கு கிட்டவில்லையே என்று வருத்தப்பட்ட அப்போதைய மடாதிபதிக்கு அம்மகான் கனவில் காரணத்தைச் சொன்னார். கடந்த யுகத்தில் தான் பிரகலாதனாய் இருந்தபோது மன்ரோ தன்னுடைய பால்ய சிநேகிதன் என்றும், அவன் கையால்தான் அதோனி தாலுக்கா மாஞ்சால கிராமம் வரிவிலக்கு பெற வேண்டும் என்பது இறை சித்தம். ஆகவே அவனுக்கு தரிசனம் தந்ததாக தெளிவு படுத்தினார்.
தன் 65வது வயதில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டாவில் காலரா நோய் தாக்கி இறந்தார். அவருடைய உடல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை (St. Marys Church) வளாகத்தில் புதைக்கப் பட்டது. அங்கும் இவர்கள் சென்று மரியாதை செலுத்தினார்கள்.
Image result for thomas munro 5th generation
Sir Thomas Munro
Image may contain: one or more people, people standing and outdoor  

வியாழன், 11 அக்டோபர், 2018

விடியல் தேசம்

ஈசனிடமிருந்து வடமொழியும் தமிழும் ஒருங்கே பிறந்தன என்று சித்தர் பாடல்கள் மேற்கோள் கொண்டு பழைய பதிவுகளில் ஆழமாக நிறைய பார்த்துவிட்டோம். நம்முடைய தென்னாடு இன்றைக்கு கடல் கொண்டது. குமரிக்கண்டத்தின் எஞ்சிய வடபகுதிதான் பொதிகைக்கு சாட்சியாக இன்றுள்ளது. கடல்கோளில் அது ஏன் அழியவில்லை? அகத்தியனின் மலைத்தேசம் நிலைக்க வேண்டும் என்பது ஈசனின் சித்தம்.
குமரி என்று ஏன் பெயர் வரவேண்டும்? குமரி என்றால் கன்னி, அதிகாலை, விடியல், இளமை, புத்துணர்வு, கற்றாழை என்று பலபொருள் கொள்ளலாம். நம் நாடு மூழ்கிய தேசத்தையும் சேர்ந்தது பகுதிதான் என்றால் பரந்துபட்ட நம் இந்தியாவுக்கு ஏன் குமரி /பாலா என்று பெயர் இருக்கவில்லை? அக்காலத்தில் அன்றைய நிலப்பிரதேசம் தூரக்கிழக்கு எல்லை முதல் ஆப்பிரிக்கவரை இருந்தது. நெடுக்கே ஏறக்குறைய ஆர்டிக் முதல் தென் இலங்கைக்கு கீழாக நெடுந்தூரம்வரை இருந்தது. சித்தர் பாடல்களில் வரும் சில பெயர்கள் இன்றைய வழக்கில் இல்லை என்பதும் தெரிகிறது. சங்க இலக்கியம் சொல்லும் நாவலன் தீவு (ஜம்பு துவீபம்), பஃருளி ஆறு, எல்லாம் குமரிக்கண்டத்தோடு சரி. ஆஸ்திரேலியாவும் அன்றைய பூகோள பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்புதான். இதெல்லாம் அவ்வப்போது பழைய பதிவுகளில் பார்த்தோம்.
எந்த பூஜையாக இருந்தாலும் அதில் சங்கல்பம் செய்யும் மந்திரத்தில் ‘ஜம்புத் துவீபே பாரத வருஷே பரதக் கண்டே மேரோ தக்ஷிணே...’ என்ற வடமொழி சொற்கள் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அதாவது, மேருமலைக்கு தெற்கே நாவலன் தீவில் பாரத தேசத்தில் பரதன் ஆண்ட பகுதியில் உள்ளோம் என்று பொருள்படும். போன சுற்று மனுவந்திரம் காலத்தின் சங்கல்ப மந்திரத்தில் என்ன references இருந்ததோ யாம் அறியோம்.
வேதங்கள் எழுதாகிளவியாக வடமொழியில் உச்சரிக்கப்பட்டு, கர்ண பரம்பரையாக அவை வந்தன. அதற்கென எழுத்துரு இருக்கவில்லை. அதனால்தான் பின்னாளில் தொல்லியல்துறை தோண்டி எடுத்த அண்டா/குண்டா/பானை ஓடுகளில் வடமொழியும் தமிழும் பொது பிரம்மியில் எழுதப்பட்டிருந்தது. வேதங்களிலேயே முருகனைப்பற்றிய குறிப்பு உள்ளது என்றால் இரண்டு மொழிகளும் ஆதி மொழிகளே. ஒன்று வடிவம் இல்லாத உபதேச மந்திரமொழி. இன்னொன்று வடிவம் பெற்ற மனுமொழி. வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் குமரிகண்ட எல்லை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது ‘ஜம்பு துவீபத்தின் வடக்கே உதயகிரி சிகரத்தில்தான் சூரியன் (பானு) தன் ரதத்தை செலுத்தத் துவங்கி, அரை சுற்று முடித்து மேற்கே அஸ்தம கிரியில் மறைகிறான்’ என்பதுதான் அந்தக் குறிப்பு. பிறகு அரைசுற்று முடித்து பனிமலை மேருவை வலம் வந்து மீண்டும் உதயகிரியில் எழுகிறான்.
நமக்குத் தெரிந்து The land of rising sun என்பது ஜப்பான். ஆக, அதுவும் நம் தேசத்தில் இருந்ததுவே என்பதும் தெளிவாகிறது. அதுசரி, பாரத் என்பது பரதனின் பெயரைத்தான் குறிக்கும் என்றால் அது தவறு. பானுவின் ரதம் புறப்படும் தேசம் என்பதால் அது பா-ரதம் என்று அழைக்கலாயிற்று. நம்முடைய நாவலன் (எ) ஜம்பு துவீபம் எத்தனை பெருமை வாய்ந்தது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவு.
முதலில் வந்த மொழியைக்கொண்டே தேசம் பெயர் பெற்றது. தமிழை ஆராயும்போது வடமொழியை ஏற்றிச்சொல்வது முரணாகும் என்ற அறியாமையில் ஈசனின் மொழியை ஒரு நூற்றாண்டாக பழித்து வந்தனர். இறை மார்க்கத்திலுள்ள தமிழ்நேச அருளாளர்களும் இத்தவறை செய்து வருகிறார்கள்.
Image may contain: sky, nature and outdoor

சனி, 6 அக்டோபர், 2018

ஒரு தவறும் இல்லை!

பதிவிலுள்ள படச் செய்தியைப் படிக்கும்போது "கிறித்துவங்க இப்போ என்ன புதுசா கொளுத்தி போடறாங்க?" என்ற எண்ணம்தான் வரும். சமீப காலமாக ஹிந்து கடவுளையும் ஹிந்துக்களையும் வசைமாரி பொழிந்து கேலி பேசும் கிறித்தவர்களைக் காண்கிறோம். இன்றைய கொந்தளித்த நிலையில் இதைப் பார்க்கும்போது "என்ன துணிச்சல் இருந்தா இப்படி போடுவானுங்க?" என்று கோபப்பட தோன்றும்.
ஆனால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நிலவியது என்ன? முற்போக்கு எண்ணங்களும், ஆரியர் எதிர்ப்பு, வேதம்/சமஸ்கிருதம்/பிராமணர் எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் ஏழை பிராமணர்களை புறக்கணித்த சமுதாயம் இருந்தது. தமிழகத்தில் பெரியார் இயக்கம் காலூன்றி இருந்தபோது, இவர்களுடைய வளர்ச்சியை எல்லா வழியிலும் தடுத்தனர். ஒரு கட்டத்தில், வேறு வழியில்லாமல் மதராஸ் மாகாணத்தில் பள்ளிக்கல்வி வரை படித்த வறுமையில் வாடிய பிராமணர்களை கிறிஸ்துவ மிஷனரிகள் அணுகியது. "மேற்படிப்பு தருகிறோம், நல்ல எதிர்காலம் அமைத்துத் தருகிறோம், உன் பெற்றோருக்கு வேண்டிய உதவி செய்து கொடுக்கிறோம், எங்கள் மதத்தில் சேர விருப்பமா?" என்று கேட்டன.
இவர்கள் அப்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு மதம் மாறினார்கள். ஏதோ, வறுமையில் இருந்த பிற தாழ்த்தப்பட்ட சாதியினர்தான் மதம் மாறினார்கள் என்று நினைக்க வேண்டாம். பிராமணர்களும் மாறினர். இவர்கள் பிற்காலத்தில் சர்வகலாசாலை துணை வேந்தர்களாக, மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, கல்வியாளராக பரிமளித்தனர். அக்காலத்தில் இப்படி எல்லாம் நடந்தைப் பற்றி சொன்னவர் காலஞ்சென்ற டாக்டர். மால்கம் ஆதிசேஷய்யா.
இப்படியொரு நிலை இருந்துள்ளது என்பது நமக்கே ஆச்சரியத்தைத் தரும். உடுமலைபேட்டை சங்கர் கொலை முதல் அண்மையில் தேனியில் நடந்த அருந்ததி கற்பழிப்புக் கொலைவரை நம் சமூக ஊடங்கங்களில் 'மேல் ஜாதியினரின் அராஜகம்' என்று தலைப்பிட்டு அம்பேத்கர்/ பெரியார்/ முற்போக்கு இயக்கங்கள் பிராமணர்களைத்தான் ஏசுவதை பார்த்துள்ளேன். அதை படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. இதுபோன்ற சாதி மறுப்பு கொலைகளில் கைதான முக்குலத்தோர், கவுண்டர், முதலியார், ரெட்டியார் எல்லோரையும் பிராமணராக கருதி அங்கே விமர்சனங்கள் போடுகிறார்கள். ஆக, இப்படி இருக்கிறது இன்றைய நிலை!
போர்த்துகீசியர் காலத்தில் வேளாங்கண்ணி மாதா தரிசனம் தந்த காலத்தில், தேவாரம் பாடல்பெற்ற தென்னாட்டு தலங்களில் எல்லா ஜாதி ஆண்களும் குடுமிதான் வைத்திருந்தனர். அப்படியான ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கலாம். அதைப் பார்த்து விட்டு 'மேரி மாதாவிடம் ஒரு பிராமணன் யாசகம் கேட்பதாக சித்தரிப்பது தவறு' என்று பல அமைப்புகள் திடீரென வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளது. இதை பெரிது படுத்தாமல் விடுவதே நன்று.

Image may contain: one or more people and text

செவ்வாய், 2 அக்டோபர், 2018

காந்திய சோதனை

"மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்று உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும்" என்று மஹாத்மா காந்தி தன்னுடைய 'சத்திய சோதனை'யில் சொல்லியுள்ளார்.
இன்றைக்கு இதையெல்லாம் சிறு குழந்தையும் நம்பாது. பெரிய கொலைகளை செய்துவிட்டு இந்த மாதிரி பாவமன்னிப்பு கேட்டு விட்டால் சிறை தண்டனை கிடைக்காதா? அல்லது சிறையில் சொகுசாக வாழ வசதி செய்து கொடுக்க மாட்டார்களா? இனிமேல் பாதகம் செய்யமாட்டேன் என்று நீதிபதிமுன் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டால் சிறையில் இருந்துகொண்டே வெளியே வந்து பலபேர்களை தீர்த்துக் கட்டிவிட்டு அமுக்கமாக போய் சிறையில் மீண்டும் உட்கார்ந்து கொள்ள முடியாதா?
காலக்ஞானம் தீர்க்கதரிசன நூலில் போதுலூரி ஸ்ரீ வீரப்ரம்மேந்திர சுவாமி இவ்வாறு கூறினார், "கலி 5000 ஆண்டுகளுக்குப்பிறகு வைசியர் குலத்தில் காந்தி என்ற ஒரு சத்தியவான் வருவான், தேசத்தின் போக்கை நல்வழிப்படுத்துவான்."
அக்காலத்து தர்மநெறிக்கு அவர் பேச்சு எடுபட்டது. நாடு சுதந்திரம் பெற்ற ஓராண்டுக்குள்ளேயே அவரை அனுப்பி வைத்தோம். மஹாத்மாவின் போதனைகள் ஐம்பது ஆண்டுகளிலேயே பயனில்லாமல் போய்விட்டதும், கிண்டல் கேலிக்கு உட்படுவதும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதர்மம் மேலோங்கும் இக்காலத்துக்கு அவருடைய போதனைகள் சற்றும் ஏற்புடையதல்ல. இத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்தாகி விட்டது இனியும் சிறையில் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஜனாதிபதியும் ஆளுநரும் கொலைக் கைதிகளை விடுவித்தே ஆகவேண்டும் என சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றும் அளவில் இருக்கிறோம். அவரவர் மனதிற்கு சரி எனப்பட்டத்தை எல்லா கட்சியினரும் செய்கிறார்கள். நாம் வேடிக்கைப் பார்க்கிறோம்.
மஹாத்மாவை இனியும் நாம் கிண்டல் செய்வதும் பக்தி பூர்வமாக பாசாங்கு செய்வதும் கடவுளுக்கே அடுக்காது! நான் யதார்த்தமாக சொல்வது சரியா தவறா என்பதை அவரவர் மனம்தான் முடிவு செய்யவேண்டும். என்னடா இவன் இப்படிப் பேசுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் மாணவனாக இருந்தபோது கல்லூரிகளுக்கிடையேயான 'Gandhian Studies' தலைப்பில் வைத்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவன். இன்றும் 'சத்திய சோதனை' புத்தகத்தை படித்துப் பாதுகாக்கிறேன்.

Image may contain: one or more people