About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 22 டிசம்பர், 2022

முக தரிசனம் தந்த சித்தர்!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி, குன்னத்தூர் அய்யம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயிலை ஒட்டியுள்ள வயல்கள் சூழ் கால்வாய் அருகேயுள்ள எங்கள் மூதாதையர் ஸ்ரீ மத்யார்ஜுனம் சுப்பாராவ் @ விபூதி சித்தரின் சமாதி பீடம் உள்ளது.

சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தபோது விபூதி சித்தர் தன் முகத்தைக் காட்டியுள்ளார். தரையிலிருந்து கீழே சமாதி குழிக்குள் எட்டிப் பார்த்தால் எப்படித் தெரியுமோ அவர் முகம் அப்படித் தெரிகிறது. அவர் சமாதி பிரவேசம் செய்த காலம் 1561 AD. அப்போது அவர்க்கு வயது 54.

ஜூலை 2022 ஆடி மாதம் குருபூர்ணிமா அன்று பீடம் ஸ்தாபிதம் ஆனது. அப்போது எடுத்த ஒரு காணொளியிலிருந்து இப்போதுதான் படம் பிடித்துப் பார்க்கிறேன். முதல் படத்தில் தலையில் தொங்கும் சடை, நீண்ட தாடி, காதில் ருத்ராட்ச குண்டலம், அகலமான நெற்றிக்கு மேலே தலையில் சூர்யசந்திர சிகை ஆபரணமும் தெரிகிறது. இப்போது 460 வருடங்கள் கடந்து போயுள்ளது. சமாதியில் அமர்ந்தது முதல் இன்றுவரை தன் இருவேறு காலகட்டத்தின் முகங்களை இதில் வெளிக்காட்டியுள்ளார். ஓம் நமசிவாய.🙏

அவர் பூசித்து வந்த ஸ்படிக லிங்கமானது தற்போது பங்காளிகள் வம்சத்தாரிடம் புதுவையில் உள்ளது.

-எஸ்.சந்திரசேகர்











வெள்ளி, 9 டிசம்பர், 2022

நீர் உயர நெல் உயரும்!

குலோத்துங்க சோழனின் முடிசூட்டும் நாளன்று அவனை ஔவை பிராட்டி வாழ்த்திப் பாடினாள். அப்பாடலை நாம் சிறுவயதிலேயே படித்துள்ளோம். 

"வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்"

வரப்பு உயர்ந்தால் நீர் உயரும். நீர் உயரத் தேங்கினால் நெல் உற்பத்தி எப்படி உயரும்? பயிர்கள் நீரில் நின்று அழுகிப் போய்விடுமே என்று பலர் நினைக்கலாம். வரப்பு என்பதை ஏரி/ குளம்/ வயல் கரைகள் என விளங்கும். நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்தால் விவசாய பாசனம் சிறப்புறப் பயிர் சாகுபடியும் உயரும் என்பது பொருளாம்.

அக்காலத்தில் வரப்பில் நீர் மட்டம் உயரவுயர நெற்பயிர்கள் மூழ்காமல் உயர வளரும் தன்மையைக் கொண்டிருந்தன. புயலைத் தாங்கியும் மணிகள் கொத்துக்கொத்தாய்த் தலை வணங்கி நிற்கச் சாகுபடியும் உயர்வாய் இருந்தது. பஞ்சம் பட்டினி இல்லாமல் குடிகளும் உயர்வாக வாழ்ந்தனர்.

காட்டுயானம், கருங்குறுவை, தூயமல்லி, தேங்காய்ப்பூ சம்பா ஆகியவை பாரம்பரிய நெல் ரகங்கள். நாம் கேள்விப்படாத பல ரகங்களின் நெல் விதைகளை ஆங்காங்கே விநியோகம் செய்யும் மையங்கள் இன்று உள்ளன. காலஞ்சென்ற நெல் ஜெயராமனே சுமார் 170 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்தார்.

இக்காலத்தில் பயிரிடும் குட்டை ரக நெற்பயிர் பற்றி ஔவை தன் பாடலில் சொல்லவில்லை. அன்று மாதம் மும்மாரி பொழிந்தது, வருடம் முப்போகம் நடந்தது. ஆனால் இன்று அறுவடை என்றால் தை மாதம் மட்டும்தான் என்று நினைக்கும் அளவில் ஒரு போகமாகி விட்டது. இன்று வரப்பில் ஒரு பருவ மழைக்கே அதிக நீர் தங்கினால் பயிர் அழுகிப்போகும் நிலை இருப்பதுபோல் அன்று எதுவுமில்லை. யானையை மறைக்கும் அளவில் எட்டடி பத்தடி வரை உயரம் வளரும் ரகங்களாகும். பாடல் மூலம் ஔவை நமக்கு விவசாயப் பாடம் நடத்திவிட்டாள்! 👍


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கற்பகம்!

கண்டேனே தசநாதம் கேட்கக்கண்டேனே

கண்ணாக லலாடம் திறக்கக் கண்டேனே

விண்டேனே பரமன் ஆட்டம் விண்டேனே

விளையாட்டை வாய் பிளக்க விண்டேனே

உண்டேனே கபால அமுதமே உண்டேனே

உள்நாவால் பாலும் சிந்தவே உண்டேனே

கொண்டேனே சக்தி ஏற்றிக்கொண்டேனே

காயமும் கல்லாய் ஆக்கிக்கொண்டேனே!

-எஸ்.சந்திரசேகர்



ஓம் நமசிவாய 🌿

குடையாட குழலாட சாமரம் அசைந்தாட

குவித்த பல விழிகளும் கரங்களுமாட

விடையாட மதியாட மனமகிழ் உமையாட

வாதித்த சித்தர்களும் தவரிஷிகளுமாட

சடையாட புவியாட ஈரேழு புவனமுமாட

சேவித்த உன் அடியார்கள் வினையுமோட

நடையாட நயமாக ஓதும் நான்மறையாட

நாதாந்த பரவெளியில் நான் ஆடினேனே!


-எஸ்.சந்திரசேகர்