About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 26 நவம்பர், 2022

சிவப்பேறு!

சித்தர் பாடல்களை ஆழம் வாசிக்கச்

    சித்தம் தெளிந்திட உயர்த்தும் பாரு

அத்தர் பூசியும் மணக்காத மனமதில்

    அத்தன் சூட்சுமம் காட்டுவார் பாரு

பத்தர் போகர் எனையாளும் குருநாதர்

    பித்தம் தீர்த்துப்புடம் போடுவார் பாரு

புத்தர் ராமர் கிருஷ்ணர் வடிவத்தில்

    புதுயுகம் தோறும் தோன்றுவார் பாரு


கூத்தர் நடமிடும் தில்லை அம்பலத்தில்

    கனிவாய்த் திருமூலரின் சமாதி பாரு

பித்தர் பிறைசூடிய பெம்மான் மனங்கவர்

    பதியில் அமர்ந்த சிவகாமியைப் பாரு

முத்தர் முப்பத்தாறை ஏறி நிலைத்தோர்

    மாயை வினையறுத்துப் போவார் பாரு

நித்தர் யோகஞான வித்தையைப் பற்றி

    நித்திய சதாசிவத்தில் கலப்பார் பாரு!

-எஸ்.சந்திரசேகர்



"சித்தரின் பாதத்தில்..."

அது 2012. 'அதிசய சித்தர் போகர்' மற்றும் 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' ஆகிய நூல்களை எழுதி முடித்த சமயம். பதிப்பாளர்களிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுக்கும் முன் அகத்தியர் கோயிலுக்குச் சென்றேன். அங்கு அவர் பாதத்தில் அதை வைத்துக்கொடுக்கச் சொன்னேன். அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது அகத்தியரின் சிரசின் மீதிருந்த ஒரு பெரிய ரோஜாப்பூ கீழே பிரதியின் மீது விழுந்தது பெரும்பேறு. 

குரு போகர் தான் இயற்றிய நூலை எப்படி அகத்தியரிடம் தந்து அனுமதி பெற்றாரோ அதுபோலவே என்னுடைய படைப்புக்கும் அமைந்தது என் பாக்கியம்.

முகநூல் நண்பரும் என் அத்யந்த அன்பு வாசகருமான ஆயுதப்படைப் பிரிவு காவலர் திரு.லோகநாதன் அவர்கள் அண்மையில் பொதிகை அகத்தியர் கூடம் சென்று வந்தார். அங்கே கும்பமுனி அகத்தியரின் பாதத்தில் என் புத்தகத்தை வைத்து வணங்கியுள்ளார். இவர் மூலம் மீண்டும் சித்தரின் மகத்துவமான கருணைக்குப் பாத்திரமானேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️

நன்றி லோகு! 🙏 வாழ்க வளமுடன்.


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 20 நவம்பர், 2022

பேசாமல் பேசும் சித்திரம்!!

சுவரில் வரைந்திருந்த இப்படியொரு ஓவியத்தை நண்பரின் முகநூல் பக்கத்தில் பார்த்தேன். அது நிறைய விஷயங்களைச் சொல்கிறது.

குரு போகர் பழனியில் நவபாஷாண முருகனைத் தண்டபாணியாக வடித்து நிறுவுகிறார். அதன் சிரசில் குடுமியின் சுவடை ஆழப்பதித்து நீவுகிறார். சிகையானது செவ்வாயுடன் பரவெளித்தொடர்பைப் பெற அவர் தன் நடுவிரலால் ஆகாய முத்திரையைக் காட்டி உணர்த்துகிறார். அவரைச் சுற்றி கீழே புலிப்பாணி சித்தர்கள் கைகூப்பியும் கைகளில் மருந்துக்கலவையை ஏந்தியும் நிற்கிறார்கள். தம் நாயகனை எவ்விதம் போகர் வடிக்கிறார் என்பதை வள்ளியும் தெய்வானையும் ஆச்சரியத்தடன் எட்ட நின்று பார்க்கின்றனர். சிலை வார்ப்பு முடிந்ததும் நவபாஷாண விக்ரகத்திற்குப் போகர் உயிரூட்டும்போது முருகனின் வாசிக்கலைளாக இருவரும் அவனுள் இயங்க ஆயத்தமாக உள்ளனர். இச்சிலைக்கு முறையான பூஜா விதிகளை நம் போகர் விரிவாகப் புலிப்பாணிக்கு எடுத்து இயம்புகிறார். பிறகு அதுவே புலிப்பாணி பூஜாவிதி 50, ஷண்முக பூஜை 30 என்ற நூல்களாக வந்தன.

-எஸ்.சந்திரசேகர்