About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஆட்டுக்கிடா வாகனம்!

கோவை, சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில் கந்தசஷ்டிப் பெருவிழா இன்று நடந்தது. மடாலயம் பதிவேற்றிய காணொளியைத் தற்சமயம் முகநூலில் பார்க்க நேர்ந்தது. 

உந்துதல் வர ஒரு படம் பிடித்தேன். அது மானோ என நினைக்கத் தோன்றியது. அதை உற்றுப்பார்த்தால் அது மானல்ல, உட்புறம் வளைந்த கொம்புகளுடன் உள்ள முருகனின் வாகனமான ஆட்டுக்கிடா என்பது தெரிந்தது. உங்களுக்குத் தெரிகிறதா?

இது ஆட்டுக்கிடாதான் என்கிறது கந்தர் கலி வெண்பா பாடல்.

"நெருப்பில் உதித்து அங்கண் புவனம் அழித்துலவும்

செங்கட் சிடா அதனை சென்று சென்று கொணர்ந்து

அதன் மீது இவர்ந்து எண்திக்கும் விளையாடும் நாதா!’’

அதாவது, வேள்விக் குண்டத்திலிருந்து  அஞ்சத்தக்கப் பெரிய ஆடு ஒன்று உலகையே அழிக்க உலவுவதுபோல் தோன்றியது. வீரபாகுதேவர் விரைந்து சென்று அந்தச் செங்கண் செம்மறிக்கடாவை அடக்கி இழுத்துக்கொண்டு வந்து முருகனிடன் ஒப்படைக்கிறார். முருகப் பெருமான் அதன்மீது ஏறி அமர்ந்து, அதை எட்டுத் திக்கிலும் செலுத்தி விளையாடினார். இதுவே அப்பாடலின் பொருள். நாமும் கண்டு தரிசித்தோம்.

ஓம் சரவணபவ 🕉️ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

-எஸ்.சந்திரசேகர்




அசைந்தாடும் ஊஞ்சலில் மனம்!

ஆன்மிக முகநூல் பக்கத்தில் என்னுடைய கருத்துரைக்கு முன்பாக ஒரு அம்மையாரின் பதில் இருந்தது. அவருடைய பெயர் பரிச்சயமாய்த் தெரிந்ததால் அவருடைய ப்ரோஃபைல் பக்கத்தைச் சென்று பார்வையிட்டேன். என்ன ஆச்சரியம்! அவர் எனக்கு 10ஆம் வகுப்பு ஆசிரியை.

உடனே அவருக்கு, “மேடம், நான் படித்த பள்ளியில் நீங்கள்தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர். உங்கள் கணவர் திரு.ராஜேந்திரபிரசாத் ஒரு மனநல மருத்துவர் என்று நீங்கள் ஒருமுறை சொன்னது நினைவுள்ளது. வேளச்சேரி விஜயநகரில் வசித்தீர்கள். பத்தாம் வகுப்பு தொடக்கம்வரை எங்களுக்குப் பாடம் நடத்திய திரு.மாணிக்கம் அச்சமயம் திருச்சி நேஷனல் காலேஜுக்கு வேலை கிடைத்துப் போனதால் நீங்கள் வந்தீர்கள். மெட்ரிகுலேஷன் வகுப்பிற்கு ஆங்கிலம் துணைப்பாடம் ‘டிரெஷர் ஐலன்ட்’ இருந்தது. உள்ளூர் திரையரங்கில் அப்பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை அறிந்து மொத்த வகுப்பையும் உங்கள் செலவில் படம் பார்க்க அழைத்துச் சென்றது நினைவிருக்கிறதா? உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ இறையருள் புரியட்டும்” என்று பதிவிட்டேன்.

அதைப் பார்த்துவிட்டு அவர், “ஆமாம்ம்ம்... நன்றாக நினைவுள்ளது. இதைவிட எனக்குப் பெருமையான தருணம் இருக்க முடியுமா?  மிக நீண்ட... பல வருடங்கள் கழித்து என்னை என் பழைய மாணவர் நினைவு வைத்துக்கொண்டு பேசியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி... ஆனந்தம்! ஃபிரென்ட் ரிக்வெஸ்ட் தருகிறேன் எற்றுக்கொள்ளவும்” என்று திருமதி ரமணி பிரசாத் போட்டிருந்தார். 

காலம்தான் எத்தனை வேகமாய்க் கடந்து போய்விட்டது! நம் உடல் மூப்படைந்து போனாலும் மனம் மட்டும் என்றுமே இளமைக்காலத்து நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை. தற்போது கோவை அருகே பாலக்காட்டில் கணவருடன் வசிக்கும் அவருக்கு வயது 74.

-எஸ்.சந்திரசேகர்



அவதாரங்களும் நிலைகளும்!

வேதம்/புராணம் கூறும் எந்த ஒரு கருத்தையும் விளக்கவோ ஒப்பீடு காட்டவோ நம் சித்தர்களின் நூல்கள் பெரிதும் உதவுகின்றன. மேரு மலையில் (கபால சக்கரத்தில் அல்ல) தான் கண்டு தரிசித்த தசாவதார ரிஷிகள் யார் யார் என்பது பற்றி காலாங்கி தன்னுடைய சீடர் போகருக்கு விளக்கியுள்ளார். அதில் மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்பது வரிசை. இனி வரவுள்ள கல்கி எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்பே கூறிவிட்டதால் அதையும் இந்த வரிசையில் முன்கூட்டியே சேர்த்தாயிற்று. 

அழிக்கும் தொழிலைச் செய்வது சக்தி/விஷ்ணு. அதாவது சிவனின் வாமபாகம். உடனே நீங்கள் முருகனைப்பற்றி இக்கணம் நினைப்பீர்கள். சிவனாகிய குகன் அழிப்பதில்லை. தாயும்/ மாமனும் வழங்கும் யோகசக்தியை/ஆயுதத்தைக் கொண்டு அவன் ஆவேசமாகத் தாக்குவான், அதனால் முருகனே சத்ருசம்ஹாரம் செய்தான் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவன் செய்வதில்லை. 

நாம் அறிந்த விஷ்ணுவின் தசவதாரங்கள் எல்லாமே தீயோரைக் கொன்று நல்லவர்களைக் காக்கும் நோக்கில் நடந்ததுவே. கீதையில் “யதாயதா ஹி தர்மஸ்ய...” என்ற ஸ்லோகத்தில் கிருஷ்ணன் சொன்னதுபோல் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வருவது அவதாரம். அவதாரம் என்றால் பரப்பிரம்மமே உருவமேற்று இறங்கி வருதல் என்பதாகும். அது ஜீவராசிகள் வடிவாகவோ, பிராணி- மனிதன் கலந்த வடிவமோ, மனிதனாகவோ இருக்கும். 

மச்சம்/ கூர்மம்/ வராஹம் அவதாரம் எல்லாம் அதனதன் வடிவில் இறை அம்சத்துடன் வந்து செயல் புரிந்தது. வாமனன்/நரசிம்மம்/ பரசுராமன் அவதாரம் எல்லாம் அக்கணம் மட்டும் ஆவேச சக்தி வெளிப்பட்டுப் பணியை முடித்தது. ராமன் கிருஷ்ணன் அவதாரம் எல்லாம் மனிதனாக அவதரித்து வாழ்ந்து தமக்கு இட்ட பணியை முடித்தனர். 

ஆக நம் புரிதலுக்காக அவதாரங்களை அம்சம்/ ஆவேசம் / பூரணம் என்ற நிலைகளாகக் கொள்ளலாம். கோபம் கொண்டு ஷத்ரிய படைகளை அழித்து ஒழிக்கும் வரை பரசுராமனிடம் இறைசக்தி இருந்தது. வந்த நோக்கம் நிறைவேறியதும், பரசுராமனிடம் சக்தி வெளியேறியது. நித்ய சிரஞ்சீவியாக வாழ சிவன் அருள் புரிந்தார். நரசிம்ம அவதாரமும் அப்படியே! ஹிரண்யனை சம்ஹாரம் செய்யும் நேரம் மட்டும் அவதாரமாகப் பிரவேசித்து முடிக்கிறார்.           

‘இராமன், கிருஷ்ணன் எல்லாம் கடவுள் என்றால் ஒரு கட்டத்தில் ஏன் வாழ்க்கை முடிந்து போனது?’ என்று போகர் கேட்பது சரிதானே? அவர்கள் விஷ்ணுவின் பூரணத்துவத்துடன் மனிதர்களாக அவதரித்து வாழ்ந்தனர். அந்தந்த யுகத்தில் வந்த வேலை முடிந்தவுடன் மறைந்தனர். நந்தி, பிரம்மன், விஷ்ணு, இந்திரன், முருகன், இராமன், என தானும் அந்நிலைகளில் ஜெனித்து வாழ்ந்ததைத் தன் நூலில் போகர் சொல்லியுள்ளார். 

காலாங்கி நாதருக்கு அவதாரங்கள் எல்லாமே எப்படி ஒரு சேர காட்சி தரமுடியும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. விஷ்ணுவின் அவதார உருவங்கள் அழிந்தாலும், சூட்சும உருவங்கள் அதே சக்தியுடன் நிலைக்கும் தோன்றும் மறையும். அவ்வண்ணமே அவதார ரிஷிகள் சித்தர்பிரானுக்குத் தரிசனம் தந்தனர். புத்தரிஷியையும் பார்த்துள்ளார். ஆனால் ஆதி புத்தரை நாம் கணக்கிலேயே கொள்வதில்லை. 

தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீபாத வல்லபர், அகல்கோட் மகாராஜ், ஷிர்டிசாயி, சிருங்கேரி நரசிம்ம பாரதி எல்லோரும் வெவ்வேறு காலங்களில் ஜனனம் எடுக்கும் முன்னமே ஒருவரையொருவர் சந்தித்து உரையாடியுள்ளனர். பரசுராமனும் இராமனும் சந்தித்தனர், திருப்பதியில் வாசம் செய்ய வெங்கடாசலபதி ஆதிவராஹ சுவாமியிடம் அனுமதி பெற்றார் என்கிறது தலபுராணம். இவை நமக்கு விந்தையாகத் தெரியும்!  

விஷ்ணுவின் அவதாரப்பட்டியலில் முக்கியமாக தசாவதாரங்கள் மட்டுமே சொல்கிறோம்! ஆனால் அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ ஜனன அவதாரங்கள் உண்டு. அம்சத்துடன் வாழ்ந்து, ஆவேசத்துடன் வெளிப்பட்டு, பூரணத்துவத்துடன் வாழ்ந்ததுண்டு. புராணம் சொன்னாலொழிய நமக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ‘நந்திகள் நால்வருடன் தானும் பயின்றதாகத் திருமூலர் சொல்வாரே, அந்த சனகாதியர் நால்வர் உள்பட நாரதர், அகத்தியர், தத்தர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆதிசேஷன், வியாசர், கோவிந்த பகவத்பாதர் என இன்னும் எத்தனையோ அவதாரங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

பக்தி யோகம் ஞானம் போதித்த அவதார மகான்களில் ஆதிசங்கரர், இராமாநுஜர், இராகவேந்திரர், ஸ்ரீவீரப்பிரம்மம், வள்ளலார், காஞ்சி பரமாச்சார்யார், ஷிர்டிசாயி, என இன்னும் நிறைய பேர் தேசம் முழுக்க இருந்தனர். சமணம், முஸ்லிம், கிறிஸ்து மதங்களில் ஜனனம் எடுத்திருந்தாலும் நம் மனம் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. 🤔

உங்களில் யாரேனும்கூட இறை அம்சத்துடனோ ஆவேச குணத்துடனோ அவதாரம் எடுத்திருக்கலாம். இப்போது அது உணரப்படாமல் இருக்கலாம், ஆனால் காரணமும் காலமும் நெருங்கும்போது வெளிப்படலாம். கல்கியின் கையாளாக சமுதாயத்திலே பிரவேசித்து நெறிமுறைப்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் சாத்தியம் உண்டு. ஓம் நமோ நாராயணாய!

-எஸ்.சந்திரசேகர்



தெய்வீக அஷ்டபந்தனம்!

ஒரு கோவில் எப்படி அமைய வேண்டும், சிலைகள் எப்படி வடிக்கப்பட வேண்டும், எப்படி பிரதிஷ்டாபனம் செய்ய வேண்டும் என்பது வரை ஆகம விதிமுறைகள் பல இருக்கின்றன. ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து அது பீடத்திலிருந்து அகலாமல் இருக்க அடிபாகத்தில் அஷ்ட பந்தன மருந்து சாத்து செய்வார்கள்.

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை. இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இந்த மருந்து கல்போல் இருக்கவும் கூடாது, இளகலாகவும் இருக்கக்கூடாது. 

எல்லா பொருட்களை எந்தெந்த அளவு சேர்த்து எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்கும் கால அளவு உள்ளன. சித்தர் பாடல்களிலும் பதார்த்த செய்பாகமுறை சொல்லப்பட்டுள்ளது.

"கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்"

இது பொதுவான அஷ்டபந்தன முறை என்றாலும் சில தலங்களில் தங்கத்தால் சொர்ண பந்தனமும் செய்யப்படுகிறது. இவை குறிப்பிட்ட காலம் வரையே கெட்டியாக நிற்கும். அபிஷேகம் மற்றும் தினசரி பூசைகளால் காலப்போக்கில் தேய்மானமாகி பலவீனப்பட்டு உதிரும் தன்மை உடையது. ஒவ்வொரு முறையும் குடமுழுக்கின்போது மூலவர் விக்ரகத்தை வெளியில் எடுத்துச் செப்பனிட்டு அதன்கீழே புதிதாய் இந்த சிவப்பு மருந்தை இடுவார்கள்.

ஊர் அரட்டை அடித்துக்கொண்டு மருந்து இடிக்க முடியாது. உரலில் இடிப்பவர்கள் மந்திரங்கள் ஜெபித்தபடி ஆச்சாரமாகச் செயல்பட வேண்டும். அம்மருந்தில் சக்தி அலைகள் உருவேற்றப் பாய்ந்திட தெய்வீகத் தன்மையைப் பெறும். கும்பாலங்காரம் செய்யும்போது வெவ்வேறு பிரமாணங்களில் நூல் சுற்றும்போது மானசீக மந்திர ஜபம் நடப்பது போலவே இம்மருந்தையும் உருவேற்றி இடிக்க வேண்டும்.

ராஜராஜ சோழன் கட்டுவித்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முதல் குடமுழுக்கின்போது கருவூராரை அழைக்காமல் அகம்பாவத்தில் மன்னன் அவமானப்படுத்தியதால் பெருவுடையார் அடிபாகத்தில் மருந்து ஒட்டவில்லை. என்ன செய்வதென அறியாமல் அங்கே அந்தணர்கள் குழம்பினர். சோழன் தன்னுடைய தவறை உணர்ந்தபின் சித்தரைத் தேடிப்போய் அழைக்க, அவர் தன் வாயில் தரித்திருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து 'இதைப் போய் அதில் சாத்து' என்றதும், அதன்பின் அஷ்டபந்தனம் திடப்பட்டு லிங்கத்திருமேனி ஸ்திரமாக நின்றது என்பதும் நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்தான்.

ஆக, ஆகம விதிப்படி கல் தேர்வு, சிலை வடிப்பு, சோதனை முறைகள், வேள்விகள், ஸ்தாபனம், மந்திரங்கள், அஷ்டபந்தன மருந்து சாத்து, சம்ப்ரோக்ஷணம் வரை எல்லாம் நூல் பிடித்தபடி வரிசையாக நடக்கும். தெய்வீக பந்தனம் நமக்கும் காப்பாக இருக்கும்!

-எஸ்.சந்திரசேகர்




இதுதான் சமையல் ரகசியம்!

உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ள மாடவீதிகளில் பல உணவு விடுதிகள் இருப்பதைக் கண்டேன். ஹோட்டல் உரிமையாளர் பெயர்கள் ஸ்ரீனிவாச பட், சுரேஷ் பட் என்ற ரீதியில் இருக்கவே நம்மூரில் உட்லன்டஸ், பட்ஸ் ஹோட்டலை எனக்கு நினைவூட்டியது. காலையில் அங்கே சிற்றுண்டி உண்டபின் கல்லாவில் இருந்த அந்த நபரிடம் என் சந்தேகக் கேள்வியைக் கன்னடத்தில் கேட்டேன். 

“உங்கள் ஊர் முழுக்க பட் ஹோட்டல்கள் நிறைய உள்ளதே, சமையல்தான் இந்த ஊர் மக்களின் பிரதான தொழிலா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “ஹௌது சுவாமி.. குருஷேத்திர யுத்த காலதிந்த அடுகே மாடுவதே நம் சர்வீஸ்” என்றார்.

“குருக்ஷேத்ர யுத்தம்னா... துவாபர யுகம் முதலேவா... ஆச்சரியமா இருக்கு.. மேலே விவரமா சொல்லுங்க” என்றேன். அவர் மகாபாரதக் கதையைக் கூறினார்.

உடுப்பி பகுதியை ஆண்ட அரசன் நரேஷ் குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்குகொள்ள படைகளுடன் சென்றான். அப்போது ஸ்ரீகிருஷ்ணரிடம் கோரிக்கை வைத்தான். கௌரவர்கள்/பாண்டவர்கள் இருதரப்பிற்கும் உணவு சமைத்துப்போட அனுமதி தரவேண்டும் என்று வேண்டினான். “ஆகட்டும் நீயே சமையலைப் பார்” என்று உத்தரவானது. அதன்படி தினமும் ருசியான உணவு படைத்து அது மீதம் ஆகாதவாறு சமைத்தான். தினமும் அதெப்படி முடியும்? உத்தேசமாக சமைக்கலாமே தவிர துல்லியமாக எப்படி? தேர், யானை, குதிரை, காலாட்படை என இருவரின் படைகளும் மொத்தம் 18 அக்குரோணி. ஆக தினமும் இத்துணை தலைகளுக்குச் சமைப்பது என்பது தெய்வத்தின் செயலுக்குச் சமமாகுமே! ஆம் அந்த ரகசியம் பற்றி நரேஷ் விளக்கினான்.      

தினமும் அளிக்கும் உணவில் கிருஷ்ணர் சாப்பிடாமல் மீதம் வைத்த வறுத்த வேர்கடலைகளை எண்ணி அதை ஆயிரத்தால் பெருக்க, வரும் தொகை எண்ணிக்கையே மறுநாள் போரில் மாண்டுபோவோர் எண்ணிக்கை என்பதை வெளிப்படுத்தினான். மொத்த அக்குரோணி சேனைகளின் எண்ணிக்கையில் தினமும் மீதமான வேர்கடலைகளை ஆயிரத்தால் பெருக்கிக் கழிக்க மீதம் உள்ளவர்களுக்கே சமையல் செய்து பரிமாறினான். இதன்படி பதினெட்டு நாள் போரில் முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு வீரர்கள் மாண்டது தெரிந்தது. கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்கள் வென்றனர். அன்றிலிருந்து உடுப்பி தேசம் அன்னம் படைக்கும் தொழிலைச் செய்ய ஸ்ரீகிருஷ்ணர் அருள் புரிந்தார் என்று ஹோட்டல் உரிமையாளர் சொன்னார்.

மகாபாரத யுத்தத்தில் பாரதத்தின் பல பகுதிகளிருந்தும் அரசர்கள் தங்கள் படைகளை அனுப்பி இரு தரப்பினர்க்கும் போரிடவும்/ சமைக்கவும் உதவினார்கள். சேரன் உதியன்கூட சமைத்துள்ளான். இதில் சாரங்கத்வஜ பாண்டியன் அஸ்வத்தாமனால் கொல்லபட்டான், அவன் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். 

மகாபாரதம் தன்னுள் எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டுள்ளது. நாம்தான் இன்னும் முனைந்து அதைப் படிக்கவில்லை என்பதே உண்மை! 

-எஸ்.சந்திரசேகர்