About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 28 மார்ச், 2023

இல்லைனாதான் என்ன?

எனக்குத் தெரிந்த ஒரு முதியவர் இன்று என்னிடம் பேசும்போது தன் மனக்குறைகளைச் சொல்லி வருத்தப்பட்டார். “எனக்கு இப்போ வயசு 80க்கு மேலாச்சு. என் வம்சம் தழைக்கணும்னு நினைச்சேன் ஆனா அந்த ஆசை நிராசையாவே போச்சு. என் சம்சாரத்துக்கும் வருத்தம் இல்லாம இல்ல. என்ன செய்ய .. எல்லாம் தலைவிதி. வாங்கி வந்த வரம் அப்படி. என் தம்பிக்கு ஒரு மகனும் ஒரு பேரன் பேத்தியும் இருக்காங்க. அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவேன்” என்றார்.

“ஐயா, உலகத்துல எத்தனையோ கோடி ஜனங்களுக்குக் கல்யாணம் ஆகியும் குழந்தையே இல்லாம இருக்காங்க. எத்தனையோ பேர் கல்யாணமே ஆகாம இருக்காங்க. சிலருக்கு ஆண் வாரிசு இல்லாம மகள் மட்டும் இருந்து அதோட அவரோட கிளை நின்னு போகும். அதுகெல்லாம் அவங்க ஒவ்வொருத்தரும் உக்காந்து வருத்தப்பட்டா வேலைக்கு ஆகுமாங்க? சந்ததி இல்லேனா என்ன? நீங்க ஆசிர்வதிக்கபட்டவர்னு நினைச்சிகோங்க” என்றேன்.

“நான் ஆசிர்வதிக்கபட்டவனா... என்ன சொல்றே... எப்படி?” என்றார்.

“ஆமாங்க. எனக்குத் தெரிஞ்சு நீங்க யாரையும் மோசம் பண்ணினது இல்ல, யார் சொத்தையும் அபகரிக்கலை, சொல்லப்போனா உங்க சேமிப்பிலேந்து அப்பப்போ கஷ்டப்படுறவங்களுக்குக் காசு தந்து உதவுறீங்க. ஏழைங்க கல்யாணத்துக்குத் தாலிகூட தந்தீங்க. இதை நீங்க போன பிறவியின் வினைகளைக் கழிக்கப் பிராயச்சித்தம்னு வெச்சிகிட்டாகூட தப்பில்லை. ஆக மொத்தத்துல தண்டிக்ககூடிய பாவங்கள் இப்ப செய்யலை! 

பாவங்கள் ஏதாவது நீங்க செய்திருந்து, அதையும் உங்க சொத்தையும் அனுபவிக்க உங்க சந்ததியிலே எவனும் வரலைனா அதுக்கு வருத்தப்பட்றது நியாயம். அப்படி எதுவும் இல்லாதபோது நீங்க ஏன் கண்டதையும் மனசுல போட்டுக் குழப்பிக்கறீங்க. எப்படியும் மிஞ்சியிருக்குற உங்க காசுபணம் உங்களுக்கு அப்புறம் உங்க தம்பிக்கும் அவர் மகனுக்கும் போகப்போகுது. ஆக உங்களுக்கு வம்சவிருத்தி அவசியப்படாதுங்கிறது உங்க குலதெய்வ சித்தம்னு நினைச்சிகோங்க. இனி உங்களுக்கு அப்புறம் குலதெய்வ பூஜையை உங்க தம்பியும் வம்சாவளி பேரனும் தொடர்ந்து எடுத்துச் செய்யப்போறாங்க.

வாழையடி வாழையா சந்ததிகள் இருந்தாதான் மூதாதையர்கள் மோட்சம் போவாங்கனு சாஸ்திரம் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. அவங்களே திரும்ப வந்து ஜனனம் எடுத்துப் பாவத்தைக் கழிக்க ஒரு வாய்ப்பு வரும்ங்கிற காரணத்துக்காகச் சொல்லபட்டது. இப்போ சொல்லுங்க உங்களுக்கு என்ன அவசியம் திரும்பி வந்து உங்க வம்சாவளியில பிறக்க? உங்க கிளையில் உங்களோடேயே ராகு-கேது சாபம், பிராரப்த கர்மா எல்லாம் நீர்த்துப் போச்சுங்கிறதுதான் நிஜம்" என்று சொல்லித் தேற்றினேன்.   

“ஓஹோ... இதுல இப்படியொரு சூட்சுமம் இருக்கோ...  இது தெரியாம போச்சே..  நான் எதுக்கு மனச போட்டு உளப்பணும்? எனக்கு இந்த வயசுல உன் மூலமா இது புரியணும்னு இருக்கு. சரிதான்! சந்ததி இல்லைனாதான் என்ன? நல்லா தெளிவா உணர்த்திட்ட. இன்னொருக்கா வரும்போது வீட்டுக்கு வந்துட்டுபோ” என்றார் மகிழ்ச்சிக் குரலில்.

- எஸ்.சந்திரசேகர்



சனி, 18 மார்ச், 2023

கண்ணாடி வளையல்!

இக்காலத்தில் கண்ணாடி வளையல்கள் அணியும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஐம்பது ஆண்டுகள் முன்புவரை என்னதான் பணக்காரர்களாக இருந்தாலும் தங்க/வைர வளையல்கள் அணிந்தாலும் அத்தோடு மரபு மாறாமல் சில கண்ணாடி வளையல்களை அணிந்தனர். முன்பெல்லாம் தோளில் பெரிய கண்ணாடிப்பெட்டி ஒன்றை வார் பட்டியில் தொங்கவிட்டபடி தெருக்களில் வளையல் வியாபாரி வருவார். இன்று அவர்களையும் காணோம். நவராத்திரி சமயம் விடம் வாங்கிக்கொள்ள வீட்டிற்கு வரும் பெண்களுக்கென பிரத்தியேகமாய்த் தர வளையல்காரர் அழைக்கப்படுவார். இன்று எதுவுமில்லை.





திங்கள், 6 மார்ச், 2023

எது சுமை?

வீடு மனைவி மக்கள் செல்வம் என எல்லா உடைமைகளையும் உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது என்கிறது இந்தப்படம். இந்தத் தத்துவம் உண்மை என்றாலும் நிஜவாழ்க்கையில் சாத்தியம் இல்லை. மூட்டைகளை ஏன் சுமக்க வேண்டும்? இந்தச் சுமைகள் வேண்டாம் என ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொண்டால், சங்கடங்கள் வராது. ஆனால் சமூகம் அப்படி விடாது, கட்டாயப்படுத்தும். அப்படியான சுமைகளை ஏற்றிவிட்டு இப்படியான ஓர் உபதேசத்தைத் தந்தால் அவன் என்ன செய்வான்? ஐயோ பாவம்! அவன் ஜாதகத்திலே சன்னியாசி யோகம் போன்றதொரு அமைப்பு இருந்தால் தப்பித்தான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்க்காது.

ஒரு நடுத்தர குடும்பஸ்தன் மூட்டைகளை உதறுவது எப்போது?

* வீட்டிற்கான மாத EMI கட்டவேண்டும், அசலை மொத்தமாக அடைத்தபின்... 

* பொருளீட்டி வைத்து மகனை/மகளைக் கரை சேர்த்த பின் ....

* மனைவியை அம்போவென விடாமல் அவளுக்கான மாதவருவாய் ஏற்படுத்தித் தந்தபின்... 

நடுவில் வேலை பறிபோகாமல் இருந்து மாத சம்பாத்தியம் தொடர்ந்து வந்தால் ஒருவாறு சமாளிக்கலாம். இதெல்லாம் நிறைவேறவே அறுபது வயதாகிவிடும். அப்போது மூப்பினால் சர்க்கரை/ ரத்தக்கொதிப்பு/ மூட்டுவலி எல்லாம் படை எடுத்துவந்து மோதும். மருத்துவச் செலவும் பலகீனமும் ஏற்படும். எல்லாம் தீரும்வரை இறைவனைச் சுமக்க வாய்ப்பே அமையாது. அகக்கடல் உறங்கி அமைதி கொள்வது எப்போது? திடீரென விரக்தியில் உதறிவிட்டு ஓடிப்போனால் உண்டு. ஆனால் அதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும்.

எங்களுக்குத் தெரிந்த ஒரு பாட்டியம்மா, வயது 99. அவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார். அவருக்கு ஆறு பெண் பிள்ளைகள். சுமார் 60 வருடங்களுக்கு முன் அவருடைய கணவர் பெரிய தொழில் செய்து நொடிந்து போனார். கடன் தொல்லைகளாலும், பெண்களைக் கரை சேர்க்க முடியாத அச்சத்தாலும் வீட்டைவிட்டு ஓடியே போனார். பிறகு காலவோட்டத்தில் தாயும் மகள்களும் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவாறு காலூன்றி நின்றனர். அந்தக் கிழவர் கடைசிவரை வரவில்லை. நான் பார்க்கும்போது கால்கள் பலமிழந்த நிலையில் அந்தப் பாட்டி தரையில் உட்கார்ந்தே நகர்ந்து போவார். வெளியில் எங்கேனும் செல்ல மட்டும் சக்கர நாற்காலி. 

படத்தில் உள்ள சங்கதிபடி மூலவனைச் சுமக்கவே அக்கிழவர் இப்படிச் செய்தார் என்று அன்று நடந்த உண்மை நிலையை அறியாதோர் நினைக்கலாம் அல்லவா?

போகர் தன்னுடைய குரு காலாங்கியின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கையில், "பெண்ணாசை அறுத்துத் தன் மக்களை வெவ்வேறாய்ப் போய் எங்கோ திரியும் என்று விடுத்தார்" என்கிறார்.

பக்தியோகம் தவிர பெருஞ்சித்தர்கள் செய்ததை எல்லாம் நிஜ வாழ்க்கையில் சாமானியர்கள் பின்பற்ற முடியாது‌ என்பதே நிதர்சனம். ஜெனித்தது முதலே இறைவனை ஆன்மரூபமாய்ச் சுமந்துகொண்டுதான் வாழ்கிறோம். உள்ளே ஒருவன் உள்ளான் என்பதை இளம் பிராயம் முதலே உணர்தல் சிறப்பு. நம்முள் குடியிருப்பதால் நம் பாரத்தை அவன்தான் சுமக்கிறான் நாமல்ல என்று நினைத்தால் எதையும் உதறித்தள்ள அவசியமில்லை.

-எஸ்.சந்திரசேகர்



கோட்டை அதிசயங்கள்!

“இலங்கையில் நான்கு தந்தங்களுடன் பெரிய யானை இனங்கள் Gomphotheres இருந்ததா? இராவணனின் தேசத்தில் என்னனென்ன அதிசயங்கள் இருந்தன?” என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

வால்மீகி இராமயணத்தில் சுந்தர காண்டத்தின் சர்கம் 4, பாடல்கள் 4,5 மற்றும் சர்கம் 9 பாடல்கள் 25,26,27 பகுதியில் இராவணனின் கோட்டையைச் சுற்றி அனுமன் பார்த்த அதிசயங்கள் பற்றி விரிவாகக் காணக்கிடைக்கிறது.


“இராவணின் உள்சுற்றுக் கோட்டையில் வீர அனுமன் நுழைந்தான். அது சொர்க்கத்திற்கு நிகராக இருந்தது. குதிரைகள், யானைகளின் ஒலிகள் எதிரொலித்தன, தேர்களில் பூட்டிய உலோக மணிகளின் சப்தமும், ஆகாய விமானங்கள் எழுப்பும் ஓசையும் காதைப் பிளந்தன. நான்கு தந்தங்கள் (சதுர்தந்த), மூன்று தந்தங்கள் (த்ரிதந்த) கொண்ட யானைகளும் காவலுக்கு இருந்தன. அவனுடைய பிரம்மாண்ட கோட்டையின் வாயில் தோரணங்கள் அழகானதாகவும், கோட்டையைச்சுற்றி வலிமையான ராட்சதர்களும், வெளியே கூர்வேல் ஏந்திய வீரர்களும் எந்நேரமும் காவலுக்கு இருந்தனர். உள்ளே பெரிய அளவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது” என்று வால்மீகி இராமாயணம் சொல்கிறது. 

அதை நம் சித்தரின் பாடல்களோடு ஒப்பீடு செய்து பார்ப்பதுதான் சரியாக இருக்கும். திரேதா யுகத்தில் பார்த்ததையெல்லாம் போகர் தன்னுடைய சப்தகாண்டத்தில் உரைக்கிறார். காலாங்கிநாதர் அவருக்கு விளக்கியது போக போகரும் பார்த்த கோட்டை அதிசயத்தை ஆறாம் காண்டத்தில் புலிப்பாணிக்குச் சொல்கிறார். 


“வெகுகோடி காலங்களுக்கு முன் பொன்னிலங்கையின் மன்னன் தசமுக இராவணனின் கோட்டையில் பார்த்த வளமான அதிசயங்கள் மிக்கவுண்டு. தேர் ராஜரின் கோட்டை விண்ணை முட்டும், சண்ட மாருதமும் பிரசண்ட மாருதமும் வீசும் வகையில் கோட்டைக்குள் ஆழியும் வந்து போகும், எழும்பி வடியும் முகத்துவாரமும் உண்டு. அவனுடைய கோட்டையைச் சுற்றி பராகிரம ராட்சதாள் நிறைய பேர் காவலுக்கு இருந்தனர். தூரத்தே வானரர்களும் கண்டேன். தேர்வேந்தனின் அதிசயிக்கும் ரதகஜ தோற்றங்களும் அதன் சப்தங்களும் அதீதமாய் அச்சுறுத்தும் வகையில் இருந்தன” என்று போகர் சொல்கிறார்.

இராமாயணம் அண்மையில்தான் நடந்திருக்கும் என்றோ அது வெறும் கட்டுக்கதை என்றோ பலர் திரித்துச் சொல்லும்போது, வால்மீகியும் போகரும் அது அப்படியல்ல, வெகுகோடி வருடங்களுக்கு முன் திரேதா யுகத்தில் நடந்தது என்று அடித்துச் சொல்வதைக் காட்டிலும் சான்று வேண்டுமோ? தேவபாடையில் இயற்றிய வால்மீகியும், நற்றமிழில் இயற்றிய போகரும் உரைத்த இராவணன் கோட்டையின் அதிசயங்கள் யாவும் பொய்யல்ல மெய்! 

-எஸ்.சந்திரசேகர்