About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 31 ஜனவரி, 2018

கல்வெட்டு படிக்கலாம் வாங்க..

சங்ககாலம் கிமு 4-3ம் நூற்றாண்டு தமிழ் பிராமி வடிக்கப்பட்ட கல்வெட்டு படத்தைக் காண நேர்ந்தது. மிகத்தெளிவாகப் படிக்கவும் முடிந்தது.
கணிய் நந்த அஸிரிய் இ
குவ்அன் கே தம்மம் இ
த்தாஅ நெடுஞ்சழியன் ப
ணஅள் கடல்அன் வழுத்தி
ய்கொ
...
அதுவரைதான் என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொரு வரியாக சுயமாகப் படித்து எழுதியது எனக்கு ஒரே சந்தோஷம்!
நாம் இக்காலத்தில் வரியின் இறுதியில் இடத்தைப் பொறுத்து முற்றுபெறும் சொல்லை எழுதுவதுபோல் அக்காலத்தில் எழுதவில்லை எனத் தெரிகிறது. பாறையில் இடமுள்ளவரை செதுக்கிக்கொண்டு போயுள்ளதால் அச்சொல் பிளவுபட்டு அந்தரத்தில் தொங்குகிறது.
இந்த கல்வெட்டு இருந்த இடம் மதுரை மாவட்டத்தின் மாங்குளம் மலைக்குகையில் கற்படுக்கை இடம் என குறிப்பு உள்ளது. செய்தி விவரப்படி, 'கணிநந்த ஸிரிய் குவ்அன் என்ற சமணத் துறவிக்கு பாண்டியன் நெடுஞ்செழியனின் பணியாள் கடலன் என்பவன் இந்த கல் படுக்கையை உருவாக்கித் தந்தான்' என்றுள்ளது.


திங்கள், 29 ஜனவரி, 2018

நடுநிலை வகித்த சொக்கன்!

திருவிளையாடற் புராணத்தில் ஐம்பத்திரண்டாவது படலமாக ஏழை ஆதி சைவரான தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் உள்ளது. மன்னன் செண்பக பாண்டியனின் மனதிலுள்ள ஐயத்தைப் போக்கும் ஒரு பாடலை தருமிக்கு சிவபெருமானே தந்து உதவி செய்கிறான். 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி...' என்ற பாடலை நாம் எல்லோருமே அறிவோம். மன்னன் அவனுக்கு ஆயிரம் பொன் பரிசு கொடுக்கும்போது அப்பாடலில் பிழையுள்ளது அதனால் பிழையுள்ள பாடலுக்கு பரிசு தர அனுமதிக்க மாட்டேன் என்று தலைமைப் புலவர் நக்கீரர் தடுத்துவிடுகிறார். இறுதியில் அப்பரிசு தருமிக்கே தரப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகுத்தறிவு மேடைப்பேச்சு ஒரு சமயம் ஒளிபரப்பானது. அதில் 'தகுதி இல்லாவிட்டாலும் பார்ப்பனன் தருமிக்கே பரிசு கிடைக்கிறது, இது என்ன நீதி?' என்று யாரோ ஒருவன் கிண்டல் பேசினான். எல்லோரும் அதற்கு கரகோஷம் எழுப்பினர்.
ஒரு பெரிய விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே பலரும் பேசினார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அது என்ன? தருமியும் பார்ப்பனன், நக்கீரரும் பார்ப்பனன். மன்னா பரிசு கொடு என்றவனும், பரிசைக் கொடுக்காதே என்றவனும் பார்ப்பனனே! பார்ப்பனர்களில் ஆறு விதம் என்று சங்கநூல்களும் திருக்குறளும் செப்புகிறது. வேள்வி செய்வோர், வேதம் ஓதுவோர், வேள்விகள் நடத்துவோர், சொல்லிக் கொடுப்போர், தானம் தருவோர், யாசிப்போர் என்பவரே அவர்கள்.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.” (குறள்-560)
மன்னர் அந்தணர் இடையர் வணிகர் பொற்கொல்லர் வேளாளர் என்று பல குலத்தினர் சங்கத்தில் பாடல் இயற்றியவர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் யாரும் சாதி/குலம் ஏதும் பார்க்கவில்லை, அதனால் பிழையுள்ள பாடல் அரங்கேற அனுமதிக்கவில்லை.
"நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்க வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து..."
என்ற பாடல் எப்படிப்பட்ட பெருமக்கள் சபையில் இருந்தனர் என்று உரைக்கிறது.
சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் தூது போவோரில் பிராமணர்களும் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் மேலே சொன்ன ஆறு தொழில் பிரிவு பிராமணர்கள் போக, வேள்விகள் செய்யாமல் வேறு தொழில் செய்தோர் ‘விராத்தியர்’ 'வேளா பார்ப்பனர்' என்ற பிரிவில் வருகிறார்கள்.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு பாடல்-24 முதல் நான்கு வரிகளில் இது பற்றிய ஒரு செய்தியைச் சொல்கிறது. முல்லைத் திணையில் ஆவூர் மூலங்கிழார் பாடல்தான் அது.
“வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன...”
வேள்வி செய்யாத சங்கு அறுக்கும் பிராமணர்களை நாம் இன்று பார்த்ததில்லை. சொல்லப்போனால் இன்று பெரும்வாரியான பிராமணர்கள் வேள்வி செய்யாமல் வேறு தொழில் செய்யும் வேளா பார்ப்பனர் பிரிவில்தான் வருகிறார்கள். நக்கீரர் இந்த பிரிவைச் சேர்ந்தவர். சங்கறுப்பதென் குலமே தம்பிராற்கேது குலம் பங்கமறச் சொன்னால் பழுதாமே சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல இரந்துண்டு வாழ்வதில்லை என்பது நக்கீரரின் தனிப்பாடல் திரட்டில் உள்ளது. நக்கீரர் தங்கவளை ஆபரணம் செய்யும் பொற்கொல்லர் ஆச்சாரி அல்ல.

அக்காலத்தில் விஸ்வகர்மா 'பஞ்சரிஷி கோத்ர' ஆச்சாரிகள் (ஐந்தொழில் கம்மாளர்கள்) வேதம் ஓதி, வேள்விகள் வளர்த்து, கற்பித்த ஆச்சாரியர்களாகவும்  இருந்தவர்கள்.  பௌர்ஷேய (எ) தேவ பிராமணர்கள் என்றழைக்கப்படும் இவர்கள் 'வேளா பார்ப்பனர்' பிரிவில் வருவதில்லை. ஆனால் ஒரு சில கட்டுரைகளில் நக்கீரர் பொற்கொல்லர்தான் என்றும் படித்துள்ளேன். வளை அறுக்கும்போது 'கீர் கீர்' என்ற ஒலி வந்ததாலும், அவர் நெற்றியில் 'த்ரிபுண்டர கந்தாக்ஷதை' குறி இருந்ததால் 'கீர் சந்தனம்' ஆனது என்றும், இதனால்தான் அவர் கீரர் என்று பெயர் பெற்றதாகக் காரணம் சொல்வோர் உண்டு. அப்படியென்றால் அக்காலத்தில் சங்கறுத்தவரை 'கம்மாளர்' என்று சங்கப்பாடலில் நேரடியாகவே குறிப்பிட்டிருப்பார்களே? அவரை அவ்வாறு எங்கும் இயம்பவில்லை. சங்கப்புலவரின் இயற்பெயர் யாமறியோம். அது ஈசனுக்கே தெரிந்த ரகசியம்.
ஆக, சங்கத்தில் சிவபெருமான் நடுநிலையோடுதான் அருள்பெறத் தகுதியானவனுக்கே பரிசு கிடைக்கச் செய்தான்.


சர்வதேச வணிகச் சந்தை

மதுரைக்காஞ்சி நூலில் நகரத்தின் அல்லங்காடி நாளங்காடி சந்தைகளில் என்னவெல்லாம் விற்றது என்று மதுரையின் வளத்தினைக் கூறுகிறது. ஏலம், கிராம்பு மிளகு வகைகள், சங்கு வளையல்கள், கற்பூரம், தங்கம், செப்புப் பாத்திரங்கள்,  உப்பு, புலி, எண்ணெய், பட்டாடைகள், சந்தனக் கட்டைகள், வாசனாதி திரவியங்கள் என்று கணக்கில் அடங்கா. அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மாட்டு வண்டியில் சந்தைக்கு வரும் வணிகர்களுக்கு பாதுகாப்பும் தந்தார்களாம். கொற்கை துறைமுகம் ஓய்வின்றி இயங்கியது.

பட்டினப்பாலை நூலில் இன்னும் சுவையான கட்சிகள் உள்ளது. சோழர் காலத்தில் கடல்வழி வணிகமும் உச்சத்தில் போனது. பண்டங்கள் எல்லாமே அளவின்றி சரக்கு மூட்டை குவியல்களாக பூம்புகார் துறைமுகத்தில்  சுங்கச்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுக் கிடந்ததாம். சுங்க அதிகாரிகள் ஒவ்வொன்றின் மீதும் புலிச் சின்னம் பொருத்தி, கப்பலில் ஏற்றிப்போட்டுக்கொண்டே இருந்தார்களாம். முத்து, பவளம், வளமுறி சங்குகள், புளி, பிசின், உயர்ஜாதி குதிரைகள், மீன், மிளகு இலவங்கம் வைரக்கற்கள், என பலதும் ரொக்கமாகவும், பண்டமாற்றுக்கும் வாங்கிக்கொண்டார்களாம். சர்வதேச வணிகர்கள் அங்கே துறை முகத்தில் குழுமியபடியால் பல மொழிகள் பேசப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிருந்து வியாபார சரக்குக் கப்பல்கள் நேரடியாக முகத்துவாரம் அருகே வந்து நிற்கும் வசதியும் இருந்துள்ளது.

மதுரையில் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் அவ்வூர் மக்களின் தொழில்கள் பற்றி விரிவாக உள்ளது. ரதக்காரர், பொற்கொல்லர், நெசவாளர், கொப்பரை காரர், கருமார், உப்புவணிகர், கள் இறக்குபவர், தையல்காரர், குயவர், தச்சர், என்று இன்னும் பட்டியல் நீண்டுகொண்டு போகிறது. இதுபோக பிராமணர்களில் சில பிரிவுகளும் சொல்லப்பட்டுள்ளது. வேதம் ஓதி வேள்விகள் செய்வோர், அரசகுல ஆலோசனைப் பணிகள் மட்டும் செய்வோர், வேள்விகள் செய்யாமல் சங்கு அறுத்து வளையல் செய்வோர் என்ற குறிப்புள்ளது. சங்கப் புலவர் நக்கீரர் இப்பிரிவைச் சேர்ந்தவர். 'சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்?' என்பது பிரசித்தமான வாக்கியம். ஒவ்வொரு குலத்தினர்க்கும் தனிததனி சேரி இருந்துள்ளதும் தெரிகிறது. ஆனால் எல்லோரும் சமூக கட்டமைப்பில் சார்ந்து வாழ்ந்தனர். பரங்குன்றம் முதல் யானைமலை வரை சமணர்கள் குடவரைக் கோயில்களை பயன்படுத்தினர். வணிகம் மிக அதிகமாகப் போனதால் ரோமாபுரி நாணயங்களை மதுரையிலேயே அச்சிட்டு வெளியிட்டனர் என்பது பொருளாதார உயர்வையும், அரசியல் நட்பையும் காட்டுகிறது.  இது ரொம்ப நல்லா இருக்கே!

ஒரு நாட்டைவிட்டு வேறொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்தால் சோதனை சாவடியில் உள்ளூர் நாணயத்தில் துளை (punch mark) அடித்தனர். மூன்றாம் நூற்றாண்டுவரை தமிழ் பிராமி இலக்கிய நூல்கள் முன்னேறிய கட்டமைப்போடு இருந்ததாம். இவற்றை எல்லாம் ஆழமாக திரு.நாகசாமியும், திரு. ஐராவதம் மகாதேவனும் படித்து பட்டியலிட்டு ஆவணபடுத்தியுள்ளனர். தமிழ் மற்றும் இலங்கை பிராமி எழுத்துகளில் ஒற்றுமை இருப்பதும் தெரிகிறது. பாநிட்யன் மதுரையில் உள்ள பிராமி எழுத்தும், குஜராத்தில் கிடைத்த பிராமி வெட்டுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதை கண்டுபிடித்தனர். பிந்தைய நூற்றாண்டுகளில் எழுத்துகள் மாறியது. பின்னாளில் இந்த கல்வெட்டுகள் எகிப்து, ரோம் போன்ற நாடுகளின் சில குகைப் பகுதிகளில் இருந்தது பதிவாகியுள்ளது.

Image may contain: text

பல்லவனின் காஞ்சி

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தில் வரும் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல், மணிமேகலை மூலம் அரிய முடிகின்றது. அவர்களது தலைநகரான காஞ்சி ஒரு கல்வி நகரமாகும். காஞ்சிக் கடிகை மிகவும் சிறப்பு வாய்ந்த கல்விக் கூடமாகும். இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் மாணவர்கள் காஞ்சி கடிகைக்கு வந்து கல்வி பயின்றனர். 'நகரேஷு காஞ்சி' என்பார்கள்.
விஷ்ணுகோபன், சிம்மவிஷ்ணு இவர்களுக்குப்பின் மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் காலத்தில் பல போர்களும், அரசியல் வியூகங்களும், கல்விச் சாலைகள் விரிவு படுத்துவதும், கலைகளை வளர்ப்பதும் நடந்தது. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு இவர்கள் ஆட்சி செய்தார்கள். விஷ்ணுகோபன்வரை ஆட்சிமொழி சமஸ்கிருதம், அதன்பின் சிம்மவிஷ்ணு காலம்முதல் தமிழ்தான் ஆட்மொழியாக இருந்ததாம். இருந்தாலும் சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன்-1 இரண்டு மொழிகளிலுமே நூல்கள் இயற்றினான் என்பது வரலாறு. இவனுடைய மகன் நரசிம்மவர்மன்-1 க்கு மாமல்லன், ஸ்ரீபரன், வாதாபி கொண்டான் என்று பல பட்டப்பெர்யர்கள். எட்டாம் நூற்றாண்டில் இவன் மகன் நரசிம்மன்-2 கைலாசநாதர் கோயில் மற்றும் வைகுந்த பெருமாள் ஆலயத்தையும் எழுப்பினான். அதன்பின் மகன் நந்திவர்மநும் கட்டினான்.
முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வந்து தங்கி குறிப்பெடுத்த் சீன பயணி யுவான் சுவாங் காஞ்சியை உயர்வாகச் சொல்லியுள்ளார். 6 மெயில் சுற்றளவு இருந்ததாம். பல்லவர்களின் சின்னம் நந்தி. இந்த மகேந்திரவர்மன்-1 திடீரென சமணம் தழுவினான். அதன்பின் அப்பர் (எ) திருநாவுக்கரசர்தான் சைவ சமயத்திற்கு மாற்றினார். அக்காலத்தில் சைவம் வைணவம் பௌத்த விகாரமும் இருந்ததாம். புத்தர் வந்து தங்கிய இடமாதலால் ஆயிரக் கணக்கில் புத்த பிக்குகள் குழுமி இருந்தனர் என்று பயணக் குறிப்பில் உள்ளது.
இதன்பிற்பாடு சீனர்களின் வருகளை பெரியதாகியதால், சீன மன்னனும் இரண்டாம் நரசிம்ம வர்மா பல்லவனும் (700-728) வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். சீன மன்னன் வேண்டியதற்கு இணங்க இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் நாகபட்டினத்தில் முதல் கோபுரத்தை கட்டினான். எனவே இக்கோபுரம் புதுவெளி கோபுரம், சீன பகோடா, மல்லன் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. அதன்பிற்பாடு சோழர் காலத்தில் சீனர்கள் வந்துபோவதும், ராஜேந்திரன் காலத்தில் இன்னொரு கோபுரம் கட்டியதையும் ஆனைமங்கலம் செப்பேடு சொல்கிறது. செப்பேட்டில் தமிழும்-சமஸ்கிருதமும் கலந்துள்ளது. இந்த விஹாரம் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம்.
ஆனால் மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் இலங்கைக்கு போகும்முன் அங்கே ஏழு விஹாரங்கள் கட்டச் சொன்னதாகவும் உள்ளது. (பொன்னியின் செல்வன் கதையிலும் இதுபற்றி நாம் படித்துள்ளோம்.)
பல்லவர்கள் ECR அருகே குகைக்கோயில்களையும், அங்கு துறைமுகம் அமைத்து, இலங்கை மற்றும் தூர கிழக்கு நாட்டுடன் வணிகம் செய்ய போக்குவரத்து வைத்துகொள்ள எப்படி முடிந்தது? அதற்கு பாலாறு தான் காரணம் என்கிறார்கள் வரலாற்று நிபுணர்கள். படத்தில் பார்த்தால், பாலாறு காஞ்சியைத் தொட்டுக்கொண்டு போய் அப்படியே செங்கல்பட்தைத் தாண்டி கடலில் சென்று கலக்கிறது. இந்த மார்க்கம்தான் பல்லவர்களுக்கு மிக அனுகூலமாக இருந்துள்ளது.


ஞாயிறு, 28 ஜனவரி, 2018

சங்ககால முருகன் கோயில்

மகாபலிபுரம் அடுத்துள்ள ஒரு ஊர்தான் சாளுவான் குப்பம். சங்ககாலத்தில் புகழ் பெற்றிருந்த நீர்ப்பெய்யாறு எனும் துறைமுகம் பற்றி பெரும்பாணாற்றுப்படையில் குறிப்புகள் உள்ளன. அத்துறைமுகம் இப்பகுதியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இலக்கியத்தில் இந்த இடம் 'திருவீழ்ச்சில்' எனும் பெயரால் சோழர் காலத்தில் வழங்கப்பட்டிருப்பதும், இங்கு பிரசித்திப் பெற்ற சுப்ரமணியர் கோவில் ஒன்று வழிபாட்டில் இருந்துள்ளதும் பல பகுதிகளில் கிடைத்துள்ள கல்வெட்டு விபரங்களின்படி அறியப்படுகிறது. சென்றமுறை வந்த சுனாமியில் இந்த சங்ககாலக் கோயில் வெளியே தெரிந்தது. சோழர்கள் /பல்லவர்கள் கால கல்வெட்டுகளும் கிடைத்தது.

இராஜராஜ சோழனின் கல்வெட்டு ஒரு தூணில் கிடைத்துள்ளது. இராஜராஜர் ஆட்சிக்காலத்திலேயே இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக இருந்திருக்க வேண்டும். மேலும் மூன்றாம் இராஜேந்திரன் கல்வெட்டும் கிடைத்துள்ளது. அப்படிஎன்றால் சோழர் காலம் முடியும் தருவாயில் இப்பகுதியை கடல்கொண்டதால், கோயில் புதைந்து போனது. பிற்பாடு 2004 சுனாமியில் இப்பகுதியை சுனாமி வெளிக்காட்டிவிட்டது.
அதில் பயன்படுத்திய செங்கற்கள் சங்ககால்த்தவை என்றும் தொல்லியல் கூறியுள்ளது. மூன்றாம் சங்கத்தில் சுனாமி வந்து மூடியிருக்கும். பிற்பாடு பல்லவர் காலத்தில் அதன்மீது கருங்கல் கட்டுமானம் எற்றியிருந்து அதுவும் பிற்பாடு வந்த கடல்கோளில் போயிருக்கும். இப்போது வந்த சுனாமி இதை திறந்து காட்டிவிட்டது.

இந்த படத்திலுள்ள தூணைப் போன்று இன்னும் ஏழு கல்வெட்டுகள் உள்ளது. சோழ, பல்லவ, ராஷ்ட்ரகூட்டம் மன்னர்கள் போக அந்த ஊரைச்சேர்ந்த கிழார்பிறையன் என்பவனும், வசந்தா என்ற பிராமணப் பெண்ணும் சுப்பிரமணியர் கோயிலுக்கு காணிக்கையாக 16 கழஞ்சு பொன் கொடுத்துள்ளனராம். மூலஸ்தானம் வடக்கு நோக்கி இருப்பதால் இது சிற்ப சாஸ்திர முறைப்படிதான் கட்டப்பட்டது. ஆகமங்கள் விதிப்படி இல்லை என்பதும், பெரிய அளவு செங்கற்கள் காவிரிபூம்பட்டினம் அரிக்கமேடு பகுதியில் கிடைத்த அதே அளவுக்கு உள்ளதும். இதன் வயது 1700- 2200 ஆண்டுகள் என்பதையும் கண்டுபிடித்தது. இது அக்காலத்து சுனாமியின் தாக்கமே என்கிறார் திரு.நாகசாமி. ஏனென்றால் கோயிலின் கிழக்குப் பகுதி அதிக சேதாரமாகியும், மேற்கு பகுதி அப்படியே உள்ளது என்றும் சொல்லியுள்ளார். மாமல்லபுரம் கல்பாக்கம் முன்பாக சதுரங்கபட்டினம் அன்றைக்கு ஒரு துறைமுகமாக விளங்கியிருக்கும். கோயிலின் நுழைவாயிலில் தூணில் குரவைக்கூத்து செதுக்கி இருந்தது. அப்படிஎன்றால் இது கிபி 1-3 நூற்றாண்டு என்பதில் ஐயமில்லை.

இருந்தபோதும், இதைப்பற்றி அதிகமாக சங்க இலக்கியத்தில் தெளிவான குறிப்புகள் இல்லாததால் இது பெரும்பாணாற்றுப்படையில் வரும் ஊர்தானா என்று சந்தேகம் இன்னும் உள்ளது என்கிறார் திரு.நாகசாமி. மூழ்கிப்போன ஏழு கோயில்களில் இதுவும் ஒன்றோ?

2006ல் நன் சென்றிருந்த சமயம் கடலோர குகைக்கோயில் முன்பாக இன்னும் பல கட்டுமானங்கள் கண்டுபிடித்திருந்தனர். இறங்கிப் பார்த்தேன். ஓரடி குழிக்குள்ளே நீர் பக்கவாட்டில் கிணற்று நீர்போல் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. அதெப்படி? ஏதோ கடலலை அதை தள்ளுவதுபோல் இருந்தது.

என்னுடைய கருத்து:-
15ம் நூற்றாண்டு அருணகிரியார் காலத்தில் இந்தக் கோயில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதே ECR வழித் தடத்தில் உள்ள செய்யூர் ஸ்ரீகந்தசாமியை வழிபட்டவர், இந்த திருவீழ்ச்சில் சுப்ரமணியரைப் பற்றி பாடியிருக்க வேண்டுமே? ஆனால் அதைப்பற்றி எங்கேனும் பாடினாரா? அறிந்தவர் கூறவும்.
Image result for sangam era Murugan temple, mahabalipuram

சூடாமணி விஹாரம்

நாகபட்டினத்தில் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன் எழுப்பட்ட புத்த விஹாரங்கள் இருந்துள்ளது. சூடாமணி விஹாரம் புதுவெளிப்பளையம் பகுதியில் இருந்ததற்கான தடயமும் இருந்துள்ளது. நீங்கள் படத்தில் பார்க்கும் அடுக்கு மாடி விஹாரம் ‘சீனா கோபுரம்’ Chinese Pagoda 1867ல் இடிக்கப்பட்டது என்ற குறிப்புகள் உள்ளன. இராஜேந்திர சோழன் காலத்தில் புத்தமதம் கடலோர தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது.
ஜப்பானிலுள்ள ராக்ஃபெல்லர் அருங்காட்சியகத்தில் புத்த வெண்கல சிலை இருந்தது. அதன் கமல பீடத்தில் தமிழ் எழுத்துக்கள் வடிக்கபட்டிருந்தது. "இராஜேந்திர பெரும்பள்ளி ஆக்கசைப் பெரும்பள்ளி ஆழ்வார் கோயிலுக்குத திருவாவுட்சவம் எழுந்தருள ஆழ்வார் இவ்வாள்வரை எழுந்தரளவிட்டார் சிறுதாவூர் நலன் குணக்கர உடையார்... ஸ்வஸ்திஸ்ரீ பதினெண் விஷயத்துக்கும் ஆக்கசாலைகள் நாயகர்" என்று இருந்துள்ளது. 'பதினெண் விஷயம்' என்பது ஆக்கசாலை என்னும் தங்கம்/வெள்ளி காசுகள் அச்சடிக்கும் நாணயச்சாலை உள்ளது. இங்கே நாயகர் என்பது புத்தரைக் குறிக்கும். ராஜராஜன் காலத்திலேயே இதற்கு இசைவு பெறப்பட்டது என்றும் ராஜேந்திரன் காலத்தில் முடிந்தது என்றும் தெரிகிறது.
200 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ மிஷனரிகள் வந்தபோது இது இடிக்கப்பட்டது. அப்போது முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் 1865 முதல் 1930 வரை அங்கு கண்டெடுத்தனர். நாகபட்டினத்தில் இரண்டு விஹாரங்கள் இருந்துள்ளது தெரிகிறது. ஸ்ரீவிஜயம் சுமத்ராவின் மன்னன் மகரத்வஜ சூடாமணி வர்மன் இங்கு ராஜேந்திர சோழனிடம் விஹாரம் கட்ட அனுமதி பெற்று இதை நாகபட்டின கடலோர துறைமுக பகுதியில் எழுப்பினான் என்பதை ஆனைமங்கலம் செப்பேடுகள் உறுதி செய்கிறது. ஆனைமங்கலம் கிராமத்தை அந்த விஹாரத்திற்கே தானம் தந்தற்கு சாசனம் எழுதிவைத்தான். இதுபறிய குறிப்புகள் பர்மாவிலுள்ள அருங்காட்சியக செப்பேடிலும்  உள்ளதாம்.

திருப்பள்ளி எழுச்சிக்காக அறக்கட்டளை

திருவாய்மொழி பாசுரங்களைப் பாட ஸ்ரீராமானுஜர் ஆவன செய்தார். குலோத்துங்கன்-1 காலத்து இரண்டு கல்வெட்டுகள் இதைப்பற்றி சொல்கிறது. குலோத்துங்கனின் 15ம் ஆண்டு ஆட்சியில் (கிபி 1075) அவனுடைய சேனாதிபதி கோட்டூர் வீரசோழ முனையதரையன் இதற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளது கல்வெட்டில் புலப்படுகிறது.
கோயில்களில் திருவாய்மொழியை பள்ளி எழுச்சியாக பாடுவதற்கென 50 கழஞ்சு பொன் கொடுத்தான். அரையர்கள் வசம் இதற்கான கொடை ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிகிறது. இவர்கள் தங்கள் பெயரின் இறுதியில் 'மன்னார்' என்று சூட்டிக்கொள்வது மரபு. இன்றும் சில கோயில்களில் அரையர் சேவை பிரசித்தமாக நடக்கிறது. முதலாம் குலோத்துங்கன் தன்னுடைய பூச நட்சத்திர நாளில் மாதாமாதம் சிறப்பு பூசைகள் செய்விக்க நன்கொடை தந்தான் என்று கல்வெட்டு கூறுகிறது. பட்டத்து அரசி குலோத்துங்க லோகமகாதேவி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நன்கொடைகள் செய்தாள்.
வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜரின் பெயர் ராஜேந்திர சோழன்-3 காலத்து (கிபி 1250) கல்வெட்டில்தான் 'ராமானுஜன் சுற்றுக்குலை' என குறிப்பிடபட்டுள்ளது. குலோத்துங்கன் காலத்தில் அரங்கனுக்கு 'அனந்தநாராயண சுவாமி' என்ற பெயரும் அதிகாரப்பூர்வமாக இருந்தது. திருவரங்கம் கோயில் 'ஸ்ரீகாரியம்' பொறுப்பில் நான்கு அதிகாரிகள் இருந்தனர். வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் சமாதிக்குப் போகும் காலத்தில் ஆட்சி புரிந்தது பராந்தகன்-1. அப்போது 'ஸ்ரீவைஷ்ணவ வாரியம்' என்ற ஒரு அமைப்பு கோயில் நிர்வாகத்தை கண்காணித்தது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகவேண்டிய 940 காசுகளை அக்காலத்திலேயே ஒருவன் கையாடல் செய்ததும் அவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததும் கல்வெட்டில் உள்ளது. ராஜராஜன் தஞ்சை பிரகதீஸ்வர கோயிலில் தன்னை நேரடியாகவே ஈடுபடுத்தியதைபோல், குலோத்துங்கன்-1 தன்னை ஸ்ரீரங்கம் கோயிலில் ஈடுபடுத்திகொண்டதும் தெரிகிறது. குலோத்துங்க சோழர் காலக் கல்வெட்டுகள் முசிறி அருகே அலகரை கோயிலிலும் நிறைய கண்டெடுக்கப்பட்டு அதன் விவரங்கள் ஆவணப்படுத்தபட்டது. (நன்றி: முனைவர் ஆர்.நாகசாமி)

ராஜராஜ சோழன் வகுத்த பணிநிலை ஊதியம்

ராஜராஜ சோழனைப் பற்றி இதுவரை ஒரேவிதமான பதிவு மீண்டுமீண்டும் முகநூலில் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் கோயில் மற்றும் அவனுடைய அயல்நாட்டு விஜயம் பற்றிதான் இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் சோழனின் நிர்வாகத் திறன் பற்றியும் பணியாளர்களுக்கு தகுதி நிலைப்படி எப்படி ஊதியம் நிர்ணயம் செய்தான் என்பதைப்பற்றி இங்கே சொல்கிறேன்.
பெரிய கோபுரத்தை ராஜராஜன் கட்டினான். உட்புற விமானம் அவனுடைய தளபதி பிரம்மராயனின் ஆணைப்படி எழுப்பப்பட்டது. ஒட்டு மொத்த பெரிய கோயிலின் நிர்வாகத்தை ஆதித்தன் சூரியன் (எ) தென்னவன் மூவேந்தவேலன் கவனித்தான். கிராமங்களில் வசூலான வரியை சோழன் இந்த கோயில் பராமரிப்பு செலவுக்கே கொடுத்தான். வரி விலக்குப் பெற்ற கிராமங்கள் எவை, எந்த ஊர்கள் பொன்னாக தானியமாக அரசுக்குக் கட்டவேண்டும் என்பதையும் கல்வெட்டில் பொறித்தான். பெரிய கோயிலுக்கு சேவை செய்வோர், கட்டட பணியாளர்கள், உழவர்கள், கலைஞர்கள், மயான காப்பாளர்கள் என்று பலர் வரி விலக்கு பெற்றவர்கள்.
ராஜராஜன் அங்குலவங்குலமா அளவீடு செய்து ஆவணபடுத்தினான். அவனைவிட இந்த land survey பணியை எந்த அரசனாலும் செய்திருக்க முடியாது. உற்பத்தியில் 1/6 (அதாவது 16.65%) வரியாக வாங்கினான். அவன் போட்ட கணக்குப்படி எப்போதுமே தஞ்சையில் மிக அதிகமாக நெல் மகசூல்தான் ஆகியது என்பதும் தெரிகிறது. கோயிலுக்கு கூடுதலாக தரவேண்டும் என்ற அவாவினால் விவசாயிகள் அதற்கேற்ப வளப்படுத்தி உழைத்தனர் என்பதும் தெரிகிறது. கிராமங்கள் 15000 கலம் நெல் அளித்துள்ளது.
பொன், வெள்ளி, வைரம், முத்து, நாணயங்கள் என்று என்னவெல்லாம் தானம் கொடுக்கப்பட்டதோ, அதெல்லாம் வரவு வைக்கப்பட்டு குறிக்கப்பட்டது. கொடுத்தவர் யார், வரி தவிர வேறு எதற்குக் கொடுத்தார் என்பதும், அதில் உடைந்த முத்துகள், சிறிது, பெரிது, தங்கப்பாளம், குந்துமணி, ரவை என்று ஒன்றையும் விடாமல் ஏட்டுக்கணகில் கொண்டு வந்தான். சிலையாக அளித்தால் அதன் அளவு வேலைப்பாடு, கர்க்கள் விவரங்கள் எல்லாமே இருந்தது.
சம்பள ஆவணத்தில் வேத பிராமணர் முதல் கோயிலைப் பெருக்குவோர் வரை பெற்ற ஊதியப் பட்டியலை வைத்துள்ளான். இதை மூன்று விதமாகப் பிரித்தான்.
1) பொது நிர்வாகம் (பொக்கிஷதாரர், கணக்கர், தணிக்கையாளர், கிடங்குவைப்பாளர் ...),
2) கலைஞர்கள் (வேதியர், அர்ச்சகர், பாடுபவர், இசை/நடன கலைஞர்கள் ...)
3) பொது ஊழியர்கள் (காப்பாளர், பெருக்குபவர்கள், தோட்டக்காரர், தையல்காரர், கைவினைஞர்கள், ஐந்தொழிலாளர்கள்..)
இவர்கள் அரசு பணியாளர்களாக வருகிறார்கள். இவர்கள் பணிக்கு சேரும்போது வைத்திருந்த சொத்து விவரம் மற்றும் உறவுக்காரர்களின் சொத்து விவரமும் செப்புப் பட்டய ரிஜிஸ்டரிலும், கல்வெட்டுகளிலும் உள்ளது. நிதி இலாக்கா தலைவர் அதிகப்படியான மாத ஊதியம் பெற்றார் (1600 காசுகள்), அக்கவுண்டன்ட் 600, நடனப் பெண்கள் 800, பாடகர்கள் 1200, வீணை வித்வான் 400, வேதம் ஓதுவோர்/ திருமுறை பாடுவோர் 1200, ஸ்தபதி ராஜராஜ பெருந்தச்சன் 1200, உபச்தபதி 600, அரசவை வண்ணான்/ நாவிதர்/தையல்காரர் 800, என ஊதியம் பெற்றார்கள். அதுபோக ஒவ்வொரு நிலைக்கும் இத்தனை அளவு குருணி/ கலம் நெல் தரப்பட்டது. கோயில் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 100 கலம் படியளந்தான். மற்றவர்களுக்கு இந்த நிதி மேலாளர் /அக்கவுண்டன்ட் ஊதியம் தரவேண்டும். ஆனால் தங்களுடைய ஊதியத்தை தாங்களே எடுக்க முடியாது. அதை அரண்மனையில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். இப்படியாக கெடுபிடிகள் /கிடுக்கிபிடி வழிகளைக் கடைப்பிடித்தான். குறைந்தபட்ச ஊதியம் 400 காசுகள் என்று வைத்திருந்தான். ராஜராஜன் காலத்தில் இருந்த 1 காசுக்கு மூன்று ஆடுகளை வாங்கலாம். இப்படிப்பார்த்தால் சோறுடைத்த சோழ நாட்டில் மக்கள் எல்லோருமே சுபிட்சமாகவே இருந்தது தெரிகிறது.

ஊழியர்கள் நிரந்தர /தற்காலிக பணியை ஏற்க விருப்பமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். நாட்டிய பெண்கள் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி, யோகியஸ்ராக இருந்து கலையை வளர்க்க வேண்டும் என்பது தகுதி. பணியில் இருக்கும்போது ஊழியர் இறந்தால் அவர் பணியை அவரது குடும்பத்தில் தகுதி பெற்ற ஒருவருக்கு வழங்கும் முறையும் இருந்தது. அப்பணிக்கு தகுதி இல்லாதிருந்தால் மாற்று பணி அளிக்கப்பட்டது.
கோயிலுக்கு மொத்தம் 125 செக்யூரிட்டி ஆட்கள் 800 காசுகள் சம்பளத்துடன், தஞ்சைக்குள் போய்வர வண்டிச்சத்தம் பணம் பெற்றனர். ராஜ்ஜியத்து மக்கள் அதிகப்படியான பொன், பொருள், சொத்துகள் இருந்தால் அதை கோவில் உபயோகத்திற்கு தந்து Term Deposit போல் பயன்படுத்தக்கொள்ள திட்டமும் வைத்திருந்தான். அதை தந்தவர்களுக்கு ஆண்டுக்கு 12.50% சதவிகித வட்டியும் தந்தான். அதன்பிறகு அதை உரியவரிடம் திருப்பித தந்தான். பாருங்கள் ராஜராஜனின் நிர்வாகத் திறன் வியக்கும்படி உள்ளது.
இது பற்றிய தன் கட்டுரைகளை எனக்குப் படிக்கக் கொடுத்தும், ஆர்வத்துடன் எனக்கு விளக்கிய தமழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் முனைவர் ஆர்.நாகசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நான் படித்ததை இப்பதிவில் சுருக்கமாகத் தந்தேன்.

சனி, 27 ஜனவரி, 2018

முனைவர் ஆர்.நாகசாமி

தமழ்நாடு தொல்லியல் துறையில் 1953-88 வரை பணிசெய்தார். அருங்காட்சியக பாதுகாவலாராக இருந்தபிறகு இத்துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல நூற்றாண்டுகளைக் கடந்தும் மாறுபட்ட சங்ககால தமிழ் கல்வெட்டுகளை ஆராய்ந்து படிப்பதில் வல்லவர் என்று epigarphy துறையில் இவர் பெயர் எடுத்தவர். பணியோய்வு பெற்ற பிறகும் இவர் புதியவர்களுக்கு வழிகாட்டி வந்தார்.
தொல்லியல் துறையில் இவர் ஆற்றிய சேவைக்காக அண்மையில் பத்மபூஷன் விருதுபெற்றார். இவருக்கு விருது கொடுத்தது தவறு என்று ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இவர் ஹிந்துத்வா கொள்கைகளை ஆதரித்து மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளார் என்ற விமர்சனம் வந்துள்ளது. அவரோடு இருமுறை நான் பேசியுள்ளேன். நான் 2013ல் சித்தநூல்கள் எழுதும்போது எனக்கு எழுந்த சில சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தீர்த்துக்கொண்டேன். தமிழுக்கு அப்படி என்ன இவர் விரோதமாக செயல்பட்டார் என்று குடைந்து பார்த்தேன். அவருக்கு எதிராக ஒரு தடயமும் கிடைக்கவில்லை!
திரு.நாகசாமியின் முக்கிய பங்களிப்பு என்ன என்று பட்டியலிடுகிறேன்:
1. தமிழ்நாட்டில் தொல்லியல்துறையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் மத்தியில் பரப்பியவர். அக்காலத்திலேயே தமிழ்நாட்டின் நினைவுச்சிங்களையும் கல்வெட்டுகள் சார்ந்த விஷயங்களையும் சிறு பாக்கெட் கையேடுகளாக 25 பைசா விலையில் கிடைக்கச் செய்தார்.
2. மாணவர்களையும் தொல்லியல் துறை வல்லுநர்களோடு இணைந்து அகழ்வாராய்ச்சிப் பணிசெய்யத தூண்டினார்.
3.தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கல்வெட்டுகளை உலகறியச்செய்தவர். கரூர், அழகன்குளம், கொற்கை ஆய்வுகளை செய்தவர். மதுரை நாயகர் அரண்மனையை பிரபலப்படுத்தியவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை அகழ்வாராய்ச்சி செய்தார்.
4.முதல்முறையாக கடலடியில் தொல்லியல் ஆராய்ச்சியை பூம்புகாரில் செய்தது இவருடைய தலைமையில்தான்.
5.கல்வெட்டியலில் முதுகலை பட்டயப்படிப்பை கொண்டுவந்தார்.
6.மலேசிய, கெனடா, சுவீடன், டென்மார்க் முதலிய நாடுகளுக்குச் சென்று இலக்கிய நாட்டிய நாடகங்களை வடிவமைத்தார்.
7.தேசிய அளவிலும் வெளிநாடுகளிலும் சோழ மன்னர்களின் பெருமைகளை கண்காட்சிகளாக நடத்தினார்.ஆண்டுதோறும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நடக்க வழிவகுத்தவர்.
8.தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 120 நூல்கள் எழுதியவர். இவருடைய தலைசிறந்த புத்தக தலைப்புகள் என்றால், 'Master pieces of South Indian Bronzes' 'சிவபக்தி' 'உத்திரமேரூர்' ஆகியவை.
9.தமிழகமெங்கும் சுமார் 12 அருங்காட்சியங்களை நிறுவினார். கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியவர். சேர மன்னர் கொல்லிப் புறை காசுகளைக் கண்டுபிடித்து சேர வரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தவர்.
10.பரபரப்பாக பேசப்பட்ட திருவாரூர் மாவட்டம் பத்தூர் நடராஜார் கோயில் சிலை வெளிநாட்டுக்கு கடத்தபட்டு அங்கே ArtGallery அருங்காட்சியத்தில் இருந்துள்ளது. அதைத் திரும்பப்பெற லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. வழக்கின் மனுதாரர் யார் தெரியுமா? இறைவி சிவகாமசுந்தரி. மனுதாக்கல் செய்தவர் அப்போதைய இந்திய தூதர் பி.சி.அலெக்சாந்தர். சிவகாமசுந்தரிக்காக லண்டன் நீதிமன்றத்தில் திரு.நாகசாமி அவர்களே நேரில்போய் ஆதாரப்பூர்வமாக வாதாடி வெற்றி பெற்றார். களவு போன சிலையை மீட்டார். லண்டன் பத்திரிகையில் இவ்வழக்குபற்றிய செய்தியில் 'The Judge of the London High Court, in his Judgement described Dr.Nagaswamy as an unequalled expert in his subject.' என்று போட்டிருந்தது.
10. திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் ஜம்பை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின் மூலம் அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருக்கும் “ஸதியபுதோ” மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டுத் தகடூரை எறிந்த தலைவன் கடையெழு வள்ளல்களுல் ஒருவரான அதியமானே என்ற உண்மையை 1981ல் நிறுவினார். அதுவரை “ஸதியபுதோ” யார்? என்பது தமிழக வரலாற்றில் புதிராகவே இருந்தது.
11. தொன்மையான தமிழ் எழுத்துக்களுக்கு "தமிழி” என்று பெயரிட்டவர் இவரே.
12. கலைமாமணி விருதுபெற்றவர்.
நான் அவரைத் தொடர்பு கொண்டபோது மும்பையில் ஒரு தொல்லியல் கருத்தரங்கில் பேசுவதற்காக அங்கே முகாமிட்டிருந்தார். 'ஐயா, உங்களுடன் பேசி பல சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டேன். நீங்கள் நல்ல பணி செய்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி' என்று நன்றி கூறினேன். 88 வயதான இவருக்கு இவ்விருது காலந்தாழ்த்தித் தரப்பட்டுள்ளது. சினிமாத்துறைக்கு உள்ள முக்கியத்துவம் இத்துறைக்கு இல்லை என்று தெரிகிறது.
ஐயா அவர்களுடைய செயலில் அணுகுமுறையில் RSS ஹிந்துத்வா கொள்கைகள் எங்கேனும் வந்துள்ளதா? படிப்பறிவில்லாத கீழ்த்தரமான கூட்டம் எதிர்ப்பதையும் பேசுவதையும் சன் தொலைக்காட்சியில் ஒரு செய்தியாகக் காட்டுகிறார்கள். இதை என்னவென்பது?
Image may contain: 1 person, closeup

வியாழன், 11 ஜனவரி, 2018

புதையுண்ட பொக்கிஷங்கள் வெளிப்படும்!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூல் மாவட்டம் சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கத்துறை சார்பில் ஸ்கேனர் மூலம் சென்னூர் கோட்டையச் சுற்றி சோதனை செய்யப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே இதுபோன்ற பொக்கிஷங்கள் பாதாள சுரங்கத்தில் உள்ளது என்று செவிவழி செய்தியாக நம்பப் பட்டுவந்தது. ஆனால் உள்ளே (கதைப்படி) சப்த கன்னிகள் சிலைவரைதான் அடையாளம் வைத்துச் செல்லமுடிந்தது. அதன் பிறகு ஆழத்தில் நீர் தேங்கிய அகழி இருந்துள்ளதால் அதைத்தாண்டி யாரும் முயற்சிக்கவில்லை. கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆராயும் பணி நடந்தது. நீரை பம்ப்செட் மூலம் வெளியேற்றி உள்ளே நுழைந்துள்ளனர்.
பாதாள சுரங்கத்தின் நுழைவாயிலேயே வைரம் பொதிந்த கனிமங்கள் உள்ளதை கண்டுபிடித்தனர். தொழில்நுட்ப கருவிகள்கொண்டு உள்ளே ஸ்கேன் செய்தனர். அங்கே 12 மீட்டர் உயரத்திற்கு (40 அடி) வைர மலை உள்ளதை உறுதி செய்துள்ளனர். இதை மத்திய அரசின் ஒப்புதல்பெற்றே பிறகே கையகப் படுத்தும் பணி நடக்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
போதலூரி ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் தன்னுடைய 'காலக்ஞானம்' நூலில், கலியாண்டு 5100 க்குப்பிறகு நல்லமலா மலைத்தொடர் ஓரமாக கர்னூல், ஸ்ரீசைலம், கடப்பா போன்ற ஊர்களில் பல புதையல்கள் வெளிப்படும் என்பதை அன்றே தீர்க்க தரிசனத்தில் கூறியிருந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது பாதாள சுரங்கத்தில் அமர்ந்து எழுதிய இந்த நூல் கர்னூல் மாவட்டம், பானகானபல்லே அருகே 'ரவ்வலு கொண்டா' (வைரமலை) இடத்தில் உள்ளது.
போகரும் தன் நூலில் இதுபோல் எங்கெங்கே சொர்ண மலைகள் கிடாரங்கள் (அயோத்தி முதல் இலங்கை வரை) உள்ளன என்பதை வரைபடம் போலவே 'போகர் ஏழாயிரம்' நூலில் சொல்லியுள்ளார். ஆனால் அதை யாரும் இன்றுவரை நம்பியதில்லை. கப்ஸா விடுறதுக்கே கிளம்பிட்டாங்கையா என்றுதான் விமர்சனம் வரும். இப்போது சொன்னதுபோல் கிடைத்துவிட்டது. அடுத்து என்ன?
ஒப்புதல் கிடைத்தபின் இந்த மலை அப்படியே சுவாஹா ஆகுமா, அல்லது பிரித்து மேயப்படுமா என்பது இறை (Government) ரகசியம்!

வைர வேட்டைக்குப் போவோமோ?
-------------------------------------------------
ரவ்வலகொண்டா பற்றி பழைய பதிவில் சொன்னேன். ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் என்றுமே கனிமங்களுக்குப் பெயர் பெற்றது. ராயர்கள், குதுப்ஷாஹி, பாமினி, பீஜப்பூர் சுல்தான்கள், நிசாம் மன்னர்கள் எல்லோருமே வைரங்களைத் தோண்டி எடுத்து வந்தனர். அக்காலத்தில் ராயலசீமாவின் சந்தை தெருக்களில் வைரங்களைப் போட்டு விற்பனை செய்தார்களாம். அவை எல்லாம் கனிம உற்பத்தியில் வந்தது. ஆனால் பல காலங்களுக்குப் பிறகு மிகபெரிய அளவில் இப்போது வைரமலை புதையல் கிடைக்கிறது என்பது ஆச்சரியம்தான்.
ஒன்று, இவையெல்லாம் அக்காலத்தில் குறிக்கபட்டு அதற்கான அடையாளங்கள் வைக்கபட்டிருந்து பின்னர் அப்படியே காலப்போக்கில் போனவை. அல்லது, அக்காலத்தில் இறையருளாளர்கள் மூலம் சில இடங்களில் இருப்பதாக அறியப்பட்டு முயற்சித்து கைவிடப்பட்டு பிறகு நூற்றாண்டுகளாக செவிவழியாகப் பகிரப்பட்ட செய்தியாக இருக்கலாம்.
புயல் வெள்ளம் வந்தால் கர்னூல் ஜில்லா மக்களுக்கு ஆனந்தம். ஏன்? அப்போதுதான் எந்த பிரயத்தனமும் இல்லாமல் மழைநீர் களிமண்ணை அடித்துக்கொண்டு போகும், அதில் வைரக் கற்கள் அடித்து வரப்படும். இதை பொறுக்கவே கூட்டம் உண்டு. சிலர் வேலையை விட்டுவிட்டு இதையே முழுநேரத் தொழிலாகவும் செய்கிறார்கள். அங்கு கிம்பர்லைட் /லேம்ப்ரைட் கனிமங்கள் மிக அதிக அளவில் சர்வ சாதாரணமாக இன்றும் கிடைக்கிறது. வேறு மாநிலங்களில் இருந்து இங்கே மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக கூடாரம் போட்டு நல்ல அறுவடை செய்துகொண்டு போவார்கள். அதற்கேற்ப உழைப்பை போடவேண்டும். ஒருமுறை வந்துபோனால் 5 - 10 லட்சம் ரூபாய் வரை வைரங்கள் பல அளவுகளில் கிடைக்கிறது. குடிசைத் தொழிலுக்கு இந்த வருமானம் போதாதா? விவசாயம் சரியில்லாதபோது இதுதான் தொழில். வைர வேட்டையைப் பற்றி நான் புனைந்த ஒரு நாட்டுப்புற மெட்டுப் பாட்டு...
"கொண்டபக்க ரெய்தநேல துன்னி பாகசூசிந்தி
ரெங்குரெங்கு ரவ்வலு சேத்திமீத வெலிகிந்தி
மண்ட்டிலோக அடுசுபட்டி ரத்தினாலு பூடிந்தி
முக்கமுக்க பகிலிகொட்டி கொப்பவாடு சேசிந்தி."
('மலையோரம் வளமான நிலத்தை உழுது பார்த்ததில் வண்ணமய வைர ரவைகளாக கைமீது ஒளிர்ந்தது. பூமிக்ககுள் சேறுபூசிய ரத்தினங்கள் புதைந்திருக்கு. அதை துண்டுகளாக வெட்டி எடுத்து பணக்காரராகி விடலாம்') என்ற பொருளில் இதை எழுதினேன். 
80களில் என்னுடைய தாய்மாமன் கர்னூல் பகுதியில் ஒரு சிறிய கனிம சுரங்கத்தை வைத்திருந்தார். அதில் எமரால்ட், கார்னெட், விடல்ச்பா, மற்றும் வேறு ஏதோ கற்களும் கிடைத்தது. அவை பட்டைத் தீட்டாத தரம் பிரிக்கபடாதவை... நான் சிறுவனாக இருந்தபோது அவர் கொண்டுவந்த சில சின்ன வண்ணநிற தீட்டப்படாத கற்களை என் கையில் அள்ளிப் பார்த்த ஞாபகம் உண்டு. என் பள்ளிக்கூட பிராஜக்ட் வரக் செய்ய chart பேப்பரில் கோந்து போட்டு ஓட்ட அந்த சிறு வண்ணநிற கற்களை எடுத்துக்கவா என்று நான் கேட்டதை நினைத்தால் இன்றும் சிரிப்புதான் வருகிறது. 
இரண்டு ஆண்டுகள் மட்டுமே வைத்திருந்தபின் யாருக்கோ விற்றார். அதெல்லாம் பிராப்தம் இருந்தால்தான் கையில் தங்கும்.
Image may contain: food

செவ்வாய், 2 ஜனவரி, 2018

மந்திரத்தால் மாங்காய் விழும்

என்னுடைய பதிப்பாளரின் தகப்பனார் உயர்திரு இராமையா அவர்கள் பல்லாண்டுகளாக தேவாரம் பாடுபவர். தொண்ணூறு வயதுக்கான உடல் பலகீனம் இருந்தாலும், பக்தி நெறி தவறாதவர். நான் பதிப்பாளரின் கடைக்குப் போகும்போதெல்லாம் இவர் அங்கு இருப்பார். நிறைய விஷயங்களைப் பேசுவோம்.
ஒருமுறை தன் அண்டைவீட்டு மாமர கிளையில் பழுத்த மாம்பழம் ஒன்று இவர் வீட்டுக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். இவருக்கு அதை சுவைக்க வேண்டும்போல் ஆசை வந்தது. உடனே ஒரு தேவாரம் பாடினார். பத்து வினாடிக்குள் தொப் என்று மாங்காய் தன் கைமேல் விழுந்தது.
தன் நீண்டநாள் நண்பர் ஒருவரை சந்தித்து வெகு காலம் ஆனது. இப்போது அவர் எங்கிருக்கிறாரோ என்னவோ என்று அன்று முழுக்க அவர் நினைவாகவே இருந்துள்ளார். அவரைக் காண மாட்டோமா என்ற ஏக்கம் மேலெழுந்தது. அவர் வாய்விட்டு ஒரு தேவாரப் பதிகம் பாடினார். அன்று மதியம் அந்த முதிய நண்பர் எங்கோ போகும் நிமித்தமாக மகனுடன் வரும்போது இங்கே ஐயாவை பார்த்துவிட்டுப் போனார்.
மறைக்காடு கோயிலில் அப்பரும் சம்பந்தரும் தாளிட்டுக்கிடந்த கதவை பதிகம் பாடி திறந்ததையும் மூடவைத்ததையும் நாம் படித்துள்ளோம். அதைப்போல் ஆத்மசுத்தியுடன் பதிகம் பாடி மாங்காய் விழ வைக்கலாம் என்பதை என்னிடம் சொல்லி உணர்த்தினார். இந்த காலத்து புள்ளைங்க பகுத்தறிவு பேசுறவங்க, மொழிகளை கிண்டல் செய்யறவங்க. அவங்களை நம்மால திருத்த முடியாட்டி அந்த சிவபெருமான்தான் திருத்தணும் என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

கற்பகம் புத்தகாலயம் அலுவலகம் காலையில் திறந்ததும் அங்கே ஐயாவின் குரல் பதவில் தேவாரப் பதிகங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். தான் பாடியதை கேட்டுக்கொண்டே பணி செய்வார். இது அவருக்குக் கிடைத்த பேறு!