About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 அக்டோபர், 2017

சுவர்ணத்து இல்லம்

ஆதிசங்கரர் பிக்ஷம் எடுக்க வீடுகளுக்குச் சென்ற போது, ஓர் ஏழை பிராமணனின் குடில் முன்னே நின்று 'அம்பா! பவதி பிக்ஷாம் தேஹி' என்று கூவினார். அந்த வீட்டில் தரித்திரம் நிலவியதால், அவ்வீட்டு பெண்மணி காய்ந்த நெல்லியை வாழை இலையில் வைத்துக் கொடுத்தாள். அவர்களுடைய ஏழ்மையைக் கண்டு சங்கரர் மனம் வருந்தி செல்வத் திருமகளை நோக்கி 'கனகதார ஸ்தோத்ரம்' 21 பாடல்களை இயற்றிப்பாட, அங்கே தங்க நெல்லிக்கனிகள் மழையென பொழிந்தது.
அந்த ஏழை பிராமணின் சந்ததிதான் இங்கே படத்தில் காண்கிறீர்கள். இந்த வீடு 'பொன்னோர்த்துகொட்டு மனா' என்றும் அழைக்கபடுகிறது. காலடியிலிருந்து 22கிமீ தூரத்தில் பெரும்பாவூர்- சோட்டானிக்கர போகும் வழியில் பழந்தோட்டாம் என்ற பகுதியில் உள்ளது. இங்கே படத்தில் இருப்பவர்தான் குடும்பத் தலைவர் ஸ்ரீ நாராயணன் நம்பூதிரிபாட். அவ்வீட்டில் வசிப்பவர்கள் இவர்கள்தான்.
இப்பதிவை தட்டச்சு செய்யும்போது ஒரே மகிழ்ச்சி. ஏதோ நானே அந்த ஊரில் அந்த வீட்டில் பிறந்து சங்கரரின் மஹாத்மியத்தை சொல்வதுபோல ஒரு சிலிர்ப்பு. ஆம், என் பூர்வ ஜென்மத்தில் நான் அந்தக் குடும்பத் தொடர்பில் இருந்திருக்கணும்! அப்படி இல்லாவிட்டால் மீன்குளத்தி பகவதி 2013ல் எனக்கு மலையாளத்தை ஒரே நாளில் எழுத படிக்க நினைவு படுத்தியிருக்க மாட்டாள்.
'அம்பா மீனாக்ஷி மதுரபாஷினி சரணம் சரணம்.'

திங்கள், 23 அக்டோபர், 2017

நிஜ வாழ்க்கை கதாநாயகர்தான் பிடிக்கும்!

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் (2007) ஒரு நாள் திரைப்பட இயக்குனர் திரு ஏ. பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சலும் தொலைபேசி அழைப்பும் வந்தது. அப்போது நான் கர்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டு வார இறுதி விடுமுறைகளில் இதழியலாளராக இருந்தேன்.
பின்மாலை நேரம். மகாலிங்கபுரத்தில் ஒரு சிறிய அலுவலகம். காமராஜ் திரைப்படம் எடுத்தவர் என்று தன்னைஅறிமுகம் செய்துகொண்டார். தான் ஒரு இணையதளம் தொடங்கவிருப்பதாகவும், அதில் நான் கட்டுரைகள் எழுத முடியுமா என்று கேட்டுக்கொண்டார். அதற்கான சந்திப்புதான் இது.
அவரோடு பேசுகையில், 'நீங்க காமராஜ் ரோல் தேர்வு எப்படி செய்தீங்க சார்? என்றேன். அவர், 'நான் மதுரை விமான நிலையத்துல உட்கார்ந்திருந்தபோது என்னைத் தாண்டி ஒரு பயணி போனார். அப்போதே இவர்தான் என் சரியான தேர்வுன்னு முடிவு செய்துட்டேன். என் படத்துல வரும் ஹீரோ நடிகரா இருக்கக்கூடாது... முகச்சாயல் இருக்கணும்... நான் சொல்றபடி இயல்பா பேசி செயல்பட்டா போதும்' என்றார். அலுவலகத்தில் அவரைச் சுற்றி பட சுருள் பெட்டிகள் அடிக்க வைக்கபட்டிருந்தன.
'படம் உங்களுக்கு பெரிய அளவில் பேர் வாங்கிக் கொடுத்திருக்கும். ஆனால் பெரிய ஹீரோ நடித்த படங்கள் அளவுக்கு உங்களுக்கு வசூல் கொடுத்ததா?' என்றேன்.
'அந்த வகையில பார்த்தா வசூலை அள்ளித்தரலை. அரசு ஏதோ உபகாரம் செய்தாங்க அவ்வளவுதான். திரைப்பட ஹீரோக்களைவிட எனக்கு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருந்தவங்களைத்தான் பிடிக்கும். அவர்களைப் பற்றிய படம்தான் எடுக்க விருப்பம். எதிர்காலத்துல காந்தியைப் பற்றி படம் எடுக்க எண்ணம் இருக்கு... பாப்போம்' என்றார்.
அப்படம் 2012ல் வெளிவந்தது என அறிந்தேன். இப்போது எம்ஜிஆர் (biopic) வாழ்க்கை சித்திரம் பற்றி ஒரு படம் செய்யப் போவதாக இன்றைய டைம்ஸ் செய்தித்தாளில் படித்தேன். அவர் முயற்சி வெற்றி பெறட்டும்!


புகைப்போக்கி

Image result for electric crematorium
சாலையில் போகும்போது ஒரு மின்சார மயான பூமியைக் கடக்க நேரும். அங்கு மேலேயுள்ள புகைப்போக்கி (சிம்னி) என் கண்ணில் படும். அங்கு உயர்ந்து நிற்கும் அதன் வாயிலிருந்து கரும்புகை வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். உள்ளே ஒரு சகாப்தம் முடிந்தது என்று மெளனமாக பறை சாற்றும். சில சமயம் அது புகை கக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்குள் ஒர் ஆனந்தம்.
நானும் ஒரு நாள் இப்படி புகைந்து கொண்டிருப்பதை என் ஆன்மா நின்று காணும். ஊழ்வினைகள் கழிந்ததா இல்லையா? நல்லவனா கெட்டவனா? இறைவனின் தர்மநெறிப்படி வாழ்ந்தேனா, இல்லையா? புதைந்தும் எரிந்தும் பல பிறவிகள் கண்ட என் ஆன்மாவுக்கு வீடுபேறு கிட்டுமா இல்லையா? இதை அவன் ஒருவனே தீர்மானிக்கிறான்.
ஆமா, போனபின் என்ன தெரியப்போகிறது என்று சொன்னாலும், தச வாயுக்களில் இறுதிகட்ட வாயு தன் வேலையை செய்யத் தொடங்கும் அத்தருணம் ஆன்மாவுக்கு அச்சமூட்டுவதாகவே அமையும். ஆன்ம பலம் அப்போதுதான் உண்மையாகவே வேண்டும். பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த இறுதிப் பயணமே சாஸ்வதமானது என்றாலும் அதை ஏனோ உற்று நோக்க எப்போதுமே நான் விரும்பியதில்லை. 'இதுவும் கடந்துபோகும்' என்றாலும் இந்த மனநிலை எனக்கு வினோதம்தான்!
என் ஆசிரியரும் வைத்தியருமான சித்தர் போகர் என்னை பத்திரமாக அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் தினமும் உறங்கி காலையில் எழுகிறேன். இவ்வரியை இப்போது இங்கே டைப் செய்யும்போது SMS ரிங் அடித்தது. இப்பதிவை என் குருநாதர் ஆமோதிக்கிறார்.

திங்கள், 16 அக்டோபர், 2017

மா ஒளி

நாங்கள் இருந்த பகுதியில் ராஜேந்திரன் (S/o கன்னியம்மா) என்ற கூலித்தொழிலாளி இருந்தார். அவர் நாட்டு வெடி தயாரிப்பு, சாராயம் காய்ச்சுதல் முதல் நடமாடும் இஸ்த்ரி வண்டி வரை எல்லா வேலையும் செய்தார். அக்கம்பக்கம் நடப்பதை எல்லாம் நான் சிறுவனாக இருந்தபோது கூர்ந்து பார்த்துள்ளேன், நினைவில் வைத்துக்கொள்வேன்.
கார்த்திகை தீபத்தன்று அவர் ஒருமுறை கையில் பிடித்தபடி 'சூம்ம்..சூம்ம்..' என்ற ஓசை எழுப்பிய எதையோ சுற்றினார். தலைக்கு மேலே தீப்பொறிகள் வட்ட வட்டமாய் சிதறியது கண்டு எனக்கு ஒரே மகிழ்ச்சி. வேடிக்கைப் பார்த்த நான் சுவரோரம் கேட் மீது அமர்ந்தபடி 'அது என்ன?' என்று கேட்டேன். இது 'சுளுந்து / மாவுளி' என்றார். அது என்னவென்று அவ்வயதில் எனக்குத் தெரியாது. உன் வயசுக்கு இது புரியாது என்று சொல்லாமல் அதை பொறுமையாக விளக்கினார்.
'அதுக்குள்ள என்ன பட்டாசு இருக்கு?' என்றேன்.
'இதுல டப்பாசு இல்லை. இதுக்குள்ள காய்ஞ்ச பனங்காய் குலை தண்டு, புல்லு, இஸ்த்ரிக்கு போடுற பற்றவெச்ச கரித்துண்டு போட்டு பெரிய ஓட்டை சாக்கு துணிகுள்ள கட்டிவெச்சு, முடிச்சு போட்டு, அதோட நுனில கயிறு கட்டி இப்படி சுத்துவோம். சரி, கீழ இறங்கிபோய் நீ தள்ளி நின்னு பாரு, தீபொறி படும்மில்ல' என்றார். 
அதுதான் 'மா ஒளி', பெரிய ஜோதி என்று பொருள்பட அழைத்தனர். அதன்பின் காய்ந்த பனை ஓலைகளை குவியலாகப் போட்டு கொளுத்தும் சொக்கபனை நிகழ்ச்சி நடக்கும். (பேச்சு வழக்கில் 'சொக்கப்பனை' பானையாக மாறியது.) முன்னாளில் காடுகளில் பயணிக்கும்போது இந்த சுளுந்தை தீபந்தம்போல் சுற்றிக்கொண்டே போவார்கள் என்று படித்துள்ளேன். தீபாவளி சமயத்தில் இன்று இதெல்லாம் நினைவுக்கு வந்தது.

வியாழன், 12 அக்டோபர், 2017

நினைவில் நின்ற புதினம்


Image result for கல்கி கிருஷ்ணமூர்த்தி

'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய மறக்கமுடியாத ஒரு வரலாற்றுப் புதினமே 'பொன்னியின் செல்வன்'. அதை மீண்டும் வாசிக்க வாய்ப்பு கிடைத்தால் அருமை. முதலில் 1950-54 வரை கல்கியில் தொடராக வந்த பிறகு 2014 வரை அதே நாவல் ஐந்து முறை மீண்டும் மீண்டும் அதே இதழில் பிரசுரமானது. புத்தக வடிவில் வெளியாகும் சமயம் அதை பார்க்காமல் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி 1954 ல் மறைந்தார்.

ஓவியர் மணியம் கைவண்ணத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் மிளிர்ந்தது. இவர் ஓவியம் வரையும் போது பக்கத்திலேயே  ஆசிரியரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாராம். தன் கதாபாத்திரங்களை வண்ணத்தில் காண அவ்வளவு ஆர்வம்!

நாவலின் இறுதியில் இடம்பெற்ற சில சுவாரசியமான 'கேள்வி- பதில்' சுருக்கமாக இங்கே. என் நினைவில் நின்றவை இவை.

கே: 'என்ன சார், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்ச்சு?'
ப: 'இதுவே ரொம்ப வருஷ காலம் போயிருக்கு. மூன்றரை வருடங்களாக உங்களோடு கதாபாத்திரங்கள் பயணித்தது. வாசகர்கள் பொருமைசாலிகள்தான். '

கே: 'குந்தவை வந்தியத்தேவனை மணந்தாளா?'
ப: 'மணந்தார். 'ராஜராஜ தேவரின் திருத் தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகக் குந்தவையார்' என்று கல்வெட்டில் குறிப்பு காணக் கிடைக்கிறது.'

கே: 'கல்யாணி என்னவானாள்?'
ப: 'சித்த சுவாதீனம் இல்லாமல் அவள் அங்கேயே திரிந்து கொண்டிருந்தாள் போலிருக்கு.'

கே: 'வைணவன் ஆழ்வார்க்கடியான் என்ன ஆனான்?'
ப: 'தனது ஒற்றறியும் வேலையை நடத்திக்கொண்டிருக்கிறான்.'

கே: 'மேற்கொண்டு அந்த கதா பாத்திரங்களை ஏன் வளர்க்கவில்லை?'
ப: 'கதையை எந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்களை இருந்த நிலையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன்.'

கே: 'வானதியின் கதி என்ன? குடந்தை சோதிடரின் வாக்கு பலித்ததா?'
ப: 'வானதியின் விஷயத்தில் பலிக்கிறது. வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் 'கங்கையும் கடாரமும் கொண்ட சோழன்' என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் புகழ் பெறுகிறான்.'

கே: 'வரலாறு சம்பந்தமாக இவ்வளவு ஆழமாக ஆராய்ந்து எழுத எப்படி சாத்தியமானது?
ப: 'நூல்கள்தான் எனக்குப் பெரிதும் உதவியது. நூலகங்களில் சோழ சாம்ராஜ்யம் பற்றிய பல விஷயங்களை குறிப்பெடுத்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன்
கதை நிகழ்ந்த இடங்களான தஞ்சாவூர், வீராணம் ஏரி, கொடும்பாளூர், பழையாரை, கோடிக்கரை, இலங்கை – போன்ற அத்தனை இடங்களிலும் வரலாற்று சரித்திர சான்றுகள் இன்றும் உள்ளன.'

இவைபோக இன்னும் பல கேள்விகளுக்கு பத்தி சொல்லியுள்ளார்.
'இந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் மேலும் நவீனங்கள் படைப்பார்கள் என்று நம்புகிறேன்' இப்படியாக கல்கி எழுதி முடிக்கும் அந்த இறுதி வரிகள், அவர் எத்தனை எளிமையானவர் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.


திங்கள், 2 அக்டோபர், 2017

அறியாதவன் வாயில் மண்!

ஒரு நண்பர் கீழ்கண்ட கேள்வியை என்னிடம் கேட்டார்.
"முருகன் தமிழ்க் கடவுள், அவர் வள்ளி என்ற குறத்தியை மணந்தார். ஆனால் இந்திரன் என்பது ஆரியர் கடவுள் ஆயிற்றே, இவருடைய மகள் தெய்வானையை முருகன் மணம்செய்து கொண்டதாக உள்ளது. வடக்கே வள்ளி பற்றி சொல்வதில்லை. ஸ்கந்தன் என்று வடக்கே வணங்குவர். அப்படி என்றால் இங்கு நாம் இந்திரனை ஏன் ஏற்க வேண்டும்? " என்று கேட்டிருந்தார்.
இவரைப் போன்றவர்களுக்கு நீண்ட விளக்கம் சொல்லி புரிய வைப்பது நேர விரயம் என்பதால் 'ஆமாங்க. கந்தனை கும்பிடாதீங்க. தெய்வானை சீன்லயே இல்லை. முருகனின் அறுபடைவீடுகளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் எப்படியோ சேர்த்துட்டாங்க. இந்திரன் சூரியன் எல்லாம் கணக்குலேயே வெச்சுக்காதீங்க' என்று பதிலளித்தேன். அவர் ஆறுதல் அடைந்திருப்பார்!
முருகன் (நாகை) சிக்கிலில் சக்திவேல் பெற்று, அதைக்கொண்டு (கன்னியாகுமரி) திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தபின், இந்திரன் அளித்த வாக்குபடி தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் (மதுரை) மணந்தான். இதெல்லாம் ஆரியர் கதைகள் என்றால் இவை தென்னாட்டில் நடக்க வேண்டாமே. வடக்கே சூரனுடன் போர் புரிய முருகனுக்கு இடமா இல்லை? இதையெல்லாம் நம்மவர்களுக்கு புரிய வைப்பது இயலாது. அவர்களும் தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.
கலியுகத் தெய்வம் நம்மக்களிடம் படாத பாடு படுகிறார். முருகன் @ கார்த்திகேயன் @ கந்தன் என்ற கதாபாத்திரம் தேர்வில் கேட்கப்படும் objective type கேள்வி போல் ஆகிவிட்டது. பிரம்மன், திருமால், இந்திரன், சுப்பிரமணியன், ராமன், கிருஷ்ணன் என்று எல்லோருமே ஆரிய கடவுள் என்றால், இத்தனை ஜெனனங்கள் எடுத்த தமிழ் சித்தர் போகரை எதில் சேர்த்துக் கொள்வது? நம் இந்திய அரசியல் போலவே ஆன்மிகத்திலும் வடக்கு-தெற்கு என்ற அளவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
பஞ்சமுக விஸ்வகர்மாவின் தோற்றம் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. விஸ்வகர்மா என்றால் காயத்ரி வருகிறாள். காயத்ரி மந்திரம் என்றால் அது ஆரியர் கலாசாரம். பஞ்சமுகத்தில் தோன்றிய பிரம்மன், விஷ்ணு, சிவன், இந்திரன், சூரியன் எல்லாரும் ஆரியர்கள். அதில் தமிழ்க் கடவுள் மட்டும் எங்களுக்கு வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. வேணுங்கிற முகத்தை பிச்சிக்க வேண்டியதுதான். ஆனாலும் அதில் தமிழ் முகம் என்று ஏதுமில்லையே! அங்கே முருகனும், தமிழும் புலப்படாது. பஞ்சமுகத்தோடு மற்றவர்களுக்கு புலப்படாத ஆறாவது முகத்தையும் (அதோமுகம்) சேர்த்து முருகனாக உத்தித்துக் கொண்டார், பிறகே தமிழ் படைத்தார்.
மொழி வேற்றுமை வந்தாலும் வந்தது. இந்த கூட்டம் புராணங்களை நம்புவதில்லை. அப்படியானால் இங்கு பிறந்து சீனம் போன போகரும் ஆரியர் தானே? அவருடைய நூல்களை வாசித்து போற்றுவதும் தமிழ் மரபுப்படி குற்றம்தானே?
எல்லாமே ஊழிக்காலத்தில் மீண்டும் அவருள் ஒடுங்கும். ஈசன் வேறு முருகன் வேறில்லை. இந்த எளிய தத்துவம் புரியாத வரை 'அறியாதவன் வாயில வண்டி லோடு மண்ணு'தான்!