About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 28 பிப்ரவரி, 2018

சமத்துவ ஜோதியில் கலந்திடுங்க

கலப்பு மணத்தால் ஒரு பக்கம் சமத்துவ புரட்சி என்றாலும், இன்னொரு பக்கம் பக்க விளைவுகளும் உண்டு. நம் பரம்பரையில் இதுவரை பதிவாகாத புதிய நோய்கள் அடுத்த தலைமுறையைத் தாக்குகிறது. கலப்பு மணத்தால் எப்போதுமே அடுத்த சந்ததியின் மரபணுக்கள் பலம் பெறுகிறது என்று சொல்ல முடியாது. DNA கட்டமைப்பில் புதிய இடைச்செருகல்கள் வரும். அதையும் சமத்துவ கண்ணோடு எதிர்கொள்ள வேண்டியதுதான். வேறு வழி? 
மரபணு மாறிய கலப்பின மாடுகளும் பயிர்களும் தலை தூக்கவேகூடாது என்று போராடி ஆர்பாட்டம் செய்து எப்படி பதைக்கிறோமோ அப்படித்தானே நம் வர்க்கமும்? இது ஏதோ புதிதாக இன்று வந்த செய்தியல்ல. 70 வருடங்களாக தெரிந்த உண்மை இதுவே! பாரத கலாசாரத்தில் பல ரகசியங்கள் புதைந்துள்ளது. அம்முறையை முடிந்தவரை எல்லோரும் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் இதை எல்லாம் பார்த்துக்கொண்டா காதல் வரும்? வாழ்க்கை விதிக்கபட்டபடியே நடக்கும். இனி சர்வதேச மரபணுக்கள் கலந்து உலாவரும். அதனால் நம் வர்க்கம் மெல்ல அழியத் தொடங்கும்.
அதனால்தான் சில பழங்குடியினர் வேற்று மனிதர்களை தம் இனத்தில் சேர்ப்பதில்லை. ஆப்பிரிக்க சிடி பழங்குடியினர், அமேசான் காடுகளில் வாழும் யனோமாமி, அந்தமானின் ஜாரவா, நிகோபார் சோம்பென் பழங்குடிகள், என்று எல்லாமே இப்படித்தான்.. At what cost? அப்படியும் நம் ஆட்கள் உள்ளே புகுந்து கைவரிசையைக் காட்டி இன்று அந்த பழங்குடிகளின் தோல் / கண் நிறம், தலைமுடி மாறிப்போய், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து, ஆயுள் குறைந்து வருகிறதாம். எல்லாம் நன்றாக இருக்கும்வரை நலமே!

திங்கள், 19 பிப்ரவரி, 2018

கொலை செய்வது பெரிய குற்றமா?

கொலை குற்றங்கள் புரிந்தால் மரண தண்டனை நிச்சயம் என்று காலங்காலமாய் தெரிந்துங்கூட நம் மக்களுக்கு பயம் வரவில்லை என்றால் சமூகத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது. எல்லா தண்டனைகளும் மன்னிக்கப்பட வேண்டியவையே என்றால் வெறும் ஆயுள் தண்டனைக் கொடுத்து என்ன பயன்? காந்தி ஜெயந்திக்கு விடுதலை செய்யவேண்டிய நன்னடத்தை தியாகிகளா? கல்வி, ஆன்மிகம், இறைமொழி, கலாச்சாரம் இவற்றைத் தாண்டி வளர்ப்பு முறை சகவாச தோஷம் உள்ளது. கொலையுண்டவனும், கொலை செய்தவனும் மனிதன்தான். கொலை செய்தவனை கோர்ட் மன்னிக்க வேண்டும் என்றால், கொலை குற்றம் செய்யும்முன் இவன் ஏன் அவனை மன்னித்திருக்கக் கூடாது? இவன் தண்டனை தரலாம், இவனுக்கு தண்டனை தர்க்கூடாதாம்!
வீடியோ சாட்சியத்தோடு செய்யும் கொலைகள் எல்லாமே கொலை குற்றமல்ல வதம் என்றால் தேசம் முழுதும் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும். சிறையில் எல்லோரும் திருந்துவார்கள் என்று எந்த குருட்டு நம்பிக்கையில் நம்மூரில் எதிர்ப்பாளர்கள் பேசுகிறார்கள்? தெரியவில்லை. வெறும் 10% க்கும் குறைவாகத்தான் உலகெங்கும் கைதிகள் தாங்கள் செய்த குற்றத்திற்கு வருந்துகிறார்கள். இவர்கள் திருந்தியதாகக் காட்டிக்கொண்டாலும் ஆழ்மனதில் மூர்க்க குணம் ஒளிந்திருக்கும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். அது எப்போது வெளிவரும், யாரைத் தாக்கும் என்று சொல்ல முடியாது.
தஷ்வந்த் என்ன செய்தான்? 'தன் பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்து பலாத்காரம் செய்து, கொன்றுவிட்டு, அவளை எரித்து விட்டான். அந்த வாரம் தன் தாயைக் கொன்றான். அவளுடைய நகை பணம் திருடினான். தந்தையைக் கொல்ல திட்டமிட்டிருந்தான். அதற்குள் போலீஸ் பிடித்தது. போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடி மும்பையல் ஓட்டலில் மாட்டிக்கொண்டான்.' ஏங்க BE படித்த இந்த 23 வயசு பையன் செய்தது பெருங்குற்றமா? வயசை கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்கவும் என்று அப்பீல் செய்கிறார் இவருடைய வக்கீல். இளம் வயதைக் காரணம் காட்டி தண்டனையில் சலுகைகள் தர வேண்டுமாம்... தண்டனையே அதற்குத்தான் என்பதை 'மரண தண்டனை' எதிர்ப்பாளர்கள் ஏனோ புரிந்து கொள்வதில்லை. இது படிப்பினையைத் தராவிட்டால் இவர்கள் காலப்போக்கில் habitual ciriminals ஆகிவிடுகிறார்கள். ஏனடா திருந்தவில்லை என்று யாரும் கேட்க முடியாது. "விட்டாங்க.. உள்ள இருந்துட்டு வந்ட்டேன், அதுக்கு இன்னா இப்போ?"
இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை என்று ஒருவனே combo punishment பல வருடங்களுக்குப் பெற்றால் அவன் வெளியில் வருவதற்குள் /மரணமடைவதற்குள் முழு கிழவன் ஆகிவிடுவான். இவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும். நம் நாட்டில் மரண தண்டனையே இல்லையென்றால் குற்றவாளிகள் சிறையில் 'சகல' வசதிகளோடு சௌகரியமாக இருக்கவே ஆசைப்படுவார்கள். தொடரட்டும் மரண தண்டனைகள்!

சனி, 17 பிப்ரவரி, 2018

வீடுபேறு தரும் செட்டியார்

"வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே..."

இந்த சிலேடைப் பாடல் மருத்துவம் மற்றும் தத்துவத்தை உணர்த்துகிறது.

1) உடலில் முக்குண தோஷங்கள் சமன்பெற மருத்துவ சரக்குகளான  வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் இவற்றை சமையலில் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.

2) இந்த உடல் என்னும் வெறும் காயமானது உபவாசம் விரதம் மூலம் சுக்காக சுருங்கிப் போகும்போது, இரும்பைப்போன்ற (வெந்த அயம்) வலிமையான ஊழ்வினை/ நோய்கள் என்னை தாக்காமல் இருக்க, அகத்தை சீர் செய்யும் உன் திருவடிகளைப் பற்றிடக் கொடுத்திடு. மீண்டும் சுமக்கவேண்டிய பெரும் காயத்தை (மறுபிறவியை) எடுக்காமல் எனக்கு வீடுபேறு தந்திடு ஏரகத்து (வள்ளியூர் -கன்னியாகுமரி மாவட்டம்) செட்டியாரே.

இப்பாடலில் ஏரகம் என்றதும் நான்காம்  படைவீடு உள்ள சுவாமிமலை (கும்பகோணம்) என்று நினைத்திடுவோம். 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை' என்பது பழமொழி. மேற்கண்ட மருந்து சரக்குகளை வைத்திருப்பவர் வணிக செட்டியார். ஆனால் முருகனை செட்டி என்று அழைக்க அவன் என்ன சரக்கு விற்றான்? வளையல் விற்கும் செட்டியாராக வந்து அகத்தியருக்கு திருக்காட்சி தந்தான் முருகன். (செட்டி குளம் - பெரம்பலூர்). அதனால் முருகனை செட்டி என்று சொல்வதுண்டு.


எனது குருநாதர் ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் முருகனை அப்படித்தான் அழைத்தார். ஷண்முக கவசத்தின் இறுதிப் பாடலில் 'இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க...' என்று பாடுகிறார். அதாவது 'எம் தொண்டர்கள் சூழ நான் இருக்கும்போதும் என்னைக் காத்திடு செட்டியாரே' என்கிறார்.

மேற்கண்ட சிலேடை பாடலுக்குப் பொருளுரைத் தருவோர், வெந்தயத்தை காயகற்ப அயச் செந்தூரம் என்று நினைத்துக் கொள்கின்றனர். அந்த அயத்தை உண்டுங்கூட ஆவதொன்றுமில்லை என்று சொல்கின்றனர். அது அப்படி அல்ல. தினப்படி சமையலில் சேர்க்கும் சரக்குகளில் செந்தூரம் வருமா? அதனால் அப்பாடலின் பொருளை அப்படிப் பார்க்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. 

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ராஜராஜ சதுர்வேதிமங்கலம்

ராஜராஜ சோழனின் பல்வேறு செயல்பாட்டிற்கு உறுதுணையாய் இருந்தது நாராக்கன் மாராயன் ஜனநாதன் (எ) ராஜேந்திர சோழ பிரம்மராயன். மன்னனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்தவர். இவர் ஒலைநாயகன்/ முக்கிய மந்திரி/ கர்மாதிகாரி என்று பதவிகளை வகித்தவர். தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கோபுரம் இவருடைய ஆணையின் கீழ் கட்டப்பட்டது. மன்னனின் கட்டளைகளையும் யோசனைகளையும் செயல் வடிவமாகப் பரிமளிக்கச் செய்தவர். விக்ஞாபதியாக எல்லா சாசனத்திலும் கட்டளைகளிலும் கீழே இவர் பெயரும் உண்டு.
வெண்ணாடு கோட்டம் கேரளாந்தக சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமன் கிருஷ்ணன் என்பவரின் மகனே இந்த பிரம்மராயன். பிரம்மதேயத்தில் வேதியர்களை குடிவைத்ததோடு அவர்களுடைய பணியை தன் அரசாங்க அலுவல்களிலும் பயன்படுத்திக் கொண்டான் ராஜராஜன். எது செய்தாலும் பிரம்மராயனையே கேட்டுச் செய்யும் பழக்கம் பெற்றிருந்ததால், இவர் சொல்லே மன்னனின் வேதவாக்கு என்ற அளவில் அவர் செல்வாக்குடன் இருந்தார். அதனால் மன்னன் இவருக்கு 'மும்முடி சோழ பிரம்மராயன்' என்ற சிறப்புப் பட்டத்தையும் தந்தான். இவர் பிற்பாடு ராஜேந்திர சோழனின் ஆட்சியிலும் பணி புரிந்தார்.
திருவாலங்காடு (திருவள்ளூர்), ஈசாலம் (விழுப்புரம்), கரந்தை (திருவண்ணாமலை) ஆகிய ஊர்களில் கொடுக்கப்பட்ட மானியங்கள் எல்லாமே பிரம்மராயனின் ஆணைப்படி நடந்தவையே. இவர் ஏறக்குறைய 17 ஆண்டுகள் பணி செய்தார். சோழன் காலத்தில் கட்டிய அனைத்து கஜபிருஷ்ட வடிவ விமானங்கள் கொண்ட சிவன் கோயில்களுக்கும் நித்திய பூசைகள் செய்ய இங்கிருந்துதான் வேதியர்களை அனுப்பினான்.
அவர் காலத்தில் ஈசானசிவ பண்டிதர் என்பவர் ராஜகுருவாக நியமிக்கப்பட்டார். 'உடையார் ராஜராஜதேவர் குருக்கள் ஈசானசிவ பண்டிதர்' என்றுதான் செப்பேடுகளிலும் கல்வெட்டிலும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் இவர்களுக்கு கொடுத்த நெல் தானியங்களை 'ஆச்சார்ய போகம்' என்று கணக்கில் வைத்தான். ஆண்டுக்கு 2000 கலம் நெல் என்று ராஜகுரு குடும்பத்திற்கு அளித்தான். பிற்பாடு வெவ்வேறு ராஜகுருக்கள் வந்து போயினர். பிற்பாடு சர்வசிவ பண்டிதர் நியமிக்கபட்டார். இந்த ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்பது விழுப்புரம்-திண்டிவனம்-செஞ்சி என முக்கோணமாக இணைத்து அமைத்தான் என்கிறது.கல்வெட்டுகள்.
வியவஸ்தை / பரிகாரம் என்று செப்பேடுகள் இருவகையாகப் பிரிக்கப்பட்டது. ஆணைகள், தடைகள் எல்லாம் முன்னதும்; வரி விலக்கு மானியம் எல்லாமே இரண்டாம் ரகத்திலும் வடிக்கப்பட்டது என்று திரு.நாகசாமி தெரிவித்தார்.
அதுபோக சம்ஸ்கிருத செப்பேடும் உள்ளது, 'ராஜத் ராஜன்ய மகுட ஸ்ரேனி ரத்னேசு சாசனம், இதத் ராஜேந்திர சோழஸ்ய பரகேசரி வர்மனஹ' என்று ஈசாலம் பட்டயத்தில் உள்ளது.
ராஜராஜ சோழனைப் பற்றி எல்லாமே இதுவரை உயர்வாய்தான் பேசிவந்துள்ளோம். அல்லவா? ஆனால் அவனுடைய ஆட்சியிலும் மகன் ராஜேந்திரனின் காலத்திலும் நிறைய வேண்டத் தகாத நிகழ்வுகளும் இருந்தன என்பது கருப்பு பக்கங்களாக உள்ளது. நான் படித்தவரை அப்படித்தான் எனக்குப் பட்டது.
என்னதான் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள், ராஜகுரு இருந்தாலும் இறுதியான முடிவை இவனேதான் எடுத்தான். அப்படிப் பார்க்கும்போது கல்வி முறை, சமூகக் கட்டமைப்பு, பெண்களுக்கு கட்டுப்பாடு, வர்ணாஸ்ரம கெடுபிடிகள், பணியாளர்களுக்கு ஒடுக்குமுறை என்பவையும் இருந்துள்ளது.. பல சிவாலயங்கள் கட்டுவித்தாலும், திருமுறைகள் தொகுத்து வெளியிட்டாலும், வடக்கிலும் தூர கிழக்கிலும் பல தேசங்களை வலியப்போய் படையெடுத்து கைப்பற்றுவதை அவன் நிறுத்தவில்லை. இவன் கடாரம் வரையும், இவன் மகன் கங்கை தாண்டி இமயம்வரை சென்று வந்து என்ன பயன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. பௌத்தம் /சமணம் எதிர்க்க மட்டும் சைவ சமயமும் திருமுறை பாடல்களும் பயன்பட்டதா? எப்போதுமே தேசாந்திரத்திலேயே இருந்ததால் சோழன் சார்பில் எல்லாவற்றையும் பிரம்மராயனே முடிவு செய்ய முடியாது. பட்டத்தரசியும் இளவரசனும் பெரிய அளவுக்கு நிர்வாகத்தில் பங்களிப்பும் செய்ய முடியாது. இதுபோன்ற குறைபாடுகள் பகிரங்கமாக இருந்தது என்பது ஆச்சரியத்தைத் தரும்! அதைப்பற்றி இன்னொரு பதிவில் உரையாடுவோம்.

திங்கள், 12 பிப்ரவரி, 2018

கடல்கடந்து தமிழ்

படத்தில் நீங்கள் காண்பது கப்பலில் கட்டும் மணி. நியூசிலாந்தில் இது 1835ல் கண்டெடுக்கப்பட்டது. உடைந்துபோன மணியின் விளிம்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் சுமார் 14ம் நூற்றாண்டு தமிழ் என்று அறியப்படுகிறது. இது 'முஹைதீன்பக் கப்பலின் மணி' என்று சொல்கிறது.
நியூசீலாந்தில் அப்போதே தமிழ் புழக்கத்தில் இருந்ததற்கு இதுதான் முதல் தடயம் என்றும், அந்நாளிலேயே தூர கிழக்கு நாடுகளையும் தாண்டி தமிழ் வணிக மாலுமிகள் ஆஸ்திரேலியா மற்றும் பாலினேஷியா தீவுகள் வரை போய் வந்த சாத்தியங்கள் நிறைய உள்ளது என்று சென்ற நூற்றாண்டின் சிறந்த மொழியியலாளர் வி.ஆர்.ராமசந்திர தீட்சிதர் பதிவு செய்துள்ளார். அல்லது லெமுரியா கண்டம் துண்டான பிறகு பழங்குடிகள் ஆங்காங்கே தங்கிவிட்டதற்கு சாத்தியமும் உள்ளது. அதெல்லாம் இங்கு நம்முடைய ஆய்வில் தெரியாமலே இருந்துள்ளது என்றுள்ளார்.
அதுபோல் சீனாவின் குவாங்கசு பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிபி10-13ம் நூற்றண்டிரைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. சீனாவை ஆண்ட மன்னர் குப்லாய்கான் வளமுடன் வாழவேண்டும் என்று கூறி சக்ரவர்த்தி சம்பந்தன் பெருமாள் என்பவனால் வடிக்கப்பட்டது. ஒரே கல்வெட்டில் தமிழும், சீனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கே சுவன்-சௌவ் என்ற ஊரில் திருக்கதலீஸ்வரம் என்ற கோயிலில் பொறிக்கப்பட்டது என்று அதில் குறிப்பும் உள்ளதாம். "செகசைக் கான் பரமன்,சித்திரை பௌர்ணமி 1203 சக ஆண்டு (கிபி.1281)" என்று உள்ளது. மன்னனின் முழுப்பெயர் குப்லாய்கான் செக்சன் கான், இவன் ஜெங்கிஸ்கானின் பேரன்.. திருக்கதலீஸ்வரம் சிவன் கோயில் இன்று உள்ளதா என்று தெரியவில்லை. இக்கோயிலின் கும்பாபிஷேகம் குப்லாய் கான் ஆணைப்படி நடந்தது என்றும் உள்ளது.
கிமு 3ம் நூற்றாண்டில் போகர் நிறுவிய தாவோயிதம் இவனுடைய ஆட்சி காலத்தில் தலைதூக்க முடியாமல் நசுக்கப்பட்டது. பிற்பாடு போகரே மிங் பேரரசின் மன்னனாக சீடர் புலிப்பாணி புடைசூழ நாட்டை மங்கோலியரிடமிருந்து மீட்டெடுத்தார் என்பதை பழைய பதிவில் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இதைப் பற்றி கோரக்கர் தன்னுடைய சந்திர ரேகையிலும் சூசகமாக சொல்லியிருந்தார்.
No automatic alt text available.
Image may contain: text

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அப்படியாவது தமிழை வளர்க்கணுமா?

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென ஒரு துறை கம்பீரமாக இருக்கவேண்டும் என்று தமிழர்கள் விருப்படுகிறார்களாம். அதற்காக நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு நிதி வசூல் செய்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கே என்னென்ன துறைகள் யார் பெயரில் நிதியுதவி பெற்று இயங்குகிறது என்று பார்த்தால் தமிழனுக்கு கோபம் வரும்.
The list of named chairs at Harvard University.
Boylston Professor of Rhetoric and Oratory
Gardiner Professor of Oceanic History and Affairs
Hollis Chair of Divinity
Hollis Chair of Mathematics and Natural Philosophy
McLean Professor of Ancient and Modern History
Perkins Professorship of Astronomy and Mathematics
Wales Professor of Sanskrit
Winn Professorship of Ecclesiastical History
இதெல்லாம் பல்கலைகழகம் நேரடியாக நிதியளித்து உருவாக்கிய துறைகள். இதில் தமிழ் இல்லை. சமஸ்கிருதத்திற்கு போட்டியாக தமிழ்த் துறையை Department of South Asian Studies பிரிவில் நுழைக்க நம்மவர்கள் முக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வெள்ளைக்காரன் தமிழோ- சமஸ்கிருதமோ பேசினால் நமக்குப் புல்லரித்து வாய்ப்பிளந்து பார்ப்போம். அவன் வேட்டி கட்டிக்கொண்டு பொங்கல் கிண்டினால் அவனோடு கைகுலுக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். ஆனால் இங்கே ஆங்கிலமோ சமஸ்கிருதமோ யாரும் விரும்பவில்லை. அது தனிநபர் கொள்கை, அரசியல் நிலைப்பாடு என்று விட்டுவிடலாம்.
அங்கே இத்துறையை உருவாக்க $6 மில்லியன் டாலர்கள் (சுமார் 40 கோடி ரூபாய்)தேவை. இன்னும் திரட்டவேண்டியது 6 கோடியாம்! அதற்கு வசூல் வேட்டை உலகெங்கும் நடக்கிறது. அங்கு தமிழ்த் துறை இருந்தே ஆகவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆர்வக்கோளாறில் இங்கிருக்கும் நம்மவர்கள் நிதி திரட்டி அங்கே கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தமிழ் வசூல் வேட்டைக்காக ஹார்வர்ட் பல்கலைகழகம் தனியான வங்கிக் கணக்கை திறக்க இன்றுவரை இசைவு தெரிவிக்கவில்லை. அதனால் மேரிலாண்டில் பதிவு செய்யப்பட்ட Tamil Chair Inc என்ற அமைப்புக்கு இந்தத் தொகை போய்க்கொண்டிருக்கிறது. இந்த பணத்தை வைத்துத்தான் ஆசிரியரின் ஊதியமோ, நூல் வெளியீடோ, பயிலரங்கமோ எதுவமே கையாளப்படும். அதாவது பல்கலைக்கழகம் நேரடியாக இதில் பட்டுக்கொள்ளவில்லை.
It is a matter of great prestige for Tamils to have their language taught at the world's most prestigious Harvard University என்று சொல்கிறது. நம்முடைய காசை அங்கு கொட்டி அப்படியொன்றும் தமிழ் வளர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிதியை இங்கு தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தினாலே போதும். பல்லாயிரக் கணக்கான சுவடிகள் வெறும் கேட்டலாகிட்டு பிரிக்கப்பட்டுள்ளது. போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் இவை படிக்கப்படாமல், ஸ்கேன் செய்யாமல், ஆய்வு செய்து கையெழுத்துப் பிரதி எடுக்கப்படாமல், தட்டச்சு ஆகாமல், மெய்திருத்தம் ஆகாமல், அச்சு நூலாக வெளிவராமல் அப்படியே தஞ்சை, மதுரை, சென்னை நூலகங்களில் கிடக்கிறது. நிலை இப்படியிருக்க ஹார்வர்டில் அவன் தமிழ் படித்தால் என்ன படிக்காவிட்டால் நமக்கென்ன? அவன் இங்குவந்து படித்துவிட்டுப் போகட்டுமே! நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருமே!
Image may contain: text

புதன், 7 பிப்ரவரி, 2018

சாதிகள் நிலைத்திருக்கும்!

"சமூகத்தைக் கொல்லும் கொடிய விடம்தான் சாதி மதம்! எல்லோரும் ஓரினமாக வெறுப்பின்றி கலந்திட வேண்டும்" என்ற வாசகத்தைப் படித்தேன்.
சாதிகள் கொடிய நோய் என்றால் அதை குணமாக்க முடியுமா? சாதிகள் இல்லாமல் எல்லோராலும் இருக்க முடியுமா? அல்லது எல்லோரும் ஒரே சாதியில் இருக்க முடிமா? சாதிகள் வேண்டாம் என்றாலும் எல்லோராலும் ஒரே மாதிரி பழக்கவழக்க வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள முடியுமா? எல்லோராலும் சைவமாகவோ அசைவமாகவோ மாறிட முடியுமா? எல்லா சாதிகளும் சமம் என்றால் இட ஒதுக்கீடு தொடருமா? எல்லோருமே சமம் என்றால் எல்லோருமே எல்லா தொழில்களையும் முன்வந்து செய்வார்களா? சமம் என்றாலும் செய்யும் தொழிலை வைத்து வாழ்க்கைத் தரம் காண்பார்களா?
இக்கேள்விகளுக்குத் துல்லியமாக நடுநிலையோடு விடையளிப்பது மிகவும் கடினம். ஏன்? சமுதாயத்தில் சிறிய விழுக்காடு அளவில் உள்ளோரை விடுத்து ஏனையோரின் நிலைப்பாடும் மனவோட்டமும் எப்படி உள்ளது?
*சாதிகள் வேண்டும், இட ஒதுக்கீடு வேண்டும்
*சாதிகள் வேண்டும், கலப்பு மணம் கூடாது
*கலப்பு மணம் செய்தாலும் ஒதுங்கியே இருப்பது நலம்
*சாதிகள் கூடாது என்றாலும் எல்லோருடனும் பழக முடியாது
*எல்லா சாதியினருடன் பழகலாம், ஆனால் பழக்கவழக்கத்திற்கு நம்மை மாற்றிக்கொள்ள முடியாது
*ஒரே சாதிதான் என்றாலும் எல்லோரையுமே ஏற்க முடியாது
*ஒரே சாதியானாலும் அடித்துக்கொள்வோம் அணைத்துக்கொள்வோம்
*சாதிகள் இருக்கட்டும் ஆனால் யாரும் யாரையும் ஒடுக்கக் கூடாது, அவரவர் வழியில் இடையூறின்றி இருந்தாலே போதும்
*முற்போக்கு என்பது பட்டிமன்றத்திற்கு சரி, நடைமுறைக்கு சரிபடாது
*எல்லாமே தனிநபர் விருப்பம், ஏதும் சொல்வதற்கில்லை
இப்படித்தான் உள்ளது இன்றைய சமுதாயம். நம் முற்போக்கு எண்ணப்படி எல்லோரும் மாறவேண்டும் என்றால், நாத்திகர்களின் கொள்கையை நம்மால் ஏன் ஏற்க முடிவதில்லை? நம் நெறியை அவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவரவர் குடும்பம், அவரவர் விருப்பம் என்று விட்டுவிட வேண்டும். ஊரோடு ஒத்துவாழ எல்லோரும் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டும். அது முடியுமா?

பல சித்தர்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களே, ஆனால் சித்தநிலை எய்த அது ஒரு தடையாக இருக்கவில்லை. ஏன்? எல்லோருமே ஒரே சிவ உயர்நெறியில் சித்த மரபில் இருந்ததால்தான் சங்கமித்தனர். சித்தர்களுக்கென கோட்பாடு ஆகமவிதி என்று எல்லாமே இருந்தது என்றால் அதுவும் ஒரு சாதிதானே? எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒன்றின்கீழ் அனைவரும் வந்தாக வேண்டும், பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். அல்லவா? ஆகவே, மனித சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் என்றுமே நிலைத்திருக்கும்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

The art of learning to give

The passing away of my cousin Ms.Nirmala in Bangalore yesterday taught everyone a lesson about philanthropy. She worked in Amanath Bank for 30 years as a Senior Manager. A spinster, she was more attached to her brothers and nieces. She was impartial and showed her love towards us also. A commerce graduate, she spoke English, Tamil, Telugu, Kannada and Urdu. Unassumingly she was down to earth.

A benevolent hearted Nimmi was very religious, a good cook and a hard worker who never exposed her pain and struggle. She was always fond of power costumes, jewellery and cosmetics. She lived in her independent house in Hebbal with her younger brother's family. She loved charity and donated as much money as possible. She gifted us on every occasion. At the height of her kindness, she donated her eyes too. This profile photo was shot by me a few years ago.

Rest In Peace, Nimmi. We miss you!

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

மன நிறைவேது?

Image may contain: 3 people, people standing
என்னை ஏன் இப்படி வைத்துள்ளாய் இறைவா என்று கோபத்தில் ஒருநாளேனும் நாம் கேட்காமல் இருந்ததுண்டா? ஆனால் இவர்களைப் பாருங்கள்... அத்தனைக்கும் ஆசைப்படு என்றாலும் முகத்தில் எந்த சஞ்சலமுமின்றி ஒய்யாரமாக உள்ளனர். இதைப் பார்த்தால், நாம் உதட்டளவில் ஆன்மிகம் பேசி, நடைமுறையில் பேராசியோடுதான் மன நிறைவின்றி வாழ்கிறோம் என்பது தெரிகிறது.

கிடைத்த மாவை வைத்துக் கிண்டிய உணவுதான் இவர்களுக்கு விருந்து.அப்பாத்திரத்தை துலக்கவே வேண்டாம், அதில் ஒட்டவிடாமல் கீழே சிந்தாமல் கண்ணுங்கருத்துமாய் உண்பார்கள்.
இன்னொருபுறம், ஒருவரால் முழுதும் உண்ண முடியாத அளவுக்கு நம்மூரில் தலைவாழை விருந்து... தினம் இதுபோல் வீணாகும் உணவுக்கு அளவே இல்லை. அவர்கள் மேம்படவேண்டுமென்றால் நாம் உணவை சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். "அது அவர்கள் நாட்டின் நிலை.. அது என்னை பாதிக்காது. நான் இப்படித்தான் இருப்பேன்" என்றால் நமக்குப் பாடம் புகட்ட பேரிடர்தான் ஒரே வழி.. பணம் இருந்தாலும் வாங்கிட உணவுப் பண்டமும் குடிநீரும் இருக்காது.

  Image may contain: 1 person, sitting and food

The Infinite Cycle

நீண்ட நாட்களுக்குப்பின் என் எண்ணங்களை ஆங்கிலத்தில் ஏற்றினேன்.