About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 ஜூலை, 2018

ஹஸ்ரத் பாபா சொன்ன ரகசியங்கள்!

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஹாஜி ஹஸ்ரத் பாபா என்ற ஒரு முஸ்லிம் பெரியவரைக் காண என் நண்பருடன் சென்றிருந்தேன். அவரைப் பார்த்தால், ஆஜானுபாகுவாய் பச்சை பட்டாடையில் வேட்டியும், வழுக்கை தலையில் ஓமகுச்சி ஸ்டைல் தலை முடியும் இருந்தது. வயது 80 களில் இருக்கும். அவர் பலமுறை ஹஜ் புனிதப் பயணம் போய் வருபவர் என்று அறிந்தேன். அவர் மந்திரவாதி என்று மெதுவாக என் நண்பர் சொல்ல, அவரையே உற்றுப் பார்த்தேன். கழுத்து நிறைய மணிகள், கையில் கங்கணம், மோதிரங்கள் என்று பட்டு பீதாம்பரமாக காட்சி தந்தார். சுர்மா இட்ட கண்கள் மேலும் தீட்சண்யத்தைக் கூட்டியது. கால் விரலில் தலா இரண்டு மெட்டிகள் அணிந்திருந்தார்.
அவருடைய பூசை அறையில் விநாயகர், முருகன், மற்றும் சிவனின் பெரிய படமும் இருந்தன. அதன் பக்கத்திலேயே மெக்கா படமும், அரபு மொழியில் எழுதப்பட்ட ஏதோ பெரிய யந்திர தகடுகள், மற்றும் தஞ்சாவூர் குத்துவிளக்கு ஏற்றி மல்லிகைப்பூ அர்ச்சிதிருந்தார். என் நண்பர் தன் குடும்பப் பிரச்சனை தீர்வுக்காக அங்கு சென்றிருந்தார்.
ஹாஜி ஐயா என்னைப்பற்றி விசாரித்தார். அதன்பின் 'இன்னா தம்பி, இங்கே ஹிந்து சாமி படங்களா இருக்கேன்னு பாக்குறியா?' என்றார். நான் சிரித்தேன். அதற்கு அவர், "அல்லாமே சிவன் கிட்டே இருந்துதான் வெளிவரும். கைலாஷ் பழனி மெக்கா, அல்லாமே ஒண்ணுதான்" என்றார். எங்க ஜாதிலேயும் சித்துகள் இருக்குபா.. என்று சொல்லிவிட்டு தன் அனுபவத்தை விவரித்தார்.
மேற்கு மலபாரில் ஒரு மசூதி உண்டென்றும், அங்கு ஒரு மந்திரவாதி உள்ளே இருந்து கொண்டு மந்திரம் ஜெபித்து அதை வேறு ஊருக்கு அலேக்காக தூக்கிச்செல்ல உருவேற்றி கொண்டிருந்ததை இவர் தன் அதிர்வுகளில் இங்கு கண்டுள்ளார். நள்ளிரவுக்குப்பின் அந்த மசூதி எழும்பியுள்ளது போல. உடனே இவர் இங்கிருந்து ஜெபித்து அதை அழுத்தி நிலைக்கச் செய்திட்டாராம். இன்றும் அந்த மசூதி கோணலாகவே நிலைபெற்று விட்டது என்றார்.
இதெல்லாம் எனக்கு விட்டலாசாரியார் கதைப்போல் திகிலாக இருந்தது. இந்த ஹாஜி தன் கிராமத்தில் வறட்சியின்போது தன்னுடைய கிராமத்தில் மட்டும் இரண்டு மணிநேரம் மழை பொழியச் செய்துள்ளார். அரேபியாவில் கார் டிரைவராக வேலை பார்த்த இவர் மகன் விடுப்பில் இருந்த நாளில், அவருடைய எஜமான் வண்டி ஒட்டிவிட்டு யார் மீதோ மோதி கொன்றுள்ளார். அப்பழியை மகன் மீது போட்டுள்ளார். தூக்கில் தொங்கவிட ஆணை வந்தது. தன் அப்பாவி மகனைக் காப்பாற்ற ஹாஜி பாபா இங்கிருந்தே இரண்டு சாமம் முழுதும் விடாமல் மந்திரங்கள் ஜெபித்துள்ளார். மறுநாள் அந்த நீதி மன்றம் திடீரென, அவர் மகனுக்கு அபராதம் மட்டுமே விதித்து விடுதலை செய்ததாம்.
அவர் அதர்வண வேதம் படித்துள்ளார். வாங் இசையோடு சாமன் பாடுவார். அவர் தமிழர் அல்ல என்பது அவருடைய பேச்சில் தெரிந்தது. அவர் என்னைப் பார்த்து, 'உனக்கு கண் திருஷ்டி இருக்கு.. கடவுளோட அனுகிரகம் இருக்கு.. இதை பாக்கெட்ல வெச்சிக்கோ" என்று சொல்லிவிட்டு ஒரு சிறு தகடு கொடுத்தார். அதன்பின் தலையில் ஏதோ மை தேய்த்தார். அதன்பின் அவரை மறந்துவிட்டேன். இன்றுதான் நினைவுக்கு வந்தார்.
இப்படி நம்மைச் சுற்றி பல விஷயங்கள் அமானுஷ்யமாக உள்ளது என்பது உண்மை. நான் சொல்வதை நம்பாமல் சிரிப்போரும் உண்டு.
No automatic alt text available.

ஆச்சாரியா, நீங்கள் என்னை தண்டிக்கலாம்!

ஆதிசங்கரர் நான்கு திசைகளில் நான்கு மடங்களை நிறுவியது போக, 'மூலாம்நாய ஸர்வக்ஞ பீடம்' எனப்படுவது காஞ்சி மடம். இம்மடம் சில காலம் கும்பகோண கிளை மடத்தில் இயங்கி வந்தது. தன் பெரியம்மாவின் மகன் தவறியபடியால் அப்போது தன் தாயுடன் ஊருக்கு வந்தார் சுவாமிநாதன். அங்கு இச்சிறுவனை பீடாதிபதியாக தேர்வு செய்தனர். மாட்டுவண்டியில் அவரோடு துணைக்கு வந்த மேஸ்திரி ஒருவர் 'கொளந்த... எனக்கு என்னமோ நீ ஊருக்கு திரும்பிப் போகமாட்டேன்னு தோணுது.. அவங்க உன்னை அங்கேயே புடிச்சு வெச்சிட்டு சன்னியாசியா வெச்சிபாங்கபா' என்றார். உடனே மனதில் பயம் வந்ததும் 'ராம..ராம' என்று ஜெபிக்க ஆரம்பித்தார். அவர்தான் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
அது 1911-15 காலம். அவருக்கு வயது 16 இருக்கும். கும்பகோணத்தில்தான் அவருக்கு வேதங்கள் கற்பிக்கப் பட்டது. அவருக்கு ஆசிரியர்கள் சிலர் இருந்தனர். அதில் பிரதம அத்தியாபனராக அனந்தராம ஸ்ரௌதிகள் இருந்தார். அவர் இவருக்கு மூன்று ஆண்டுகள் போதித்தார். அனந்தராமன் வசித்தது நெ.17 மேல்கரை, மகாமகம் குளம், குடந்தை. ஆசிரியரின் மனைவி அன்னம்மாள். அவருடைய மகள் வழி பேத்திகள் நாகம்மாள், செல்லம்மாள் இருவரும் சிறுமிகளாக இருந்தபோது, சுவாமிகள் குடிப்பதற்கு சிறிய சொம்பில் பால் கொண்டுபோய் தருவார்களாம். அப்போதே இளம் சுவாமிகளுக்கு தீர்க்கதரிசன பார்வை உண்டு என்று சொல்வார்கள்.
சுவாமிகள் அசாத்திய படிப்புத்திறன் நினைவாற்றல் கொண்டவர். என்னதான் துறவியாக இருந்தாலும் அந்த வயதிற்கான விளையாட்டு புத்தி சற்று இருக்கும். ஒருசமயம் வேதபாடம் நடத்தும்போது இந்த ஆசிரியர் அவரை தொடையில் கிள்ளி அடித்து 'கவனம் இங்கே இருக்கணும்' என சொல்லியுள்ளார். பிறகு தன் செயல் கருதி, "ஜகத்குருவான உங்களை அடித்து விட்டேன், சுவாமிகள் மன்னிக்கணும்" என்று சொல்லியுள்ளார். அதற்கு சுவாமிகள், "ஆச்சாரியா, வருத்தம் வேண்டாம். நீங்கள் என்னை தண்டிக்க முழு உரிமை உண்டு" என்றாரம். என்னவொரு மனப்பக்குவம், தன் ஆச்சாரியரிடம் என்னவொரு பணிவு! காஞ்சி மடத்தின் 68வது பீடாதிபதியாக பொறுப்பேற்ற 'மகாபெரியவர்' தேசம் முழுக்க தர்மம் போதித்து நூறாண்டுகள் வாழ்ந்து ஆன்மிகம் தழைக்கச் செய்தார். இத்தனைக்கும் அவர் காலத்தில் நாத்திக பகுத்தறிவு ஓங்கியிருந்தது. அதையும் எதிர்கொண்டார். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?
அந்த நாகம்மா பாட்டி சொன்னதை எல்லாம் நான் சிறுவயதில் கேட்டுள்ளேன். அதை நினைவுகூர்ந்து இங்கு பதிவிட்டேன். மஹாபெரியவர் பாதம் போற்றி!

Image may contain: 1 person, text

பொங்கலைத் தேடி!

கிறித்துவப் பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பள்ளிக்கு நேர் எதிரே ஸ்ருங்கேரி சாரதா பீடம் உண்டு. என்னுடைய வகுப்பு மாடியில் சாலையை நோக்கி இருந்தது. அந்த வாரம் மூத்த பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீரத்த பாரதி சுவாமிகளும், இளையவரும் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீ வித்யாதீர்த்த பாரதி சுவாமிகளும் முகாமிட்டிருந்தனர்.
மதிய உணவு இடைவேளையில் எனக்கு முன் பெஞ்சில் இருந்த முனியாண்டி அவசர அவசரமாக தொன்னையில் சர்க்கரைப் பொங்கலும் லட்டுவும் எடுத்துக்கொண்டு வந்து, 'டேய் எதிர்ல சாமியார் வந்திருக்காரு போய் வாங்கிகோங்கடா. த பார்.. நான் வாங்கிட்டேன்' என்றான். நாங்கள் ஐந்து பேர், ஷூ சாக்ஸ் கழட்டி டெஸ்கில் வைத்துவிட்டு உடனே மடத்தினுள் பிரவசம் செய்தோம். நான் சாலையைக் கடந்து உள்ளே போகும்முன், அவர்கள் எனக்கு முன்பே தலைதெறிக்க சென்றுவிட்டனர். நானோ நேராக மாடிப்படிகள் ஏறி மேலே சென்றுவிட்டேன். அங்கு இளைய சுவாமிஜியும் வேறு யாரோ இருவர் மட்டும் இருந்தனர். உள்ளே காவி வேட்டி மறைப்பாக சுற்றிக் கட்டி இருந்த அறையில் பெரிய சுவாமிஜி தூங்கிக்கொண்டிருந்தார்.
அங்கே யார் கையிலும் பொங்கல் தூக்கு கரண்டி தொன்னை ஏதும் இல்லாததால், 'ஐயயோ, பொங்கல் தீந்துபோச்சு போலிருக்கு' என்று நினைத்துக் கொண்டேன். அப்போது இளைய பீடாதிபதி, என்னைப் பார்த்து 'அந்த குழந்த யாரு? உங்களோட வந்தானா? அவன் கண்ணைப் பாத்தீங்களோ?' என்று ஆந்திர மணம் வீசும் தமிழில் என்னைப்பற்றி விசாரித்தார். மற்றவர்கள் என்னைப் பார்க்கும் சமயம், பயத்தில் அங்கிருந்து ஜூட் விட்டேன். அப்போது அவர் பார்வைக்கு என்னைப்பற்றி என்ன தெரிந்ததோ.. அறியேன்! கீழே என் தோழர்கள் காத்திருந்தனர். அங்கே பொங்கல் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
சிறுவயது முதலே என்னை அறியாமல் சித்தமாயா வட்டத்தில் எப்படியோ வந்து போயுள்ளேன் என்று தெரிகிறது.

Image may contain: one or more people and people standing Image may contain: 1 person, selfie and closeup

சிங்கம்பட்டி ஜமீன்

குடியரசு காலத்திலும் ஊரே போற்றும் ஒரு மகாராஜா உள்ளார். அவர்தான் சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானத்தின் மகாராஜா, ஸ்ரீ சிவசுப்ரமணிய கோமதிசங்கர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. இன்றைக்கு யானை குதிரை சேனைப் படைகள் எதுவுமின்றி, ஜமீன் சொத்துகள் நாட்டுடைமை ஆனபிறகு எல்லாம் இழந்தும், தன் சமஸ்தான மக்களின் அன்பைப் பெற்றுள்ளார். திருநெல்வேலி தாண்டி மணிமுத்தாறு மலையடிவாரத்தில் உள்ளது இந்த அமைதியான சிங்கம்பட்டி ஜமீன்.
இவர் மேற்கத்திய கல்வி கற்றவர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். சுவாமி விவேகானந்தரை சிக்காகோ அனுப்பிவைத்த பாஸ்கர சேதுபதி மன்னரின் மகள் இவருக்கு பாட்டி முறை. இவர் சித்த நெறிகளை ஆராதிப்பவர். பல சித்துகளை கைவரப் பெற்ற 88 வயதான சித்தர். இன்று பெயரளவில் சம்பிரதாயம் காக்க ராஜாவாக இருக்கிறார். இவருடைய தந்தை வெள்ளிகாறரை கொன்றார் என்பதற்காக இவர்களது பிரசித்தி பெற்ற 8000 ஏக்கர் 'மாஞ்சோலை எஸ்டேட்'  தண்டம் கட்ட மும்பாய் கம்பனிக்கு தாரை கொடுக்கப்பட்டது.  இந்த வயதிலும் இவர் முகத்தில் ராஜ கம்பீரம் தெரிகிறது. 

Image may contain: 2 people, text and closeup
Image may contain: indoor

சனி, 28 ஜூலை, 2018

வாழ்க்கைப் பாடம்

'தலைவர் உயிருக்குப் போராடும்போது அவர் முன்பு பேசியதையும் நடந்து கொண்டதையும் கிண்டலடிப்பது உச்சகட்ட அநாகரிகம்' என்று யாரோ ஒரு கட்சித் தலைவர் நேற்று தொலைக்காட்சியில் பேசினார்.
சமூகத்தின் செயல்பாடு அப்படித்தான் இருக்கும். அரசியலில் இல்லாமல் பொதுவாழ்வில் இருந்த அப்துல்கலாம் ஐயாவை யாரேனும் இப்படி கிண்டல் பேசினார்களா? அவர்தான் அப்படியாக நடந்து கொண்டாரா? ஒருவருக்கு எத்தனை வயதானாலும் 'பேசிய தீயபேச்சும் செய்த தீயசெயலும்' காலத்திற்கும் வடுவாக நின்றுவிடும். அதை அலசிப்பார்த்து பேசுவதில் நாகரிகம் அநாகரிகம் என்று ஏதுமில்லை. 'நன்றே செய் இனிதே பேசு' என்று ஔவை சொன்னாளே! தலைவர் அன்றே கொஞ்சம் பிரயத்தனப்பட்டு மூதுரை ஆத்திச்சூடி நல்வழி படித்து அதன்படி ஒரு இம்மியளவு நடந்ததிருந்தாலும் உலகமே 'நல்லவன்' என்று கொண்டாடி இருக்கும். 'இளமையில் கல்' என்பதை அலட்சியப் படுத்தக்கூடாது. இதற்கு கலைஞரே உதாரணம்.
அவரை 'முத்தமிழ் காவலர்' என்றால் 'சங்கத்தமிழ் மூன்றும் தா' என்று விநாயகரிடம் கேட்டுப்பெற்ற ஔவையின் சொல்லை மதியாது போவாரோ? அவள் சித்தர். "நான்மறை, திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், எல்லாமே ஒரு வாசகம்தான் என்பதை உணர்" என்றாள். அதை இவர் பகுத்தறிவோடு ஒதுக்கினார். அவர்கள் போற்றிய கூத்தனையும் அரங்கனையும் பீரங்கி வைத்து தகர்ப்பேன் என்றார். 'கூடா நட்பும் , பேசிய சொல்லும், செய்த செயலும்' காலம் இருக்கும்வரை ஒலிக்கத்தான் செய்யும். இதில் வயதென்ன? சாதி என்ன? நாகரிகம் என்ன?
இது படிப்பினை... கலைஞருக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பொருந்தும்.

Image may contain: one or more people and people standing

வெள்ளி, 27 ஜூலை, 2018

சாமி குத்தமாகிடுமே!

இப்படிச் சொன்னது யார்? அக்காலத்து கழகக் கண்மணிகள். ரோஷத்துடன் சொன்ன பாவேந்தர் பாரதிதாசன் சொன்னபடி செய்யவில்லை. இவ்வசனம் பேசிய குழுவில் எஞ்சியுள்ள கலைஞராவது நிறைவேற்றுவாரா? சொன்னபடி செய்யாமல் போனால் அது சாமி குத்தமாகிடுமே!


வியாழன், 26 ஜூலை, 2018

நீரின்றி அமையாது...

மேட்டூர் திறந்தபின் பாய்ந்து வந்த நீர் இதுவரை எந்த அளவுக்கு உபயோகமாக இருந்தது? எத்தனை TMC பாசனத்திற்கு விடப்பட்டது, அணைக்கட்டில் மீதம் என்ன, எத்தனை TMC வீணாகக் கடலுக்குப் போனது? தெரியவில்லை! காவேரி கொள்ளிடம் மற்றும் கிளை நதிகள் எல்லாமே பெருக்கெடுத்து ஓடியதா? திருப்பிவிடப்பட்ட உபரி நீரால் பிற பகுதிகளின் ஏரிகள் கண்மாய்கள் தாங்கல் எல்லாமே நிரம்பி வருகிறதா? ஒரு வாரமாகியும் செய்தி ஏதும் இல்லையே! நதி எங்கே போகிறது?... கடலைத்தேடி.
"காவேரி உயிர்க்குதம்மா கரைப்புரண்டு ஓடுதம்மா
கொள்ளிடம் பாயுதம்மா கல்லணையும் நிரம்புதம்மா
வெள்ளப் பெருக்கெடுத்தும் ஏரிகம்மாய் நிறையலையே
திறந்துவிட்ட நீரும்தான் கரனை தாங்கல் போகலையே
சுழன்றுவந்தும் பயனில்லை ஏந்தல் குளமும் வீடாச்சே
தூரெடுத்து வெக்கலையே கடலைநோக்கி போயிடுச்சே
"
Image may contain: outdoor, nature and water

சனி, 21 ஜூலை, 2018

உங்க சாமி, எங்க சாமி

இன்று முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். அதில் ஒருவர் 'ஆரிய கடவுள்கள் தமிழ் கடவுள்களை அடித்து விரட்டிவிட்டன. இன்று யாரும் அதை வணங்குவதில்லை' என்று போட்டிருந்தார். இப்படி விஷயம் புரியாமல் பேசுவதற்குப்பதில் இவர் கிறிஸ்துவ மதத்தில் போய் நலமாகச் சேரலாம்.
நம்மூர் பக்கம் சுடலைசாமி, பாவாடைக்காரி, கார்த்தவராயன் வணங்குவார்கள். எதை வணங்கினும் அது ஆரிய சிவன்-சக்தி, கார்த்திகேயனையே போய்ச்சேரும் என்பதை இவரைப் போன்றோர் அறியமாட்டார்கள். ஒரு ஊரில் வணங்கப்படும் கிராம தேவதை மற்றும் எல்லை தெய்வங்களை பக்கத்து ஊர்க்காரர் வணங்குவாரா என்றால் இல்லை. ஆனால் வணங்கினாலும்/வணங்காவிட்டாலும் தவறில்லை.
எங்கள் குலதெய்வ கோயில்களில் நுழைவிலேயே ஊஞ்சல் போட்டு கருப்புசாமி, பேச்சியம்மன், மலையம்மன், போன்ற சன்னதிகளும் உண்டு. நாம் அதையும் வணங்குகிறோம். இதில் என்ன தவறு? மையமாக மகாமாரியம்மனும் சுற்றுச் சன்னதிகளில் பிள்ளையார், சிவன், முருகன் உண்டு. எல்லாமே ஈசனின் ஆக்கினையில் உருவானவை. இந்த விஸ்வத்தை இறைவன் என்ற பரம் பொருள்தான் இயக்குகிறான். கடவுளை, சிறு தெய்வங்களை சக்தியூட்டி அவை வெளிப்படுவதும் ஒடுங்குவதும் ஈசனுக்குள்தான். இதை அறியாமல் 'உங்க சாமி எங்க சாமி' என்று இவரைப்போல் பேசுவோர் இன்னும் உண்டு. திருத்த முடியாது! தமிழ் நேசமும் பிரிவினையும் வந்தாலும் வந்தது, ஊரே இரண்டு பட்டுப்போகும் போலிருக்கு!
Image may contain: 2 people

நித்திரை

'வீட்டிற்குள் இடம் மாற்றி படுத்தால் தூக்கமே வராது' என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு எங்கு எப்படித் தூங்கினாலும் 1 நிமிடத்தில் குறட்டை விடுவேன். தூங்குவது கிழக்கு-மேற்காக இருக்கட்டும்.
பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் நபர் ஏன் தன் வீட்டிற்குள்ளே இடம் மாறி படுத்தால் தூக்கம் வருவதில்லை? இதற்கு எதிர்மறை Geopathy கதிர்கள்தான் காரணம். பூமித்தட்டு அடியிலிருந்து மேற்புறம் நோக்கி அடிக்கும் தோஷ அலைகள்தான் இவை. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாதாளத்தில் ஓடும் நீர் நிலைகள், வெற்றிடம், பள்ளம், மூடிய கிணறு, துளைக்கிணறு, புதையுண்ட கெடுவஸ்துகள், உருகிய கனிமங்களின் கதிர்கள், என்று எவ்வளவோ சொல்லலாம். இந்த தீயவீச்சை ஸ்ப்டிகம், செம்பு ஆகியவை கட்டுப்படுத்தும். சிலர் வீட்டில் எப்போதுமே ஒரு நிலப் பகுதியில் செடிகள் வளராது, மரம் பட்டுபோகும், நாய் படுத்துத்தூங்காது, அடிக்கடி மின்சார பலபு பியுஸ் போகும், உட்கார்ந்து படித்தாலும் புத்தியில் பதியாது, நோய்வாய்ப்படுவது, இப்படி பல எதிர்மறைகள் உண்டு. இதைஅங்கு தேகமே காட்டிக் கொடுக்கும். அதற்கேற்ப அவ்விடத்தை சுத்தி செய்யவேண்டும்.
நமக்கு பழக்கமில்லாத இடத்திற்கு போனால் தூக்கமே வராது என்றால் உடல்நலம் பாதிக்கும். வெளியூருக்குப் போகும்போது அங்கே லாட்ஜில் ரூம் எடுத்து தங்குகிறோம். பலதரப்பட்ட நபர்கள் தங்கிவிட்டுப் போன அறை, தூய அலைகளால் நிரப்பப் பட்டிருக்குமா என்ன? எதிர்மறை வீச்சுதான் இருக்கும். இதையெல்லாம் முறியடித்து நாம் தூங்க வேண்டும். உடல் அசிதியாக இருந்தால் எப்படியும் தூக்கம் வந்திடும். ஆனால் மற்ற நேரத்தில் இந்த பொருந்த கதிர்கள் பாதிக்குமே!
வீட்டில் நீங்கள் தூங்கப்போகும் முன் தியானம் செய்துவிட்டுப் படுங்கள். பிரணாயாமம் செய்யுங்கள். நுரையீரலின் கொள்ளளவை முறைப்படுத்துங்கள். மாலையில் முகம் கைகால் சுத்தம்செய்து நெற்றிக்கு விபூதி தரித்ததும், கழுத்தில் ஸ்படிகம்/ ருத்திராட்சம் மாலையை அணிந்து வழிபாடு செய்யுங்கள். தீட்சை பெற்ற சிலர் தலையில் ருத்திராட்சம் மாலை அணிந்து கொண்டு ஜெபம் செய்வார்கள். இது தலையின் உள்ளே ரத்த ஓட்டத்தை சீராக்கி, மன அழுத்தத்தை குறைக்கும். இயற்கையாகவே ருத்திராட்சம் மின்காந்த சக்தி பெற்றது. இது மூளைக்கு தேவைகேற்ப சக்தியைப் பாய்ச்சி அதை புதுப்பிக்கிறது. உங்களுடைய தேக ஒளிவட்டத்தில் எதிர்மறையாக எதுவும் குறுக்கிடாமல், சகஸ்ரார சக்கரம் சக்தியூட்டப் படுவதால் அதிவேகத்தில் சொப்பன நிலைக்குபோக கண்களைப் பணிக்கும்.
இதை எங்கே உட்கார்ந்து செய்யவேண்டும்? தூங்கும் இடத்தில்தான். ஒரு கட்டத்தில் மூளை அசதிபோல் காட்டும், கண்களுக்கு நித்திரையை தூண்டும். அப்படியே கால்நீட்டி படுத்துத் தூங்குங்கள். மூன்று முறையாவது நித்திரை சுழற்சி சுற்றில் புரண்டு படுப்பீர்கள். சூரிய சந்திரனை மையமாக வைத்து இயங்கும் நம் மனோ கடிகாரம் விடியும்போது எழுப்பி விடும்.
No automatic alt text available.

வெள்ளி, 20 ஜூலை, 2018

மீன்பிடி சூத்திரம்

பேன்கொட்டை Coculus indicus தாவரத்தின் விதைகளை சேகரித்து தீயில் வறுத்த பின் அதை அம்மியில் அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிவிட்டபின் அந்த டிகாஷன் கரைசலை வடிகட்ட வேண்டும். இந்த மருந்தை நதி, குளம், ஏரி நீரில் சிறிதளவு கரைத்து விட்டால் அது வேகமாக வேலை செய்து மீன்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி விடும். மீன்கள் நீரை விட்டு எகிறிப் பாய்ந்து கரையோரம் வந்து தாமே விழுந்து விடும். மத்தியான வேளையில் மீன்கள் எங்கு அதிகம் உள்ளது என்று பார்த்து விட்டு இந்த மருந்தை கரைத்தால் நல்ல பலன் கிட்டும். இக்கரைசலால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எந்த ஆபத்துமில்லை என்கிறார் போகர்.
Image may contain: plant, ocean, water, outdoor, food and nature

காகித பாத்திரம்

கிமு4 ல் போகர் சீனாவில் பெரிய ஆலையை நிறுவி காகிதம் தயாரித்தார். அந்த சூத்திரத்தை சீனர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். பிற்காலத்தில் அதை கண்டுபிடித்ததாக யார் யார் பெயரோ வெளிவந்தது.
காகித பாத்திரத்தில் நன்றாக சமைக்கலாம் என்று போகர் கூறுகிறார். Paper கோப்பை/ கிண்ணம்/சட்டி எல்லாமே இப்போது கிடைக்கிறது. காய்கறி கடையில் கிடைக்கும் பிரண்டையை வாங்கி இலையை நீக்கி தண்டை மட்டும் துண்டுகளாக நறுக்கி மிக்சியில் நீர் விட்டு அரைத்து துவையலாக செய்து கொள்ளுங்கள். இதை கொஞ்சம் கொஞ்சமாக பேப்பர் கிண்ணத்தின் உள்ளேயும் வெளியேயும் பூசி காய விடுங்கள். இதுபோல் மூன்று முறை செய்தால் மூலிகை பூச்சு சற்று தடிமனாக சொரசொரப்பாக இருக்கும். இப்போது இதில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, பலகாரங்கள்கூட பொறித்து எடுக்கலாம். பிரண்டை அரைத்து உளுந்து அப்பள மாவில் கலந்து இடுவார்கள். ஆனால் இது எதற்கு? காகித பாத்திரம் தீ பற்றாமல் இருக்கவும், உண்ணும் பலகாரங்களால் வாய்வுத் தொல்லை வராமல் இருக்கவும் போகர் வகுத்த 2-in-1 யுக்தி.
டெய்ல் பீஸ்:- ஒரு அங்குலத்திற்கு நறுக்கிய இந்த பிரண்டை துண்டுகளை நன்றாக நீரில் அலசி விட்டு, அதை வாணலியில் வெறுமனே கருப்பாக வறுத்து எடுத்தால் வருவதே 'பிரண்டை உப்பு'.. நாட்டு மருந்து கடையில் விற்கும்
Image may contain: one or more people, plant and nature

வியாழன், 19 ஜூலை, 2018

நெளியும் நண்பன்!

இக்காலத்தில் அதிக செயற்கை உரம் போடுவதால் மண்ணில் இயற்கை சத்து இருப்பதில்லை. பஞ்சகவ்ய முறையை சிலர்தான் பின்பற்றி வருகிறார்கள். அதில் ஊக்கிகளாக பூவன் பழத்தையும் இளநீரையும் சேர்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு. வஸ்துகளை நொதிக்க வைக்கவும், அக்கரைசல் மண்ணின் அடியில் Nitrogen fixation ஏற்படுத்தக் கூடிய மண்புழுக்களை பெருக்கவும் உதவும்.
போகர் தன் பாடலில் நாக்குபூச்சியை உற்பத்தி செய்யும் எளியவழியைச் சொல்கிறார். செம்மண் பூமியில் ஒரு குழி தோண்டி அதில் ஈச்சம் பழத்தை வெல்லத்தோடு பிசைந்து வைக்கோலோடு கலந்து மண்போட்டு மூடிட வேண்டும். ஒரு இரவு முழுதும் விட்ட பின் சுமார் ஐந்து சாமம் கழித்துப்பார்த்தால் பூநாகங்கள் (மண் புழுக்கள்) அதை சூழ்ந்திருக்கும். இக்காலத்தில் செம்மண் பூமியை எங்கே தேடிச்செல்வது? வேறு வழியின்றி மக்கும் குப்பைகளை கம்போஸ்ட் உரமாக மாற்றி மண்புழு உற்பத்தி செய்கிறார்கள். மேலே சொன்ன முறையில் மறந்துபோயும் சாணம்/கோணி குழியின் அருகில் வைக்கவேண்டாம். மண்புழு போய் தேள் வந்துடும்... டும்டும்டும்.!
Image may contain: outdoor

ஆரை கீரை

இதன் பச்சை இலைகள் நித்தியகல்யாணி பூவின் வடிவில் இருக்கும். நீளமான ஒடிசலான தண்டில் நாலு-இலைகள் கூட்டம்தான் இருக்கும். வாய்க்கால் குளம் ஓரங்களில் இது வளரும். முன்பு எங்கள் வீட்டு கிணற்றடியில் நிறைய வளர்ந்திருந்தது. இதன் அடிப்பகுதியில் தலைமுடி நார் குப்பைகள் சுற்றி இருக்கும், பறிக்க பொறுமை தேவை. இந்த கீரையைப் பற்றி தெரியாததால் அதிகமாக யாரும் சமைத்து சாப்பிடுவதில்லை.
நம் உடலுக்கு வலுவூட்டும் எல்லா தாது சத்துகளும் இதில் உள்ளது. சும்மாவே பறித்து வாயில் போட்டு உண்ணலாம், வாய்புண் போகும். அதைவிட பருப்பு போட்ட கீரை கூட்டு பலன் தரும். தரையில் பக்கவாட்டில் கொடிபோல் வளர்ந்துகொண்டு போகும், இதன் வேர் அரை அங்குலம் ஆழம்கூட போகாது. அதனால் அடிபாகத்தில் கிள்ளி எடுத்தால் சீக்கிரமே வளரும் இயல்புடையது. மூன்று இலைகள் கொண்ட புளியாரை, ஒரே ஒரு இலை மட்டுமுள்ள வல்லாரை, இவை எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கீரைகள்தான்.

ஜெல்லி செய்வோம் வாங்க!

ஓட்டலில் ஐஸ்கிரீம் / தயிர் மட்கா மண்பானையில் கொடுப்பார்களே, அதுபோல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மாம்பழம் சீசன் என்பதால். ஒரு சிறிய மாம்பழம் எடுத்து அதன் சாற்றை இந்த மட்காவில் ஊற்றுங்கள். இதில் கட்டுக்கொடி (Coculus hirsutus) என்ற மூலிகை இலைகளை பறித்து கசக்கி இதனுள் சாற்றை விடுங்கள். பத்து நிமிடங்களில் இந்த மாம்பழ கூழ் ஜெல்லி தயார். கவிழ்த்தால் பொத்தென விழும். எந்த பழத்தின் சாற்றை வைத்தும் இவ்வாறு ஜாம்/ஜெல்லி செய்யலாம்.
சீசன் முடிந்தபின்னும் ஜெல்லி வேண்டுமென்றால் என்ன செய்வது? இதுபோன்ற மட்கா மண் பாண்டத்தினுள்ளே இந்த மாம்பழ சாற்றை கொஞ்சம் ஊற்றி உட்புறம் முழுதும் பரவுமாறு சுற்றிவிட்டு காய விடுங்கள். இதுபோல் இரண்டு முறை juice அப்பிடச் செய்யுங்கள். இப்போது உள்ளே சுவரில் பழக்கூழ் பூச்சுதான் உள்ளது. தேவையானபோது, இதில் சுத்தமான நீர் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையும் போட்டு இந்த இலையின் சாற்றையும் பிழிந்து வைத்து விடுங்கள். பத்து நிமிடங்களில் மாம்பழ ஜெல்லி தயார். பெயரில் உள்ளதுபோல் இலையின் சாற்றுக்கு நீரை கட்டிவைக்கக்கூடிய குணமுண்டு. சித்த வைத்தியத்தில் இலைகளைக் கொண்டு திடப் பொருளை பேதிக்கவும், நீர்த்ததை கட்டவும் முடியும்.

சீந்தில் சர்க்கரை

சித்தர் பாடல்களில் நிறைய காயகற்பங்கள் குடிநீர் சூரணம் முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் எளிதான ஒன்றான 'சீந்தில் சர்க்கரை' சொல்கிறேன். உங்கள் வீட்டு அருகாமையில் புதர்களிலும் மரங்களிலும் படர்ந்திருக்கும் கொடிதான் சீந்தில் கொடி. இதன் இலைகள் இதயம் போன்ற வடிவத்தில் இருக்கும். மஞ்சள் நிற சிறு பூக்களும், கொத்து கொத்தாக சிவப்பு நிற பழங்களை உடையது. பழங்கலை அழுத்தினால் கொழகொழவென இருக்கும்.

நீளமான இக்கொடியை இழுத்து உருவி, இதனுடைய முதிர்ந்த தண்டுகளை சுமார் 1 கிலோ அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 4 டம்பளர் நல்ல நீரை ஊற்றி கையால் பிசைந்து கிளறவும். பிறகு இன்னொரு பாத்திரத்தின் வாயில் வடிகட்டும் துணியால் மூடி அதில் இந்த கலக்கிய திரவ நீரை ஊற்றவும். இந்த பாத்திரத்தை சுமார் முக்கால் மணிநேரம் அசைக்காமல் வைத்திருந்தால், அதன் அடியில் வெண்மை மாவு போன்று தங்கியிருக்கும்.  (இஞ்சியை நீர்விட்டு அரைத்து வைத்தால் அடியில் சுண்ணாம்பு தங்குமே அதுபோல்தான்.)

இந்த வடிகட்டிய நீரை மேலோட்டமாக வடித்து மீண்டும் பழைய சக்கையுள்ள பாத்திரத்தில் ஊற்றி அதோடு சுத்தமான நீரை இரண்டு டம்பளர் ஊற்றி பிசைந்து கிளறவும். முன்பு அடியில் படிந்த மாவை தனியே ஓடு பீங்கான் கோப்பையில் ஊற்றி ஆற விடவும். மீண்டும் கலக்கிய திரவ நீரை வடிகட்டி ஊற்றி செய்யவும். இறுதியில் இந்த மாவையும் சேகரித்து அதோடு காய விடுங்கள். வெள்ளை மாவு போன்று வரும். இதுவே சீந்தில் சர்க்கரை.

இதை சுமார் அரை கிராம் எடுத்து தேனில் குழைத்து ஒருவேளை உண்டால், அசதி உடல்வலி வயிற்றுப்புண் அல்சர் பலகீனம் சுரம் போகும். இதன் தண்டு-இலை-பூ ஆகியவற்றை காயவைத்து இடித்து மெல்லிய துணியில் சலித்தால் சூரணம் தயார். இதை வெறும் வயிற்றில் தினம் அந்தி/சந்தி அரை கிராம் அளவு எடுத்து பனங்கற்கண்டு போட்ட பாலோடு குடித்தால் சகல நோய்களும் போகும். வெறும் சூரணத்தை குடிநீராக அருந்த நீரிழிவு நோய் கட்டுப்படும். உடலும் வலுப்பெறும். ஆர்வம் உள்ளோர் முயற்சி செய்யலாம்!

புதன், 18 ஜூலை, 2018

பொருள் விளங்கா அப்பம்

"சந்துரு! இன்னைக்கு நம்ம வீட்ல சிறுதானியம் போட்டு பலகாரம் புதுசா செய்தோம். டிவில செய்து காட்டினாங்க. சேம்பிள் பாரு" என்றார் நண்பரின் தாய். வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, அவல், அரிசி மாவு எல்லாம் அரைத்துப் போட்டு அப்பம் என்ற பெயரில் ஒன்றை நண்பர் வீட்டில் கொடுத்தார்கள். இதை குழிப் பணியாரம் சட்டியில் போட்டு நெய் ஊற்றி எடுத்தாராம். கன்னங்கரேல் என்று காட்சி தந்தது. சரி, கேழ்வரகு போட்டதால அந்த நிறம் என்று நினைத்தேன்.
அதை ஒரு துண்டு பிய்த்து வாயில் போட்டேன். கோணிப்பை வாசனை வீசியது. அது வேகவில்லை, உள்ளே கட்டி தட்டி இருந்தது. வெல்லம் மிகக் குறைவாக இருந்தது, இந்த திட மாவு எங்கிருந்து வேகும்? ஈரமின்றி வரண்ட இந்த மாவை எப்பவும்போல் வாணலியில் ஊற்றி பொறித்து எடுத்திருந்தால் முகத்தில் பட்டாசு வெடித்திருக்கும்.
"பயப்படாதே! அதிகமா நெய் விடலை. தாராளமா சாப்பிடு" என்றார். அதுதான் பிரச்சனை என்று நினைத்துக் கொண்டேன். அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஒரே ஒரு சிறு அப்பம் மட்டும் உண்டேன். "ஆன்ட்டி, ஒரு டம்பளர் வெந்நீர் மட்டும் குடுங்க போதும். வயிறு நிறைவா இருக்கு" என்றேன். என் நண்பர் "நிஜமாவே, நல்லா இருக்கா?" என்றார். "எப்பவும் சாப்பிடும் அப்பத்தைவிட இது ஒரு மாற்றா இருக்கும். ஆனால் இதை அடிக்கடி நம்ம சாப்பிட முடியாது heavyஆ இருக்கும்.. வயித்துக்கு ஒத்துக்காதே " என்றேன்.
அவர்கள் கஷ்டப்பட்டு உண்டதுபோக மீதியை மறுநாள் புறாவும் காக்கையும் நீரில் போட்டு ஊறவைத்து  நிதானமாகக் கொத்திச் சாப்பிடும் என்று நம்புவோம்.
Image may contain: food

ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஸ்ரீ சிவம்மா தாயி (எ) ராஜம்மாள்

1908 ஆம் ஆண்டு ஷிர்டி சாய்பாபா முதன்முதலில் ஒருவருக்கு காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். யாருக்கு? ராஜம்மா என்கிற 15 வயதான தமிழ் பெண்ணுக்கு. காதில் மந்திரம் உபதேசித்து, அதை இப்பெண் படித்து சரியாக உச்சரிக்க ஏதுவாக ஒரு தாளில் இம்மந்திரத்தை பென்சிலால் எழுதித் தந்தார். எந்த மொழியில்? தமிழில்!
உர்து, அராபி, மராத்தி மட்டுமே பேசும் பாபா அன்றுதான் தமிழும் பேசத்தெரியும் என்பதைக் காட்டினார். ராஜம்மாளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால், பாபா தமிழில் உபதேசித்துள்ளார். அதன்பின் யாருக்கும் காயத்ரி உபதேசித்ததில்லை. பிற்பாடு இவருக்கு 'சிவம்மா தாயி' என்று பாபாவே புதிய பெயர் சூட்டினார். துறவிகளுக்கு உண்டான பல இன்னல்களையும் சோதனைகளையும் இவர் சந்தித்தார். கணவர் இவரை விட்டுப் பிரிந்து போய் வேறொரு மணம் செய்துகொண்டார்.
தன் ஒரே மகனோடு பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். மகன் காவல் துறையில் அக்காலத்தில் பணிபுரிந்தது சாலை விபத்தில் மாண்டுபோனார். அதோடு சிவம்மா தாயிக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது. பெங்களூரின் புறநகர் பகுதியான மடிவளாவில் சுடுகாடு ஓரமாக ஒரு மரத்தடியில் தங்கி, யார் உணவு கொடுத்தாலும் வாங்கி உண்டு வந்தார். எப்போதும் தவத்தில் இருந்தார். அவர் நிலைக்கண்டு யாரோ ஒருவர் அப்பகுதியில் தன் கால் கிரவுண்ட் நிலத்தை இவர் பெயருக்கு எழுதிக் கொடுத்தார். முகம் தெரியாத யாரோ இவர் பெயரில் எழுதித்தர அவசியமில்லை. அதற்கு சாயிதான் காரணம். சக்தி குரூப்ஸின் பொள்ளாச்சி மகாலிங்கம் இந்த சிவம்மா தாயிக்கு தூரத்து உறவு என்று பிறகு தெரியவந்தது.
பக்தர்கள் தரும் காசைக்கொண்டு மடிவளாவில் குடில் அமைத்து பிற்பாடு அங்கேயே சாயி ஆலயத்தைக் கட்டினார். ஷிர்டி பாபா சமாதி ஆனபிறகும்கூட சூட்சும ரூபமாக இவருடன் தினமும் அந்த ஆலயத்தில் பேசினார். சாயி சிலைக்கு அடியில் பூமியில் ஒரு குழி தோண்டி, அங்கேயே அமர்ந்து தவம் இருக்கத் தொடங்கினாராம். நவம்பர் 1994 ஆம் ஆண்டு தன்னுடைய 105வது வயதில் சிவம்மா சமாதி ஆனார். அற்புத சாயி லீலைகளுக்கு முடிவில்லை!

திங்கள், 9 ஜூலை, 2018

எத்தனை மனிதர்கள்!

Image may contain: 2 people, text

சிவ வெண்பா மாலை

Image may contain: 2 peopleவடமொழி சிவனின் ரவிகலை வாசியென
திடமொழி உரைத்த சித்தனைத்தூற்றி - உமை
முகத்துத் தீந்தமிழே வாழ்கிறதெனப் பகரும்
யுகத்தினோர் சுமப்பர் பழி

சிவனின் வாசியாம் வடமொழி இறந்ததென 
எவனின் இகழுரை நிலைக்குமோ - அஃதவன்
மறுமை சொல்லொணா தீவினைத் தரும்
வறுமை யகலாப் பிணி  
மந்திரம் வழுவாமல் குரவர்கள் பேணினர்
தந்திரம் நினைத்தனர் பகுத்தறிவாளர் - கடும்
பாபங்கள் ஈட்டத் துணிந்த நாவினால்
சாபங்க ளேற்றார்வினை
எங்கெங்கு காணினும் நிந்தனை நொந்தனை
பங்கனை நித்தம் வசைப்பாடுவார் - பித்தம்
தெளிந்தால் நற்கதி பெறுவார் பெறார்
களிப்பில் மூழ்கியோர் கதி
வேதியரே பிரம்மம் காக்கும் பிராமணரே
வேதிக்குமே ஊழ்வினை பிம்பங்கள் - இறை
கோணாது மறையைக் காத்திட்டு நின்றீறேல்
பேணாமல் போகாது நெறி
*  *   *  *  *
சமஸ்கிருதமா? தமிழா? எது மூத்தமொழி என்று இன்றுவரை முட்டி மோதிக்கொள்ளும் தமிழ் நேசர்கள் நலனுக்காக இப்பதிவு. தமிழ் சித்தர்களின் நூல்கள் பலவற்றை ஆய்வுசெய்தேன். மூத்த சித்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தைத்தான் சொல்லியுள்ளனர். அதில் ஒரு சான்று:
சிவந்தானும் வடமொழியில் வாத மார்க்கம்
சிறப்பாக இருலட்சங் கிரந்தந் தன்னைக்
கவந்ததுமைந் தாம்வேத த்திற் சொன்னார்
கருணைபெற உமையவளும் தமிழாய்ச் செய்து
பவத்தானும் நந்திக்குச் சொன்ன போது
பார்த்தவரும் நந்திதன்வந் திக்குச் சொன்னார்
தவந்தானும் தன்வந்திரி அசுவ னிக்குத்
தகைபெறவே அசுவனியும் விசுவனிக்கு
சொன்னதொரு விசுவனியும் அகத்தி யர்க்குச்
...
சிவன் வடமொழியில் எல்லா சூத்திரங்களையும் உமையவளுக்குச் சொல்ல, அதை உமையாள் கருணையோடு அருந்தமிழில் நந்திக்குச் சொல்ல, நந்தி தன்வந்திரிக்கும், தன்வந்திரி அசுவனிக்கு, அசுவனி விசுவனிக்கு, விசுவனி அகத்தியர்க்கு, அகத்தியர் புலத்தியர்க்கு என இப்படியே சித்தமரபில் வைத்திய சூத்திரங்கள் வந்துள்ளது என்று இப்பாடல் சொல்கிறது. சிவனின்றி சக்தி இல்லை. இரு மொழிகளும் ஈசனின் இரு கண்கள். இப்பாடலில் வடமொழிக்கும் தமிழுக்கும் முக்கியத்துவ பேதம் உள்ளதா? சிவனுடைய வாசியின் இரு கலைகளாக உதித்த ஆதி மொழிகள்தான் இவை
தெய்வீக மொழிகளின் அடி-முடி காண தொல்லியல் துறையின் குப்பைமேட்டை கிளறக்கூடாது. சித்த ரிஷிகளும் சமயக் குரவர்களும் பல லட்ச பாடல்களில் உணர்த்தியதை நாம் ஆத்திரமின்றி அக்கறையுடன் செவிமடுத்துக் கேட்கவேண்டும். இரு மொழிகளையும் நிந்தனை செய்தால் அது ஈசனையே பழித்த பெரும்பாவம்!

சனி, 7 ஜூலை, 2018

சித்தநூல் கொடையாளர்கள்

இதற்குமுன் பழைய பதிவில் ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளேன். மேருவில் தான் படித்த பலகோடி வடமொழி/தமிழ் நூல்களில் ஒரு பங்கு கலியுக மனிதர்கள் கைக்குக் கிடைத்தால் அது ஈசனின் உபயம் என்றார் போகர். அப்படியே நூல்கள் இருந்தாலும் அது விதியாளியின் கைக்கு மட்டுமே சென்றடையும் என்கிறார்.
எப்போதோ எழுதிய நூல்களில் என்ன கடினமான மொழியும் எழுத்து வடிவமும் இருந்ததோ, அதை இக்காலத்திற்கேற்ப மாற்றி செப்பனிட்டு நூல்களைக் காத்துவைத்து தக்க நேரத்தில் மாண்பர்கள் பயனுற நூல்களை பொது நோக்கத்திற்காக கொடுப்பவர்கள் யார்? அவர்கள் சித்தர்களாகவோ, சித்த பிரதிநிதிகளாகவோ இருக்க வாய்ப்புண்டு. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் திடீர் திடீரென வைத்திய நூல்கள் வந்து சேர்கிறது. எல்லாமே ஆய்வு செய்து அச்சிடும் தரத்தில் நல்ல முறையில் உள்ளது.
நூலக கேட்டலாகில் இடம்பெறாத முதல்முறை வரும் அதிசய நூல்களும் உண்டு. சிவ சூட்சுமம் விளங்காமல் இருக்கவேண்டி, சில கட்டில் ஓலைகளில் சில சொற்கள் பகுதி சிதைந்து தூளாகி இருக்கும். ஆனால் பொருளில் பெரிதாக பாதிப்பு இல்லாமல் இருக்கும். சிலவற்றில் ஓலைகள் முன்பின் மாறி இருக்கும். பாடல்களின் அந்தம் ஆதி சொற்களை வைத்து ஓலைகளை வரிசைப் படுத்திவிடலாம்.
இவ்வாறு காலத்துக்கு தகுந்தபடி ஈசன் மின்னூல் ஸ்கேனிங் தரத்திற்கு நூல்களை அளிக்கிறான். பகுத்தறிவு பேசும் தமிழர்களுக்கு இதெல்லாம் திகில் விஷயமாகவே இருக்கும். ஆக, எந்த நூலை எப்போது சுற்றில் விடவேண்டும், எதை திடீரென சுற்றிலிருந்து மறைக்கவேண்டும் என்பதை அருளல், மறைத்தல் என்பதாகச் செய்து வருகிறான். இந்நேரம் நூல்கள் எப்படி இக்கால மொழி நடையில் வருகிறது என்ற ரகசியத்தை அறிந்திருப்பீர்கள். ஓம் நமசிவாய.

No automatic alt text available.

வெள்ளி, 6 ஜூலை, 2018

சிவா, வேதம் 'புது எடிஷன்' போடலியா?

Rig Vedic Period (2005 B.C. - 1500 B.C.)
Post Vedic Period (500 B.C. - 1100 A.D.)
Muslim Period (1100 A.D. - 1700 A.D.)
British Period (1700 A.D. - 1947 A.D.)
வேதங்கள் ஆதியிலிருந்தே உள்ளதை சரித்திர ஆய்வாளர்கள் மறந்து விடுவார்கள். ஏன்? சமய நூல்களில் சொல்லப்பட்ட உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் பூமியைத் தோண்டிப்பார்த்து தொல்லியல் சொல்லும் சாட்சியம் இருந்தாலே ஏற்கப்படும். அதுவரை பாரத தேசத்தில் எல்லாமே சிறப்பாக இயங்கியவை ஆங்கிலேயர்கள் வந்தபின் மாறியது. அவர்கள் எழுதுவதே நம் சரித்திரம். 'நாங்கள் சொல்லும் வருடத்திலிருந்து உங்களுடைய வேதகாலத்தை கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்' என்ற சொல்லியுள்ளான். அவன் சொன்னதே Stone/Iron/ Bronze Age காலங்கள். அவன் சொன்னபடியே இதுவரை நாமும் வரலாறு பாடங்கள் படித்து முடித்தோம். நம் தென்னகத்தில் தலைத்தூக்கிய பகுத்தறிவு /நாத்திக பேரலை, ஆங்கிலேயனுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
இன்றைக்கு கலியாண்டு 5119 முடிந்துள்ளது. கலியுகம் தொடங்கி ஆயிரம் வருடங்கள் கழித்தே வேத காலம் தொடங்கியது என்று வரலாறு பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். டிசம்பர் 31 - ஜனவரி 1 தேதிகளுக்கு இடையே ஏதுமில்லாத சூனிய தினம் இருக்கிறதா? இல்லை. அதுபோல்தான் முந்தய யுகத்திற்கும் கலியுகதிற்கும் தொடர்ச்சி வரும். மனித அவதாரமாக வந்த கடவுளும் குருகுலத்தில் வேதம் படித்தனர். 'வேதங்களில் நான் சாம வேதம்' என்கிறார் கிருஷ்ணர், 'வசிஷ்டர் இராமனுக்கு வேதம் கற்பித்தார்' என்று நாம் அறிவோம். இலங்கேஸ்வரன் இராவணன் 'சதுர்வேதி' என்பதும் தெரியும். ஆக, கடந்த யுகங்களிலும் வேதங்கள் இருந்துள்ளது. அவ்வளவு ஏன்? விஷ்ணுவின் முதலாம் மச்சவதாரமே வேதங்களைக் காக்க வந்த அவதாரம். இப்படி இருக்கும்போது, வேதகாலம் தொடங்கியே இன்றைக்கு வெறும் 4000 ஆண்டுகள்தான் ஆகிறதா? நம்முடைய தொன்மையை தனித்துவத்தோடு காட்டமுடியாமல் செய்தது யார்?
Image result for வேத வியாசர்அநேகமாக, உபநிஷத்து, சம்ஹிதை மற்றும் புராணங்களை இந்த ஆசாமிகள் வேதங்கள் என்று நினைத்துக்கொண்டு அப்படிச் சொல்லியிருக்கலாம். ஸ்ம்ருதிகளை யார் எழுதுவார்கள்? ஒவ்வொரு துவாபர யுகம் முடியும்முன் வேத வியாசர் தலைமையில் ரிஷிகளுக்கு நூல்களை தொகுக்கும் பணிகள் கொடுக்கப்படும். இதை யார் முடுக்கி விடுவது? சிவ பெருமான். சென்ற மகாயுகத்தில் வந்த கலியுகத்திலும் இதுபோல் தேதிகளை மாற்றிப் போட்டு குளறுபடிகள் நடந்திருக்குமா? இருக்கலாம். இவ்வாறு நடப்பது கால விதி. நூல் பாடத்திட்டத்தை செப்பனிட்டு சரிசெய்வது வேத வியாசரின் வேலை. இப்போதுள்ள உபநிஷத்து மற்றும் புராணங்கள் அடுத்த மகாயுக சுற்றில் (43 லட்ச வருடங்கள் கழித்து) வரும் துவாபர யுகத்தில் செப்பனிடப்படும். அப்போதும் ஒரு வேத வியாசர் வருவார்.
இத்தனை தொன்மையான பாரம்பரியம் கொண்ட நாம், வடமொழி தென்மொழி என்று அடித்துக் கொள்ள புறப்பட்ட காலம்முதல் எல்லாமே மாறிவிட்டது. கோடி யுகங்கள் வாழ்ந்து மறைகளைப் போற்றிய மூத்த தமிழ் சித்தர்களே கவலைப்படாத மொழி விஷயமானது ஏன் ஒரு நூற்றாண்டாக ஊதி பிரச்சனை ஆனது? சிவபெருமானுக்கும் validity date கொடுக்கும் காலத்தில் உள்ளோம். அதுவும் கலியுக லட்சணத்தில் ஒன்று.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

கறைபடிந்த கரமா?

அரசு வேலையில் சௌகரியமாக இருந்து ஊதியம் பெறுவதால், தனியாக கையூட்டு பெற உங்களுக்கு அவசியமிருக்காது. அதில் விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் துறையில் லஞ்சம்/ கிம்பளம் புரளும் தொகையில் வலுக்கட்டாயமாக ஒரு பங்கு உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். 'நான் நியாயவாதி, யோக்கியஸ்தன்.. வாங்க மாட்டேன்' என்று உங்களால் சொல்ல முடியாத நிலை. ஆனால் பாவப்பணத்தை பெற நிர்பந்திக்கப் படுவீர்கள்.
Image may contain: one or more peopleஅவ்வாறு உங்களுக்கு வரும் பணத்தை தனியே உங்கள் கணவர்/ மனைவி/பிள்ளை பெயரில் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு திறந்து அதில் போட்டு வாருங்கள். அதிலிருந்து ஒரு பைசாகூட அவசரத்திற்கோ சபலப்பட்டோ தொட்டுவிடாதீர்கள். அக்கணக்கில் வரும் வட்டி முதல்கொண்டு அதை எல்லாம் அவ்வப்போது சிவ ஆலயங்களுக்கு, உழவாரப் பணிகளுக்கு, ஏழைகளின் கல்விக்கு மருத்துவத்திற்கு நிதியுதவி செய்துவிடுங்கள். அப்படி செய்து அதன்மூலம் வரும் வருமானவரி விலக்கு 80G சான்றிதழை உங்கள் IT தாக்கலில் பயன்படுத்தி விடாதீர்கள். வங்கிக் கணக்கு திறப்பது விவகாரமான விஷயம் என்று நினைத்தால், அவ்வப்போது வரும் பணத்தை ஒரு ரூபாய் பாக்கியின்றி மேற்கண்ட வழியில் பைசல் செய்யுங்கள்.
காசு வாங்கியும் கறைபடாத கரத்தோடு அச்சமின்றி மனசாட்சிக்கு விரோதமின்றி உலா வரலாம். மேலே சொன்னபடி செய்யாமல் புறம்பாக நடந்தால் உங்கள் மகளின் மணவாழ்க்கை சீரழியும், கரு தங்காது, விதவை ஆகலாம், உடல்நலமே கெடும். உங்கள் மகன் தறுதலையாகி, குடித்து சீரழிந்து, குடும்பச் சொத்தை சூதாடி இழந்து, உங்கள் வம்சமே இல்லாது செய்வான். உங்களுக்கு ஆயுள் முடியும் முன் அத்தனை தொகையும் உங்கள் மருத்துவத்திற்கு செலவு செய்தும் பலன் தராது. கடைசி காலத்தில் பிராயச்சித்தம் செய்தால் எந்த பலனுமிருக்காது.
என்னோடு வாங்கிய இன்னொருவன் நன்றாகத்தான் இருக்கிறான், நான் ஏன் கொடை தரணும்? என்று கேட்கலாம். அவனுடைய கோள் சஞ்சாரம் அவனை தண்டிக்க சமயம் பார்த்து காத்திருக்கும். நேரடியாக அவனுக்கே அடி கிடைக்க வேண்டும் என்றில்லை, அவனை சார்ந்த ரத்த உறவுகளுக்கு தலையில் இடி இறங்கும். இவன் ஊனமாகி நிற்கதியாவான். காசு பணம் இருந்தும் அது அவனுக்கு உதவாது. இவன் கழுத்தை அறுத்து சொத்து-பணம் கொள்ளையடிக்க இன்னொருவன் வருவான். இதுதான் கீதாச்சாரம்! இப்படியே பாவத்தின் தொடர் ஓட்டம் நடக்கும்.
இதை நான் எதோ ஒப்புக்குக் கதை விடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். போகக்கூடாத அதர்ம வழியை பின்பற்றி சொகுசாக வாழ்ந்து வளர்ந்து ஒரு தலைமுறைக்குள் புல்பூண்டு சுவடின்றி என் கண்முன் அழிந்து போன ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்த்தேன், இதைப் பதிவிட்டேன்.

அழிவை நோக்கி

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் கவுத்திமலை, வேடியப்பன்மலை, கஞ்சமலை பகுதிகளில் medium-low கிரேட் Magnetite இரும்பு தாது கனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எல்லா மலைகளையும் சேர்த்து சுமார் 110 கோடி டன் கனிமங்கள் வரும். டிட்கோ-ஜிண்டால் கூட்டு புராஜக்ட்டில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் இரும்பு உருக்காலை வரும் திட்டத்திற்கு அனைத்து நிலங்களையும் 8-வழி சாலைக்காக கையகப்படுத்தும் திட்டம் வீரியத்துடன் போகிறது.
இந்த மலைகளில் குறிப்பாக கஞ்சமலை பற்றி போகர் என்ன சொல்லியுள்ளார்? அனுமதியுடன் தைரியமாகக் களவாட அதில் கைவைத்தால் என்னவாகும்? அஷ்டமச் சனியன் வந்து பீடிக்கும். யாரை? மன்னனை. அதனால் மக்களும் அவதியுறுவர். இரும்பைத் தங்கமாக்கும் ரசவாத மூலிகைகள் நிறைந்தமலைதான் கஞ்சம் (பொன்) நிறைந்த இம்மலை. அக்காலத்தில் சித்தர்கள் வேண்டிய அளவில் தங்கத்தை செய்து சிலை வடிக்க கோயில்களுக்கு அனுப்பினர். "பார்த்திட்டு விழிகொண்டு கஞ்சமலை சித்தர் பத்துயுகம் ஆருடச் சமாதியிலே நின்றார்."
இரும்பு ஏற்றுமதி செய்ய பெரிய கனரக வாகனங்கள் போக ரோடு நல்லா இருக்கணுமே? அதுக்குத்தான் போலிருக்கு. அந்த சித்தேஸ்வரனுக்கே வெளிச்சம்!
கண்ணெதிரே காலங்காலமாய் தங்கள் வயல் நிலங்களில் பயிரிட்டு ஜீவனம் நடத்தி வரும் மக்களை வாட்டி வதைப்பது நல்லதல்ல. புதிதாக வரவுள்ள இரும்பாலையின் தயாரிப்புகள் ஏற்றுமதியாக சிறப்பான 8 வழி பாதை அமைத்திட வேண்டி, உச்சக்கட்ட செயலாக விவசாய ஜீவாதாரம் அழிக்கப்படும் நிலை வந்துவிட்டது. பலகோடி ரூபாய் தருகிறோம், பலவந்தமாக விற்றாக வேண்டும் என்றாலும் பின்னாளில் அந்த நஷ்டயீடை பிடுங்கிக் கொள்ள வங்கியில் புதுவிதமாக உச்சவரம்பும் வருமானவரியும் வரலாம். யாம் அறியோம்!
ஆக, இயற்கை வளத்தை அழித்தே பொருளாதார முன்னேற்றம் வரவேண்டும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. பண்ணை நிலத்திலிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தும் படகாட்சியைப் பார்க்க மனம் கனக்கும். உயர்நிலையில் பொருளியல் பேசி, ஆன்மிகம் வளர்த்து, மக்களைக் காக்கிறோம் என்று சொல்லி கலியுகத்தில் அதர்மத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசின் தலைமையை சபிக்கத்தான் மனம் நினைக்கும்.
மக்களின் விளை நிலங்களும், சித்தர்களின் சமாதி மலைகளும் அழிவை நோக்கிச் செல்கிறது. மக்கள் யாரிடமும் புகார் செய்ய முடியாது. ஆனால் சித்தர்கள் அகத்தியரிடம் புகார் செய்வார்கள். குள்ளமுனி என்ன செய்து விடுவான் என்ற நினைப்பில் மத்திய/ மாநில அரசுகள் உள்ளதோ? அகத்தியர் என்ன செய்வார்? செவி மடுத்துக் கேளாமல் நிஷ்டூரியமாக செயல்படும் இவர்களை கிழித்துப் போடுவார்.
போகர் ஐந்தாம் காண்டத்தில் ஒரு பாடல் (பா:4213).
"முறையான சித்துமுனி ரிஷிகள்தாமும்
மூர்க்கமுடன் ஓடிவந்து அகஸ்தியர்முன்னே
குறையான சித்தர்முனி ரிஷிகள்தாமும்
குடியிருக்க எங்களுக்கு இடமில்லைதாமே
சாமான மலைகளெல்லாந் தங்கமானால்
தாரிணியில் ஒருவருக்கோர் மரிப்போருண்டோ
நாமான வாகவல்லோ கூறிவிட்டோம்
நாதாந்த சித்தொளிவைக் காப்பீர்தாமே
"


நில அளவு எல்லைக்கல் நடும் பணி நடக்கிறது. அரசை எதிர்த்துப் போராட முடியாத விவசாய மக்களின் நிலையைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. நம்பி வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசு. இங்கே உள்ள படம் ஆயிரம் உணர்வுகளைச் சொல்லும். எனக்கு சொந்தமாக ஒரு சதுரடி விளை நிலம்கூட இல்லை என்றாலும், நான் ஜீவிக்கும் நிலங்களே பறிபோவதாக ஆழ்மனதில் பாதிப்பின் வலியை உணர்கிறேன். இது கோபத்தின் கனலை கவிதையாக வெளிப்படுத்துகிறது. எப்போதும் ஒரு நடுநிலை பார்வையாளனாக இருக்கும் நான் இப்படியொரு அசாதாரணமான மனநிலையில் இருந்ததில்லை.
"அயம்தோண்டி வழிதேடி அழிக்கும் நினைப்பை
குயம்தோண்டி அடிபணிய சுருக்கும் வினைப்பை
பயம்தோண்டி மூடும்வழி நினைக்கும் மனப்பை
சுயம்தோண்டி பாராக்கால் வழியழியும் கருப்பை
."