About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

நீர் உயர நெல் உயரும்!

குலோத்துங்க சோழனின் முடிசூட்டும் நாளன்று அவனை ஔவை பிராட்டி வாழ்த்திப் பாடினாள். அப்பாடலை நாம் சிறுவயதிலேயே படித்துள்ளோம். 

"வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்"

வரப்பு உயர்ந்தால் நீர் உயரும். நீர் உயரத் தேங்கினால் நெல் உற்பத்தி எப்படி உயரும்? பயிர்கள் நீரில் நின்று அழுகிப் போய்விடுமே என்று பலர் நினைக்கலாம். வரப்பு என்பதை ஏரி/ குளம்/ வயல் கரைகள் என விளங்கும். நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்தால் விவசாய பாசனம் சிறப்புறப் பயிர் சாகுபடியும் உயரும் என்பது பொருளாம்.

அக்காலத்தில் வரப்பில் நீர் மட்டம் உயரவுயர நெற்பயிர்கள் மூழ்காமல் உயர வளரும் தன்மையைக் கொண்டிருந்தன. புயலைத் தாங்கியும் மணிகள் கொத்துக்கொத்தாய்த் தலை வணங்கி நிற்கச் சாகுபடியும் உயர்வாய் இருந்தது. பஞ்சம் பட்டினி இல்லாமல் குடிகளும் உயர்வாக வாழ்ந்தனர்.

காட்டுயானம், கருங்குறுவை, தூயமல்லி, தேங்காய்ப்பூ சம்பா ஆகியவை பாரம்பரிய நெல் ரகங்கள். நாம் கேள்விப்படாத பல ரகங்களின் நெல் விதைகளை ஆங்காங்கே விநியோகம் செய்யும் மையங்கள் இன்று உள்ளன. காலஞ்சென்ற நெல் ஜெயராமனே சுமார் 170 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்தார்.

இக்காலத்தில் பயிரிடும் குட்டை ரக நெற்பயிர் பற்றி ஔவை தன் பாடலில் சொல்லவில்லை. அன்று மாதம் மும்மாரி பொழிந்தது, வருடம் முப்போகம் நடந்தது. ஆனால் இன்று அறுவடை என்றால் தை மாதம் மட்டும்தான் என்று நினைக்கும் அளவில் ஒரு போகமாகி விட்டது. இன்று வரப்பில் ஒரு பருவ மழைக்கே அதிக நீர் தங்கினால் பயிர் அழுகிப்போகும் நிலை இருப்பதுபோல் அன்று எதுவுமில்லை. யானையை மறைக்கும் அளவில் எட்டடி பத்தடி வரை உயரம் வளரும் ரகங்களாகும். பாடல் மூலம் ஔவை நமக்கு விவசாயப் பாடம் நடத்திவிட்டாள்! 👍


-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக