About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

அபச்சாரம்! 😂

திரு.சாலமன் பாப்பையா, திரு. சிம்சன் ராஜா (எ) பட்டிமன்றம் ராஜா, ஆகியோர் எதைப் பேசினாலும் இனி அது வம்பாகத் திரித்து விடப்படும். 



விருந்தோம்பலில் செட்டிநாட்டு ஸ்பெஷல் சமைத்துப்போட்டு ருசியாகவே இருந்தாலும் "செட்டிநாடா?" என்று இவர்கள் வாய் திறந்து கேட்கக்கூடாது. செட்டியார் என்று புரிந்து கொள்ளப்படும்.

உங்களில் "முதலில் யார் வந்தது?" என்று தப்பித் தவறியும் கேட்கக்கூடாது. முதலியார் என்று காதில் விழும்.

வெளிநாட்டில் செட்டில் ஆகியும்கூட உங்க "பிள்ளை சைவம்" என்பது நல்ல விஷயம் என்று பாராட்டினால் அது குற்றம். ஓஹோ.. சைவப்பிள்ளைனு சூசகமாக சொல்கிறார்.

இத்தனை காலம் பட்டாளத்துல இருந்ததுக்கு 'நாயக்'ரா ஆனதே பெரிய விஷயம் என்று பேசக்கூடாது. ஐய்யோ... கிண்டல் செய்கிற அளவுக்கு நாயக்கர் சாதி கேவலமா?

காலம் போகிற போக்கில் எல்லாமே தப்பும் தவறுமாகத்தான் பார்க்கப்படும். வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்றால் என்ன சொல்ல?

அப்படியே 'என்ன சாதி' என்று கேட்டால்தான் என்ன? ஒரு தவறுமில்லை! ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தொல் பாரம்பரியம் உண்டு. அவர்களிடம் நாம் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்பம்சம் இருக்கும். சாதியைப் பார்த்துத்தான் இவங்கெல்லாம் பழகுவாங்க போலிருக்கு என்று நம்முடைய சமுதாயத்தில் எப்போதுமே ஒரு பொதுவான கருத்து உண்டு. அவரவர் தனிப்பட்ட கடந்தகால அனுபவத்தைப் பொறுத்தே கேள்விகளின் நோக்கமும் புரிந்து கொள்வதும்  நிலைக்கும். கேட்டாலே குற்றம் என்றால் அது காணும் விகல்பமான பார்வையில்தான் உள்ளது..

-எஸ்.சந்திரசேகர்

புதன், 11 பிப்ரவரி, 2026

வினையில் பங்கு கொள்வோம்!

 திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இந்த மாதம் வெளிவருகிறது. வரவுள்ள தேர்தலில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளன என்பதைத் தேடிப் பார்த்தேன். அதில் பல கட்சிகளின் பெயர்களை இதுவரை நான் எங்கும் கேள்விப்பட்டதே இல்லை. 🥺 ஓ... இப்படியெல்லாம்கூட கட்சி இருக்கா என்று நினைத்துக்கொண்டேன்.

வேட்பாளர்களாக நிற்பது சுலபம். ஆனால் வாக்காளர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். நமக்கு விருப்பமான ஒரு கட்சியில் நிற்கும் யாரோ ஒரு புதுமுக வேட்பாளர் யோக்கிய சிகாமணியா இல்லையா என எதுவுமே தெரியாது. அதே சமயம் நாமறிந்த சுமாரான நேர்மை நடத்தையை உடைய வேட்பாளர் விதி வசத்தால் திருட்டுக் கூட்டணி கட்சியில் நின்றால் என்ன செய்ய? நமக்குத்தான் திண்டாட்டம்! இந்த லட்சணத்தில் ஒரு குடும்பத்தில் இத்தனை பேர் வாக்குகளுக்கு இவ்வளவு பணம் என்று கொடுத்தால், அவன் கர்மாவைத் துணிந்து வாங்கிக்கொள்வது போலாகும்.

அயோக்கியக் கட்சித்தலைமை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றால் அவனுடைய ஆட்சிக்காலத்தில் நடக்கும் எல்லா கொலை/ கொள்ளை/அதர்மச்செயல்களில் நமக்கும் பங்குண்டு. வென்று அதர்மங்கள் புரிந்திட முழு ஆதரவு தந்தால் அந்தக் குற்றங்களில் 0.1% அளவேனும் நம்முடைய ஊழ்வினைக் கணக்கில் வந்து சேரும். ஆம், இதைப்பற்றி ஆழமாக யாரும் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சத்தியமான உண்மை!சித்தர் பிரான் உரைக்கும் பாவப்பட்டியலில் இதுவும் உண்டு. 

வாக்குரிமை நம்முடைய ஜனநாயகக் கடமை என்பது உண்மைதான். ஆனால் அது தீட்டிய கத்தியாக உள்ளதே! அட ஆண்டவா, இது என்ன சோதனை?

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 9 பிப்ரவரி, 2026

Generation Z

 முந்தைய தலைமுறையினர் பெற்றிருந்த மதி நுட்பமும் மூளைத்திறனும் இக்காலத் தலைமுறையினர்க்கு இல்லை என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். ஆனால் இந்த நிலை உலகெங்கும் உள்ளது என்பதுதான் கவலைக்குரிய செய்தி.


நவீனகால முன்னேற்றமும் பாரம்பரியமான குணாதிசயங்கள் மறைந்து போவதும் இதன் காரணிகளாக விளைவுகளாக உள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்க்கை முறை மாறிப்போனது, புதிய நோய்கள் மருந்துகள் உலா வரத்தொடங்கியது, பல நூறு ஆண்டுகளாக இருந்த அந்தந்த வம்ச பாரம்பரியம் கற்பிக்கப்படாமலே போனது, வெவ்வேறு மதங்களில் சாதிகளில் கலப்பு மணங்கள் சர்வசாதாரணமாகப் போனது, வேற்று மரபணுக்கள் வம்சத்தில் நுழைந்து தொல் அறிவுத்திறனை மந்தமாக்கியது,  மனக்கணக்கு என்ற சூத்திரம் தொலைந்தது, தொட்டதற்கெல்லாம் கணினி மொபைல் AI எப்போது வந்ததோ, எல்லா பழக்கங்களும் பாழாய்ப் போனது. 

முன்பெல்லாம் கல்லூரி முடிக்கும்போதுதான் நாங்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டோம். விநாடி வினா, குறுக்கெழுத்து, கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் இருந்தன. இயற்பியல் சூத்திரங்களைப் போட்டுப் பார்க்க Logarithm table மட்டும்தான் முதுகலைவரை பயன்படுத்த எங்கள் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தினர். அதை வைத்துத்தான் நாங்கள் கால்குலேஷன் போட்டோம் என்பதை நிரூபிப்பதற்காக விடைத்தாளின் ஓரத்தில் கோடு போட்டு கணக்கு வழிகளை எழுதியிருக்க வேண்டும்.

நாம் கற்றுத்தேர்ந்த அறிவுப்புலம் வெறும் 20% என்றால் Gen Z தலைமுறையினர் திறன் இன்னும் தேய்ந்து போயிருக்கும். எங்கோ விதிவிலக்காகச் சிலர் மட்டும் பிரகாசமாய் வருகின்றனர். "அடடே, இந்தக்காலத்து குழந்தைகள் எல்லாம் என்ன சூட்டிகையா இருக்கு!" என்று எதையோ பார்த்து மெச்சி ஏமாந்து போகின்றனர்.

ஒரு முறை, ஐன்ஸ்டீனைச் சந்தித்த நடிகை மர்லின் மன்றோ, "நாம் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என் அழகோடும் உங்கள் அறிவோடும் பிறக்கும்" என்றாராம். அதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன், " உங்கள் அறிவோடும் என் அழகோடும் பிறந்துவிட்டால் என்ன செய்வது?" என்று நையாண்டி செய்தாராம்.

-எஸ்.சந்திரசேகர்