About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 25 மார்ச், 2022

சுந்தரம்போல் மதிப்பிழந்து மறந்து!

 'சமசுகிருத சொற்கள் எங்கேனும் தமிழில் புகுந்தாலோ அதை உரையாடலில் கையாள நேர்ந்தாலோ என் நெஞ்சம் புண்படும். நல்ல தமிழ் சொற்களுக்கான செயலிதான் உதவும்' என்று தமிழ் கவிஞர் ஒருவர் நாளிதழ் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

புண்படுத்தும் அளவிற்குப் படைப்பால் சமசுகிருதம் கூர்மையான மொழி என்று அவர் சொல்வதாகப் பாவிக்கவேண்டும். உயிரை, நெஞ்சத்தை அசைத்துப் பார்க்க வலியது என்றால் அது இறைமொழியே! சிவனின் சூலாயுதமா சிவனடியார்களின் நெஞ்சத்தைப் புண்படுத்தும்? சிவனின் டமரு ஒலியா அச்சத்தைத் தரும்? ஜிலேபி, சோன்பாப்டி முதல் சல்வார் கமீஸ், காஜாபீடி வரை தூய தமிழில் சொற்களை உருவாக்க எந்த அவசியமும் இல்லை. அது பொழுது போகாத வீண் வேலை! 😂

தமிழ் மீதான காதலால் மொழியைப் போற்றி உயர்த்தி ஏற்றிப்பேசும்போது தன்னை அறியாமலே உணர்வுபூர்வமாக எழும் ஆவேசச் சொற்கள் ஒருபோதும் சிவ நிந்தனையாய் மாறிவிடக்கூடாது. இதில் மிகுந்த கவனம் தேவை! ஆரிய சிவன் வழக்கழிந்து ஒழிந்தான் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்ன மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, சிவ நிந்தனை என்ற மாபெரும் பிழையைச் செய்தார். 🕉️ பட்டிமன்றத்தில், சொற்பொழிவில், உரையாடலில் அன்றாடம் கம்பனும் பாரதியும் பேசப்படும் அளவுக்குக்கூட இவரை ஒரு பொருட்டாய் எவரும் மதித்ததில்லை. அதன் பயனாகத் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் வெட்டப்பட்டுச் சுருங்கிப் படாதபாடு படுகிறது.

தேவாரத் திருமுறைகள் தந்த குரவர்கள் சமசுகிருத ஒலியைக் குற்றமென எங்கும் கருதாதபோது, நாம் ஏன் அதைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டும்? பரந்துபட்ட மொழி வீச்சு உள்ள நம் சமுதாயத்தில் ஒன்றிரண்டு கலப்பு இக்காலத்துப் பேச்சு வழக்கில் வந்தால் ஒரு பாதகமுமில்லை. அதனால் குடியா முழுகிவிடும்?

'மெசின்ல பணம் எடுத்துகினு நைட்டுக்கு பஸ் புடிச்சி ஊர் போய் சேர்ந்ததும் நாஷ்டா துன்னுட்டு, சுருக்க வேலைய முடிச்சுகினு பொழுதோட வந்டேன். பேரன் பகிட்டி பிரியாணி வாங்கி குடுத்தான்' என்று எங்கள் வீட்டு வேலைக்காரம்மா பேசியதை நினைத்துப் பார்த்தேன். இந்த வகையான உரையாடலும் மொழிதான்! இதற்கென சங்கத்தைக்கூட்டி நக்கீரரா வந்து ஒப்புதல் தரமுடியும்? 😂

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக