About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

"கர்மாவை வாங்கிக்கொள்ளும் தியாகி!"

போகப்பெண், வேசி, தாசி, விபச்சாரி, பொதுமகள் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் ஒரு விலைமாது, உண்மையில் போகத்தைத் தருவாளா, ஞானத்தைத் தருவாளா, ரோகத்தைத் தருவாளா, என்பது அவளுக்கே தெரியாது. ஒரு பெண் இங்ஙனம் ஆவதற்கு ஆண்களின் காம இச்சையே காரணம். அதற்கு அவனுடைய கிரக நிலைகளும் அலைபாயும் மனமும்தான் காரணம். அதைப்போல் ஒருவள் வேசியாவதற்கும் அவள் ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கவேண்டும். 

பொதுமகளிடம் ஒருவன் செல்கிறான் என்றால் அவன் உடல் ரீதியாகக் கூடி அவளுடன் ஈருயிர் ஓருடலாக ஐக்கியப் படுகிறான். எப்போது இந்தத் தீட்டு நிகழுகிறதோ, அப்போதே அவளுடைய பிராரப்த கர்மவினைகள் இவனுக்குச் சரிபாதியாகப் பகிரப்பட்டு இவனை அடைகிறது. Better half என்பது மேலோட்டமாகப் பொருள் தருவதாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த மெய்ப்பொருள் இதுவே. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி இருந்தாலும், அலைபாயும் மனங்களுக்கு அது விதியாகாது என்பது சிலப்பதிகாரம் முதலே நாம் அறிவோம். (இதைப் படித்ததும் ‘தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை’ என்று கம்பனைப் பற்றிய ஒரு கதை உண்டே என்று நினைக்கக் கூடாது. அது எதிராளிகளின் சூழ்ச்சியால் பரப்பட்ட அவதூறு. அதற்கே அவர் படாதபாடுபட்டார். காலசர்ப்ப தோஷம் பீடித்த காலத்தில் அவர் இயற்றிய இராமகாவியத்தை அரங்கேற்றப் பலகாலம் கஷ்டப்பட்டார்.) 

மாதவியிடம் போகாதவரை கோவலன் உருப்படியாகவே இல்லறம் நடத்தினான். ஆனால் அங்கே போகத் தொடங்கியதும் இவனுக்குச் சோதனைகளும் ஏழரையும் பிடரியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தது. மாதவி ஏன் இவனுடைய வாழ்க்கையில் வந்தாள் என்பதற்கு இவர்களுடைய முன்ஜென்ம பந்தமே காரணம். கலிங்க தேசத்தில் கண்ணகி-கோவலன்-மாதவி ஆகியோராது முற்பிறப்பு ரகசியங்களை அறிந்தோர் பாண்டிய நாட்டில் நடந்ததை ஆச்சரியமாய்ப் பார்க்கமாட்டார்கள்.

ஆக, அனுதினமும் பாவக்கடலில் விழுந்து ஜீவனம் நடத்தும் ஒருவளுடைய பிராரப்த கர்மாவை எப்பாடுபட்டாவது பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள விழைபவன் உண்மையில் தியாகியே! நாய், பல பாத்திரங்களில் வாய்வைத்துக் கொஞ்சம் கொஞ்சம் குடிப்பதுபோல் இவனும் முகம் தெரியாத வேசிகளின் தீய கர்மாவை வாங்கிக்கொள்கிறான். விட்டகுறையின்றி இவனால் அவள் புனிதமாகி விடப்போவதும் இல்லை! இன்னும் சொல்லப்போனால் இது உலகத்திலேயே பழமையான தொழில் என்று தொல்காப்பியமே சொல்கிறது.

அரண்மனை அந்தப்புரத்தில் எண்ணற்ற பெண்களுக்கு எந்த வேலையும் தராமல் சோறுபோட்டு, தங்க இடமும் தந்து, அவர்களைத் தண்டமாய்ப் பராமரித்துப் போஷித்த வரலாற்றை நினைத்தால் ஐயோ பாவம் என்று தோன்றும். பட்டத்தரசி நீங்கலாக அந்தக் கூட்டத்தில் எவள் ஒருத்தி மன்னனுக்குப் போகத்தை, ஞானத்தை, வெற்றியை, புண்ணியத்தைத் தேடித்தருவாள் என்பது அவனுக்கே தெரியாது. அதுபோல் அவளுடைய எதிர்மறை மற்றும் கர்ம-ரோக-ருண பண்புகள் இவனுக்கு வந்து அதனால் இவனும் இவனுடைய சாம்ராஜியமும் சுவடின்றிப் போகுமா என்பதும் தெரியாது

‘வேசியிடம் சென்ற தறுதலைக்கு செருப்படி’ என்ற சித்த மருத்துவப் பழமொழி சொலவடையாகப் பேசப்படுவதுண்டு. செருப்படி என்பது மூலிகையைக் குறிக்கும். இந்த மாயை இச்சையில் விழுந்து அதுவே மோட்சம் தரும் சொர்க்கம் என நம்பிக்கொண்டு மாண்டவர்கள் அதிகம் என்கிறார் போகர். கலியுகம் 5000-ற்குப்பிறகு ஆண்களின் எண்ணிக்கையும், பெண்களின் நிலையும், ஆணைப் பெற்ற தாய்க்கு நேரும் கதியும் பற்றி கோரக்கர் அன்றே சந்திரரேகையில் உரைத்தார். கலியுகத்தில் எல்லோருமே அருணகிரியாராக உயர் நிலைக்கு வந்திட முடியுமா? அதுவும் வினைப்பயனே!

-எஸ்.சந்திரசேகர்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக