About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சித்தாடலை விமர்சிப்போர் கவனத்திற்கு!

நீண்ட இடைவெளிக்குப்பிறகு சித்தர்கள் பற்றி இங்கே பதிவிடுகிறேன். ‘சொர்ண மேரு’ என்ற என் பழைய பதிவைப் படித்த சிலர், போகர் சொல்லிய சங்கதியின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், அது பொய், அது சூரிய ஒளியால் வந்த நிறம், இருளில் மலை மின்னும் கதையைக் கேள்விப்பட்டதில்லை, பொய் சொல்ல அளவேயில்லையா என்ற ரீதியில் விமர்சனங்களைப் பார்த்தேன். நான் இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை.

சித்த புருஷர்களின் அஷ்ட சித்திகள்பற்றி பாம்பாட்டி சித்தரே நீண்ட விளக்கத்தைத் தந்துள்ளார். சித்தர்கள் எப்படிப்பட்டவர்கள், பெற்றுள்ள சக்திகள் என்ன, இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் என்ன, போன்ற விவரங்களைப் பாடல்களில் உரைத்துள்ளார். அதை இங்கே பார்ப்போம்!

“பெரிய தூணையே சிறு துரும்பாகவும், சிறியதைப் பெரியதாகவும் தோன்றச் செய்வோம்; ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவோம். மலைகளையே பந்தாக உருட்டி வீசுவோம், சப்த சாகரங்களையே குடித்து ஏப்பம் விடுவோம், அளவில்லாத மணலையே அளந்திடுவோம். மண்டலத்தையே உள்ளங்கையில் மறைத்து விடுவோம், வானத்தை வில்லாக வளைப்போம், சீடர்களுக்கு அஷ்டகர்ம ரகசியமும் சொல்லித் தருவோம்.

தகிக்கும் அக்னியில் மூழ்கிக்குளித்து இயல்பாய் எழுவோம், நீருக்குள் இருந்து மூச்சை அடக்கி வாழ்வோம், பாயும் புலியையும் தாக்கி வசியப்படுத்துவோம். மூவுலகத்தையும் பொன்னாய் மாற்றுவோம், சுடும் செங்கதிரைக் குளிராக்கிப் பாய்ச்சுவோம், இவ்வுலகே இல்லாமல் நாங்கள் மறைத்து மாற்றிடுவோம்.

வேதியன் செய்த சிருஷ்டியைப்போலவே எல்லாம் படைப்போம், அவனுக்குச் சமமாகத் திகழ்ந்து ஐந்தொழில் புரிந்து அவனாகவே வாழ்வோம். ஆயகலைகள் அனைத்தும் அறிவோம், அதற்கும் மேலான அழிவற்ற நிலையையும் அறிவோம், பற்றற்ற மனமுடன் வாழவும் செய்வோம்.

வேங்கை யானை யாழி சிங்கம் முதலானதைக் கட்டுப்படுத்தி ஏவி விடுவோம், அந்தக் கடவுளையே எங்களுடன் விளையாடச் செய்வோம், ஆதிசேஷன் வாசுகி பத்மன் தக்ஷன் அனந்தன் குளிகன் கார்கோடகன் சங்கபாலன் ஆகிய நாகங்களையே ஆட்டிப்படைப்போம். அஷ்டதிக்குகளில் யந்திர சக்கரங்களை எழுதி நாட்டி, அஷ்ட நாகங்களையே கட்டுவோம். இவை கக்கும் விஷத்தை எடுத்துப் பருகுவோம்” என அதிசயக்கும் வகையில் சித்தர்களின் சக்திகளை விளக்கி இவை அளவிடமுடியாதது அளப்பரியது என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

ஏழுகடலும் வற்றிடக் குடித்த அகத்தியர், மலைகளைப் பெயர்த்துப் போட்ட நந்தீசர், பரமணு ரகசியங்களை விளக்கிய திருமூலர், அண்டங்களைச் சுற்றிவந்த காலங்கி, ஆக்கங்கள் தந்த போகர், பொன்னைச் செம்புக்குள் மறைத்த கருவூரார், விஞ்சை மந்திரத்தால் வேங்கையை வாகனமாக்கிக்கொண்ட புலிப்பாணி, தென்காசியில் மலைக்குப் பச்சிலை அரைத்துப் பூசி துருத்தி கொண்டு ஊதிய தேரையர், நாக விஷத்தை அருந்திய மருதமலை பாம்பாட்டி, பனைமர உயரமாகி மீண்டும் சுருங்கிய கம்பளிச்சித்தர், பல்வேறு சித்துகள் ஆடிய மச்சமுனி கோரக்கர் கொங்கணர், நவகண்டர், என பலரைச் சொல்லலாம். 

கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சித்தர்களும் அப்படியே! உள்ளங்கையில் ரசமணி கட்டிய ஒளிதேகம் பெற்ற வள்ளலார், வெட்டப்பட்ட கரத்தைப் பொருத்திக்கொண்ட சதாசிவ பிரம்மேந்திரர், சமாதிக்கு உள்ளேயும் வெளியேயும் சஞ்சரிக்கும் பாம்பன் சுவாமிகள், எளிய பக்தனின் மறுபிறவிகளை ரத்து செய்து முக்தி தந்த காஞ்சி பரமாச்சாரியார், என பல உதாரணங்களைச் சொல்லலாம். தற்போது தட்டச்சு செய்யும்போது இவ்வளவுதான் என் நினைவுக்கு வந்தது. 

ஆகவே தூண்டுதலின் பேரில் சித்தர்களை/ மகான்களைத் தவறாக விமர்சித்துப் பாவக்கடலில் விழுந்திட வேண்டாம். உங்களுக்குப் பிறக்கும் வாரிசு அடிமைகள் நீங்கள் சேர்த்து வைத்துள்ள சாபத்தையும் பாவத்தையும் சுமக்க வேண்டும். சாமானியனின் புரிதலுக்கும் கற்பனைக்கும் இவை ஆட்படாது. சித்த புருஷர்களைக் கொடிய சொற்களால் தூற்றி இகழ்வோர் செய்யட்டும், அக்கருத்திற்கு நீங்கள் செவி சாய்த்து ஆமோதிக்க வேண்டாம். மீண்டும் இது ஓர் எச்சரிக்கை!

- எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக