About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 27 மார்ச், 2019

காக்கைக் கரையும்

மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் பொருளை மட்டும் ஓடியோடி உழைத்துச் சம்பாதிப்பது கிடையாது, தலைமுறைகளுக்கான பாவங்களையும் சேர்த்துத்தான். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் வடக்கு/வடகிழக்குப் பகுதி போர்க் களத்தில் இயங்கிய தபால் நிலையத்தில் (Advance Base Army Post office) அதன் தலைமை அதிகாரியாக எங்கள் பக்கத்து கிராமத்து ஆசாமி ஒருவர் பணி செய்தார். அங்கு மாண்டுபோகும் போர் வீரர்களின் உடைமையில் உள்ள பணத்தை சேகரித்து எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது எங்கள் ஊருக்கு மணிஆர்டர் அனுப்புவார். மூன்று ஆண்டுகள் இதுபோல் ஒருவருக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.
யாருக்கு? ஆசிரியராகப் பணியில் இருந்த என்னுடைய பாட்டனாருக்கு. ஊரில் வேறு யோகியஸ்தன் இல்லை என்று அந்த ஆசாமி நினைத்ததால் இவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். ‘வெள்ளை காக்கை’ வருகிறது என்று தபால் கார்டு போடுவாரம். இறந்தவனின் ஜோபியில் எடுத்த பணம்தான் மணியார்டராக வருகிறது என்பது என் தாத்தாவுக்குத் தெரியும். ‘பெரியவர் பாவச்செயல் செய்கிறார் என்று தெரிந்தும், தன்னை நம்பி அனுப்பிய காசை அணா குறையாமல் கணக்கு வைத்து போர் முடிந்து விடுப்பில் அவர் ஊருக்கு வந்ததும், மொத்தமாக ஒப்படைத்து விட்டார்.
‘தம்பி, நீ மகா யோக்கியன். தேதி வாரியா கணக்கு வைத்து 1270ரூ 25அணா பணத்தை காபந்து பண்ணி கொடுத்திருக்கே. இந்தாடா உனக்கு ஒரு பத்து ரூபாய் வெகுமதி’ என்று சொல்லி என் தாத்தாவுக்குக் கொடுத்தராம். ‘அண்ணே... இந்த காக்காய் கம்பீரமா உங்ககிட்டேயே இருக்கட்டும். அதுதான் உங்க குடும்பத்துக்கு அழகு’ என்று பொடி வைத்துப்பேசி பணத்தை நிராகரித்தாராம்.
ஓய்வுபெற்ற தபால் அதிகாரி பிற்பாடு ஊருக்கு வந்து சேர்ந்ததும் சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, மகோதரம், எல்லாமே ரவுண்டு கட்டி தாக்க 6௦களில் போய்ச்சேர்ந்தார். அவருடைய மனைவிக்கு தீடீரென சித்தபிரம்மைப் பிடிக்க அந்த கிழவி 8௦களில் போனார். அவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அந்த மகன் இருபது ஆண்டுகளுக்கு முன் புற்று நோயில் மாண்டுபோக, கடந்த பத்து ஆண்டுகளில் இளைய மகள்களின் கணவர்கள் மாண்டு போனார்கள். அக்குடும்பத்து பேரக் குழந்தைகளுக்கு நடந்தவை எல்லாமே வேறு மதம்/ இனம் கலப்பு மணம்தான்.
அவருடைய மூத்த மகளுக்கு இப்போது அதிக வயதாகி விட்டது. அவரும் அவர் கணவரும் நல்ல நேர்மையானவர்கள் என்றாலும், அந்தம்மாள் நடந்துகொள்ளும் போக்கு அவருடைய பேதலித்த தாயாரின் சாயலில் வருவதைப்போல் இருக்கிறது. எழுபது ஆண்டுகள் ஆகியும் வெள்ளை காக்கை தலைமுறைகளுக்கும் நின்று அழகாகக் கரைந்து தன் வேலையைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
Image may contain: bird and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக