About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

பலி படையல்!

இப்படியொரு செய்திப்படத்தை முகநூலில் பார்த்தேன். 


ஆடி மாதம் கிடா வெட்டிப் பலி படையல் போட்டுவிட்டால் குலதெய்வம் ஏமாந்து விடுமா என்ன? அதன் பிறகு அவன் பாவங்கள் செய்யாமல் தரும நெறியைப் பின்பற்றி சத்தியமாய் வாழ்கிறானா? வண்டி வண்டியாய்க் கர்ம பாரம் சுமந்து வந்துவிட்டு ஆண்டுக்கு ஒரு பலி தந்தால் ஊழ்வினை/சாபம்/பாவம் குறைந்து போய் தீர்ந்துவிடும் என்றால் கடன் வாங்கியாவது ஆடு/சேவல் பலியிட்டுப் பழைய கர்மா லோன் எல்லாவற்றையும் அடைத்து விடலாமே! 

கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், முனீஸ்வரன், மதுரைவீரன், கருப்புசாமி போன்றவைகளைக் குலதெய்வமாக வழிபடும் குடும்பங்களில் ஆடு/கோழி பலியிடும் வழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. இது அல்லாத மற்றவர்களுக்கு இல்லை. உங்கள் குல வம்சத்தில் பலி படையல் பழக்கம் இல்லாதோர் புதிதாய் இப்படத்திலுள்ள அறிவுரையைப் பின்பற்றக்கூடாது. உஷார்! உங்கள் முன்னோர்கள் செய்து வந்து நடுவில் விட்டுப்போனது என்றால் தொடரலாம். நமக்குத் தெரிந்து பெரும்பாலும் பூசை செய்து பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம்.

எனக்குத் தெரிந்து இதுபோல் பலியிடும் குடும்பங்களிலும் வினைப் பயனுக்கு ஏற்ப குலதெய்வம் எவ்வித பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கிறது.  அவர்களுக்கும் இன்னல்கள் ஏமாற்றங்கள் வரத்தான் செய்கிறது. இவ்விதம் பலியிடுவதால் கர்மா முற்றிலும் அழிந்து அக்குடும்பத்து இன்றைய ஆன்மாவினர் சுபிட்சமாய் வாழ்ந்து இன்னொரு பிறவி எதையும் எடுப்பதில்லை என்பதற்கு என்ன சாட்சி? மரபு வழிபாடு வேறாக உள்ளது, புரிதலும் பரப்புரையும் வேறாக உள்ளது. 🥺

-எஸ்.சந்திரசேகர்