About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 4 நவம்பர், 2025

பரமரகசியம்!

ஓம் நமசிவாய 🕉️ 🌿 


சந்திரமௌலி

சந்திரமோகன்

சந்திரஹாசன்

சந்திரசூடன் 

சந்திரவதனன்

சந்திரசேகர் 

இப்பெயர்கள் என்ன? என் முற்பிறவிகள் முதல் இப்பிறவிவரை அந்தந்தப் பிறவியில் பெற்றோர் எனக்குச் சூட்டிய நாமகரணம். 5-6 ஆம் நூற்றாண்டில் குரு போகரின் அன்பான பராமரிப்பில் அடியேன் இருந்தபோது என் பெயர் சந்திரமௌலி. அன்று முதல் அவர் தன் இடக்கையால் என் வலக்கையை இறுகப் பற்றியே வருவது என்பது ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் உறவை நினைவூட்டியது. 

சந்திரமௌலி என்ற பெயர்தான் அவருக்கும் பிடித்தமான பெயரென்று அண்மையில் அறிந்தேன். இப்பிறவியில் பிரதோஷம் அன்று மதியத்திற்குப்பின் பிறந்த எனக்கு நாமகரணம் செய்யுமன்று சந்திரமௌலி/ சந்திரசேகர் என்ற இந்த இரண்டில் ஒன்றுதான் முடிவானதாம். ஆக பெயர் தேர்வானதும்கூட இறைவன் திருவுளப்படியே நடந்துள்ளது.

போகர் முதல் கண்ணப்ப நாயனார்வரை குருமார்கள் பிறவி தோறும் அமைந்தனர் என்பது பெரும் பேறு. பிரம்ம ரகசியத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. 1500 வருடங்களுக்கு முன் குரு போகநாதரிடம் எப்படி வந்து சேர்ந்தேன்? அதை இன்னும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. தெரிந்தபின் சொல்கிறேன். சிவசித்தம் 🙏

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

எலும்புகளுக்கு அருமருந்து!

எலும்பு ஒட்டி மூலிகைச் செடி இன்று கண்ணில் பட்டது. காட்டு ஆமணக்கு வளர்ந்திருந்த புதரில் இதுவும் செழித்து வளர்ந்திருந்தது. காலி நிலத்தில் எதோ களைச் செடிகள் என்று நினைத்து விட்டு வைத்திருப்பார்கள். இலை அமைப்பைப் பார்த்தால் முருங்கைக் கீரையைப் போலவே இருக்கும்.

கை/ கால் உடைந்த எலும்புப் பகுதியில் விளக்கெண்ணெய் தேய்த்து எலும்பைச் சரியான நிலையில் வைத்துப் பொருத்தி, இலைகளை முட்டையின் வெள்ளைக் கருவுடன் அரைத்து அந்தப் பகுதியில் வெளிப்பூச்சு தந்தால் பத்தே நாளில் எலும்புகள் ஒட்டிக்கொள்ளும். அசையாமல் வைக்க மேலும் கீழும் மூங்கில் குச்சியை வைத்து அதன்மீது துணியைக் கட்டி, அதைச் சுற்றியும் கருப்பு உளுத்தம் மாவுடன் சேர்த்து அரைத்த இலைப் பூச்சைப் பூசிவர குணமாகும். சுண்ணாம்பு சத்து நிறைந்த இச்செடியின் கசப்பான இலைகளைத் தைலமாகவும், கஷாயமாகவும் பயன் படுத்தலாம்.

சுண்ணாம்பு சத்து உடலில் அதிகரிக்க நம் உணவுதான் மருந்து. முருங்கை பிரண்டை முடக்கறுத்தான் ராகி நெல்லி பூசணி என பல உண்டு.

-எஸ்.சந்திரசேகர்

புதன், 10 செப்டம்பர், 2025

தொடரும் குரு-சீடர் உறவு, பகுதி-2

குருவிடம் அமர்ந்து உபதேசம் கேட்கும் சீடன் உள்ளது போன்ற இப்படம் என்னுள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. ஏன்? என்ன காரணம்?

கடந்த மாதம் என் வாசகர் ஒருவருடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சித்தர்கள் பற்றிய யூடியூப் காணொளிகள் பதிவேற்றி வருகிறார். அன்று ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அவர் அருகில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுபத்தைந்து வயதான அவருடைய அப்பாவும் இருந்துள்ளார். 

யாருடன் நீ பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று அப்பா தன் மகனைக் கேட்க, இவர் என்னைப் பற்றியும் என் புத்தகங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார். அவர் அப்பா தீட்சை பெற்ற யோகி என்பதை நான் பிற்பாடு அறிந்துகொண்டேன்.

என் குரலை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் அப்பா உடனே கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து என்னுடைய முற்பிறவிகளை எல்லாம் பார்த்துவிட்டுச் சொல்லிக்கொண்டு வந்தாராம்.

சந்திரசேகர் வைத்திய சாஸ்திரத்தில் கரை கண்டவர், கொல்லிமலையில் ஆகாச கங்கை அருகே ஆசிரமத்தில் சீன உருவில் இருந்த போகரிடம் நேரடி சீடராக இருந்து பயிற்சி பெற்றவர். மிகுந்த வைராக்கியம் கொண்டிருந்த இவர் மீது போகருக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. அக்கூட்டத்தில் இவர்தான் மிகவும் இளம் வயது சீடர். அதற்குமுன் பழனியில் போகரின் நேரடி பராமரிப்பில் இருந்து அவருடைய செல்லப்பிள்ளையாகவே இருந்தார். இப்போதும் போகர் இவரைத் தன் கண்காணிப்பில் வைத்துள்ளார்.

சந்திரசேகர் அதன் பின் எடுத்த ஐந்து பிறவிகளில் சித்தர்கள் குழுவிலேயே முழுக்க முழுக்க இருந்து, இறுதியில் மௌன நிலைக்குப் போய் காட்டுக்குள் சமாதியில் அமர்ந்துவிட்டார். அநேக சித்தரிஷிகள் இவருடன் தொடர்பில் உள்ளார்கள். மூத்த சித்தர்கள் இவர் மூலம் இன்னும் சீரிய பணிகளைச் செய்து முடிக்கச் சித்தமாய் உள்ளனர். போகருடைய அம்சமாக வழிகாட்டுதல்படி வந்துள்ள இவர் சித்த புத்தகங்கள் எழுதி வருகிறார்" என்ற ரகசியத்தையும் சொன்னாராம். 

"அதனால் போகர் சம்பந்தமான வீடியோ பதிவுகளை நீ யூடியூபில் பதிவேற்றும் முன் சந்திரசேகர் பார்க்கட்டும். ஒப்புதல் தந்தபின் செய்" என்று அவருடைய அப்பா சொல்லியுள்ளாராம்.

இதில் இன்னோர் ஆச்சரியமும் உள்ளது! தற்போது என்னைப் பற்றி ஐயா சொன்ன ரகசியத்தைக் கடந்த ஆண்டு மூன்று பேர் ஏற்கெனவே சொல்லியுள்ளனர். போகர், கோரக்கர், கொல்லிமலை மௌனகுரு சித்தர், ஆகியோருடன் என்னையும் பார்த்ததாக ஒரு கிரியா யோகி சொன்னார். அவர் என்னிடம் இதைத் தெரிவித்தபோது "அதெல்லாம் இல்லீங்க. நீங்க சதா போகருடைய நினைப்பாவே இருப்பதாலும், என்னோட சித்த நூல்கள்/ முகநூல் பதிவுகள் யாவற்றையும் வாசித்து வரும் தாக்கத்தாலும் என் முகம் உங்க ஆழ் மனசுல பதிஞ்சுபோச்சு... மத்தபடி வெறெதுவுமில்லைங்க" என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தேன்.

ஆனால் இப்போது ஐயா அதைத் திறந்து போட்டுவிட்டார். எல்லாம் சிவசித்தம் வகுத்தபடி நடக்கிறது. குரு பதம் போற்றி! 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தொடரும் குரு-சீடர் உறவு, பகுதி 1

இன்றைக்கு ஆயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 7- 8 ஆம் நூற்றாண்டில், சீனத்து போகருக்கு 15 முக்கிய சீடர்கள் இருந்தனர் என்றும் அக்குழுவில் அப்போது மிக இளம் வயதான அடியேனும் ஒருவன் என்பதை அறிந்து கொண்டேன். 

பழனிமலை அடிவாரம் அருகாமையில் 'பேக வனம்' என்றதொரு மாபெரும் மூலிகைக் காடு இருந்ததென்றும் அங்கே மூலிகையைப் பறிக்கவும் மருந்துகளை அரைக்கவும் போகர் என்னைப் பணித்தார். அச்சமயம் அருகே இருந்த கல் விழுந்து என் வலது கரத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுவிட்டது.

உடனே போகர் எனக்கு மருந்திட்டு தன் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என தன் பக்கத்திலேயே என்னையும் அமர வைத்துக்கொண்டார். எங்கே போனாலும் அவருடைய இடது கரம் என் வலது கையைப் பற்றியே இருக்குமாம். அப்போது முதல் அவருடைய செல்லக் குழந்தையாக ஆகிவிட்டேன் என்பதும் அறிந்தேன். இப்போதுள்ள என்னுடைய இந்த முகம்தான் அப்போதும் இருந்தது என்றும், தலைமுடி சடையாக முடியாமல் என் முதுகுவரை அவிழ்ந்து இருந்ததாம். அப்படி ஒரு வனம் போகருடைய பெருநூல் பாடல்களில் எங்கேனும் சொல்லப்பட்டுள்ளதா என்பது எனக்கு இப்போது நினைவில் இல்லை.

அதன்பிறகு நான் எடுக்கும் எல்லா மறு பிறவிகளிலும் என் வலது கரத்தில் காயம் ஏற்படுவதும், அந்நேரம் சிகிச்சையளித்து மருந்திட குரு போகர் அக்கணமே வந்து தோன்றுவதும் இன்றுவரை நடந்து வருகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். கையில் காயம் ஏற்பட்டு அது அவரால் குணமாவதும், அதன்பின் சித்த ஆன்மிக ஞானமானது ஓதாமலே என்னுள் வந்து இறங்கிவிடும் என்பதும் காலம் வரும்போது அதுவே வெளிப்படும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

தன்னுடைய எந்த நூலை நான் எழுத வேண்டும் என்று பணிக்கின்றாரோ, அதைத்தான் இதுவரை எழுதியதாகவும், அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை அவரே தீர்த்து வைத்து வழி காட்டுகிறார் என்பதையும் அறிந்துகொண்டேன். சித்த மரபில் நான் பூரண நிலையை அடைந்து உய்வு பெற பிறவிகள் தோறும் அவரே உறுதுணையாய் இருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்து போனேன். 

இதையெல்லாம் ஒரு மூத்த யோகி தன் அருட்பார்வை மூலம் திரையில் ஓடும் படங்களாகப் பார்த்துவிட்டுச் சொன்னார். ஆக பிறவாத நிலையை நம் ஆன்மா எட்டும்வரை விட்டகுறை பயனாக குரு- சீடர் உறவு பிறவிதோறும் தொடர்ந்து வருகிறது. எல்லாம் சிவசித்தம் 🕉️ 🙏 

-எஸ்.சந்திரசேகர்



சனி, 26 ஜூலை, 2025

அரசுப் பள்ளிக்கு எதற்காக?

படத்திலுள்ள செய்தி இன்று கண்ணில் பட்டது. இதைப்பற்றி விமர்சிப்பதா அல்லது பாராட்டிப் புகழ்வதா என்று எனக்குத் தெரியவில்லை. 

மாநிலத்திலுள்ள அரசுப்பள்ளிகளுக்கு நம் கல்வித்துறைதான் எல்லா வசதிகளையும் செய்யவேண்டும். அதற்கான செலவையும் ஏற்கவேண்டும். முன்னாள் மாணவர் பெருத்த நிதியைத் தருகிறார் என்றால் அவரே அப்பள்ளியைத் தத்தெடுத்து நடத்தலாம். இன்னும் சொல்லப்போனால் அவரே எளிமையாக ஒரு பள்ளியை நிறுவி மேல்நிலைவரை இலவசமாகக் கல்வியை வழங்க ஆவன செய்யலாம். முன்னாள் மாணவர்களும் ஊர் மக்களும் சேர்ந்து நிதி திரட்டி அரசுப்பள்ளி/ கல்லூரி வளர்ச்சிக்குத் தர வேண்டும் என்றால் பெயரில் ஏன் அரசு என்ற முன்னொட்டு வரவேண்டும்?

மாநிலங்களவை MP ஒவ்வொருவருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக The Member of Parliament Local Area Development Scheme (MPLADS) ஆண்டுதோறும் ₹5 கோடி வழங்கப்படுகிறது. அதிலிருந்து அரசுப் பள்ளிக்கூடத்திற்கான கட்டுமானம், விரிவாக்கம், நூலகம், அறிவியல் கூடம் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கும் அவ்வப்போது பரிந்துரை செய்து நிதியை வழங்கலாம். 

ஆனால் எவ்வித நிதியுதவி இல்லாமல் நம் கொள்ளுத் தாத்தா காலத்தில் தொடங்கிய எத்தனையோ தரமான நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் இன்று போதிய வசதிகள் இல்லாமல் மூடும் தருவாயில் இயங்கி வருவதைப் பார்க்கிறோம். ('பள்ளிக்கூடம்' திரைப்படம் நினைவுக்கு வருகிறது.) அதுபோன்ற தனியார் பள்ளிகளுக்கும் அதன் பழைய மாணவர்கள் தாராளமாக நிதியுதவி செய்ய முன்வர வேண்டும். புறக்கணிப்பது தவறு!

-எஸ்.சந்திரசேகர்

சனி, 19 ஜூலை, 2025

கதண்டு!

உங்களில் எத்தனை பேர் கதண்டைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. அது குளவி இனத்தை ஒத்ததாகவும் அதைவிட ஆபத்தானதும் ஆகும். இது கட்டும் கூடு மிகவும் அலாதியானது. பார்ப்பதற்கு அவை தேனீ போலவே இருக்கும். இதில் இரண்டு கதண்டுகள் மனிதனைக் கொட்டினால் அவ்வளவுதான்... தீவிர சிகிச்சையில் வைக்க வேண்டும்!

எண்ணிலடங்காத கதண்டுகள் நிறைந்த வனத்தில் சித்தர்கள் பலகாலம் தவம் செய்தது பற்றியும், சீனாவில் கதண்டு மகரிஷியின் ஆசிரமம் பற்றியும் அவர் தனக்கு உபதேசம் தந்தது பற்றியும் போகர் ஏழாயிரத்தில் விவரித்துள்ளார்.

மலைப்பாம்புகள், கதண்டுகள், ராட்சத வெட்டுக்கிளிகள், மற்றும் பல விஷ ஜந்துக்கள் பழனியில் போகர் சமாதியின் சுரங்கப்பாதையில் உள்ளன என்றும் அதன் காரணமாகவே சமாதி குகை வாயிலை நானூறு ஆண்டுகளுக்கு முன் அடைத்ததாக முன்னொரு சமயம் ஸ்ரீ புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்னிடம் பேசும்போது சொன்னார். 

-எஸ்.சந்திரசேகர்






புதன், 23 ஏப்ரல், 2025

தினத்தந்தி, புத்தக மதிப்புரை

உலகப் புத்தக நாளை முன்னிட்டு இன்று ஏப்ரல் 23, 2025 தினத்தந்தி நாளிதழில் வந்த 'ஞானம் தரும் சித்தர் பாடல்கள்' பற்றிய புத்தக மதிப்புரை.



வியாழன், 17 ஏப்ரல், 2025

மந்திரவொலியின் சக்தி!

 “கோயில் கும்பாபிஷேகம் நடக்கப்போகுது இல்ல, யாகசாலையில தினமும் மந்திரங்கள் சொல்லி பூஜை, வேதபாராயணம் நடக்குதாம்.. போய் உக்காந்து பார்த்துட்டு வாங்க” என்று கிராமத்துப் பெரியவர் தன் பேரன்களிடம் சொன்னார்.

“தாத்தா, போர் அடிக்கும்.. பந்தல் முழுக்க ஒரே புகையும் வெக்கையுமா இருக்கும். வேத மந்திரம் எதுவும் புரியாது... அங்கே போய் என்ன செய்ய?” என்று சிறுவர்கள் கேள்வி கேட்டனர்.

“கண்ணுங்களா, அதுல ரொம்ப பெரிய சூட்சுமம் இருக்கு. மந்திரம் புரியாட்டாலும் பரவால்ல. நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப அதைப்பத்தி நம்ம குருக்கள் ஐயாவோட பாட்டனாரு எங்களுக்கு ரகசியம் சொன்னாரு. அது என்னனு சொல்றேன்” என்று விளக்கினார்.

அதாகப்பட்டது, வேத மந்திரங்கள் எல்லாமே ஒவ்வொரு சந்த அளவில் ஏற்ற இறக்கத்துடன் சொல்லும்போது, ஒலி உச்சாடனங்கள் பலவித அதிர்வுகளை எழுப்புகிறது. அதையெல்லாம் உடல் கிரகித்துக்கொண்டு பல அதிர்வலைகளில் திசுக்களைச் சக்தியூட்டியும், நோய்வாய்ப்பட்ட ஆபத்தான திசுக்களை அழித்தும், ஒவ்வொரு ஆறாதாரச் சக்கர மண்டலங்களைச் சுற்றியுள்ள உறுப்புகளில் சக்தி அதிர்வுகளைத் தந்து புதிய திசுக்களை உற்பத்தியாக்கியும் நம் தேகத்தை வலுவாக்குகிறது. 

ரிஷிகள் நமக்களித்த வேதமந்திர உச்சாடனங்களை நம் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ குறைத்தோ இடைவெளி விட்டோ வேறு ஒலி மாற்றியோ சொல்ல விதியில்லை. வேதகோஷம் கேட்பதற்கே இப்படியான பலன் என்றால் ருத்திராட்சம் அணிந்து மந்திரங்களை ஓதுவார்க்குக் கிட்டும் பலன் அளப்பரியது. 


ஆரம்பகால வேத அத்தியயனம் பாடம் நடக்கும்போது மாணவர்கள் கைகளை உயர்த்தி இறக்கி இடம் வலம் அசைத்து ஓதும்போது கைவிரல்களின் கணுவைத் தொட்டு எண்ணிக்கை வைத்துகொள்வது குருகுல முறை. உச்சாடனத்தில் உதாத்த (மேல் நிலை), அநுதாத்த (கீழ்), ஸ்வரித (மத்திமம்), என அசைவுகள் உண்டு. வெவ்வேறு ஸ்தாயி ஸ்வர மாத்திரையில் ஆங்காங்கே இடைவிடாமல் சொல்லும்போது மூச்சுப் பயிற்சியால்  நுரையீரல் கொள்ளளவு மேம்படுவதோடு தேகத்திலுள்ள திசுக்கள் சிறிய நுண்ணணு பேட்டரி மின்கலம்போல் செயல்படும். உச்சந்தலையில் நுண் சிகையானது பிரபஞ்ச ஆற்றலைப் பெற்றுத்தரும். அதனால்தான் மெல்லிய சிறு குடுமிகூட இல்லாமல் கிராப் தலையுடன் வேத மந்திரம் சொல்ல, வேள்விச் சடங்கு நடத்த உட்காரக்கூடாது என்பார்கள்.

மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்கள் புத்துயிர் பெற, பாதம் கெண்டைக்கால் தொடை மார்பு தோள் தலை என அனைத்திலும் நம்மையறியாமலே இலகுவான உணர்வு மேலோங்கும். சித்தர்களும் சக்திவாய்ந்த பீஜங்களை அப்படியே தங்கள் அஷ்டக்ர்ம மந்திரங்களில் சொன்னது குறிப்பிடத்தக்கது. சித்த வைத்தியப்படி ஒரு மண்டலம் பத்தியத்துடன் மருந்து உண்டால் நோய்கள் குணமாகும். அதுபோல் இந்த வேதமந்திர கோஷத்தை ஒரு மண்டலம் (48 நாள்) அமர்ந்து காதுகொடுத்துக் கேட்டாலே நல்ல பலன் கிட்டும். 


சமஸ்கிருத மந்திரம் உசத்தி என்றால், தமிழ் மட்டும் குறைந்ததா? இல்லை! தமிழும் சக்தி வாய்ந்தது. சிவன் உயர்வானவன் என்றால் சக்தியும் அப்படித்தான்! தமிழில் மெல்லினம்/இடையினம் எழுத்துகள் முக்கியமானது. அவ்வொலிகளைக் கன்னாபின்னாவென மாற்றி உச்சரித்துச்சொல்லி வந்தால் ஆபத்தில் முடியும். தமிழ் மொழிதானே என்று அசட்டையாக இருக்கக்கூடாது. நாளடைவில் மரபணு கட்டமைப்பில் கோளாறு வரும், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். அந்தந்த ஒலி அதிர்வுகள் சம்பந்தப்பட்ட ஆறாதாரச்சக்கர உறுப்புகள் பலதும் நோய்வாய்ப்பட்டுப் பாதிக்கப்படுவது உறுதி. இக்காலத்தில் பலரும் இதை உணர்ந்து கொண்டதாய்த் தெரியவில்லை.

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

சங்கிலி ஜாலம்!

பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சங்கிலியை வெறும் கையாலேயே எப்படிப் பிடிக்க முடியும்? அது சாமி வந்திறங்கி நடத்தும் தெய்வச் செயல்; அல்லது ஏதோ மாயா ஜாலம் வித்தை மூலம் நடப்பது.

தன் குரு காலாங்கி நாதர் சொல்லித்தந்த சங்கிலி ஜாலம் பற்றி ஆறாம் காண்டத்தில் (பாடல் 154 - 156) போகர் விவரிக்கிறார். தவளை உடும்பு மற்றும் ஏதாவது ஒரு விலங்கின் கொழுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் கலந்து சிறு துளைகளிட்ட பானையில் ஊற்றிக்கொண்டு குழித்தைலம் சேகரித்து இறக்க வேண்டும்.

முழு உள்ளங்கை மற்றும் விரல்களிலும் இந்த நெய்யைச் பூசிக்கொண்டு அந்தச் சூடான சிவந்த சங்கிலியை வெறும் கைகளால் பிடித்துக்கொண்டு இழுத்து உருவினாலும், அக்கைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்று போகர் சொல்கிறார்.

காணொளியில் நான் பார்த்தது கோயில் வளாகத்தில் நடந்தது. சிவந்த சங்கிலி மேல் விபூதியைத் தெளித்தபின் பிடித்து உருவுகிறார். கையில் நெய் எதையும் பூசிக்கொள்ளவில்லை. ஆகவே தெய்வச் செயலாகப் பார்க்கவேண்டும். ஆனால் இச்செயலைப் பார்ப்பவர்கள் இது பலே உருட்டு சுருட்டு, மூடநம்பிக்கையின் உச்சம் என்று கிண்டலடிப்பார்கள். 

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 13 மார்ச், 2025

பெரும் பேறு!

வார்க்கவே பரிபூரண விநாயகர் பாதம்

   வினையகல வளமாகத் துணைபுரியும்

தீர்க்கமாய் உரைக்க அமர்ந்த பெரியவரே

  தோன்றி விளக்கிய இரெட்டியப்பட்டியரே

பார்க்கவே கருணையருள் கண்களுடன்

   பரம்பொருளாய் நிலைத்த சித்தபுருடரே

மார்க்கமாய் அருட்சட்டம் உபதேசித்தவரே

  மறுபிறவி அறுக்கும் ரகசியம் தந்தவரே


சேர்க்கவே நன்னெறி புண்ணியங்கள்

   சீர்மிகு அடியார்கள் வாழ்க்கையிலீட்ட

கோர்க்கவே மலர்களைக் கண்ணியாய்க்

   கடமையும் பக்தியும் இணைத்திருக்க

ஈர்க்கவே பாடல்களும் பரவசமேலோங்க

   இயம்பிடும் தத்துவமும் விண்ணப்பமும்

தீர்க்கவே சங்கடமகல விடியலில் நீராடி

   தியானிப்போம் ஆண்டவர் சரணத்தை!


-எஸ்.சந்திரசேகர்