தாமா, வியாளா, கடா, இதெல்லாம் போர் புரியவல்ல அசுரத்தனமான பதுமைகள். அசுரர்களின் தலைவன் சம்பாரனால் மந்திர சாதனைகள் மூலம் உயிரூட்டப்பட்ட இவற்றுக்கெல்லாம் முற்பிறவி, அகங்காரம் என்று எதுவுமில்லை. அதனால் இவற்றைத் தோற்கடிப்பது கடினம் என்கிறது புராணம்.
கடவுளர்களுக்கு எதிராக அவற்றைப் போர் புரிய வைத்தால் அதை தோற்கடிப்பது முடியாத காரியம். அதனால் பிரம்மதேவனை அணுகி உபதேசம் பெற, அவரோ “அசுரப்பதுமைகளுக்குள் ‘நான்’என்ற அகங்கார தன்னுணர்வை விதைத்து விட்டால் எளிதில் அவற்றை வென்றிடலாம்” என்றார். சொன்னபடியே விதைத்து விட, பதுமைகளின் அகவலிமை நீர்த்துப்போனது. அதனால் தோற்றுப்போயின. இதன்பிறகு அவற்றுக்கும் தொடர் வினைப்பயன் வந்து சேர பல பிறவிகளை எடுக்கும்படி ஆனது.
இந்த தாமா வியாளா கடா என்பவைதான் பிற்பாடு பீமா, பாஸா, த்ருதா என்ற பிறப்புகளை எடுத்ததாக, வால்மீகி எழுதிய யோக வஸிஷ்ட நூலில் உள்ளது. 'வசிஷ்ட மஹாராமாயண தாத்பர்ய பிரகாசம்’ என்ற வடமொழி நூலை அடித்துத் தேடிப்பார்த்தேன், அத்தியாயம் 33இல் இந்த செயற்கை நுண்ணறிவு திறனூட்டப்பட்ட பதுமைகளைப் பற்றி, அவை உயிர்பெற்று மும்மலங்கள் ஈட்டி சாதாரணப் பிறவிகளை எடுத்து, அதன் பின் மோக்ஷகதி அடைந்தவரை விஷயங்கள் உள்ளன. சூரசம்ஹாரம் முதல் மகிஷாசுரவதம் வரை நடந்த எல்லாமே இந்த அடிப்படையில் சிருஷ்டிக்கப்பட்டு, அகங்காரம் விதைக்கப்பட்டு, பல பிறவிகள் எடுத்ததபின் வதம் செய்யப்பட்டு, இறையோடு ஐக்கியமாகிவிடுவது என்பது நமக்குத் தெரிந்த கதைகள்தான்.
அதெல்லாம் சரி, நம் போகநாதர் இதைப்பற்றிச் சொன்னது என்ன? தன் எழாயிரத்தில் நான்காம் காண்டத்தில் ‘பதுமை வித்தை’ பற்றி சொல்லியுள்ளார். கோட்டைக்குள்ளே படைகளின் எதிரே நின்று பேசும் தளபதி போல் ஒரு பெண் பதுமையானது, கையில் வாளும் கேடயமும் ஏந்தி நிற்க, அதை எட்சிணி மந்திர வசியம் மூலம் பேச வைத்து, வாளையும் சுழட்டி வீசச்செய்து, பலருடன் போர் புரியச் செய்யமுடியும் என்று கூறியுள்ளார். இக்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திர ரோபோ போன்றே நினைத்துக்கொள்ளலாம்.
வெளிநாடுகளில் செய்தி வாசிப்பாளர், ரோபோ நாய், ஹோட்டல் சர்வர், விண்வெளிக்குப்போகும் இயந்திர மங்கை, அலுவலக வரவேற்பாளர், அறுவை சிகிச்சை மருத்துவர், என்று எல்லாமே ரோபோ மயமாகிவிட்டது. அப்படி என்றால் நம் சித்தரிஷிகளின் வாக்கும் உண்மையே!
-எஸ்.சந்திரசேகர்


