About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

இதுதான் சமையல் ரகசியம்!

உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ள மாடவீதிகளில் பல உணவு விடுதிகள் இருப்பதைக் கண்டேன். ஹோட்டல் உரிமையாளர் பெயர்கள் ஸ்ரீனிவாச பட், சுரேஷ் பட் என்ற ரீதியில் இருக்கவே நம்மூரில் உட்லன்டஸ், பட்ஸ் ஹோட்டலை எனக்கு நினைவூட்டியது. காலையில் அங்கே சிற்றுண்டி உண்டபின் கல்லாவில் இருந்த அந்த நபரிடம் என் சந்தேகக் கேள்வியைக் கன்னடத்தில் கேட்டேன். 

“உங்கள் ஊர் முழுக்க பட் ஹோட்டல்கள் நிறைய உள்ளதே, சமையல்தான் இந்த ஊர் மக்களின் பிரதான தொழிலா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “ஹௌது சுவாமி.. குருஷேத்திர யுத்த காலதிந்த அடுகே மாடுவதே நம் சர்வீஸ்” என்றார்.

“குருக்ஷேத்ர யுத்தம்னா... துவாபர யுகம் முதலேவா... ஆச்சரியமா இருக்கு.. மேலே விவரமா சொல்லுங்க” என்றேன். அவர் மகாபாரதக் கதையைக் கூறினார்.

உடுப்பி பகுதியை ஆண்ட அரசன் நரேஷ் குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்குகொள்ள படைகளுடன் சென்றான். அப்போது ஸ்ரீகிருஷ்ணரிடம் கோரிக்கை வைத்தான். கௌரவர்கள்/பாண்டவர்கள் இருதரப்பிற்கும் உணவு சமைத்துப்போட அனுமதி தரவேண்டும் என்று வேண்டினான். “ஆகட்டும் நீயே சமையலைப் பார்” என்று உத்தரவானது. அதன்படி தினமும் ருசியான உணவு படைத்து அது மீதம் ஆகாதவாறு சமைத்தான். தினமும் அதெப்படி முடியும்? உத்தேசமாக சமைக்கலாமே தவிர துல்லியமாக எப்படி? தேர், யானை, குதிரை, காலாட்படை என இருவரின் படைகளும் மொத்தம் 18 அக்குரோணி. ஆக தினமும் இத்துணை தலைகளுக்குச் சமைப்பது என்பது தெய்வத்தின் செயலுக்குச் சமமாகுமே! ஆம் அந்த ரகசியம் பற்றி நரேஷ் விளக்கினான்.      

தினமும் அளிக்கும் உணவில் கிருஷ்ணர் சாப்பிடாமல் மீதம் வைத்த வறுத்த வேர்கடலைகளை எண்ணி அதை ஆயிரத்தால் பெருக்க, வரும் தொகை எண்ணிக்கையே மறுநாள் போரில் மாண்டுபோவோர் எண்ணிக்கை என்பதை வெளிப்படுத்தினான். மொத்த அக்குரோணி சேனைகளின் எண்ணிக்கையில் தினமும் மீதமான வேர்கடலைகளை ஆயிரத்தால் பெருக்கிக் கழிக்க மீதம் உள்ளவர்களுக்கே சமையல் செய்து பரிமாறினான். இதன்படி பதினெட்டு நாள் போரில் முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு வீரர்கள் மாண்டது தெரிந்தது. கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்கள் வென்றனர். அன்றிலிருந்து உடுப்பி தேசம் அன்னம் படைக்கும் தொழிலைச் செய்ய ஸ்ரீகிருஷ்ணர் அருள் புரிந்தார் என்று ஹோட்டல் உரிமையாளர் சொன்னார்.

மகாபாரத யுத்தத்தில் பாரதத்தின் பல பகுதிகளிருந்தும் அரசர்கள் தங்கள் படைகளை அனுப்பி இரு தரப்பினர்க்கும் போரிடவும்/ சமைக்கவும் உதவினார்கள். சேரன் உதியன்கூட சமைத்துள்ளான். இதில் சாரங்கத்வஜ பாண்டியன் அஸ்வத்தாமனால் கொல்லபட்டான், அவன் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். 

மகாபாரதம் தன்னுள் எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டுள்ளது. நாம்தான் இன்னும் முனைந்து அதைப் படிக்கவில்லை என்பதே உண்மை! 

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக