About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

அவதாரங்களும் நிலைகளும்!

வேதம்/புராணம் கூறும் எந்த ஒரு கருத்தையும் விளக்கவோ ஒப்பீடு காட்டவோ நம் சித்தர்களின் நூல்கள் பெரிதும் உதவுகின்றன. மேரு மலையில் (கபால சக்கரத்தில் அல்ல) தான் கண்டு தரிசித்த தசாவதார ரிஷிகள் யார் யார் என்பது பற்றி காலாங்கி தன்னுடைய சீடர் போகருக்கு விளக்கியுள்ளார். அதில் மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்பது வரிசை. இனி வரவுள்ள கல்கி எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்பே கூறிவிட்டதால் அதையும் இந்த வரிசையில் முன்கூட்டியே சேர்த்தாயிற்று. 

அழிக்கும் தொழிலைச் செய்வது சக்தி/விஷ்ணு. அதாவது சிவனின் வாமபாகம். உடனே நீங்கள் முருகனைப்பற்றி இக்கணம் நினைப்பீர்கள். சிவனாகிய குகன் அழிப்பதில்லை. தாயும்/ மாமனும் வழங்கும் யோகசக்தியை/ஆயுதத்தைக் கொண்டு அவன் ஆவேசமாகத் தாக்குவான், அதனால் முருகனே சத்ருசம்ஹாரம் செய்தான் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவன் செய்வதில்லை. 

நாம் அறிந்த விஷ்ணுவின் தசவதாரங்கள் எல்லாமே தீயோரைக் கொன்று நல்லவர்களைக் காக்கும் நோக்கில் நடந்ததுவே. கீதையில் “யதாயதா ஹி தர்மஸ்ய...” என்ற ஸ்லோகத்தில் கிருஷ்ணன் சொன்னதுபோல் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வருவது அவதாரம். அவதாரம் என்றால் பரப்பிரம்மமே உருவமேற்று இறங்கி வருதல் என்பதாகும். அது ஜீவராசிகள் வடிவாகவோ, பிராணி- மனிதன் கலந்த வடிவமோ, மனிதனாகவோ இருக்கும். 

மச்சம்/ கூர்மம்/ வராஹம் அவதாரம் எல்லாம் அதனதன் வடிவில் இறை அம்சத்துடன் வந்து செயல் புரிந்தது. வாமனன்/நரசிம்மம்/ பரசுராமன் அவதாரம் எல்லாம் அக்கணம் மட்டும் ஆவேச சக்தி வெளிப்பட்டுப் பணியை முடித்தது. ராமன் கிருஷ்ணன் அவதாரம் எல்லாம் மனிதனாக அவதரித்து வாழ்ந்து தமக்கு இட்ட பணியை முடித்தனர். 

ஆக நம் புரிதலுக்காக அவதாரங்களை அம்சம்/ ஆவேசம் / பூரணம் என்ற நிலைகளாகக் கொள்ளலாம். கோபம் கொண்டு ஷத்ரிய படைகளை அழித்து ஒழிக்கும் வரை பரசுராமனிடம் இறைசக்தி இருந்தது. வந்த நோக்கம் நிறைவேறியதும், பரசுராமனிடம் சக்தி வெளியேறியது. நித்ய சிரஞ்சீவியாக வாழ சிவன் அருள் புரிந்தார். நரசிம்ம அவதாரமும் அப்படியே! ஹிரண்யனை சம்ஹாரம் செய்யும் நேரம் மட்டும் அவதாரமாகப் பிரவேசித்து முடிக்கிறார்.           

‘இராமன், கிருஷ்ணன் எல்லாம் கடவுள் என்றால் ஒரு கட்டத்தில் ஏன் வாழ்க்கை முடிந்து போனது?’ என்று போகர் கேட்பது சரிதானே? அவர்கள் விஷ்ணுவின் பூரணத்துவத்துடன் மனிதர்களாக அவதரித்து வாழ்ந்தனர். அந்தந்த யுகத்தில் வந்த வேலை முடிந்தவுடன் மறைந்தனர். நந்தி, பிரம்மன், விஷ்ணு, இந்திரன், முருகன், இராமன், என தானும் அந்நிலைகளில் ஜெனித்து வாழ்ந்ததைத் தன் நூலில் போகர் சொல்லியுள்ளார். 

காலாங்கி நாதருக்கு அவதாரங்கள் எல்லாமே எப்படி ஒரு சேர காட்சி தரமுடியும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. விஷ்ணுவின் அவதார உருவங்கள் அழிந்தாலும், சூட்சும உருவங்கள் அதே சக்தியுடன் நிலைக்கும் தோன்றும் மறையும். அவ்வண்ணமே அவதார ரிஷிகள் சித்தர்பிரானுக்குத் தரிசனம் தந்தனர். புத்தரிஷியையும் பார்த்துள்ளார். ஆனால் ஆதி புத்தரை நாம் கணக்கிலேயே கொள்வதில்லை. 

தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீபாத வல்லபர், அகல்கோட் மகாராஜ், ஷிர்டிசாயி, சிருங்கேரி நரசிம்ம பாரதி எல்லோரும் வெவ்வேறு காலங்களில் ஜனனம் எடுக்கும் முன்னமே ஒருவரையொருவர் சந்தித்து உரையாடியுள்ளனர். பரசுராமனும் இராமனும் சந்தித்தனர், திருப்பதியில் வாசம் செய்ய வெங்கடாசலபதி ஆதிவராஹ சுவாமியிடம் அனுமதி பெற்றார் என்கிறது தலபுராணம். இவை நமக்கு விந்தையாகத் தெரியும்!  

விஷ்ணுவின் அவதாரப்பட்டியலில் முக்கியமாக தசாவதாரங்கள் மட்டுமே சொல்கிறோம்! ஆனால் அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ ஜனன அவதாரங்கள் உண்டு. அம்சத்துடன் வாழ்ந்து, ஆவேசத்துடன் வெளிப்பட்டு, பூரணத்துவத்துடன் வாழ்ந்ததுண்டு. புராணம் சொன்னாலொழிய நமக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ‘நந்திகள் நால்வருடன் தானும் பயின்றதாகத் திருமூலர் சொல்வாரே, அந்த சனகாதியர் நால்வர் உள்பட நாரதர், அகத்தியர், தத்தர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆதிசேஷன், வியாசர், கோவிந்த பகவத்பாதர் என இன்னும் எத்தனையோ அவதாரங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

பக்தி யோகம் ஞானம் போதித்த அவதார மகான்களில் ஆதிசங்கரர், இராமாநுஜர், இராகவேந்திரர், ஸ்ரீவீரப்பிரம்மம், வள்ளலார், காஞ்சி பரமாச்சார்யார், ஷிர்டிசாயி, என இன்னும் நிறைய பேர் தேசம் முழுக்க இருந்தனர். சமணம், முஸ்லிம், கிறிஸ்து மதங்களில் ஜனனம் எடுத்திருந்தாலும் நம் மனம் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. 🤔

உங்களில் யாரேனும்கூட இறை அம்சத்துடனோ ஆவேச குணத்துடனோ அவதாரம் எடுத்திருக்கலாம். இப்போது அது உணரப்படாமல் இருக்கலாம், ஆனால் காரணமும் காலமும் நெருங்கும்போது வெளிப்படலாம். கல்கியின் கையாளாக சமுதாயத்திலே பிரவேசித்து நெறிமுறைப்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் சாத்தியம் உண்டு. ஓம் நமோ நாராயணாய!

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக