முந்தைய தலைமுறையினர் பெற்றிருந்த மதி நுட்பமும் மூளைத்திறனும் இக்காலத் தலைமுறையினர்க்கு இல்லை என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். ஆனால் இந்த நிலை உலகெங்கும் உள்ளது என்பதுதான் கவலைக்குரிய செய்தி.
நவீனகால முன்னேற்றமும் பாரம்பரியமான குணாதிசயங்கள் மறைந்து போவதும் இதன் காரணிகளாக விளைவுகளாக உள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்க்கை முறை மாறிப்போனது, புதிய நோய்கள் மருந்துகள் உலா வரத்தொடங்கியது, பல நூறு ஆண்டுகளாக இருந்த அந்தந்த வம்ச பாரம்பரியம் கற்பிக்கப்படாமலே போனது, வெவ்வேறு மதங்களில் சாதிகளில் கலப்பு மணங்கள் சர்வசாதாரணமாகப் போனது, வேற்று மரபணுக்கள் வம்சத்தில் நுழைந்து தொல் அறிவுத்திறனை மந்தமாக்கியது, மனக்கணக்கு என்ற சூத்திரம் தொலைந்தது, தொட்டதற்கெல்லாம் கணினி மொபைல் AI எப்போது வந்ததோ, எல்லா பழக்கங்களும் பாழாய்ப் போனது.
முன்பெல்லாம் கல்லூரி முடிக்கும்போதுதான் நாங்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டோம். விநாடி வினா, குறுக்கெழுத்து, கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் இருந்தன. இயற்பியல் சூத்திரங்களைப் போட்டுப் பார்க்க Logarithm table மட்டும்தான் முதுகலைவரை பயன்படுத்த எங்கள் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தினர். அதை வைத்துத்தான் நாங்கள் கால்குலேஷன் போட்டோம் என்பதை நிரூபிப்பதற்காக விடைத்தாளின் ஓரத்தில் கோடு போட்டு கணக்கு வழிகளை எழுதியிருக்க வேண்டும்.
நாம் கற்றுத்தேர்ந்த அறிவுப்புலம் வெறும் 20% என்றால் Gen Z தலைமுறையினர் திறன் இன்னும் தேய்ந்து போயிருக்கும். எங்கோ விதிவிலக்காகச் சிலர் மட்டும் பிரகாசமாய் வருகின்றனர். "அடடே, இந்தக்காலத்து குழந்தைகள் எல்லாம் என்ன சூட்டிகையா இருக்கு!" என்று எதையோ பார்த்து மெச்சி ஏமாந்து போகின்றனர்.
ஒரு முறை, ஐன்ஸ்டீனைச் சந்தித்த நடிகை மர்லின் மன்றோ, "நாம் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என் அழகோடும் உங்கள் அறிவோடும் பிறக்கும்" என்றாராம். அதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன், " உங்கள் அறிவோடும் என் அழகோடும் பிறந்துவிட்டால் என்ன செய்வது?" என்று நையாண்டி செய்தாராம்.
-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக