திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இந்த மாதம் வெளிவருகிறது. வரவுள்ள தேர்தலில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளன என்பதைத் தேடிப் பார்த்தேன். அதில் பல கட்சிகளின் பெயர்களை இதுவரை நான் எங்கும் கேள்விப்பட்டதே இல்லை. 🥺 ஓ... இப்படியெல்லாம்கூட கட்சி இருக்கா என்று நினைத்துக்கொண்டேன்.
வேட்பாளர்களாக நிற்பது சுலபம். ஆனால் வாக்காளர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். நமக்கு விருப்பமான ஒரு கட்சியில் நிற்கும் யாரோ ஒரு புதுமுக வேட்பாளர் யோக்கிய சிகாமணியா இல்லையா என எதுவுமே தெரியாது. அதே சமயம் நாமறிந்த சுமாரான நேர்மை நடத்தையை உடைய வேட்பாளர் விதி வசத்தால் திருட்டுக் கூட்டணி கட்சியில் நின்றால் என்ன செய்ய? நமக்குத்தான் திண்டாட்டம்! இந்த லட்சணத்தில் ஒரு குடும்பத்தில் இத்தனை பேர் வாக்குகளுக்கு இவ்வளவு பணம் என்று கொடுத்தால், அவன் கர்மாவைத் துணிந்து வாங்கிக்கொள்வது போலாகும்.
அயோக்கியக் கட்சித்தலைமை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றால் அவனுடைய ஆட்சிக்காலத்தில் நடக்கும் எல்லா கொலை/ கொள்ளை/அதர்மச்செயல்களில் நமக்கும் பங்குண்டு. வென்று அதர்மங்கள் புரிந்திட முழு ஆதரவு தந்தால் அந்தக் குற்றங்களில் 0.1% அளவேனும் நம்முடைய ஊழ்வினைக் கணக்கில் வந்து சேரும். ஆம், இதைப்பற்றி ஆழமாக யாரும் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சத்தியமான உண்மை!சித்தர் பிரான் உரைக்கும் பாவப்பட்டியலில் இதுவும் உண்டு.
வாக்குரிமை நம்முடைய ஜனநாயகக் கடமை என்பது உண்மைதான். ஆனால் அது தீட்டிய கத்தியாக உள்ளதே! அட ஆண்டவா, இது என்ன சோதனை?
-எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக