About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 15 ஜனவரி, 2026

கருப்பங்கொல்லை

 பெரும்பாலும் மார்கழி/ தை மாதங்களில் கரும்பு அறுவடை ஆகிவிடும். பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். சித்திரையில் விரல் நீளமான கரும்புக்கரணைகள் நடப்பட்டு, சுமார் 10-12 மாதங்களில் அவை முதிர்ச்சியடைந்து  அறுவடைக்குத் தயாராகும். அதை வயலில் இருந்து பிடுங்கி அடுக்கி வைக்கும்போது அதிலிருந்து எழும் சர்க்கரை மணம் மிக அலாதியானது. சில சமயம் வெட்டும்போது கமகமவென நம் நாசிக்கு எட்டும். 

உடனே அது என்னை என் பால பருவத்து நினைவுக்கு இட்டுச்செல்லும். அங்கேயே சிவனே என கண்மூடி கரும்புகளின் நடுவே அமைதியாக உட்கார்ந்துவிட்டால் அது என் பூர்வஜன்ம நினைவுகளையே மீட்டெடுக்கும் சக்தி பெற்றதாக இருக்கும். மணக்கும் காற்று சுகமான நித்திரையை உண்டாக்கி மயக்கும். கரும்புத் தோகையின் வாசமும் விதிவிலக்கல்ல. காய்ந்து விழுந்தவைகளை நிலத்தில் தீயிட்டுக் கொளுத்தி அணைந்த பிறகு நிலவும் அலாதியான புகை வாசம் எனக்குப் பிடிக்கும். ஆன்மா இறைவனுடன் சங்கமித்தது போன்ற உணர்வு வருவது உறுதி. உங்களுக்கும் இதுபோன்ற நல்ல அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

தாத்தா விபூதி சித்தர் சமாதி பீடத்தின் இருபுறமும் நான் பார்த்தவரை மஞ்சள் மற்றும் கரும்பு நடவு செய்யப்படுகின்றன.

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக