About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 30 ஜூன், 2024

அன்றாடம் பின்பற்ற வேண்டியவை!

காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போடவேண்டும். வீட்டின் உள்ளேயும் பெருக்க வேண்டும். முக்கியமாகத் தலைவாசல் சுத்தமாக இருக்கவேண்டும். வாசக்காலையும் கதவையும் பெருக்கிச்சுத்தம் செய்யும்போது உங்கள் குலதெய்வத்தின் கோயில் கருவறையைச்சுத்தம் செய்வதாய் நினைத்துச் செய்யுங்கள். அந்நேரம் வீட்டில் பெற்றோரோ/ பிள்ளைகளோ யார் முதலில் குளித்து முடித்தாலும், சுவாமி படங்களுக்குப் போட்ட நிர்மால்ய பூக்களையும், எரிந்த விளக்குத்திரிகளையும், ஊதுபத்தி சாம்பலையும் அப்புறப்படுத்தி விளக்கு ஏற்றவேண்டும். பலர் வீடுகளில் இப்படி நடப்பதில்லை. குடும்பத்தலைவி சமைத்து வீட்டு வேலை முடித்துப் பொறுமையாக ஒன்பது மணிக்குமேல் குளித்துவிட்டு வந்தபின் விளக்கேற்றுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

அப்புறப்படுத்தியதை எல்லாம் நேரே குப்பைக்கூடையில் போடாமல் தனியே கவரில் போட்டு வைக்கவேண்டும். நிறைய வீடுகளில் முந்தைய நாள் சாப்பிட்டுப்போட்ட எச்சில் கழிவுகளின் தலையிலேயே இதையும் கூடையில் போடுவார்கள். அது அபச்சாராம்! பிறகு குப்பை வண்டியில் இதைத் தனியே போடலம். விளக்கேற்றும் இடத்தில் ஈரத்துணியால் துடைத்து சிறிய கோலமிட்டு விளக்கு ஏற்றவேண்டும். சுமார் இரண்டு மணிநேரமாவது விளக்கில் முத்துச்சுடர் நின்று எரியும் அளவு எண்ணெய் இருந்தால் போதும். மென்மையான நறுமணம் கமழ்வது சுபம். வீட்டில் பெரியவர்களுக்கே பல விதிகள் தெரியாமல் போவதால் இளைய தலைமுறைக்கு அதை எடுத்துச்சொல்ல முடிவதில்லை.

மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆகும்முன் என்னவெல்லாம் செய்யவேண்டும்? வெளியே காயப்போட்ட துணிகளை எடுத்துவிட வேண்டும். விளக்கு வைக்கும்முன் வீட்டைப் பெருக்கிடவேண்டும், அறையின் மூலைகளில் ஃபேன் காற்றில் சுழன்று கொண்டிருக்கும் தலைமுடி கற்றைகளை அப்புறப்படுத்த வேண்டும். அமங்கலமான பேச்சு, வாய்ச்சண்டை, சாபம், அழுகை, ஒப்பாரி ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். காலையிலோ /மதியமோ வீட்டில் அசைவம் சமைத்திருந்தால், அதன் துர்நாற்றம் வீட்டுக்குள்ளே சுற்றிக்கொண்டிருந்தால் நல்லதல்ல. அவை துர்சக்திகளை நிச்சயம் இழுக்கும். 

அதுபோல் ஈரத்துணிகளை வெளியே காயப்போட்டு இரவு முழுவதும் அப்படியே இருந்தால் அதுவும் நல்லதல்ல. அஸ்தமன நேரத்தில் பட்சிகளின் நிழல் பட்டு அந்த தோஷமும், ஒவ்வொருவரின் தேகத்தைப்பொறுத்து துர்சக்திகளின் ஆகர்ஷணமும் அதில் பீடிக்கும். பின்னிரவு நேரத்தில் இளம் ஆண்கள் தெருவோர மரத்தடியில் நின்று சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும். அவனுள் பல துஷ்ட சக்திகள் இறங்கி பாதக தசாபுத்தி நடக்கும்போது எல்லா தீயவழிகளிலும் ஆட்டிவைக்கும். பேய், பிரம்மராட்சஸன்,  மோகினிப்பிசாசு, எதுவேண்டுமானாலும் அவனைப் பிடிக்கும்.

இவன் என்னடா கதை அளக்கிறானா என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் இதை எல்லாம் சூட்சுமமாகப் பார்த்தவன். அதுபோல் கன்னிப்பெண்களின் விலக்குத்துணியையும் (சானிடரி நாப்கின்ஸ்), குழந்தைகளின் டயாபர்களையும் குப்பையில் வெளியே பகிரங்கமாக வீசக்கூடாது. அதனாலும் தோஷம் வரும். அதைத் தனியே கவரில் சுற்றி குப்பைவண்டியில் போடுங்கள்.  இப்பொருள்களை வைத்தே சாமக்கோடாங்கி கருந்தொழில் செய்வான். 

உங்களை அச்சமூட்டுவதற்காக இதைச்சொல்ல வரவில்லை. குடும்பத்தில் இதெல்லாம் கடுமையான எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். ஆச்சாரம் அனுஷ்டானம், சாஸ்திரம் சம்பிரதாயம் என்பது இக்காலத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் செயல்பாடு, அது நமக்குத் தேவையில்லை என்று நினைத்துப் புறந்தள்ளினால் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.     

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 20 ஜூன், 2024

கர்மாவின் இலக்கணம்!

என் பள்ளிக்கூட வகுப்பாசிரியர் தன்னுடைய அண்மைப்பதிவு ஒன்றில்...  

"சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா, பிராரப்த கர்மா... என இப்படி எனக்கு புரிந்தும் புரியாமலும் பல உள்ளன. ஆனால் இன்றும் எனக்குப் புரியாத ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று... அந்தந்த பிறவியில் செய்த பாவங்களுக்கு அந்தந்த பிறவியிலேயே தண்டனை கிடைத்தால்தானே அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களும் வாழ்க்கையில் தவறு செய்யக்கூடாது என்று நினைப்பார்கள். 

ஏதேதோ பிறவிகளில் செய்ததற்கு இப்பொழுது தண்டனையை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்? நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கும் கெட்டவர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் இந்த கர்மாவைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்.

அவருடைய ஐயத்திற்குப் பதிலளித்தேன். "அந்தந்தப் பிறவியில் திருந்துவோர் வெகு சொற்பம். பெற்றோரின் வளர்ப்பு, செல்வச்செழிப்பு, முற்போக்குச் சிந்தனை, தீய சகவாசம், அஞ்ஞானம், அதர்மம், அதிகாரம், கோபம், என பலவித காரணங்களால் பாழ்பட இருந்து விடுகிறார்கள். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது ஒரு செயலைச் செய்யும்போதே மனம் நினைத்தால் எவ்வித தீய கர்ம வினையும் அண்டாதபடி செயலில் திருத்தம் வரும். 

செய்த குற்றத்திற்கு ஒற்றை/ இரட்டை/ மூன்று ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன ஆகும்? இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றம் புரிந்த இந்த தேகத்திற்கே தண்டனை. மூன்று ஆயுள் தண்டனையை எல்லாம் ஓரே ஆயுளில் அனுபவித்து முடித்துவிடலாம். 

ஆனால் தருமநெறிபடி நம் ஆன்மாவுக்கே தண்டனை. அதனால் அது குடிகொண்ட தேகமும் இன்னல்களை அனுபவிக்கிறது. முற்பகலில் மனத்தால் தேகத்தால் அனுபவித்ததுபோக உள்ள எஞ்சிய தண்டனையானது பற்று வைக்கப்பட்டு அது பிற்பகலில் தொடர்கிறது. சொச்சம் இல்லாமல் ஒரே பிறவியில் அவை தீர நம் ஆயுள் நீடித்திருக்க வேண்டும் அல்லது கர்மவினை யாவும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இம்மையில் நல்லவனாக வாழ்ந்து கஷ்டப்படுபவன் தன்னுடைய மும்மையில் செய்த தீவினையால் இது வந்தது என்பதை உணர்ந்து பொறுமை காக்கிறான் நற்பண்புடன் நடக்கிறான்.

அன்றைக்குச் சமைத்த உணவு அன்றே மீதமின்றிக் காலியானால் உத்தமம். ஆனால் பழையது தினமும் இருந்துகொண்டே இருக்கப் புதிதாய்ச் சோறும் சமைத்துக் கொண்டே இருந்தால் எப்போது மீதமின்றிச் சோறு காலியாவது? அதுபோல்தான் நம் சஞ்சித ஆகாமிய பாவங்கள். பழைய கர்மவினை தீரும் முன்பே புதிய பாவங்களை ஈட்டினால் அவை மலைபோல் குவிந்துவிடும். அதை அனுபவித்துத்தீர ஒரு பிறவி போதாது.

எப்படிப்பார்த்தாலும் நம் கர்மவினையை/ தலைவிதியைப் பிறவிதோறும் நாம்தான் பக்கம்பக்கமாய் எழுதிக்கொள்கிறோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! நாம் அனைவரும் அவரவர் கர்ம வினையின் திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் எடுத்துச் செய்து அது செயல் ஓட்டத்தில் தவறாகப் போகும்போது அதன் பழியை நான்முகன் மீது சுமத்தி அதற்கு அவனைப் பொறுப்பாக்குவது என்பது அயோக்கியத்தனம். நாம் புண்ணியம் நிறைய செய்தாலும் அதனால் சுகப்படவும் ஒரு பிறவி அமையும். 

ஆக தெரிந்தே ஒவ்வொரு பிறவியிலும் தீவினைகள் செய்பவனுக்கு மறுமையிலும் புத்தி வராவிட்டால், தவறை உணர்ந்து ஆன்ம நிலை உயர்ந்து பிறப்பை அறுக்கும்வரை ஊழ்வினையின் கரகாட்டமும் கச்சேரியும் பிறவிதோறும் தொடரும்" என்றேன். 😂 

-எஸ்.சந்திரசேகர்








சனி, 15 ஜூன், 2024

ரெட்டியப்பட்டி சித்தர் தரிசனம்!

அது ஏப்ரல் 2011. திநகர் ரங்கநாதன் தெருவுக்கு எதிரே சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு ஒட்டினாற்போல் உள்ள தெரு முனையில் ஒரு சித்தரைக் கண்டேன். அவர் தாடி வைத்த முதியவர். நரைத்த தலையுடன் வெற்றுடம்போடு இடுப்பில் வெள்ளைத்துண்டு மட்டும் கட்டியிருந்தார். தெருவில் ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்துகொண்டு தெருவோரம் மண்மீது கால் மடக்கி கண் மூடியபடி உட்கார்ந்திருந்தார். 

கடை முன்னே நான் நின்று எதிரில் அங்கே அமர்ந்திருந்த இவரைப் பார்த்தபடி 'இவர் பிச்சைக்காரரா, சித்தரா? இங்கே என்ன செய்கிறார்?' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று அவர் கண் திறந்து வேறு எங்கும் சுற்றுமுற்றும் பார்க்காமல் தலையைத் தூக்கி நேராக என்னை உற்று நோக்கிப் புன்முறுவல் செய்தபின் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். அதாவது தான் சித்தர்தான் என்பதை உணர்த்தினார். ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அவ்வழியே கடக்கும்போது அவர் அங்கில்லை. அவர் யார்? சித்தர் ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் (1857 - 1923). 🕉️🙏 அவர் இன்னார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

இன்று எதேச்சையாக என் பார்வையில் ஒரு காணொளி தென்பட்டது. மக்கள் நெருக்கடி மிக்க ரங்கநாதன் தெருவில் ரெட்டியப்பட்டி சித்தரின் ஆலயத்தை ரத்னா ஃபேன் ஹவுஸ் கட்டியுள்ளது என்றும், சுவாமிகளின் 100 ஆவது ஆராதனை விமரிசையாக நடந்தது என்றும் போட்டிருந்தது. தனக்கு இங்கே ஓர் ஆலயம் வரும் என்பதை 13 ஆண்டுகளுக்கு முன்பே ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் அமர்ந்து அவர் உணர்த்தினார் என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லாம் சிவசித்தம்!

சித்தர்கள் எல்லோரும் அஷ்டசித்தியைக் கைவரப்பெற்றவர்கள். அவர்கள் அகக்கண் மூலம் நம்மைக் கண்காணித்து நம் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்கள். நாம் போகும் இடத்தில் நம் கண்ணில்பட நமக்காக் காத்திருப்பார்கள். இவர்கள் வட்டத்திற்குள் பல இலாக்காகள் உள்ளது. மிகப்பெரிய சித்து வலைப்பின்னல் உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. யாரை எங்கு வந்து யார் சந்திப்பார் என்ற தகவல் அவர்களுக்குள் பரிமாறப்படுகிறது.

-- எஸ்.சந்திரசேகர்




புதன், 12 ஜூன், 2024

முட்டை!

டிவி செய்தியில் காய்கறி மற்றும் முட்டை மொத்த விற்பனையின் விலை பற்றிச் சொல்லும்போது, முட்டை ரூ.5.50 வரை விற்பனை ஆகின்றது என்று சொன்னார்கள். அப்போது மறக்கமுடியாத ஒரு பழைய நினைவு எழுந்தது. பள்ளியில் நம் எல்லோருக்குமே பலவிதமான அனுபவங்கள் வாய்த்திருக்கும். அப்படியொன்றுதான் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.

எங்களுக்கு உயிரியல் நடத்தியவர் திரு.இஸ்மாயில் என்ற திறமையான ஆசிரியர். Reproduction in birds and mammals என்ற தலைப்பில் அன்றைய பாடம் நடந்தது. கரு முட்டை வெளிப்படும் சுழற்சி பற்றி, அடை காக்கும் விதம் பற்றி, பாலூட்டிகள் பற்றி நடத்திக்கொண்டு போனார். பெண்களுக்குச் சினைப்பையில் கருமுட்டை உருவாவது பற்றியும், கர்ப்பம் தரித்து மகப்பேறுவரை சுருக்கமாய் விளக்கி முடித்தார்.

அப்போது நெடுமாறன் என்ற என் வகுப்பு மாணவன், “சார், என்ன சார் சொல்றீங்க? லேடீஸ் முட்டை போடுவாங்களா? எனக்கு இதுவரைக்கும் தெரியாது. அண்ணாச்சி கடையில முட்டை 75 பைசா விக்கித்து. தினமும் அஞ்சு முட்டை வாங்குறோம். வீட்லேயே போடுறாங்கனா ஏன் கடையில போய் காசு கொடுத்து வாங்கணும்? ஆயாகிட்ட அம்மாகிட்ட தினமும் முட்டை போடசொல்லணும். இவ்ளோ நாளா என் கண்ணுல காட்டாம அவ்ளோ பெரிய முட்டைங்கள அவங்களே அவிச்சு தின்றாங்களா!” என்று ஆச்சரிய கோபத்துடன் சொன்னான்.

இதை எதிர்பார்க்காத இஸ்மாயில், “டேய் இந்த முட்டை கண்ணுக்கு தெரியாதுடா, ovary releases microscopic eggs அதைத் திங்க முடியாது என்று விளக்கிச் சொன்னார். இருந்தாலும் அவன் திருப்தியடையவில்லை.

“சார், சின்ன கோழியே பெரிய முட்டை போடும்போது, பெரிய மனுஷங்க ஏன் சின்ன முட்டை போடணும்? அதைவிட பெரிசாத்தான போடணும்?” என்றான். “மாறா, லஞ்ச் முடிச்சிட்டு என்னை வந்து பார், விளக்கமா சொல்றேன்” என்றார். இன்றும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் சிரிப்பை அடக்கமுடியாது. 

 -எஸ்.சந்திரசேகர்