About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 21 அக்டோபர், 2020

அருளாசியும் ஜீவ சக்தியும்!

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி மட்டும்தான். அவர்களுக்குக் குழந்தை பாக்கியமில்லை. இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்யும் அப்பெண்மணி மாதம் ஒரு லகரம் ஈட்டுகிறார். தெற்கு பார்த்த சொந்த வீடு என்பதால் மாடித் தோட்டம் போட்டுள்ளனர். எல்லா செடிகளும் சிறப்பாக வளரும் ஆனால் இதுநாள் வரை அதில் எதுவும் காய்த்ததில்லை. அப்படியே பூவிட்டுக் காயத்தாலும் கருகிவிடும். அவர்கள் தினமும் சத்துமயமான உணவு, பழம் காய்கறிகள், பாதாம்/பிஸ்தா, சிறுதானியங்கள்தான் உண்பார்கள். அப்படியும் அந்தம்மாளைப் பார்த்தால் சோற்றுக்கு வழியின்றிப் பஞ்சத்தில் அடிபட்டவராகவே இருப்பார். பின்தூங்கிப் பின்னெழும் பழக்கம் கொண்டவர். வேலைக்காரி வந்து வாசல் தெளித்துக் கோலமிட்டால் உண்டு. என்னதான் உயர்தர பட்டாடை உடுத்தினாலும் அது சோபிக்காது. வீட்டு வேலைகள் செய்ய ஆள் இருக்கிறது.

வடக்கு பார்த்த ஒரு வீட்டில் கணவன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள். நடுத்தர குடும்பம் என்பதால் சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். வருமானம் குறைவு என்பதால் சிக்கனமாகக் குடும்பம் நடத்துவார்கள். மொபெட், கேபிள் டிவி, மொபைல் என்பதைத் தாண்டி ஆடம்பர வாழ்க்கை என்பது கனவிலும் இல்லை. அவர்கள் வீட்டுக் கொல்லையில் உள்ள அனைத்துச் செடிகளும் பூத்துக் காய்த்துச் சிறப்பாக வளர்ந்திருக்கும். அரிசி பருப்பு பண்டங்களை ரேஷனில் வாங்குவார். சோம்பலின்றி அலுப்பின்றி அனைத்தையும் சுத்தமாகப் புடைத்து எடுப்பதைப் பார்த்துள்ளேன். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள். விடியலிலேயே எழுந்து வாசலில் கோலம் போட்டு, தன் வீட்டு வேலைகள் அனைத்தையும் தனியாளாகச் செய்வார்.
இவ்விரு குடும்பங்கள் எல்லா விதத்திலும் முற்றிலும் எதிர்மாறாக உள்ளது, அல்லவா? ஒரு மனையில் வாழும் மனிதர்களோ/ தாவரங்களோ, ஒரே விதமான ஜீவகாந்த சக்தியின் பிடியில் நிலைக்கொண்டுள்ளது என்பது கண்கூடு. அதற்கேற்ப அவர்களது ஜாதக திசாபுக்தியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணத்திற்கு, மூதாதையர் வாழ்ந்த பூர்வீக வீடு அவர்களுடைய சந்ததியினர் எல்லோருக்கும் ராசியைத் தரும் என்று சொல்ல முடியுமா? எல்லாம் சுபமாக இருந்தால் ஏன் மூன்று தலைமுறைகளுக்குமேல் அங்கே வாசம் செய்ய கொடுப்பினை இருப்பதில்லை? இறைவனே மனித வடிவில் வந்திறங்கி வாழ்ந்து ஆசிர்வதித்த வீடு என்னும் பட்சத்தில் சில நூற்றாண்டுகளைக் கடந்து இருக்கும். நமக்குத் தெரிந்து கிராமத்து வீடுகள் எல்லாமே நீளமாக இருக்கும். காற்றோட்டம் நாலா பக்கத்திலிருந்து வராது. அதிக ஜன்னல்கள் இல்லை அதனால் வெளிச்சம் என்பது குறைவுதான். ஓடுகளின் மத்தியில் கூரை வெளிச்சம் இருக்கும். சேம்புகூட பழுத்துவிடும் ஒரு புழுக்கமான சூழலில் வாழ்ந்தனர். பாட்டன் பூட்டன் வாழ்ந்த வீடு என்பதைத்தாண்டி அவ்வீட்டில் மனநிறைவு இருந்தது. அவர்கள் விட்டுச்சென்ற அரூப சக்தி மற்றும் இறைபக்தி உணர்வுகள் அங்கு வசிக்கும் சந்ததிக்கு ஆன்ம பலத்தை அருளியது. பொருளாதார அளவில் குறைகள் இருந்தாலும் அது பெரிதாக வெளிப்படவில்லை.
ஆகவே, என்னதான் தொப்புளுக்குமேல் கஞ்சி வழியும் அளவுக்கு நிதி வசதி இருந்தாலும், நாம் வாழும் இடத்தில் இறை ஆற்றலோ மூதாதையரின் ஆசிர்வாதமோ இல்லை என்றால் அவ்வீட்டில் மரம் செடி ஜீவராசிகள் கூட குன்றிப்போகும். சில இடங்களில் புலப்படாத எதிர்மறை கதிர்கள் பூமிக்கடியிலிருந்து தாக்கும். மிதமிஞ்சிய செல்வம் இருந்தும்கூட அங்கே வாழும் மனிதர்களின் மனத்திலும் தேகத்திலும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக