About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 21 ஏப்ரல், 2022

ஞானக்கூத்து!

உயிர்சக்தியின் நாதமாக விளங்கும் சிவனே அனைத்திலும் வடிவமாகிறான். அவனுடைய திருநடனம் என்றால் அது வெறும் அம்பலத்தோடு நின்றுவிடாது. அவனே கருவாய் உள்ள வேதங்கள் ஆடும், பஞ்சபூதங்கள் ஆடும்,;ஆகமங்கள் ஆடும், கீதங்கள் ஆடும்; ஆறாதார சக்கர அண்டங்கள் ஏழும் ஆடும், புவனம் முழுதுமே ஆடும். அது ஞானவடிவான திருக்கூத்து என்கிறார் திருமூலர். அப்படி இருக்கும் அவன் பஞ்சமுகனாய் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலை (பஞ்சகர்தவ்யம்) நடத்துகிறான்.

வேதம் என்றால் அது புருஷ அம்சம், மொழி - சமஸ்கிருதம். சந்தேகமின்றி இதை உறுதியாய் மனத்தில் நிறுத்துங்கள். அகளமும், சகளமும், அகளசகளமுமாய் (அருவம் உருவம் அருவுருவம்) உள்ள சிவனானவன் சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், மதுரை, திருவாலங்காடு ஆகிய பஞ்சசபைகளில் ஐந்து விதமாக ஆடினான். அவை ஆனந்த தாண்டவம், திருத்தாண்டவம், திரிபுர தாண்டவம், சந்தியா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் என ஐந்து நடனங்கள். சிவனன்றிச் சக்தி இல்லை என்பது உண்மை. உமையவள் சிவனின் இடபாகத்தில் தேன்மொழியாய் (தமிழ்) உள்ளாள். சிவன் ஆடினால் சக்தியும் அல்லவோ ஆடவேண்டும்? ஆக, தேன்மொழியாம் தமிழே அவன் பாகமாய் விளங்கும் தேவியும் ஆடினாள் என்று திருமூலர் மிகத் தெளிவாக உரைக்கிறார்.  

சமஸ்கிருதத்தைவிட தமிழ் உயர்ந்ததா, தாழ்ந்ததா, நிகரானதா? அதை இப்பாடலில் திருமூலரே தெளிவாக்கிவிட்டார். நாதவிந்துவாக சிவனும் சக்தியும் சரிநிகராய்க் கலந்துள்ளனர். புருஷகலை மொழியின் ஆதாரமாய்த் திகழும் சிவன் தன் ஸ்திரீகலை பாகமாய்த் தமிழைக் கொண்டுள்ளான் என்று திருமந்திரம் பாடலில் திருமூலர் இயம்பியதை எள்ளி நகையாடி கண்டித்துப்பேசி சிவநிந்தனைப் புரிய இனியும் யாருக்கேனும் துணிவு வருமா? 

இது புரியாமல் ‘ஆரியம் அழிந்து ஒழிந்தது’ என்று சிவனை இகழ்ந்து பேசிவிட்டுத் தமிழை வணங்குகிறேன் என்று பேசுவது அமங்கலம், அது பிரம்மஹத்தி தோஷத்தைத் தரும். நமக்கு வடமொழி புரியாமல்/ பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் ஒருபோதும் அதை வெளிக்காட்டிச் சிவபாதகச் சொல்லைப் பேசக்கூடாது, சிவபாதகச் செயலைப் புரிந்திடக்கூடாது.  

-எஸ்.சந்திரசேகர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக