About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

புலப்பட்ட ரகசியம்!

நல்ல பாம்பு படம் எடுத்துக் கொத்தும் என்பது தெரியும். ஆனால் மனித ஜாதியில் ஒரு பெண்ணானவள் பாம்பின் கெடு பலன்களுடனும் பழிதீர்க்கும் குண அம்சத்துடனும் வாழ்ந்து வருவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட அவளுக்கே தன்னைப் பற்றியோ, நடக்கும் சம்பவங்களின் சூட்சுமமம் பற்றியோ எவ்விபரமும் தெரியவில்லை. 

அவளைக் காதலிக்க நினைக்கும் ஆண் மர்மமாக இறந்திடுவான், அவன் காதலை வெளிப்படுத்தினாலோ அவளுடைய பொருளைக் கையகப்படுத்தினாலோ ஒரு மண்டலத்தில் சாவான், அவளுக்கு நிச்சயமான மாப்பிள்ளை பரலோகம் போவான், அப்படியே மணமானாலும் சித்தபிரம்மைப் பிடித்து ஓடிவிடுவான். தாம்பத்தியம் இல்லாமல் கணவன் என்ற நிலையில் அவளைப் பராமரிப்பவன் பிழைத்தான். பணக்காரி என்றாலும் ஒரு சராசரி பெண்ணாக வாழ முடியவில்லை. அவளுடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் இவ்விதம் அமைந்துவிட்டது.🤔

இது மர்மநாவல் அளவுக்குத் திகிலாக உள்ளதே என நினைக்கத் தோன்றுதா? புனையப்பட்ட கட்டுக்கதையோ என்று நினைக்கிறீர்களா? இல்லை. சொன்னது அத்தனையும் உண்மை! அந்தப் பரிதாபப் பெண் என் வெளிநாட்டு வாசகி. தன் வாழ்க்கையில் நடந்த சோகங்களை ஏமாற்றங்களை அண்மையில் சொல்லி வருத்தப்பட்டார். பூர்வஜென்ம வாசனை விடாத குறையாகத் தொடர்ச்சி நடக்கிறது என்பதை நான் சொல்லாதவரை எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

அவர் உடலில் சர்ப்பத்தின் ஆன்மா பூட்டிக்கிடப்பதைச் சொன்னேன். ராகு- கேது வழியே பாவங்களாய் வரும் மூதாதையர் கைவரிசையும் காரணம். இதற்கு விமோசனம் இல்லை என்பதால் ஆன்மிக வழியில் மன அமைதியுடன் வாழ்க்கையைக் கடத்துங்கள் என்றேன். அறுபதை எட்டும் அவர் பரிகாரம் செய்து இனி ஆகப்போவதும் ஒன்றுமில்லை. ஒரு பெண் குழந்தை தக்க வயதில் ருது ஆவதில் சிக்கல் இருப்பதும், சமைந்த கிழமை ஹோரை நட்சத்திரம்கூட அவளுடைய மணவாழ்வைக் காட்டிக் கொடுக்கும்.

அவருடைய ரகசியத்தை ஆணித்தரமாக நான் சொன்னபோது அவர் அதிர்ந்தார். அவர் வசிக்கும் பகுதியின் பெயரோ/ அந்த இடத்திற்கு அருகிலோ பாம்பைக் குறிக்கும் விதமாய் ஏதேனும் உள்ளதா என்று அப்போது கேட்டேன். அதற்கு அவர் ஆச்சரியத்துடன், 'ஐயா, நான் நிற்கும் இடத்திற்கு எதிரே சாலையைக் கடந்தால் பெரிய புற்று உள்ளது' என்றவர் உடனே அழுதுவிட்டார்!

அவரை அமைதிப்படுத்தினேன். 'நீங்கள் பெரிய படிப்பு படித்துள்ள திறமையான உழைப்பாளி. இனி தனியாளாய் எந்தப் பயமுமின்றி ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் கால்பதித்து முன்னேறுங்கள். உங்கள் அமானுஷ்ய பின்புலம் அறியாமல் தொழிலில் யாரேனும் உங்களைக் கவிழ்க்க வஞ்சம் தீட்டினாலோ, காதலித்து உறவாடிக் கெடுத்தாலோ, ஐயோ பாவம்... அவன் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவன் குடும்பத்திற்கு நலம் பயக்கும்' என்றேன். வாசகி வாய்விட்டுச் சிரித்தார். 'ஐயா.. இனி எனக்குக் குழப்பமில்லை... நான் தெளிவாக உள்ளேன். மிக்க நன்றி' என்று கூறினார். என்னுடைய எல்லா நூல்களையும் அவர் வரவழைத்து வாங்கி வைத்துள்ளார். 

இவருக்கு மணமாகி இருபது ஆண்டுகள் ஆகிறது. இவருடைய வயதான கணவர் பள்ளிக்கல்வியோடு நின்றவர். தற்சமயம் ஒரு நண்பனாக, கர்த்தாவாக, தொழில் ஆலோசகராக மனப்பக்குவத்துடன் இந்த அம்மையாருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கடந்தகால வாழ்க்கையை அறிந்து மணந்தார். ஆனால் இன்னும் தன் மனைவியின் பிறப்பு ரகசியத்தை அறியார்.

வாசகியின் பெயர்? மாணிக்கப்பரல் என்று சூசகமாகப் பொருள் தரும். அவர் கருட பஞ்சமி, நாக சதுர்த்தி, பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி ஆகிய தினங்களில் தன்னை மறந்து பக்திப் பரவசத்தில் இருப்பார். சிவசித்தம்!

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக