About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

வண்ண விளக்கில்..




அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயில் வண்ண விளக்கில்...
இன்று மாலை என் அன்பு நண்பர் சிவாவுடன் சென்றேன். பக்தர்கள் கூட்டத்தோடு வரிசையில் நின்று தரிசித்து, முருகனுக்கு சந்தன காப்பு முடிந்து சோடச உபசாரங்கள் கண்டோம். விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொண்டபின் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பிறகு, புறப்படும் நேரத்தில் ஏதோ என் சிந்தையில் தோன்ற "சிவா, உள்ளே சென்று முருகனை மீண்டும் தரிசித்து வருவோம்" என்று சொல்லிக் கொண்டே மூலவரை அருகில் தரிசிக்க முன்னே செல்ல, அங்கிருந்தோர் எதுவுமே கேட்காமல் கதவை திறந்து எங்களை உள்ளே விட, விஐபி தரிசனமே கிட்டியது. கருவறை முன் சில நிமிடங்கள் நின்று தரிசித்தோம். அங்கு புனைந்த பாடலே இது.
"வல்வினை போக்கும் பழனி முருகா
வள்ளி மணாளா செவ்வேள் அழகா;
வல்லமைத் தாராய் கலியுக வரதா
வீரபோகா அருள்செய் குருநாதா
."
எங்களை உள்ளே வருமாறும், எங்களுக்காக அவர்கள் சிறப்பு தரிசன கதவை திறக்கவேண்டும் என்று பணித்தானோ? வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எல்லாம் முருகனின் செயல்.

சனி, 24 செப்டம்பர், 2016

K.B.Sundarambal கே.பி.சுந்தராம்பாள்

இன்னல்களை வென்று வாழ்ந்துகாட்டிய தாரகை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்"...
இன்னல்களைத் தாங்க முடியாமல் 1900 களில் பாலாம்பாள் தன்னுடைய குழந்தைகளுடன் காவேரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நடந்து போகும் போது, "நாம் ஏன் சாகவேண்டும்? கஷ்டங்கள் ஒரு நாள் தீரும்.. நாம் வாழ்ந்து காட்டுவோம்" என்று கூறி தாயின் மனதை மாற்றியவர்தான் குழந்தைகளில் மூத்தவரான சுந்தராம்பாள்... இசை பாடும் கோகிலமாக நடிப்புத் தாரகையாக செல்வத்தோடு விளங்கிட முருகன் அவரை இறவாமல் தடுத்தான்.
இந்தப் பதிவு அவருக்கு நினைவஞ்சலி!



ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

சபாஷ் சபரிஷ்! கனவு மெய்ப்படட்டும்!


இவர்தான் திரு.சபரிஷ் ஷட்ராக். என்னிடம் மனிதவள மேலாண்மை படித்த மாணவர். இவரைப்பற்றி நான் நிறைய சொல்லவேண்டும்.

வயது 28. இவருடைய தந்தை ஒரு தச்சர், தாயார் இல்லத்தரசி, உடன் பிறந்த ஒரு அக்கா. பள்ளியில் படிக்கும்போது இவருடைய தந்தை கண்பார்வை குறைந்து அவர்கள் வீட்டருகே ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். இவருடைய தாய் குடும்பத்தை நடத்த வீட்டு உதவி வேலைகள் செய்து மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தை ஓட்டினார். பள்ளியில் படிக்கும்போதே சபரி பகுதிநேர வேலைகள் நிறைய செய்து தன் படிப்பிற்கும் குடும்பத்திற்கும் தேவையான பணத்தை சம்பாதித்தார். அதிகாலையில்/ நள்ளிரவில் சினிமா போஸ்டர்கள் சுவற்றில் ஒட்டும்வேலை, காலையில் பேப்பர் போடுவது, பிறர் வீட்டில் சிறு பணிகள் செய்து தருவது, கூரியர் பாய், என்று பல வேலைகள் செய்தார். சிலசமயம் பெரிய அந்தஸ்திலுள்ள சமூக நிழற் கூட்டம் கண்ணிலும் பட்டுள்ளார். காலபோக்கில் இவருடைய சொந்தங்கள் இவர்களிடம் பாராமுகமாய் இருந்தனர். முதல் வகுப்பில் பிளஸ்-டூ முடித்ததும், கல்லூரியில் படிக்கவேண்டிய கட்டாயம் எழுந்தது. 

இவர்களுடைய சர்ச் குழு பாதிரியாரின் சிபாரிசு கடிதம் பெற்று அப்பகுதி கவுன்சிலரை பார்த்து உதவி கோரினார். ஒரு தனியார் கல்லூரியில் மாலைநேர வகுப்பில் அட்மிஷன் கிடைத்து BA படித்துத் தேறினார். பகலில் தனக்கேற்ற ஒரு முழுநேர வேலையைப் பார்த்தார். கால் சென்டரில் பணிசெய்தபின் கிடைத்த அனுபவத்தில் இன்று சிறுசேரியில் ஒரு பிரபல IT நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணி புரிகிறார்.

மெல்ல தன் குடும்பப் பொறுப்பை ஏற்றுகொண்டார். மணம் முடித்த அக்காள் குடும்பமும் இவர்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். “சார், சொந்தமா என் சக்திக்கேற்ப சின்னதா ஒரு கால் கிரவுண்டு நிலமாவது வாங்கி என் அம்மாவுக்கு வீடுகட்டி கொடுக்கணும். அவங்க கஷ்டப்படாம இருக்கணும்ங்கிறதுதான் என் ஆசை சார்.” என்று கண்கள் விரிய தன் கனவுகளைச் சொல்வார். தனக்குப் பிடித்த ‘அப்பாச்சி’ இருசக்கர வண்டி வாங்கினார். குடும்பம் சற்று பெரிய வீட்டிற்கு குடிபோனது. பொருளாதாரம் வலுபெற்றது. பணத்தின் அருமை உணர்ந்தவர் என்பதால், சிக்கனமாய் பணத்தை செலவழித்தார். அவரிடம் இன்னும் ஒரு குழந்தைத்தனம் தெரிந்தது. சற்றும் கர்வமோ பந்தாவோ இல்லை. தன் தாயின் சம்மதத்தோடு தன்னை காதலித்த பெண்ணை கரம் பிடித்தார். இன்று ஒரு வயது குழந்தை உள்ளது. மகிழ்ச்சியான கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார்.

இன்னல்களுக்கிடையே கடுமையாய் உழைத்து வாழ்க்கையில் முன்னேறிய பெரிய மனிதர்களைப்பற்றி நாளிதழ்களில் படித்திருப்போம். ஆனால் இவரை கண்கூடாகக் காண்கிறேன். கெட்டு போகக்கூடிய வாய்ப்புகள் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் சபரிஷின் மனம் அதை நாடிப் போகவில்லை. எந்த தீய பழக்கமும் இல்லாத ஒரு கண்ணியமான நபர். தன் லட்சியத்தை அடையும் வழியில் எண்ணத்தை சிதறவைக்கும் பல தடைகளை தாண்டி வந்துள்ளார். கர்த்தரின் கிருபை பெற்ற நல்லொழுக்கமானவர். தன் வருவாயில் தவறாமல் ‘பங்குப்பணம்’ கொடுக்கும் இறைப்பற்று மிக்கவர். என்னிடம் பயின்றோர் எத்தனையோ பேர். அதில் சிலர் மட்டுமே மனதில் தங்குவர். அவர் தன் கடந்தகாலம் பற்றி யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் என்னிடம் மட்டும் பகிர வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது என்று தெரியவில்லை என்பார். இவருடைய கதை இக்கால இளைஞர்களுக்கு ஊக்கம்தரும்!  

"Really inspiring. I need to write about you in my next book" என்று சொல்வேன். அப்போது அவருக்கு பிரத்தியேகமாய் ஒரு ஆங்கிலக் கவிதை எழுதிக் கொடுத்தேன். படித்துவிட்டு நெகிழ்ந்துபோனார். இன்று சபரிஷ் என்னுடைய கட்டுரையின் மையக்கருத்தாக இடம்பெற்று விட்டார். அவருடைய கனவு மெய்ப்பட என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

திங்கள், 5 செப்டம்பர், 2016

அன்றே இப்படியொரு விளம்பரம்


சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்வந்த பழனி தலவரலாறு கையேடின் ஒரு பகுதியை பாருங்கள். அந்த போகர்7000 பாடல்களை படித்தாலே போதும், யார்வேண்டுமானாலும் எளிதில் தங்கம் செய்யலாம், பல அற்புதங்கள் நிகழ்த்தலாம் என்று அப்போதே இது போன்று விளம்பரப்படுத்தினர் என்றால், இன்றைக்கு கேட்கவா வேண்டும்? இப்படியெல்லாம் விற்பனை யுக்தி இருந்துள்ளது. அந்த நூல் விலை ரூ.1 என்று இருந்தது.

இதை நம்பிக்கொண்டு, பேராசையால் தங்கம் செய்யப்போய், எத்தனை பேர் சொத்து இழந்து சிங்கி அடித்தார்களோ? பாடல்களை ஊன்றிப் படித்தால்தான் தங்கம் யாருக்கு வாய்க்கும் என்று போகர் சொன்னது புலப்படும். தங்கத்துக்கு அடுத்தபடியா 'முப்பு' ஆர்வம் அதிகமாயிடுச்சு. ரசவாதம் செய்து முடிகிறதுக்குள்ள 'வாதமும் மூப்பும்' வந்து சேர்ந்துடும். அருளாளருக்கு எந்த சிரமுமின்றி சித்தர்களின் தங்கம் தானாக கைக்கு வந்து சேர்ந்திடும்.



வியாழன், 23 ஜூன், 2016

இராமாயணத்தின் பின்னணி

நந்தி, பிரம்மன், திருமால், முருகன், இந்திரன், இடும்பன், சூரபத்மன், வீரபாகு; தசரதன், இராமன், இராவணன், அனுமன்; கிருஷ்ணன், பீமன்,... இவர்கள் யார்? தன் ஜனன வழித்தடத்தை போகர் விளக்கிக் காட்டுகிறார். போகரே பல அவதாரங்களை எடுத்து அவை அப்படியே நிலைத்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இதெல்லாம் சாத்தியமா? அஷ்ட சித்தியால் ஒருவரே பல ரூபங்கள் எடுக்கலாம்.
இராமாயணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன செய்ய வேண்டும் என்பது ராமாவதாரம் சிருஷ்டி ஆகும்போதே முடிவானது.ஈசன் பணித்தபடி இந்திரன் தசரதனாக வருகிறார். அவருக்கு மகனாக போகர் 'இராமன்' என்ற பெயருடன் பிறக்கிறார். 'நீதான் பிறந்து விட்டாயே இனி எனக்கு என்ன வேலை? நான் என் இந்திர பதிக்கு போகட்டுமா?" என்று தசரதன் கேட்க, அதற்கு இராமன் (போகர்) 'உன் பதிக்கு போவது நல்ல விஷயம்தான், ஆனால் நான் வனவாசம் போன பின் நீ போ' என்றார். இராமன் பிறக்கும் போதே ஆரண்ய காண்டம் கதையும் சொல்லி விடுகிறார் போகர். நந்தியம் பெருமான் ஒவ்வொரு அவதாரத்திலும் தீயவராக வேடம் ஏற்று வதைப்படுகிறார். இதில் இராவணன் கதாபத்திரம் அவரே.
இராமாயணம் என்றொன்று உண்மையில் நடந்ததா? கைகேயியின் பேச்சைக் கேட்டு தசரதன் ஏன் இராமனை காட்டிற்கு அனுப்ப வேண்டும்? ராமன் சீதையை சந்தேகித்தது சரியா? ராவணன் நடந்து கொண்ட விதம் தகுமா? வாலியை மறைந்திருந்து இராமன் கொன்றது ஷத்ரியனுக்கு அழகா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு பட்டிமன்றங்களில் பேசுவதில் அர்த்தமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் திரைகதை, வசனம், இயக்கம், எல்லாமே திட்டமிட்டப்படி நடந்துள்ளது. நாம் அதைப்பற்றி தணிக்கை செய்யவோ விவாதிக்கவோ ஒன்றுமில்லை.
ஆக, அவதாரங்களின் கதாபாத்திரமும் நடக்கவுள்ள கதையும் முன்பே ஈசனால் தீர்மானிக்கபட்டது என்று தெரிகிறதா? போகர் ஜெனன சாகரம் நூலிலிருந்து ஒரு பக்கத்தை இங்கே படத்தில் காண்கிறோம்.

சனி, 7 மே, 2016

நீதியரசரும் சித்த வைத்தியரும்


நீதிபதி வி.பலராமையா என்பதைவிட 'வைத்திய ரத்னம்' டாக்டர் பலராமையா என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் பல வைத்திய நூல்களை இயற்றியுள்ளார். இவரே காயகற்பம் தயாரித்து உண்டவர். அதன்பிறகு சில மாதங்களில் அவர் உடலில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதை சொன்னார். நீண்டநாள் வாழ்ந்தவர்.
நான் சிறுவனாக இருந்தபோது இவர் இல்லத்திற்கு 1980ல் என் பாட்டனரோடு ஒரு சமயம் அரும்பக்கத்திற்கு சென்ற ஞாபகம் இருக்கிறது. என் பாட்டனார் கட்டட பொறியாளர் என்றாலும் சித்த வைத்ய குடும்ப பின்னணி கொண்டவர். சில வைத்ய முறைகளை பற்றி இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டனர். அவர் தாய் மொழி தெலுங்கு. வைத்யன் நல்லவித மருந்துகளை ஒருவருடைய நாடிபார்த்து, தேகம் பார்த்து, ஆராய்ந்தபின் தரவேண்டும். எல்லாமருந்துகளும் எலோருக்கும் ஒவ்வாது என்பார். 'நே இச்சின மாத்ரா வைகுண்ட யாத்ரா' என்று இருக்ககூடாது என்று தமாஷ் செய்வார்.
அவர் வாழ்ந்த வீட்டில் இன்றும் ஒரு பதிப்பகம் உண்டு. 'அருள் ஜோதி பதிப்பகம், 10, ஜட்ஜ் பங்களா, அரும்பாக்கம், சென்னை 600106'. இவருடைய நூல்களை இந்த பதிப்பகம்தான் வெளியிட்டது. அவருக்குப்பின் இன்று அவருடைய சந்ததியினர் சித்த வைத்யா தொழில் செய்வதாக அறிந்தேன். அவர் எழுதிய நூல்களின் பட்டியல் கொடுத்துள்ளேன். சித்த மருத்துவத்தில் விருப்பமுள்ளவர் அதை வாங்கி பயன்பெறவும். பாடல்களும் விளக்கமும் உண்டு. நூல் விபரம்:
-----------------
1.சித்தர் மெய்ப்பொருள்
2.அகத்தியர் 12000 தொகுப்பு
3.வாதவைத்தியத்துக்காதி
4.பதார்த்த குண போதினி
5.சாகாக்கலை
6.சித்தர் கைகண்ட மருந்து
7.உங்கள் வீட்டில் சித்தர் மருந்து
8.கடவுளும் மோட்சமும்
9.முப்பு குரு (Elixir of life)
10.பொன் மொழிகள் ஆயிரம்
11.அகத்த்தியர் அந்தரங்க தீட்சாவிதி
12.சித்த மருந்து செய் பெரு முறைகள்
13.அனுப சித்த வைத்திய முறைகள்
14.THE GREATNESS OF SIDDHA MEDICINES
15.சரீரத்துவம்
16.உயிர் நீட்டும் மூலிகைகள்
17.புற்று நோயை குணபடுத்தலாம்
18.அமுத கலசம் (Bowl of nectar)
19.வள்ளலார் சித்தியா மரணமா?
20. நீடுழி வாழ வழி
----------------------
இங்கே சில அன்பர்கள் பல மூல நூல்களை ஆரியர்/திராவிடர் யாரோ மறைத்து விட்டதாய் முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தார். சுமார் 60 வருடங்கள் முன்பு வரை அந்நூல்கள் இருந்தது. பிறகு அவை எல்லாம் அச்சிலிருந்து நிறுத்தப்பட்டது. சில நூல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னமே அப்போதைய சர்கார்/ அரசாங்கத்தால் முடக்கப்பட்டது என அறிந்தேன். சில நூல்கள் பாதிதான் அச்சில் உள்ளது, சிலது தொடர்ச்சியாக இல்லை. தஞ்சை நூலகத்திலும் இல்லை.
நபர்கள் அதை துஷ்ப்ரயோகம் செய்ய வாய்ப்புண்டு என்பதாலும் அதில் சில நவீனகால விஷயங்கள் பொதிந்துள்ளபடியால் அவற்றை தவறாகவும் ஆபத்து விளைவிக்கவும் பயன்படுத்தலாம் என்பதை கருதி பொதுசுற்றிலிருந்து நீக்கப்பட்டது என அறியமுடிந்தது. வேறு காரணங்கள் தெரியவில்லை.
அகத்தியர் 12000, போகர் 12000 போன்ற நூல்கள் இப்பட்டியலில் உண்டு. எங்கேனும் சித்தர் குடும்பத்தில் இதன் பிரதி பத்திரமாகவும் ரகசியமாகவும் இருக்கும். அவ்வளவு ஏன், இலங்கை, சீனா, ஜெர்மனிலும் இந்த அறிய நூல்களின் பிரதி போயிள்ளது. மூலநூலின் பிரதியா அல்லது அவற்றில் இடை செருகல்கள் உள்ளதா, திருத்தி அமைக்கப்பட்டதா என்பதை அறியேன்.
காரணம் தெரியாத வரை, நம் வாந்தி பேதி மலச்சிக்கலுக்குகூட ஆரியர் / திராவிடர் மீது பழிபோடுவது நமக்கு சௌகரியமாக உள்ளது. சிரிப்புதான் வந்தது..!

வியாழன், 5 மே, 2016

சுவாமி கணேஷா நந்தகிரி

இவர் சுசீந்திரத்தில் பிறந்தவர. பிறகு 4 வயதில் ஒரு மராட்டிய குடும்பம் இவரை தத்து எடுத்தது. அன்று முதல் ஷிர்டி சாய்பாபாவிடமே தஞ்சமானவர். அவரிடம் விளையாடி, மிட்டாய் வாங்கி, அடியும் வாங்கியவர். நூறாண்டுகளுக்கு முன் பாபா தன்னுடைய குடலை வாய்வழியே வெளியில் எடுத்து அலசி வேலி மீது காயப் போடுவதையும், மீண்டும் விழுங்கியதையும் நேரில் கண்டவர். பாபாவின் கைப்பிடித்து நடந்து போனவர். பாபா தன்னுடைய கௌபீனத் துணியை இவர் மீது வீசியதை இறுதி வரை பாதுகாத்து வந்தார். அவர் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை பூசித்து வந்தவர். இறுதிவரை இவர் கண்ணாடி, பல்செட்டு அணியவில்லை, குரல் கணீரென்றே இருந்தது, மினுமினுவென தோல் சுருக்கமில்லாமல் இருந்தது. எந்த சிரமமும்மின்றி சாதாரண செல் போன்கூட உபயோகித்தார் என்றால் பாருங்களேன்.
இவர் சென்ற ஆண்டு தன்னுடைய 107வது வயதில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் தானே விருப்பபட்டு இடம் தேர்வு செய்து 29-4-2016 அன்று ஜீவ சமாதி ஆனார். ஏன் இந்த இடம் வேண்டும் என்று மெய்யன்பர்கள் கேட்டதற்கு "எனக்கு முன்னே பாபா இங்கு வந்து விட்டார். நானும் அவருடன் இருக்க வேண்டும். ஷீரடிக்கு அடுத்தபடியாக இங்கு வரவுள்ள கோயில் பிரசித்தமாகும்" என்றாராம். சமாதி மற்றும் பாபாவின் கோயில் கட்டுமான வேலைகள் பெரிய அளவில் ரூ.19 கோடி செலவில் திட்டமிட்டுள்ளார்கள்.
Image may contain: 1 person

அவர் பங்குகொண்ட மூன்றாவது கண் தொலைக்காட்சி நிகழ்ச்சி.
https://www.youtube.com/watch?v=lmuutStf8oA
https://www.youtube.com/watch?v=9gKKEE_pnEY

Image result for swami ganesha nandhagiri, madhuramangalam samadhi

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

நூலை யார் பதிப்பிக்க வேண்டும்?


போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலில் பல சூட்சுமங்கள் நிறைந்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சுவடியிலிருந்து முதன் முதலில் மூலப்பாடல் தொகுப்பை அச்சிட்டவர் காலஞ்சென்ற பி.ராமச்சந்திரன் அவர்கள் (தாமரை நூலகம்).

அதன்பின் நூலுக்கு முதல்முறையாக விளக்கவுரைச் சுருக்கத்தை அச்சிட்டவர் திரு. நல்லதம்பி (கற்பகம் புத்தகாலயம்). தானியங்கி அச்சு யந்திரத்தைக் கண்டுபிடித்து வடிவமைத்த சித்தரே தன் நூலுக்கான விளக்கவுரையை எப்படிபட்டவர் யந்திரத்தில் அச்சிட்டு வெளிக்கொண்டு வருவார் என்பதை, பதிப்பகம்-பதிப்பாளர் பெயரின் மறை பொருளை இந்நூலின் வாழி-விருத்தத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டார். இங்கே பூமாது = கற்பகவல்லி=கற்பம்,  புனிதன்= நல்லவன்= நல்லதம்பி. மேலோட்டமாக விருத்தப்பாடலை வாசித்தால் இதன் நுட்பம் புலப்படாது. இதை ஏன் மற்ற பத்திப்பாளர்கள் எடுத்துச் செய்யவில்லை? ஏனென்றால் அவர்களுக்குப் பிராப்தமில்லை.

நான் வளைவு போட்ட வாக்கியத்தின் பொருள்: "இந்த நூல் விளக்கத்தின் கருத்தை உலகத்தோர் அறியச்செய்ய யந்திரத்தில் அச்சிட்டு வெளிக்கொண்டு வரும் அந்த மகத்துவ புனிதன் வாழ்க, இதை படித்த யாவரும் வாழக."



திங்கள், 18 ஏப்ரல், 2016

போகர் ஜெனன சாகரம் - Bogar JENANA SAAGARAM


போகர் ஜெனன சாகரம் (பதவுரை சுருக்கம்)    பக்கங்கள் -80   ரூ.60/-
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2  சுந்தரம் தெரு, தி.நகர், பாண்டி பஜார், 
சென்னை  6௦௦௦17  Ph: 044- 24314347



இந்நூலை ஆன்லைனில் பெற http://www.marinabooks.com/detailed?id=4%205010


சனி, 16 ஏப்ரல், 2016

போகர் சித்த சக்தியை இழந்தாரா?

"மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்த புலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில் இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார். தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம் வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று சொன்னாராம். அதன்படி முருகன் சிலை வடித்து அந்த தண்டத்தையே தன் குருவாக பாவித்து அதற்கு உபதேசம் செய்வதுபோல் செய்து, குரு போகருக்கு எல்லாமே புலிப்பாணி சொல்லிகொடுத்தார்." இதுதான் அந்த செய்தி..

போகர் சீனத்தில் சக்தி இழந்ததையோ, சீடர் புலிப்பாணி அவருக்கு குரு உபதேசம் செய்ததைபற்றியோ எங்கேனும் சித்தர் போகர் ஒரு இம்மிகூட தன் நூலில் குறிப்பிடவில்லை..ஆனால் இதெல்லாம் இணையத்தில் வலம் வந்த பிறகு அதுவே ஆதாரக் குறிப்பாக சில கட்டுரைகளிலும் பல சமீபத்திய நூல்களிலும் வந்து இன்று வரை நிலைக்கிறது. அப்படி இருந்திருந்தால் கிபி2ல் அவர் சீடரான மகாவதார் பாபாஜி இந்த உண்மையை சொல்லி இருப்பாரே! போகர் அங்கே சாதாரணமான ஒரு முதியவர் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அதற்கு சக்தி கொடுத்து குண்டலினியை தட்டி ஏற்றினார். இதை அகத்தியர் ஒரு சமயம் போகரிடமே சொல்லி "பூமிதனில் கண நேரம் தங்கா சித்து, பரங்கியர் தேசத்தில் போகன் என பெயர்கொண்டாயே" என்று கூறினார். தன்னுடைய போகர் ஜெனன சாகரத்திலும் இது பற்றி ஏதும் சொல்லவில்லை.. கோரக்கரும் இதைப்பற்றி சந்திரரேகையில் சொல்லவில்லை.  

 Image result for கிரியா பாபாஜி
அப்படி என்றால் பழனி நவபாசான சிலை செய்வதற்கு முன்பாகவே பெரிச்சியூர் பைரவர் சிலை, போகர் கேசம் -பூம்பாறையில் ஒரு முருகன் சிலை என்று தசபாசானம், பஞ்சபாசானம் போன்ற கலவையில் ஒரு முன்னோட்டமாக செய்தது எதற்கு? அப்போது மட்டும் அவருக்கு சித்த சக்தி இருந்ததா? காலத்தால் பரவி வரும் கதைகள், தல புராணத்தோடு இணைந்து விடுவதால் அதுவே ஒரு புதிய பரிணாமம் எடுத்து நிகழ் காலத்திற்கு ஆதாரமாக நின்றுவிடுகிறது. சித்தர்களின் நூலாதாரங்களை மட்டுமே நாம் நம்பிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆகவே, லாவோட்சு என்ற சீன அறிஞர் அங்கே பன்னிரண்டாயிரம் வருடங்கள் இருந்தார் என்பதை சீனத்து வரலாறும், தான் அத்தனை வருடங்கள் அங்கே இருந்ததாக போகர் தன் நூலிலும் சொன்னது ஒத்துப்போகிறது.. நினைத்த மாத்திரத்தில் திருமூலரும் காலங்கியும் இவருக்கு சக்தி தர இருக்கும் போது, புலிப்பாணி மூலம்தான் மீண்டும் கற்றார் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆதாரமுமில்லை..  சீனத்தில் மூதறிஞர் லாவோட்சுவாக இருந்தது தன் குரு போகர்தான் என்ற பிற்பாடு உண்மையை உலகிற்கு சொன்னதே மகாவதார் 'கிரியா' பாபாஜிதான் . 

போகரும்-புலிப்பாணியும், தங்கள் எல்லா பிறவிகளிலும் குரு-சீடர் ரீதியில்தான் வந்துள்ளர்.. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் என்ற சமீபத்திய அவதாரம்வரை எங்குமே சிஷ்யன் (சித்தையா) தன் குரு வீரபிரம்மத்திற்கு கற்றுக் கொடுத்ததாய் எனக்குத்தெரிந்து நிகழ்வு இல்லை. இன்னும் ஆய்வு செய்ததில் பல ரகசியங்கள் புலப்பட்டது.. தான் போகராக இருந்து மூலிகைகள் பூநீறு வஸ்துக்களை கண்டறிந்த ஊர்களில் எல்லாமே தன் மறு பிரவேசங்கள் நிகழ்ந்துள்ளது என்பதே என் ஆய்வில் அறிந்தேன்.