About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 11 ஜனவரி, 2023

'விபூதி சித்தர்' ஸ்ரீ சுப்பாராவ்!

ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனுடைய இளைய மகள் இளவரசி அம்மங்கதேவியை சாளுக்கிய பேரரசின் வேங்கிநாடு ராஜநரேந்திர மன்னனுக்கு மணம் செய்து கொடுத்தான். அப்போது தஞ்சையின் பல சதுர்வேதிமங்கலம் பகுதிகளிலிருந்து 18 அக்னிஹோத்ரம் பிராமணர்களைத் தேர்ந்தெடுத்து இளவரசியுடன் சீதனமாக 1025ஆம் ஆண்டு அனுப்பினான். இவ்விதமாக மத்யார்ஜுனம் @ திருவிடைமருதூர் கிராமத்திலிருந்து போனவர்தான் இவருடைய மூதாதையர்.

ஸ்ருங்கேரி ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் 1336ஆம் ஆண்டில் தோற்றுவித்த விஜயநகர பேரரசானது ஹம்பியைத் தலைநகராகக்கொண்டு இயங்கியது.  கிருஷ்ணதேவராயரிடம் ஆலோசகர் மற்றும் நிதி வசூல் பொறுப்பில் பணிபுரிந்தார் நம் விபூதி சித்தர் தாத்தா, மத்தியார்ஜுனம் ஸ்ரீ சுப்பாராவ். இவருடைய வேதசாஸ்திர திறமைக்கும் புலமைக்கும் வெகுமதியாக ஒரு ஸ்படிக லிங்கம் மற்றும் 9 சாளக்கிராமங்களும் மன்னர் தந்தார். 1529ஆம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலமான பிறகு தென்னிந்திய பேரரசு சரியத் தொடங்கியது. சுல்தான்கள் படை எடுப்பினால் சாம்ராஜ்ஜியம் 1646இல் மொத்தமாக வீழ்ந்தது.  ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மறைந்ததும் அங்கே வாழப்பிடிக்காமல் புலம் பெயர்ந்து இங்கே காவிரிக்கரையில் குன்னத்தூர் அய்யம்பாளையம் அடைந்தார். இங்கேயே வாழ்ந்து 1561இல் சமாதி முகம் சென்றார். இவர் வம்சாவளியில் 13ஆவது தலைமுறையாக வருகிறேன்.

-எஸ்.சந்திரசேகர்





பூவழலை எங்கே பூக்கும்?

 டமரானந்தர் அருளிய சிவநூல் சூத்திரம் பதினேழு என்ற நூலிலுள்ள பாடலைப் பார்க்கலாம். முப்பூ சரக்கை ‘சூட்சுமப்பூ’ ‘பூவழலை’ என்று சித்த பரிபாசையில் சொல்வார்கள். நமக்குத் தெரிந்து வழலை என்றால் கபம், சவுக்காரம் சோப்பு மட்டும்தான் நினைவுக்கு வரும். இந்த வழலை எனும் முப்பூவைச் சேகரிக்கும் முறை, அதன் மேன்மை, காயாதி கற்பத்தில் சிறிது சேர்த்தால் அதன் செயல்பாடு என்ன ஆகியவற்றைச் சொல்லியுள்ளார்கள். 

பூநீறு, கற்சுண்ணம், கல்லுப்பு ஆகியவற்றின் கலவை என்றும் சொல்வதுண்டு. முப்பூ என்பது நாம் சேகரித்துச் சமைக்க வேண்டிய வஸ்து இல்லை. அது இறைவனின் சிருஷ்டியில், அதீத வெப்பத்துடன் மின்னல் வெட்டும்போது கற்பாறைகள் உருகிட உற்பத்தியாகி மண்மீது தயாராகவே இருக்கும் பொருள் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அகத்தியரும் தன் அமுத கலைஞானத்தில் இதையே சொல்லியுள்ளார். 

ஆக, இந்த அண்டம் என்ற பிரணவத்திலுள்ள நாதவிந்து பொருள்களை எல்லாம் யோகமார்க்கத்தில் ஒன்று சேர்த்துச் சமைத்தால், நம் பிண்டத்தில் இடகலை பிங்கலை சுழுமுனையில் சங்கமிக்க நம்முள் முப்பூ சுண்ணம் முடிவாகும் என்பது சித்தர்களின் மறைப்பு. சரக்கலை ரகசியம்! 

முப்பூவிலும் ஆண் பெண் அலி தன்மைகள் உண்டு. ஆனால் இக்கால வைத்தியர்களோ, அப்படி எந்தப்பொருளும் உண்மையில் இல்லை, அது மறைப்பாகச் சொல்லப்பட்ட ஏதோவொன்று என்று சொல்வார்கள். வளர்பிறையில் வழலை சேகரிக்க உகந்த இடங்கள் எவையவை என்று போகர் தன்னுடைய பெருநூலில் சொல்லிக் காட்டியுள்ளார். 

கலியுகத்தில் பேராசைக் கொண்ட மனிதர்களின் கைக்குப் போகக்கூடாது என்பதால் அதற்கு நிறைய மறைப்புப் பெயர்களைச் சித்தர்கள் சொல்லி வைத்தனர். சல்லிவேர், சிப்பி, அமுரி, பழச்சார், குருவண்டு, இந்திரகோபம், கருங்கோழி, வழலை, சுரோணிதம், பனிக்குடம், பேரண்டம், விந்து, தலைபிண்டம், கல்லுப்பு, சவுட்டுப்பு, வெள்ளைக்கல், அண்டக்கல், அம்மம்மா என்று எண்ணிலடங்கா பெயர்களை உள்ளன. தனித்தனியே பிரித்துப் படித்தால் ஒவ்வொன்றும் விபரீத அர்த்தத்தைத் தரும். 

சூரியன் சந்திரன் அக்னி மூன்றும் சேர்ந்து இயற்கையில் நடத்தும் வேதியல் மாற்றங்களால் முப்பு கிடைக்கும் என்கிறது டமரானந்தர் பாடல். இயற்கைப் பாஷாணங்கள் எல்லாமே ஆயுள் விருத்தி காரணிகளாகும். ரகசியமாய்க் காக்கப்படும் இம்மூலக்கூறுகளின் உற்பத்தி ரகசியங்கள் சாமானியனுக்கு தண்டோரா போட்டு வெளியிடலாகாது என்பது சித்தர்கள் பின்பற்றும் நெறி. மீறி ரகசியத்தைச் சொன்னால் தலை சிதறி வெடிக்குமாம். 

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 22 டிசம்பர், 2022

முக தரிசனம் தந்த சித்தர்!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி, குன்னத்தூர் அய்யம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயிலை ஒட்டியுள்ள வயல்கள் சூழ் கால்வாய் அருகேயுள்ள எங்கள் மூதாதையர் ஸ்ரீ மத்யார்ஜுனம் சுப்பாராவ் @ விபூதி சித்தரின் சமாதி பீடம் உள்ளது.

சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தபோது விபூதி சித்தர் தன் முகத்தைக் காட்டியுள்ளார். தரையிலிருந்து கீழே சமாதி குழிக்குள் எட்டிப் பார்த்தால் எப்படித் தெரியுமோ அவர் முகம் அப்படித் தெரிகிறது. அவர் சமாதி பிரவேசம் செய்த காலம் 1561 AD. அப்போது அவர்க்கு வயது 54.

ஜூலை 2022 ஆடி மாதம் குருபூர்ணிமா அன்று பீடம் ஸ்தாபிதம் ஆனது. அப்போது எடுத்த ஒரு காணொளியிலிருந்து இப்போதுதான் படம் பிடித்துப் பார்க்கிறேன். முதல் படத்தில் தலையில் தொங்கும் சடை, நீண்ட தாடி, காதில் ருத்ராட்ச குண்டலம், அகலமான நெற்றிக்கு மேலே தலையில் சூர்யசந்திர சிகை ஆபரணமும் தெரிகிறது. இப்போது 460 வருடங்கள் கடந்து போயுள்ளது. சமாதியில் அமர்ந்தது முதல் இன்றுவரை தன் இருவேறு காலகட்டத்தின் முகங்களை இதில் வெளிக்காட்டியுள்ளார். ஓம் நமசிவாய.🙏

அவர் பூசித்து வந்த ஸ்படிக லிங்கமானது தற்போது பங்காளிகள் வம்சத்தாரிடம் புதுவையில் உள்ளது.

-எஸ்.சந்திரசேகர்











ஞாயிறு, 18 டிசம்பர், 2022

மஞ்சள் கயிறு!

 மணமான பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பையில் புற்றுநோய் வருவது இக்காலத்தில் அதிகரித்துவிட்டது. இராமாயணம் காலம் முதல் கடந்த நூற்றாண்டுவரை சுமங்கலிப்பெண்கள் அனைவரும் தாலி அணிந்து வந்துள்ளனர். மஞ்சள் கயிறு அணிவது என்பது நம் சம்பிரதாயம் என்றாலும் அது மருத்துவ ரீதியாக முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதை இக்காலப் பெண்கள் அறிவதில்லை. 


திருமணத்தில் தாலிக்கயிறு கட்டுவதோடு சரி. அதன்பிறகு அடுத்த ஓராண்டுக்குள் அது கழட்டி வைக்கப்படுகிறது. தாலியில் தொங்கும் திருமாங்கலியத்தைச் சுமார் நான்கைந்து பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியில் கோர்த்துப் போட்டுக்கொள்கின்றனர். தாலிக்கயிறு கழுத்தில் இருந்தால் “ஐயோ பாவம், பரம ஏழை போலிருக்கு” என்று நினைக்கும் காலமிது.

நான் அறிந்தவரை முன்பெல்லாம் தாலியைத் தொப்புள்வரை தொங்கவிடும் பழக்கம் இருந்தது. ஆனால் அது காலப்போக்கில் நீளம் குறைந்து முற்றிலும் காணாமலே போய்விட்டது.  மஞ்சள் தாலிக்கயிறு கட்டுவதே உபத்திரவம் என்றால் தாலம் பனையோலையைக் கட்டிகொண்ட அக்காலத்துப் பெண்களை என்ன சொல்வார்களோ? 

தாலிக்கயிற்றுக்கு வாரம் இருமுறையேனும் மஞ்சள் அரைத்துப்பூசியும், மேனிக்குத் தேய்த்துக் குளித்தும் வந்தனர். இது எதற்கு? மங்கலப் பொருள் மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் சருமநோய் வராமல் தடுக்கத்தான். தடியான மஞ்சள் சரடு மார்பகங்கள் மேல் எப்போதும் உராய்ந்துகொண்டே இருப்பதால் புற்றுநோய் என்பது கேள்விப்படாத ஒன்றாகும். அதுபோக அக்காலத்தில் குறைந்தது ஐந்து முதல் எட்டு குழந்தைகள் பெற்றும், பால் கொடுக்கும் காலம் நீடித்திருந்ததாலும் புற்றுநோய் என்பது வரவேயில்லை. கருப்பையும் பிரச்சனைகளின்றி இருந்தது என்பது உண்மை. மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆனபின் தாலிக்கயிறு மீண்டும் கழுத்தில் ஏற நீண்ட காலமாகும், கீமோ சிகிச்சையின் பின்விளைவால் தலைமுடி கொட்டி மொட்டையாகிறது. ஆக ஒரு கைம்பெண்ணாகவே தோற்றத்தை ஆக்கிவிடுகிறது.

நான் அறிந்த ஒரு வயதான பாட்டி அக்காலத்தில் பதினாறு வயதில் திருமணமாகிப் பன்னிரண்டு குழந்தைகள் பெற்றாள் என்றும், அதில் மூன்று குழந்தைகள் இறந்தன என்றும் கேள்விப்பட்டுள்ளேன். ஆக அந்தப் பாட்டி பன்னிரண்டு வருடங்கள் வயிற்றிலும், பன்னிரண்டு வருடங்கள் இடுப்பிலும் சுமந்தே சர்வீஸ் போட்டுவிட்டாள்’ என்று கிண்டல் அடிப்பேன். நான் பார்த்துள்ள அக்கிழவி மூப்பு காரணமாக இறந்தாளே தவிர பெரிய வியாதி எதுவுமில்லை.   

ஆனால் இக்காலத்தில் பிரத்யேகமாகக் கயிறு இல்லாததால் திருடனுக்குச் சங்கிலியுடன் திருமாங்கலியமும் போனஸ் வேட்டையாக அமைந்துவிடுவது அவனுடைய அதிர்ஷ்டம். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அவ்வீட்டுப்பெண் கணவனுடன் வெளிநாட்டுக்குப் போகவேண்டி இருப்பதால் தன் மாமியாரின் அனுமதியுடன் கல்யாணமான சில மாதங்களிலேயே நாகரிகம் கருதி தாலியைக் கழட்டி குங்குமத்தையும் எடுத்துவிட்டாள். சந்தோஷம்!  அவள் காலில் மெட்டியாவது இருந்ததாவொனப் பார்க்கத் தவறிவிட்டேன்.

அப்படிப்பார்த்தால் மஞ்சள் தாலிக்கயிறு அணியும் பழக்கமில்லாத மற்ற மதத்தினர்களுக்கு வரணுமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் உண்மைதான்! அவர்களுக்கும் வருகிறது. மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கும் invasive carcinoma பரவலாக உள்ளது தெரிகிறது. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு உலகெங்கும் நோய் தாக்கம் என்பது அதிகரித்துள்ளது கண்கூடு. 



மஞ்சள் பூசிய கயிற்றையும் தாண்டி எப்படியோ மரபணு வழியாகவும், ஹார்மோன் சமநிலை இல்லாமையாலும் புற்றுநோய் தாக்கம் வந்தால் அது கர்மா/ விதி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அகத்தியர் கன்மகாண்டம் நூலில் இதைப்பற்றி விவரிக்கும்போது “வாரணமாய் நடத்துவித்த கன்மத்தாலே வந்ததடா கைக்கடங்கா நோய்களெல்லாம் மனிதர்க்காமே” என்கிறார்.

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

நீர் உயர நெல் உயரும்!

குலோத்துங்க சோழனின் முடிசூட்டும் நாளன்று அவனை ஔவை பிராட்டி வாழ்த்திப் பாடினாள். அப்பாடலை நாம் சிறுவயதிலேயே படித்துள்ளோம். 

"வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்"

வரப்பு உயர்ந்தால் நீர் உயரும். நீர் உயரத் தேங்கினால் நெல் உற்பத்தி எப்படி உயரும்? பயிர்கள் நீரில் நின்று அழுகிப் போய்விடுமே என்று பலர் நினைக்கலாம். வரப்பு என்பதை ஏரி/ குளம்/ வயல் கரைகள் என விளங்கும். நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்தால் விவசாய பாசனம் சிறப்புறப் பயிர் சாகுபடியும் உயரும் என்பது பொருளாம்.

அக்காலத்தில் வரப்பில் நீர் மட்டம் உயரவுயர நெற்பயிர்கள் மூழ்காமல் உயர வளரும் தன்மையைக் கொண்டிருந்தன. புயலைத் தாங்கியும் மணிகள் கொத்துக்கொத்தாய்த் தலை வணங்கி நிற்கச் சாகுபடியும் உயர்வாய் இருந்தது. பஞ்சம் பட்டினி இல்லாமல் குடிகளும் உயர்வாக வாழ்ந்தனர்.

காட்டுயானம், கருங்குறுவை, தூயமல்லி, தேங்காய்ப்பூ சம்பா ஆகியவை பாரம்பரிய நெல் ரகங்கள். நாம் கேள்விப்படாத பல ரகங்களின் நெல் விதைகளை ஆங்காங்கே விநியோகம் செய்யும் மையங்கள் இன்று உள்ளன. காலஞ்சென்ற நெல் ஜெயராமனே சுமார் 170 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்தார்.

இக்காலத்தில் பயிரிடும் குட்டை ரக நெற்பயிர் பற்றி ஔவை தன் பாடலில் சொல்லவில்லை. அன்று மாதம் மும்மாரி பொழிந்தது, வருடம் முப்போகம் நடந்தது. ஆனால் இன்று அறுவடை என்றால் தை மாதம் மட்டும்தான் என்று நினைக்கும் அளவில் ஒரு போகமாகி விட்டது. இன்று வரப்பில் ஒரு பருவ மழைக்கே அதிக நீர் தங்கினால் பயிர் அழுகிப்போகும் நிலை இருப்பதுபோல் அன்று எதுவுமில்லை. யானையை மறைக்கும் அளவில் எட்டடி பத்தடி வரை உயரம் வளரும் ரகங்களாகும். பாடல் மூலம் ஔவை நமக்கு விவசாயப் பாடம் நடத்திவிட்டாள்! 👍


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கற்பகம்!

கண்டேனே தசநாதம் கேட்கக்கண்டேனே

கண்ணாக லலாடம் திறக்கக் கண்டேனே

விண்டேனே பரமன் ஆட்டம் விண்டேனே

விளையாட்டை வாய் பிளக்க விண்டேனே

உண்டேனே கபால அமுதமே உண்டேனே

உள்நாவால் பாலும் சிந்தவே உண்டேனே

கொண்டேனே சக்தி ஏற்றிக்கொண்டேனே

காயமும் கல்லாய் ஆக்கிக்கொண்டேனே!

-எஸ்.சந்திரசேகர்



ஓம் நமசிவாய 🌿

குடையாட குழலாட சாமரம் அசைந்தாட

குவித்த பல விழிகளும் கரங்களுமாட

விடையாட மதியாட மனமகிழ் உமையாட

வாதித்த சித்தர்களும் தவரிஷிகளுமாட

சடையாட புவியாட ஈரேழு புவனமுமாட

சேவித்த உன் அடியார்கள் வினையுமோட

நடையாட நயமாக ஓதும் நான்மறையாட

நாதாந்த பரவெளியில் நான் ஆடினேனே!


-எஸ்.சந்திரசேகர்



சனி, 26 நவம்பர், 2022

சிவப்பேறு!

சித்தர் பாடல்களை ஆழம் வாசிக்கச்

    சித்தம் தெளிந்திட உயர்த்தும் பாரு

அத்தர் பூசியும் மணக்காத மனமதில்

    அத்தன் சூட்சுமம் காட்டுவார் பாரு

பத்தர் போகர் எனையாளும் குருநாதர்

    பித்தம் தீர்த்துப்புடம் போடுவார் பாரு

புத்தர் ராமர் கிருஷ்ணர் வடிவத்தில்

    புதுயுகம் தோறும் தோன்றுவார் பாரு


கூத்தர் நடமிடும் தில்லை அம்பலத்தில்

    கனிவாய்த் திருமூலரின் சமாதி பாரு

பித்தர் பிறைசூடிய பெம்மான் மனங்கவர்

    பதியில் அமர்ந்த சிவகாமியைப் பாரு

முத்தர் முப்பத்தாறை ஏறி நிலைத்தோர்

    மாயை வினையறுத்துப் போவார் பாரு

நித்தர் யோகஞான வித்தையைப் பற்றி

    நித்திய சதாசிவத்தில் கலப்பார் பாரு!

-எஸ்.சந்திரசேகர்



"சித்தரின் பாதத்தில்..."

அது 2012. 'அதிசய சித்தர் போகர்' மற்றும் 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' ஆகிய நூல்களை எழுதி முடித்த சமயம். பதிப்பாளர்களிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுக்கும் முன் அகத்தியர் கோயிலுக்குச் சென்றேன். அங்கு அவர் பாதத்தில் அதை வைத்துக்கொடுக்கச் சொன்னேன். அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது அகத்தியரின் சிரசின் மீதிருந்த ஒரு பெரிய ரோஜாப்பூ கீழே பிரதியின் மீது விழுந்தது பெரும்பேறு. 

குரு போகர் தான் இயற்றிய நூலை எப்படி அகத்தியரிடம் தந்து அனுமதி பெற்றாரோ அதுபோலவே என்னுடைய படைப்புக்கும் அமைந்தது என் பாக்கியம்.

முகநூல் நண்பரும் என் அத்யந்த அன்பு வாசகருமான ஆயுதப்படைப் பிரிவு காவலர் திரு.லோகநாதன் அவர்கள் அண்மையில் பொதிகை அகத்தியர் கூடம் சென்று வந்தார். அங்கே கும்பமுனி அகத்தியரின் பாதத்தில் என் புத்தகத்தை வைத்து வணங்கியுள்ளார். இவர் மூலம் மீண்டும் சித்தரின் மகத்துவமான கருணைக்குப் பாத்திரமானேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️

நன்றி லோகு! 🙏 வாழ்க வளமுடன்.


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 20 நவம்பர், 2022

பேசாமல் பேசும் சித்திரம்!!

சுவரில் வரைந்திருந்த இப்படியொரு ஓவியத்தை நண்பரின் முகநூல் பக்கத்தில் பார்த்தேன். அது நிறைய விஷயங்களைச் சொல்கிறது.

குரு போகர் பழனியில் நவபாஷாண முருகனைத் தண்டபாணியாக வடித்து நிறுவுகிறார். அதன் சிரசில் குடுமியின் சுவடை ஆழப்பதித்து நீவுகிறார். சிகையானது செவ்வாயுடன் பரவெளித்தொடர்பைப் பெற அவர் தன் நடுவிரலால் ஆகாய முத்திரையைக் காட்டி உணர்த்துகிறார். அவரைச் சுற்றி கீழே புலிப்பாணி சித்தர்கள் கைகூப்பியும் கைகளில் மருந்துக்கலவையை ஏந்தியும் நிற்கிறார்கள். தம் நாயகனை எவ்விதம் போகர் வடிக்கிறார் என்பதை வள்ளியும் தெய்வானையும் ஆச்சரியத்தடன் எட்ட நின்று பார்க்கின்றனர். சிலை வார்ப்பு முடிந்ததும் நவபாஷாண விக்ரகத்திற்குப் போகர் உயிரூட்டும்போது முருகனின் வாசிக்கலைளாக இருவரும் அவனுள் இயங்க ஆயத்தமாக உள்ளனர். 

தலையில் குடுமியும், முப்புரி நூலணிந்த மார்பும், அரையில் கோவணத்துடனும், கையில் நெடிய தண்டத்துடனும் ஒரு பிரம்மச்சாரியாகக் காட்சியளிக்கிறான். கையில் தண்டத்தைப் பிடித்திருக்கும் விரல்கள்கூட சின்முத்திரையைக் காட்டும் விதமாகவும் உள்ளது. மிக எளிமையாய் வாழ்ந்து, ஆணவம் கர்வம் ஆசை என்கிற தீய எண்ணங்களை விடுத்து வாழ்ந்திடு என்பதே இவ்விக்ரஹ தோற்றம் நமக்கு விடுக்கும் செய்தி. அப்படி வாழ்ந்து வந்தால் மெய்ஞானம் தானே வந்திடும்.

இச்சிலைக்கு முறையான பூஜா விதிகளை நம் போகர் விரிவாகப் புலிப்பாணிக்கு எடுத்து இயம்புகிறார். பிறகு அதுவே புலிப்பாணி பூஜாவிதி 50, ஷண்முக பூஜை 30 என்ற நூல்களாக வந்தன.

-எஸ்.சந்திரசேகர்