About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

சித்து விளையாட்டு

வடக்கே இருக்கும் தாஜ்மஹாலை, தெற்கே பழனியில் கலைக்கல்லூரியின் மைதானத்தில் இடம் மாற்றி வைத்து ஒரு சித்து விளையாட்டு நிகழ்த்திக் காட்டினால் எப்படி இருக்கும்? 😳 

1979இல் எம்ஜிஆர் ஆட்சி நடந்தபோது ஸ்ரீ மானூர் சுவாமிகளின் சீடரான தவத்திரு பழனி தங்கவேல் சுவாமிகள் இந்தவொரு விண்ணப்பத்தை வைத்தார். ஆனால் மத நல்லிணக்கம் குலையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அது வழிவகுக்கும் என்று இராம வீரப்பன் ஆலோசனையின் பேரில் சுவாமிகளுடைய இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த விபரத்தை எனக்கு 2004 ஆம் ஆண்டு அவருடைய துணைவியார் சொன்னார். ஐயா அவர்கள் கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகளைத் தன் வீட்டில் ஏழாண்டுகள் வைத்துப் பராமரித்தார்.

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

இராவண சம்காரம் ஆயிற்றா?

 முருகனை ஏற்கும் தமிழர்கள் சிலர் இராமனை ஏற்பதில்லை. இராமனோ/சேதுவோ எதுவுமே உண்மையில்லை என்று எல்லாம் தெரிந்ததுபோல் வாதிடுவார்கள். முருகனின் படைவீடுள்ள பழனியின் திண்டுக்கல் மாவட்டமானது இராமாவாதரம் உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது. எப்போது, எப்படி?

அது 1935-40 இடைப்பட்ட காலம். பழனி ஸ்ரீதங்கவேல் சுவாமிகள் சிறுவனாக இருந்தபோது தான் பார்த்ததை விவரிக்கிறார். தன் அப்பா பெருமாள்சாமி, தாத்தா கர்ணபெருமாள் ஆகியோருடன் இவர் புஷ்பத்தூர் அருகே ஒரு கிராமத்திற்குப் போய் வரும்போது அங்கே புகை வண்டிக்கான தண்டவாளம் அமைக்குப் பணிகள் நடைபெற்று வந்தன. இவர்கள் அங்கே கடக்கும்போது பணியில் ஈடுபட்டிருந்த மேஸ்த்ரி “ஐயா, இங்கே ஏதோ சதுரபலகை மாதிரி பெரிய கல்லு இருக்கு. அதுல பொக்கிஷம் இருக்குமோ.. பாண்டியன் காலத்துதா இருக்கும்போல” என்று சொல்லிக்கொண்டே அதை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். சுவாமிகளின் அப்பாவும் தாத்தாவும் உதவி செய்ய, கடப்பாரையைக் கொண்டு அதைச் சிரமப்பட்டு நகர்த்தி வைத்தனர்.

உள்ளிருந்து கமகம நறுமணப் புகை மேலே வீசியது. பள்ளம் உள்ளே எட்டிப்பார்த்த இவர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஒரு சித்தபுருஷர் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். தலைமுடி ஜடாமுடியாய் வளர்ந்து அவிழ்ந்து பரவிக்கிடக்க, கை நகங்கள் எல்லாம் வேர்கள்போல் வளர்ந்து பூமிக்குள் ஊடுருவிப் போயிருந்தது. அவருக்கு முன்னே இரண்டு தீபங்கள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன.

அது மதிய வேளை. சில நிமிடங்களில் வெய்யில் அவர்மீது பட்டதும் கண்களைத் திறந்து தலையைத் தூக்கிப் பார்த்துள்ளார். “என்ன இராவண சங்காரம் முடிந்துவிட்டதா?” என்று அவர் கேட்டுள்ளார். இவர்களுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்துள்ளனர். “சாமி, நீங்க என்ன கேக்கறீங்கனு விளங்கலை” என்று தாத்தா சொன்னார். “ஓஹோ, கலியுகம் பிறந்துட்டுதா” என்றார். யாரும் பதில் சொல்லாமல் திகைத்துப் பார்க்கும்போது, கைகளைக் கோர்த்து அவர் தியானத்தில் மீண்டும் கண்ணை மூடினார். மூன்று நிமிடத்திற்குப் பிறகு தீபங்கள் மறைந்தன, அதன்பின் மூன்று நிமிடத்தில் சித்தபுருஷரே மறைந்து போய்விட்டார்.

அவர் அமர்ந்திருந்த இடத்தில் விபூதியைப்போல் வெள்ளைவெளேர் என்று மணல் இருந்தது. தாத்தா செய்வதறியாது தன் மேல்துண்டைக் கழட்டி கீழே குனிந்து மணலை அள்ளி முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்களாம். மேஸ்திரி உட்பட மக்கள் பலரும் கைநிறைய எடுத்துக் கொண்டார்கள். வெள்ளிமணல் பழனி அருங்காட்சியத்தில் உள்ளதாம்.

இராவண சம்காரம் முடிந்துவிட்டதா என்று கேட்டதைப் பார்த்தால்... அவர் இராமாவதாரம் காலம் முதலே பல லட்சம் வருடங்களாக அங்கே சமாதியில் இருக்கும் சித்தபுருஷர் என்பது தெரிகிறது. இத்தனைக் காலங்கள் ஆகாரம்/தண்ணீர் இல்லாமல் அங்கே தவத்தில் இருக்க முடிந்தது என்பது உச்சநிலை. அவர்கள் ஜீவனை பிரம்மத்தில் வைத்து ஜீவகர்ப்ப யோகத்தில் இருந்துள்ளனர். இராமனின் தாய் கோசலை தன் மகனைக் காக்குமாறு முருகனை வேண்டிக்கொண்டு அனுப்பினாள் என்று வால்மீகி கூறுகிறார். ஆக இன்னும் பழனியின் சுற்றுவட்டார பகுதியில் சித்தபுருஷர்கள் யோகசமாதியில் இருக்கவும் சாத்தியமுண்டு. 

தங்கவேல் சுவாமிகள் சமாதியாகி இன்றைக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. “வருங்காலத்தில் உலகப்பிரசித்தமாகும் சித்த நூல்களை நீ எழுதப்போகிறாய். அதை எழுதத் தேவையான ஞானம் அதுவாக உன்னுள் வந்திறங்கும்” என்று அன்றே என்னைப்பற்றி அவர் சொன்னார்.  அதன்பின் பத்தாண்டுகள் கழித்து 2013இல் 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' விளக்கவுரை எழுதினேன். சுவாமிகளின் குருநாதர்தான் தவத்திரு மானூர் சுவாமிகள்.  

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

சிக்கிந்தாமலை ரகசியங்கள்!

திருப்பரங்குன்றம் எபிசோட் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தினசரி செய்தியில் எப்படியும் இடம் பெற்றுவிடுகிறது. அந்த மலையின் பின்னணி என்ன, அங்கே சமாதியிலுள்ள பெருஞ்சித்தர்கள் யார், மகத்துவம் எத்தகையது என்பதை  இப்பதிவில் காணவுள்ளோம்.

மதுரையின் சிக்கிந்தாமலை ரகசியங்கள் பற்றி போகர் ஏழாயிரம் நூலில் ஐந்தாம் காண்டத்தில் உரைத்துள்ளார். சீனத்து மக்கள் வானில் பார்த்து அதிசயித்த பளபளக்கும் பஞ்சலோக செம்புரவியைப் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா? பழைய பதிவில் அதைப் பார்த்துள்ளோம். 

அப்புரவியை அளித்த திருவேல மகரிஷி சிக்கிந்த மலையிலுள்ள சித்தரிஷியிடம் போகரை அனுப்புகிறார். இம்மலையில் சமாதியிலுள்ள சிக்கிந்த மகரிஷியைக் கண்டு தரிசித்து உபதேசம் பெற போகர் கெகன குளிகையிட்டு அங்கே வரும்போது அம்மலையே லிங்க ரூபமாய்த் தெரியவே இறங்குகிறார். பரமனே குன்று வடிவில் இருக்க இது பரங்குன்றமானது. 

நான்கு வாசல்கள் கொண்ட  வலிமையான கோட்டையைப்போல் மலை கம்பீரமாய் இருக்கிறது. அங்கே எண்ணற்ற சித்தர்கள் சூழ்ந்திருக்க, போகரைத் தடுத்து நிறுத்துகிறார்கள். தான் காலாங்கியின் சீடர் என்றும் திருவேல மகரிஷியாரின் கட்டளைப்படி இப்பரங்குன்றில் இறங்கி சிக்கிந்த மகரிஷியைத் தரிசிக்க வந்த காரணத்தையும் சொல்கிறார். மயில் இவரை அடுத்த மேல் நிலைக்கு இட்டுச் செல்கிறது. 

வைகை நதி பாயும் வளமிக்க நாட்டில் சிக்கிந்தா மலையின் கீழே முத்தான வடிவேலர்க்குக் கோயிலும், அருகில் அழகான சுனையும், மலையின் உச்சியில் சுரங்கமும் உண்டு. நான்கு யுகம் கடந்து நின்ற மூத்த சித்து, கலியின் அறுபதாம் ஆண்டில் சமாதி விட்டு வெளிவரும் சமயம், போகர் அவர்முன் தெண்டனிட்டுப் பணிந்து நின்றார். அசுவினி மகரிஷி உபதேசம் தந்ததைப்போல் இவரும் சித்திக்கான உபதேசமும், செம்புரவிக்கு மந்திரமொழி கட்டளைகள் (command language for onboard flight control) தரும் ரகசியத்தையும் வழங்குகிறார். அவர் சமாதியைவிட்டு எழுந்து வரும்போது பல அதிசயங்கள் நடந்தன. சுனையறுகே நின்று கைதட்ட மச்சமுனிகள் மேலே நீந்தி வரலாயிற்று. அதன் பிறகு கள்ளர்தேச அழகர்மலை, யானைமலை, திருவில்லிப்புத்தூர், சதுரகிரி ஆகிய தலங்களுக்குப் போகர் பறந்து போகும் கட்டங்கள் பின்னால் வருகிறது. இதுதான் நான் சொல்ல வந்த சாரம். 

சிக்கிந்தா மகரிஷி இருந்த மலையையும் சமாதியையும் பிற்காலத்தில் சிக்கந்தர் மலையாகவும் தர்காவாகவும் மாற்றியது கலியின் கோலங்கள். சிக்கிந்தமலைமீது உயிர்களை வெட்டி அசைவம் சமைத்துப் பரிமாறும் இஸ்லாமியரின் மதவழிபாடு நமக்கு நெருடலைத் தரும்.

மக்கதேசம் போய் யாக்கோபு என்று பெயர் மாறிய ராமதேவர், அழகர்மலை ராக்காயி அம்மன் கோயில் நூபுரகங்கை வரும் பாதையில் சமாதி கொண்டார். மலைநாட்டுச் சதுரகிரியில் எண்ணற்ற மூத்த சித்தர்கள் சமாதியான விவரங்கள் ஏற்கெனவே பார்த்தாயிற்று. காலாங்கி ஞானவிந்த ரகசியம் 30 நூலில் இந்த விஷயங்களைக் காலாங்கிநாதர் விரிவாக உரைத்துள்ளார்.

மூத்த சித்தர்களின் பெருநூல்களை ஆதாரமாகக்கொண்டு திருப்பரங்குன்றம் சர்ச்சையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். பல யுகங்கள் சமாதியில் இருந்து வெளியே வந்த சிக்கிந்தாமலை மகரிஷியார் எப்படி இஸ்லாமியத் துறவியாகச் சித்தரிக்கப்பட்டார்? பாறை சமாதி எப்படி எப்போது தர்கா ஆனது? இது பின்னாளில் வந்த புனைவுதான் என்றாலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அன்றே இரு மதத்தினரின் சர்ச்சையைப்பற்றி சொல்லும் ஆங்கிலேயரின் கெஜட் மிஞ்சிப்போனால் 18-19 ஆம் நூற்றாண்டில் எழுதியதாக இருக்கும். ஆகவே பழமையான நூல்களை ஆய்வு செய்து இதற்கு விடைகாண வேண்டியது நீதிமன்றம்தான்.

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 26 ஜனவரி, 2025

குறுக்கு வழி என்ன இருக்கு?

வாட்ஸப்பில் ஆடியோ செய்தி ஒன்றை நண்பர் அனுப்பி சந்தேகம் கேட்டார். அந்தக் குரல்பதிவு செய்தியில் “இன்னின்னக் கிழமையில் இத்தனை விளக்குகள் ஏற்றிவிட்டு, குடும்பத்தில் தாய்/தந்தை வழியில் வந்து சேர்ந்த கர்மவினைகளும், பூர்வஜென்மங்கள் மூலம் வந்த வினைகளும் மொத்தமாக எல்லாமும் இக்கணமே என்னைவிட்டு அகலட்டும்” என்று வேண்டிக்கொண்டால் உடனே நிவர்த்தி கிட்டும் என்று அதில் தகவல் இருந்தது. இது உண்மையா என்று கேட்டார்.

தெரியாது. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன். “என்னங்க நீங்களே இப்படி சொல்றீங்க” என்று அவர் கேட்டார்.

“ஆமாங்க. இது மட்டுமே போதும்னு சொன்னால் எல்லாருமே ஒரு எண்ணெய் டின் வாங்கி, குறிப்பிட்ட காலத்திற்கு அகல்தீபம் போட்டு சிவன் கண்ணில் மண்ணைத்தூவி எப்படியாவது கர்மாவை ஊதி விரட்டிடலாமே. அப்படி நடக்கிறதா? இன்னும் சிலர் குலதெய்வக் கோயிலில் சேவல்/ஆட்டுக்கிடா வெட்டினால் எல்லா கர்மவினையும் தொலைந்து அந்தந்த வம்சத்தில் சுபிட்சம் வரும்னு சொல்லி வராங்க. உங்க கர்மவினை அகல மற்ற உயிர்களைக் கொன்றால் எல்லாம் சரியாகுமா? நாட்டார் தெய்வங்கள் மற்றும் சிறுதெய்வங்களுக்கு காலங்காலமாக இதுபோன்ற பலிகள் தருவது நம் மரபு என்று பலர் வாதிடுவார்கள்.

உயிர்பலி என்பது (சாப நிவர்த்தி சடங்கு செய்தபின்) அஷ்டகர்மம் மற்றும் தந்திர வழிபாடுகளுக்கு மட்டும்தானே தவிர நம்முடைய கெடுசெயலால் பிறவிகள் தோறும் சம்பாதித்த ஊழ் வினைகளை விரட்டுவதற்கு அல்ல! நீங்கள் செய்த குற்றத்திற்கு வேறு யாரோ சரன்டராகி பழியும் தண்டனையும் ஏற்றுத் தியாகி ஆகிறான் என்றாலும், ஆன்மா சாட்சியாக நீங்கள் செய்த பாவத்தின் கர்மவினை இன்னும் துடைக்கப்படாமலே உள்ளது. கறை படிந்த ஆன்மாவை சிவன் ஏற்பதில்லை. மீண்டும் பிறக்க வைத்து இன்னல்கள் தந்து பாடம் புகட்டி துவம்சம் செய்து விடுகிறான்.

ஏங்க.. அப்படீனா, இந்த குறுக்கு வழி யுக்தியை நம்ம மூதாதையர்கள் செய்யாமல் இருந்திருப்பார்களா? நிச்சயம் செய்திருப்பார்கள். அப்படிச் செய்திருந்தா நாம் இந்த வம்சத்தில் வந்து பிறந்து ஏன் கஷ்டப்படணும்? சுகப்பட/ துக்கப்பட ஏதோ கர்மவினை இருந்தால்தானே அந்த வம்சத்தில் அடுத்தடுத்து பிறப்புகள் வருது. பாட்டன்/ பூட்டனே வந்து எஞ்சிய வினைகளைக் கழிக்கப் பிறப்பதால் அவங்களோட பெயரை வைக்கிறாங்க. மேற்படி பரிகாரம் எல்லாம் செய்தால் சந்ததியில் இம்மிகூட கஷ்டங்கள் சோதனைகள் வரக்கூடாதே? ஆனால் வண்டி நிறைய ஏன் வருகிறது? சற்றே யோசிக்கவும்.

உயிர்பலி தந்தபின், அகல்தீபங்கள் எற்றிவிட்டபின், இனிமேல் மேற்கொண்டு தெரிந்தோ/தெரியாமலோ செய்யப்போகும் ஆகாம்ய பாவங்கள் தன்னைப் பாதிக்காதவாறு தன்னுடைய செயல்களை எவ்விதத்திலாவது திருத்திக்கொண்டானா? மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க என்ன வழி வைத்துள்ளான்? மனத்தால் வாக்கால் உடலால் அவன் செய்யும் பாவங்களை எரிக்காமல், கடனேயென அகல் தீபம் ஏற்றிவிட்டு வந்தால் போதுமா? கிடா வெட்டிப் படைத்தால் இவனுடைய எல்லா ஆன்மவினைகள் வெட்டப்படுமா? சிவன் மனம் மகிழ்ந்து இவனுக்கு வீடுபேறு தருவானா?  

சைவர்கள் தாம் உண்ணும் உணவைத்தான் படைப்பார்கள், அசைவர்கள் அவர்களுடைய பழக்கப்படி செய்வார்கள். மலைச்சாதி குறவர்கள் தேனும் தினைமாவும், வேடுவர்கள் பச்சை/சமைத்த மாமிசம், கிழங்கு, மீன் என்று படைப்பார்கள். அது அவரவர் வாழ்வியலுக்கேற்ற குலதர்மம்.

அகத்தியர் தன் கன்மகாண்டம் நூலில், ஒருவனுடைய முற்பிறவியில் அவன் செய்த அட்டூழியச் செயல்களுக்கு அகல்தீபங்கள்/ உயிர்ப்பலிகள் என்று எதையும் சொல்லவில்லை. இத்தனை பேர்க்கு வஸ்திரம், கன்யாதானத்திற்குத் தங்கம், அன்னதானம், ஆலயத்திருப்பணி, தல யாத்திரை, நதி நீராடல், என இதுபோல் பணம் கணிசமாகச் செலவாகும் பல்வேறு உபாயங்களைச் சொல்லிவிட்டு, இதெல்லாம் செய்தால் இத்தனை மண்டலத்தில் நோய் குணமாகும், குடும்பக்கஷ்டங்கள் தீரும், பீடித்த செய்வினைகள் அகலும், திருமணமாகும் என்றும், அதன்பின் வாழ்க்கையில் அவன் தருமநெறி கடைப்பிடித்து யோக்கியவானாய் இருந்தால் சுகமாக இருப்பான், இறையாசிகள் பெறுவான் என்கிறார். சிலர் இவ்வளவு செலவு ஆகுமா என்று பயந்து நெடிய பரிகாரம் செய்யாமல் விட்டுவிடுவார்கள். சொன்ன பரிகாரம் செய்தாலும் பிராப்தம் இருந்தால் நிவர்த்தி ஆகலாம். இது மிக நுட்பமான விஷயம் என்பதால் எளிதில் தப்பிக்க முடியாது என்பதே உண்மை. இதைவிட காக்கை பசு நாய் எறும்பு முதலிய ஜீவன்களுக்குச் சோறிட்டு நம் கர்ம வினையைக் குறைப்பது எளிய வழி.

இப்போது உங்களுக்குப் புரிந்ததா? பரிகாரம் என்பது மன ஆறுதலுக்கே! ஆகவே, தினமும் இருவேளை தீபம் ஏற்றி மலர்கள் சாற்றி வழிபாடு செய்து பிரார்த்தனைகளை மனதார அவன் பாதத்தில் சமர்பித்து விடுங்கள்.  வேண்டாததைக் கைவிட்டு இயன்றவரை தரும நெறிப்படி வாழ வாக்குறுதி தாருங்கள். உங்கள் குலதெய்வம் நல்வழியைக் காட்டும்!

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 6 ஜனவரி, 2025

"ஓங்காரத்தில் வந்த பெருவெடிப்பு!"

 இப்படத்தில் உள்ளதைத் திருமூலர் ஏற்கெனவே தன் கருக்கிடை நூலில் விளக்கமாகச் சொல்லியுள்ளார்! அந்த ஒவ்வொரு அண்டத்திலும் ஒவ்வொரு விதமான மனிதர்கள் சித்தர்கள் உள்ளனர். அதன் தொலைவு பரிமாணம் குணாதிசயம் என அனைத்தையும் சொல்லியுள்ளார். அவர் சுற்றிப் பார்த்த அண்டம் பூமியிலிருந்து 160 அண்டங்கள் அப்பால் இருந்துள்ளது. இப்படியே 1008 அண்டரண்டங்களில் வாழும் சித்தர்கள் மனிதர்கள் ஜீவராசிகள் உண்டு என்பது தெரிகிறது.

வெவ்வேறு நிறத்தில் உருவத்தில் உள்ள அவர்கள் நீருக்குள் காற்றுக்குள் வாழும் திறன் பெற்றவர்களாகவும், அகர முதல ஓங்காரம் மூலம் பிரபஞ்சத்தில் சிருஷ்டி நடந்த காலம் முதலே உள்ள அவர்களை நிராமயத்தார் (எ) ஆதி சித்தர்கள் என்று திருமூலர் சொல்கிறார். அவர்களுடைய தொன்மை நிலையைக் கண்டுகொண்டு தரிசித்துக் கைகூப்பி வணங்கி ஆசியும் உபதேசமும் பெற்றதாய்த் திருமூலர் தெளிவாகக் கூறியுள்ளார். 

ஆக அத்துணை Universes உம் Prior to the Big Bang என்பதைவிட At the time of Big Bang என்ற சொற்றொடரே இப்படத்தில் சரியாக இருக்கும். 

'ஞானம் தரும் சித்தர் பாடல்கள்' என்ற என் நூலில் இதைப்பற்றிய விரிவான அத்தியாயம் உள்ளது. விலை உரூ.150/- DK Publishers, 99406 64635, 99404 98435

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 20 டிசம்பர், 2024

இரண்டும் கெட்டான் நிலை!

ஒரு வாசகர் அலைபேசி தொடர்பில் வந்தார். தன்னுடைய வியாபாரம் மற்றும் குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். 

அப்போது அவர் தனக்கு ஒரு மகன் உள்ளதாகச் சொன்னார்.

"சார், அவங்க படிக்கிறாங்க" என்றார்.

"ஓ வெரிகுட்... காலேஜ் படிக்கிற வயசுல பெரிய பையனா?" என்றேன்.

"ஐயோ இல்லீங்க... இப்பதான் மூணு வயசு ஆகுது.. ப்ளே ஸ்கூல் போறாரு" என்றார்.



"ஏங்க... அவன் குழந்தை.. அவனோடு கொஞ்சிப் பேசுற வயசு.. இப்ப மரியாதை தரணும்னு அவசியமில்லை. நான்கூட ஏதோ டிகிரி படிக்கிற பையன்னு நினைச்சுட்டேன். நீங்க செயற்கையான மரியாதை தந்து பேசினா ஒரு தாய்/தகப்பனா அந்தக் குழந்தையிடம் அன்னியோன்யமாகப் பழக முடியாது. உணர்வுகள் மட்டுப்படும். உங்களை அறியாமலே இடைவெளி வந்திடும்.. அவன் உங்க தோளுக்கு வளர்ந்தப்புறம் நீங்க ஐயா/தம்பி/ சார்னு எப்படியோ மரியாதை கொடுத்துக்கலாம். வளர்ந்தப்புறம் யாருக்கு எந்த வயசுல மரியாதை தரணும்னு அவனுக்கே தெரிய வரும். இப்போ அவனைக் குழந்தையா பாவிச்சுக் கொஞ்சிப்பேசி விளையாடுங்க. அவனோட இந்தப் பருவம் சீக்கிரம் கடந்து போயிடும்" என்றேன்.

"இப்படித்தான் பேசணும் போலனு ஊர்ல எல்லாரும் பழக்கப்படுத்திட்டாங்க சார்" என்றார். ஐயோ பாவம்!

நாம் வளர்ந்த காலத்தில் பாட்டி/தாத்தா, அம்மா/அப்பா எல்லாரும் மிக இயல்பாகப் பேசி வந்தார்கள். ஆனால் இன்றைய சமுதாயத்தின் போக்கு இப்படி ஆகிவிட்டது! 🥺🧐

-எஸ்.சந்திரசேகர்

செவ்வாய், 17 டிசம்பர், 2024

பலகாரம்!

 ஏகாதசி/ சிவராத்திரி மற்றும் சில முக்கிய தினங்களில் ஒரு பொழுது இருப்பதைப்பற்றி என் உறவுக்கார பெரியம்மா சிலாகித்து என்னிடம் சொன்னார்.  இந்த விரதம்/ உபவாசம் எல்லாம் சற்றும் ஒத்துவராத எனக்கு “ஒரு பொழுதுனா எப்படி இருப்பீங்க?” என்று கேட்டேன்.

“என்ன இப்படி கேட்டுப்ட? அன்னைக்கு ராத்திரி சாதம் சாப்பிட மாட்டேன். இட்லி, தோசை, கொழுக்கட்டை, பூரி இதமாதிரிதான் சாப்பிடுவேன்” என்றார்.

“இதுலெல்லாம் அரிசி பருப்பு உளுந்து எல்லாமே இருக்கே.. ராத்திரி நேரம் எண்ணெய் மிளகாய்பொடி எல்லாம் குழைச்சு சாப்பிட்டா நெஞ்செரிச்சல் வரும்.. அதுக்கு மோர் சாதம் சாப்பிடக்கூடாதா?” என்றேன்.

“அதெல்லாம் உசிதமில்ல. காலங்காலமா இப்படித்தான் வழக்கம். அப்படி இல்லாட்டி பால் பழம் மட்டும் சாப்பிடலாம்” என்றார்.

“பழ-ஆகாரம்’ மட்டும்தான் இருந்திருக்கும். ஆனால் பேச்சுவாக்கில் யாரோ அதை பல-ஆகாரம்னு பெயர் மாத்தி இட்லி, தோசை, அடை, போண்டா,  சாப்பிடலாம்னு சொல்லியிருக்கணும்னு நினைக்கிறேன்” என்றேன்.

“ஆமா ... எல்லாம் தெரிஞ்சவனாட்டம் பேசு” என்றார் கோபமாக.

“வெறும் மோர் சாதம் சாப்பிடறதைவிட உங்க பலகாரம் டிஃபன் ரொம்ப புஷ்டியா இருக்கு. அப்போ நிஜமான நிர்ஜல உபவாசம் எப்போ இருப்பீங்க?” என்று கேட்டேன்.

“அட போடா... இதுதான் ஒரு பொழுது... நீ பலகாரம் தின்னா தின்னு தின்னாட்டி போ” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.     

- எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 24 நவம்பர், 2024

ஆய்வாளர் எதிர்கொள்ளும் சிரமம்!

 அண்மையில் ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்தது. PhD பட்டத்திற்கு ஆய்வு செய்யும் ஒரு வாசகர் அதை அனுப்பியிருந்தார்.

"வணக்கம் ஐயா🙏 தங்களின் போகர் 7000 நூலை முழுதும் படித்தேன். இந்த காலகட்டத்தில் நான் படித்த நல்ல படைப்புகளில் இதுவும் ஒன்று. நான் முனைவர் பட்ட ஆய்வாளர் ...... கல்லூரி, குற்றாலம். என் ஆய்வுக்கான தலைப்பு 'சித்தர்களின் பாஷாண ரகசியங்களும் சிலைகளும்'. எனக்கு ஐயங்கள் பல உள்ளன. நான் அனுப்பியுள்ள இப்பாடல்கள் இடம்பெற்ற காண்டம்/ பாடல் எண்கள் எது என நீங்கள் எனக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்."

"சகோதரி! மேற்படி பாடல்களை ஏழாயிரத்தில் அலசிப் பார்த்துவிட்டேன். அச்சு அசலாக எங்குமே இப்படியான பாடல்கள் இல்லை. பதிப்பாகும் பல நூல்களில் இதுபோல்தான் முன்னுக்குப்பின் முரணாகய்ப் பாடல்களின் மேற்கோள் இருக்கும். புத்தகத்தை ஆசிரியர் எப்படியேனும் முடிக்கும் எண்ணத்தில், பாஷாணம் என்றாலே போகர்தான் எனவும், போகர் என்றால் எழாயிரம்தான் என்றும் அவர்களே யூகித்து எழுதி விடுகிறார்கள். சரி பார்ப்பதில்லை. அப்படிச் செய்யும்போது  நூலின் பெயர், காண்டம், பாடல் எண், என எந்த ஆதார விபரமும் இல்லாமல் பாடல்கள் இருக்கும். Bibliography பக்கத்தில் நூலின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பதிப்பாண்டு போன்ற தகவல்கள் இருக்கவேண்டும். ஆனால் இவற்றைக் கடைப்பிடிக்கத்தவறி விடுகிறார்கள். ஆதாரம் பற்றிய சந்தேகம் தெளிவுற அநேக சித்தர்களின் மூலப்பாடல் நூல்களை நீங்கள் படிக்கவேண்டும். ஆனால் அத்தனையும் படிக்க உங்களுக்கு அவகாசம் போதாது.

இப்பாடல்கள் சித்தர்களின் சரக்கு வைப்பு, வாத வைத்தியம், போன்ற பல நூல்களில் இருக்கச் சாத்தியம் உண்டு. எந்தவொரு திடமான ஆதார மேற்கோள் இல்லாததால் பலபேர் இதை உண்மை என நம்பித் தவறாகவே இணையத்தில் போகருடைய பாடல்கள் என்றே பரப்பி விடுகிறார்கள். இவை எந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்பதைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோற்போரில் ஊசியைத் தேடும் வேலைதான்" என்று பதிலளித்தேன்.

"ஐயா, தங்களுடைய பதில் கண்டேன்.  கண்டறிந்து சொன்னதற்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வதும் உண்மைதான். வேறொரு சித்தர் இயற்றிய பாடலுக்கு அவசரத்தில் போகர் பெயரை வைத்து முடித்துவிட்டார் போல. இப்படியெல்லாம் நூலாசிரியர் செய்தால் என்னைப் போன்ற ஆய்வாளர்கள் நிலை கஷ்டம்தான்" என்று பதில் போட்டிருந்தார்.

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 10 நவம்பர், 2024

தடம் பதித்த எழுத்தாளர்!

இன்று மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் நிறைய அமானுஷ்ய படைப்புகளைத் தந்து அசத்திய சாதனையாளர். நான் பிளஸ்டூ படிக்கும் காலத்திலேயே அவருடைய தொடர்களை ஆனந்தவிகடன் இதழில் வாசித்துள்ளேன். 


எனக்குத் தெரிந்து கடந்த ஓராண்டாகவே அவர் உடல்நலக் குறைவுடன் இருந்தார். நோய் உபயம் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு. என்னோடு சில சமயம் chat செய்யும்போது தன்னுடைய உடல்நலம் பற்றிப் பேசுவார். 

"நீங்கள் எழுதியவரை போதும், மூளைக்கு ஓய்வு தாருங்கள், பொழுதுபோக்காக நீங்கள் விரும்பும்போது எழுதுவது வேறு, வார இதழ்களுக்கு/திரைப்படத்திற்கு கட்டாயம் எழுதித் தந்தாக வேண்டும் என்று வருத்திக்கொண்டு எழுதுவது வேறு. சதா சிந்தனையுடன் இருந்தால் இதயத்திற்கும்/ மூளை நரம்பு மண்டலத்திற்கும் நல்லதல்ல" என்று சொல்வேன்.

அதற்கு அவர், "நான் ஒரு காலத்தில் டிவி சீரியல், வார இதழ் தொடர், நாவல் என்று நிறைய எழுதியபோது வராத stress ஆ இப்போது வந்துவிடப் போகிறது? ஆனால் இது stressஸால் ஏற்படுவது என்று டாக்டர் சொல்கிறார்" என்பார்.

எது எப்படியோ, நேரம் வரும்போது விதி வேலை செய்துவிடுகிறது. காலை நேரம் ரத்த அழுத்தம் மாறுபட மூளையில் ரத்தம் உறைந்து பிரக்ஞை தப்பி மாரடைப்பும் வர அதனால் நிலை குலைந்து குளியலறையில் விழுந்து உயிர் போயிருக்கும். குளியலறை கழிவறை எல்லாம் சனியின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் பெருக்கி சுத்தம் செய்து தரை வழுக்காதவாறு ஈரமின்றிக் காயவிடுவதே சரி. 

'மடப்புரத்து காளி' என்ற புதிய தொடரை இரண்டு வாரங்கள் முன்புதான் அவர் தொடங்கினார். தசமஹாவித்யா மற்றும் பலி பூசைகள் பற்றிய திகில் தொடராகும். அதை மேற்கொண்டு எழுதவிடாமல் தெய்வ சக்தி தடுத்துள்ளதாகவே நினைக்கிறேன்.

அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஓம் சாந்தி! 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்


சனி, 2 நவம்பர், 2024

சித்தருடன் ஓரிரவு!

 ஏசி மெக்கானிக்காக இருக்கும் என் வாசகர் திரு.டில்லி பற்றியும் அவருடைய கொல்லிமலை அனுபவத்தையும் சில வருடங்களுக்கு முன் பழைய பதிவில் சொன்னேன். அது உங்களுக்கு நினைவிருக்குமா என்பது தெரியாது. இன்று அவர் தொடர்பில் வந்தார். 

சதுரகிரியில் அமாவாசை பூஜை தரிசனத்திற்குச் சென்று வந்ததையும், கோரக்கர் குகையில் தனக்கு நடந்த அமானுஷ்யத்தையும் சொன்னார்.  அங்கே தன் கோயம்புத்தூர் நண்பர் இவருடன் சேர்ந்துகொண்டார். இருவரும் சேர்ந்து மலையேறி உள்ளனர். அப்போது கோரக்கர் குகைவரை அந்த கோவை நண்பர் கஷ்டப்பட்டு வந்து, அதற்குமேல் தன்னால் வரமுடியவில்லை கால்கள் வலிக்கிறது என்று சொல்லி அங்கேயே தங்கிவிட்டாராம். 

“சார், நீங்க ஏறிப்போய்ட்டு இருட்டறதுக்குள்ள வாங்க, யாகத்துக்கு நான் தயார் செய்து வைக்கிறேன்” என்றாராம். டில்லி மட்டும் மேலே போனார். சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் தரிசனம் முடித்து நேரே தவசிப்பாறைக்குப் போயுள்ளார். அங்கே யானை ஆறு முறை ஓசை எழுப்பி இவரைப் பார்த்துவிட்டு மெல்லக் கடந்துபோனது. பிறகு இரவு 7மணிக்குள் கீழேயிறங்கி வந்துவிட்டார். நள்ளிரவு யாகம் வளர்ப்பதற்குச் சுருக்க வந்துசேர்ந்தார். அப்போது இவருடைய கோவை நண்பருடன் இன்னொருவர் யாரோ அங்கே இருந்துள்ளார். அவர் மிகப்பிரமாதமாக யாக ஏற்பாடு செய்துவைத்திருந்தார். அந்த மூன்றாம் நபர் அங்கே வருவது வழக்கம்தான் என்பதால் தானும் இவர்களுடன் யாகத்தில் கலந்துகொண்டு பூசிக்க விரும்புவதாகச் சொல்லியுள்ளார்.  

படத்தில் தாடியுடன் இருப்பவர் டில்லி. இரவு யாகம் நிறைவாய் நடத்தி முடித்துள்ளனர். கோரக்கர் குகையில் டில்லி மற்றும் அவரது கோவை நண்பர் யாகம் வளர்த்துப் பூசித்ததை இந்த மூன்றாம் நபர் டில்லியின் மொபைலில் சில படங்கள் எடுத்தார். மறுநாள் காலை அமாவாசை நேரம் முடிகிறது என்பதால் அதற்குப்பிறகு மேலே ஏறிச்செல்ல அனுமதி இல்லை. மூவரும் கீழே இறங்கி வந்துவிட்டனர். அப்போது அந்த மூன்றாம் நபர் டில்லியைப் பார்த்து, “வரீங்களா இன்னொருவாட்டி கோரக்கர் குகை வரைக்கும் சங்கிலி புடிச்சிட்டு ஏறிப்போய் வந்துடலாம்” என்றுள்ளார். ஆனால் டில்லி, “ஐயா, நேத்துதான் மேலே போயிட்டு வந்து யாகம் வளர்த்து, இப்போ கீழே இங்கே இறங்கி வந்ததில் உடல் அசதியாய் இருக்கு. மன்னிச்சிகங்க நான் வரலை” என்றார்.

“சரி, அப்போ நான் சீக்கிரம் போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லி இவர்கள் கண்முனே நடந்துபோய் கணநேரத்தில் மறைந்தார். டில்லி வாயடைத்துப்போக, கோவை நண்பர் தேம்பி அழுதாராம். சினிமாவில்தான் இப்படி எல்லாம் காட்டுவாங்க, கண் எதிரே காத்துல மறைந்தது பார்த்தது உடம்பெல்லாம் சிலிர்த்து நடுங்குது சார். ராத்திரி முழுக்க எங்களோட இருந்தவரோட பெயர், விலாசம், ஃபோன் எதுவும் கேட்காம விட்டுட்டேன். ஆனால் அவரிடம் அதிகாலையில் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினேன். வேண்டாம்... விழாத... பரவாயில்ல.. அப்படீன்னு சொல்லிட்டு ஆசிர்வதித்தார். ஆடு மாடு மலையேறுவதுபோல் சரசரனு சரிவுப்பாறைல ஏறினார்.  அங்கே இன்னொரு குகையோரம் உட்கார்ந்து தியானம் செய்ய இடம் பத்தாது சார், ஆனால் இவர் பாறை இண்டுக்குள்ள தலையை வைத்து செங்குத்தாக உட்கார்ந்தது தியானம் செய்ததை பார்த்து பிரமிச்சுப் போனேன். இவர் எப்படிதான் சறுக்கு பாறையில் ஆடு மாதிரி லாவகமாக ஏறிப்போறாரோனு என் மனசுல நினைச்சேன் சார். அவர் திரும்பிப் பார்த்து 'அதுவா பா? நான் கிராமத்தான்... அதெல்லாம் தன்னால் வந்திடும்' னு சொல்றார். அங்கே அவர் எடுத்த படங்களை எல்லாம் உங்களுக்கு அனுப்புறேன். நீங்கதான் அதைப்பார்த்து என்ன ஏதுனு சொல்லணும்” என்றார்.

அவர் அனுப்பிய படத்தை ஜூம் செய்து பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அதில் நந்தியெம்பெருமான் அமர்ந்தபடி மத்தளம் வாசிக்கும் பாவனையில் கைகள் வைத்திருந்தார். இரண்டு கொம்புகள், தொங்கும் காது மடல்கள், கழுத்து, முகம், தலைமேல் ஷ்ருங்க மத்தி எல்லாம் அவர் நந்தீஸ்வரர்தான் என கண்டுபிடிக்கும் வகையில் இருந்தது. நான் இதை எடுத்துச்சொன்னதும் டில்லி தனக்குக் கிடைத்த பேறு என்று ஆனந்தப்பட்டார். நாமும் கண்டு தரிசித்துக்கொள்வோம். ஓம் நந்தீசாய நமோ நமஹ!

-எஸ்.சந்திரசேகர்