About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

திருப்பள்ளி எழுச்சிக்காக அறக்கட்டளை

திருவாய்மொழி பாசுரங்களைப் பாட ஸ்ரீராமானுஜர் ஆவன செய்தார். குலோத்துங்கன்-1 காலத்து இரண்டு கல்வெட்டுகள் இதைப்பற்றி சொல்கிறது. குலோத்துங்கனின் 15ம் ஆண்டு ஆட்சியில் (கிபி 1075) அவனுடைய சேனாதிபதி கோட்டூர் வீரசோழ முனையதரையன் இதற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளது கல்வெட்டில் புலப்படுகிறது.
கோயில்களில் திருவாய்மொழியை பள்ளி எழுச்சியாக பாடுவதற்கென 50 கழஞ்சு பொன் கொடுத்தான். அரையர்கள் வசம் இதற்கான கொடை ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிகிறது. இவர்கள் தங்கள் பெயரின் இறுதியில் 'மன்னார்' என்று சூட்டிக்கொள்வது மரபு. இன்றும் சில கோயில்களில் அரையர் சேவை பிரசித்தமாக நடக்கிறது. முதலாம் குலோத்துங்கன் தன்னுடைய பூச நட்சத்திர நாளில் மாதாமாதம் சிறப்பு பூசைகள் செய்விக்க நன்கொடை தந்தான் என்று கல்வெட்டு கூறுகிறது. பட்டத்து அரசி குலோத்துங்க லோகமகாதேவி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நன்கொடைகள் செய்தாள்.
வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜரின் பெயர் ராஜேந்திர சோழன்-3 காலத்து (கிபி 1250) கல்வெட்டில்தான் 'ராமானுஜன் சுற்றுக்குலை' என குறிப்பிடபட்டுள்ளது. குலோத்துங்கன் காலத்தில் அரங்கனுக்கு 'அனந்தநாராயண சுவாமி' என்ற பெயரும் அதிகாரப்பூர்வமாக இருந்தது. திருவரங்கம் கோயில் 'ஸ்ரீகாரியம்' பொறுப்பில் நான்கு அதிகாரிகள் இருந்தனர். வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் சமாதிக்குப் போகும் காலத்தில் ஆட்சி புரிந்தது பராந்தகன்-1. அப்போது 'ஸ்ரீவைஷ்ணவ வாரியம்' என்ற ஒரு அமைப்பு கோயில் நிர்வாகத்தை கண்காணித்தது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகவேண்டிய 940 காசுகளை அக்காலத்திலேயே ஒருவன் கையாடல் செய்ததும் அவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததும் கல்வெட்டில் உள்ளது. ராஜராஜன் தஞ்சை பிரகதீஸ்வர கோயிலில் தன்னை நேரடியாகவே ஈடுபடுத்தியதைபோல், குலோத்துங்கன்-1 தன்னை ஸ்ரீரங்கம் கோயிலில் ஈடுபடுத்திகொண்டதும் தெரிகிறது. குலோத்துங்க சோழர் காலக் கல்வெட்டுகள் முசிறி அருகே அலகரை கோயிலிலும் நிறைய கண்டெடுக்கப்பட்டு அதன் விவரங்கள் ஆவணப்படுத்தபட்டது. (நன்றி: முனைவர் ஆர்.நாகசாமி)

ராஜராஜ சோழன் வகுத்த பணிநிலை ஊதியம்

ராஜராஜ சோழனைப் பற்றி இதுவரை ஒரேவிதமான பதிவு மீண்டுமீண்டும் முகநூலில் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் கோயில் மற்றும் அவனுடைய அயல்நாட்டு விஜயம் பற்றிதான் இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் சோழனின் நிர்வாகத் திறன் பற்றியும் பணியாளர்களுக்கு தகுதி நிலைப்படி எப்படி ஊதியம் நிர்ணயம் செய்தான் என்பதைப்பற்றி இங்கே சொல்கிறேன்.
பெரிய கோபுரத்தை ராஜராஜன் கட்டினான். உட்புற விமானம் அவனுடைய தளபதி பிரம்மராயனின் ஆணைப்படி எழுப்பப்பட்டது. ஒட்டு மொத்த பெரிய கோயிலின் நிர்வாகத்தை ஆதித்தன் சூரியன் (எ) தென்னவன் மூவேந்தவேலன் கவனித்தான். கிராமங்களில் வசூலான வரியை சோழன் இந்த கோயில் பராமரிப்பு செலவுக்கே கொடுத்தான். வரி விலக்குப் பெற்ற கிராமங்கள் எவை, எந்த ஊர்கள் பொன்னாக தானியமாக அரசுக்குக் கட்டவேண்டும் என்பதையும் கல்வெட்டில் பொறித்தான். பெரிய கோயிலுக்கு சேவை செய்வோர், கட்டட பணியாளர்கள், உழவர்கள், கலைஞர்கள், மயான காப்பாளர்கள் என்று பலர் வரி விலக்கு பெற்றவர்கள்.
ராஜராஜன் அங்குலவங்குலமா அளவீடு செய்து ஆவணபடுத்தினான். அவனைவிட இந்த land survey பணியை எந்த அரசனாலும் செய்திருக்க முடியாது. உற்பத்தியில் 1/6 (அதாவது 16.65%) வரியாக வாங்கினான். அவன் போட்ட கணக்குப்படி எப்போதுமே தஞ்சையில் மிக அதிகமாக நெல் மகசூல்தான் ஆகியது என்பதும் தெரிகிறது. கோயிலுக்கு கூடுதலாக தரவேண்டும் என்ற அவாவினால் விவசாயிகள் அதற்கேற்ப வளப்படுத்தி உழைத்தனர் என்பதும் தெரிகிறது. கிராமங்கள் 15000 கலம் நெல் அளித்துள்ளது.
பொன், வெள்ளி, வைரம், முத்து, நாணயங்கள் என்று என்னவெல்லாம் தானம் கொடுக்கப்பட்டதோ, அதெல்லாம் வரவு வைக்கப்பட்டு குறிக்கப்பட்டது. கொடுத்தவர் யார், வரி தவிர வேறு எதற்குக் கொடுத்தார் என்பதும், அதில் உடைந்த முத்துகள், சிறிது, பெரிது, தங்கப்பாளம், குந்துமணி, ரவை என்று ஒன்றையும் விடாமல் ஏட்டுக்கணகில் கொண்டு வந்தான். சிலையாக அளித்தால் அதன் அளவு வேலைப்பாடு, கர்க்கள் விவரங்கள் எல்லாமே இருந்தது.
சம்பள ஆவணத்தில் வேத பிராமணர் முதல் கோயிலைப் பெருக்குவோர் வரை பெற்ற ஊதியப் பட்டியலை வைத்துள்ளான். இதை மூன்று விதமாகப் பிரித்தான்.
1) பொது நிர்வாகம் (பொக்கிஷதாரர், கணக்கர், தணிக்கையாளர், கிடங்குவைப்பாளர் ...),
2) கலைஞர்கள் (வேதியர், அர்ச்சகர், பாடுபவர், இசை/நடன கலைஞர்கள் ...)
3) பொது ஊழியர்கள் (காப்பாளர், பெருக்குபவர்கள், தோட்டக்காரர், தையல்காரர், கைவினைஞர்கள், ஐந்தொழிலாளர்கள்..)
இவர்கள் அரசு பணியாளர்களாக வருகிறார்கள். இவர்கள் பணிக்கு சேரும்போது வைத்திருந்த சொத்து விவரம் மற்றும் உறவுக்காரர்களின் சொத்து விவரமும் செப்புப் பட்டய ரிஜிஸ்டரிலும், கல்வெட்டுகளிலும் உள்ளது. நிதி இலாக்கா தலைவர் அதிகப்படியான மாத ஊதியம் பெற்றார் (1600 காசுகள்), அக்கவுண்டன்ட் 600, நடனப் பெண்கள் 800, பாடகர்கள் 1200, வீணை வித்வான் 400, வேதம் ஓதுவோர்/ திருமுறை பாடுவோர் 1200, ஸ்தபதி ராஜராஜ பெருந்தச்சன் 1200, உபச்தபதி 600, அரசவை வண்ணான்/ நாவிதர்/தையல்காரர் 800, என ஊதியம் பெற்றார்கள். அதுபோக ஒவ்வொரு நிலைக்கும் இத்தனை அளவு குருணி/ கலம் நெல் தரப்பட்டது. கோயில் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 100 கலம் படியளந்தான். மற்றவர்களுக்கு இந்த நிதி மேலாளர் /அக்கவுண்டன்ட் ஊதியம் தரவேண்டும். ஆனால் தங்களுடைய ஊதியத்தை தாங்களே எடுக்க முடியாது. அதை அரண்மனையில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். இப்படியாக கெடுபிடிகள் /கிடுக்கிபிடி வழிகளைக் கடைப்பிடித்தான். குறைந்தபட்ச ஊதியம் 400 காசுகள் என்று வைத்திருந்தான். ராஜராஜன் காலத்தில் இருந்த 1 காசுக்கு மூன்று ஆடுகளை வாங்கலாம். இப்படிப்பார்த்தால் சோறுடைத்த சோழ நாட்டில் மக்கள் எல்லோருமே சுபிட்சமாகவே இருந்தது தெரிகிறது.

ஊழியர்கள் நிரந்தர /தற்காலிக பணியை ஏற்க விருப்பமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். நாட்டிய பெண்கள் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி, யோகியஸ்ராக இருந்து கலையை வளர்க்க வேண்டும் என்பது தகுதி. பணியில் இருக்கும்போது ஊழியர் இறந்தால் அவர் பணியை அவரது குடும்பத்தில் தகுதி பெற்ற ஒருவருக்கு வழங்கும் முறையும் இருந்தது. அப்பணிக்கு தகுதி இல்லாதிருந்தால் மாற்று பணி அளிக்கப்பட்டது.
கோயிலுக்கு மொத்தம் 125 செக்யூரிட்டி ஆட்கள் 800 காசுகள் சம்பளத்துடன், தஞ்சைக்குள் போய்வர வண்டிச்சத்தம் பணம் பெற்றனர். ராஜ்ஜியத்து மக்கள் அதிகப்படியான பொன், பொருள், சொத்துகள் இருந்தால் அதை கோவில் உபயோகத்திற்கு தந்து Term Deposit போல் பயன்படுத்தக்கொள்ள திட்டமும் வைத்திருந்தான். அதை தந்தவர்களுக்கு ஆண்டுக்கு 12.50% சதவிகித வட்டியும் தந்தான். அதன்பிறகு அதை உரியவரிடம் திருப்பித தந்தான். பாருங்கள் ராஜராஜனின் நிர்வாகத் திறன் வியக்கும்படி உள்ளது.
இது பற்றிய தன் கட்டுரைகளை எனக்குப் படிக்கக் கொடுத்தும், ஆர்வத்துடன் எனக்கு விளக்கிய தமழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் முனைவர் ஆர்.நாகசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நான் படித்ததை இப்பதிவில் சுருக்கமாகத் தந்தேன்.

சனி, 27 ஜனவரி, 2018

முனைவர் ஆர்.நாகசாமி

தமழ்நாடு தொல்லியல் துறையில் 1953-88 வரை பணிசெய்தார். அருங்காட்சியக பாதுகாவலாராக இருந்தபிறகு இத்துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல நூற்றாண்டுகளைக் கடந்தும் மாறுபட்ட சங்ககால தமிழ் கல்வெட்டுகளை ஆராய்ந்து படிப்பதில் வல்லவர் என்று epigarphy துறையில் இவர் பெயர் எடுத்தவர். பணியோய்வு பெற்ற பிறகும் இவர் புதியவர்களுக்கு வழிகாட்டி வந்தார்.
தொல்லியல் துறையில் இவர் ஆற்றிய சேவைக்காக அண்மையில் பத்மபூஷன் விருதுபெற்றார். இவருக்கு விருது கொடுத்தது தவறு என்று ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இவர் ஹிந்துத்வா கொள்கைகளை ஆதரித்து மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளார் என்ற விமர்சனம் வந்துள்ளது. அவரோடு இருமுறை நான் பேசியுள்ளேன். நான் 2013ல் சித்தநூல்கள் எழுதும்போது எனக்கு எழுந்த சில சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தீர்த்துக்கொண்டேன். தமிழுக்கு அப்படி என்ன இவர் விரோதமாக செயல்பட்டார் என்று குடைந்து பார்த்தேன். அவருக்கு எதிராக ஒரு தடயமும் கிடைக்கவில்லை!
திரு.நாகசாமியின் முக்கிய பங்களிப்பு என்ன என்று பட்டியலிடுகிறேன்:
1. தமிழ்நாட்டில் தொல்லியல்துறையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் மத்தியில் பரப்பியவர். அக்காலத்திலேயே தமிழ்நாட்டின் நினைவுச்சிங்களையும் கல்வெட்டுகள் சார்ந்த விஷயங்களையும் சிறு பாக்கெட் கையேடுகளாக 25 பைசா விலையில் கிடைக்கச் செய்தார்.
2. மாணவர்களையும் தொல்லியல் துறை வல்லுநர்களோடு இணைந்து அகழ்வாராய்ச்சிப் பணிசெய்யத தூண்டினார்.
3.தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கல்வெட்டுகளை உலகறியச்செய்தவர். கரூர், அழகன்குளம், கொற்கை ஆய்வுகளை செய்தவர். மதுரை நாயகர் அரண்மனையை பிரபலப்படுத்தியவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை அகழ்வாராய்ச்சி செய்தார்.
4.முதல்முறையாக கடலடியில் தொல்லியல் ஆராய்ச்சியை பூம்புகாரில் செய்தது இவருடைய தலைமையில்தான்.
5.கல்வெட்டியலில் முதுகலை பட்டயப்படிப்பை கொண்டுவந்தார்.
6.மலேசிய, கெனடா, சுவீடன், டென்மார்க் முதலிய நாடுகளுக்குச் சென்று இலக்கிய நாட்டிய நாடகங்களை வடிவமைத்தார்.
7.தேசிய அளவிலும் வெளிநாடுகளிலும் சோழ மன்னர்களின் பெருமைகளை கண்காட்சிகளாக நடத்தினார்.ஆண்டுதோறும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நடக்க வழிவகுத்தவர்.
8.தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 120 நூல்கள் எழுதியவர். இவருடைய தலைசிறந்த புத்தக தலைப்புகள் என்றால், 'Master pieces of South Indian Bronzes' 'சிவபக்தி' 'உத்திரமேரூர்' ஆகியவை.
9.தமிழகமெங்கும் சுமார் 12 அருங்காட்சியங்களை நிறுவினார். கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியவர். சேர மன்னர் கொல்லிப் புறை காசுகளைக் கண்டுபிடித்து சேர வரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தவர்.
10.பரபரப்பாக பேசப்பட்ட திருவாரூர் மாவட்டம் பத்தூர் நடராஜார் கோயில் சிலை வெளிநாட்டுக்கு கடத்தபட்டு அங்கே ArtGallery அருங்காட்சியத்தில் இருந்துள்ளது. அதைத் திரும்பப்பெற லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. வழக்கின் மனுதாரர் யார் தெரியுமா? இறைவி சிவகாமசுந்தரி. மனுதாக்கல் செய்தவர் அப்போதைய இந்திய தூதர் பி.சி.அலெக்சாந்தர். சிவகாமசுந்தரிக்காக லண்டன் நீதிமன்றத்தில் திரு.நாகசாமி அவர்களே நேரில்போய் ஆதாரப்பூர்வமாக வாதாடி வெற்றி பெற்றார். களவு போன சிலையை மீட்டார். லண்டன் பத்திரிகையில் இவ்வழக்குபற்றிய செய்தியில் 'The Judge of the London High Court, in his Judgement described Dr.Nagaswamy as an unequalled expert in his subject.' என்று போட்டிருந்தது.
10. திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் ஜம்பை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின் மூலம் அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருக்கும் “ஸதியபுதோ” மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டுத் தகடூரை எறிந்த தலைவன் கடையெழு வள்ளல்களுல் ஒருவரான அதியமானே என்ற உண்மையை 1981ல் நிறுவினார். அதுவரை “ஸதியபுதோ” யார்? என்பது தமிழக வரலாற்றில் புதிராகவே இருந்தது.
11. தொன்மையான தமிழ் எழுத்துக்களுக்கு "தமிழி” என்று பெயரிட்டவர் இவரே.
12. கலைமாமணி விருதுபெற்றவர்.
நான் அவரைத் தொடர்பு கொண்டபோது மும்பையில் ஒரு தொல்லியல் கருத்தரங்கில் பேசுவதற்காக அங்கே முகாமிட்டிருந்தார். 'ஐயா, உங்களுடன் பேசி பல சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டேன். நீங்கள் நல்ல பணி செய்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி' என்று நன்றி கூறினேன். 88 வயதான இவருக்கு இவ்விருது காலந்தாழ்த்தித் தரப்பட்டுள்ளது. சினிமாத்துறைக்கு உள்ள முக்கியத்துவம் இத்துறைக்கு இல்லை என்று தெரிகிறது.
ஐயா அவர்களுடைய செயலில் அணுகுமுறையில் RSS ஹிந்துத்வா கொள்கைகள் எங்கேனும் வந்துள்ளதா? படிப்பறிவில்லாத கீழ்த்தரமான கூட்டம் எதிர்ப்பதையும் பேசுவதையும் சன் தொலைக்காட்சியில் ஒரு செய்தியாகக் காட்டுகிறார்கள். இதை என்னவென்பது?


வியாழன், 11 ஜனவரி, 2018

புதையுண்ட பொக்கிஷங்கள் வெளிப்படும்!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூல் மாவட்டம் சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கத்துறை சார்பில் ஸ்கேனர் மூலம் சென்னூர் கோட்டையச் சுற்றி சோதனை செய்யப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே இதுபோன்ற பொக்கிஷங்கள் பாதாள சுரங்கத்தில் உள்ளது என்று செவிவழி செய்தியாக நம்பப் பட்டுவந்தது. ஆனால் உள்ளே (கதைப்படி) சப்த கன்னிகள் சிலைவரைதான் அடையாளம் வைத்துச் செல்லமுடிந்தது. அதன் பிறகு ஆழத்தில் நீர் தேங்கிய அகழி இருந்துள்ளதால் அதைத்தாண்டி யாரும் முயற்சிக்கவில்லை. கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆராயும் பணி நடந்தது. நீரை பம்ப்செட் மூலம் வெளியேற்றி உள்ளே நுழைந்துள்ளனர்.
பாதாள சுரங்கத்தின் நுழைவாயிலேயே வைரம் பொதிந்த கனிமங்கள் உள்ளதை கண்டுபிடித்தனர். தொழில்நுட்ப கருவிகள்கொண்டு உள்ளே ஸ்கேன் செய்தனர். அங்கே 12 மீட்டர் உயரத்திற்கு (40 அடி) வைர மலை உள்ளதை உறுதி செய்துள்ளனர். இதை மத்திய அரசின் ஒப்புதல்பெற்றே பிறகே கையகப் படுத்தும் பணி நடக்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
போதலூரி ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் தன்னுடைய 'காலக்ஞானம்' நூலில், கலியாண்டு 5100 க்குப்பிறகு நல்லமலா மலைத்தொடர் ஓரமாக கர்னூல், ஸ்ரீசைலம், கடப்பா போன்ற ஊர்களில் பல புதையல்கள் வெளிப்படும் என்பதை அன்றே தீர்க்க தரிசனத்தில் கூறியிருந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது பாதாள சுரங்கத்தில் அமர்ந்து எழுதிய இந்த நூல் கர்னூல் மாவட்டம், பானகானபல்லே அருகே 'ரவ்வலு கொண்டா' (வைரமலை) இடத்தில் உள்ளது.
போகரும் தன் நூலில் இதுபோல் எங்கெங்கே சொர்ண மலைகள் கிடாரங்கள் (அயோத்தி முதல் இலங்கை வரை) உள்ளன என்பதை வரைபடம் போலவே 'போகர் ஏழாயிரம்' நூலில் சொல்லியுள்ளார். ஆனால் அதை யாரும் இன்றுவரை நம்பியதில்லை. கப்ஸா விடுறதுக்கே கிளம்பிட்டாங்கையா என்றுதான் விமர்சனம் வரும். இப்போது சொன்னதுபோல் கிடைத்துவிட்டது. அடுத்து என்ன?
ஒப்புதல் கிடைத்தபின் இந்த மலை அப்படியே சுவாஹா ஆகுமா, அல்லது பிரித்து மேயப்படுமா என்பது இறை (Government) ரகசியம்!

வைர வேட்டைக்குப் போவோமோ?
-------------------------------------------------
ரவ்வலகொண்டா பற்றி பழைய பதிவில் சொன்னேன். ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் என்றுமே கனிமங்களுக்குப் பெயர் பெற்றது. ராயர்கள், குதுப்ஷாஹி, பாமினி, பீஜப்பூர் சுல்தான்கள், நிசாம் மன்னர்கள் எல்லோருமே வைரங்களைத் தோண்டி எடுத்து வந்தனர். அக்காலத்தில் ராயலசீமாவின் சந்தை தெருக்களில் வைரங்களைப் போட்டு விற்பனை செய்தார்களாம். அவை எல்லாம் கனிம உற்பத்தியில் வந்தது. ஆனால் பல காலங்களுக்குப் பிறகு மிகபெரிய அளவில் இப்போது வைரமலை புதையல் கிடைக்கிறது என்பது ஆச்சரியம்தான்.
ஒன்று, இவையெல்லாம் அக்காலத்தில் குறிக்கபட்டு அதற்கான அடையாளங்கள் வைக்கபட்டிருந்து பின்னர் அப்படியே காலப்போக்கில் போனவை. அல்லது, அக்காலத்தில் இறையருளாளர்கள் மூலம் சில இடங்களில் இருப்பதாக அறியப்பட்டு முயற்சித்து கைவிடப்பட்டு பிறகு நூற்றாண்டுகளாக செவிவழியாகப் பகிரப்பட்ட செய்தியாக இருக்கலாம்.
புயல் வெள்ளம் வந்தால் கர்னூல் ஜில்லா மக்களுக்கு ஆனந்தம். ஏன்? அப்போதுதான் எந்த பிரயத்தனமும் இல்லாமல் மழைநீர் களிமண்ணை அடித்துக்கொண்டு போகும், அதில் வைரக் கற்கள் அடித்து வரப்படும். இதை பொறுக்கவே கூட்டம் உண்டு. சிலர் வேலையை விட்டுவிட்டு இதையே முழுநேரத் தொழிலாகவும் செய்கிறார்கள். அங்கு கிம்பர்லைட் /லேம்ப்ரைட் கனிமங்கள் மிக அதிக அளவில் சர்வ சாதாரணமாக இன்றும் கிடைக்கிறது. வேறு மாநிலங்களில் இருந்து இங்கே மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக கூடாரம் போட்டு நல்ல அறுவடை செய்துகொண்டு போவார்கள். அதற்கேற்ப உழைப்பை போடவேண்டும். ஒருமுறை வந்துபோனால் 5 - 10 லட்சம் ரூபாய் வரை வைரங்கள் பல அளவுகளில் கிடைக்கிறது. குடிசைத் தொழிலுக்கு இந்த வருமானம் போதாதா? விவசாயம் சரியில்லாதபோது இதுதான் தொழில். வைர வேட்டையைப் பற்றி நான் புனைந்த ஒரு நாட்டுப்புற மெட்டுப் பாட்டு...
"கொண்டபக்க ரெய்தநேல துன்னி பாகசூசிந்தி
ரெங்குரெங்கு ரவ்வலு சேத்திமீத வெலிகிந்தி
மண்ட்டிலோக அடுசுபட்டி ரத்தினாலு பூடிந்தி
முக்கமுக்க பகிலிகொட்டி கொப்பவாடு சேசிந்தி."
('மலையோரம் வளமான நிலத்தை உழுது பார்த்ததில் வண்ணமய வைர ரவைகளாக கைமீது ஒளிர்ந்தது. பூமிக்ககுள் சேறுபூசிய ரத்தினங்கள் புதைந்திருக்கு. அதை துண்டுகளாக வெட்டி எடுத்து பணக்காரராகி விடலாம்') என்ற பொருளில் இதை எழுதினேன். 
80களில் என்னுடைய தாய்மாமன் கர்னூல் பகுதியில் ஒரு சிறிய கனிம சுரங்கத்தை வைத்திருந்தார். அதில் எமரால்ட், கார்னெட், விடல்ச்பா, மற்றும் வேறு ஏதோ கற்களும் கிடைத்தது. அவை பட்டைத் தீட்டாத தரம் பிரிக்கபடாதவை... நான் சிறுவனாக இருந்தபோது அவர் கொண்டுவந்த சில சின்ன வண்ணநிற தீட்டப்படாத கற்களை என் கையில் அள்ளிப் பார்த்த ஞாபகம் உண்டு. என் பள்ளிக்கூட பிராஜக்ட் வரக் செய்ய chart பேப்பரில் கோந்து போட்டு ஓட்ட அந்த சிறு வண்ணநிற கற்களை எடுத்துக்கவா என்று நான் கேட்டதை நினைத்தால் இன்றும் சிரிப்புதான் வருகிறது. 
இரண்டு ஆண்டுகள் மட்டுமே வைத்திருந்தபின் யாருக்கோ விற்றார். அதெல்லாம் பிராப்தம் இருந்தால்தான் கையில் தங்கும்.
Image may contain: food

செவ்வாய், 2 ஜனவரி, 2018

மந்திரத்தால் மாங்காய் விழும்

என்னுடைய பதிப்பாளரின் தகப்பனார் உயர்திரு இராமையா அவர்கள் பல்லாண்டுகளாகத் தேவாரம் பாடுபவர். தொண்ணூறுகளின் வயதுக்கான உடல் பலகீனம் இருந்தாலும், பக்தி நெறி தவறாதவர். நான் பதிப்பாளரின் கடைக்குப் போகும்போதெல்லாம் இவர் அங்கு இருப்பார். நிறைய விஷயங்களைப் பேசுவோம்.
ஒருமுறை தன் அண்டைவீட்டு மாமர் கிளையில் பழுத்த மாம்பழம் ஒன்று இவர் வீட்டுக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். இவருக்கு அதை சுவைக்கவேண்டும்போல் ஆசை வந்தது. உடனே ஒரு தேவாரம் பாடினார். பத்து வினாடிக்குள் தொப் என்று மாங்காய் தன் கைமேல் விழுந்தது.
தன் நீண்டநாள் நண்பர் ஒருவரைச் சந்தித்து வெகு காலம் ஆனது. இப்போது அவர் எங்கிருக்கிறாரோ என்னவோ என்று அன்று முழுக்க அவர் நினைவாகவே இருந்துள்ளார். அவரைக் காண மாட்டோமா என்ற ஏக்கம் மேலெழுந்துள்ளது. அவர் வாய்விட்டு ஒரு தேவாரப் பதிகம் பாடினார். அன்று மதியம் அந்த முதிய நண்பர் எங்கோ போகும் நிமித்தமாக மகனுடன் வரும்போது இங்கே ஐயாவை பார்த்துவிட்டுப் போனார்.
மறைக்காடு கோயிலில் அப்பரும் சம்பந்தரும் நெடுநாள் தாளிட்டுக்கிடந்த கதவைப் பதிகம் பாடி திறந்ததையும் மூடவைத்ததையும் நாம் படித்துள்ளோம். அதைப்போல் ஆத்மசுத்தியுடன் பதிகம் பாடி மாங்காய் விழ வைக்கலாம் என்பதை என்னிடம் சொல்லி உணர்த்தினார். இந்த காலத்து புள்ளைங்க பகுத்தறிவு பேசுறவங்க, மொழிகளை கிண்டல் செய்யறவங்க. அவங்களை நம்மால திருத்த முடியாட்டி அந்த சிவபெருமான்தான் திருத்தணும் என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

ஐயாவுக்கு நான் எழுதிய 'ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர்' புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தேன். கற்பகம் புத்தகாலயம் அலுவலகம் காலையில் திறந்ததும் அங்கே ஐயாவின் குரல் பதவில் தேவாரப் பதிகங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். தான் பாடியதைக் கேட்டுக்கொண்டே பணி செய்வார். இது அவருக்குக் கிடைத்த பேறு!

-எஸ்.சந்திரசேகர்


ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரூ.1,500 = ரூ.3,00,00000

என் நண்பரின் நண்பர் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் கிரிப்டோ நாணய வர்த்தக சந்தையில் $20 முதலீடு செய்தார். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் அது சுமார் 1500 ரூபாய். திடீரென அந்த வர்த்தகம் மடமடவென உயர்ந்து போய் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா? ரூபாய் மூன்று கோடியே இருபது லட்சம். ஆத்தாடி! அதில் எக்ஸ்சேஞ் மூலம் நாம் பணம் போடவும் எடுக்கவும் சிறிய கமிஷன் கழிக்கப்படும். உலகம் முழுக்க வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பண கையிருப்பு குறைந்து போவதும், நாணயமில்லாத நாணயத்தில் போய் முதலீடு ஆவது பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
உட்கார்ந்தபடியே வருடத்திற்கு ஐந்து முதல் ஏழு லட்சம்வரை அதிலிருந்து அவர் தேவையான பணத்தை எடுக்கிறார். எஞ்சிய தொகை தொடர்ந்து சந்தையில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே ICO அறிமுகமானபோது பங்கு கொண்டவர்கள். அன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.2200 இருந்த நினைவு. இவரை விட மிகப்பெரிய திமிங்கிலங்கள் இதில் உள்ளனர். இன்றைக்கு ஊரெல்லாம் இது பேசப்படுகிறது. ஒவ்வொருவரும் இதில் பல ஆயிரங்களையும் லட்சங்களையும் சக்திக்கேற்ப முதலீடு செய்து அதிர்ஷ்டம் எப்படி என்று பார்க்கிறார்கள். நிதி மேலாண்மையில் High risk, High return என்போம். இன்று எழுபத்துக்கும் மேற்பட்ட virtual நாணயங்கள் அறிமுகமாகிவிட்டது.
அதன்படி வர்த்தகத்தில் விழுந்தால் செம்ம அடிதான். தாறுமாறாக ஏறினால் கூரையை பிச்சிகிட்டு கொட்டும். ஆனால் இப்போது எத்தனை முதலீடு செய்தாலும் அது நாம் எதிர்பார்த்த லாபத்தை குறுகிய காலத்தில் ஈட்டாது. நம்ம ரிசர்வ் வங்கி சும்மா இருக்குமா? இதில் பணம் போட்டு லாபம் சம்பாதிப்பதை எப்படியாவது வருமான வரி சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. ரூபாயில் ரொக்கமாக மாற்றாமல் அந்த நாணயம் மூலம் மாற்று பரிவர்த்தனை செய்வதை தடுக்க முனைந்துள்ளது. நமக்கு வந்தவரை ஆதாயமே!
No automatic alt text available.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

வடமொழியின் மாண்பு

தவத்திரு பாம்பன் சுவாமிகளின் கருத்தை உரைத்து வெளியான கட்டுரையை இங்கே பதிக்கிறேன். இது தமிழின உணர்வை சிதைக்கிறது என்று உங்களில் சிலர் நினைக்கலாம். அந்தத் தொகுப்பு இங்கே. 
     --*---- * -----*--
வடமொழியும் தென்மொழியும் நாவலந்தீவு நார்களுக்கு வாய்த்த இரு கண்களாம். இவ்வுண்மை உணராது வடமொழியைத் தூடனை புரிவோர் குமுகாயப் புண்களாம். வடமொழி கல்லாதவரைத் திருஞான சம்பந்தர் “மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என இழித்துரைத்தல் காண்க. பாம்பன் சுவாமிகள் திருஞானசம்பந்தர் வாக்கிற்கேற்ப வடமொழி கற்று இருகண்களையும் பெற்றார். நமக்கு அதனைச் சொன்னார். திருப்பா நூன் முகத்தில் சுவாமிகள் கூற்று “நமா ஆர்ந்த கடவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாம மந்திர செபத்திற்கும் சத்திபீஜ மணைந்த மந்திர செபத்திற்கும் பிறமந்திரங்கட்கும் அங்கியை முன்னிட்டு ஒற்று உத்திரகிரியைக்கும் வடமொழியே முக்கிய உதவியாகவும் இருத்தலின் இவ்விருதிறமுந் தமிழர் கொண்டுய்பவரே யாவர்” திருப்பா பக்கம் 17.
சுவாமிகள், வடமொழியறிவு பெற்றதனாலேயே சாம வேதத்திலே சுவாமி என அழைக்கப்பட்ட சிறப்பு ஆறுமுகச் சிவனுக்கே கிட்டியது என்பதைப் பாடலாய்ப் பாடியருளினார். தன் சாத்திர நூல்களில் எல்லாம் வேதாகம உபநிடதக் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி குகபரத்துவக் கொள்கையை நிருவியருளினார். பிறப்பாலுயர்வு தாழ்வு இல்லையெனும் கருத்தை சாமவேத வஜ்ரஸுசிகோப நிஷதம் கொண்டு பரிபூரணானந்த போதம் நூலில் பகர்ந்தார். தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் சுவாமிகளின் வடமொழிப் புலமையை தன் வாழ்க்கைக் குறிப்பு நூலில் சொல்லியுள்ளார்.
“பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள்-சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்”
“குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த போது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்” திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.
சுவாமிகள் வடமொழியிலியற்றிய “குமாரஸ்தவம்” தௌத்தியம், அட்டாட்ட விக்கிரகலீலை போல்வன என்றும் பாராயணத்திற்குரிய பனுவல்களாய் விளங்குகின்றன. 
Image may contain: 5 people

வெள்ளி, 15 டிசம்பர், 2017

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

என் நண்பர்வீட்டு திருமணத்திற்குச் சென்றேன். அவர் முற்போக்காளர். அன்பளிப்பைத் தவிர்க்கவும், கொடுத்தால் எங்களை அவமதித்தகாக ஆகும் என்று கண்டிப்பாக பத்திரிகையில் போட்டிருந்தனர். அதனால் நாங்கள் எல்லோரும் கைவீசிக்கொண்டு போனோம். அவருடைய சகோதரியை மணமேடைக்கு அழைத்து வந்தனர். அங்கே இருவீட்டு மூத்தவர்கள் மட்டும் ரெண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தனர். பெரிய குத்துவிளக்கு இருந்தது. ஒரு மூதாட்டி அதை ஏற்றினாள்.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது." திருக்குறளை சொல்லிவிட்டு ஒரு தாத்தா தட்டில் இருந்த தாலியை எடுத்து மப்பிள்ளைக்குக் கொடுத்தார். அவர் பெண்ணின் கழுத்தில் கட்ட, கல்யாணம் முடிந்தது. என்னுடன் வந்த ஆந்திரா நண்பர் அப்போதுதான் போன் பேசிவிட்டு சுதாரித்துக்கொண்டார்.
"முஹுர்தத்திற்கு இன்னும் நேரம் இருக்கு இல்லையா?" என்று கேட்டார். சரியாபோச்சு. இப்போதானே கல்யாணம் முடிந்தது என்றேன். "எப்போ? இங்கதானே இருந்தேன். இன்னும் மேடைல அக்னி குண்டமே வளர்க்கலையே?" என்றார். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று நடந்த கதையைச் சொன்னேன். "ஆஆஹ்..." என்று வாய்பிளந்தார். நாங்களும் பந்திக்குப் போனோம். பஞ்சமுக குத்துவிளக்கு அக்னிதான் ஹோம குண்டம். சித்தர் திருவள்ளுவரின் ஒரு குறள்தான் வேதமந்திரம். அதுதான் வாழ்த்துப் பா. அங்கே ஒரு வைணவ புரோகிதர் சும்மா உட்கார்ந்திருந்தார். அவருக்கு என்ன வேலை என்று சத்தியமாகப் புலப்படவில்லை.
"ஹையோ.. இதுக்கா இவ்ளோ பெரிய சத்திரம் எடுத்து செலவு செய்யணும்.. இதை வீட்லயே பண்ணிருக்கலாமே? ஓட்டல்ல ஒரு ரிசப்ஷன் சிம்பிளா கொடுத்திருந்தா போதும்" என்றார் மிகுந்த ஏமாற்றத்துடன். நாம் என்னத்தை சொல்ல? அது அவரவர் விருப்பம்.
"மாங்கல்யம் தந்துனானே.." என்ற வாக்கியங்களை பாரதம் முழுக்க மணமேடையில் கேட்கிறோம். அது எந்த தெய்வத்தைப் பற்றியது? இது ஸ்லோகமா? ஹுஹூம். இது எதுவுமில்லை. "என்னுடைய வாழ்க்கையில் அங்கமாகி இருப்பவளே, இந்த மங்கல நாணை, உன் கழுத்தில் அணிவித்து நம் உறவை உறுதி செய்கிறேன். குணவதியே நூறாண்டுகாலம் வாழ்க!" என்பதுதான் அதன் பொருள்.
No automatic alt text available.

சிவன் சொத்து : பனைவோலை, பாதுகை

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட அந்த ஈசனே அந்தணர் வடிவாக வந்து, பாடல்கேட்டு, படி எடுத்து ஒலைச்சுவடியாக வடித்து கையொப்பமும் இட்டார். திருவாதவூரான் சொல்லக்கேட்டு தில்லையம்பலன் எழுதிய திருவாசகம் ஓலைக்கட்டு இன்றும் இருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள அம்பலத்தாடி மடத்தில் பாதுகாக்கப்பட்டு, தற்போது அது பாண்டிச்சேரி (பஜாஜ் ஆட்டோ ஷாப் எதிரில், முத்தியால்பேட்) அம்பலத்தாடி (தலைமை) மடத்தில் பூசனை செய்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. வருடம் ஒருமுறை மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் ஓலைச்சுவடி பேழைக்கு சிறப்பு தைலங்கள் சாற்றப்படும். ஆனால் மகா சிவராத்திரி அன்று இரவு 11-12 வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறதாம்.
அதுபோல், சுந்தரர் எமக்கு அடிமை என்று வழக்காடி திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) வரை கூட்டிச்சென்று இறுதியில் கருவறைக்குள் மறைந்த ஈசன், தன் பாதுகைகளை விட்டுச்சென்றார். இன்றும் அது கிருபாபுரீஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பாக சிறு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகைகள் வைக்கப்பட்டுள்ளது. போய் தரிசனம் செய்து இப்பிறவியை அறுத்திடுங்கள்.

தமிழை ஆண்ட கோதை

ஸ்ரீபெரியாழ்வார் வாழ்ந்த அந்த வீடு, ஆண்டாள் ஓடி விளையாடிய வீடு எங்குள்ளது? ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள வென்று கிழியறுத்தான் வீதியில் இன்றும் உள்ளது.
இங்கே நாம் காண்பது பெரியாழ்வாரின் பாதுகைகள், மற்றும் அவர் கையால் ஆராதித்த விக்ரகங்கள். பெரியாழ்வாருடைய 224வது வம்சத்தவர் ஸ்ரீ வேதபிரான் பட்டர் இவற்றை பூசித்து வருகிறார். கோயில் சமீபத்திலேயே ஆண்டாள் வாழ்ந்த திருமாளிகை உள்ளது. அங்கே சென்றால் மறவாது தரிசித்து வாருங்கள்.