About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 13 மார்ச், 2018

திருப்பாம்பரம்

திருப்பாம்புரம் - இறைவன்: பாம்புரநாதர், இறைவி: பிரமராம்பா
திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம்.
குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது. ஞானசம்பந்தன் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு நாக தீர்த்தம் விசேஷம்.
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
சில வருடங்களுக்குமுன் ஒரு பௌர்ணமி அன்று மிகப்பெரிய நாகம் ஒன்று கருவறையில் நுழைந்து, சிவலிங்கம் மீது தன் சட்டையை உரித்து , அதை மாலையாக சார்த்திவிட்டு சென்றுவிட்டதாம். மறுநாள் காலை கோயில் அர்ச்சகர் கதவை திறந்து பார்க்க அதிசயம் வெளிப்பட்டது. அங்கே கோயில் உள்ளே இன்றும் அந்த பாம்பு சட்டையை பிரேம் போட்டு வைத்துளார்கள். இதன் நீளம் சுமார் 8அடி இருக்கும். இறைவனின் கடல்போன்ற திருவிளையாடல்களில் இவையெல்லாம் சிறு துளிகாளாகவே நமக்கு தெரிகின்றன. ரகு-கேது பூஜைகளை மிக ஸ்ரத்தையுடன் செய்தார் குருக்கள் திரு.திலிப் குமார். (cell no not available). பரிகாரம் செய்ய கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். நாங்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சென்றோம்.
அடியேன் அக்கோயிலில் வரைந்த ஒரு பாடல்.
"வண்டுசேர் குழலியோடு நாதன்மேல்
வந்தமர் மாலைசாற்றும் அரவுகோன்
கண்டுகளித்த தரிசனத்தில் அக மகிழ
கலிமுழுதும் சிவனாகபூசை ஓங்குகவே."
திருவாரூர் மாவட்டம் என்றலே இசையும் பக்தியும் நம் நினைவில் வரும். திருஞானசம்பந்தன் பாடி அருளிய ஸ்தலமான இந்த திருப்பாம்புரம் ஊரில் பல இசை மேதைகள் வாழ்ந்துள்ளனர். சில காலங்கள்வரை காலஞ்சென்ற திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளை எல்லோரும் நாகஸ்வர சக்ரவர்திகளாக மங்காத புகழோடு திகழ்ந்துள்ளார்கள். அருகாமையில் ஆலத்தூர், மகராஜபுரம் ஊர்களும் இசை வளர்த்த காவிரி டெல்டா பகுதியில் வருகிறது. Auto goes from Peralam. Straight bus to Temple from Mayiladuthurai is at 5am.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக