About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 14 செப்டம்பர், 2019

திருக்கூத்து அம்பலத்தில்!

சிவகாசி ஸ்டான்டர்ட் ஃபயர்வர்க்ஸ் பட்டாசு தொழிலதிபர் வீட்டுத் திருமணம் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சு. தில்லை நடராஜரும் சிவகாமியும் மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியத்தில் உள்ளனர் என்றால் மிகையில்லை. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நட்சத்திர விடுதிக்குச் சமமாக அலங்காரங்களும், வண்ண சீரியல் விளக்குகளும், தடபுடல் விருந்தும் களைகட்டியதாம்.

பல நூற்றாண்டுகளாக அம்மண்டபத்தில் இறைவன்-இறைவி திருக்கல்யாண வைபவம்தான் நடந்து வந்துள்ளது. சோழ மன்னர்களின் முடிசூட்டு விழாகூட பஞ்சாட்சர படியில் நடக்கும். இறைவனுக்கான விழாவன்றி வேறு எதுவும் நடத்த மண்டபத்தில் அனுமதி இல்லை என்கிறார் சேக்கிழார் பெருமான். இது இப்படி இருக்க அண்மையில் நடந்த கல்யாண கூத்து தில்லை மரபை மீறிய செயலாகவே தெரிகிறது. மிகுந்த கட்டுப்பாடு கொண்ட பொது தீட்சிதர்கள் ஆகம விதிகளுக்குப் புறம்பாக இந்த கேளிக்கைக்கு அனுமதி தந்தது எப்படி? இவர்களை அடிபணிய வைத்தது யார் என்பது தெரியவில்லை. மண்டபத்தை வாடகைக்குத் தந்தாக வேண்டும் என்று மேலிடத்தின் அழுத்தத்தில் மிரட்டப்பட்டிருக்கலாம்.

பொற்சபை அம்பலத்தின்மீது பொன்வேய்ந்த பராந்தக சோழன்கூட கால்பதித்து இருக்க மாட்டான். கயிலாய மரபினரான பொது தீட்சிதர்களும் மிதித்திருக்க வாய்ப்பே இல்லை. அது அவர்களின் உயிர்நாடி. அப்படி இருக்கும்போது அலங்கார மலர் கட்டுபவனும், மின் வண்ண விளக்குகள் மாட்டுபவனும் ஈசனின் தலைமேல் ஏறி கூரையில் நின்றும் நடந்தும் உள்ளனர். இன்னொரு வேலையாள் அம்பலத்தின் புறத்தே மலர் கொத்துகளுக்கு மத்தியில் கால்நீட்டி மல்லாக்கப் படுத்துக் கிடக்கிறான்.

மணமக்கள் தங்கள் காலணிகளுடன் படாடோபமான வரவேற்பில் அமர்ந்துள்ளனர். அங்கு விருந்தினர்களைத் தவிர மற்றவர்கள் பிரகாரத்தில் நுழையக்கூடாது என சிவகாசி தொழிலதிபர் குடும்பம் ஒரே கெடுபிடியாம். புனிதமான மண்டபத்தில் காலணி அணியக் கூடாது என்ற அடிப்படை அறிவுகூட பாவம் 'சின்னஞ்சிறுசு' மணமக்களுக்குத் தெரியாதாம். மாணிக்கவாசகர் திருவாசகச் சொற்பொழிவு வழங்கிய இறைவனின் அருட்பிரசாதம் வியாபித்த அம்மண்டபத்தில் ஸ்டார் ஓட்டலின் கனமான விருந்தும் நடந்துள்ளது. தேசம் முழுக்க/ உலகம் முழுக்க இத்திருமண அட்டகாசத்தைக் கண்டித்தும், 'விவரமறியாத' இந்த மணமக்களை அமங்கலமாகச் சபித்தும் கரகோஷத்துடன் இகழொலி பதிவிட்டனர்.

கலிகாலத்தில் கூத்தனின் சபையில் இப்படியும் கூத்து நடக்கும். காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்ட ஆகம விதிகளை ஏதோ காரணத்திற்காக தீட்சிதர்களே மீறத் துணிந்து விட்டனர் என்றால் அது மன்னனுக்கும் மக்களுக்கும் கேடு. கம்பன் தன் இராமாயணத்திற்கு ஒப்புதல் பெற்ற 'தில்லை மூவாயிரம்' இன்று விமர்சனத்திற்கு உள்ளாவது தேச மக்களுக்கு நல்லதன்று. சிவகாசியிலிருந்து தில்லைக்கு வந்து தொழிலதிபரும் மணமக்களும் தீராத பாவம் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது விதி!

i





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக