About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 23 ஜூன், 2019

நாத்திகனைத் திருத்திய விபத்து

“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த விதத்தைப் பற்றி ஶ்ரீமடம் திரு. வரகூர் நாராயணன் விவரித்தது:

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவரும் உதவிய சாண்டோ சின்னப்ப தேவரும்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்து வமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார். நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

பெரியவா பாதம் சரணம்!

பூமியால் நாம், நம்மால் பூமி

பூமியில் உள்ள நாடுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார் கவனகர் திரு.கனகசுப்புரத்தினம். அவை:

1.சோக பூமி
2.போக பூமி
3.யோக பூமி
4.ஞான பூமி

பசி, பஞ்சம்,பட்டினி என மக்கள் அலையும் நாடுகள் அனைத்தும் சோக பூமி.

ஒட்டகம், ஆடு மாடு பன்றி, வாத்து கோழி, பாம்பு, பல்லி, தவளை எனக் கிடைத்தது எல்லாம் தின்று கொழுக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் போக பூமி.

பக்தி,பூஜை,குரு உபதேசம், யோக முயற்சி போன்றவற்றில் ஆர்வம் கொண்டு உள்ள இந்தியா தான் உலகின் ஒரே யோக பூமி.

அதையும் தாண்டி கர்மவினைகளை வென்று கடவுளையே தரிசிக்கும் ஆற்றல் மிக்க ஞானியர்களைக் கொண்டுள்ள தென்னாடு தான் உலகின் ஒரே ஞான பூமி ஆகும்.  பூமியில் பிறந்த நாம் அப்பூமி எத்தகைய பண்புடையது என்பதை நம் வெளிப்பாடு காட்டிக் கொடுத்துவிடும்.

அப்படிப்பட்ட இப்பூமியில் எல்லாருமே ஞான சீலர்கள். அப்படி இருந்தும் மற்ற பூமியின் மக்களைப்போல் நடந்து கொண்டால் அது அவரவர் ஊழ்வினைப் பயனே.

கவனகர் ஐயாவின் தந்தையார் காலஞ்சென்ற 'தசாவதானி' இராமையா பிள்ளை அவர்களின் கவனகத்தை நான் பள்ளி மாணவனாக இருந்தபோது கண்டு வியந்துள்ளேன். கண் பார்வை இல்லாவிட்டாலும் அவதானக் கலையில் அவருடைய நினைவாற்றல் திறன் அசாத்தியம். வேங்கடம் முதல் குமரி வரையுள்ள இந்த ஞான பூமியில் மட்டும்தான் இவை நடக்கிறது. திருப்பதியிலும் காஞ்சியிலும் இதைவிட அதிகமான சதாவதானம் சகஸ்ராவதானம் காட்டியவர்கள்  கடந்த நூற்றாண்டுகளில் இருந்தனர்.

வே என்றால் வேதம்

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.

தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.

மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.

சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.

சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.

'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.

நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.

வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.

கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது

உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்

கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.

ஆக, வேதம் என்ற சொல் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பொதுவாகவே கையாளப்பட்டுள்ளது.

வியாழன், 20 ஜூன், 2019

தமிழ் வாழ்கனு சொன்னால் போதுமா?

நம் பக்கத்து ஊர் நண்பர் தமிழ் எழுத்தாளர் மற்றும் கவிஞர். சிலகாலம் தமிழாசிரியராகப் பணியாற்றியபின் சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். நாம் பேசும் மொழியில் கொஞ்சமும் பிறமொழிக்கலப்பு இருந்துவிடக் கூடாது. அவ்வளவு சுத்தபத்தம் எதிர்பார்ப்பார். தமிழ் வாழ்கனு கோஷம் போட்டா மட்டும் போதாது அதை வாழ வைக்கவேண்டும் என்பார்.

கால்டாக்ஸி, மொபைல் சார்ஜர், ஏடிஎம், மோட்டார், சம்ப், பீரோ, மிக்ஸி கிரைண்டர், பிரிண்டர் ஸ்கேனர் என சகலத்திற்கும் தமிழில்தான் நிகரான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பார். பள்ளியில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை இலவசமாகக் கற்கலாம் என்ற பேச்சு அண்மையில் எழுந்தபோது இவருக்கு ரத்தக்கொதிப்பே வந்துவிட்டது. எங்கு தன்னுடைய மொழிப்புலமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற மாயக் கவலையில் இருந்தார். அவர் இடதா வலதா, முற்போக்கா பிற்போக்கா, எப்போது எதை ஆதரிப்பார் எதிர்ப்பார் என்று கணிப்பது சிரமம்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று பிளாஸ்டிக் ஒழிக என்றால் எப்படிச் சாத்தியம் இல்லையோ, அப்படித்தான் பேச்சு மொழியில் ஆங்கிலச்சொல் பயன்பாடும். பல துறைகளில் பலவித பொருட்களுக்குப் பொதுவான சர்வதேசப் பெயரை எல்லா மொழிகளிலும் சர்வ சாதாரணமாகப் பயன் படுத்துகிறார்கள். பழந்தமிழர் பயன்பாட்டுமுறை கருவிகரணங்களுக்குக் கடந்த நூற்றாண்டுவரை பாதிப்பு இல்லை. ஆனால் பிற்பாடு கால மாற்றத்தில் பல சாதனங்கள் வந்து விட்டபடியால் எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பது எரிச்சலைக் கிளப்பும்.

ஓலா ஊபர் எல்லாமே 'அழைப்பு இழுனி', கால்கேர்ள் என்பது 'மகிழ் மகள்', கிரைண்டர் என்பது 'மின்னரவை', மொபைல் பவர்பேக் என்பது 'மின்னடங்குப் பெட்டி' என அவரிடம் இன்னும் பட்டியல் நீளும். அதுசரி இதெல்லாம் அன்றாட பேச்சில் எப்படிப் பயன்படும்? 'சார், சும்மாவாவது கழனி சம்பாரவை டேங்குப்பொட்டினு அள்ளி விடாதீங்க. இதையெல்லாம் புதிதாய் கத்துகிட்டு பேச யாருக்கும் பொறுமையில்லை. மெனக்கெட்டு அகராதியைப் புரட்டி மூளையைக் கசக்கி தக்க பெயர் வைத்தாலும் அவை நம் மண்டையில் பதியாது. பள்ளிப் பாடத்தில் படித்தால்தான் உண்டு. ஏற்கனவே உள்ள பல நல்ல தமிழ்ச்சொற்களைக் காலவோட்டத்தில் நாம் பயன்படுத்தாமல் புறக்கணித்துவிட்டு அவை வழக்கொழிந்தது என்கிறோம். அதோடு இந்த சொற்களும் சேர்ந்து மறக்கடிக்கப்படும்' என்றேன்.

பக்கத்து வீட்டில் நேற்று ஆழ்துளைக் கிணறு போர்வெல் போட்டனர். இணைப்பு தருவதைப் பற்றி பணியாட்களுக்குள் பேச்சு போய்க்கொண்டிருந்தது. "த பார், ஆறு இன்சு பழுப்பு இறக்கிட்டு மேலேர்ந்து 30 அடி டீப் இஸ்து, மூணு பெண்டு வெச்சு, 2 ஆர்ஸ்பவரு மோட்டர் போட்டு சின்டக்ஸல வுட்ரு. அதை அக்வா பில்டர்ல பிக்ஸ் பண்ணிட்டா லீவர் வால்வு வெச்சு திருப்பிக்கட்டும்" என்று பேசிக்கொண்டனர். இந்த யதார்த்தத்தை நான் நண்பரிடம் சொன்னால் அவருக்கு ஜன்னி கண்டுவிடும். அந்த பொல்லாப்பு எனக்கு எதற்கு?


புதன், 19 ஜூன், 2019

சனாதன மார்க்கத்துள்தான் உள்ளீர்கள்


நம் நண்பரிடம் சன்மார்க்க சங்கத்தைபற்றி மேலும் பேசிக்கொண்டிருந்தேன்.
சிவம் அடித்தளமாய் இருக்க அதன்மீது எழும்பியதே சன்மார்க்கப் பிரிவுகள். ஆறுவகை மதங்கள் என்றாலும் அதன் உட்பிரிவுகள் மேலோட்டமாகத் தெரியாது. பிற்பாடு இந்துமதம் என அழைக்கப்பட்டு இன்றும் சிதையாமல் இருப்பது அதனுடைய ஆற்றலாலும் ஈசனின் அருளாளும்தான். அந்நிய மதங்கள் பல வந்தபோதும் ரிஷிகள் சித்தர்கள் மகான்கள் என பலரும் அவ்வப்போது வழிநடத்தி வந்ததாலும் அதன் பெருமைகளும் சடங்குகளும் காலங்காலமாக தொய்வின்றி பின்பற்றப்படுகிறன. வேதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் துணைநூல்கள் எல்லாவற்றிலும் சொல்லப்பட்ட கருத்திலிருந்து வேறுபட்டு நிற்கும்போது அங்கே புதிய மதம் பிறக்கிறது.

வியாசர் முதல் திருவள்ளுவர் வரை இந்துமதத்தின் அநேகக் கோட்பாடுகளை வலியுறுத்தி போதித்திருந்தாலும், அதை நிராகரிக்கும் விதத்தில் பிற்காலத்தில் சில வழிபாட்டு முறைகள் வந்தன. இறைவனே ஆன்மாவே இருக்க அவனே நம்முடைய ஊழ்வினைக்கேற்ப பாவ புண்ணியங்களை நம் தேகம் மூலம் அனுபவிக்க வைக்கிறான். அ என்றால் சிவன். அவனே தாயுமானவன். அம்மா என்ற அகாரத்தை மனமுருகச் சொல்லும்போது அங்கே தாய் வந்து பரிவுடன் உணவு படைக்கிறாள். ஏன்? தன் ஜீவன் பசியால் துடிப்பதை கருணையோடு பார்ப்பதால் குழந்தைக்கு உணவிடுகிறாள்.

ரிஷிகளும் சித்தர்களும் எண்ணற்ற மந்திரங்களையும் பூசை கிரமங்களையும் பரிகார முறைகளையும் சொல்லிவைத்துள்ளனர். பரிகாரம் என்றாலே அங்கு பூசையும் பரிகாரமும் உண்டு, இறுதியில் ஜீவகாருண்ய செயலில் உணவு படைத்தலும் உண்டு. முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தை தாயின் விரலை பிடித்துக்கொண்டு நடந்து பிற்பாடு அது விழாமல் நடக்கத் தொடங்குவது எப்படியோ அப்படித்தான் ஆலய தரிசனம், சிலை வழிபாடு, பூசைகள், மதம் போதிக்கும் அர்த்தம் என எல்லாமே அமைகிறது. பிற்பாடு அதில் தனக்குப் பிடித்தது எதுவோ அதை ஏற்கிறான் அல்லது நிராகரிக்கிறான்.

ஆனால் இதுகாறும் பின்பற்றப்பட்ட பூசை முறைகளும் சடங்குகளும் எவ்விதத்திலும் தேவையில்லை என்று சொன்னால் நம் ஆன்மாவைச்சுற்றி நிகழும் பல சூட்சும விஷயங்களை உதாசினப்படுத்துவதாய் இருக்கும். ஷண்மத கோட்பாடு தேவையற்றது, புராணங்கள் எல்லாமே பொய் என்றால், சித்தர்கள் சிவரகசிய நுட்பங்களைச் சொல்லியிருக்க வேண்டாமே, நாயன்மார்களும் ஆழ்வார்களும் அதை மையமாக வைத்துப் பதிகங்களையும் பாசுரங்களையும் அருளியிருக்க வேண்டாமே. பிறந்த நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்வதோ, இறந்த திதியில் சடங்குகளைச் செய்வதோ தேவையில்லை என்று நீங்கள் சொன்னால் அதை திருவள்ளுவரே ஒப்புக்கொள்ள மாட்டார். பிறந்தாலும் இறந்தாலும் நம் ஆன்மா இறைவனையே சுற்றிவரும். இங்கு நீங்கள் செய்யும் ஆன்மிகச் செயல்களின் பலன் அங்கு அந்த ஆன்மா சம்பந்தப்பட்ட ஜீவனுக்குச் சென்று சேரும். அன்னதானம் வஸ்திரதானம் வித்யாதானம் சொர்ணதானம் என எல்லாமே காருண்ய நோக்கில்தான் செய்யப்படுகிறது. சைவ உணவு உண்டால் விகற்பங்கள் வருவதில்லை. 

இவை எல்லாமே நீங்கள் கூடாது என்பதால் உங்களுடைய சன்மார்க்க சங்கத்தில் உயர்வு தாழ்வின்றி எல்லோரையும் பாரபட்சமின்றி ஏற்கிறீர்களா என்ன? உங்களுடைய சங்கத்தில் உறுப்பினர் கட்டண வசூலில் தில்லுமுல்லு நடந்ததாகவும் அதனால் உங்களுக்கும் அந்த சூனாபானாவுக்கும் பேச்சுவார்த்தையில்லாமல் ‘லடாய்’ தானே? என்றேன். அருட்பெருஞ்சோதியை வழிபட்டு அவர் வீட்டு மாடியில் வழிபாடு மன்றமும் நடத்தினீர்கள். அப்படி இருந்தும் சங்கத்தில் ஆன்மாக்களுக்கு இடையே ஏன் இந்த விகற்பங்களும் பிரிவினை வேற்றுமையும்? என்றேன்.

ஜீவகாருண்யமும் பிரார்த்தனையும் போதும், எந்த விதானங்களும் சம்பிரதாய முறைகளும் பின்பற்ற வேண்டியதில்லை என்றால் சைவ சித்தாந்தப்படி அது மூதாதையர்களின் வம்ச சாபத்தையும், ஊழ்வினைப் பாவத்தையும், கொண்டு வந்து சேர்க்கும். இதை நீங்கள் எப்படிப் போக்குவீர்கள்? சைவத்துள் எல்லா தாற்பரியமும் அடங்கியுள்ளது, நீங்கள் சொல்வதும் அடங்கியுள்ளது என்றேன். தொன்றுதொட்டு இருக்கும் சனாதன மதத்தில் நீங்கள் பின்பற்றும் சமரச சுத்த சன்மார்க்க நெறியும் ஓர் அங்கம். இதை மட்டும் தனியே பிரித்துப் பின்பற்றுவது அவரவர் விருப்பம். ஆனால் ஷண்மதத்தையும் சமய கோட்பாடுகளையும் நிந்திக்கக் கூடாது என்றேன்.

Image may contain: text

திங்கள், 17 ஜூன், 2019

ஜோதிஸ்வரூபனே!

‘ஆண்டவர் ஒளி ரூபமானவர். நாங்கள் சிலை வழிபாடு செய்வதில்லை’ என்று பெந்தகோஸ்தே பிரிவினர் சொல்கிறார்கள். இதைத்தான் வள்ளலாரின் சன்மார்க்க சங்கமும் சொல்கிறது. சென்ற ஆண்டு இவர்களும் வீரசைவ லிங்காயத்தாரும் ஆளாளுக்குத் தனி மதமாக பிரகடனப் படுத்தவேண்டும் என்றனர்.
வள்ளலார் வழியைப் பின்பற்றுபவர் எங்கள் பகுதியில் உள்ளார். அவர் சைவத்திலிருந்து சன்மார்க்கதிற்கு மதம் மாறியவர். அவர் சொல்வது, ‘உருவ வழிபாடு என்பது தேவையற்றது ஏனென்றால் புராணங்கள் அத்தனையும் பொய். சிவன் மற்றும் எல்லா கடவுள்களையும் சிலையாக மந்திரமாக வழிபடுவது மிகத்தவறு. அருட்பெரும் ஜோதிதான் ஆண்டவர். அதற்கு உருவம் இல்லை. சிலை வழிபாடு காட்டுமிராண்டித்தனம்தான்’ என்று வாதம் செய்தார். வள்ளலார் சன்மார்க்க சங்க அடியார்கள் பேசும்போது ஈவேரா பேசும் தொனியில் சொற்கள் அமைகிறது. அது எனக்குப் பிடிக்கவில்லை.
நண்பர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு பிறகு பதில் அளித்தேன். ‘சார், வணங்குவது என்பது அவரவர் விருப்பம். இதில் வள்ளலாரை இழுக்கக் கூடாது. அவர் உச்சபட்சதிற்குச் சென்ற சித்தர். சிவபிரானின் பேரொளியைக் சுயம் பிரகாசமாகக் கண்டவர். உமையவள் கரத்தால் அன்னம் உண்டவர். ஜோதியையே அவர் இறைவனாக ஏற்றார். ஆருத்ரா தரிசனத்தை காண தில்லைக்குப் போகவேண்டும் என்றவர்களை நிறுத்தி வடலூரிலேயே திரைப்போட்டு தரிசனம் செய்ய வைத்தார். அஷ்ட சித்தியையும் கைவரப்பெற்ற சித்தர், எப்படி சிவபிரானையும் அவருள்ளிருந்து வெளிப்பட்ட கடவுளர்களை நிந்திக்க முடியும்? சித்தர்களுக்கு உருவ வழிபாடு அவசியமின்றிப் போனது. சிவனே சித்தனாக இருக்க மந்திரம் ஏன் ஜெபிக்க, சிலையை ஏன் வணங்க? அதெல்லாம் நமக்குத்தான். அது அறவே வேண்டாம் என்று நாம் சொல்லமுடியாது.
ஆனால் நாம் இன்னும் அவர் நிலைக்குப் போகமலே ஷண்மத கோட்பாட்டை எதிர்ப்பது சரியில்லை. துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று பிரிவுகள் உள்ளது. இதில் எது சரி? எல்லாமே சரி. நாம் வளரும்போது முதலில் துவைத்தமாகத் தொடங்கி பிறகு ஒருகட்டத்தில் அத்வைத்தமாக புரிதல் முடிகிறது. ஒரு கட்டத்தில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற நிலையை உணர்கிறோம். அப்போது கோயிலுக்குப் போவதில்லை, மந்திரம் ஜெபிப்பதில்லை. ஆக்னேயத்தில் அகத்தீயாம் அருட்பெருஞ்சோதியைப் பார்த்து பரவசப் படுகிறோம். புறத்தேயும் பார்த்து மகிழ்கிறோம்.
அப்படித்தான் வள்ளலார் பாதையும். பல நிலைகளில் வளர்ந்து இறுதியில் ஜோதியே எல்லாம் என்ற நிலைக்கு வருவது. ஷண்மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கும் என்ற காரணத்தால் அது தேவையில்லை, உருவம் தேவையில்லை, மந்திர உச்சாடனம் தேவையில்லை என்றார். ஆனால் நாம் பக்குவப்படாமல் அப்படிச் சொல்வது சரியன்று.
பரப்பிரம்மம் என்பது உருவம், அருவம், அருவுருவமானது. அது ஆணோ பெண்ணோ பாலினமற்றதாகவோ இருக்கலாம். ஆனால் அவ்வஸ்துவில் ஒளியும் அதனுள் சப்தமும் ஆதாரம். வேள்வியில் நான் படம்பிடித்த இறை உருவங்களை ஒருங்கே கோர்வையாக பிரிண்ட் போட்டு வைத்திருந்ததை அவரிடம் காட்டி, ‘சிவன், அம்மன், கணபதி, விஷ்ணு, முருகன், என எல்லாமே செதுக்கியதுபோல் இருக்கு. இதுக்கு என்ன சொல்வீங்க? எல்லாமே அக்னி ரூபமான ஒளிதான் ஆனால் எல்லாத்துலேயும் உருவம் இருக்கா இல்லையா?” என்றேன். மொத்தத்துல இதெல்லாமே ஷண்மதத்தின் வெளிப்பாடுதானே? பரஞ்சோதியை தன்னுள் அகத்தீயாக தரிசிப்பதே சுயம்பிரகாசம். அதைதான் வள்ளலார் சொன்னார். மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் கோயிலுக்கும் போகவேண்டாம். இதுகாறும் பின்பற்றும் சடங்குகள் எல்லாமே அர்த்தமற்றது என்றால் நான் ஏன் ஜோதி வழிபாடு செய்யவேண்டும்? அது உங்களுடைய சிஸ்டம் ஆஃப் வர்ஷிப் தானே?
ரிஷிகளும் சித்தர்களும், ஆறாதார சக்கரங்களில் ஒவ்வொரு நிலையிலும் ஒளியை பீஜாக்ஷர சப்தத்தை அதில் வீற்றுள்ள கடவுளை சூட்சுமமாகக் கண்டுணர்ந்தார்கள். நீங்கள் அதை எல்லாம் பொய் என்பீர்களா? ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் ஒருபடி மேலேபோய் ஆறாதார சக்கரங்களில் நிகழும் இவ்வனைத்தையும் நேரடியாக வெறும் கண்களால் பார்க்க வைத்தார். பிறகு அவை மறைந்துபோய் புரூமத்தியில் சுடராக ஒளிர்ந்தது’ என்றேன்.
நம் நண்பருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தார். நான் வள்ளலாருக்கு எதிரானவன் அல்ல. வடலூரில் தரிசனம் செய்தவன். திருவருட்பா மூலம் அவர் வெளியிட்ட உபதேசங்களை பரப்புபவர்கள் ஷண்மதத்தை நிந்திப்பது போல் இருந்தது.. புரிதல் சரியாக இல்லாதபோது புதிய மதம் பிறந்து விடுகிறது. Genesis 1:3, " And God said, “Let there be light,” and there was light."

புதன், 12 ஜூன், 2019

வனத்தினுள் நடக்கும் அமானுஷ்யங்கள்

‘குரங்குகள் தாம் இறக்கும் காலத்தை முன்னமே அறிந்துகொண்டு அதற்கேற்ப ஆள் நடமாட்டமில்லாத வனத்திற்குச் சென்று உணவு நீர் உட்கொள்ளாமல் மரப்பொந்துக்குள் தியானத்திலிருந்து உடல் மெலிந்து போகுமாம். தக்கநேரம் வரும்போது பூமியில் தன் கண்ணுக்குப் புலப்படும் பிளவில் இறங்கி உடலை நுழைத்துக்கொள்ள, பூமியில் அப்பிளவு மெள்ள மூடிக்கொண்டுவிடும்’ என்று வன சரகர்கள் சொன்னதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இதை நாம் ஒருபோதும் பார்த்ததில்லை என்றாலும் அது ஏன் அப்படி நடக்கிறது?

யமனின் யோசனைப்படி இராமபிரானின் கடைசி நேரத்தில் அனுமனை திசைத்திருப்ப பூமிப் பிளவுக்குள் விழுந்த இராமனின் மோதிரத்தைத் தேடி எடுத்துவர பாதாள உலகிற்கு இராமன் அனுப்புகிறார். பாதாள லோகத்தில் வாசுகி அனுமனைப் பார்த்து “இந்த மோதிரக் குவியலில் எது இப்போது விழுந்த உன் ஸ்ரீஇராமரின் மோதிரம் என்பதைக் கண்டுபிடித்து எடுத்துக்கொள்” என்று சொல்லும்போது விபரீதத்தை உணர்கிறார். “ஒவ்வொரு மகாயுகத்திலும் ஒரு குரங்கு இங்கே இராமனின் மோதிரத்தைத் தேடிக்கொண்டு வரும் நேரத்தில் அங்கே இராமன் வைகுண்டம் போயிருப்பார்” என்று வாசுகி விளக்குகிறாள்.


கண்களில் நீர் வழிய இராமனின் தரிசனத்தை அனுமன் வேண்டுகிறார். அப்போது “நீ நித்திய சிரஞ்சீவியாய் சூரியசந்திரர் உள்ளவரை அழிவின்றி ஜீவித்திருப்பாய், கலியுகத்தில் ஸ்ரீராம பகதர்களைக் காத்தருள்வாய்” என்று அசரீரி ஒலிக்கிறது.

இராமனின் கடைசி காலத்தில் அனுமன் பாதாள லோகத்தினுள் சென்றதை நினைவூட்டும் விதமாக குரங்கின் கடைசி நிமிடமும் அமைகிறது என்பது என்னுடைய கருத்து. நாம் நினைப்பதுபோல் அனுமன் குரங்கல்ல, வித்யாதரா. அதாவது அமானுஷ்ய தெய்வ சக்திகள் பெற்ற வானர மனிதர். மேற்கத்தியர்கள் இந்த வகையைச் சேர்ந்த primateகளைப் பொதுவாக Neanderthal என்பார்கள். அதைத்தாண்டி அவர்களுக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியாது.

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்!


செவ்வாய், 11 ஜூன், 2019

மொழி மோகம் மதுமேகம்

ஹிந்தி மொழி திணிக்கப் போகிறார்கள் என்ற மாய பீதியில் உறைந்திருந்தது ஊடகங்கள். ஊரெல்லாம் தமிழொலி அதிகமாக ஒலித்த கடந்த வாரத்தில், தமிழ் மோகன பக்தர்கள் ஒரு படி மேலேபோய் கிறிஸ்துவர்களுக்கு தாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று நீரூபித்தனர்.
ஹிந்துசமய செய்திகள் தொடர்பான தளத்தில் 'நவ கிரகங்களை ஏன் வடமொழிப் பெயர்களால் அழைக்க வேண்டும்? நல்ல தமிழில் பெயர் சொல்லி பூசித்தால்தான் அருள்வார்கள்' என்று போட்டிருந்ததைப் படித்ததும் குபீரென சிரிப்பு வந்தது. இப்படி ஒரு கூட்டம் கிளம்பிட்டாங்க. கிரகம் என்பதை கோள் என்று சொல்லவேண்டும். சூரியன் - கதிரவன், சந்திரன் - நிலவன், அங்காரகன் - நிலமகன், புதன் - அறிவன், குரு/ பிருஹஸ்பதி - சீலன், சுக்கிரன் - கங்கன், சனி - காரி, ராகு - கருநாகன், கேது - செந்நாகன். இவ்வாறு அழைத்து வழிபட்டால்தான் இன்னல்கள் நீங்குமாம்.
ரோஜா மலரை கூஜா என்று மாற்றி அழைத்தால் அதன் மணமும் குணமும் மாறிவிடுமா என்ன? கோள்களை நீங்கள் எம்மொழியில் பெயரிட்டாலும் அதனுடைய பெயர்ச்சியும் தாக்கமும் மாறிவிடுமா என்ன? நம் ஜனன கால நேரத்தில் ஜாதகத்தில் இருக்கும் கோள்களின் நிலைக்கேற்ப யோகமும் தோஷமும் அமையும். இதை நம் ஊழ்வினைதான் நிர்ணயம் செய்யும். அதன்படி சுப/அசுப கிரகங்கள் கூட்டணி அமைவதும் பார்வைப் பார்ப்பதும் அமைகிறது. இது இப்படி இருக்கும் போது ஆங்கில நியூமராலஜி முறையில் நம் பெயரில் எழுத்தை மாற்றுவதாலோ, கோள்களின் பெயரை மொழிமாற்றம் செய்வதாலோ நமது வினைப்பயனை மாற்றிட முடியுமா? A rose by any other name would smell as sweet, and a chilly would taste as hot as ever என்பதுதான் என் நினைவுக்கு வந்தது.
எங்கள் பகுதியிலுள்ள கோயிலில் கோஷா அணிந்த ஒரு பெண் தன் மகனுடன் வந்து நவக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்ததைப் பார்த்தேன். 'சாமி, ராகு பரிகாரம் செய்யணும். அஜ்மல் பாஷா, மகம், சிம்ம ராசி' என்று சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தார். அர்ச்சனை முடியும்போது 'ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு பிரச்சோதயாத்' என்ற மந்திரத்தை அப்பையனையும் திரும்பச் சொல்லுமாறு சொன்னார். அவனும் தவறின்றி இயல்பாய் உச்சரித்தான். பிறகு அந்தப் பையன் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டான். பாருங்கள் இப்படியும் உள்ளனர்!

பகையாகும் புகை



பிரமபத்திரம் (எ) புகையிலை, கோரக்கர் மூலி (எ) கஞ்சா மூலிகையும் சித்த வைத்தியத்தில் நல்ல வலி நிவாரணி. நவீன காலத்தில் ஒரு நூற்றாண்டாக அதன் நச்சுத் தன்மை நீக்காமல் போகர் தாளில் சுருட்டப்பட்ட நான்கு விரற்கடை நீளமான சிகரெட்டை இக்காலத்தில் போதையூட்ட மூளை இளைப்பாற 'உழைப்பாளி' மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
சித்தர்கள் சமாதிக்குச் செல்லும்முன் தங்கள் உடல் வலுப்பெற செந்தூர கற்பம் உண்டு சிலகாலம் கழித்து அதன் வீரியத்தைப் புதுப்பிக்க சுத்தி செய்த புகையிலை கஞ்சா வனமஞ்சள் ஊமத்தை ஓமம் முதலான இன்னும் பல மூலிகைகளை அரைத்து வில்லைகளாக காயவைத்து, கபாலத்தில் புகை தாக்கும்வரை இழுப்புக் கணக்கிட்டு அதைப் புகைத்தனர்.
ஆனால் இக்காலத்தில் சுத்தி செய்யப்படாத புகையிலையைப் புகைக்கும்போது ஒருங்கே கிடைக்கும் தீய பலன்களைப் பட்டியலிடலாம். நுரையீரலில் படிமானமும், நெஞ்சுக்கூட்டில் கபமும், நரம்புப் புடைப்பும், நகம் சருமம் கருத்தலும், நோய்விதிப் பரீட்சையில் வெளிப்படும் அம்சங்கள். அதைவிட நவீன vape நல்லதோ என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்!

இப்படியும் சிலர்

ரயில் நிலையத்தில் வண்டி வரும்வரை அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன். பக்கத்தில் வந்து அமர்ந்திருந்தவர் தான் போகவேண்டிய விலாசத்தைக் காண்பித்து விசாரித்துக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார். தமிழ் நாளிதழில் கட்டுரையாளர் என்றும் அவர் தினமணி தினமலரில் வழக்கமாக எழுதி வருவதாகச் சொன்னார். 

'அப்படியா… நல்லதுங்க' என்றேன்.
'நீங்க என்னைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்களே. முகநூலில்கூட எனக்கு வாசகர் வட்டம் நிறையபேர் இருக்காங்க' என்றார்.
'தெரியாதுங்க. நான் தமிழ் பேப்பர் படிக்கிறதில்லை' என்றேன்.
'நீங்க என்ன படிப்பீங்க?'
'டைம்ஸ்'
'இங்ளீசுதான் படிப்பீங்களா? தமிழ் பேப்பர் வாங்மாட்டீங்களா?'
'ஆமா. தமிழ் வாங்கமாட்டேன். தமிழ் பேப்பர் ரூ.5,7னு விக்கிது. டைம்ஸ் ரூ.3. எல்லாத்துலேயும் ஒரே செய்திதான் வரும். தமிழ்ல கூடுதலா உள்ளூர் சினிமா சரக்கு மசாலா போடுவான். யாருக்கு வேணும்? இதுல எதுவா இருந்தாலும் பழைய பேப்பர் கிலோ ரூ.15 போகும்' என்றேன்.
'அதுல தமிழ் கட்டுரைகள் வரும் அதைப் படிக்கலாமே. அதுக்கு சொன்னேன்' என்றார்.
'சார்.. எல்லா பேப்பர்லேயும் யாரோ எதையோ எழுதிகிட்டுதான் இருப்பாங்க. வாசகர்கள் எல்லா எழுத்தாளர்களையும் தெரிஞ்சு வெச்சுக்க ஒரு அவசியமும் இல்ல' என்றேன்.
'அப்படி இல்ல… எழுத்தாளருக்கு அது பெருமையான விஷயம்' என்றார்.
'சார் நான் சொல்றேனு தப்பா நினைச்சுக்காதீங்க… புத்தகம் படிக்கிற வாசகர்களைவிட எழுத்தாளர்கள் அதிகமாகிட்டாங்க. வெளியுலகம் அறியும் அளவில் எழுத்தாளர் பிரபலமாகிட பல வருடங்கள் ஆகும். நம்மளை எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கணும்னு சொல்றது நியாயமில்லை. நம்மைப்பற்றி நாம் வசிக்கும் பகுதியில் தெருவில் இருப்போர் அடையாளம் தெரிந்து கொண்டாலே பெரிய விஷயம். தொழில்முறை எழுத்தாளரா இருக்கிறவங்க அதுக்கு நிறைய உழைக்கணும். டிவி/ சினிமாவுக்குத் தொடர்பில்லாத எழுத்தாளர் ஒரு கட்டுரைத் தொடரோ, புத்தகமோ எழுதியதுமே பிரபலமாக வேண்டும் என்பது பேராசை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆத்மார்த்தமாக நிறைய எழுதுங்கள். வாசக வட்டம் உங்களைத் தேடி வரும்' என்றேன்.
'உங்களுக்குப் புத்தகம் படிக்கிற ஆர்வம் உண்டா?' என்றார்.
'உண்டு. நானும் எழுத்தாளர்தான். முழுநேர எழுத்தாளரில்லை. சித்தரியல் ஆன்மிகம் சமூகவியல் சுயமுன்னேற்றம் மேலாண்மை புதினம் என 22 புத்தகங்கள் எழுதியிருக்கேன்' என்றேன்.
பேசிக்கொண்டிருக்கையில் ரயில் வந்தது. என்னை வியப்புடன் பார்த்தவாறு அவர் விடை பெற்றுக்கொண்டார். ஐயோ பாவம்! தன்னை யாருக்கும் தெரியவில்லை என்ற கவலையில் மன உளைச்சல் வராமல் இருந்தால் சரி.