About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 14 டிசம்பர், 2017

குல்கந்து ரெடி


ரோஜா. இதன் சுகந்தம், நிறம், குணம் எல்லாமே நமக்கு பல்வேறு மருத்துவ நலன்களை அள்ளித்தரும். குடல், ரத்தம், இதயம், நுரையீரல், மூளை புத்துணர்வு, ஞாபக சக்தி, கெட்ட கொழுப்பு கட்டுப்பாடு, வயிறு, கருப்பை/ஆண்மை கோளாறு, என்று பலத்துக்கும் நல்ல மருந்து. இதை தினமும் ஒரு ஸ்பூன் உண்டு வந்தால் மருத்துவப் பிரச்சனைகள் தீரும். நான் செய்யும் முறையை இங்கே சொல்கிறேன்.

ரோஜா 25 பூக்கள், தேன் ஒரு பாட்டில் (100கி). பனஞ்சக்கரை 100கி.

இதழ்களை உதிர்த்து, ஈரம் போக நன்கு துடைத்து, துணியில் பரப்பி ஆற விடுங்கள். உலர் பாட்டிலில் கொஞ்சம் இதழ்களை போடுங்கள், அதன் மேலே பனஞ்சக்கரை ஒரு ஸ்பூன் தூவுங்கள், தேன் கொஞ்சம் ஊற்றுங்கள், மீண்டும் இதழ் தூவுங்கள், இப்படியே செய்து முடியுங்கள். ஒரு மண்டலம் ஊறினால் நல்லது. அதற்கு முன்பே நன்றாக ஊறிடும். கிளறினால் இளகல் (அல்வா) போல் வரும். ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரசித்து உண்ணுங்கள். அருமை!

விருப்பப்பட்டால் இதோடு பேரிச்சம் பழ சிறு துண்டுகளையும், ஒரு சிட்டிகை கசகசா விதைகளையும், வெள்ளரி விதைகளையும் ஒவ்வொரு layer லும்  தூவி ஊறவிடலாம். கடையில் விற்கும் விலைக்கு நீங்களே செய்திடுங்கள்.

வாசனை /சென்ட்/ பன்னீர்/ நேச்சுரல் ரோஜா வாங்கி பயன் படுத்தவும். விலை சற்று குறைந்துவிட்டது. நான் 20 ரூபாய்க்கு 25 பூ வாங்கினேன். வாசமில்லா அலங்கார ரோஜா இதற்கு உதவாது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

இயற்கை நடத்தும் பாடங்கள்

கன்னியாகுமரி கேரளா கடலோரங்களில் பத்து நாட்களாக திமிலங்கள், சிறு மீன்கள் எல்லாமே கொத்துகொத்தாக கரை ஒதுங்கிக்கொண்டிருந்தது. மேலோட்டமாக சீதோஷ்ண மற்றும் பூகோள பரப்பில் ஏதும் அசம்பாவிதமாக நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜீவராசிகள் உணர்ந்துள்ளன. மக்கள் அதுபற்றி பேசிவிட்டு சும்மா இருந்தனர். பிற்பாடு பலத்த காற்று தொடங்கியது.
முன்கூட்டியே கணித்துச்சொல்லி அச்சிட்டு விற்கும் பஞ்சாங்கத்தை வானிலை மையம் வழிகாட்டுதலாக பின்பற்றக்கூடாது. அது மூடநம்பிக்கையாகிவிடும். அறிவியலுக்கு உட்பட்டு வானிலை மையம் சொன்னால்தான் பரிசீலனை செய்யலாம் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. இந்நிலையில்தான் தென்கோடி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்குப் போய் மாட்டிக்கொண்டனர். பாதிபேர் திரும்பினர், சிலர் எங்கோ ஒதுங்கினர், சிலர் காணவில்லை. பஞ்சாங்கத்தில் சொன்னதெல்லாம் அப்படியே குறிப்பிட்ட தேதியில் நடக்கவேண்டும் என்று எந்த உத்தரவாதமுமில்லை. கோள்களின் நிலையும் நகர்வும் கணக்கிட்டு சொல்லும் ஒரு அனுமானம்!
நீண்ட கடல்பரப்பைக் கொண்ட தென் பகுதியில் கடல்வாழ் ஜீவராசிகளின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் வந்தால் அதை ஆராய்ந்து பார்த்து காரணம் அறிய முற்படுவதில்லை. கரை ஒதுங்கிய 20 அடி நீள திமிலங்களை நடுக்கடலுக்கு விரட்டினால் அவை மீண்டும் கரைக்கு வந்தது. இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்கே கடலுக்குள் போகப் பிடிக்கவில்லை எனும்போது மீனவர்கள் போகலாமா? ஏதோ அசம்பாவிதம் வானிலையிலோ பூமித்தட்டிலோ நிகழ வாய்ப்புண்டு என்பதை எல்லோருமே சொல்கிறோம், பதிவுகளைப் பார்க்கிறோம், அத்தோடு மறந்துபோகிறோம்.
வெளியே புயல் அடிப்பதற்கும் கடலில் திமிங்கிலம் ஒதுங்குவதற்கும் என்னங்க சம்பந்தம்? இதெல்லாம் பழைய முகநூல் பதிவும் செய்தி. மக்கள்.இதை நம்ப வேண்டாம், புரளி கிளப்ப வேண்டாம் என்று ஆட்சியரே சொன்னால், வேறு என்ன செய்ய?
"தெரியுது...பயப்பட்டா முடியுமா? பிழைப்புன்னு இருக்கே. கடலுக்குப் போகாட்டி எப்படி?" என்று மீனவர்கள் சொல்கிறார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது.
இதுபற்றி டிவியில் செய்தி பார்த்தபின் விமர்சனம் செய்துவிட்டு இருப்பதோடு நம் கடமை முடிந்தது. இனி அடுத்தடுத்து சீற்றங்கள் மிகுதியாகி வருகிற விளம்பி வருடம் (உகாதி) சித்திரையில் உச்சக்கட்ட பிரளயம் நிச்சயம்.

கணித்தது நடந்ததா?
~~~~~~~~~~~~

ஆற்காடு திருக்கணித பஞ்சாகத்தில் கணித்தபடி எவையெல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் நடந்துள்ளது?
1) ஓக்கி புயல்  - குமரி மாவட்டம் பாதிப்பு
2) சூரியனிச் சுற்றி பரிவேடம் என்னும் Halo தோன்றும்போது 'பரிவேடம் பலத்த மழை' என்பது தமிழர்களின் சொற்றொடர்.
3) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரைவாக தயாரிக்க ஒப்புதல் போனவாரம் கையெழுத்தானது.
4) தெற்காசிய பகுதி இந்தோனேசியாவின் பாலி தீவில் Mt.Agung எரிமலை வெடித்துச் சிதறியது.
5) தூத்துக்குடி-குமரிமாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி, அதில் பலர் இறந்ததாக அசுப செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.  
6) புதிதாக 'சாகர்' புயல் அந்தமான் அருகே உருவாகியுள்ளது. நாளை முதல் வட தமிழகம்- ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்து மிரட்டும்.

புதன், 29 நவம்பர், 2017

நகர்ச்சி விதிகள் - Laws of motion

இரண்டாம் நூற்றாண்டில் ரிஷி கானட், தன்னுடைய ‘வைசேஷிக சூத்திரம்’ என்ற நூலில் கீழ்கண்ட சூத்திரங்களை 'பொருளின் நகர்வு சார்ந்த விதிகளை' கூறியுள்ளார். இதை Laws of motion என்ற தலைப்பில் ஐசக் நியூட்டன் அப்படியே தனதாக்கிக் கொண்டதாக மேன்செஸ்டர் பல்கலைக் கழகம் கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அவர் இவ்விதியை 1687 இல் இலத்தீன் மொழியில் எழுதிய ‘பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா’ என்னும் நூலில் அப்படியே காப்பியடித்து எழுதியுள்ளார். ஆனால் நாமோ இன்றும் சம்ஸ்கிருதமா? தமிழா? என்று காலிசட்டிக்குள் குதிரையைத் தேடுகிறோம்.

ஒரு பொருளின் மீது விசைகள் ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் (அ) பொருளின் நகர்ச்சி விதிகள்".

1.முதல் விதி:
"ஒரு பொருளின் மீது விசை செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்".

2.இரண்டாம் விதி:
"ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அதன் நகர்வு விசையின் சக்தியையும் திசையையும் ஒத்ததாக இருக்கும், பொருளின் நகர்வு வேகம் அதன் எடைக்கு நேர் எதிர்மாறாக இருக்கும்."

3.மூன்றாம் விதி:
"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. "

ரிஷிக்கு தோன்றிய கருத்து நியூட்டனுக்கும் தோன்றி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அப்படியே அடுத்தடுத்து மூன்று சூத்திரங்களும் உள்ளதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.



வியாழன், 23 நவம்பர், 2017

ஏன் இந்த அவல நிலை?

இன்று பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன். பின்வரிசை நாற்காலியில் அமரந்திருந்த ஒரு நடுத்தரவயது ஆண், காரசாரமாக மனைவியிடம் ஃபோன் பேசிக்கொண்டிருந்தான். அது பொது இடம் என்றும் பார்க்காமல் ஜோராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் பேசிய டயலாகுகளைக் கேட்கும்போது 'இது வன்கொடுமைதான்' என்று நினைக்கத் தோன்றியது.
"அடியேய்! உன்னை கல்யாணம் கட்டி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு. இன்னும் என்னோட சம்பாதியத்துல உக்காந்து சோறு திங்கிறியே, வெக்கமா இல்ல?"
எதிர்முனையில் அந்தக் குரல் ஏதோ பேசுகிறது.
"நாங்க அப்படித்தாண்டி.என் அண்ணிய வேலைக்கு போன்னு அண்ணன் விரட்டினான். நாங்க சொன்னபடி நீ நடந்துக்கணும். நீ வேலைக்குப்போய் சம்பாதிச்சியா? உனக்கு எதுக்குடி நான் சோறு போடணும்? எனக்கு பேங்கு டெபாசிட் பணத்துல வருசத்துக்கு ஆறு லட்சம் வட்டி வருது.. அதுல உனக்கு சல்லிக்காசு குடுக்கணும்னு அவசியமில்ல. அது கூடபொறந்த அண்ணனுங்க அக்காவுக்கு மட்டும் தான். நம்ம பையனுக்கும் தரமாட்டேன். உன்னை வூட்டவிட்டு தெரத்திட்டுதான் மறுவேலை ... பொண்ணெடுக்க ஊரெல்லாம் தேடிட்டு உன்ன இஷ்டமில்லாமத்தான் கட்டுனேண்டி.. பத்து வயசு வித்யாசம் வேற... போன மாசம் உன் துணிமணிய தெருல கடாசியும் உனக்கு புத்தி வரல... கை ஒங்குறது என்னோட ஸ்டைலுடி"
இதெல்லாம் கேட்கவே பகீர் என்றது. வலியப்போய் விருப்பமின்றி அவன் மணம் செய்துகொண்டு பழங்கதை பேசி அவனே சண்டை வளர்க்கிறான். கணவன் தன் மனைவிக்கு சோறு போட அவசியமில்லை என்ற புதிய கொள்கையை வகுத்துள்ளான். கலியுக மக்களின் அடுக்கடுக்கான பாவச்செயல்கள் என்னென்ன என்று போகர் அன்றே சொன்னார். கண்ணில்பட்ட இது ஒரு சாம்பிள்தான். தேசம் முழுதும் இவளைப்போன்ற பெண்கள் படும்பாடு என்னவோ?!
கந்துவட்டி கொடுமை என்று காரணம் சொல்லி அவன்மீது அவளே பெட்ரோல் ஊற்றி எரித்தால் தப்பே இல்லை! ஊர் உலகம் நம்பும்.


சனி, 18 நவம்பர், 2017

நவீன பயோ கழிப்பறைகள்

தொலைதூர விரைவு ரயில் வண்டிகளில் bio toilets உண்டு என்பதைப் பார்த்தோம். ஆனால் அது எப்படி இயங்குகிறது. மனித கழிவுகளை suction மூலம் உறிஞ்சு சேமிக்க ரயில் பெட்டியின் அடியில் bio digester என்ற ஒரு கருவி உண்டு அதில் தான் எல்லாமே விழும்.
இதில் anaerobic bacteria க்கள் சிறப்பாக செயல்பட்டு, கழிவுகளை வேதிப் பொருட்களாக உடைத்து மாற்றுகிறது. அவை குறிப்பிட்ட மணிநேரத்தில் நொதித்து, இறுதியில் மீதேன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றப்பட்டு வெளியேறுகிறது, எஞ்சிய தண்ணீர் குளோரின் கலக்கப்பட்டு துர்நாற்றம் ஏதுமே இல்லாமல் இருப்புப் பாதையில் கொட்டப்படுகிறது. குறைந்த அளவு சீதோஷ்ண வெப்பத்திலும் இது நன்றாக இயங்குகிறது. பாரம்பரிய முறைக்கும் இதற்கும் ஒப்பிட்டால், இங்கு 90% தண்ணீர் தேவை குறைகிறதாம்.
உடனே ஒரு குறள் பாடவேண்டும்போல் இருந்தது.
"கழிவு கலக்கலாய் கழியவே கழிந்தபின்
இழிவு தராத பயன்
."
இதுதான் ரயிலின் அடிப்பக்கமுள்ள அந்த நவீன பெட்டி. இந்த வாரம் முழுக்க ஒரே கழிவறை பதிவுகளா இருக்கேன்னு ஆச்சரியமா? Ding-Dong- DUNG!

மோர் சர்பத் வாட்டர்பாக்கட் வேணுமா?

ரயில் வண்டி ஆந்திர மாநிலத்தின் தாடிபத்ரி-எர்ரகுண்ட்லா இடையே ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு 3 பெட்டிகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற எண்ணிக்கையில் இருந்தார்கள். அது போக எப்போதும்போல் கருப்பு-வெள்ளையில் டிக்கட் பரிசோதகர் நடமாடிக்கொண்டு இருந்தார்.
ஆங்காங்கே ஸ்டேஷன்களில் 2-3 நிமிடங்கள் வண்டி நின்றது. பழம், சமோசா, கர்சீப், பூ, பிஸ்கட், புத்தகம், காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் ஏறினார்கள். சிலர் மாதாந்திர சீசன் டிக்கட் வைத்திருக்க சிலர் அதுவும் இல்லை. இவர்களுக்குப் பரிச்சயமான கண்காணிப்பாளர்கள் என்றால் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. பிரதி உபகாரமாக வெண்ணெய், நிலக்கடலை, பழம், காய்கறிகள், துவட்டும் துண்டு, என்று அன்பளிப்புகள் கைமாறுகிறது. நம் கண்ணில் பட்டால் கட்டுரைக்கு நல்ல தீனிதான்.
"கியோன் அந்தர் கி பிக்ரி? இவ்வனியும் லோபலகி தீஸ்கு ராக்கா" என்று உச்ச ஸ்தாயியில் ஒரு RPF காவலர் சத்தம் போட்டார். திடீரென்று ரயில்வே போலீஸ் சோதனைக்கு வந்ததும், ஒரு பெண் தான் கொண்டுவந்த மோர் பானையை அவசரமாக வெஸ்டர்ன் கழிப்பறைக்குள் கொண்டு சென்று கச்சிதமாக கிளாசெட் உள்ளே மறைத்து வைத்து சும்மா நடமாடிக் கொண்டிருந்தாள். இவளை முறைத்து அவர் பார்க்கும்போது, 'நேனு ஏமியும் அம்மலேது சார்' என்றாள். அடுத்த ஸ்டேஷனில் பானையோடு இறங்கினாள். இதுபோல் இன்னும் எத்தனைப்பேர் எதை எங்கு வைத்து விட்டு வந்து விற்பார்களோ..#?! பார்க்க ஜோராக அலங்காரம் செய்துகொண்டு வந்து இந்த சரக்குகளை விற்றால் உங்களுக்கு என்ன தெரியப்போகிறது? Bio toilets உள்ள தொலைதூர ஷதாப்தி விரைவு வண்டியில் இத்தொல்லைகள் இல்லை.
அதோனி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கே VLR சிற்றுண்டி ஸ்டாலில் சூடாக உப்புமா இட்லி பொட்டலங்களையும், ரயில் நீர் பாட்டிலையும், கொய்யா பழங்களும் வாங்கினேன். வேண்டிய அளவுக்கு பிஸ்கட் பழங்கள் ப்ரெட் ஜாம் + (ஆங்கில, சித்த) அவசர மருந்துகள் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் பிரயாணத்தில்
குறைவாக இலகுவான உணவையே உண்ணுங்கள்.
அசுத்த உணவால் வயிறு கெட்டுப்போவதைவிட உபவாசம் இருந்தாலே நன்று. ரயிலில் உள்ளே விற்றுக்கொண்டு வரும் அத்தனையையும் சிலர் தீனிப் பண்டாரமாய் வாங்கி வாங்கி விழுங்கிக் கொண்டிருப்பார்கள். இனி மோர், சர்பத், வாட்டர் பாக்கட் வாங்கிக் குடிப்பீர்களா? நீங்கள் குடிப்பீர்களா?

செவ்வாய், 14 நவம்பர், 2017

பளிங்கினாலான கழிப்பறைகள்

நமக்குத் தெரிந்து கிமு 5ம் நூற்றாண்டில் சித்தர் போகர் சீனாவில் பீங்கான்-கண்ணாடி அறிமுகம் செய்தார். அதில் பல உபயோகப்பொருட்களை கண்டு பிடித்தார். அண்மையில் கீழடியில் அடுக்குமாடி குடியிருப்பு, சமையற்கட்டு, குளியலறை, கழிவுநீர் குழாய்கள் கண்டுபிடித்ததை நாம் அறிவோம்.
அதுபோல் இலங்கையில் 9-10ம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரான Polannaruva பொலநறுவையில் (சனாதமங்கலம்) காணப்படும் மிகப் பழமையான கழிப்பறைகள்தான் இப்படத்தில் உள்ளது. அதிலும் வேலைப்பாடு கொண்ட வெள்ளை பளிங்குக் கல்லில் அலங்கார கழிப்பறை அபாரம்! அன்றே Wet & Dry toilets இரண்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளதாம். எங்கும் விஸ்வகர்மனின் கைவண்ணம்தான்!
ஆனால் இதற்குப்பின் எப்படி நாகரிகம் சீர்குலைந்து மைதானம் நோக்கி படையெடுத்தது என்றுதான் விளங்கவில்லை. வீட்டுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என்று இன்றும் மத்திய அரசு டிவியில் விளம்பரம் செய்வதுதான் வெட்கம்.



சிருஷ்டியை என்னவென்பது?

கொசு நம் உடலில் அம்ரந்ததும் உடனே கடிப்பதில்லை. அது தோலின் மீது எங்கே வளமான இலகுவான நரம்பு இருக்கிறது என்பதை ஆராயும். அதன்பிறகுதான் தன் உறிஞ்சுகுழல் ஊசியைக் குத்தும். சில சமயம் தடிமனான தோலாகவோ  நரம்பு இல்லாத இடமாகவோ இருந்தால் அதன் ஊசி வளைந்துவிடும். தக்க இடம் தெரிந்ததும், சுமார் 140 வினாடிகள் வரை பொறுமையாக அமர்ந்து காலூன்றி தலைகுனிந்து அழுத்தம் தந்து உறிஞ்சும். 3 - 6mN மில்லி நியுடன்) அளவுக்கு அழுத்தம் தந்து ஊசி போடுகிறது.

அது ரத்தத்தை குடிக்கும்போது நம் ரத்தத்தில் தட்டணுக்கள் உறைந்திடாமல் இருக்க முதலில் தன் எச்சிலை அங்கே செலுத்தி, உறிஞ்சும்வரை சூடானா ரத்தம் நீர்த்து போகாமல் வைக்குமாம். அது உட்கார்ந்து துளை போடும்போது 15Hz அதிர்வலையும், குடிக்கக் குடிக்க அதிர்வலை குறைந்து 6Hz அளவுக்கு வந்திடுமாம். ஓஹோ, முக்கிய வேலையில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது அது ஒலி எழுப்புவதில்லை போலிருக்கு.

அதன் 2mm நீளமான உறிஞ்சுகுழல் Proboscis முனை எப்படி இருக்கும் என்பதை நுண்பெருக்கி மூலம் படம் பிடிக்கபட்டது. நம் மருத்துவத்தில் குத்தும் syringe needle முனைபோன்றே V-வடிவத்தில் உள்ளது.  என்ன சிருஷ்டி! என்ன சிருஷ்டி!

கொசுவுக்குள்ளும் ஈசன் ஜீவனாக இருக்கிறான். 'ஓம்' என்ற சப்தத்தோடு பறக்கும்அதை அடித்தால் பாவமாகுமா? கொசு நம்மீது வந்து உடகார்ந்து கடிக்கும்போது ஓங்கி அடித்து நசுக்கினால் அது பாவமில்லை. மருந்து  புகைப்போட்டு அதை விரட்டினால் பாவமில்லை. ஆனால் அதை மின்சார bat கொண்டு 'படபட' என்று பொசுக்குவது, அதைப் பிடித்து எரியும் கொசுவத்தி சுருளின் தீயிலிடுவதும் பாவம்.

வியாழன், 9 நவம்பர், 2017

உடையவர் நம்மவர் இவர்!

ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் லக்ஷ்மணர் அம்சம்தான் வைணவ மகான் ஸ்ரீமத் ராமானுஜர். இவருக்கு இளைய ஆழ்வார், உடையவர், யதிராஜர், பாஷ்யகாரர் என்று பல திருப்பெயர்கள் உண்டு. 120 வருடங்கள் வாழ்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளின் அசரீரி கட்டளைப்படி இவருடைய திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்த மண்டபத்தில் இன்றைக்கு 880 வருடங்களுக்குமுன் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது என்கிறார்கள். இந்த ஆண்டு அவருடைய 1000 வது ஜெயந்தி ஏப்ரலில் கொண்டாடப்பட்டது.
ஜீவசமாதியில் திரிதண்டம் கொண்டு, திருமால் அளித்த வஸ்திரம் தரித்து சின்முத்திரை காட்டும் நிலையில் காணப்படுகிறார். பார்ப்பதற்கு சிலைக்கு பற்று போட்டது போல் தெரியும். இதை நம்பாத பலர், இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித் துவாரங்களோடும், குமிழ் உதடுகளோடும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். சுடுமண் சிலைதான் என்றால் இந்த preservative பந்தனம் பூச்சு எதற்கு? ஆறு மாதத்திற்கு ஒருமுறை குங்குமப்பூ சாந்து-பச்சை கற்பூரம் காப்பு சாற்றப்படுகிறது, மற்றபடி திருமஞ்ஜனம் ஏதுமில்லை என்று பட்டர் தெரிவித்தார்.
அவர் கட்டித்தழுவி தன்னுடைய சக்தியை பாய்ச்சிய திருவுருவச்லை (தானுகந்த திருமேனி) இன்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ளது. நான் சென்ற சமயம் காலையில் ராமானுஜருக்கு திருவாதிரை அன்று விசேஷ திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது.


புதன், 1 நவம்பர், 2017

அலோகத்தில் கண்ணாடி

முகம் பார்க்கும் 'கிளாசு' கண்ணாடியை சித்தர் போகர் முதன்முதலில் அறிமுகம் செய்தார். தான் செய்த plain glass ன் பின்புறம் ஈயம்-ரசம் பூச்சு தந்து செய்தார். ஆனால் இதற்கு முன்னமே நம் நாட்டில் 'செம்பு-வெள்ளீயம்' (Copper-Tin) கலவையில் செய்த வெண்கல பிடிகொண்ட முகம் பார்க்கும் கைக் கண்ணாடி சுமார் கிமு.2800 முந்தய காலத்திலேயே புழக்கத்தில் இருந்துள்ளது. இதை தர்பன், ஆயினா, ஆரசி என்று வடக்கே அழைப்பர்.
நமக்குத் தெரிந்து ராமாயணம், மகாபாரதம் ஆகிய காவியங்களில் கண்ணாடி பார்க்கும் வர்ணனைகள் வருகிறது. அந்த அலோகக் கண்ணாடியானது Glass கண்ணாடியைவிட பளபளக்கும் பிரதிபலிப்பைத் தந்தது. இதை தென்னக விஸ்வகர்மா கன்னார்கள் ரகசியமாகவே வைத்துள்ளார்கள். முதன்முதலில் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா அருகே ஆரன்முல ஊரில்தான் இது பிரசித்தம். அதனால் இதற்கு 'ஆரன்முல கண்ணாடி' என்ற பெயருண்டு. அக்காலத்தில் மணப்பெண்ணுக்கு தரும் எட்டு மங்கலப் பொருட்களில் இதுவும் உண்டு.
இந்த கேரள விஸ்வகர்மாவினர்க்கு இந்த மெழுகு வார்ப்பு முறை (சரஸ்வதி-சிந்து சமவெளி நாகரிகம்) ரகசியம் எப்படித் தெரியும்? அவர்களுக்கு முதலில் இது தெரிந்திருக்கவில்லையாம். திருநெல்வேலி (அகத்தியர் மலை) பகுதியைச் சேர்ந்த கன்னார்களை அழைத்து வந்து இதை கேரளத்தில் அறிமுகம் செய்ததாக ஆரன்முல ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் ஆவணங்கள் கூறுகிறது. பிற்பாடு இத்தாலி, சீனா, எகிப்து, கிரேக்கம், பாரசீகம், அரேபியா, என்று உலகம் முழுதும் பரவியது என்பது ஆராய்ச்சியில் தெரிந்தது.
சமீபத்தில் ஒரு ஐரோப்பிய ஆய்வுக் கட்டுரையை படித்தேன். அதிலிருந்த சங்கதியை இங்கே பதிவிட்டேன்.